Showing posts with label சித்ரன். Show all posts
Showing posts with label சித்ரன். Show all posts

இதுதான்டா செக்ஸ்!!

தெலுங்கு இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் ஷகிலா நடித்து வெளிவரவிருக்கும் சூடான படுக்கையறைக் காட்சிகள் நிறைந்த "பரங்கி மலை - ஜோதி" வகை திரைப்படம் என்று தலைப்பைப் பார்த்து ஊகித்தவர்கள் மன்னிக்கவும். சமீப நாட்களாய் எங்கு திரும்பினாலும் 'செக்ஸ் கல்வி' என்கிற வார்த்தை காதில் விழுந்து கொண்டிருக்கிறது. "30 வயதுக்கு மேல் குழந்தை பெற்..." என்று குங்குமம் பத்திரிக்கை நீட்டி முழக்கி ஜனங்களை மிரட்டியதை எதிர்த்தோ ஆதரித்தோ ஆங்காங்கே வலைப்பதிவுகள், பத்திரிக்கைச் செய்திகள் தோன்றியதும் அவற்றில் செக்ஸ் கல்வி பற்றி லேசாய் விவாதிக்கப்பட்டதும் இதை எழுத வந்ததற்குக் காரணமாக வைத்துக்கொள்கிறேன். ஏராளமான இளம் பருவத்து வாலிப/வாலிபி அன்பர்கள் செக்ஸ் பற்றின முறையான அறிவு இல்லாததால் தவறான அபிப்பிராயங்களுடன் மனப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிற இந்தச் சூழ்நிலையில் இதைப் பற்றி ஒவ்வொருவருமே எழுதுதல் அவசியம் என்று தோன்றுகிறது.

நீட்டி முழக்காமல் நேரடியாய் விஷயத்துக்கு வரட்டுமா? இந்த செக்ஸ் கல்வியாகப்பட்டது மாணவ மணிகளுக்கு எந்த பருவத்திலிருந்து எப்படி ஆரம்பிக்க வேண்டும், எதையெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்கிற யோசனையில் மொட்டை மாடியில் நான் சிகரெட் பிடிக்காமலே தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தபோது எனக்கு உதித்த சில உபாயங்கள், கருத்துக்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது.

நான் எப்படி 'எல்லாம்' கற்றுக் கொண்டேன் என்பதை சந்தடி சாக்கில் சொல்லிவிடுகிறேன். நான் ஞானம் பெறுவதற்கு போதி மரமாக விளங்கியது உடுமலைப் பேட்டையிலுள்ள ஒரு லைப்ரரி. இருங்கள்! எங்கே கிளம்பிவிட்டீர்கள்! இன்றைக்கு லைப்ரரி லீவு! தெரியாதா? அந்த லைப்ரரியினுள் புத்தக அலமாரிச் சந்துக்குள் புகுந்து நடந்தால் அந்தக் கோடியில் ஒருவராலும் சீண்டப்படாத 'மருத்துவம்' என்கிற பகுதி இருந்தது. கிட்டப் போனால் புழுக்கை வாசனை கொஞ்சம் அதிகமாய் அடிக்கிற அந்த அலமாரிதான் நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது என் அறிவுக் களஞ்சியமாக விளங்கியது. அங்கேயே எடுத்து கூடுமான வரையில் அங்கேயே நின்று படித்து அறிவை விருத்தி செய்து கொண்டேன். அவைகள் வீட்டுக்குக் எடுத்துச் செல்ல முடியாத புத்தகங்களாக இருந்தது சமூக துரதிருஷ்டம். அப்பா முதுகில் அறைவாரோ என்று பயம். அங்கே பெற்ற ஞானம் பிற்பாடு பத்தாம் வகுப்புப் படிக்கும் போது K.அசோக், வள்ளியப்பன், கிருஷ்ணசாமி போன்றவர்களின் குறுகுறுப்பான சந்தேகங்களை தெள்ளத் தெளிவாக தீர்த்து வைக்கப் பயன்பட்டது. உடனே என்னை லிட்டில் மாத்ருபூதம் என்று அழைக்கலாமா என்று சிலர் யோசிப்பது எனக்குக் கேட்கிறது. புத்தகத்தில் ஒளித்து வைத்துப் படித்த சரோஜா தேவி புத்தகங்கள், பார்த்த வீடியோப் படங்கள் எனக்குள் நிறைய சந்தேகங்களைக் கிளப்பியிருந்தாலும் எப்படியோ பின்னாளில் பார்த்துப் படித்து கற்றுத் தேர்ந்துவிட்டேன் எனச் சொல்லலாம்.

பத்தாம் வகுப்பு என்பது அநேக ஆண்கள் வயதுக்கு வருகிற பருவம். (ஆண்கள் வயதுக்கு வருவது பற்றி மரத்தடியில் நான் எழுதின கவிதை இங்கே). யாருக்கும் வெளியே தெரியாமல் ஆண்களுக்கு ரகசியமாய் நிகழ்ந்து விடுகிற இது நிறைய குழப்பங்களையும், கலவரங்களையும் மனதில் உடனே தோற்றுவித்து விடுகிறது. உதாரணமாக பத்தாம் வகுப்பு நண்பனொருவன் காலையில் அவனது உள்ளாடையில் ஒரு சில உலக வரைபடங்களைப் பார்த்து திடுக்கிட்டு என்னிடம் வந்தான். இந்த மாதிரி ஆரம்ப சந்தேகம் கொண்டவர்கள் அப்புறம் டோண்டு ராகவன் வலைப் பதிவில் போட்டிருக்கிற மாதிரி மாதிரி தப்பு சரிகளை அவர்களாகவே எப்படியாவது முட்டி மோதித் தெரிந்து கொண்டு விடுகிறார்கள். ஆனால் இந்தப் பெண்கள்? அவர்களுக்கு சரியான முறையில் எதையும் எடுத்துச் சொல்வதற்கு ஆளில்லையோ என்று தோன்றுகிறது. (அல்லது காலம் மாறிவிட்டதா?). என்னுடைய சில பழைய தோழிகளுக்கு ஒரு அக்கறையுள்ள நண்பனாக நான் 'எல்லா' விஷயங்களையும் பொறுமையாய் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். முதலிரவில் என்ன பண்ணுவார்கள் என்று ஓரளவு யூகித்தவர்களாக இருந்தாலும், அதற்கப்புறம் நிகழ்கிற விஷயங்கள் பற்றி கிஞ்சித்தும் ஐடியா இல்லாதவர்களாகத் தான் பெரும்பான்மையான பெண்கள் இருக்கிறார்கள்.

வீரியமின்மையா? ஆண்மைக் குறைவா? கெட்ட சொப்பனங்களா? என்று விளித்து இளைஞர்களை குறி வைத்து பயமுறுத்தும் லாட்ஜ் வைத்தியர்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க வேண்டுமெனில் இந்த செக்ஸ் கல்வி விஷயத்தை பொது மக்களிலிருந்து அரசாங்கம் வரை எல்லோரும் தீவிரமாய் சிந்திக்க வேண்டும். செக்ஸ் கல்வி என்றவுடன் அது எந்த வகுப்பிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்? 'மேத்ஸ் டீச்சர்', 'சயன்ஸ் டீச்சர்' மாதிரி 'செக்ஸ் டீச்சர்' என்று ஒருத்தர் இருக்க வேண்டுமா? போன்ற சந்தேகங்கள் எல்லாம் எல்லோரைப் போலவே எனக்கும் வருகின்றன. என் கருத்துக்கள் சிலவற்றை நான் சொல்லி விடுகிறேனே!

எட்டாம் வகுப்பு என்பது இதை ஆரம்பிக்க சரியான காலகட்டம் என்று தோன்றுகிறது. கிட்டத்தட்ட சிறுவர்/சிறுமிகள் வயதுக்கு வருகிற பருவம் என்பதால் அவர்களுக்கு ஏற்படும் உடனடி சந்தேகங்களுக்கு தீர்வு. இப்பாடத் திட்டத்தை படிப்படியாக பன்னிரண்டாம் வகுப்பு வரை கொண்டு செல்லலாம்.
கல்வித் துறையானது இயற்பியல், உயிரியல் மாதிரி பாலியல் என்று தனிப் பாடத்தையும் வகுப்பு நேரத்தையும் புகுத்துவதுடன் 'உடலுறவு' என்பதை நல்ல வார்த்தையாக மாற்ற முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இக்கல்வியை மாணவர்களுக்கு போதிப்பதில் ஆர்வமுள்ள பாலியல் வல்லுநர்களைக் கொண்டு வருடத்திற்கு இருமுறை மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொள்ளும் வகையில் கருத்தரங்கு, கண்காட்சி நடத்தலாம். ரொம்ப ஆர்வமாய்க் கற்றுக் கொண்டு இந்தப் பாடத்தில் எல்லோரும் 100க்கு 118 மதிப்பெண்கள் எடுத்துவிட வாய்ப்புண்டு.

"தி கம்ப்ளீட் செக்ஸ் கைட் ஃபார் ஸ்டூடண்ட்ஸ்" அல்லது "மாணவருக்கான முழு பாலியல் கையேடு" என்கிற புத்தகத்தை சுமார் ஆயிரம் பக்கத்துக்கு பாடநூல் கழக வெளியீடாகவோ அல்லது தனியார் பதிப்பக செம்பதிப்பு வெளியீடாகவோ மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம். இதில் வயதுக்கு வருவதிலிருந்து துவங்கி, தாம்பத்ய உறவு, குழந்தைப் பிறப்பு மற்றும் வளர்ச்சிச் சுழற்சி என்று கவர் பண்ணி மெனோ பாஸ் வரை விளக்கம் அளிப்பதுடன், மானிட உடற்கூற்றின் பாலியல் ரகசியங்கள், உறுப்புகளின் செயல் பாடுகள், விளக்கப்படங்கள், கேள்வி பதில் பகுதிகள், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs), பாலியல் நிபுணர்களின் கட்டுரைகள், இது வி்ஷயமாய் பொதுமக்களிடம் எடுக்கப் பட்ட பேட்டிகள், DOs & DON'0Ts, பாலியல் நோய்கள், எய்ட்ஸ் விழிப்புணர்வு, கருத்தடை சாதனங்களின் உபயோகங்கள் என்று எல்லாமே அடங்கிய ஒரே புத்தகமாக மாணவர்களுக்காகக் கொண்டு வந்து பள்ளி நிர்வாகம் அந்தப் புத்தகத்தை மாணவர்களின் பெற்றோரிடம் வழங்க வேண்டும். மேலும் ஏதாவது சந்தேகம் வந்தால் உடனே எடுத்துப் படிக்கிற (வாண்டுகளுக்கு எட்டாத) உயரத்தில் வீட்டில் வைக்கச் சொல்ல வேண்டும். கட்டாயப் பாடம் ஆகிவிட்ட பிறகு பையன்/பொண்ணு கண்ட புத்தகம் படிக்கிறான்/ள் என்று பெற்றோர்கள் நினைப்பதற்கும் வழியில்லை. ஒரு தெளிவுக்கு வந்துவிட்டால் பையன்கள்/பொண்ணுகள் கண்ட புத்தகங்கள் படிப்பதும் குறைந்துவிடும். மேலும் வயோதிக அன்பர்களுக்கும்கூட இப்புத்தகம் சில நேரம் பயன்படலாம் இல்லையா? யாரும் சொல்லிக் கொடுக்காததை ஒரு நல்ல சரியான புத்தகம் கற்றுக்கொடுத்துவிடும் என்று நான் நம்புகிறேன்.

மேலும் அரசாங்கத்தையும் கல்வித்துறையையும் விட பெற்றோர்களுக்கு இதில் அதிக பங்கு இருப்பதாக நினைக்கிறேன். சிறு குழந்தைகள் சில சமயம் தன் பிறப்புறுப்பை வைத்துக்கொண்டு விளையாடும்போது (குறிப்பாக ஆண்குழந்தைகள்) "கய்ய வெச்சுக்குட்டு சும்மார்ரா! டிங் டாங்-ல என்ன வெளையாட்டு ஒனக்கு?" என்று உடனே மிரட்டி அறிவுறுத்துகிற பெற்றோர்கள் பின்னாளில் தம் மக்கட்கு பாலியல் பற்றி குறைந்த பட்ச அறிவையாவது புகட்ட முன் வரவேண்டாமா?

இந்த விஷயத்தில் டாக்டர் மாத்ருபூதம் எப்படி முன்னோடியாகத் திகழ்ந்தாரோ அதே மாதிரி மேலும் சிலரும் தாமாகவே முன்வந்து மீடியாக்கள் மூலம் செக்ஸ் கல்வி போதிக்கலாம். குமுதத்தில் டாக்டர் ஷாலினி எழுதின ஒரு மருத்துவத் தொடர் படித்து நிறைய பேர் வாழ்க்கையில் ஒரு தெளிவு பிறந்ததை மறக்க, மறுக்க முடியாது. மேற்சொன்ன விஷயங்களில் எதுவுமே இப்போதைக்கு சாத்தியமில்லையெனில் இன்டர்நெட் கோலோச்சுகிற இந்தக் காலகட்டத்தில் கண்ணான மாணவ மணிகள் விழிபிதுங்க பலான சைட்டுகள் பார்ப்பதைக் குறைத்துக்கொண்டு நெட்டில் இது பற்றி உருப்படியாய் கற்றுக்கொள்ள முயற்சிக்கலாம்.

படிக்கிற காலத்தில் இளைஞ/இளைஞிகள் செக்ஸ் பற்றிய வீணான கற்பனைகள், தவறான அபிப்பிராயங்கள், அறியாமை, பயங்கள், கவலைகளால் செக்ஸ் ஒரு பாவச் செயல் அல்லது அது அசிங்கம் அல்லது அதுவேதான் வாழ்க்கை என்றெல்லாம் நினைத்து வாழ்க்கையைச் சிக்கலாக்கிக் கொள்ளாதிருக்க நம்மை மாதிரி 'வளர்ந்தவர்கள்' ஏதோ ஒரு துரும்பைக் கிள்ளிப் போடவேண்டாமா?

உங்கள் யோசனைகளையும் சொல்லுங்களேன்.

ஐநூறு ரூபாயில் ஒரு அனுபவம்


மேற்கண்ட படத்தில் நீங்கள் பார்ப்பது ஒரு பேட்டரி. பட்டன் செல் என்றும்கூட இதற்கு புனைபெயர் இருக்கிறது. குவார்ட்ஸ் கைக்கடிகாரம், சிறிய பென் டார்ச், PDA, Organiser போன்ற சாதனங்கள், குழந்தைகளின் சில விளையாட்டுப் பொருட்கள் போன்ற எத்தனையோ சாதனங்களில் உபயோகம் இது ஒரு சட்டைப் பொத்தானைவிட பெரிய அல்லது சிறிய அளவுகளில் கிடைக்கக்கூடியது. இந்த பேட்டரியின் மேற்புறம் நிக்கல் காட்மியம் எனும் உலோகத்தினாலானது. இதன் பாஸிட்டிவ் நெகட்டிவ்வுக்கு மத்தியில் மெஷின் பாக்கிங்கில் அடைபட்டிருக்கிற பொருள் ஸில்வர் ஆக்சைடு அல்லது மெர்க்குரிக் ஆக்ஸைடு அல்லது லித்தியம் இவைகளில் ஏதாவது ஒன்று. கைக்கடிகாரத்தில் போட்டால் ஒரு வருடமும், கணினிக்குள் போட்டால் ஒரு இரண்டு வருடமும் அதன் தரத்திற்கேற்ப உழைக்கிறது.

ஒரு நல்ல பகல் பொழுதில் மதிய உணவுக்கு முன்னர் தன் பொம்மைக் காமராவை சுக்கு நூறாக உடைத்து அதிலிருந்த இந்த பேட்டரியை வாயில் போட்டுக் கொண்டான் என் பையன். அவனுக்கு அது "ஜெம்ஸ்" மிட்டாய் மாதிரி சுவைத்ததா எனத் தெரியவில்லை. அப்படியே முழுங்கிவிட்டு பொறுப்பான மகனாய் அம்மாவிடம் தகவலறிவித்துவிட்டான்.

அதற்கப்புறம்தான் கூத்து. உடனே வீட்டிலிருந்து டெலிபோன். ஆபிஸில் "சொல்யூஷன் ஆர்க்கிடெக்ச்சர்" வரைந்து கொண்டிந்தவன் அப்படியே அம்போவென்று விட்டுவிட்டு புரவியேறி கடுகி விரைந்தேன் வீட்டுக்கு. (உடனே புருவம் உயர்த்தாதீர்கள்). நான் திட்டுவேன் என்று பயந்து போய் நின்றிருந்தவனிடம் அவன் முழுங்கிய பொருள் மேற்படி பேட்டரிதானா என்று ஒரு புலன் விசாரணை செய்து உறுதிப்படுத்திவிட்டு அருகாமையிலுள்ள பெரிய தனியார் மருத்துவமனைக்கு மறுபடி கடுகி விரைந்தோம். அவன் பேட்டரியை விழுங்கின கையோடு இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்து சமையலுக்கு வைத்திருந்த பச்சை பீன்ஸ் விதைகளை வேறு ஒரு கைப்பிடி தின்றிருந்தான். அவன் என்னவோ ரொம்ப உற்சாகமாய்த்தான் இருந்தான் என்றாலும் அம்மா சொன்ன 'டாக்டரங்கிள் உன் வயித்த கீச் கீச்னு அறுத்து பேட்டரிய எடுக்கப்போறாங்க பாரு' -என்பதில் அவன் கொஞ்சம் பயந்திருந்தான்.

கேசுவாலிட்டி பிரிவில் நோயாளிகள் அதிரும் வண்ணம் "டேய் மச்சி.. நீ மெட்ராஸிலேயா இருக்க. எப்படா வந்த?" என்று கத்திக் கத்தி செல்போனில் பேசிக்கொண்டிருந்தவர்தான் டாக்டர் என்று சத்தியமாய் நம்ப முடியவில்லை. ஒரு சின்ன வயசுப் பையன். வயது 25 இருக்கலாம். தயக்கத்துடன் பேட்டரி வி்ஷயத்தைச் சொன்னவுடன் எழுந்து நின்று யோசனையாய் மோவாக்கட்டையை சொறிந்து போஸ் கொடுத்தார். நான் நம்பிக்கையில்லாமல் மனைவியையும் பையனையும் பார்த்தேன். மறுநிமிடம் நான் நினைத்த மாதிரியே "எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துவிடலாம்" என்றார் முகத்தில் பல்ப் எரிய.

பதினைந்து நிமிடத்தில் எக்ஸ்ரே தயாரானது. அதை வெளிச்சத்தில் உயரத் தூக்கிப் பார்த்தபோது பேட்டரியானது பையன் வயிற்றுப் பகுதியில் எலும்புகள் அரணாய் சூழ்ந்திருக்க, பாதுகாப்பாய் சாய்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. சின்ன டாக்டரின் பக்கத்தில் நின்றிருந்த நர்ஸ் "எண்டோஸ்கோபி பண்ணி எடுத்துறலாம்" என்று குத்து மதிப்பாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டது. "மோஸ்ட்லி மோஷன்ல வந்துரும். 'எதுக்கும்' பெரிய டாக்டரை கன்ஸல்ட் பண்ணிக்கோங்க." என்று தன் முடிவைத் தெரிவித்தார் சின்னப் பையன் டாக்டர்.

நிறைய காத்திருந்து பெரிய டாக்டரைப் பார்த்தோம். அவரும் எக்ஸ்ரேவை ஒரே ஒரு செகண்ட் பார்த்துவிட்டு "முழுங்கின அஞ்சு ரூபா காயினே கக்கா போனா வந்துருது. இது நிச்சயம் வந்துரும். கவலப்படாதீங்க. இங்க குழந்தைகளுக்கான எண்டோஸ்கோபி இன்ட்ஸ்ருமெண்ட்ஸ் எல்லாம் இல்ல. நீங்க 'எதுக்கும்' அடையாறில இந்த டாக்டரை கன்ஸல்ட் பண்ணுங்க" என்று அட்ரஸ் தந்தார். இந்த 'எதுக்கும்' என்கிற வார்த்தை படுத்துகிற பாடு இருக்கிறதே!!! அங்கிருந்து வெளியே வரும்போது ரூ. 252 செலவாகியிருந்தது.

அடையாரில் அந்த லேடி டாக்டரைத் தேடிப் போனபோதும் நிறைய நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. காத்திருந்த நேரத்தில் 'எதுக்குடா பேட்டரிய முழுங்கின?' என்று கோபமாய் விசாரித்தபோது "பவர் வர்ரதுக்குதான்' என்றான் மகன் அமைதியாய். வருகிற நோயாளிகளையும், க்ளீனிக் நடவடிக்கைகளையும் பார்த்துக் கொள்கிற மூன்று பெண்களில் ஒன்று வாயை மூடாமல் 'லொக் லொக்' என்று நோயாளி மாதிரி இருமிக் கொண்டிருந்தது. இன்னொன்று "என்னடி இந்த மாத்திரை நல்லாவேயில்ல. கரையவே மாட்டேங்குது" என்று வாயைத் திறந்து இன்னொருத்திக்குக் காட்டியதிலிருந்து அதுக்கும் என்னவோ பிரச்சனையென்று புரிந்தது. டாக்டர் வந்துவிட்ட பிறகும்கூட கவலையே படாமல் அவர்கள் பாட்டுக்கு டேபிளில் ஒய்யாரமாய் குங்குமம் இதழை பிரித்து வைத்துக்கொண்டு "ஏய் பாத்தியாடி.. நம்மாளு 'ஜெயம்' ரவிக்கு மேஷ ராசின்னு போட்ருக்கான்." என்று கெக்கே பிக்கேயென்று சிரித்துவைத்து "நம்ம டாக்டர் ராசியும் அதானே.." என்றது. டாக்டர் எந்த ராசியானாலும் பிரச்சனையில்லை. கைராசியாய் இருந்தால் சரி என்று நினைத்துக் கொண்டேன்.

எங்கள் முறை வந்தது. லேடி டாக்டரும் அதே மாதிரி எக்ஸ்ரேவை ஒரு செகண்ட் தூக்கிப் பார்த்துவிட்டு, "இது குழந்தை கக்கா போகும்போது வந்துரும். வாளப்பளம் வாங்கிக் குடுங்க. அப்படி வரலைன்னா அடுத்தது என்ன செய்யலாம்னு பார்ப்போம். இப்ப அநாவசியமா கைவெச்சா நாலாயிர்ரூவா ஆகும்" என்றார். வெளியே வந்தபோது கன்ஸல்டேஷன் 250 ரூபாய் என்றாள் 'ஜெயம்' ரவி ரசிகை. ஆக இதுவரை மொத்தமாய் ஐநூறை முழுங்கிவிட்டது இந்த விஷயம்.

'வாளப்பளம்' வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தோம். அக்கம் பக்கத்தாரின் விசாரிப்புக்கெல்லாம் ஒரே கதையை திரும்பத் திரும்ப சொல்லிவிட்டு (பேட்டரி என்று சொன்னவுடன் பெரிய டார்ச்சுக்குப் போடுகிற பெரிய எவரெடி பேட்டரி என்று நினைத்துக்கொள்கிறார்கள் பாவம்!) கவலையுடன் தூங்கப் போய்விட்டோம். எல்லாருடனும் பேசியதில் இந்த ழுழுங்குகிற கலாச்சாரம் குழந்தைகளுக்கு புதிதல்ல என்றும் எல்லாக் குழந்தைகளுமே அவரவர் விருப்பத்திற்கேற்ப புளியங்கொட்டை, தேங்காய் மூடி (சிரட்டைத் துண்டு), ஸேஃப்டி பின், போல்ட் அல்லது நட், நாணயங்கள், க்ரையான் துண்டு என்று இப்படி எதையாவது முழுங்கித் தொலைத்த வீர வரலாறுகளையும் அறிந்துகொள்ள முடிந்தது.

பிறகென்ன? மறுநாள் பையன் கக்கா வருவதற்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கத் தொடங்கினோம். அது வருவதற்கான எந்த அறிகுறியும் பையன் முகத்திலிருந்து அறிந்து கொள்ள முடியாத அவஸ்தையுடன் பொழுது ஓடியது. அவன் எந்தக் கவலையும் இல்லாமல் ஜாலியாய் விளையாண்டு கொண்டிருந்தான். எனக்கோ பேட்டரிக்கு உள்ளேயிருக்கிற ரசாயனப் பொருட்கள் குறித்த கவலை. ஏதாவது லீக் ஆகி எதையாவது பாதிக்குமா என்று. இதே நினைப்புடன் ஆபிஸூக்கு லேட்டாக போய் சொல்யூ்ஷன் ஆர்க்கிடெக்ச்சரை மறுபடி பிராண்ட ஆரம்பித்தபோது செல்பேசியில் வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. காதில் வைத்ததும் பையன் குரல் கேட்டது.

"வந்திரிச்சு! பேட்டரி வந்திரிச்சு!"

உங்களுக்கு முந்தா நேத்து பக்கத்தில் ஏதோ சுழல்காற்று அடித்த மாதிரி சப்தம் கேட்டதா? அது ஒன்றுமில்லை. நான் விட்ட நிம்மதிப் பெருமூச்சுதான்.

மாயாஜாலம்

எங்களுக்கு வில்சன் என்றொரு நண்பர் இருந்தார். கவனிக்கவும். 'எங்களுக்கு' என்று குறிப்பிட்டிருக்கிறேன். காரணம் எனக்கு மட்டுமே அவர் நண்பரல்ல என்பதுதான். எங்கள் செட்டான ஒரு ஐந்தாறு பேருக்கும் பொதுவான நண்பர் அவர். சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன் நாங்கள் வசித்துக் கொண்டிருந்த காலனிக்கு சற்றுத் தள்ளி நெடுஞ்சாலையில் அவர் வீடிருந்தது. வில்சன் எங்களையெல்லாம் விட பல வயது மூத்தவர் என்பதால் நாங்கள் எல்லோரும் அவரை அண்ணா என்றுதான் அழைப்போம். அவரும் ஒரு அளவிடற்கரிய ஸ்நேகத்துடன் 'தம்பிகளா..' என்று எங்களை அழைப்பது நன்றாய் இருக்கும். அடர்த்தியாய் தாடிவிட்டுக்கொண்டு, சற்றே உயரமாய் கொஞ்சம் மீடியம் உடம்புடன் இருப்பார். சற்றே பிசிறடித்த ஆனால் கம்பீரமான குரல் அவருடையது.

வில்சன் ஒரு மேஜிக் நிபுணர். கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட சுற்றுவட்டாரத்தில் அப்போதே 250-க்கும் மேற்பட்ட மேடைகளில் அவர் மேஜிக் நிகழ்ச்சி பண்ணியிருந்தார். நீங்கள் வழக்கமாய் மேஜிக் ஷோ-க்களில் கண்டு ரசித்திருக்கும் தொப்பிக்குள்ளிருந்து புறா எடுப்பது. சீட்டுக் கட்டுகளைக் கொண்டு வித்தை காண்பிப்பது, வாய்க்குள்ளிருந்து கோழி முட்டைகளை எடுத்துக்கொண்டேயிருப்பது, நியூஸ்பேப்பரை விரித்துக் காண்பித்துப் பின் அதை மடக்கி அதனுள்ளிருந்து தண்ணீர் கொட்டவைப்பது போன்ற வழக்கமான ஐட்டங்களோடு பெட்டிக்குள் ஆளை நிற்கவைத்து ரம்பம் வைத்து அறுத்து நாலைந்து துண்டாக்கிவிட்டுப் பின் ஆளை மறுபடி உயிரோடு(!) கொண்டு வருதல் போன்ற மெகா மாயாஜாலங்களையும் மேடைகளில் செய்வார். நிகழ்ச்சிகளின்போது கோட்டு சூட்டெல்லாம் போட்டு தலையில் நீளத் தொப்பி, கையில் மந்திரக்கோல் என்று ஃப்ரொப்ஷனலாகத்தான் தோன்றுவார். என்னதான் எங்கள் நண்பர் என்றாலும் எவ்வளவோ மன்றாடியும் அவர் பண்ணுகிற மேஜிக் ரகசியங்களைப் பற்றி மூச்சுவிட மாட்டார். போனால் போகிறதென்று ஒரு நாலணா காசை முழங்கையில் தேய்த்துத் தேய்த்து எப்படி மறைய வைப்பது என்கிற ட்ரிக்கை மட்டும் சொல்லிக் கொடுத்தார். வெகு சுலபமாக நான் கற்றுக் கொண்ட அந்த வித்தை குழந்தைகளிடம்தான் செல்லுபடியாகும். பெரியவர்கள் புத்திசாலிகளாக இருந்தால் கண்டுபிடித்துவிடுவார்கள். காலனி முக்கில் நாங்கள் கூடிப் பேசிக்கொண்டிருக்கிற இடத்துக்கு அவர் வந்து நின்றால் சடக்கென்று ஏதாவது எளிய வித்தை செய்து காட்டி அசத்துவார். உதாரணம் : என் சட்டைப் பாக்கெட்டில் கைவிட்டு பத்து ரூபாய்த்தாள் எடுத்து அதை நான்காக மடித்து வலது கை ஆள் காட்டி விரலுக்கும், நடு விரலுக்கும் இடையே வைத்து விஸ்ஸ்க் என்று இடதுகை உள்ளங்கையில் தட்டினார். மறுநொடி ரூபாய் நோட்டு அவரது இரண்டு கைகளிலும் இருக்காது. பத்து ரூபாயைத் திருப்பித் தரவேண்டுமானால் என் அப்பாவிடம் சொல்லி அவரிடம் டி.வி கேபிள் கனெக்ஷன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். ஆம். அவர் அந்த ஏரியாவுக்கு கேபிள் கனெக்ஷன் கொடுக்கிற வேலையையும் பார்த்து வந்தார்.

கேபிள் கனெக்ஷன் என்றால் அப்போதெல்லாம் தூர்தர்ஷன் தவிர எதுவும் கிடையாது. ஆனால் அதில் வெள்ளிக் கிழமை எட்டு மணிக்குப் போடுகிற ஒலியும் ஒளியும் பார்ப்பதற்கே எல்லார் வீட்டிலும் அப்படியொரு முன்னேற்பாடு நடக்கும். வில்சன் ஒவ்வொரு மதியமும் சினிமா வீடியோ கேசட்டுகளை வைத்து அவர் வீட்டிலிருந்தே ஒளிபரப்ப அது காலனி முழுக்க எல்லோருடைய டி.வியிலும் தெரிகிற டெக்னலாஜியை வியந்துகொண்டிருந்தோம். ஒரு தடவை கார்த்திக் படமான இரட்டைக் குழல் துப்பாக்கி என்கிற படத்தை கேபிளில் ஒளிபரப்பி காலனி தாய்மார்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட சம்பவமும் உண்டு. அப்போது சன் டிவியெல்லாம் கிடையாது. ஆனால் வில்சன் சன் டி.வி-யின் (ராஜ்?) முதல் முயற்சியான 'பூமாலை' என்கிற கேசட்டை போட்டு அவ்வப்போது ஒளிபரப்புவார். நாட்டு நடப்புகள், இசை நிகழ்ச்சிகள், காமெடி ஷோ, சினிமா பாட்டு என்று கலவையாய் மாதமொருமுறை தொகுத்து கேசட் வடிவில் வெளியிடப்பட்டுக் கொண்டிருந்ததுதான் பூமாலை என்று பெயரிடப்பட்ட அந்த கேசட். அதுதவிர வில்சன் புண்ணியத்தில் தூர்தர்ஷனில் ஞாயிறு மதியம் 1.00 மணிக்கு NFDC படங்களான எல்லா ஆர்ட் ஃபிலிம்களையும் உட்கார்ந்து பார்ப்போம். ஒன்றும் புரியாவிட்டாலும்.

வில்சன் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் விழா மேடைகளில் தோன்றி மைக் பிடித்து கம்பீரமாய்ப் பேசுவார். பேசுகிற விஷயங்களில் நிச்சயம் சமூக அக்கறை தொனிக்கும். அவர் பொள்ளாச்சியில் 'மனிதம் சேவை மையம்' என்கிற சமுக அமைப்புக்குத் தலைவராக இருந்தார். அவ்வப்போது நகரில் ரத்ததான முகாம், இலவச கண் பரிசோதனை முகாம் நடத்துவது, ஆதிவாசிகள் மற்றும் மலைவாழ் மக்களுக்கு உடைகள் சேகரித்துக் கொடுப்பது போன்ற காரியங்களில் தீவிரமாய் ஈடுபட்டிருந்தார். நாங்களெல்லோரும்கூட மனிதத்தில் உறுப்பினராகி அவருடன் சேர்ந்து சுற்றி சமுக சேவை செய்துகொண்டிருந்தோம். அவ்வப்போது ஆட்டோவில் மைக் வைத்து அறிவித்துக்கொண்டு சுற்றியிருக்கிற காலனிகளில் வீடுவீடாகப் போய் உடைகள் சேகரித்து ஆதிவாசிகளுக்கு கொண்டுபோய் வழங்குவோம். தவிர மனிதம் வெளியிட்டுக்கொண்டிருந்த "மனிதம் செய்திகள்" என்கிற சிற்றிதழில்(?) சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சமுக ஆக்கப்பணிகள் பற்றிய விவரங்கள் போக மீதி இருந்த இடத்தில் நாங்கள் கதை, கட்டுரை, கவிதைகள், படித்ததில் பிடித்தது, ஜோக்ஸ் என்று எதையாவது எழுதுவோம். சரசுராம் இதற்கு ஆசிரியராய் இருந்தார். ராஜீவ் காந்தி இறந்த சமயத்தில் அவர் எழுதின உருக்கமான கட்டுரையை முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் D.R. கார்த்திகேயன்கூட படித்துப் பாராட்டினார்.

ஒரு தடவை சாயங்காலம் ஐந்து மணிக்கு வில்சன் வேகமாய் வந்து நெகமம் அருகில் சேரிபாளையம் என்கிற ஊரில் நடக்கிற நவராத்திரி கலை விழாவில் அன்றைக்கு அவரின் மேஜிக் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதன்கூடவே நீங்களெல்லாம் சேர்ந்து சைடில் கலை நிகழ்ச்சி செய்கிறீர்களா என்று கேட்டார். ஏழு மணிக்கு ப்ரோக்ராம் என்றார். இரண்டு மணி நேரத்திக்குள் என்னத்தைத் தயார் பண்ணுவதென்று எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் அரை மனதாய் சரி என்று தலையாட்டிவிட்டு பரபரவென்று இரண்டு மணி நேரத்துக்குள் டாக்டர் கடீஸ்குமார் என்கிற காமெடி நாடகத்தை நான் மற்றும் நண்பர்களான ராம் (சரசுராம்), மீனாட்சி சுந்தரம் உட்கார்ந்து எழுதி முடித்துவிட்டோம். ஒரு சில நண்பர்களை வைத்து கடகடவென்று ஏழு மணிக்குள் ரிகர்சலும் பார்த்து வில்சனுடன் வேனில் கிளம்பிவிட்டோம். நான் அதில் ஒரு நோயாளி கேரக்டர். கூடவே நரம் தினசரி கேட்கிற ரேடியோ செய்திகளை நகைச்சுவையாய்த் திரித்து நான் அதை வாசிப்பது என்றும் முடிவு செய்து, வண்டி சேரிபாளையம் போய் சேர்வதற்குள் ராம் ஒரு முழு வெள்ளைத்தாளில் அதை இரண்டு பக்கத்துக்கு எழுதியும் கொடுத்துவிட்டார். அதோடு 'டிஸ்கோ டான்ஸ் ஆடிக் கலக்குகிறேன்' என்று தானாக முன்வந்த மஞ்சு என்ற பொடியனும் வேனில் ஜிகினா உடை சகிதம் தொற்றிக் கொண்டான்.

மின்நகர் கீதம் குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் இன்னும் சில நொடிகளில் ஆரம்பம் என்று மைக்கில் அமர்க்களமாய் அறிவித்துவிட்டு ஆரம்பித்தோம். அன்றைக்கு சேரி பாளையத்தை ஒரு வழி பண்ணிவிட்டோம் என்றுதான் சொல்லவேண்டும். மஞ்சு என்கிற அந்தப் பையன் அப்போது சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்த ஹாசன் ஜகாங்கீரின் "ஹவா ஹவா" பாட்டுக்கு அட்டகாசமாய் டான்ஸ் ஆடி பின்னி எடுத்துவிட்டான். அவசரகதியில் பண்ணின இந்த ஏற்பாடுக்கு அத்தனை வரவேற்பா என்று சத்தியமாய் நம்பமுடியவில்லை எங்களால். கொஞ்சம் கற்றுக்குட்டித்தனமாகவே இருந்தாலும் எங்கள் நாடகத்தையும், நியூஸையும் ரசித்துப் பார்த்த / கேட்ட சேரிபாளையப் பொதுமக்கள் சிரித்த சிரிப்பு இன்னும் மனதுக்குள் பத்திரமாய் இருக்கிறது. வில்சனுக்கோ ரொம்ப சந்தோஷம். இதற்கு நடுவே இப்போது நினைத்தாலும் நாங்கள் விழுந்து விழுந்து சிரிக்க நேரிட்ட சில வெளியே சொல்ல முடியாத சம்பவங்களும் நடந்தன.

அதற்கப்புறம் வில்சன் மேஜிக் ஷோ போகிற இடத்துக்கெல்லாம் எங்களைக் கூப்பிட ஆரம்பித்தார். நாங்கள் பிறகு நான்கைந்து மேடைகளில் வில்சன் தயவால் இன்னும் சில அயிட்டங்கள் சேர்த்து எங்கள் கலைத்திறமையைக் காட்டினோம். பிறகு பொள்ளாச்சி காந்தி மண்டபத்தில் நடைபெற்ற புத்தாண்டுக் கலைநிகழ்ச்சியில் நண்பனொருவன் டயலாக்கை முழுங்கிவிட்டு பேந்தப் பேந்த முழிக்க, ஆடியன்ஸிடமிருந்து விசிலும் கூக்குரலும் வர அத்தோடு எங்கள் கலைப் பயணம் முடிவுற்றது. இந்தக் கூத்துக்கெல்லாம் இப்போது இணையத்தில் எழுதும் எழுத்தாளர் ஒருவரும் சாட்சியாக இருந்தார்.

சுகமான நினைவுகளை ஞாபகப்படுத்தும் பழைய உருப்படிகளை எப்போதும் பத்திரப்படுத்தி வைக்க நினைக்கும் என்னிடம் 'மனிதம் செய்திகளின்' ஒரு சில பிரதிகளும், ஏழெட்டு மேடைகளில் நான் வாசித்த நகைச்சுவை செய்திகளின் பிரதியும் இருக்கின்றன. இரண்டு வருடங்களுக்குமுன் நான் பணியாற்றிய கம்பெனியின் "கெட்-டுகதர்" ஹோட்டல் ப்ரீஸில் நடந்தபோது செய்தி வாசித்ததில் கொஞ்சமாய் சிரித்துவைத்தார்கள். விரும்பிக் கேட்கிற நேயர்களுக்கு Footer-ல் காப்பிரைட் சித்ரன் என்று போட்டு அந்த செய்திகள் ரகசிய ஈமெயிலில் அனுப்பிவைக்கப்படும். செய்திகள் வாசிப்பது ரகுநாதவர்ம விஜயபுர சேதுபதி கணேச சுந்தரபாண்டிய குலோத்துங்க வீர வெங்கடேஷ்வர யோகி ஜகந்நாத சூர்யகாந்திப் பிரகாசராவ்....

நண்பர்கள் வேலை நிமித்தம் ஆளுக்கொரு திசைக்குப் பிரிந்தபிறகு வில்சனைப் சந்திக்கமுடியவில்லை. விசாரித்தபோது அவர் சொல்லாமல் கொள்ளாமல் வேறு ஏதோ ஊருக்கு குடும்பத்துடன் காலிபண்ணிவிட்டுப் போய்விட்டதாகப் பின் தகவல் கிடைத்தது. அவரிருக்கிற இடம் யாருக்கும் தெரியவில்லை. மனிதம் சேவை மையம் இப்போது இல்லை. வில்சனிடமிருந்து கற்றுக்கொண்ட ஒரே ஒரு நாலணா மேஜிக்கை இப்போது சமயம் கிடைக்கும் போதெல்லாம் என் பையனுக்கு செய்து காண்பித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த மாதிரி நட்புகள் என்னிடமிருந்து காணாமல் போகிறதா அல்லது நான்தான் அவர்களிடமிருந்து காணாமல் போய்விடுகிறேனா என்று எப்போதுமே எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. ஏதாவது மேஜிக் பண்ணி அவர்களை என் முன்னால் வரவழைத்துவிட முடியாதென்பது தெரியும். தேடினால் நிச்சயம் கிடைப்பார்கள்.

பாம்பாட்டம்

பாம்புகளைப் பற்றி இப்போது எழுதுவதன் அவசியம் சுமார் ஒண்ணரை மாதத்துக்கு முன் நிகழ்ந்தது. ஆரண்யம் இதழில் முன்பு சாரு நிவேதிதா எழுதிய "பாம்புக் கதைகளு'-க்கும்" இதற்கும் சம்பந்தமில்லையென்று முன்பே தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நாள் பட்டப்பகல் 1.00 மணிக்கு என் அம்மாவை பாம்பு கடித்துவிட்டதாக பதற்றமாய் கோவையிலிருந்து டெலிபோன் கால் வந்தது. கடித்தது (கொத்தியது?) நல்ல பாம்பு என்றும் அம்மா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், சினிமா டயலாக் மாதிரி 'எதையுமே 48 மணி நேரம் கழித்துத்தான் சொல்ல முடியும்' என்று டாக்டர் சொன்னதாகவும் தகவல்கள் கிடைத்தன. செல்போன் கண்டுபிடித்தவன் இருக்கிற திசைக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு கொட்டுவாயில் ரயிலேறி கோவை விரைந்தேன். வழியெல்லாம் காதிலிருந்து செல்போனை எடுக்காமல் நிலைமையை விசாரித்துக்கொண்டே சென்றேன். அன்றைக்கு நான் அடைந்த பதற்றமும் வேதனையும் இதற்குமுன் பட்டதில்லை. ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் போய்ப் பார்த்தபோது அம்மாவுக்கு ஆக்ஸிஜன் மாஸ்க், ECG மற்றும் இன்னபிற ஒயர்கள் இணைக்கப்பட்டு பார்க்கவே ரொம்ப பயமாய் இருந்தது. அது நல்லபாம்பில்லை. கெட்ட பாம்பு என்று நினைத்துக்கொண்டேன். பிறகு தெரிந்தது, அது கொஞ்சூண்டு நல்ல பாம்புதான் என்று. ஏனெனில் 4 நாட்கள் அவசர சிகிச்சைப் பிரிவின் கவனிப்பில் அம்மா நலம் என்று அறிக்கைகள் வந்தன. பாம்பு கடித்த (வலது கை நடுவிரல்) இடத்துக்கு மேலே மணிக்கட்டில் உடனடியாக அப்பா இறுக்கமாக கட்டுப் போட்டுவிட்டதும், கடித்த பாம்பை உடனே கொன்று கையோடு டாக்டரிடம் கொண்டுவந்து காட்டியதும், ரூபாய் 3500 மதிப்புள்ள Anti-Venom என்கிற 10 ml ஊசி உடனடியாக போடப்பட்டதும் + மற்ற சிகிச்சைகளும் அம்மாவை காப்பாற்றின.

பிறகு தனி ரூமில் அனுமதிக்கப்பட்டு உறவினர்கள், நண்பர்கள் வந்து பார்க்க அனுமதிக்கப்பட்டதும் நிறைய பாம்புக் கதைகளைக் கேள்விப்பட நேர்ந்தது. பக்கத்து ரூமில் சிறுநீரகக் கோளாறுக்கான ஆபரேஷனுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவரின் அம்மாவை 30 வருடங்களுக்குமுன் பைரானி என்கிற பாம்பு கடித்து தீவிர சிகிச்சைக்குப்பின் தப்பிப் பிழைத்தாராம். அந்தப் பாம்பு அவரது காலைக் கடித்தவாக்கிலேயே ஒரு புரண்டு புரண்டு பின் கடித்த இடத்தில் தன் வாலால் நச் நச் என்று நான்கு அடி அடித்ததாகச் சொன்னார். இதே மாதிரி என் நண்பனொருவன் தனது ஏழாவது வயதில் தன் இடுப்புயரமுள்ள ராஜ நாகம் காலில் ஒரு போடு போட்டதில் ரொம்ப அபாய நிலைக்குப் போய் ஏழு நாட்கள் கோமாவில் இருந்துவிட்டு டாக்டர்கள் முயற்சியில் இரண்டாம் ஜென்மம் எடுத்ததாகவும் தெரிவித்தான். இன்னும் அவனது வலது காலில் கொதித்த எண்ணையைக் கொட்டியது போன்ற தழும்பு விகாரமாய் உள்ளது. பாம்பு சீற்றமாய்க் கொத்தின கொத்தில் பாதம் அப்படியே ஒரு பந்துமாதிரி சுருண்டுபோய் விட்டதாகவும், பிறகு தொடையிலிருந்து சதையை எடுத்து பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணியிருப்பதாகவும் சொன்னான். கேட்கவே பயங்கரமாக இருந்தது.

அம்மாவுக்கான சிகிச்சையின்போது சில விஷயங்கள் தெரிந்துகொண்டேன். இரண்டு மணிக்கொருதரம் ப்ளீடிங் டைம், க்ளாட்டிங் டைம் என்று கடிபட்டவரின் ரத்தம் எடுத்துப் பரிசோதிக்கிறார்கள். ரத்தத்தின் உறைநிலையில் ஏதாவது மாற்றம் நேரிடின் கொஞ்சம் பிரச்சனைதான். இந்தமாதிரி கடிவாங்குபவர்களுக்கு இரண்டு விதமான விளைவுகள் ஏற்படுமாம். ஒன்று உடனடி விளைவு. இன்னொன்று பின் விளைவு. உடனடி விளைவானது விஷத்தால் நரம்பு மண்டலம், நுரையீரல்கள் போன்றவை பாதிக்கப்பட்டு மரணம் சம்பவித்தல். பின் விளைவு சில நாட்களுக்குப் பிறகு இதயம், சிறுநீரகம் போன்றவை பாதிப்புக்குள்ளாதல். எல்லாவற்றையும் நன்கு பரிசோதனை செய்த பிறகே வீட்டுக்கு அனுப்புகிறார்கள்.

பாம்புக்கடிக்கான சிகிச்சை அரசு மருத்துவமனைகளில்தான் சரியாக அளிக்கப்படுகிறது என்று ஒரு தரப்பு விவரம் சொல்லி பயமுறுத்தியது. சரியான விஷமுறிவு மருந்துகளை அவர்கள்தான் வைத்திருப்பார்களாம். தனியார் மருத்துவமனைகளில் சில சமயம் அவைகள் கிடைக்காது என்றும் சொன்னார்கள். அம்மா அனுமதிக்கப்பட்டிருந்து ஒரு தனியார் மருத்துவமனை என்பதால் லேசாய் கவலையாயிருந்தது. ஆனால் எதுவும் பிரச்சினைகளின்றி குறிப்பிட்ட மருந்துகள் சரியான சமயத்துக்கு கிடைத்தன என்றுதான் சொல்ல வேண்டும்.

சிறுவயதில் அம்மா வாழ்ந்து வளர்ந்த வீடு பாம்புகள் அதிகம் நடமாடும் ஒரு பெரிய தோட்டத்துக்கு நடுவேதான் இருந்தது. பள்ளி விடுமுறையின் போது அங்கே போகும்போது பெரிய முற்றத்தில் போட்டிருக்கிற மலர்க் கோலத்தைக் கலைத்தபடி சாரைப் பாம்புகள் ஊர்ந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன். மேலும் வீட்டின் உள்ளே மரப்படிகள் கொண்டு போய்ச் சேர்க்கும் மச்சின் மேல் ஏறி எட்டிப் பார்த்தால் இஸ்.. இஸ்.. என்று பாம்புகள் சீறுகிற சப்தம் கேட்கும். சாரைப் பாம்பில் ஆரம்பித்து கட்டுவிரியன், நாகப் பாம்பு, கூழைப்பாம்பு என்று அத்தனை வெரைட்டிகளும் மனிதர்களோடு சேர்ந்து புழங்குகிற இடம் அது. அங்கேயெல்லாம் தப்பித்து செடிகளும், மரங்களும் அருகிப்போன நகரத்தில் ஒரு கான்கிரீட் காலனியில் வந்து கடிவாங்க நேரிட்டதை என்ன சொல்ல?

கோவையில் ஒரு பெரிய மருத்துவமனை மருந்தகத்தில் பணிபுரியும் என் உறவினர் 'இதெல்லாம் சின்ன கேஸுங்க. உங்களுக்கு முப்பதாயிரம் ரூபாய் செலவுல ட்ரீட்மெண்ட் முடிஞ்சிருச்சு. எங்க ஆஸ்பத்திரில Anti-Venom எல்லாம் பெட்டி பெட்டியா வாங்கிட்டுப் போவாங்க" என்று அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். விஸிட்டராக வந்த இன்னொருவர் தந்த தகவல்: ஒரு 35 வயது இளைஞன் உடலில் எத்தனை புரோட்டின் இருக்குமோ அத்தனை புரோட்டினை பாம்பு கொத்தும்போது மனித உடலினுள் செலுத்துகிறது. இம்மாதிரி செலுத்தப்படும் கூடுதல் புரோட்டின்தான் அதன் பல்லில் இருக்கும் விஷமாக மனிதர்களை கொல்கிறது என்றார். உண்மையா தெரியவில்லை. அதே மாதிரி ஆளைக் கடித்த பாம்பு மயக்கமடைந்து கடித்த இடத்திலேயே கிடக்குமாம். ஏனென்றால் நமது ரத்தம் அதற்கு விஷமாம். இதையும் யாராவது தெளிவுபடுத்தவேண்டும். இதற்குமுன் நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு குறுக்கு வழியாக இருளடைந்த ஒரு சோளக்காடு, தென்னந்தோப்பைத் தாண்டிச் செல்லவேண்டும். ராத்திரி பதினொரு மணிக்கு பயமின்றி கையில் வைத்திருக்கிற ஒரு பென் டார்ச்சுடன் கீழே குனிந்தபடி ஒற்றையடிப் பாதையில் பளபளப்பாக நகரும் பாம்புகளைத் தவிர்த்து நடந்த அனுபவங்களை இப்போது அசைபோட்டால் உடல் குலுங்குகிறது.

கையில் கடிபட்ட இடத்தில் காயம் இன்னும் ஆறாத நிலையில் சிறிது ஓய்வெடுத்துக்கொள்ளலாம் என்று சென்னை வந்த அம்மாவை கிண்டி பாம்புப் பண்ணைக்கு அழைத்துச் சென்றேன். பாம்புகளைப் பற்றி நேஷனல் ஜியாகரஃபி, அனிமல் ப்ளானட், டிஸ்கவரி சேனல்கள் கற்றுக் கொடுத்ததுபோக மீதி விஷயங்களை அங்கே போனபோது தெரிந்துகொள்ள முடிந்தது. பாம்புகள் பற்றி நம்பப்படும் மூட நம்பிக்கைகளுக்கெல்லாம் விளக்கம் அளித்து போர்டு வைத்திருந்தார்கள். சில உதாரணங்கள்:

ஒரு பாம்பை அடித்தால் இன்னொரு பாம்பு பழிவாங்கும் - நிச்சயமாக இல்லை.
கொம்பேறி மூர்க்கன் ஆளைக் கடித்தபிறகு மரத்தின் மேலேறி பிணம் எரிகிறவரை பார்க்கும். - தவறு. கொ.மூர்க்கனுக்கு விஷம் கிடையாது.
பாம்பு விஷத்தை மந்திரம் ஜெபித்து இறக்கிவிடலாம். - நிச்சயமாய் முடியாது.
பறக்கும் பாம்பென்று ஒரு வெரைட்டி கிடையவே கிடையாது.

பாம்பு கடித்ததினால் ஏற்படும் மரணங்களில் 75 சதவீதம் அதிர்ச்சியால் ஏற்படுவதாம். தகுந்த முதலுதவி, பாதிக்கப்பட்டவர் நம்பிக்கையிழக்காமல் பார்த்துக்கொள்ளுதல், பதற்றமடையாமல் இருத்தல் போன்றவற்றின் மூலம் அதிகபட்சம் காப்பாற்றிவிடமுடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சில இடங்களில் கடிபட்டவரைப் படுக்க வைத்து மந்திரம் ஜெபிப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். என் நண்பரின் அண்ணனுடைய நண்பனின் அக்காவுக்கு வயலில் பாம்பு கடித்து ஒரு முழு இரவும் படுக்கவைத்து மந்திரம் சொல்லிக்கொண்டிருந்ததில் காலையில் அவர் இறந்துபோனது நினைவுக்கு வந்தது. அதுதவிர கோவை மாவட்டம் சோமனூர் அருகே இருக்கும் வாழைத்தோட்ட ஐயன் கோவிலுக்குப் போய் வருவதன் மூலம் பாம்பு தோஷங்களிலிருந்து விடுபட முடியும் என்றும் நம்பிக்கை நிலவுகிறது. அம்மாவை பாம்பு கடிப்பதற்கு ஒரு வாரம் முன்பு நானும் என் நான்கு வயது வாண்டும் இரவு பத்தரைக்கு பரமபதம் விளையாண்டு கொண்டிருந்ததுகூட காரணமாயிருக்கலாம் என்று என் மனைவிக்கு லேசான சந்தேகம்கூட இருக்கிறது.

அம்மா வந்திருந்தபோது போரடிக்கிறது என்று காலையில் டி.வி போட்டபோது முதலில் திரையில் தெரிந்தது சூர்யா டி.வியில் பாம்புகள் பற்றின ஒரு நிகழ்ச்சி. 'நம்மள் தம்மில்' என்று ஸ்ரீகண்டன் நாயர் என்பவர் நடத்துவது. அதில் 25 தடவைகள் அரணை (பாப்பராணி) கடித்த பெண்மணி, 32 தடவை பாம்புக்கடி வாங்கிய ஒரு நடுத்தர வயது பெண்மணி, ஒரு பாம்பு சாஸ்திர நிபுணர், பாம்புக்கடி மருத்துவ நிபுணர், 100க்கும் மேற்பட்ட விஷப் பாம்புகளைப் பிடித்து வளர்த்துகிற ஒரு வீரப்பன் மீசைக்காரர். கொஞ்சம் ஆடியன்ஸ் இவர்களை வைத்து ஒரு நிகழ்ச்சி. அந்தப் பெண்மணி சென்ற இடமெல்லாம் பாம்புகள் தேடிவந்து கடித்துவிட்டுப் போகிறதாம். அதற்கு விளக்கம் கேட்டதற்கு மருத்துவர் அந்தப் பெண்மணியின் உடலிலிருந்து வருகிற மணம் இப்படி பாம்புகளை ஈர்த்து அழைக்கிற தன்மையைப் பெற்றிருக்கலாம் என்று சந்தேகமாய் பதில் சொன்னார். தவிர கேள்வி கேட்டுவிட்டு யாராவது பதில் சொல்வதற்குள் அவர்களை ஓவர்லேப் அல்லது ஓவர்டேக் பண்ணி பேச ஆரம்பிக்கிற ஸ்ரீகண்டன் நாயரின் குணத்தால் - பாம்புக்கு காது கிடையாது, மகுடி இசை அதற்கு கேட்காது. மகுடியின் அசைவுக்கு ஏற்ப தலையசைப்பது அது இசைக்கு ஆடுவதுபோல் தோன்றுகிறது; நில அதிர்வுகளை வைத்தே ஆள் நெருங்குவதைக் தெரிந்துகொள்கிறது - என்கிற அடிப்படை விஷயங்களைத் தவிர எக்ஸ்பர்டுகள் தெரிவிக்க நினைத்த பாம்பு விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியாமல் போய்விட்டது.

பாம்புகள் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவதற்கு இணையம் சிறந்த இடமென்று தெரியும். இன்னும் உள்ளே போகவில்லை. என் பயோ டேட்டாவில் 'ஹாபி' என்பதற்கு நேராக பாம்பு ஆராய்ச்சி என்று போடாலாமா என்றும் யோசனை. மேற்படி நான் கேள்விப்பட நேர்ந்த விஷயங்களில் ஏதேனும் தவறிருப்பினும் கூடுதல் விவரம் தெரிந்து வைத்திருப்பவர்கள் சுட்டிக் காட்டவும்.

எப்படியோ நான் இப்போதெல்லாம் தரையில் ஒரு மண்புழு ஊர்ந்தால்கூட சந்தேகமாய்ப் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். பின்னே இருக்காதா?

சொர்க்கத்தின் குழந்தைகள்

போனவாரம் ஒரு சில பிற மொழிப் படங்களைப் பார்த்தேன். சில்ட்ரன் ஆஃப் ஹெவன், நோ மேன்ஸ் லேண்ட், சேவியர் மற்றும் சிக்ஸ்த் சென்ஸ். இதில் சில்ட்ரன். ஆஃப் ஹெவனும், நோ மேன்ஸ் லேண்ட்டும் ஏற்கனவே பார்த்தவைகள்தான். ஆனால் மறுபடி பார்க்கத் தூண்டுகிற படங்கள்.

'சில்ரன் ஆஃப் ஹெவன்' பற்றி சிலாகித்தே ஆகவேண்டும். இது ஒரு ஈரானியப் படம். இத் திரைப்படத்தின் முக்கியப் பாத்திரங்கள் ஸ்கூல் போகிற ஒரு பையனும் அவன் தங்கையும், அப்புறம் ஒரு ஜோடி ஷூவும்தான். இன்னும் சொல்லப் போனால் ஷூதான் படத்தில் ஹீரோ. சின்னச் சின்ன உணர்வுக் கலவைகளோடு ரசிக்கத்தக்க வகையில் சுவாரஸ்யமாய் இப்படிக்கூட கதை சொல்ல முடியுமாவென்று ஆச்சரியமாய் மறுபடி மறுபடி பார்த்தேன். நம்மூர் புது இயக்குநர்கள் சில்ரன் ஆஃப் ஹெவனை பத்து தடவையாவது போட்டுப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. எந்த ஆர்ப்பாட்டமும் கூத்தும் இல்லாத எளிய திரைக்கதை அமைப்பைக் கொண்ட இப்படத்தைப் பார்த்து முடிக்கும்போது ஒரு நல்ல சிறுகதை அல்லது குறுநாவல் படித்த உணர்வு நிச்சயம் எழும் என்பதற்கு நான் கியாரண்டி தருகிறேன்.

இதே மாதிரி தி சிக்ஸ்த் சென்ஸ். 1999 ல் பல ஆஸ்கார்களை வென்று குவித்த இந்தப் படத்தை ரொம்ப லேட்டாகப் பார்க்க நேரிட்டது என் துரதிருஷ்டம். புத்திசாலித்தனமான திரைக்கதை அமைப்பு, சைக்கலாஜிகல் திரில்லர் என்றெல்லாம் உலகலாவிய பாராட்டைப் பெற்ற இந்தப் படம் தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தபோது ஏனோ பார்க்கவில்லை. படத்தில் என்ன கதை என்பதை வரிந்து வரிந்து நண்பனொருவன் விளக்கிச் சொன்னதும்கூட நான் சுவாரஸ்யமிழக்கக் காரணமாயிருந்திருக்கலாம். இப்போது காணக் கிடைத்தபோது நிஜமாய் பிரமிப்பாய் இருந்தது. டை-ஹார்ட்-ல் கிழிந்த பனியனும் கையில் துப்பாக்கியுமாக அட்வென்சர் ஆசாமியாகப் பார்த்த ப்ரூஸ் வில்லீஸை, டாக்டர் மேல்கம் க்ராவ் என்ற பாத்திரத்தில் அமைதியான உணர்ச்சிகரமான ஒரு குழந்தைகள் சைக்காலஜிஸ்ட்டாகப் பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ப்ரூஸ் வில்லீஸூடன் போட்டி போட்டு நடித்திருக்கும் அந்தப் பையன் ஹேலி ஜோயல் ஆஸ்மெண்ட்-ன் முகம் மனசைவிட்டு அகல மறுக்கிறது. (இப்போது பெரிய பையனாகிவிட்டான் போல!) இந்தப் படத்திலும் எல்லாவற்றையும்விட, புருவத்தை உயரவைக்கும் திரைக்கதைதான் ஹீரோ என்பதில் சந்தேகமில்லை. பார்த்த அன்று இரவு தூக்கம் வரவில்லை. இருட்டிக்குள் போக லேசாய் பயமாயிருந்தது. ஏனென்பது படம் பார்த்தவர்களுக்குத் தெரியும். ரொம்ப லேட்டாய்ப் பார்த்தாலும் மிகவும் அசத்திய இந்தப் படத்தின் விவரங்களை நெட்டில் தேடிக்கொண்டிருந்தபோது திடீரென்று அதன் ஸ்க்ரிப்ட் அகப்பட்டதும் மனம் புளகாங்கிதமடைந்துவிட்டது. டெளன்லோடு பண்ணி ஒரே மூச்சில் படித்து முடித்தேன். படிக்கப் படிக்க ஆச்சரியம் உயர்ந்துகொண்டே போகிறது. என்னமாய் எழுதியிருக்கிறார். ஒரு நல்ல தரமான திரில்லர் நாவல் படித்து முடித்த திருப்தி கிடைத்தது. (இந்தத் திரைக்கதையின் நோட்பேடு வடிவத்தைப் பார்த்தால் மூவி மேஜிக் அல்லது அல்லது ஃபைனல் ட்ராஃப்ட் போன்ற மென்பொருள்களின் உதவியால் எழுதப்பட்டிருக்கலாம் என்று தோன்றியது.)

தி சிக்ஸ்த் சென்ஸ் போல இன்னும் நிறைய புகழ்பெற்ற ஹாலிவுட் திரைக்கதைகள் html, pdf அல்லது txt வடிவங்களில் கிடைக்கின்றன. இந்த மாதிரி சிலவற்றை என் கணினியில் இறக்கி வைத்திருக்கிறேன். அவற்றில் சில - American Beauty, Gladiator, Breave Heart, Rush Hour, Face/Off, Signs, Cast Away, Terninator 2, Trueman show, Saving Private Ryan, etc. Roberto Benigni-யின் "Life is beautiful" என்ற படத்தின் திரைக்கதையை தேடிக் கொண்டிருக்கிறேன். இன்னும் கிடைக்கவில்லை. இம்மாதிரி திரைக்கதைகளில் எது திரைப்படமாக்கப்பட்ட இறுதி வடிவம் என்று தேடிப் பார்த்து இறக்குமதி செய்ய வேண்டியது அவசியம். சிலவற்றில் "third draft" என்றோ "Shooting script" என்றோ கூட போட்டிருக்கும். சிலவற்றை இறக்குமதி செய்ய பைசா கேட்கிறார்கள். திரைக்கதை எழுதுவது எப்படி என்பதற்கு புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்துக்கொண்டிருக்கும் வருங்கால இயக்குநர்கள் கூடுமானால் இந்த ஸ்கிரிப்டுகள் எல்லாவற்றையும் ஒரு புரட்டு புரட்டிப் பார்த்தால் அவர்களுக்கும் மக்களுக்கும் உதவியாயிருக்கும் என்று நினைக்கிறேன். தமிழில்கூட வெற்றி பெற்ற / பெறாத சில படங்களின் திரைக்கதைகள் புத்தகமாக வெளிவந்திருப்பதை அறிவேன். (உதா : சேது, ஹே ராம்.) ஹாலிவுட் ஸ்கிரிப்ட்கள் மாதிரி நல்ல தமிழ்த் திரைக்கதைகளையும் எப்போது வலையில் இறக்குமதி செய்கிற வசதி கிடைக்குமென்பதையும், அப்படி ஏதேனும் முயற்சிகள் நடக்கின்றனவாவென்பதையும் அறிய அவா!

ஹாலிவுட் பிரியர்களுக்கு எனக்கு தெரிந்த ஏதோ சில உபரி தகவல்களையும் சொல்லிவிடலாமென்று நினைக்கிறேன். www.imdb.com என்கிற வலைத்தளம் உலகளாவிய வகையில் திரைப்படங்கள், அவற்றின் இயக்குநர்கள், மற்றும் இன்னபிற விவரங்களைத் தொகுத்துத் தருகிறது. மணிரத்னம் என்று தேடினாலும் கிடைக்கிறது. ஸ்பீல்பெர்க் என்று தேடினாலும் கிடைக்கிறது. இந்த மகா வலைத்தளத்தை உருவாக்கிய புண்ணியவானுக்கு என் வந்தனங்கள். அது மாதிரி www.apple.com/trailers என்று போட்டுப் பாருங்கள். இப்போது ஹாலிவுட்டில் தயாரிக்கப்பட்ட அத்தனை புத்தம்புது படங்களின் ட்ரைலர்களைப் அவரவர் Band Width செளகரியத்தில் பார்க்க அருமையான வலைத்தளம். இங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆங்கிலப் படங்களின் ட்ரைலர்கள் சிறியதும் பெரியதுமாக சுமார் 70 வைத்திருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒரு சிறுகதை மாதிரி மிரட்டக்கூடியவை. முன்பு கிடைத்துக்கொண்டிருந்த Broad Band நெட் வசதி என் வாழ்விலிருந்து துண்டிக்கப்பட்டதும் இந்த ட்ரைலர் சேகரிக்கிற பழக்கம் நின்று போனது. மீண்டும் கிடைத்தால் தொடர விருப்பம்.

இது மாதிரி இணையப் பெருங்கடலில் நிறைய ஆழ்ந்து கிடக்கின்றன. ஆழமாய் மூழ்கிப் பொறுமையாய்த் தேடினால் நிறைய ஆச்சரியங்கள் கிடைக்கும்.

லைவ்

இதய பலவீனமுள்ளவர்களும் குழந்தைகளும் பின்வரும் காட்சிகளைப் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு டி.வியில் அதைக் காட்டினார்கள். தீயின் நாக்குகள் தின்று உமிழ்ந்த உயிர்கள் கரித்துண்டுகளாய் குவிந்துகிடப்பதும், பிஞ்சு மலர்களின் சாம்பல் காற்றில் பறப்பதும், கும்பகோணம் துன்பகோணம் ஆன காட்சிகள். அது இதய பலமுள்ளவர்களையும் பலவீனமாக்கிவிட்டது என்பதில் சந்தேகமில்லை. 'நெஞ்சே வெடித்துவிடும் போல் இருந்தது' என்று சாதரணமாகக் கதைகளில் எழுதுவதை உண்மையாய் உணர்ந்தது அதைப் பார்த்தபோதுதான்.

இந்த மாதிரி உலகின் மகா துயரங்களையும் கோர சம்பவங்களையும் சதுரக் காட்சிகளாய் லைவ் ரிலே அல்லது ரெகார்ட் பண்ணப்பட்ட கோப்புக் காட்சிகள் என்று வரவேற்பரைக்கு முன் கொட்டத் துவங்கிவிட்டது டி.வி சானல்கள். அதை பார்த்துப் பார்த்து அன்றாட வாழ்க்கையின் பரபரப்பை இன்னும் கொஞ்சம் அதிகரித்துக் கொண்டு தவித்துக் கிடக்கிறோம்.

முன்பு ஒரு முறை தர்மபுரியில் ஒரு பஸ்ஸுக்குள் மூன்று மாணவிகள் மரண ஓலங்களுடன் எரிவது பல கோணங்களில் காட்டப்பட்டது. 'ஐயோ' என்று நெஞ்சு பதைக்கப் பார்த்ததைத் தவிர நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்தச் சூழ்நிலையில் படமெடுத்த காமிராக்காரருக்கு ஏன் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடத் தோன்றவில்லை என்று இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

இதேபோல் கேரளாவில் ஒரு மதம் பிடித்த யானை தன் பாகனை துதிக்கையால் தூக்கி வீசிப் பந்தாடி கீழே போட்டு உருட்டி காலால் நசுக்கிச் சாகடித்ததை நீங்கள் நிச்சயம் பார்த்து திடுக்கிட்டிருப்பீர்கள். அதையும் மறக்காமல் திரும்பத் திரும்ப எல்லா செய்தி நேரத்தின் போதும் மறுஒளிபரப்பு பண்ணி அடிவயிற்றைப் பிசைய வைத்தார்கள். பார்த்து இரண்டு வேளை சோறு தொண்டைக்குள் இறங்கவில்லை.

அதே மாதிரி ஒரு மனநோயாளி ஒரு கோயில் பணியாளரை தெப்பக்குளத்துக்குள் பார்ப்பவர்களின் கண் முன்னே மூழ்கடித்துக் கொன்ற கொடூரக் காட்சி. காமிரா சுழன்று அதை விலாவாரியாய் பதிவு பண்ணி நமக்குக் காட்டியது. இது மாதிரி இன்னும் நிறைய. 'ஐயோ கொல பண்றாங்க' என்ற ஓலத்துடன் கலைஞரை கைது செய்யும் காட்சியை ஐந்து நிமிடங்களுக்கொருமுறை ஒளிபரப்பி இயல்பு வாழ்க்கையை ஸ்தம்பிக்கச் செய்தது ஒரு சேனல். பார்லிமெண்டில் நுழைந்த தீவிரவாதிகள் தூண்களுக்குப் பின் மறைந்து சுடும் காட்சியும் இறுதியில் புல்லட் துளைக்கப்பட்ட அவர்களின் உடல்களையும் பார்த்தோம். மும்பை இண்டியா கேட் அருகே வெடிகுண்டு விபத்தில் சிதறினவர்கள். கோவை தொடர் வெடிகுண்டு விபத்துக்களின் நேரடி ஒளிபரப்பு. ராஜீவ் காந்தி கொலை, அஸ்ஸாம் புயல் சேதம், ஏர்வாடி தீ விபத்து, ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட குஜராத் நிலநடுக்கம், பாலங்களில் ரயில் பெட்டிகள் தடம்புரண்டு கவிழந்து தொங்குவது. மெரீனா காந்தி சிலையருகே நடந்த பேரணியில் நிகழ்ந்த கலவரத்தில் ஒருத்தனை ஓட ஓட விரட்டி நடுமுதுகில் வெட்டுகிற காட்சி. குஜராத் ரயில் பெட்டி எரிப்பும் அதைத் தொடர்ந்த கலவரங்கள். விமானங்கள் தகர்த்துப் பிளந்த WTC கட்டிடங்கள் சுமார் ஆறாயிரம் பேருடன் இடிந்து தரை தட்டல். லேசர் குண்டுகளால் ஈராக்கைத் துளைத்தெடுக்கிற போர் விமானங்கள். இந்திய விமானம் ஆப்கனுக்கு கடத்தப்பட்டபோது கொன்று வீசப்பட்ட புது மணமகனின் உடல். அப்புறம் இது போதாதென்று ஒரு பணயக் கைதியின் தலையை தனியே அறுத்தெடுக்கும் கோரக் காட்சி. போலீஸ் என்கெளண்டர்கள் என பதற வைக்கும் காட்சிகள் டி.வி என்கிற அபார சாதனத்தின் உபயத்தில் கண் முன்னே விரிகின்றன. இது போல் இன்ன பிற.

சம்பவ இடங்களில் உடனுக்குடன் பதிவுசெய்யப்படும் 'நேரடிக் காட்சிகள்' டி.வி சேனல்களின் வேகமான டெக்னாலஜி திறமையை பறைசாற்றாமலில்லை. இத்தனை காலம் ரேடியோவில் கேட்டுக் கொண்டிருந்த இந்த கோர துயர நிகழ்ச்சிகளை இப்போது சிவப்பு வண்ணம் பூசின கோப்புக் காட்சிகளாக அல்லது லைவ்வாக இயக்கமற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எத்தனை தவிர்த்தாலும் இறந்த உடல்களையும், ஓடுகிற ரத்த ஆறையும் குழந்தைகளும் கூட சர்வ சாதாரணமாய் பார்க்க ஆரம்பித்துவிட்டன. அவர்கள் வளர்கிற போது காணக்கிடைக்கிற நிஜம் அப்படியொன்றும் அவர்களிடம் அதிர்வுகளை ஏற்படுத்திவிடாது என்று தோன்றுகிறது. இந்தச் செய்திகள் எல்லாம் மக்களுக்கு உடனுக்குடன் யார் முந்தித் தருவது என்ற போட்டியில் மரணங்களையும், கலவரங்களையும், விபத்துக்களையும், ரத்தச் சிவப்பையும் தேடி காமிராக்கள் அலைகின்றன. எடுக்கப்பட்ட வீடியோக்கள், சேனல்களில் திரும்பத் திரும்ப ஓட்டப்பட்டு மெல்லிதயங்களைக் கலக்குகின்றன. உறைந்த மனங்களோடு இப்போது இவைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிற நமக்கு ஒரு நாள் மரத்துப் போய் விடும் என்றே தோன்றுகிறது.

பார்க்கவும் முடியவில்லை. தவிர்க்கவும் முடியவில்லை. இந்த லைவ் ரிலேக்களை என்ன செய்வதென்றும் புரியவில்லை.

சுட்டது யார்?

மேட்டுப் பாளையம் மெயின் ரோட்டிலிருந்து ராமசாமிக் கவுண்டர் தோட்டம் வழியாக நாங்கள் முன்பு குடியிருந்த திருமுருகன் நகருக்குக் குறுக்கு வழி இருந்தது. பொது வழி அல்ல என்று போர்டு போட்டிருந்தாலும் நடக்கிறவர்கள் நடந்துகொண்டுதான் இருந்தார்கள். முதலில் பரந்து விரிந்த ஒரு ரோஜாத் தோட்டம் இருக்கும். கோவை பூமார்க்கெட்டுக்கு அங்கிருந்து நிறைய சப்ளை உண்டு. அதைத் தாண்டி நடந்தால் அப்புறம் கவுண்டர் வீடும் அதையொட்டின வாழைத் தோட்டமும் இருக்கும், அங்கிருந்து ஒரு தென்னந்தோப்பின் நிழல் சூழ்ந்த மண்பாதை ஆரம்பமாகும். அதெல்லாம் நான் நிறைய ரசித்து ரசித்து நடந்த வழிகள். அதிகம் ஆட்கள் நடமாட்டமற்ற தனிமையில் இத்தனை தூரம் கடந்து வந்தால் பிறகு அந்தப்பக்கம் இருக்கிற காலனியை தன் அடர்த்தியால் மறைக்கிற ஆளுயர சோளக்காடு. அதற்குள் புகுந்து நடக்க வேண்டும். சோளம் நன்றாய் வளர்ந்திருந்தால் ஒரு ஆள் நடக்கிற வழி மட்டுமே இருக்கும். இரவானால் அந்த வழியே நடப்பதானால் கொஞ்சம் ரிஸ்க்தான். துளி வெளிச்சம்கூட இல்லாத இருளடடைந்த அந்தச் சோளக்காட்டின் நடுவேயான ஒற்றையடிப்பாதையில், காலடியில் ஊரும் பாம்புகளை பயத்துடன் தவிர்த்து நடக்கையில் எதற்காக அப்பா இப்படியொரு காலனியில் வீடு பார்த்தார் என்று கோபமாய் வரும். வழியில் நடுவில் ஒரு பெரிய ஒற்றை வேப்பமரமும், அதனடியில் ஒரு பாம்புப் புற்றும் உண்டு. இப்படி ஒரு பெரிய நகரத்துக்கு நடுவில் இந்த கிராமிய சூழ்நிலை தாண்டி திடீரென்று ஒரு காலனி விரிவது கொஞ்சம் வியப்பாய்தான் இருக்கும். தள்ளித் தள்ளி தனித்தனி வீடுகள் கொண்ட காலனி.

அது ஒரு நல்ல வீடு. அப்பாவின் ட்ரான்ஸ்ஃபர் பந்தாடல்களுக்கு நடுவில் நாங்கள் இருக்க நேரிட்ட இன்னொரு ஜாகை. எனக்கு மிகவும் பிடித்த வீடு அது. முன்னால் வட்டவடிவில் ஒரு சிட் அவுட், சின்ன தோட்டத்துடன் கொஞ்சம் அழகாகத்தான் இருக்கும். வீட்டின் பின்புறமும் உபரி ரம்மியமாய் கொஞ்சம் தென்னந்தோப்புகள், அதன் பின் புலத்தில் நீல நிறத்தில் ஒரு குட்டி மலைத்தொடர்.

அன்றைக்கு எதற்கோ வேலைக்கு லீவு போட்டு வீட்டில் இருந்தேன். ஒரு நல்ல வெயிலடிக்கிற பகல் பொழுது அது. எதேச்சையாக வீட்டு ஜன்னலின் வழியே பார்வை ஓட்டியபோது அவர்களைக் பார்த்தேன். இரண்டு பேர் என் வீட்டுக்கு எதிரில் நின்றிருந்தார்கள். அவர்கள் என் வீட்டைச் சுட்டிக்காட்டி என்னவோ பேசிக்கொண்டிருக்கிறார்கள். நான் வெகுநேரம் அவர்களைக் கவனித்துக்கொண்டிருந்தேன். யார் அவர்கள்? என்ன பேசுகிறார்கள்? என்று புதிராய் இருந்தது. அதில் ஒரு ஆள் லேசாய் வீட்டருகில் வந்து சுற்றுமுற்றும் பார்வையால் அளந்துவிட்டு பின் மறுபடி இன்னொரு ஆளிடம் போய் என்னவோ சொல்வதைப் பார்த்தேன். எனக்கு லேசாய் சந்தேகமாய் இருந்தது. பின்னர் இருவருமாக மேலும் நெருங்கி மறுபடி வீட்டை நோட்டம் பார்க்க ஆரம்பித்தார்கள். நான் இருக்கக் கொள்ளாமல் டக்கென்று கதவு திறந்து வெளியே வந்தேன்.

என்னைப் பார்த்ததும் அவர்கள் மையமாய் சிரித்தார்கள். நான் சிரிக்காமல், யார் நீங்க? என்ன வேணும்? என்றேன்.

"விஜய் டி.விக்காக ஒரு சீரியல் ஷூட்டிங் பக்கத்துல நடந்துட்டிருக்கு தம்பி. நாங்கதான் அதுக்கு ப்ரொடியூசர்ஸ். உங்க வீடு அமைப்பு நல்லா இருக்கு. இங்க ரெண்டு மூணு ஷாட்ஸ் எடுக்கலாமான்னு டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தோம்." என்றார் ஒருவர். ஓஹோ என்றேன் நான். அவர்கள் வீட்டுக்கு எதிரில் நின்று உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது சந்தேகம் வரவழைத்ததைச் சொன்னேன். சிரித்தார்கள்.

"சொல்லுங்க தம்பி ரெண்டு மூணு சீன் இங்க எடுத்துக்கலாமா?" என்றார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியாவிட்டாலும் கொஞ்சம் ஆர்வமாய்த்தான் இருந்தது. 'தேவர் மகன்' ஷூட்டிங் யூனிட்டுடன் பொள்ளாச்சி சூலக்கல், ஊத்துக்குளி வட்டார படப்பிடிப்பிலெல்லாம் மூன்று நாட்கள் அலைந்தது ஞாபகம் வந்தது. ஆஹா இப்போது என் வீடே படப்பிடிப்புத்தளமாகிவிட்ட பாக்கியம் கிடைத்துவிட்டது. இதோ நான் அனுமதித்தால் விஜய் டி.வி.யில் என் வீடு தெரியும். எனக்கு பயங்கர திரில்லாகிவிட்டது. அப்பா ஆபிஸ் போயிருக்கிறார். அம்மாவிடம் ஓடி விஷயத்தைச் சொன்னேன். அம்மாவுக்கு அது பற்றியெல்லாம் தெளிவான ஞானம் இருக்கவில்லை. என்னமோ நம்மளை தொந்தரவு பண்ணாம நடத்தினாங்கன்னா சரி என்றாள்.

நான் வெளியில் வந்து "ஷாட்ஸ் எடுத்துக்கோங்க ஆனா வீட்டுக்குள்ள எல்லாம் வேண்டாம்" என்றேன் அவர்களிடம். ஒத்துக்கொண்டார்கள். தோ வந்துர்றோம் என்று மறைந்தார்கள். திரும்பி வரும்போது கேமரா, ரிஃப்ளக்டர், லைட்டுகள் சகிதம் ஒரு படையே வந்தது. நடுவில் நடுநாயகமாய் ஆறேழு வீடுகள் தள்ளி குடியிருக்கிற பாலன் குட்டி பளபளவென்று நடந்து வருகிறார். அவர் முகத்தில் ரோஸ் பவுடர், உதட்டில் லேசாய் லிப்ஸ்டிக். ஜெல் போட்டு தலையை படிய வாரி, கோட்டெல்லாம் போட்டிருந்தார். என்னைப் பார்த்து மந்தாரமாய் மேக்கப் கலையாமல் சிரித்தார். விஜய் டி.வி. சீரியலில் அவர்தான் ஹீரோ என்றார். எனக்கு பகீரென்றது. அவருக்கு ஒரு ஐம்பது வயதிருக்கும். அவர் தமிழ் பேசினால் கேரளா பார்டரில் இருக்கிறமாதிரி ஃபீலிங் வந்துவிடும். ஆங்காங்கே மலையாள சமாஜ் ப்ரோக்ராம்களில் நன்றாய் கதகளி எல்லாம் ஆடுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சரிதான். அவர் கலை ஆர்வம் டி.வி. வரை வந்துவிட்டதுபோலிருக்கிறது என்று நினைத்தேன். நான் ஆவல் மேலிட என்ன கதைங்க? என்றேன்.

துப்பறியும் கதை தம்பி. கொஞ்சம் காமெடியா பண்றோம். சுட்டது யார்னு டைட்டில் என்றார் தயாரிப்பாளர். பின்னர் பரபரவென்று சுற்றுமுற்றும் ஆராய்ந்துவிட்டு. "தம்பி உங்க டேப்ரிக்கார்டரோட ஸ்பீக்கர் கொஞ்சம் கழட்டித் தாங்க வீட்டு வாசல்ல மாட்டணும். கதைப் பிரகாரம் இதுதான் துப்பறியும் நிபுணர் வீடு" என்றார். நான் என்னடா ப்ரொடியூஸர்தான் டைரக்ஷணும் பண்ணுகிறாரா என்று வியந்து கொண்டே கழற்றிக் கொடுத்தேன். அதை வீட்டு வாசலில் தொங்க விட்டார்கள். அதற்கு மேல் ஒரு புலியின் படத்தை ஒட்டினார்கள். பாலன் குட்டி தயாரானார். லைட்ஸ்! கேமரா! ஆக்ஷன். கேமரா ஓட ஆரம்பித்தது. என் வீட்டு ப்ளக் பாயிண்டில் ஒயர்கள் சொருகப்பட்டு பளிச்சென்று 2KVA விளக்கு எரிந்தது. இன்னொரு நடிகர் ஒருவர் எங்கிருந்தோ என் வீட்டு வாசலுக்கு வந்து நின்றார். மிஸ்டர் துளசிங்கம் என்று கூப்பிட்டார். உடனே ஸ்பீக்கரிலிருந்து குரல் வருவது மாதிரி யூனிட்டின் மினி டேப்பிலிருந்து ஒரு புலியின் உறுமல் கேட்டுவிட்டு 'எஸ்.. ஐ ஏம் கமிங்' என்று குரல் கேட்டது. பாலன் குட்டி என் வீட்டுக்குள்ளிருந்து வெளிப்பட்டார். அப்புறம் வந்த ஆளை நோக்கி ஒரு டயலாக் சொல்லவேண்டும்.. "நான்தான் உலகப் புகழ்பெற்ற துப்பறியும் டைகர் துளசிங்கம். நீங்க யாரு?" என்பதுதான் அந்த டயலாக். நான் டைகருக்கும் சிங்கத்துக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது பாலன் குட்டி டையை சரிபண்ணிக்கொண்டு சொன்னார். "நாந்தான் உழகப் புஹழ்பெற்ற துப்பறியும் டைகர் துழசிம்ஹம். நிங்ஙள் யாரு?"

எனக்கு குபீர் என்று சிரிப்பு வந்தது. நல்ல காமெடி சீரியல்தான் போலும். இதே டயலாக்கை திரும்பத்திரும்ப சொல்லி பத்து பன்னிரெண்டு தடவை டேக் எடுத்தார்கள். அவர் வாயில் கடிபட்டு சிங்கமும் புலியும் செத்தே போயிற்று. அப்புறம் எல்லாவற்றையும் கழற்றிவிட்டு, தென்னந்தோப்பில் வில்லனை துளசிங்கம் ஸ்கூட்டரில் துரத்துகிற சீன் எடுக்கப் போய்விட்டார்கள். சுற்றிலும் ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க கூடியிருந்த கும்பல் என் வீட்டை ஆச்சரியமாய் பார்ப்பதை கவனித்தேன். மானசீகமாய் நான் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டேன். ஷூட்டிங்கெல்லாம் நடந்த வீடு என்றால் சும்மாவா? நான் ஸ்பீக்கரை தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் போனேன்.

அப்பா வந்தார். விஷயம் கேள்விப்பட்டு என்னை முறைத்தார். பணம் ஏதாவது கொடுத்தார்களா என்றார். நான் இல்லை என்றேன். உடனே போய் E.B மீட்டரைப் பார்த்தார். 2000 வாட்ஸ் பல்புகள் அரை நாள் எரிந்ததில் மீட்டர் ரீடிங் எகிறியிருந்தது. அய்யய்யோ இதை நான் யோசிக்கவேயில்லை. அப்பா டென்்ஷனாய் திரும்பி என்னைத் திட்டுவதற்கு தேடும்போது நான் கவுண்டர் தோட்டமெல்லாம் தாண்டி மெயின் ரோட்டுக்குப் பறந்து வந்திருந்தேன்.

சுட்டது யார் என்ற அந்த காமெடி சீரியலை எப்போதாவது யாராவது விஜய் டி.வியில் பார்த்தீர்களா? எங்கள் வீடு தெரிந்ததா? சொல்லுங்க.

மனதில் உனது ஆதிக்கம்

'மனதில் உனது ஆதிக்கம்' என்ற எனது சிறுகதைத் தொகுப்பு இன்று வெளியாகியிருக்கிறது. இந்தப் புத்தகம் மூலம் நான் உங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மொத்தம் 11 சிறுகதைகளும் கல்கியில் வெளியான நான்கு வார குறுந்தொடர் ஒன்றும் அடங்கியது இத்தொகுப்பு. 95லிருந்து துவங்கி வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட சிறுகதைகள் இவை. இச்சிறுகதைகளில் அதிகபட்சம் கல்கியில் வெளியானவை. என் எழுத்தில் நம்பிக்கை கொண்டு, என்னை ஊக்குவித்து இதை வெளியிடுவதில் பெருமளவில் உதவிய பா.ராகவன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மனதில் உனது ஆதிக்கம்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம், சென்னை

நடுநிசிப் பேய்கள்

எங்கள் பாட்டி கதை சொல்லி வளர்ந்தவளா இல்லை கதை சொல்லி வளர்க்கப்பட்டவளா என்று எனக்குத் தெரியாது. ஆனால் பாட்டி ஒரு நல்ல கதை சொல்லி. என் கதைவிடும் திறன்கூட பாட்டி தன் டி.என்.ஏ குணாம்சங்களை எனக்குத் தாரை வார்த்துக்கொடுத்ததுதானோ என்றொரு சந்தேகமுண்டு.

பாட்டி சொல்கிற கதைகளில் தொண்ணூற்றைந்து சதவீதம் அட்வென்சர், திரில்லர், ஹார்ரர் ரகமாகத்தான் இருக்கும். கேட்கிறவர்கள் அதிகபட்சம் சின்னப் பையன், பொண்ணுங்களாக இருந்ததால் நெஞ்சுறைந்து கேட்டுக் கிடப்பார்கள். பி.டி. சாமி ரேஞ்ஜில் அமானுஷ்யமான கதைகள் நிறைய சொல்வாள். ஊரில் நடந்தது. அக்கம்பக்கத்தில் நடந்தது என்று விழிகள் விரிய கதைசொல்லி பயமுறுத்துவாள். கேட்டால் இரண்டு நாட்களுக்குத் தூக்கம் வராமல் புரள வேண்டியிருக்கும்.

மோயாறு மின்சார வாரிய க்வார்டஸில் இருந்தபோது நிகழ்ந்தவை என்று சிலது சொல்வாள். அப்போது நான் ஒரு வயசுக் குழந்தையாம். மோயாறு - மலைமேல் அமைந்திருக்கிற ஒரு அடர் காடு. வனத்துறை மற்றும் மின்சார வாரிய ஆட்கள் மட்டுமே புழங்குகிற இடம். EB க்வார்டஸில் சொற்பமாய் வீடுகள். எல்லோரும் சாயங்காலம் ஏழு மணிக்கெல்லாம் கதவைச் சாத்தி விடுவார்கள் என்று பாட்டி சொல்வாள். காரணம் காட்டு யானைகள். கூட்டமாய் வீட்டு வாசலுக்கு வந்து முன்புற தோட்டத்தில் இருக்கிற வாழை மரங்களை தினசரி துவம்சம் செய்துவிட்டுப் போய்விடுமாம். ஜன்னல் கதவை நூல் இடைவெளியில் திறந்து வைத்து இருட்டுக்குள் யானைகளைப் பார்த்துக்கொண்டிருப்பார்களாம். அவைகள் கண்ணில் பட்டால் வாழை மரங்களுக்கு ஏற்படுகிற கதிதான் நமக்கும் என்றாள் பாட்டி. ஒரு முறை அப்பா நண்பர்கள் சிலருடன் எங்கேயோ போய்விட்டு வருவதற்கு லேட்டாக, திரும்பி வரும்போது இருளில் சடசடவென சப்தம் கேட்டதாம். ரொம்ப அருகில் ஒரு பெரிய காட்டு யானை மூத்திரம் பேய்ந்து கொண்டிருக்கிற சப்தம்தானாம் அது. அங்கிருந்து பிடித்த ஓட்டம் வீட்டுக்கு வந்துதான் நின்றார்களாம்.

ஒரு வைல்ட் லைஃப் எக்ஸ்பெர்ட் மாதிரி மேலும் சில கதிகலக்குகிற விஷயங்கள் சொல்வாள். யானை தவிர இருட்டினதும் திருப்பதி லட்டு சைஸுக்கு ஒரு வண்டு டொக் டொக் என்று ராப்பூராவும் கதவில் மோதிக்கொண்டே இருந்தது, ஒரு சிறுத்தை தன் இரு குட்டிகளுடன் வீட்டுக் கூரையில் விடிகாலையில் உட்கார்ந்து கொண்டு கர் கர் என்று கத்திக்கொண்டிருந்தது என்று நிறைய சொல்வாள். நான் இதையெல்லாம் பின்னாளில் கதைகளாய்க் கேட்கும்போது ஆறாங்கிளாஸோ என்னமோ படித்துக்கொண்டிருந்தேன்.

மலையிலிருந்து இறங்கி டவுனுக்கு வந்த பிறகு பாட்டியின் கதைகளில் மாறுதல் வந்துவிட்டன. திடீரென்று ஒரு நாள் காலையில் எழுந்ததும், இரவு ஏதோ ஒரு அமுக்கான் (இது பற்றி தனியே எழுதவேண்டும்) தன் கழுத்தைப் பிடித்து மூச்சுத் திணறும்வரை வெகு நேரம் அமுக்கிக்கொண்டிருந்துவிட்டு பின் போய்விட்டதாக சொன்னாள். இன்னொரு நாள் எதற்கோ வீட்டுக்குள்ளிருந்து வெளியில் வந்தபோது வானத்தில் ஒரு தேர் வந்து நின்றதாகவும், அதிலிருந்து தேவர்கள் மாதிரி இருவர் பாட்டியை தம்முடன் வருமாறு அழைத்ததாகவும், பிறகு என்ன தோன்றியதோ சட்டென்று தேரைத் திருப்பிக்கொண்டு சர்ரென்று போய்விட்டதாகவும் சொன்னாள். அவர்கள் போனபிறகு வானத்தில் கழுத்தில் மட்டும் வெள்ளை நிறமிருக்கும் பருந்து வட்டமடித்துப் போனதாகவும் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னாள். அன்றைக்குக் காலை நாலு வீடு தள்ளி ஒரு பாட்டி பரலோக பதவியடைந்துவிட்டதை தன் கதையின் ஒரு அத்தியாயமாய் சேர்ந்துகொண்டு அதற்கு தெளிவுரையும் அளித்தாள். தன்னைக் கூப்பிட வந்த தேர் அந்தப் பாட்டியை அழைத்துக்கொண்டு போய்விட்டதாம். எதைச் சொன்னாலும் அப்படியே நம்புகிற வயதல்லவா? கேட்டதும் எங்களுக்கு அடிவயிற்றுத் திகில் அதிகமாகிவிட்டது.

பாட்டி பக்கத்துவீட்டில் லலிதா என்று ஒரு பெண் இருந்ததாகவும் அது ஒருநாள் தற்கொலை செய்து கொண்டதாகவும் அதன் ஆவி அந்த வீட்டுக்குள்ளேயே அலைவதாகவும் சொல்லி ஒருநாள் பயமுறுத்திவிட்டாள். நான் இரவில் எழுந்து பாத்ரூம் போவதைக்கூட நிறுத்திவிட்டேன். அவள் தினமும் நடுநிசியில் பின்புற சந்தில் இருக்கிற கதவைத் தட்டுவதாகவும், யாரும் திறக்காவிட்டால் லேசாய் தேம்பி அழுகிற சப்தமும் கேட்கும் என்றாள். மல்லிகைப் பூ வாசம் வரும். ஜல் ஜல் என்று கொலுசொலி எல்லாம் கேட்கும் என்பாள். பாட்டி இதையெல்லாம் சும்மா மேம்போக்காய் சொல்லிவிட்டுப் போக மாட்டாள். ஒரு சினிமாத் தயாரிப்பாளரிடம் ஒரு புது இயக்குநர் எப்படி கதை சொல்வாரோ அப்படி சொல்வாள். கைகாலெல்லாம் ஆட்டி, விழிகள் விரித்து முக பாவங்களோடு. கேட்கிற பொடிசுகளுக்கு குலை நடுங்கிவிடும்.

எனக்கு ஒருநாள் நடுநிசியில் விழிப்பு வந்தது. மணி பன்னிரண்டரை இருக்கும். பாட்டி சொன்னது சட்டென்று ஞாபகம் வந்தது. உற்றுக் கேட்டபோது பக்கத்துவீட்டில் கதவைத் தட்டுகிற சப்தம் கேட்டது. எனக்கு உடலெங்கும் ஒரு முறை சிலிர்த்து அடங்கிவிட்டது. போர்வையை சர்ரென்று இழுத்து தலையோடு முக்காடிட்டுக் கொண்டேன். கொலுசு சப்தத்தைக் காதுகள் தேடின. மல்லிகைப் பூ வாசம் வருகிறதாவென பார்த்தேன். கொஞ்ச நேரத்தில் கதவு தட்டல் சப்தம் பலமாகிவிட்டது. பிறகு சட்டென்று நின்றுவிட்டது. பேய் போய்விட்டது போலும். நான் பிறகு இரவு முழுவதும் தூங்காமல் நடுங்கிக் கிடந்தேன். அதன்பிறகும் ஒரு சில நாட்களில் அந்தச் சப்தத்தை மறுபடி மறுபடி கேட்டிருக்கிறேன்.

பாட்டி இதுமாதிரி அதற்கப்புறம் சொன்ன நிறைய கதைகள் ராஜேஷ்குமாரின் "உலராத ரத்தம்" சுஜாதாவின் "கொலையுதிர் காலம்". இந்துமதியின் "ஒரு நிமிடம் தா ஒரு கொலை செய்கிறேன்" ஆகியவைகளை மிஞ்சுகிற திகில் கதைகளாக இருந்தன.

பிறகு ஒருநாள் தெரிந்துவிட்டது. டெக்ஸ்டைல் மில்கள் நிறைந்த ஊர் அது. பகல் மூன்று மணிக்கு மில்லுக்குப் போய்விட்டு நடுநிசி பன்னிரண்டு மணிக்குத் வீட்டுக்குத் திரும்பும் பணியாளர்களின் நடுநிசிக் கதவு தட்டல்தான் நான் தினசரி கேட்டுக்கொண்டிருந்தது.

நான் வளர்ந்தபிறகு என் வீடு இருக்கிற காலனிக்குப் போகிற குறுக்கு வழியான இருளடைந்த சோளக்காட்டுக்குள் பென் டார்ச் துணையுடன் தனியாக நடக்கும்போது பாட்டி சொன்ன பேய்க்கதைகள் ஞாபகத்துக்கு வரும். சிரித்துக்கொண்டே நடப்பேன். ஆனால் அந்த ஒற்றை மரத்தைத் தாண்டி நடக்கும்போது மட்டும் கொஞ்சம் அமானுஷ்யமாக இருக்கும்.

என் நண்பன் சதீஷ் எப்போது வீட்டுக்கு வந்தாலும் பேய்க்கத சொல்லுங்க பாட்டி என்று விரும்பிக் கேட்டு உட்கார்ந்துவிடுவான். ஜாலியாய் சிரித்துக்கேட்டு பாட்டியை கொஞ்சம் கிண்டல் பண்ணி விளையாடிவிட்டுப் போய்விடுவான்.

பாட்டி இப்போது இல்லை. பாட்டி சொன்ன கதைகள் அப்படியே நெஞ்சுக்குள் பத்திரமாய் அதே திகில் வாசனைகளோடு இருக்கின்றன.

இப்போதுகூட எங்கள் அபார்ட்மெண்டில் நடுநிசியில் ஏதோ ஒரு வீட்டில் அடிக்கடி கதவு பலமாய் தட்டப்படும் சப்தம் கேட்டது. ஜல் ஜல் என்று கொலுசு சப்தம்கூட கேட்கிறது. பாட்டியை நினைத்துக்கொண்டு காலையில் மெதுவாய் விசாரித்தபோது "கால் சென்டர்ல வேலைங்க. நைட்டு வேன்ல கொணாந்து ட்ராப் பண்ணிருவாங்க" என தகவல் கிடைத்தது.

விஜிகள்

மீச்சாதான் அந்தப் பெண்ணை எனக்கு முதன் முதலில் காட்டினான். நான் ஸ்தம்பித்து நின்றுவிட்டேன். நான் வாழ்க்கையில் முதன் முதலாகப் பார்க்கிற அழகான பெண். அப்போது எனக்கு வயது சுமார் 20 இருக்கலாம். நான் முதன் முதலில் அவளைப் பார்க்கும்போது எப்படியிருந்தாள் என்று கொஞ்சமாய் வர்ணித்துவிடுகிறேன். மஞ்சள் புடவை. கையில் வெயிலுக்குப் பூப்போட்ட குடை. இன்னொரு கையில் சுருட்டப்பட்ட வெள்ளைத் தாள். அவள் நல்ல நிறம். மையிட்ட அழகான கண்கள். எடுப்பாய் திருத்தப்பட்ட புருவங்கள். ரோஸ் நிறத்தில் உதடுகள். ரூஜ் உபயத்தில் சிவந்த கன்னக் கதுப்பு. நடையில் இயற்கையாய் நளினம். நீள ஜடை. எங்கள் காலனியிலிருந்து டைப் ரைட்டிங் பழக டெய்லி பதினொரு மணிக்குப் இப்படிப் போவாள் என்றான் மீச்சு. அழகு என்றால் அப்படியொரு அழகு.

அவள் கடந்தவுடன் ரோட்டில் அவள் நடந்த புழுதியைத் மீச்சா தொட்டுக் கும்பிட்டுக் கொண்டான். என்னா பிகருடா என்று அங்கலாய்த்தான். தினம் பதினோரு மணிக்கு இந்த இடத்தில் ஆஜராகிவிடுவானாம். நான் மஞ்சள் புடவை கண்ணிலிருந்து மறைகிற வரை பார்த்துக்கொண்டிருந்தேன். மீச்சா தவிர அந்தக் காலனியின் இன்னபிற இளைஞர்களும் அந்தப் பெண்ணிற்கு பெரிய அளவில் ரசிகர் மன்றங்கள் வைத்திருந்தார்கள் என்று மெல்ல மீச்சா மூலம் தெரிய வந்தது. அவள் டைப் ரைட்டிங் போகும்போது, திரும்பி வரும்போது என தினம் இரண்டு தடவை அவன் ஜென்மம் சாபல்யமடைந்துவிடுவதாகச் சொன்னான் அவன். எனக்கே அந்தக் கணம் அப்படித்தான் இருந்தது.

சினிமா டைரக்டர் யாராவது பார்த்தால் கேள்வி கேட்காமல் கொத்திக் கொண்டு போய்விடுவார்கள். அவ்வளவு செளந்தர்யமாக இருந்தாள். கண்ணில் அறைகிற அழகு என்று சொல்லலாம். மேலும் ஓரிரு தடவைகள் மீச்சுவுடன் நின்றிருக்கும்பேது அவள் போவதைப் பார்க்க நேரிட்டபோது அவள் அழகு பற்றி ஓரிரு வார்த்தைகளில் நானும்கூட சிலாகித்ததுண்டு.

ஈதிப்படி இருக்க நாங்கள் வீடு மாற்றத் தீர்மானித்தோம். அப்பா நிறைய இடம் தேடி கடைசியில் ஒரு வீட்டை முடிவு பண்ணினார். ஒரு சுபயோக சுபதினத்தில் பால் காய்ச்சி புது வீட்டுக்குக் குடிபோனாம். மாடியில் ஒன்றும் கீழே இரண்டுமாக தனி காம்பவுண்டுக்குள் போர்ஷன்கள் இருந்தன. குடிபோனதற்கு அடுத்தநாள் காலை திண்ணையில் நின்று சுற்றுப் புறத்தை பார்வையால் அளவெடுத்துக் கொண்டிருந்தேன். மாடியிலிருந்து அந்தப் பெண் நைட்டியில் இறங்கிவந்தாள். பார்த்ததும் எனக்குள் மத்தாப்பு நட்சத்திரங்கள். "நிங்ஙளானோ இவிடெ வந்நிரிக்குந்நது?" என்றாள் புன்னகைத்தபடி. நான் என்னைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டேன்.

அடுத்த நொடி தகவல் பரவிவிட்டது. என்னைக் குசலம் விசாரிக்க நண்பர்களெல்லாம் அடிக்கடி வீட்டுக்கு வர ஆரம்பித்தார்கள். உனக்கு எங்கயோ மச்சம்டா என்றான் மீச்சா. ரமேஷ், குண்ஸ் எல்லாம் என் மூலம் அந்தப் பெண் பற்றி இன்னபிற தகவல்களைப் பெற்று அறிவு அபிவிருத்தி அடைந்தார்கள். அவள் பெயர் விஜி என்று தெரிந்தது. அவளுக்கு கல்யாணமாகி புருஷனோடு தனியே மாடியில் வசிக்கிறாள். தினம் ஹீரோ ஹோண்டாவில் வேலைக்குப் போகிற அவள் புருஷன் அவளைவிட கொஞ்சம் சுமாராகத்தான் இருந்தான். ரெண்டு பேருக்கும் ஊர் கேரளாவாம். ரெண்டுபேரும் வீட்டு சம்மதத்துடன் லவ் மேரேஜ் பண்ணிக்கொண்டவர்களாம்.

விஜி என் அம்மாவை "சேச்சி" என்றழைத்து என் வீட்டுக்குள்ளேயே அடிக்கடி வளையவர ஆரம்பித்தாள். எங்கள் குடும்பத்துடன் நன்றாக ஒட்டிக்கொண்டும் விட்டாள். அவள் குடும்ப ஆல்பம் எல்லாம் எடுத்துவந்து காட்டினாள். சுபாவத்திலேயும், பழகுவதிலும் ரொம்ப நல்ல பெண். என்னிடம் சகஜமாய் பேச ஆரம்பித்தாள். நண்பர்கள் காதில் புகைவிட்டார்கள். "நிங்ஙளுடெ ப்ரெண்ட் எந்தினா என்னெ வெறுதெ மொறச்சு நோக்குந்நது?" என்றாள் குண்சைக் காட்டி. அவன் நார்மலான பார்வையே அப்படித்தான் என்றேன்.

அப்புறம் பிரசவத்துக்காக ஒரு ஆறுமாசம் பிறந்தவீடு போய்விட்டாள். புருஷனும் ஹீரோ ஹோண்டாவும் மட்டும் இங்கேயே இருந்தார்கள். விஜி திரும்பி வரும்போது அவளை மாதிரியே அழகான குழந்தையுடன் வந்தாள். நல்ல கொழுக் மொழுக்கென்று இருந்தது. அப்புறம் அவர்கள் குடும்பத்தில் கூடுதல் சந்தோஷம் கலகலக்க ஆரம்பித்தது.

அப்பாவுக்கு மறுபடி மாற்றலாகி நாங்கள் கோவைக்கு போகவேண்டியதாயிற்று. கிளம்புகிற நேரம் விஜி, கணவன் மற்றும் குழந்தையுடன் ஊருக்குப் போயிருந்தாள். ஆகவே அவர்களிடம் சொல்லிக்கொண்டு போகமுடியவில்லை.

கோவை வந்து ஒரு மாதிரி செட்டில் ஆகி பழைய ஞாபகத்தில் ஒருநாள் பழைய வீட்டுக்குப் போனபோது மீச்சா தகவல் சொன்னான். விஜி அவளது ஊரில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டாளாம். என்ன நடந்ததென்று தெரியவில்லையென்றான் சோகமாய். நான் அதிர்ந்தேன். அந்தச் செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. ஏன் இப்படியொரு திடீர் முடிவு? அதுவும் அத்தனை பிஞ்சுக் கைக்குழந்தையை தனியாய் தவிக்கவிட்டு...என்ன காரணம் என்று மனதைக் குடைந்த கேள்விகளுக்கு இன்றுவரை விடை கிடைக்கவில்லை.

இதற்குமுன் நாங்கள் குடியிருந்த ஊரிலும் எதிர் வீட்டில் இதே மாதிரி ஒரு பெண் இருந்தாள். அவளுக்கு மாமியார் கொடுமை, புருஷன்காரனிடம் அடி என்று தினசரி பிரச்சனைகள் இருந்தன. அப்போது நான் இன்னும் ரொம்பச் சின்னப் பையன். என்றாலும் எல்லாக் காட்சிகளும் இன்னும் எனக்கு தெள்ளத் தெளிவாய் நினைவிலிருக்கின்றன. என்னக்கா பண்ணிட்டு இருக்கீங்க என்று வாசற்படியில் நிற்கிற அம்மாவிடமும் பாட்டியிடமும் கேஷூவலாக கேட்டபடி வீட்டுக்குள் வருவாள். உள்ளே வந்த மறுநிமிடம் கதவுக்குப் பின் சாய்ந்துகொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதபடி தன் துக்கத்தையெல்லாம் அம்மாவிடம் கொட்டுவாள். அம்மாவும் பாட்டியும் அவளுக்கு ஆறுதல் சொல்வார்கள்.

அந்த ஊரிலிருந்தும் அப்பாவுக்கு மாற்றல் ஆகி வேறு ஊர் போனோம். ஆறு மாசம் கழித்து யாரோ சொன்னார்கள். அந்தப் பெண் அவள் வீட்டுக்குள்ளேயே அதிகாலை நாலுமணிக்கு தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டாள் என்று.

எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. அவள் பெயரும்கூட விஜிதான்.

கோடிட்ட இடங்கள்

இந்த வாரம் முதல் தமிழோவியத்தில் 'கோடிட்ட இடங்கள்' என்ற என் தொடர் நாவல் வெளியாகிறது. அதைப் படிக்க இங்கே க்ளிக்கவும்.

ஆட்டோகிராஃப்

ஆட்டோ 1 : ஓரிரு வருடங்களுக்குமுன் நன்றாய் வெயில் கொளுத்துகிற ஒரு மதிய நேரம். நான் மற்றும் என் இரண்டு நண்பர்கள். கோவை சாயிபாபா காலனியில் உள்ள ஒரு ஹோட்டலில் தயிர் சாதமும், எலுமிச்சைச் சாதமும் இருபத்தைந்து பொட்டலங்கள் ஆர்டர் பண்ணிவிட்டுக் காத்திருக்கிறோம். அடுத்தநாள் மதுரையில் நடக்கவிருக்கும் ஒரு நண்பனின் கல்யாணத்துக்கு மதியம் ஒண்ணரை மணி ட்ரெயின் பிடித்து 25 பேர் போகிறோம். எல்லோரும் மதிய உணவை ட்ரெயினிலேயே முடித்துக்கொள்ளலாம் என்று சாப்பாடுப் பொட்டலங்களை ஏற்பாடு செய்ய வேண்டிய பொறுப்பை எங்களிடம் விட்டிருந்தார்கள். பொட்டலங்கள் வந்தன. அவற்றை சேகரித்துக்கொண்டு மணி பார்த்தபோது ஒன்று ஆகியிருந்தது. மீதி 22 பேரும் இந்நேரம் ட்ரெயினுக்கு வந்திருப்பார்கள். நாங்கள் இன்னும் அரை மணிக்குள் ரயில் நிலையம் போக வேண்டும். சரி ஒரு ஆட்டோ பிடித்துக்கொள்ளலாம் என்று முடிவு பண்ணினோம். கைதட்டினவுடன் அரை வட்டமடித்து ஆட்டோ ஒன்று வந்து நின்றது. ஏறிக்கொண்டு எங்கள் அவசரத்தைச் சொன்னோம். நிதானமாய்ப் போனால் போதும் என்றும் உபரியாய் சொல்லி வைத்தோம். ஆட்டோ கிளம்பியது.

ஒரு அரை ஃபர்லாங் கூட போயிருக்கமாட்டோம். ஒரு வளைவில் ஒரு யமஹா பைக்கில் இரண்டு பேர் ஸ்டைலாய் திரும்ப, சட்டென்று அந்தக் குறுக்கீட்டில் சுதாரிக்க முடியாமல் யமஹாவின் மீது டமால் என்று நேருக்கு நேர் மோதல். அப்புறம் நடந்ததை எப்படி வர்ணிப்பதென்று தெரியவில்லை. ஒடித்துத் திருப்பியதில் ஆட்டோ நிலை தடுமாறி சைடில் கவிழ்ந்து, இரண்டு முறை உருண்டு செத்த பல்லி மாதிரி சொத்தென்று தலைகீழாய் வீழ்ந்தது தரையில். நேராய் பார்த்தபோது வானம் தெரிந்தது. ஓ! நான் ஆட்டோவுக்கு அடியில் கீழே கிடக்கிறேன். நெஞ்சுப்பகுதி விலா எலும்பில் வலி உயிர் போகிறது. அலங்கோலமாய்க் கிடந்த எங்கள் மூவரையும் யாரோ வந்து தூக்கிவிட்டார்கள். எனக்குக் கைகால்கள் நடுங்குகின்றன. மண்டையிலிருந்து ரத்தம் வழிய மூர்ச்சையான ஆட்டோ ட்ரைவரைச் சுமந்து கொண்டு இன்னொரு ஆட்டோ ஆஸ்பத்திரிக்கு விரைகிறது. ரோடெங்கும் தயிர்சாத, எலுமிச்சைச் சாத பொட்டலங்கள் சிதறிக்கிடக்கின்றன.

ஆட்டோ 2 : நான். என் நண்பர். அவர் மனைவி, குழந்தை. சென்னை சென்ட்ரலிலிருந்து எங்களைச் சுமந்துகொண்டு தி. நகருக்கு விரைகிறது அந்த ஆட்டோ. ட்ரைவர் அப்போதுதான் ஒரு ஜேம்ஸ்பாண்ட் படம் பார்த்துவிட்டு வருகிறார் போல. கச கசவென்று வாகனங்கள் விரைகிற மெளண்ட் ரோட்டில் முறுக்கிப் பிடித்து அமுக்குகிறார் ஆக்ஸிலேட்டரை. சிக்னல்களில் ஆரஞ்சு விழுந்தாலும் மதிக்காமல் பறக்கிறது ஆட்டோ. சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுவது எப்படி என்பதை அன்றுதான் தெரிந்து கொண்டேன். நண்பர் ட்ரைவரைக் கூப்பிட்டு இரண்டு மூன்று முறை சொல்லிவிட்டார். எங்களுக்கு அவசரமில்லை. மெதுவாகவே போகலாம். அதற்கப்புறம்தான் ஜேம்ஸ்பாண்டுக்கு உற்சாகம் பீறிட்டுவிட்டது. ஆக்ஸிலேட்டரே பிய்ந்துபோகுமளவுக்கு முறுக்க ஆரம்பித்துவிட்டார். முதன் முதலாய் உயிர் பயத்தை மிகவும் உணர்ந்தது அன்றுதான் எனலாம். ஒரு ரோலர் கோஸ்டர் சவாரிக்கு ஈடான த்ரில் அடி வயிற்றில் பந்தாய் உருள்கிறது. சரி! இந்தாள் பாச்சா உஸ்மான் ரோடு வந்தால் பலிக்காது. அங்கே நெரிக்கிற ட்ராஃபிக்குக்கு வேகத்தைக் குறைத்தே ஆகவேண்டும். ஆனால் நாம் வாழ்க்கையில் தப்புக்கணக்குப் போடுகிறோம்.

உஸ்மான் ரோடு வந்ததும் ட்ரைவர் நாங்கள் மயிர்க்கூச்செரியும் வகையில் ஒரு காரியம் செய்தார். அவர் இருக்கையிலிருந்து டக் என்று எழுந்து நின்று ஓட்ட ஆரம்பித்தார். வளைந்து வளைந்து லாவகமாய் வழியில் நிறைய பேருக்கு உயிர்ப்பிச்சையிட்டபடி ஆட்டோ பாய்கிறது. ஒரு வழியாய் தப்பித்து வீடு வந்து சேர்ந்தோம். நண்பர் 'நீ ஓட்டின ஓட்டுக்கு இவ்வளவுதான் கொடுக்க முடியும்' என்று சொல்லிவிட்டு பேசினதில் பாதித் தொகையை மட்டும் கோபத்துடன் அவனிடம் வீசி விட்டு திரும்பி வீட்டுக்குள் போய்விட்டார். கொஞ்ச நேரம் புலம்பிக்கொண்டிருந்துவிட்டு ஆட்டோ அரைவட்டம் போட்டுத்திரும்பிப் போனது.

ஆட்டோ 3 : மறுபடியும் சென்ட்ரலிலிருந்து ஒரு பயணம். இந்தத் தடவை என் அக்கா குடும்பம். இரண்டு குழந்தைகள். இந்த ஆட்டோ ட்ரைவர் இன்னொரு ஜேம்ஸ்பாண்டு. சீறிப் பாய்ந்து கிளம்பிய அந்த ஆட்டோவின் ட்ரைவர் எங்களை கதிகலங்க வைக்கப் பண்ணின முதல் காரியம் சர் என்று ஒரு ஒருவழிப் பாதைக்குள் புகுந்தது. எதிர் வரும் வாகனங்கள் நிலைதடுமாறி ஒதுங்க.. ஆட்டோ ட்ரைவருக்கு எந்தக் கவலையுமில்லை. நான் அவரைக் கூப்பிட்டு சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டேன். ஆனால் வேகத்தை துளியேனும் குறைப்பது அவமானமாய் போய்விடும் என்று நினைத்தார் போலும். மேலும் திடீரென்று ஹாண்டில் பாரிலிருந்து இரண்டு கையையும் விட்டு சர்ட் காலரை ஸ்டைலாய் இழுத்துவிட்டுக்கொண்டார். பிறகு ஒரு பான்பராக் பாக்கெட்டை லாவகமாய் பிரித்து வாயில் அடக்கினார். ஆட்டோ ஏதோ ஒரு சக்திக்குக் கட்டுப்பட்டார்போல அதுபாட்டுக்கு தேமே என்று போய்க்கொண்டிருக்கிறது. நான் மற்றும் என் அக்கா குடும்பம் கிடைத்த கம்பிகளையெல்லாம் இறுகப் பற்றிக்கொண்டு பேச்சு மூச்சற்றுப்போய் உட்கார்ந்திருந்தோம். போக்குவரத்து விதிகள் என்று என்னென்ன இருக்கிறதோ அது அத்தனையையும் ஒன்று விடாமல் மீறின ஒருத்தனை அன்றுதான் பார்த்தேன். ராயப்பேட்டை பாலம் தாண்டின அந்தப் பெட்ரோல் பங்க் அருகில் இன்னொரு ஆட்டோ பெட்ரோல் போட சரேலென்று திரும்ப ட்ரைவர் நிதானமிழந்து ஆட்டோவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்து.. டமார் என்று நேருக்கு நேர் மோதி.. அதன் தாக்கத்தில் ஆட்டோ இடப்பக்கம் சாய்ந்து கிட்டத்தட்ட கவிழப்போய் பின் என்ன நினைத்ததோ இரக்கம் கொண்டு பழைய நிலைக்கே ஆடி நின்றது. அன்று குழந்தைகள் இருவரும் கத்திய கத்தல் இன்னும் காதுக்குள்ளேயே எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

எனக்கு வாய்த்த இன்னும் சில மோசமான ஆட்டோ அனுபவங்களை இங்கே சொல்லவில்லை. எனக்கு மட்டும்தான் இப்படி வாய்த்ததா என்றும்கூட நினைத்ததுண்டு. குறிப்பாய் சென்ட்ரலிலிருந்து வேறு வேறு திசைகளுக்குப் பயணிக்கிற ஆட்டோக்கள் மட்டும்தான் இப்படியிருக்கிறதோ என்று ஒரு சந்தேகமும் உண்டு. திரும்பி வந்து அடுத்த ட்ரெயினிலிருந்து இறங்குகிற கூட்டத்திலிருந்து சவாரி பிடிப்பதற்கான அவசரம்தான் அவர்களை இவ்வளவு வேகமாக ஓட்டத் தூண்டுகிற காரணம் என்று நினைக்கிறேன். என்றாலும் குடும்பமாய் குழந்தைகளையும், லக்கேஜையும் சுமந்துகொண்டு நம்பிக்கையாய் பயணம்போகிறவர்களின் உணர்வுகளை ஏன் இவர்கள் கண்டுகொள்வதே இல்லை என்று புரியவில்லை. ஒரு நிதானத்துடன், பயணிகளின் மற்றும் சாலையில் நடக்கிறவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஓட்டும் ஆட்டோ ட்ரைவர்கள் ரொம்பக் குறைவே என்று தோன்றுகிறது. ஒரு அவசரத்துக்கும் செளகரியத்துக்கும் நாம் தேர்ந்தெடுக்கும் இந்த ஆட்டோப் பயணம் காசையும் கொடுத்துவிட்டு கலவரத்தை அடிமடியில் கட்டிக்கொண்டு போகும் விஷயமாகவே படுகிறது. மற்ற ஊர்களில் எப்படி என்று தெரியவில்லை. நிஜமாகவே அட்வெஞ்சரில் ஆர்வமுள்ளவர்கள் இங்கே ஒரு சில ஆட்டோக்களை முயன்று பார்க்கலாம்.

"சார் ஆட்டோ வேணுமா?" என்று குரல் கேட்டால் இப்போதெல்லாம் வேகமாய் திரும்பி நடந்துவிடுகிறேன்.

ஹேப்பி பர்த்டே!!

அப்பா எங்கள் பிறந்த தினங்களில்
பெயரிட்ட பெரிய வட்டக் கேக்குகளை
எச்சில் காற்றால் கேண்டில் அணைத்து
வெட்டச் சொல்லி பாட்டுப்பாடினார்...
*
அங்கேயிருக்க நேரும் பத்துப்பேரிலும்
அப்பாவால் மட்டும்தான்
வெட்கத்தைவிட்டுப் பாடமுடியும்,
இது உனக்கொரு சந்தோஷமான பிறந்த தினம்...
இது உனக்கொரு சந்தோஷமான பிறந்த தினம்...
*
அப்பாவின் பிறந்த நாட்களில் பாட ஆளிருக்காது.
நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் பரஸ்பர நம்பிக்கையற்றுப்
பார்த்துக்கொண்டபின்
ஹாப்பி - என்று துவங்கிய நானும்
என் ஒற்றைக் குரலின் பைசாசத்திற்கு பயந்து
பாட்டை நிறுத்திப்
பேந்தப்பேந்த விழித்துக்கொண்டிருப்பேன்.
*
அப்புறம் காலப்போக்கில் எங்களுக்குத் தைரியம் வந்தது.
ஆனால் அப்போது
அப்பா எங்கள் பிறந்த தினங்களை மறந்துவிட்டிருந்தார்
நாங்கள் அவர் பிறந்த தினங்களை மறந்து போயிருந்தோம்.

"அப்பாவின் பிறந்த தினங்கள்" - கவிதை.
- சுதேசமித்திரனின் 'அப்பா' கவிதைத் தொகுப்பிலிருந்து.

*
பாலக்காடு. ஒரு குக்கிராமம். ஏராளமான மரங்களும், கோழிகள் அடைகிற கூண்டும், சில மாடுகள் அடங்கிய தொழுவத்தையும் உள்ளடக்கிய தோட்டத்தின் நடுவே ஒரு மச்சுவீடு. அங்கே முப்பத்தி மூன்று வருடங்களுக்குமுன் ஒரு புதன்கிழமை காலையில் ஒரு குழந்தை பிறந்தபோது (நான்தான்) "என்ட கொச்சு மோனே" என்று ஈன்றபொழுதில் பெரிதுவர்த்தவர்கள், இவன் பிற்காலத்தில் தமிழில் சிறுகதையெல்லாம் எழுதி, அப்புறம் தமிழ் வலைப்பதிவு எல்லாம் ஆரம்பிப்பான் என்று யோசித்திருக்கக்கூட மாட்டார்கள். வருடங்களின் சுழற்சியில் சிந்தனைகளும், சிந்திக்கிற மொழியும் மாறிவிட்டன. எந்த மொழியில் வளர்ந்தாயோ அது தாய் மொழி. எந்த இடம் உனக்கு சோறு போட்டதோ அது சொந்த பூமி என்றாகிவிட்டது. சரி அதை விடுங்கள்.

இதை இப்போது நினைவுகூர்வதற்குக் காரணம் இந்த வருடமும் என் பிறந்தநாள் வந்துவிட்டதுதான். அப்போதெல்லாம் ஒவ்வொரு வருடமும் பிறந்தநாள் வரும்போது நிறைய எதிர்பார்ப்புகளை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு காத்திருப்பேன். நிறைய பேர் வாழ்த்துக்கள் சொல்வார்கள். நிறைய பரிசுப்பொருள்கள் வரும். புதுசாய் உடை அணிந்து கொள்ளலாம். முக்கியமாய் ஸ்பெஷலான ஆட்கள் தரும் ஸ்பெஷலான பரிசுகளுக்காய் மனசு தவம் கிடக்கும். ஸ்பெஷல் என்றால் அப்படி ஒரு ஸ்பெஷல். நிறைய பிறந்தநாட்களில் சந்தோஷத்தில் மனசும் விழிகளும் கலங்கியிருக்கின்றன. பிறகு நண்பர்களுடன் பர்த்டே ட்ரீட்டுக்குப் போகிற இடங்களும், கழிகிற பொழுதுகளும் அடுத்த பிறந்தநாள்வரை ஞாபகம் இருக்கும். அதே போலத்தான் நான் விரும்பி அடுத்தவர் பிறந்தநாளைக் கொண்டாடுவதும்.

ஒவ்வொரு வருடமும் என் பிறந்த தேதி நெருங்க நெருங்க எனக்குப் பிடித்த, என்னைப் பிடித்த நண்பர்கள் உறவினர்கள் முதுகுப்புறம் எதையோ மறைத்துக்கொண்டு (பரிசுப்பொருட்கள்தான் வேறென்ன?) வட்டமாய் என்னை நெருங்குகிற மாதிரி கற்பனை வரும். இனிமை கலந்த நெர்வஸ் ஒன்று முதுகுத் தண்டில் ஓடும். என் பிறந்த நாளை மறந்துவிட்ட ஒரு நண்பனை ஏன்டா ஒரு விஷ்கூட பண்ணல என்று கன்னா பின்னாவென்று திட்டியிருக்கிறேன்.

சிலோன் ரேடியோவில் "பிறந்த நாள்.... இன்று பிற....ந்...த நாள்!" என்று பாட்டு போட்டு யாருக்காவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்வதைக் கேட்கும்போது ஆஹா! என்றிருக்கும். தாத்தா, பாட்டி, பெரியப்பா, சித்தப்பா, அம்மும்மா, அக்கக்கா என்று வாழ்த்தியவர்கள் லிஸ்ட்டை நீளமாய்ப் படிப்பதைக் கேட்கும்போது ஒருத்தன் பிறந்ததற்கு இத்தனை பேர் சந்தோஷப்படுகிறார்களே என்று வியப்பாக இருக்கும்.

வாழ்வின் நிறைய வருடங்கள் அதற்குள்ளாகக் கடந்துவிட்டன என்று ஏதோ ஒரு நாள் திடீரென்று ஏனோ உணர்ந்துவிட்டேன் போலும். பிறகு பி.நாள் கொண்டாடுவதன் சுவாரஸ்யம் லேசாய் குறைந்துபோய்விட்டது. நான் இன்னும் என்னைச் சின்னப்பையனாதான் ஃபீல் பண்றேன் என்று சொல்கிற பொய், கண்ணாடியைப் பார்க்கும்போது உடைந்து சிதறிவிடுகிறது. (இதைப்படிக்கிற அன்பர்கள் உடனே என்னை ஒரு குடுகுடு கிழவனாக கற்பனை செய்து ஏமாந்து போகாதீர்கள் என்று எச்சரிக்கிறேன்).

எனக்கொரு மகன் பிறந்தபிறகு சென்டர் ஆஃப் அட்ராக்ஷன் மாறியதில் என் பிறந்தநாளின் முக்கியத்துவம் பங்கு மார்க்கெட் மாதிரி சரிந்தது. நல்லது! அதையேதான் நானும் எதிர்பார்த்தேன். பெரிய வட்ட கேக். நடுவே நம்பர் கேண்டில் வைத்து குவிந்த வாயால் குழந்தை சுடரை ஊதிக் கைதட்டுகிற குதூகல தருணங்களில் முடிவு செய்துகொண்டேன். இனி நான் என் பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை. இனியென்ன? இதோ இப்போது வரப்போகிற பி.நாள் தானாகக் கடந்துபோகட்டும். அப்படியும் நினைவு வைத்துக்கொண்டு வாழ்த்துபவர்களுக்கு சின்னதாய் ஒரு தேங்க்யூ சொல்லி முடித்துவிடவேண்டும். ட்ரீட் என்று நிர்பந்தித்தால் நான் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை என்று அறிவத்துவிட்டு ஒரு காஃபி பைட்டோ, காஃபியோ வாங்கிக்கொடுத்துவிட்டு நைஸாய் கழன்று கொள்ள வேண்டும். எல்லா நாளையும்போல இது இன்னொருநாள் அவ்வளவே!

இதோ என் இருப்பை ஞாபகப்படுத்தும் இந்த வருடத்திற்கான பிறந்ததினம் வந்துவிட்டது. வயது ஏற ஏற டென்ஷனும், டெக்னாலஜியும் அதிகமாகிவிட்டது பாருங்கள். காலை 5.30க்கு 'மெனி மோர் ஹேப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் தி டே!' என்று SMS வருகிறது. தொடர்ந்து பல இப்படியே. பிறகு தட்டப்பட்ட கதவைத்திறந்தால் நண்பர்கள். கையில் கிஃப்ட் பேக். மலங்க முழித்துநின்ற என்னைப்பார்த்து "வாழ்த்துக்கள்! என்றார்கள். 'இந்த சிகப்பு டி-சர்ட் உனக்கு எடுப்பாக இருக்குமென்று வாங்கினேன்.' நண்பன் சொல்கிறான். பிரித்த கிஃப்ட் கவர்களிலிருந்து புத்தகங்களை உருவி எடுக்கிறேன். "ப்ஷீர் வரலாறு". அப்புறம் "முகவீதி" - ராஜசுந்தரராஜன் கவிதைகள். நான் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்த புத்தகங்கள். நன்றி. நன்றி. நன்றி!

டெலிபோன் அடிக்கிறது. எடுத்தால் மறுமுனையில் கோயமுத்தூரிலிருந்து ராகம் போட்டு பையனின் பாட்டு.. "ஹாப்பி பர்த்டே டூ யூ". லேசாய் நெகிழ்கிறது. "கே.பி.என் பார்சல் சர்வீஸ்ல உனக்கு ஒரு பார்சல் கிப்ஃட் அனுப்பியிருக்கேன்.. மறக்காமப் போய் வாங்கிக்கோ" என்கிறாள் மனைவி. பிறகு ஆஃபீஸ் கிளம்புகிற வரை நிறைய போன்கள். நிறைய வாழ்த்துக்கள். கடவுளே!

என்னை மீறி இவையெல்லாம் நிகழ்ந்துவிட்டது. சரி! அலுவலகத்திலாவது யாருக்கும் இதைப் பற்றி நான் ப்ரஸ்தாபிக்காமல் இருத்தல் நலம். அங்கே யாருக்கும் இது தெரியாது. அலுவலகத்திற்கு நண்பன் கொடுத்த டி-சர்ட்டைப் போட்டுக்கொண்டு நல்ல பிள்ளையாய் போய் தேமே என்று வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டேன். அலுவலக முகவரிக்கு குரியரில் வந்த க்ரீட்டிங் கார்டுகளை மற்றவர்கள் பார்க்காமல் பிரித்துப் பார்த்து பின் ஒளித்தும் வைத்துவிட்டேன். மின் அஞ்சலில் வந்த ஒரு சில வாழ்த்துக்களை ப்ரவுசர் மினிமைஸ் பண்ணிவைத்துப் படித்தேன். பிறகு அலுவலக போனிலும் செல் போனிலும் வந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். எல்லாவற்றிற்கும் மற்றவர்கள் கேட்காமல் குரலைத் தணித்துப் பேசிச் சமாளித்தேன். போதாக்குறைக்கு "Airtel wishes a very happy birthday" என்று செல்போன் ப்ரொவைடரின் ஆட்டோமேட்டட் வாய்ஸ் வேறு. அப்படியும் ஒருத்தன் ஆஃபிஸில் கேட்டுவிட்டான். "இன்னைக்கு என்ன ரொம்ப உற்சாகமா இருக்கீங்க?". நான் சிரித்து மழுப்பினேன்.

ஹா! எப்படியோ நாலு மணி வரையிலும் இப்படியே ஓட்டியாயிற்று!

பிறகு 123greetings.com-ல் இருந்து ஒரு வாழ்த்து வந்தது பாருங்கள்! யாருக்கும் தெரியாமல் லேசாய் அதைத் திறந்தபோது.. அடப்பாவி அதில்.. மிடி ஃபைலாக அதில் ம்யூசிக் வேறு இணைத்து அனுப்பியிருக்கிறான். டி...டி... டீ....டி. டீ... டீ! என்று ஹேப்பி பர்த்டே ட்யூன். என் ஸ்பீக்கர் வால்யூமை நான் ஏன் இத்தனை வைத்துத் தொலைத்தேன்? அருகில் இருந்தவன் சடாரென்று திரும்பினான். என்னது? என்றான். நான் வால்யூமை சடாலென்று குறைப்பதற்குள் புரிந்து கொண்டுவிட்டான். "ஷிட்.. மறந்தே போயிட்டேன்.." என்று அவன் அருகில் வந்து கைகுலுக்க... நிமிடத்தில் என்னைச்சுற்றிக் கூட்டம். 'ஆனாலும் நீ இத்தனை கமுக்கமாய் இருக்கக்கூடாது' என்றார்கள். ட்ரீட்க்கு எங்கே போகலாம் என்று பேரம் நடந்தது. முடிவாய் திருமயிலை அடையாறு ஆனந்த பவனில் என் பிறந்த நாள் ட்ரீட் இனிதே முடிந்தது.

ஆக இந்த வருடம் இந்த நாள் அபாரமாய்க் கழிந்துவிட்டது. இந்த நாளின் மகிழ்ச்சி வயதொன்று ஏறிவிட்ட சோகத்தை தற்காலிகமாய் மழுங்கடித்துவிட்டதுதான்

'அதெல்லாம் சரிதான். இந்த தினத்தை நிறைவானதாக ஆக்கும் பொருட்டு அடுத்தவேளை சோற்றுக்கு வழியில்லாத, உன்னிலும் மிக ஏழ்மையான யாருக்கேனும்.. பத்து ரூபாய்க்கோ, ஒரு பிடி அரிசிக்கோ ஏதாவது வழிவகை செய்து உதவினாயா? அப்படியொன்றை நினைத்தாவது பார்த்தாயா?'

எதிர்பாராத (பார்த்த?) வகையில் இத்தனை சிறப்பாய் கழிந்த நாளின் இறுதியில் எழுந்த இந்தக் கேள்வி சுருக்கென்று ஆழமாய்த் தைக்கிறது மனதை.

ஹேப்பி பர்த்டே டு மி!

முதல் காதல். முதல் முத்தம். முதல் சமையல்.

இந்த மு.கா, மு.மு இரண்டும் 'ப்யூர்லி பர்சனல்' ஆக இருப்பதால் அதை இங்கே தணிக்கை செய்து விட்டு தலைப்பின் மூன்றாவது விஷயத்துக்கு நேரடியாக வருகிறேன். நான் முதன் முதலில் சமையல் செய்த அனுபவம் கொஞ்சம் விட்டிருந்தால் நாளிதழில் எட்டுப்பக்க செய்தியாக மாறுகிற அபாயம் வரை போனதை யாராவது சொன்னார்களா?

தங்கமணி (மனைவியை இப்படி குறிப்பிடுவது ஜாலியாகத்தான் இருக்கிறது. வாழ்க மணிரத்னம்!) ஊருக்குப் போவதற்கு (சுமார் ஒரு மாதம் வெக்கேஷனாம்) ஒரு வாரம் முன்னரே கொஞ்சம் கிலியால் லேசாய் வயிறு புரள ஆரம்பித்துவிட்டது. சாப்பாட்டுக்கு என்ன செய்யப் போகிறேன்? மூன்று வேளை ஹோட்டலில் சாப்பிடுவதென்பது ஒத்துவராத ஒரு காரியம். ஆக வேறு வழியில்லாமல் நானே சமைத்து நானே சாப்பிட வேண்டிய நிர்பந்தத்திற்கு காலம் என்னைத் தள்ளிவிடப்போகிறதா?

"முதல்ல குக்கரை எடுத்து.." என்ற தங்கமணியை கையமர்த்தித் தடுத்தேன். "எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் அம்மணி. இதெல்லாம் ஒரு பெரிய விஷயமேயில்லை! நீ எதுவும் சொல்ல வேண்டாம். நான் சமையல் கற்றுக்கொள்வதற்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. நானாக கற்றுக்கொண்டு சமையலில் ஒரு கலக்கு கலக்குகிறேன் பார்!. நீ கவலைப்படாமல் ஊருக்குக் கிளம்பு".

தங்கமணி அப்போது பார்த்த பார்வையின் அர்த்தம் அடுத்த நாள் விடியலில் தெரிந்துவிட்டது. முதன் முதலாக வெறிச்சோடிக்கிடந்த சமையலறைக்குள் லேசான ஜேம்ஸ்பாண்ட்தனத்துடன் எட்டிப் பார்த்தேன். ஓ! இதுதான் நான் இனிமேல் இயங்க வேண்டிய களம். இந்தக் குக்கர் எங்கேயிருக்கிறது?. அதோ!. ம்! தங்கமணி சொன்னது என்ன? "முதல்ல குக்கரை எடுத்து...

எடுத்து???

'எங்கே நீ சொல்லவிட்டாய் மானிடா...!! எக்கேடோ கெட்டுப்போ! நீயாச்சு! உன் சமையலாச்சு!' என்று விட்டத்தில் அசரீரி கேட்டது.

என்றோ ஒரு நாள் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு முயற்சியாய் சேர்ந்து சமைத்த அனுபவங்களை ஞாபக அடுக்கில் விரட்டி விரட்டி தேடி மனதில் ஒரு சில குறிப்புகள் தயார் செய்துகொண்டேன். இதோ ஆரம்பித்தாயிற்று. ஒரு வழியாய் ஆயத்தங்கள் முடிந்து குக்கர் நீலமாய் எரிகிற அடுப்பின்மேல் உட்கார்ந்திருக்கிறது. இன்னொரு பத்து நிமிடத்தில் சாப்பாடு ரெடி. அதற்குள் ரசம் வைத்து முடித்துவிடலாம். குழம்பு வைப்பதெல்லாம் ஒரு வேலையா என்ன? எல்லாமே தாளித்துத் தாளித்து கொட்டுவதுதானே?. சரி! ரசம். அதற்குத் தேவையான பொருட்கள், உபகரணங்கள் என்னென்ன? முதலில் புளியை ஊறவைத்து பிறகு தக்காளிக் கரைசலில்... என்று கரெக்டாக ஆரம்பித்துவிட்டேன் பாருங்கள்.

நான் தடுத்ததையும் மீறி தங்கமணி "குக்கர் நாலு விசில் அடிச்சா அடுப்பை ஆஃப் பண்ணிருங்க" என்று கோவை எக்ஸ்பிரஸ் கிளம்பும் போது ஜன்னல் வழியே சொன்னது நினைவுக்கு வருகிறது. நான் விசிலுக்காகக் காத்திருந்தேன். இன்னும் வரவில்லை. மாறாக என்ன இது லேசாய் ரப்பர் கருகுகிற வாசம்?. நான் மெதுவாய் குக்கரை அணுகினேன். என்னவோ தப்பு. அதன் மூடி மற்றும் இன்னபிற விஷயங்களைச் சோதித்தேன். நேரமாக ஆக குக்கரின் மகா மெளனம் என்னை சோதிக்க ஆரம்பித்தது. கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்துக்கும் மேலாகிவிட்டது. எங்கே விசில்? விசிலடிப்பதெல்லாம் அதற்குப் பிடிக்காதோ என்னவோ..!!

திறந்து பார்த்துவிடலாமா என்று யோசிக்கும்போது.. குக்கரிலிருந்து வரக்கூடாத இடத்திலிருந்தெல்லாம் நீராவி கசிய ஆரம்பித்ததை பார்த்தேன். ஏய்!! என்னிடம் மட்டும் இது என்ன விளையாட்டு? ரப்பர் வாசம் வீடெங்கும் பரவ ஆரம்பித்தது. எனக்கு உடனே தீபாவளியன்று வெடிக்கும் பச்சை நிற அணுகுண்டும், எரிமலை வெடிப்பதற்குமுன் லேசாய் புகைவதும் நினைவுக்குவர... சட்டென்று தீர்மானித்து குக்கர் மூடியை சடால் என்று திறந்தேன். அத்தனை நேரம் அடக்கி வைத்த மகாகோபம் புஸ் என்று நீராவியாய் சீறி முகத்தில் அடிக்க நான் பத்தடி எகிறி நின்றேன். இன்னும் ஒரு ஐந்து நிமிடம் பொறுத்திருந்தால் அது நிச்சயம் வெடித்துச் சிதறியிருக்கக்கூடிய அபாயம் ரொம்ப லேட்டாய் உறைத்தது. இப்போது இன்னும் அதிகமாய் ரப்பர் வாசம்.

சுதாரித்து மெதுவாய் குக்கர் மூடியை ஆராய்ந்தேன். வெப்பம் தாங்காமல் வால்வ் ஓட்டையாகியிருக்கிறது பார்! இத்தனை நேரமாகியும் சாப்பாடு வெந்திருக்கவில்லை. நான் யோசனையாய் நின்றேன். ப்ரெஷர் குக்கர் வேலை செய்யும் முறைபற்றி தீவிரமாய் யோசிக்க ஆரம்பித்தேன். இன்றைக்கு ஹவ் ஸ்டஃப் ஒர்க்ஸ் டாட் காமில் தேட வேண்டும். எங்கேயோ லாஜிக் இடிக்கிறது. பாஃர்முலா வேலை செய்யவில்லை.

வால்வின் ஈயம் உருகி சாப்பாட்டோடு கலந்திருக்கும் என்பதால் இனி அதை வைத்துக்கொண்டு மேற்கொண்டு எதையும் யோசிப்பது உசிதமல்ல என்று பட்டது. இதோ ரசம் கூட இப்போது கொதிநிலைக்கு வந்துவிட்டது. ரசப்பொடியை ஸ்பூனில் எடுக்கும்போதுதான் இந்தக் குக்கரின் அபாய நிலை உணர்ந்து அருகில் போய்ப்பார்த்தது. பொடியை போட்டேனா இல்லையா? திடீர் சந்தேகம்! அப்புறம் ரசத்தை கொஞ்சமாய் கரண்டியில் எடுத்து ருசி பார்க்க.. உவ்வே!

எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு வசந்தபவனுக்குப்போய் ரெண்டு இட்டிலி, ஒரு கல்தோசையை உள்ளே தள்ளி பசியாற்றிக்கொண்டேன்.

நலமாய் ஊர் போய் சேர்ந்துவிட்டதாக தங்கமணியிடமிருந்து இரவு போன் வந்தது. பிரயாண செளகரியங்கள் பற்றியெல்லாம் பொதுவாய் கேட்டறிந்துவிட்டு அப்புறம் குரலைத் தணித்துக்கொண்டு மெதுவாய் கேட்டேன். "முதல்ல குக்கரை எடுத்து...சொல்லு.! அப்பறம் என்ன பண்ணனும்?"

மறுபடியும் கணேஷ்

இதற்கு முந்தைய வலைப்பதிவில் என் நண்பனுக்குக் கொடுத்தனுப்பிய துண்டுச்சீட்டுக் கடிதம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாய் ஒரு நிகழ்வு என் வாழ்க்கையில் சம்பவித்ததையும் இங்கே சொல்லிவிடலாம் என்று நினைக்கிறேன். அவன் பெயர் கணேஷ். இடம் உடுமலைப்பேட்டை. கவனிக்க! ஊர், பெயர் மாற்றப்படவில்லை. நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம். என் வீட்டுக்கு நாலுவீடு தள்ளி அவன் வீடு இருந்ததாலும், நான் படித்த டியூசன் வாத்தியாரிடமே அவனும் படித்தான் என்பதும் நானும் அவனும் உற்ற நண்பர்களாயிருப்பதற்கு ஒரு சில காரணங்களாயிருந்தன. அப்பொழுதெல்லாம் வீட்டில் எதையாவது சொல்லிவிட்டு, கல்பனா தியேட்டரில் வாராவாரம் மாற்றும் "மிடில் ஷோ" ஆங்கிலப்படங்களை ரெண்டுபேரும் எப்படியாவது பார்த்துவிடுவோம். (அதாவது ஃபர்ஸ்ட் ஷோவிற்கும், செகண்ட் ஷோவிற்கும் நடுவில் ஒரு இடைச்சொருகலாய் ஒரு காட்சி ஓட்டுவார்கள்.) மிக முக்கியமாய் ஜாக்கிசான், ஜேம்ஸ்பாண்ட். இன்னபிற இங்கிலீஷ் ஆக்்ஷன் படங்கள்.

இன்ன தியேட்டர் என்று குறிப்பிட்டு சினிமா போலாமா என்று கேட்டு என் தம்பியிடம் மேற்படி துண்டுச்சீட்டைக் கொடுத்தனுப்புவேன். தம்பிக்காரனும் ஒரு தபால்காரரின் சிரத்தையுடன் அதை கணேஷிடம் ஒப்படைத்துவிட்டு வருவான். கணேஷ் அவன் பெற்றோர்களுடன் அது குறித்து விவாதித்து முடிவெடுத்து அதை அவன் தம்பிக்காரனிடம் எழுதிக்கொடுத்தனுப்பிவிடுவான். இப்படியாக தகவல் பரிமாற்றத்துக்கு தம்பிகளையும், துண்டுப் பேப்பர்களையும் வெகுவாக உபயோகித்து அபிமான குங்ஃபூ படங்களை தவறவிடாமல் பார்த்துக்கொண்டிருந்தோம். எந்த உலகக் கவலைகளின் சுவடையும் மிதிக்காமல், மதிக்காமல் மிக சந்தோஷமான காலகட்டம் அது.

நிற்க!. மேற்படி துண்டுச்சீட்டுகளில் ஒன்றை நான் ஞாபகமாய் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். (இது போல் நிறைய உண்டு). ஓரிரு கரப்பான் பூச்சிகள் உள்நுழைந்திருந்த என் பெட்டிக்குள் அது பல வருடம் பாதுகாப்பாய் இருந்தது. கணேஷ் என்கிற என் நண்பன் அதற்கப்புறம் காலம் எட்டி உதைத்ததில் டெல்லிப்பக்கம் போய் விழுந்திருந்தான். பிறகு ஓரிரு வருடங்கள் அப்படியும் இப்படியுமாக கடிதப்போக்குவரத்தில் நட்பு ஓடிக்கொண்டிருந்தது. பிறகு என்ன ஆயிற்றோ தெரியவில்லை. அதுவும் திடீரென்று நின்றுபோய்.. 700 கோடி பேர்களுள் ஒருவனாய் அவன் காணாமல் போய்விட்டான். பெரிய படிப்பு, பெரிய வேலை என்று அவன் எல்லைகளை விஸ்தரித்துக்கொண்டு போனான். கடிகாரத்தை பார்க்கக்கூட சமயமில்லாமல் உழைத்ததில் ஒரு சில உயரங்களை அடைந்திருந்தான் என்று வேறு சில நண்பர்கள் மூலம் தெரிந்துகொண்டேன். நான்தான் அவன் வட்டத்திலிருந்து தொலைந்துவிட்டேன் போல. பிறகு அவன் எங்கேயிருக்கிறான், என்ன பண்ணிக்கொண்டிருக்கிறான் என்று தெரியாமல் ஒரு சில தேடல் முயற்சிகளுடன் நிறுத்திக்கொண்டேன். வருடங்கள் உருண்டன.

அப்புறம் திடீரென்று ஒருநாள் திடுதிப்பென்று என் வாழ்வில் டெக்னலாஜிக்கல் மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. வலது கையில் மெளசும் இடது கையில் கீபோர்டுமாக கம்ப்யூட்டர் திரையை வெறித்துப்பார்க்கும் வேலையொன்று எனக்கு அமைந்துவிட்டது. அந்தப்பக்கம் இந்தப்பக்கம் அசையவிடாமல் என் இருக்கையைச்சுற்றி இன்டெர்நெட்டும் வலை பின்னத்தொடங்கியிருந்தது அதன் மகா ஆச்சரியப்பக்கங்களை விலக்கி விலக்கி தேடிக்கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது ஒரு வலைத்தளம். அலும்னி டாட் நெட்! வாழ்க்கையில் தொலைந்து போன உங்கள் மனதிற்கினிய க்ளாஸ்மேட்டுகளை இந்த வலைத்தளத்தின் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்று பறைசாற்றுகிற அதை முதன் முதலில் பார்த்தபோது கணேஷ் ஞாபகம்தான் வந்தது. உடனே விரல்கள் பரபரப்பாகி அந்த வலைத்தள கடலுக்குள் டைவ் அடித்துவிட்டேன். ஆனால் ஒன்று நினைவு வந்தது. அவன் என் க்ளாஸ்மேட்டும் அல்ல. அப்புறம் எப்படி கண்டுபிடிப்பது? இருந்தாலும் விடாமுயற்சியுடன் தேடியதில் கணேஷ் என்கிற பெயர் ஒரு விவரப்பக்கத்தில் அகப்பட்டது. ஆயிரம் கணேஷ்களில் அவன்தானா அது? தெரியாது. 50-50. இருந்தாலும் என்ன கெட்டுப்போயிற்று என்று அங்கே கிடைத்த மின்னஞ்சல் முகவரிக்கு கீழ்க்கண்டவாறு எழுதினேன். "நீ நெல்லுக்கடை வீதி முக்கு வீட்டுல குடியிருந்த கணேஷ் எனில் பதில் எழுதவும். இல்லையேல் சிரமத்திற்கு மன்னிக்கவும்."

இண்டர்நெட் என்கிற வேதாளம் எப்படி பாதாளம்வரை பாய்கிறது என்பதை கண்கள் விரிய, மயிர்கால்கள் சிலிர்க்க கண்ணுற்ற சம்பவம் மறுநாள் நிகழ்ந்தேவிட்டது. "நான் அதே கணேஷ்தான். நீ எங்கடா இருக்கே?" என்று பதில் வந்திருந்தது. துண்டுச்சீட்டு, மிடில் ஷோ ஜாக்கிசான் இன்னபிற விஷயங்களை லேசாய் கேட்டு அவன்தான் என்று உறுதிப்படுத்திக்கொண்டேன். உட்கார்ந்த இடத்திலிருந்து அவனைக் கண்டுபிடித்துவிட்ட ஆச்சரியம் ஒரு இரண்டு மூன்று நாட்களுக்கு இருந்தது. என்னிடம் அவன் பிடிபட்டபோது பக்ரைனில் இருந்தான். கல்யாணமாகி ரெண்டு குழந்தைகள் என்றான். உடனே அவன் குடும்பப் புகைப்படங்களை JPG -களாக ஆன்லைனில் பகிர்ந்துகொண்டான். என் புகைப்படங்களையும் கேட்டிருந்தான். அனுப்பிவைத்தேன். கூடவே பல வருடங்களுக்கு முந்தைய அந்தத் துண்டுச்சீட்டை ஸ்கேன் பண்ணி அவனுக்கு அவனுக்கு மின்னஞ்சலில் அனுப்பிவைத்தேன். அதில் லேசாய் கசங்கியிருந்த இங்க் பேனாவால் எழுதப்பட்ட அவன் கையெழுத்து. "ஞாபகமிருக்கிறதா?" என்று ஒற்றை வரியில் கேட்டிருந்தேன். மறுநாள் பதில் வந்தது. "எப்படி மறக்கமுடியும்? கல்பனா தியேட்டர்ல மிடில் ஷோ போன கதைகளை அடிக்கடி ஒய்ஃப் கிட்ட சொல்வேண்டா!"

அது சரி!!

இப்போது ஜப்பானில் இருக்கிறானாம். ஜாக்கிசானை அப்ப நேர்ல பாத்தா கேட்டதா சொல்லு என்றேன். சிரித்தான். கணேஷ் இப்போது எப்போதும் ஆன்லைனில்தான் இருக்கிறான். எப்போதும் அவன் ஸ்டேட்டஸ்ஸில் பிஸி என்று இருப்பதை காணமுடிகிறது. நல்லது. அதனால் என்ன? இப்போது அவன் என் பக்கத்திலேயே அல்லது பக்கத்து வீட்டிலேயே உட்கார்ந்துகொண்டிருப்பதுபோன்ற உணர்வு. எப்போதாவது ஹாய் சொன்னால் நிச்சயம் வந்து பேசுகிறான். அதுபோதும். இதைக்கூட இப்போது அவன் படித்துச் சிரித்துக்கொண்டிருக்கலாம்.

அவன் மறுபடி என்னிடமிருந்து தொலைந்து போகாமலிருக்க எல்லாம் வல்ல அருள்மிகு இண்டர்நெட்டேஸ்வரன் திருக்கோயிலுக்கு நேர்ந்திருக்கிறேன்.

ஒரு கடிதம்

நான் என் முதல் கடிதத்தை எப்போது யாருக்கு எழுதினேன் என்பது நினைவில்லை. பத்தாம் வகுப்பு பரீட்சை முடிந்ததும் "தாஜ் தியேட்டரில் சினிமாவுக்குப் போகலாமா?" என்று நாலுவீடு தள்ளி இருக்கிற கணேஷூக்கு என் தம்பியிடம் கொடுத்தனுப்பிய துண்டுச் சீட்டுகூட என் முதல் கடிதமாக இருந்திருக்கலாம். எங்கேயோ எப்படியோ தொடங்கிவிட்டது அது. அடிக்கடி படிப்பு வேலையென எல்லோரும் இடம் மாற நேர்ந்த சூழ்நிலைதான் யாருக்காவது கடிதமெழுதுவதன் அவசியத்தைத் ஏற்படுத்தியது என்றாலும்.. சில முக்கியமான தகவல்களைத் தெரிவிப்பதற்கென என்று இல்லாமல்.. அது பின்னாளில் ஒரு சுவாரஸ்யமான விஷயமாகிவிட்டது. அப்போது கடிதமெழுதுவதென்பது ஒரு போதை மாதிரி. அந்த அனுவங்களையெல்லாம் சொல்ல இங்கே இடம் போதாது. கடிதமெழுதுவதில் என்னென்ன புதுமைகள் செய்ய முடியுமோ அத்தனையும் பண்ணி தபால்காரரிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட சம்பவங்களும் உண்டு. உதாரணத்துக்கு போஸ்ட் கார்டில் படம் ஒட்டி லே-அவுட் செய்து அனுப்புவதும், அட்ரஸை தலைகீழாய் பின்கோடிலிருந்து ஆரம்பித்து எழுதுவது.. இன்னபிற! இன்றைய தேதிக்கு நான் எழுத்துலகுக்கு நல்லமுறையில் அறிமுகமாயிருப்பதற்கு கடிதப் பயிற்சி முதல் மூலகாரணம். நானும் இலக்கியம் சார்ந்த என் நண்பர்களும் எழுத்துநடையைப் பக்குவப்படுத்திக்கொண்டதற்கு கடிதம் எழுதுவதை ஒரு கருவியாய் உபயோகித்துக்கொண்டோம் என்று நிச்சயம் சொல்லலாம்.

போஸ்ட் கார்டு, இன்லேண்ட் லெட்டர், என்வலப் என்று மாய்ந்து மாய்ந்து என் நண்பர்கள் எழுதிய கடிதங்களைக் கிழிக்க மனமில்லாமல் எடுத்துவைத்ததில் ஒரு சூட்கேஸ் நிறைய குவிந்து கிடக்கிறது. அதில் நிறைய கடிதங்கள் இப்போது நிறம் மங்கி பழுப்பேறத்துவங்கிவிட்டது, கொஞ்சமல்ல - ரொம்பவே வருத்தமாயிருக்கிறது. சந்தோஷப்பட வைத்தது, வேதனைகளைக் கொண்டுவந்தது.. தளர்ந்தபோது உத்வேகமும், உற்சாகமும் அளித்தது, எரிச்சலடைய வைத்தது, நெகிழ்வாய் கண்கலங்க வைத்தது.. துள்ளிக் குதிக்க வைத்தது... வாய்விட்டுச் சிரிக்க வைத்தது, தர்மசங்கடத்தில் நெளிய வைத்தது.. யாருக்கும் சொல்லாதே என்று ரகசியங்களைத் தாங்கி வந்தது.... இப்படி எண்ணற்ற கடிதங்கள். என்றோ, யாரோ எழுதிய கடிதத்தை இப்போது எடுத்துப்படித்துப் பார்ப்பது சுகமான விஷயம். ஆனால் ஒரு சில சமயம் என்றோ நடந்த ஒரு நிகழ்வுக்கு இன்று படிக்கும்போது மனசை கனக்கச் செய்யும்விதமான கடிதங்களும் அதில் உண்டு.

நேற்று அதுமாதிரி பழையவைகளை லேசாய் கிளறியபோது கண்ணில்பட்டது ஒரு கடிதம். 75 பைசா இன்லண்ட் லெட்டர். பதினைந்து வருடம் முன்னால் என் நண்பர் சரசுராம் எனக்கெழுதியது. படிக்கும்போது அந்தக் கடிதத்தில் புதைந்திருந்த, அது எழுதப்பட்ட காலத்தின் வேதனையை இப்போதுகூட உணரமுடிந்தது. அந்தக் கடிதம் அத்தனை பர்சனலாக இல்லாமல் பொதுவாய் ஒரு சிறுகதைத்தனத்துடன் இருந்ததால், இங்கே அதை பகிர்ந்துகொள்கிற விருப்பத்தை எனக்குக் கொடுத்தது. ஆக, சரசுராமின் அனுமதியுடன் அதை இதோ இங்கே...

-----------------------------------------------------------------------------------------------------
பொள்ளாச்சி
4-4-91

"வாழ்க்கை என்பது துவந்த யுத்தமா? விரிந்த கனவா? ஆச்சரிய நிமிடங்கள் அடங்கிய கதையா? தீக்குள் விரலை வைத்துத் தீண்டும் இன்பத்தைக் காணும் தவமா? எனக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை." - மாலன்.

*****

ப்ரிய ரகுவிற்கு....ராம்

இந்தக் கடிதம் முழுவதும் பாட்டியைப் பற்றியே எழுதும் எண்ணம் நான் முன்பே யோசித்ததல்ல. ஆனால் அது தவிர, தற்போதைய என் நினைப்பில் அல்லது ஏதோவொரு நியாயத்தில் இடமில்லை. போன வாரத்தின் ஒரு தினத்தில், புழு மாதிரி சுருண்டு கிடந்த பாட்டியை பார்த்துவிட்டு மாமா அழுதாரே பார்க்கணும். எல்லோரும் நிறுத்தச்சொல்ல.. முடியவே முடியாமல் அழுதார். எனக்கு சமாதானப்படுத்த விருப்பமேயில்லை. அழட்டும்! நிறைய அழட்டும் என்றுதான் இருந்தது. ஒரு துக்க நேரத்தில் சமாதானம் சொல்வதைவிட வேறென்ன அசிங்கம் இருந்துவிடமுடியும்? அழுகை நிஜமாய் மனதின் கவிதை. அது தரும் ஒத்தடம் வார்த்தைகளில் இல்லை. நம்மால் பிரியப்பட்டவர்களின் உயிர் நாட்கள் எண்ணப்படுவது எவ்வளவு கொடுமை? ஏழு வருட தண்டனைக்குப்பின், சாவின்போதுகூட ஒரு சின்ன சுகத்துடன் போக முடியாத அவர்களின் நிலைமை எதிரிக்குக்கூட ஏற்படக்கூடாது. ஒரு மனித உயிர் இவ்வளவு தூரம் சித்திரவதைக்கப்படுவதைக் நான் பார்ப்பது இதுவே முதன் முறை.

கடவுள் மீதான எண்ணத்தில் மேலும் விரிசல் விழுந்துகொண்டிருப்பதெல்லாம் இத்தகைய நிகழ்ச்சியின்போதுதான். பாட்டி கும்பிடாத சாமியா? அவர்கள் செய்யாத பூஜையா? அவர்களிடம் இல்லாத சுத்தமா? செய்யாத நல்லவைகளா? பிறகும் இவர்களுக்கு இப்படியொரு நிலைமை என்றால்...? தீர்க்கமுடியாத பிரச்சனைக்கு விதி என்று பெயரிட்டு... - எல்லாம் விதியெனில் கடவுள் எதற்கு?

தினம் தினம் எல்லோரும் சுற்றிலும் நின்று பாட்டியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பாட்டிக்கு வந்தவர்களில் எத்தனைபேரை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது என்பது தெரியாது. ஆனால் வந்தவர்களைப் பார்க்கும் அந்த ஸ்நேகமான பார்வை கொஞ்சமும் இன்னும் குறையவேயில்லை. வந்தவர்கள் நீ பிழைக்கவே மாட்டாய் என்கிற மாதிரிதான் ஆறுதல் சொல்கிறார்கள். தலையசைத்தால்... தண்ணி வேணுமா? என்கிறார்கள். கண் உருண்டால் காபியா வேணும்? என்கிறார்கள்.

பாட்டி எல்லோருக்கும் ஒரு குழந்தை. அவரின் ஒவ்வொரு அசைவுக்கும் காரணங்கள் திணிக்கப்படுகிறது. பாட்டி உயிருள்ள ஒரு ஜடம். பாட்டியை எண்ணுகிறபோதெல்லாம், அவர்கள் பற்றி நினைவுகள் தோன்றாமல் இருப்பதில்லை. ஒவ்வொருவரைப்பற்றியும் நினைக்க ஏதாவதொரு நினைவு நிச்சயம் இருக்கும். அது பெரியவர்களானாலும்.. ஒருவயது குழந்தையானாலும் கூட!

உள்ளே நுழைந்ததும் தனக்கு தெரிந்த முறையில் வரவேற்கும் பாங்கும், சாப்பிடச்சொல்லி, டீ குடிக்கச் சொல்லி.. திக்கிக் திக்கித் துண்டு துண்டாய் வந்து விழும் வார்த்தைகளும், அதை மறுக்கிறபோது.. அந்த முகச்சுருக்கம் மீறி தெரிகிற அசைவுகளும், (நான் கோபமென நினைத்துக்கொள்வதுண்டு!). இதற்கிடையில், சில சந்தோஷ நிமிடங்களில், அந்தக் கோணிப்போன வாயிலிருந்து வரும், இன்னும் மறந்துபோகாத சில பாடல்களும்... இன்னமும் சின்னச் சின்னதாய் என்னென்னவோ... மறக்க நாளாகும். எப்படி அழகு ததும்பின உருவம் அது! இப்போது முழுவதும் உருகிப்போய்.. வெறும் எலும்புக்கூடும், அதற்குப் பாதுகாப்பென மிக லேசாய் தொங்கும் தோலும்.. ச்சே.. வாழ்க்கை வெறுப்பாகிப் போகிறது.

திங்கட்கிழமை, நானும் மாமாவும், கோயிலுக்குப் போய் குங்குமத்துடன் வீடு திரும்ப, வீட்டில் கூட்டம். பாட்டி மூச்சுத்திணறிக் கொண்டிருந்தார்கள். வாயில் ஒரு வித சப்தம். கையிலிருந்த குங்குமம் வைக்கச்சொன்னார்கள். வைத்து ஐந்து நிமிடத்தில் உயிர் பிரிந்தது. அந்த உயிர் பிரிந்த நிகழ்வு, எல்லோருக்கும் அழுகையை வெளிப்படுத்த, எனக்கு மட்டும் சந்தோஷமாயிருந்தது.

அன்புடன்
-ராம்.

அழகிய தீயே!

சிறுகதை - சித்ரன்
நன்றி : கல்கி 25-04-2004


ல வருடம் கழித்து ஆதியை நேற்று பார்க்க நேரிட்டது. ஒருவகையில் அது கொஞ்சமும் எதிர்பாராத சந்திப்புதான். பார்த்த கணத்தில் அருணாவுக்கு காலடியில் பூமி நழுவியது. முகத்தில் லேசாய் கலவரம் விரிந்தது. தியாகராயா ரோட்டில் எச்.எஸ்.பி.ஸி ஏடிஎம்-ல் பணம் எடுக்க நின்றிருந்தபோது "ஹாய்" என்று திடீரென்று எதிரே வந்து நிற்கிறான். இத்தனை காலம் எங்கிருந்தான் இவன்?

ஆரம்பத் தயக்கங்கள் தாண்டி இருவரும் இயல்புக்கு வருவதற்கே சில கணங்கள் ஆயின. இருவருக்கும் சட் சட்டென்று பழைய நினைவுகள் முகத்தில் வெளிச்சமிட்டதை இருவருமே உணர்ந்தார்கள். அப்புறம் பரஸ்பர விசாரிப்புகள் நடந்தன. அவன் சென்னையில்தான் ஒரு தனியார் ஸாஃப்ட்வேர் கம்பெனியில் ஸீனியர் மானேஜராக இருக்கிறானாம். அவனை காலேஜில் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்ததுபோல் தோன்றியது. கோல்டு ஃப்ரேமில் கண்ணாடி. லேசாய் முன்தலை வழுக்கை. லேசாய் பூசியிருக்கிற உடம்பு. உடையில் சொற்ப மாற்றம்.

ஆதி கையில் செல்போன் சிணுங்கல்களுக்கு நடுவே அவளைப்பற்றிக் கேட்டான். காலேஜ் ப்ரண்ட்ஸ் வேறு யாரையாவது மீட் பண்ணுவதுண்டா? என்றான்.

"ம். ஜான்ஸி மட்டும் அப்பப்ப போன்ல பேசுவா"

"ஓ அந்த குட்டி வாத்து. க்ரேட் அருணா உன்னை மறுபடி பார்ப்பேன்னு நினைக்கல. வெரி சர்ப்ரைஸ். ஃப்ரியா இருக்கும்போது ஒரு நாள் சும்மா எங்கயாவது மீட் பண்ணலாமே" என்றான் ஆவலாய். கார்டு கொடுத்தான்.

மேலும் சம்பிரதாயமாய் ஒரு சில வார்த்தைகளுடன் அந்த சிறு சந்திப்பு முடிந்தது. வீட்டுக்குத்திரும்பி வரும்போது அருணாவுக்கு ஒரே யோசனையாயிருந்தது. ஆதி இப்படி திடீரென்று எதிர்ப்படுவான் என்று எதிர்பார்க்கவில்லை. பழைய விஷயங்களை மறுபடி கிளறுவானோ என்று ஒரு சின்ன பயமும் தோன்றியிருந்தது இப்போது.

தி என்கிற ஆதிராஜன். காலேஜில் எம்.ஸி.ஏ. ஒரே வகுப்பு. அப்போதும் கண்ணாடி போட்டிருந்தான். தானே வலியவந்து யாரிடமும் அறிமுகப்படுத்திக்கொள்ளும் சுபாவம் அவனுக்கு. எப்போதும் அவனைச்சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். சிகரெட் புகைத்து லேசாய் கவிதையெல்லாம் பேசுவான். ஆரம்பத்தில் அருணாவிடமும் நட்பாய்த்தான் இருந்தான். வருவான். பேசுவான். போவான். பிறந்தநாளுக்கு கார்டு அவனே செய்து பரிசளிப்பான். ஒருநாள் மதியம் கல்லூரி நிறுவனர் சிலைக்குப்பக்கத்தில் எல்லாரும் உட்கார்ந்து டிபன்பாக்ஸ்களை காலி செய்துகொண்டிருக்கும்போது மூக்குக் கண்ணாடிக்குள்ளிருந்து அருணாவை ஊடுருவிப்பார்த்து "சமீப நாட்களாய் நீ என்னை பாதிக்கிறாய்" என்றான். விளையாட்டு மாதிரிதான் சொன்னான். அதன் அர்த்தம் தெரிந்துகொள்ள அவள் அப்போது பெரிதாய் ஆர்வம் காட்டவில்லை.

பிறகு சில நாட்களிலேயே அவன் சொன்னதன் தீவிரம் புரிந்துபோது அவள் அவனிடமிருந்து லேசாய் விலகினாள். ஆனால் ஒரே க்ளாஸ் என்பதால் பொதுவாய்ப் பார்ப்பதும் பேசுவதும் தவிர்க்கமுடியாததாய் இருந்தது. "ஆதி உன்னை ஸீரியசா லவ் பண்றான்னு நினைக்கிறேன்" என்று ஜான்ஸி சொன்னாள். வேறு சிலரிடமிருந்துகூட அதைக் கேள்விப்பட்டாள். "அதுக்கு நான் என்ன பண்ணனும்;?" என்று கேட்டாள். கோபமாய் வந்தது. அவனிடம் எனக்கு என்ன ஈர்ப்பு? ஒருகணம் அதையும் அவன் நினைத்து பார்த்திருக்கவேண்டும். இந்த காதல் மண்ணாங்கட்டி எல்லாம் எப்படியோ இவன்களுக்கு வந்து தொலைத்து விடுகிறது. நான்சென்ஸ்.

ஒரு தடவை ஒரு நோட்டு நிறைய கவிதைகள் எழுதி கொண்டுவந்து கொடுத்தான். உனக்கே உனக்காக எழுதினது என்றான். முதல் பக்கத்தில் "அருணோதயம்" என்று டைட்டில் எழுதியிருந்தது. கவிதைகள் என்னமோ நன்றாகத்தான் இருந்தன. அதைப்படித்து எனக்குக் காதல் வரும் என்று நம்பினான் போலும். பாவம். ஆனால் சுற்றி வளைக்காமல் முகத்துக்கு நேரே தைரியமாய் மனதிலிருப்பதைச் சொல்கிற அவனின் நேரடியான அணுகுமுறையைப் பாராட்டத்தான் வேண்டும். அருணா அதை படித்துவிட்டு பாலுவிடம் திருப்பிக்கொடுத்தனுப்பிவிட்டாள்.

"இங்க பார் பாலு. ஆதியைப்பார்த்து எனக்கு எந்தவிதமான ரசாயன மாற்றமும் ஏற்படலை. எனக்கு படிக்கிறதுலதான் கவனம். அவன் நல்ல டைப்தான். நட்பான பையன். படிக்கிற பையன். எல்லாம் ஓ.கே. எனக்கு அவன் மேல காதல் வர்ல பாலு. நீயாவது எடுத்துச் சொல்லு"

அவளின் இந்த எதிர்மறை பதிலுக்கப்புறமும்கூட ஆதியின் முயற்சி தளர்ந்தபாடில்லை. கிடைத்த இடைவெளிகளில் எல்லாம் அவன் மறுபடி மறுபடி வந்து நிறைய பேசினான். நீயில்லாமல் நானில்லையென்றான். நிறைய சினிமா பார்ப்பான் போல.

காலேஜின் கடைசி நாள். எல்லோரும் பிரியப் போகிற தருணம். ஆதிக்கு அது கடைசி சந்தர்ப்பம். நேராக அவளிடம் வந்தான். நூற்றி இருபதாவது தடவையாக அருணாவிடம்
"யோசிச்சு சொல்லு. உன் பதிலுக்காக மூணு ஜென்மமா காத்திருக்கேன். உன்னை ரொம்ப தொந்தரவு செய்யறேன்னு நினைக்காத. சாதகமான பதில் சொன்னா சந்தோஷம். இல்லைன்னா என்கூட கடைசி கடைசியா அபிநயா கஃபேல வந்து ஒரு கப் காபி சாப்பிடு போதும். ப்ரண்ட்லியா பிரிவோம்" என்றான். சிறிதும் நம்பிக்கையிழக்காத கடைசி முயற்சி.

அன்று மாலை இருவரும் அபிநயா கஃபேயில் காபி சாப்பிட்டார்கள். அதற்குப்பிறகு அவள் கண்ணில் அவன் தென்படவேயில்லை.

ஸ்பென்ஸரில் இன்று மறுபடி அந்த சின்ன கஃபேயில் ஹிந்துஸ்தானி இசைக்கு நடுவே இருவரும் உட்கார்ந்திருந்தார்கள். இவனை மறுபடி எதற்கு பார்க்க வந்தேன் என்று யோசித்துக்கொண்டிருந்தாள் அருணா. பேரர் வந்து ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ், பாவ் பாஜியை டேபிளில் பரப்பிவிட்டுப் போனான். கொஞ்சம் பேச்சு. கொஞ்சம் அமைதி என நேரம் போனது. பேசியது எல்லாமே பொதுவான விஷயங்கள். பிறகு ஆதி சிறிது நேரம் ஸீரியஸாய் இருந்துவிட்டு "நீ ஏன் இன்னும் கல்யாணம் செய்துக்கல?" என்று கேட்டான். அருணா அவனை கேள்வியாய்ப் பார்த்தாள்.

"அப்பா நிறைய ஜாதகம் பார்த்தார். ப்ச்! எதுவும் அமையல" என்றாள். "நீ ஏன் பண்ணிக்கல?"

"வீட்ல சொல்லி சொல்லி அலுத்துட்டாங்க. நான்தான் வேண்டாம்னு சொல்லி தட்டிக் கழிச்சுட்டிருக்கேன்." என்றவன்.. கொஞ்சம் மௌனமாயிருந்துவிட்டு....

"அருணா உனக்கு ஒரு ஆச்சரியமான விஷயம் சொல்லட்டா? நான் இன்னும் உன்னதான் நெனச்சிட்டிருக்கேன்" என்றான் மெதுவாய்.

சிலீரென்றது. முதல்முதலாய் மனசில்.. ச்சே!. என்னது இது..! அவள் அமைதியாயிருக்க முயற்சித்தாள். அவன் என்ன சொல்ல நினைக்கிறான் என்று தெரிந்து கொள்வதில் அவளுக்கு விருப்பமாயிருந்தது. முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் இருக்க முயற்சித்தாள்.

தொண்டையை செறுமிவிட்டு சொன்னான். "இந்த பொன் மாலைப் பொழுதை வீணாக்காம சுருக்கமா சொல்றேன். காலேஜ்ல பிரியும் போது சாப்பிட்ட காபியோட என் காதல் விஷயம் சூடு ஆறிப் போயிடுச்சுன்னு நீ நினைச்சிருக்கலாம். ஆனா என்னால உன்னை மறக்க முடியல. ரொம்ப அவஸ்தையாயிருச்சு. நீ சென்னைலதான் இருக்கேன்னு தெரியும். ஆனா உன்னை மறுபடி தொந்தரவு பண்ண வேணான்னு விட்டுட்டேன். ஆனாலும் மனசோரத்துல நீ ஒட்டிக்கிட்டுதான் இருந்தே. இப்ப கூட அப்படித்தான். ரெண்டு தடவை உன்னை தூரத்திலேர்ந்து பார்த்தேன்;. என்னடா கிடைக்கலையேன்னு கொஞ்சம் வருத்தம் வந்தது. இப்ப ஒரு நல்ல வேலையும் சொந்தமாய் வீடும் இருக்கு. நான் வீட்ல ஒரே பையன். நான் ஆசைப்பட்டதை நிறைவேத்தற அம்மா, அப்பா. உன்னைப்பத்தி நிறைய சொல்லியிருக்கேன். நீ கிடைச்சா அதைவிட சந்தோஷம் எனக்கு கிடையாது. இந்த சந்திப்பு எனக்கு கிடைச்ச இன்னொரு பொன்னான சந்தர்ப்பம்ங்கிறதுனால நழுவவிட மனசில்லை. மறுபடி ஒரு முயற்சி. அதான் சொல்லிட்டேன். நீ மறுத்தாகூட உன் நினைப்பிலயே வாழ்ந்துட்டுப் போறது அப்படியொன்னும் கஷ்டமா தோணலை. என்னைப் பத்திதான் உனக்குத் தெரியுமே." சொல்லிவிட்டு ஆதி அவளை நேராகப் பார்த்தான்.

"ஓ மை காட்!" என்றாள் அருணா. அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தொடர்ந்து மேலும் சில சிலீர்களும் ஓடிவிட்டிருந்தன மனதுக்குள். அவன் ஊடுறுவும் பார்வை என்னவோ செய்தது. "கொஞ்சம் வசீகரமான பையன்தாண்டி" என்று காலேஜ் படிக்கும்போது ஜான்ஸி சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. பைத்தியமாய் வருடக்கணக்கில் இப்படி ஒருத்திக்காக காத்திருக்கிறதென்றால்.

அவள் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தாள். குழப்ப யோசனைகள் ஓடின. ரொம்ப லேட்டாய் அவன் மேல் ஒரு ஈர்ப்பை உணர்கிறேனோ? கடவுளே! எனக்கு என்ன ஆயிற்று? அன்றைக்கு மாதிரியே உன்மேல் எனக்கு எதுவும் இல்லை என்று பட்டென்று சொல்லிவிட முதன் முதலாய் ஏன் ஒரு தயக்கம் எழுகிறது?

அவன் மேலும் சொன்னான். "நிதானமா யோசிச்சுச் சொன்னாப் போதும். பாஸிட்டிவ்வான பதில்னா செல்போன்ல கூப்பிடு. வீட்டுக்கு வந்து பெண் கேட்கிறேன். நெகட்டிவ்வான பதில்னா இதே இடம். என்னோட ஒரு கப் காஃபி. ஓகே?"

எதுவும் சொல்லாமல் ஒரு சிரிப்புடன் விடைபெற்றாள். வீட்டுக்கு திரும்புகிறபோது ஒரே யோசனைக்குவியல். திடீரென்று வந்து எல்லாவற்றையும் கலைத்துப்போட்டுவிட்டுப் போய்விட்டான். அவனுக்கு அங்கேயே ஏன் பதில் சொல்ல முடியவில்லை? இந்தத்தடவை வித்தியாசமாய் ஏதேனும் பதில் சொல்ல விரும்புகிறேனா? என்ன இது குழப்பம். புன்னகையுடன் கூடிய அவன் மலர்ந்த முகம் மீண்டும் மீண்டும் நினைவில் ஓடியது. அவன் ஒரு நல்ல டைப்தான். பின்னாலேயே நாய் மாதிரி சுற்றினான் என்பதை வைத்து அவனை மோசம் என்று சொல்லிவிட முடியாது. என்ன ஒரு நம்பிக்கை அவனுக்கு. குரலில் ஒரு சின்ன கம்பீரம். அவனை கடைசியில் ஜெயிக்கவிடலாமா? இரு! முதலில் என்னை நானே கேட்டுக்கொள்ள நிறைய கேள்விகள் இருக்கிறது. முதல் கேள்வி இத்தனை வருடம் கழித்து எனக்கு அவன்மேல் ஈர்ப்பு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது.

சில தயக்க யோசனைகளுக்குப் பின் ஆமாம் என்று மனது தீர்மானம் நிறைவேற்றியது. அவளையறியாமல் உதட்டோரம் ஒரு புன்னகை அரும்பி மறைந்தது. காதலின் பயாலஜி விதிகள் என்னென்ன? அவனை லேசாய் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. அல்லது பிடித்துவிட்டது. அன்றிரவு பொட்டுத் தூக்கம்கூட வரவில்லை. நடுநிசியில் அவன் விஸிட்டிங் கார்டை எடுத்துப்பார்த்தாள்.

நான் இன்னும் உன்னதான் நெனச்சிட்டிருக்கேன் என்று அவன் சொன்னது திரும்பத்திரும்ப ரிவைண்ட் ஆகிக் கொண்டிருந்தது. எங்கேயோ முன்னமே போடப்பட்ட பூர்வ ஜென்ம முடிச்சா இது? நினைக்க நினைக்க ஆச்சாரியமாய் மனதில் விரிகிற கனவுச்சாரல்.

ஆனால் அதை கொஞ்சநேரம்கூட நீடிக்க விடாமல் திடீரென்று வேறொரு எண்ணம் வந்து குறுக்கிட்டு நின்றது. இன்றைய தேதிக்கு எனக்கு மாப்பிள்ளை பார்த்து பாவம் அப்பாவும். அம்மாவும் களைத்து ஓய்ந்து போய்விட்டார்கள். இப்படி எனக்கு இன்னும் வரன் கூடாமல் தள்ளித் தள்ளிப் போனது எல்லாருக்குமேகூட வருத்தம்தான். இந்த நிலைமையில் திடீரென்று ஆதியின் வருகை. அவன் பைத்தியமாய் அவள் பின்னால் சுற்றியபோதெல்லாம் பாராமுகமாய் இருந்துவிட்டு இப்போது போய் அவனிடம் உன்னைப் பிடித்திருக்கிறதென்று நான் சொன்னால் அது வேறு வழியில்லாமல் ஒரு கல்யாணத்தேவைக்கு என்று ஆகிவிடாதா? அவன்மேல் நிஜமாவே ஒரு பிடிப்பு வந்துவிட்டது என்றே இருந்தால்கூட இத்தனை காலம் கழித்து இப்போது போய் உன்னை ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்வது சுயநலமில்லையா?

சட்டென்று அவளின் முந்தைய எண்ணங்களின் மீது ரிவர்ஸ் கியர் விழுந்ததுபோல் இருந்தது. ரொம்பத் திகைப்பாய் இருந்தது. இப்படியொரு கோணத்தில்கூட இதை யோசித்துப் பார்த்தே ஆகவேண்டும். அருணாவுக்குப் பிரமை பிடித்தது மாதிரி இருந்தது.

மறுநாள் குளித்துவிட்டு ஸ்டிக்கர் பொட்டை நிலைக் கண்ணாடியில் சாரிபாக்கும்போது தலையில் மறுபடி அந்த நரைமுடியைப் பார்த்தாள். முப்பத்தைந்தை நெருங்கின வயது. லேசான பெருமூச்சு வந்துபோனது.

நிறைய யோசனைகளுடன் ஆபிஸுக்கு கிளம்பிப்போனாள். வேலையில் கவனம் ஓடவில்லை. ஆதி சொன்னது மண்டையைக் குடைந்தது. மதிய இடைவேளையில் ஹேண்ட் பேகிலிருந்து ஆதியின் விஸிட்டிங்கார்டை தேடி எடுத்தாள். ரிசப்ஷனைக் கூப்பிட்டு அவன் செல்போன் நம்பருக்கு லைன் வாங்கினாள்.

"சாயங்காலம் பார்ப்போமா ஆதி ? ஜஸ்ட் ஒரு காஃபி. ஓகே?"

*

பிஸ்லெரி கருணைகள்

சின்ன வயதில் எனக்கு செடி வளர்ப்பது ரொம்பப் பிடிக்கும். நாங்கள் முன்பிருந்த ஊரில் குடியிருந்த வீட்டில் அடுக்களைக்குப் பின்பக்கமாய் நல்ல செம்மண் புஷ்டியுடன் ஒரு தோட்டம் இருந்தது. சிறிது காலம் வேலையில்லாமல் வெட்டியாய் வீட்டில் இருந்தபோது அப்பாவின் பார்வையைத் தவிர்ப்பதற்காய் அம்மாவுக்கு தோட்டத்தில் உதவுவது மாதிரி பாவ்லா பண்ணிக்கொண்டிருந்ததுதான் தாவரம் வளர்ப்பது குறித்தான எனது முதல் ஆவலைத் தூண்டியது எனலாம். அம்மா வெண்டைக்காய், கத்தரிக்காய், பச்சை மிளகாய் போன்ற தினசரி சமையல் வஸ்துக்களை எப்படி வீட்டுத் தோட்டத்திலேயே தயாரித்துக்கொள்வதென்கிற கலையை கற்று வைத்திருந்தாள். ஒரு தடவை தோட்டத்தில் காய்த்த அந்த முதல் பூசனிக்காயை சமைக்காமல் வைத்து வைத்துப் புளகாங்கிதமாய் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அம்மா காய்கறிகளை மட்டுமே பயிரிடுவது எனக்கு அத்தனை சுவாரஸ்யமில்லாமலிருந்தது. கொஞ்சம் பூச்செடிகள் வேண்டாமா? என் விருப்பத்தை அம்மாவுடன் சொன்னபோது தன் ஒரு சில காய்கறி அறுவடைகளை முடித்துக்கொண்டு எனக்கான இடம் ஒதுக்கினாள். ஒரு நண்பன் வீட்டில் பார்த்த அந்த மஞ்சள் பூச்செடியின் விதைகளை கொண்டுவந்தேன். மண்தோண்டி விதை விதைத்து, சிறிது தண்ணீரும் ஊற்றிவிட்டு பிறகு தினம் அது முளைக்கிறதா என்று வந்து வந்து பார்க்கிற சுகம் அலாதியாயிருந்தது. ஒரு துளிர் முளைத்ததைப் பார்த்துவிட்டபோது மனம் சந்தோ்ஷத்தில் துள்ளியது. ஒரு சில தினங்கள் கழித்து மஞ்சள் நிறத்தில் கொத்துக்கொத்தாய் பூத்த அதற்கு சைனா ரோஸ் என்று பெயர் சொன்னார்கள். திடீரென்று தோட்டத்துக்கு உயிர் வந்துவிட்டது. அதற்கப்புறம் ரோஜா, பட்டன் ரோஸ், குரோட்டன்ஸ்கள், நித்ய கல்யாணி, சூரியகாந்தி, செம்பருத்தி என்று என்னென்னவோ தோட்டத்தில் முளைத்துவிட்டதைப் பார்த்து அம்மா வியந்து நின்றாள். அப்பாவின் பார்வை இன்னும் கடுமையாய் மாறியது.

பிறகு திடீரென்று எனக்கு வேலை கிடைத்துவிட்டதும், வீடு மாறினதும், மாறின வீட்டில் செடிவைக்க அதிகமாய் இடமில்லாமல் போனதும் ஆக தாவரத்திட்டங்கள் பின்னாளில் கொஞ்சம் கொஞ்சமாய் கைவிடப்பட்டன. அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைக்குத் தாவினதற்கப்புறம் குழிதோண்டி விதைபோட்டு செடி வளர்ப்பது கற்பனையில் மட்டுமே முடிந்தது. வேண்டுமானால் தொட்டிச்செடிகளாய் சிலது வைத்து அழகுபார்த்துக்கொள்ளலாம். அவற்றிற்கு விதைகளும், கொம்புகளும், செடிகளும் கிடைத்தாலும், சுற்றிலும் சுவர்கள் மறைத்து காற்றுக்கே அனுமதி மறுக்கப்பட்டுவிட்ட அபார்ட்மெண்ட் வராண்டாவில் வெயில் எங்கேயிருந்து வரும்? பச்சையம் தயாரித்தல் எப்படி நிகழும்? இவையெதும் தேவையற்ற ஜீவனற்ற பிளாஸ்டிக் செடிகள் மேலோ அத்தனை விருப்பமில்லை.

இருந்தாலும்... விட்டுவிடமுடியுமா? அலுவலக பால்கனி மணிப்ளாண்ட் செடியிலிருந்து கொஞ்சம் களவாடிவந்து ஹார்லிக்ஸ் பாட்டிலில் பிஸ்லெரி வாட்டர் (!) நிரப்பி செடியைப்போட்டு என் மூன்றாவது மாடி பால்கனி க்ரில்லில் அதை அபத்திரமாய் தொங்க விட்டேன். ஜென்மம் சாபல்யமடைந்ததுபோல் ஒரு உணர்வு. தினம் அதன் வளர்ச்சியை உற்றுக் கவனிக்க ஆரம்பித்தேன். ஒரு இலை, இரு இலை, என்று வெயில்தேடி மணிப்ளாண்டின் கைகள் பால்கனி க்ரில்லைத்தாண்டி விரிய ஆரம்பித்தது. ஆஹா! இந்த அபார்ட்மெண்டின் வரட்டு வாழ்க்கைக்கு அர்த்தம் வந்து விட்டது. ஆனால் இப்படியும் ஒரு செடி இருக்குமா? முளைத்து மூன்று இலை விடுவதற்குள், குடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல் மூச்சுத்திணறுகிற நகரத்தில் நான் என்னை பாரிவள்ளல் மாதிரி நினைத்துக்கொண்டு பாட்டிலில் ஊற்றுகிற பிஸ்லெரி வாட்டரை அந்தச் செடி அசுரவேகத்தில் குடித்துக் காலிபண்ணிக்கொண்டிருந்தது. பாட்டிலில் நிரப்பிவைக்கிற தண்ணீர் இரண்டு நாள் கழித்துப்பார்த்தால் பாதிக்கு வந்துவிடுகிறது. சரியான ராட்சஸ செடிபோல என்று நினைத்துக்கொண்டேன்.

ஒரு நாள் காலை அதன் தற்போதைய வளர்ச்சிநிலையை மேற்பார்வையிட பால்கனி கதவைத் திறந்தபோது எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாட்டில் அப்படியே இருக்கிறது. மணிப்ளாண்டைக் காணவில்லை. எங்கே போயிற்று? உடனே தாமதியாமல் பால்கனி கிரில் வழியே எட்டிப்பார்த்தேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை கீழே எங்கேயும் அதன் பச்சை தட்டுப்படவில்லை. இத்தனை உயரம் ஏறிவந்து இதை யாரேனும் திருடிக்கொண்டு போகவேண்டியதன் அவசியத்துக்கு வாய்ப்பிருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தேன். மின்கம்பிமேல் உட்கார்ந்திருந்த காக்கைமேல் எனக்கு சந்தேகம் வந்தது. பயங்கர சோகமாகிவிட்டது. கீழே போய்த் தேடிப்பார்த்தேன். எங்கேயும் காணோம்.

சரி எனக்குக் கொடுப்பினை அவ்வளவுதான்போல என்று மனம் சமாதானத்திற்கு வந்தது. மறுபடி இன்னொரு செடியை கொண்டுவருவதுபற்றிய யோசனையைக் கைவிட்டேன். இதெல்லாம் சரிவராது போல. தண்ணீர் பாதி தீர்ந்துபோன பாட்டிலை மட்டும் அப்புறப் படுத்தாமல் அப்படியே விட்டுவைத்திருந்தேன். அது அங்கேயே இருக்கட்டும். மணிப்ளாண்ட் சில நாள் என்வீட்டில் வாழ்ந்ததை நினைவுபடுத்திக்கொண்டு.

மறுநாள் எதற்கோ மறுபடியும் பால்கனி கதவைத் திறந்தபோது அதைப் பார்த்தேன். மணிப்ளாண்ட்டை அல்ல. ஒரு அணில். கிரில் கம்பியில் ஒரு சர்க்கஸ் லாவகத்துடன் தலைகீழாக தவழ்ந்துவந்து பாட்டிலுக்குள் தலை நுழைத்து தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தது. ஓஹோ! இப்போது எல்லா மர்மங்களும் பளிச் என்று விளங்கிவிட்டன. மணிப்ப்ளாண்ட்டாவது இவ்வளவு வேகமாய் தண்ணீரை உறிஞ்சுவதாவது. லேசாய் சிரிப்பு வந்தது. எல்லாம் இதன் வேலை! இந்த அணிலைக் கோபித்துக்கொள்ளமுடியுமா? தண்ணீர் குடித்துவிட்டு டுபுக் டுபுக் என்று உற்சாகமாய் வாலாட்டியபடி அணில் இடத்தைக் காலிபண்ணியது.

நான் யோசிக்கவேயில்லை. உடனே சமையலறைக்கு ஓடிப்போய் கேனிலிருந்து பிஸ்லெரி வாட்டர் எடுத்துவந்து பாட்டிலில் நிறைத்தேன்.

அணிலோ செடியோ.. ஏதாவது ஒன்று. வாழ்க்கை நிறைவாயிருக்கிறது.