Showing posts with label தமிழோவியம். Show all posts
Showing posts with label தமிழோவியம். Show all posts

புலம் - தீபாவளி மலர் சிறுகதை

தமிழோவியம்.காம் இணைய இதழின் தீபாவளி மலரில் எனது சிறுகதை..

ணி செண்ட்ரலில் ரயில் இறங்கி ஆட்டோ பிடித்து அபிராமபுரத்திலுள்ள கேசவனின் வீட்டுக்கு போய் இறங்கினபோது லேசாய் ஆச்சரியப்பட்டான். கேசவனின் வீடு காலி செய்யப்படுகிற முகாந்திரமாய் வீடு நிறைய மூட்டை முடிச்சுகள். அட்டைப் பெட்டிகள். அடுக்கத் தயாராயிருந்த சாமான்கள். குறுக்கும் நெடுக்குமாய் ஒழுங்கில்லாமல் சோஃபா, கவிழ்ந்த சேர்கள், நியூஸ் பேப்பர் குப்பைகள். கயிறுகள். பேக்கிங் டேப் சுருள்கள்.

மணி பொருட்குவியல்களுக்கு ஓரமாய் ட்ராவல் பேகை வைத்துவிட்டு வியப்புடன் புரியாமல் கேசவனைப் பார்த்தான். "வீடு காலி பண்றீங்களா?" என்றான்.

...

...

மேலும் படிக்க..

கோடிட்ட இடங்கள்

இந்த வாரம் முதல் தமிழோவியத்தில் 'கோடிட்ட இடங்கள்' என்ற என் தொடர் நாவல் வெளியாகிறது. அதைப் படிக்க இங்கே க்ளிக்கவும்.

வீடு

சிறுகதை
தமிழோவியம் - தீபாவளி மலர் 2004

நந்து சென்னைக்கு வந்து இறங்கியவுடன் முதல் கேள்வியாக அதைத்தான் கேட்கப் போகிறானோ என்று பயந்து கொண்டிருந்தார் நடராஜன். ஆனால் பேக்கேஜ்களைக் சேகரித்துக்கொண்டு வெளியில் டாக்ஸியில் ஏறுகிறவரை அவனும் அவன் மனைவியும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. பதிலாக ரெண்டு பேரும் வாய் கொள்ளாத சிரிப்பாக இருந்தார்கள். இனிமேல் சென்னையில்தான் இருக்கப் போகிறோம் என்கிற சந்தோஷச் சிரிப்பு. நந்து ஒரு பெரிய அஞ்ஞாதவாசத்தை முடித்துவிட்டு வந்தவன் போல் தோற்றமளித்தான். மூன்று வருடங்களில் நிறைய இளைத்திருந்தான். முகத்தில் அவன் மீசை அடர்ந்து பெரிதாய்த் தெரிந்தது. அவன் மனைவி சுபா முடியெல்லாம் குட்டையாய் வெட்டிக் கொண்டு, லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு கண்ணுக்குக் கீழ் லேசாய் கருவளையங்கயோடு இருந்தாள்.

மகன் சொந்த ஊருக்கே திரும்பிவந்துவிட்டான் என்ற சந்தோஷத்தின் பிரமிப்பில் சரசுவுக்கு வாயெல்லாம் பல்லாக இருந்தது. 'வந்திட்டியாடா' என்று நந்துவைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கொண்டிருந்தாள். இருக்காதா பின்னே. நடராஜனுக்கும் ரொம்ப சந்தோஷம்தான். ஆனாலும் அது முழுமையாக மனசில் தங்காமல் ஒரு கவலை தோய்ந்த பயத்தின் பிடியில் இருந்தது. அவன் இன்னும் சிறிது நேரத்தில் அவன் அதை கேட்கப் போகிறான். நடராஜன் அவனிடம் சொல்வதற்கு எந்த பதிலையும் தயாரிக்காமல்தான் வந்திருந்தார். அவனானால் கோபக்காரன் வேறு. அவன் கேட்கட்டும். கேட்கும்போது என்ன தோன்றுகிறதோ அதைச் சொல்லலாம் என்று நினைத்தார்.

அவன் அஸ்ஸாமிலிருந்து புறப்படுவதற்குமுன் போன் பண்ணினபோதுகூட மறக்காமல் கேட்டான்.

"வீடு எப்பப்பா காலியாகுது?"

"சொல்லியிருக்கேன். பண்ணிருவாங்க" என்றார். பொய்தான். கீழ் போர்ஷனில் குடியிருக்கிற ராமநாதனிடம் இன்னும் அதைச் சொல்லவில்லை. மகன் வருகிறான் என்று தகவல் சொன்னதோடு சரி! சமீபமாய் நந்து அங்கிருந்து போன் பண்ணுகிற சமயத்தில் எல்லாம் அதை எப்பவும் தவறாமல் கேட்க ஆரம்பித்திருந்தான். சொந்த ஊருக்குத் திரும்பலாம் என்று அவன் முடிவு பண்ணியவுடனேயே கூப்பிட்டுச் சொல்லிவிட்டான். 'கீழ் போர்ஷனைக் காலி பண்ணி வெச்சிருங்கப்பா. இப்பவே சொல்லி வெச்சீங்கன்னாத்தான் நாங்க வர்ரதுக்கும் அவங்க காலி பண்றதுக்கும் கரெக்டா இருக்கும்.'

அவன் போகிறபோதே 'இந்த வேலை மூணு வருஷ காண்ட்ராக்ட்! அதுக்குள்ள எத்தனை சம்பாதிக்கறனோ அத்தனை போதும். முடிஞ்சதும் ரிஸைன் பண்ணிட்டு திரும்பி வந்து ஏதாச்சும் பிஸினஸ் ஆரம்பிக்கணும்.' என்று உறுதியாய் சொல்லிவிட்டுப் போனான். அசுர வேகத்தில் வருடங்கள் ஓடிவிட்டன. இதோ சொன்னபடி திரும்பியும் வந்துவிட்டான். கல்யாணம் ஆன கையோடு சுபாவையும் கூட்டிக்கொண்டு போயிருந்தான் அப்போது. மூன்று வருடங்களாய் குழந்தை பெற்றுக் கொள்கிற தீர்மானத்திலிருந்து விலகியிருந்தார்கள் போல. நந்துவின் முகத்தைப் பார்த்தால் இங்கே வந்தபிறகு ஏகப்பட்ட திட்டம் வைத்திருப்பான் போலிருக்கிறது. அவனுக்கென்று தனி குடும்பமாகிவிட்டது. இனி அவன் குடியிருப்பதற்கு தனி ஜாகை வேண்டும். அதற்கு ராமநாதன் காலிபண்ணவேண்டும். யோசிக்கப் போனால் நந்து சொந்தவீட்டை விட்டுவிட்டு வேறெங்கும் வாடகைக்கு போய் இருக்க வேண்டுமென்கிற அவசியமும் இல்லைதான்.

"சென்னைல வெயில் எப்பதான் முடியும்?" என்றான் நந்து. ரொம்ப நாளைக்கப்புறம் அவன் அப்பாவிடம் பேசுகிற முதல் வார்த்தை. போனிலேயே பேசிக்கொண்டிருந்துவிட்டு நேரில் பேசுவதற்கு ஒன்றுமில்லாததுபோல் இருக்கிறது. அவன் பேசட்டும். வீடு விஷயம் தவிர வேறு என்ன வேண்டுமானாலும் பேசட்டும். 'அவங்கிட்ட எதயும் தத்துப் பித்துன்னு ஒளறி வெக்காத' என்று சரசுவிடமும்கூட சொல்லித்தான் ரயில்வே ஸ்டேஷனுக்குக் கூட்டிக்கொண்டு வந்தார் நடராஜன். எதுவானாலும் வீட்டுக்குப் போய் பேசிக்கொள்வது உத்தமம். இப்போது எதையாவது சொல்லித் தொலைத்தால் அப்புறம் இங்கேயே அவன் வாள் வாள் என்று கத்த ஆரம்பித்துவிடுவான். அவன் சுபாவம் தெரிந்ததுதானே. எதிலும் அப்படியொரு பிடிவாதம். எப்போதும் பிடித்த பிடியில் நிற்பான். வேண்டுமென்றால் வேண்டும். வேண்டாமென்றால் வேண்டாம். நடராஜன் அமைதியாய் வந்தார். டாக்ஸி ஜெமினி மேம்பாலம் ஏறும்போது அவர் பயந்துகொண்டிருந்ததை கேட்டே விட்டான்.

"கீழ்ப் போர்ஷன் என்னாச்சுப்பா?"

நடராஜனுக்குக் கருக்கென்றது. பேசாமல் காது கேட்கவில்லை என்பதுபோல் திரும்பாமலே உட்கார்ந்துவிடலாமா என்று யோசித்தார். ஆனால் மெதுவாய் மென்று விழுங்கிவிட்டு திரும்பாமலேயே "கொஞ்சம் டைம் கேட்ருக்காங்கடா. வேற வீடு பாத்திட்டிருக்காங்க" என்று மறுபடி பொய் சொன்னார். 'பையன் வர்ரான். நீங்க வீட்டைக் காலிபண்ணனும்' என்று ராமநாதனிடம் எப்படிப் போய் சொல்வதென்று ரொம்ப நாளாகவே குழப்பமாய்த்தான் இருந்தது நடராஜனுக்கு. ராமநாதனின் முகத்தைப் பார்த்து நிச்சயம் அதை அவரால் சொல்ல முடியாது. அது ஒரு தர்மசங்கடமான விஷயம். ராமநாதன் மாதிரி அருமையான மனிதரை எங்கேயும் பார்க்கமுடியாதென்பது அவர் அபிப்பிராயம். அவர் மாதிரி ஒரு நல்ல டெனன்ட் கிடைத்ததை சந்தோஷம் எனவும் அதிர்ஷ்டம் எனவும் ஒரு சிலரிடம்கூட நடராஜன் சொல்லியிருக்கிறார்.

கரெக்டாக நந்து வேலை கிடைத்து கெளகாத்திக்குக் கிளம்பின ஒரு வாரத்தில்தான் ராமநாதன் குடும்பம் கீழ்ப் போர்ஷனுக்குக் குடி வந்தது. ராமநாதனுக்கு ஒரு நாற்பத்தைந்து வயதிருக்கும். கணவன், மனைவி, ஒரு பெண், ஒரு பையன் என்று கச்சிதமான குடும்பம். ராமநாதன் ஏதோ பிஸினஸ் பண்ணிக்கொண்டிருந்தார். மனைவி மின்சார வாரியத்தில் உதவிப் பொறியாளர். நியாயமாய்ப் பார்த்தால் பிஸினெஸெல்லாம் பண்ணிக்கொண்டு இத்தனை வயசுக்கு ராமநாதன் சொந்த வீடு கட்டி செட்டிலாகியிருக்கவேண்டும். ஒரு முறை நடராஜன் அதைப்பற்றிக் கேட்டபோது 'வீடு கட்டலாம்னுதான் கோயமுத்தூர்ல லேண்ட் வாங்கிப் போட்டேன். நடுவுல பிஸினஸ் அடிவாங்கி நிறைய நட்டமாச்சு. பொண்டாட்டிக்கு வேலை இருக்கறதால ஏதோ கொஞ்சம் சமாளிச்சேன். ஒரு வழியா பிரச்சனையெல்லாம் முடிஞ்சு இப்பதான் எந்திரிச்சு நின்னிருக்கேன். கடன்ல லேண்ட்டெல்லாம் வித்தாச்சு சார்!" என்றார் ராமநாதன்.

நடராஜன் அடிக்கடி அந்த வீட்டில் குடியிருந்தவர்கள் பற்றியெல்லாம் நினைவுகளை வரிசையாய் மனத்திரையில் ஓட்டிப் பார்ப்பார். எத்தனை பேர் எத்தனை விதமாக. முதலில் நடராஜனேதான் அங்கே குடியிருந்தார். அது முதலில் ஒரு சின்ன போர்ஷனாக இருந்தது. அப்புறம் வசதி பெருகினதுக்கப்புறம் மாடியில் இன்னொரு போர்ஷன் கட்டி அங்கே குடிபோய் கீழ்ப் போர்ஷனை வாடகைக்கு விட்டார். கீழே முதலில் குடிவந்தவர்கள் இரண்டே மாசத்தில் மாற்றலாகி வடக்கே போய்விட்டார்கள். அப்புறம் நாலு பேச்சிலர்கள். அப்புறம் ·பார்மா கம்பெனி மேனேஜர் ஒருத்தர். ரொம்ப டீசன்டான நல்ல மனிதர். பாதி நாள் டூரிலேயே இருப்பார். ஒரு நாள் அவரின் சம்சாரம் யாருடனோ ஓடிப்போய்விட்டது. அந்தத் தெருவில் அது பற்றின பேச்சில் அடிபட்டு வாழ்ந்து கொண்டிருந்த மேனேஜர் திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் காலி பண்ணிக்கொண்டு போனார் ஒரு நாள். அதைவிட விவகாரமான விஷயம் இரண்டு வெளியூர் பெண்கள் அக்கா தங்கச்சி என்று சொல்லிக் குடிவந்தது. காலேஜ் ஹாஸ்டல் பிடிக்கல. அதனாலதான் தனியா வீடு பாத்துத் தங்கறோம் என்று என்னவோ காரணம் சொல்லித்தான் வந்தார்கள். பார்த்தால் நல்ல மாதிரி தெரிகிறதே என்றுதான் அவரும் வீட்டைக் கொடுத்தார். ஒரு நாள் எலெக்ட்ரிக் கடை தங்கராஜ் வந்து "என்ன நடராஜ்.. சைடுல தோல் பிஸினெஸெல்லாம் ஆரம்பிச்சிருக்கீங்க போல.." என்று கேட்டான். என்னடா என்று விசாரித்துப் பார்த்தால்.. "நீ வாடகைக்கு விட்டிருக்கிற வீட்டுல.. கமுக்கமா மேட்டர் நடக்குது ஓய்! அது காலேஜ் படிக்கிற பொண்ணுங்க இல்ல" என்று ஆதாரங்களை முன் வைத்தான். அடுத்தநாளே ரெண்டுகளையும் விரட்டி அனுப்பிவிட்டார். ராமனாதன் குடி வருவதற்கு முன் ஆர்.டி.ஓ ஒருத்தரும்கூட இருந்தார். அவருக்கு ஜந்து பெண்கள், நான்கு பையன்கள். பெரிய குடும்பம். எப்படித்தான் சமாளிக்கிறாரோ மனிதர் என்று பார்க்கும்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் வியந்து கொண்டிருந்தார் நடராஜன். அதிக குடும்ப உறுப்பினர்களால் அவர்கள் காம்பெளண்டு கொஞ்சம் கசகசப்பாக இருந்ததும், தண்ணீர் அதிகம் செலவானதும் தவிர அவர்களால் பெரிய உபத்திரவம் எதுவும் இருந்ததில்லை. அவர்கள் கூட அதிகம் காலம் இருக்கவில்லை. நாகர்கோவில் பக்கம் எங்கேயோ போய்விட்டதாகத் தகவல்.

கடைசியாய் வந்த ராமநாதன் குடும்பம் ரொம்ப வருடங்களாக இருக்கிறது. வருடங்களின் உருளளில் ஊறிப் போன நட்பு. பார்த்துப் பழகிய முகங்கள். பழகிப் பழகி இறுகின உறவு. எத்தனையோ சந்தர்ப்பங்கள். எத்தனையோ நிகழ்வுகள். பரிமாறிக்கொண்ட துக்கங்கள் சந்தோஷங்கள், பொழுதுகள். ராமனாதன் குடும்பம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் தனிமையின் கோரக் கைகள் எல்லாவற்றையும் பிய்த்துப் போட்டிருக்குமோ என்னவோ என்றெல்லாம் யோசனை வரும் நடராஜனுக்கு. ஏனையபிற உறவினர்களையும்விட வாழ்க்கையின் வழியில் பார்த்துப் பழகின மனிதர்கள் நெருக்கமாய் இருக்கிறார்கள் என்றால் அது பெரிய கொடுப்பினைதான் என்று அடிக்கடி நினைத்துக்கொள்வார்.

எப்போதும் சரசுவும் ராமநாதனின் மனைவியும் ஒன்றாகவே கோவிலுக்கும் மார்க்கெட்டுக்கும் போவதும், ராமனாதனின் பையனும் பெண்ணும் தாத்தா தாத்தா என்று நடராஜன் வீட்டுக்குள்தான் எப்போதும் வளைய வருவதும், சார் வரீங்களா என்று ராமநாதன் இவரையும் போகிற இடங்களுக்கெல்லாம் துணை சேர்த்துக்கொண்டு சுற்றுவதும் ஆக அன்றாட நிகழ்வுகள். சில சமயம் ஞாயிற்றுக் கிழமைகளில் இரண்டு வீட்டுக்கும் சேர்த்து ஒரே சமையல் நடக்கும். வீட்டு ஓனர், குடியிருப்பவன் என்கிற எல்லை எப்போதோ தகர்ந்து ஒரு ரெண்டு குடும்பத்துக்குள்ளேயும் அனுசரனையான உறவு இருந்தது. நிறைய பேச்சு! நிறைய சிரிப்பு! நிறைய உரிமை!

ராமனாதன் அடிக்கடி சொல்வார். "உங்க வீட்டுல குடியிருக்கிறதே சொந்த வீட்டுல குடியிருக்கிற ·பீலிங் தருது தார். ஐம் லக்கி. நான் சொந்தமா வீடு கட்டினாக்கூட அதை வாடகைக்கு விட்டுட்டு ஒங்க வீட்டுலதான் இருப்பேன்". அதைக் கேட்பதில் நடராஜனுக்கும் பிடி கொள்ளாத சந்தோஷம். ராமநாதன் பிஸினெஸ் பிஸினெஸ் என்று எப்போதும் அலைகிற மனிதர். ஆனால் கொஞ்சம் ஓய்வாக இருக்கிற மாலை நேரங்களில் கண்ணில் பட்டால் வாங்க சார் வாக்கிங் போலாம் என்று நடராஜனுடன் கிளம்பிவிடுவார். இருவரும் ராகவேந்திரா நகர் தெருக்களில் உலவிவிட்டு அங்கேயிருக்கிற குட்டிப் பூங்காவுக்கு வந்து உட்கார்ந்து விடுவார்கள். நடராஜனுக்கு அப்படியொரு துணை அவசியம் வேண்டியிருந்தது. "உங்களை மாதிரி ரெண்டா பெத்திருக்கலாம் ராமநாதன். ஒண்ணே ஒண்ணைப் பெத்துட்டு.... பாருங்க....! அவஸ்தை! அவனும் பக்கத்தில இல்ல. முதுமைல தனிமைன்னு சொல்வாங்களே...."

"அப்படியெல்லாம் நினைச்சுக்காதீங்க சார். நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்." என்றார் ராமநாதன். அதென்னமோ தெரியவில்லை அவர்கள் குடிவந்த நாள் முதலாகவே அப்படியொரு ஒட்டுதலாகிவிட்டது. 'நாங்க இருக்கோம்' என்பது எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் மிகப்பெரிய வார்த்தைகள். அது தரும் அர்த்தமும் பலமும் மிக சுகமானவை. நடராஜன் எப்போதும் மனிதர்கள் முக்கியம் என்று நினைக்கிற ஜாதி.

அந்த நினைப்புக்குக் குந்தகமாய் ஒரு மாசம் முன்பே நந்து போன் பண்ணிச் சொல்லிவிட்டான். 'வீட்டைக் காலி பண்ணி வைய்ங்கப்பா!! நான் வர்ரேன்'

சான்ஸே இல்லை.

நந்து அவன் பெண்டாட்டியுடன் சென்னை திரும்புகிறான். அவனுக்கு தனியாக நிச்சயம் ஒரு வீடு வேண்டும். அதற்காக ராமநாதனை காலி பண்ணச் சொல்வது நிச்சயம் தன்னால் முடியவே முடியாதென்று உறுதியாகத் தோன்றியது நடராஜனுக்கு. இதை நந்துவிடம் லேசாய் கோடி காட்டியபோது அவன் "பல வருஷம் ஒரே ஆளைக் குடிவெச்சா இதுதான் பிரச்சனை. நமக்குத் தேவைப்படும்போது நகர்த்தறது கஷ்டம்" என்று டெலிபோனிலேயே சலித்துக் கொண்டான். அதற்கப்புறம் அதுபற்றி அவனிடம் பேசவில்லை. அவன் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று பிரச்சனையை தள்ளிப் போட்டுவிட்டார். சரசுவுக்கும் அவர்களைக் காலி பண்ணச்சொல்வதில் நடராஜனைப் போலவே உடன்பாடு இல்லைதான். ஒரு முறை ராமநாதனிடம் எதற்கும் சொல்லி வைக்கலாமா என்று நடராஜன் படியிறங்கிக் கீழே போனபோது நினைத்தபடி தொண்டைக்குள்ளேயிருந்து வார்த்தைகள் வரவில்லை. பேச வந்த விஷயத்தின் சாரத்தை அப்படியே விழுங்கிவிட்டு "என்.டி.டி.வி பாத்தீங்களா.. நேத்து ஆந்திராவில.. " என்று எங்கேயோ திசை திரும்பிவிட்டு வந்துவிட்டார். சொன்னால் புரிந்து கொண்டு ராமநாதன் ஒரு வேளை வேறு வீடு பார்த்துக்கொண்டு போகக்கூடும். ஆனால் வேண்டாம் என்று தோன்றிவிட்டது. இப்படியொரு பிணைப்பை ஒரு வார்த்தையில் அறுத்துப் போட்டுவிட விரும்பவில்லை. நந்துவிற்கு இந்த விஷயம் தெரியவே தெரியாது. அவன் வந்தவுடன் உடனே அந்த வீடு காலியாயிருக்கும் அல்லது காலியாகிவிடும் என்கிற நினைப்போடுதான் வந்திருப்பான். அவனிடம் தன் முடிவை இன்றிரவுக்குள் உடனடியாகத் தெரிவித்துவிட வேண்டியது அவசியம்.

ராமநாதனை காலிபண்ணச் சொல்லப் போவதில்லை.

நந்தனம் சிக்னலில் டாக்ஸி நிற்கும்போது நந்து மறுபடி ஆரம்பித்தான்.. "அப்பா ராமநாதன்கிட்ட நிஜமாகவே அந்த வீட்டைக் காலி பண்ணச் சொல்லிட்டீங்களா?"

நடராஜனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. வந்ததிலிருந்து இதையே கேட்கிறான். ஒழுங்கான பதில் தெரியாமல் இவன் விடமாட்டான் போலிருக்கிறது. நடராஜன் மெல்லத் திரும்பி சரசுவைப் பார்த்தார். அவள் 'நீங்களாச்சு உங்க பையனாச்சு' என்பது போல் சட்டென்று ஜன்னல் குளிர்காற்றுப் பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். நடராஜன் தீர்மானித்தார். இப்போதே அவனிடம் விஷயத்தைச் சொல்லிவிடலாம். அவன் என்ன நினைத்துக்கொண்டாலும் சரி! அவர் மெல்லத் தொண்டையை செறுமிவிட்டு வாயைத் திறக்கமுற்படும்போது நந்து இடைமறித்துச் சொன்னான்.

"ஏற்கனவே சொல்லியிருந்தீங்கன்னா.. அவங்களைக் காலி பண்ணவேண்டாம்னு சொல்லிருங்கப்பா.. நாம மேல் போர்ஷன்ல ஒண்ணாவே இருந்துக்கலாம்!!."

நடராஜன் நம்பாமல் திரும்பி அவனைப் பார்த்தார். "ஏண்டா திடீர்னு..."

"இல்லப்பா.. நாங்க கெளஹாத்தில குடியிருந்தோமில்லையா? அந்த வீட்டுச் சொந்தக்காரர் நாங்க காலி பண்ணிட்டுக் கிளம்பும்போது சட்டுன்னு அழுதுட்டார்ப்பா!. வி மிஸ் யூ. மிஸ் யூன்னு நூறுதரம் சொன்னார். வெறும் மூணு வருஷப் பழக்கம்தான். மனசெல்லாம் ரொம்பக் கஷ்டமாயிருச்சு. ட்ரெயின்ல வரும்போது ஒரே யோசனை. ராமநாதன் நம்ம வீட்ல எத்தனையோ வருஷமா குடியிருக்கறவர். நம்ம குடும்பத்தோட ரொம்ப அட்டாச் ஆன குடும்பம். அவங்களை திடீர்னு காலி பண்ணச் சொன்னா அவங்களுக்கு எப்படியிருக்கும்? அது உங்களுக்கும் அம்மாவுக்கும்கூட ரொம்ப கஷ்டமாயிருக்கும்னு தெரியும். வீடு ஈஸியா கிடைக்கும். இந்த மாதிரி மனுஷங்க கிடைக்கறதுதான்ப்பா கஷ்டம். அவங்க நம்ம வீட்டிலயே குடியிருக்கட்டுமே! என்ன சொல்றீங்க?" என்றான்.