அன்பார்ந்த வாடிக்கையாளர்களே!

"A customer is the most important visitor on our premises. he is not dependent on us. We are dependent on him. He is not an interruption in our work. He is the purpose of it. He is not an outsider in our business. He is part of it. We are not doing him a favor by serving him. He is doing us a favor by giving us an opportunity to do so." -Mahatma Gandhi

வாடிக்கையாளர் என்பவர் ஒவ்வொரு ஸ்தாபனத்துக்கும் எவ்வளவு முக்கியம், ஒவ்வொரு வியாபாரத்திலும் அவர் எப்படி ஜீவநாடியாக இருக்கிறார் என்று மஹாத்மா காந்தி சொன்னதாக மேற்கண்ட வாசகங்கள் தாங்கிய போர்டு நிறைய இடங்களில் தொங்குவதைப் பார்த்திருப்பீர்கள். கஸ்டமர் சர்வீஸ் என்று ஆங்கிலத்தில் நளினமாகச் சொல்லப்படுகிற 'வாடிக்கையாளர் சேவை' குறித்து தொங்க விடப்பட்டிருக்கிற அந்த போர்டை எத்தனை பேர் முழுசாகப் படித்திருக்கிறார்கள்? எத்தனை பேர் அதை வாடிக்கையாளர் சேவையின் முக்கியத்தை உணர்ந்து நடந்துகொள்கிறார்கள் என்று நான் அடிக்கடி யோசிப்பதற்கான நேரங்கள் எனக்கு எப்படியோ அடிக்கடி வாய்த்துவிடுகின்றன.

கொஞ்ச நாள் முன்பு சென்னையிலுள்ள ஒரு பிரபலமான காமிரா ஷோரூமில் ஒரு காமிரா வாங்கினேன். கையில் காமிரா கிடைத்த மகிழ்ச்சியில் சில உலகப் புகழ்பெற்ற புகைப்படங்களை எடுத்துத் தள்ளிவிட்டு ஃபிலிமைக் கழுவி பிரிண்ட் போட்டுப் பார்த்தால் எல்லா போட்டோவிலும் இடது பக்கம் கொஞ்சம் கருப்பாக தீற்றல். போதாதற்கு ஃப்ளாஷூம் வேலை செய்யவில்லை. என்னடா இது என்று அதை எடுத்துக்கொண்டு வாங்கின கடைக்கே போனால், 'காமிரா வாரண்டியில் இருக்கிறது, ஆகவே சரி செய்ய முயற்சிக்கிறோம் இல்லையேல் வேறு புதிய காமிரா தருவோம்' என்றாள் அங்கொரு பெண். புதிய காமிரா பற்றிய அறிவிப்பில் நான் அகமகிழ்ந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் என் மனக் கஷ்டத்தை எடுத்துச்சொன்னேன். வாங்கி கொஞ்ச நாட்கள்கூட ஆகாத நிலையில் இப்படி பழுதடைந்து போனது வருத்தத்தைத் தருவதாகவும், கூடிய விரைவில் அது நல்ல முறையில் திரும்பக் கிடைத்தால் நல்லது என்றும் தெரிவித்தேன். அதற்கு அவள் சளைக்காமல் சர்வீஸ் ஆள் லீவில் போயிருப்பதாகவும் ஒரு பத்துநாள் ஆகும் என்றும் தெரிவித்தாள். அது சீக்கிரம் சரி செய்யப்பட்டு திரும்பக் கிடைப்பதன் தேவையை நான் அவளிடம் மறுபடி மறுபடி வலியுறுத்தினேன். உணர்ச்சியே இல்லாமல் எல்லாம் கேட்டுவிட்டு "ஏன் சார் இப்படி சலிச்சுக்கறீங்க!" என்றாள். எனக்கு வந்த கோபத்தில் பற்களை நறநறத்துவிட்டு அவளிடம் அவளுக்கு உறைக்கிற மாதிரி என்னமோ சொன்னேன். வார்த்தைகள் சரியாக நினைவில்லை.

காமிராவைக் கொடுத்துவிட்டு வந்து ஒரு மாதம் ஆகிறது. நான்கு முறை போன் பண்ணியபோதும் ஏனோ தானோவென்று பதில் வந்தது. இன்றைக்கு மறுபடி போன் பண்ணி கொஞ்சம் கடுமையாய் பேசினதுக்குப் பலனாக ஒழுங்காக பதில் வந்தாலும் காமராவின் நிலைபற்றி இன்னும் தெளிவாய் அறிந்துகொள்ள முடியவில்லை. பயங்கரக் கோபம் வருகிறது. ஆனால் என்னை மாதிரி இறைந்து பேசாத, அதிகாரம் செய்யத் தெரியாத, அமைதியாய் பேசுகிற ஆட்களுக்கு இதுதான் கதிபோலும். என் குணத்திற்கு நேர் மாறான நண்பர்கள் இரண்டு பேர் இருக்கிறார்கள். அவர்களுடன் நான் போன ஒரு சில இடங்களில் அவர்கள் நடந்து கொண்ட முறையால் நான் பல முறை வியந்திருக்கிறேன். அதிலும் ஒரு நண்பன் அவன் வீட்டில் மாட்ட ஏர்கண்டிஷனிங் மெஷின் வாங்க ஒரு பிரபல ஷோரூமுக்குப் போய் அடித்த கூத்து இருக்கிறதே! ஷோரூமில், ஏ.ஸி சாதனத்தை நாளைக்கு வீட்டில் டெலிவரி செய்துவிடுவோம், இப்போது இந்த டெலிவரி ரசீதில் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டுப் போங்கள் என்றார்கள். அதில் Goods received in good condition என்றிருப்பதைப் பார்த்து அதில் கையெழுத்துப் போட மறுத்துவிட்டான் நண்பன். பொருளைப் பெற்றுக் கொள்ளாமலே எப்படி பெற்றுக்கொண்டதாக கையெழுத்திட முடியும் என்பது அவன் வாதம். அதுவும் in good condition!! நியாயந்தான். கடைசியில் அவன்தான் ஜெயித்தான். அடுத்தநாள் ஏ.ஸி கிடைத்தபிறகு அதன் ஜில்லிப்பில் கையெழுத்திட்டுக் கொடுத்தான். நானானால் என்ன செய்திருப்பேன் என்று நீங்கள் சுலபத்தில் ஊகித்துக்கொள்ளலாம். நம்பிக்கையே வாழ்க்கை! நம்பிக் கெடுவதும் கூட!

மேற்கண்ட அனுபவங்களுக்கு நேர் மாறான அனுபவங்களும் ஏற்படுகின்றன. வீட்டுக்கு அருகாமையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு பிரபல காலணியகத்திற்கு ஷூ லேஸ் வாங்கப் போனேன். அங்கிருந்த கல்லாப் பெரியவர் புன்னகையுடன் சலாம் போட்டு வரவேற்று என்னிடமிருந்து ஒரு கணிசமான வியாபாரத்தை எதிர்பார்த்து நிற்க நான் தயக்கத்துடன் ஷூ லேஸை மட்டும் ஆறே ஆறு ரூபாய்க்கு வாங்கினேன். திரும்பும்போது இன்னொரு சலாம் போட்டு மறுபடியும் வாங்க சார் என்றார். அவர் சொன்ன வாய் முகூர்த்தம் மறுபடி அங்கே போக வேண்டியதாகப் போயிற்று. காரணம் இருக்கிறது. வாங்கிப் போன ஷூ லேஸை ஷூவின் துளைகளில் நுழைத்தெடுத்துவிட்டு கடைசியில் ஒரு நாட் போடுவோமில்லையா? அதற்கு நீளம் போதாமல் ரொம்ப்ப்ப்ப சின்னதாக இருந்தது. நுனியை விரலிலேயே பிடிக்க முடியவில்லை. ஆறு ரூபாய் வேஸ்ட். மறுபடியும் அதே கடைக்குப் போனபோது அதே பெரியவர். அதே புன்னகை. அதே சலாம். விஷயத்தைச் சொல்லிவிட்டு வேறு ஷூ லேஸ் பெரிதாக வாங்கிக்கொண்டேன். (மறுபடி எட்டு ரூபாய் கொடுத்துத்தான்). அப்போது அவர் ஒரு கூப்பனை என் கையில் கொடுத்து, உங்கள் குழந்தைக்கான ஸ்கூல் ஷூவை ஏப்ரலில் இங்கே வாங்கினால் ஒரு பரிசு கொடுப்பதுடன், அதிர்ஷ்டக்குலுக்கலிலும் உங்களுக்கு பரிசு கிடைக்க வாய்ப்புண்டு என்றும் மேலும் உங்கள் குழந்தை பரீட்சையில் முதல் மார்க்கில் தேற கடவுளிடம் வேண்டிக்கொள்வோம் என்றும் தெரிவித்தார். கடைசி வாக்கியம் நிஜமாகவே மனதை நெகிழ்த்துவதாக இருந்தது. சும்மா சொல்கிறார் என்று தோன்றவில்லை. அவர் நேர்மையாகவே அதைப் பண்ணுகிறவராகவும் இருக்கலாம். எனக்கு மறுபடி அந்தக் கடைக்குப் வரவேண்டும் என்று அங்கே நின்றுகொண்டிருக்கும்போதே தோன்றியது. எதுவும் வாங்காவிட்டாலும் குறைந்தபட்சம் அந்தப் பெரியவரைப் பார்ப்பதற்காவது. இது வாடிக்கையாளனின் ஒரு வகையான உணர்வு நிலை.

இதே மாதிரி என் இரு சக்கர வாகனத்துக்கு இன்ஸ்யூரன்ஸ் கட்டப் போனபோதும்கூட நடந்தது. ஒரு அரசு விடுமுறைக்கு முந்தைய தினம் என்பதால் அதிகம் பணியாட்கள் வராத நிலையில் அந்த இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் மேலாளரே இறங்கிவந்து நான் உட்பட ஒரு சில வாடிக்கையாளர்களை மிக மரியாதையுடன் நடத்தி கேஷியர் முதல் டெஸ்பாட்ச் வரை எல்லா வேலைகளையும் தாமாகவே செய்து முடித்து பாலிஸியை கையில் தந்தார். அவருடைய பொறுமையும் பணிவும், கடமையுணர்வும் என்னால் இன்னும் மறக்க முடியவில்லை.

ஒரு சில பெரிய நிறுவனங்கள் வாடிக்கையாளர் சேவையின் உன்னதத்தை உணர்ந்து செயல்பட்டு பெரிய அளவில் உயர்ந்த கதைகளும் உண்டு. எங்கே பணியாட்கள் வாடிக்கையாளர்களிடம் பணிவாகவும், சேவை மனப்பான்மையுடனும் நடந்து கொள்கிறார்களோ அங்கே வாடிக்கையாளர்கள் திரும்பத் திரும்ப வருவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. எந்த சந்தர்ப்பத்தை முன்னிட்டும் வாடிக்கையாயர்கள் முகம் சுழித்தாலோ, கோபப்பட்டாலோ, பொறுமையிழந்து திரும்பிப் போனாலோ அங்கே அந்த நிறுவனத்தில் கண்ணுக்குத் தெரியாத சரிவு ஏற்பட்டுவிடுகிறது. இதை நிறைய வளர்ந்த நிறுவனங்கள் தெளிவாய் தெரிந்து வைத்துள்ளன. உதாரணத்திற்கு என் அப்பா ஒரு மளிகைக் கடையில் வாங்கிவந்த ஒரு 7'O Clock ப்ளேடு பாக்கெட்டில் ஒரு ப்ளேடுகூட இல்லாமல் காலிப் பெட்டியாய் இருப்பதைப் பார்த்து (25 ப்ளேடுகள் அதில் இருக்கவேண்டும்) அந்த நிறுவனத்திற்கு தன் பணவிரய விஷயத்தை ஒரு கார்டில் எழுதிப் போட்டார். ஒரு வாரம் கழித்து 7'O Clock தயாரிப்பு நிறுவன மார்க்கெட்டிங் மேலாளரிடமிருந்து மன்னிப்புக் கோரி ஒரு கடிதமும் இரு ப்ளேடு பாக்கெட்டுகளும் வந்து சேர்ந்தன. அப்பா புல்லரித்துப் போனார். இந்த மாதிரி விஷயங்கள் அத்தி பூத்தாற்போல் என்றைக்காவது நடப்பதால் புல்லரிப்பதில் ஆச்சரியமொன்றுமில்லை.

ஒரு சில இடங்களில் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக என்னென்னமோ செய்கிறார்கள். பரிசுக் கூப்பன் கொடுக்கிறார்கள். பொங்கல் கொடுக்கிறார்கள். குடும்பத்தினர் பிறந்த நாட்களைக் குறித்து வைத்துக்கொண்டு வாழ்த்துக் கார்டு அனுப்புகிறார்கள். கஸ்டமர் உட்காரும்போது நாற்காலியை பிருஷ்டத்திற்கு சரியாக நகர்த்திக்கொடுக்கிறார்கள். குழந்தைகளுக்கு சாக்லேட் அல்லது பலூன் கொடுக்கிறார்கள். வாசல் கண்ணாடிக் கதவை நமக்காகத் திறந்து மூடுகிறார்கள். எங்களிடம் சர்வீஸ் பண்ணின உங்கள் டூ வீலர் எப்படி ஓடுகிறது என்று போன் பண்ணி விசாரிக்கிறது ஒரு சர்வீஸ் சென்டர். மே ஐ ஹெல்ப் யூ சார் என்று கேட்டு பாங்குகளில் டெபாசிட் ஃபார்ம் நிரப்பித் தருகிறார்கள். இது எல்லாமே மகிழ்ச்சியைத் தருகின்றன.

ஈஃதிப்படியிருக்க ஒரு பெரிய துணிக்கடையில் ஏராளமான பேரை ஆங்காங்கே நிறுத்திவைத்து சேவை என்கிற பெயரில் ரொம்ப சோதிப்பதும் உண்டு. அப்படி இப்படி திரும்பினால் போதும் இரண்டு பேர் ஓடி வந்து நின்று என்ன சார் வேணும் என்பார்கள். கண்ணைக்கூட சிமிட்ட முடியாது. உடனே பக்கத்தில் ஓடோடி வந்து நின்று விழுந்து விழுந்து கவனித்து நம் அசைவுகளின் சுதந்திரத்தைப் பறித்துவிடுவார்கள். ஓவர் சர்வீஸூம் திகட்டிவிடும் என்பதை அவர்கள் புரிந்து கொள்வது நல்லது. ஒரு பிரபல தனியார் செல்லுலார் கம்பெனியில் நாம் மொபைல் இணைப்பு எடுத்திருக்கும்போது நாம் சொல்கிற குறைகளுக்கெல்லாம் செவி சாய்க்காமல், நாம் கனெக்ஷன் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்தால் போதும் பத்துப் பதினைந்து பிரதிநிதிகள் வீட்டுக்கும் ஆபிஸூக்கும் படையெடுப்பார்கள். ஏன் சார் கட் பண்றீங்க என்று பதறுவார்கள். போதாததற்கு இணைப்பை நாம் சரண்டர் லெட்டரில் எழுதிக்கொடுத்த தேதியில் துண்டிக்காமல் ஒரு நாலைந்து மாதங்களுக்கு பாராமுகமாக இருப்பதுடன், நாம் பேசாத, உபயோகிக்காத இணைப்புக்கெல்லாம் பில் அனுப்பிக்க்க்க்கொண்ண்டே இருப்பார்கள். சரியான டார்ச்சர் அது! இத்தனைக்கும் தனியாக 'வாடிக்கையாளர் சேவைப் பிரிவு" ஒன்றை இந்த நிறுவனம் வைத்திருக்கிறது.

ஒரு நாள் காலை அவசரமாய் ஏதோ வாங்க ஒரு மளிகைக் கடைக்குப் போனபோது அங்கேயிருந்த வேலையாள் என்னைக் கொஞ்சம் காத்திருக்கச் சொன்னார். விசாரித்தபோது முதலாளி பூஜை பண்ணிக்கொண்டிருப்பதாகவும் அது முடிந்த பிறகே வியாபாரம் என்றார். நான்தான் முதல் போணியாம். அவர் பூஜையை செய்வதைப் பார்த்தால் அன்றைக்கெல்லாம் முடியாதுபோல் தோன்றியது. அத்தனை விலாவாரியாக பூஜை நடந்துகொண்டிருந்தது. எனக்கு காத்திருக்க நேரமில்லையாதலால் வேறு கடைக்குப் போய்விட்டேன். திரும்பும்போது ஒரே யோசனை. முதலாளி பூஜை செய்வது நல்ல விஷயம். ஆனால் எதற்காக? வாடிக்கையாளர் கடையைத் தேடி வரவேண்டுமென்பதற்காக. முழுசாய் முன்னால் வந்து நின்ற வாடிக்கையாளனும் அவர் பண்ணின பூஜையில் திரும்பிப்போய்விட்டானென்றால் அப்புறம் எதற்காக அதையெல்லாம் செய்கிறார் என்று கேள்வி எழுகிறது. செய்யும் தொழிலே தெய்வம். கஸ்டமரே கடவுள் என்று அவருக்கு ஏன் புரியவில்லை என்று நினைத்தேன். ஒரு வேளை என்னைப் போன்றவனுக்கு சில்லறை வியாபாரமல்லாமல் மொத்த விற்பனை, மெகா சேல் என்று பெரிய ப்ளான் எல்லாம் கைகூடவேண்டுமென்று வேண்டுதலோ என்னவோ!

கோடி கோடியாய் சம்பாதித்தும் கடைக்குள் வந்து நிற்பவன் வேர்த்து வடிய நின்றிருக்கும்போது மின் விசிறிகூட போடாதவனும் இருக்கிறான். காற்றே நுழைய முடியாத இடத்தில் புறாக்கூண்டு மாதிரி கடையை வைத்துக்கொண்டு நாம் போனதும் கூல்ட்ரிங் சாப்பிடறீங்களா சார் என்று கேட்பவனும் இருக்கிறான். வாங்குவது பதினைந்து பைசா தீப்பெட்டியானாலும் பின்னதுதுதான் வாடிக்கையாளனுக்கு மன நிறைவைத் தருகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

அதெல்லாம் இருக்கட்டும். நான் இன்று வாங்கி வந்த ஷூ லேஸ் முடிச்சுப்போடத் தேவையான நீளத்தைவிட ரொம்ப அதிகமாக இருந்து ஷூக்கு வெளியே ரொம்பத் தொங்குகிறது. எனக்கு மட்டும்தான் இப்படி வாய்க்கிறதா என்ன? என்னமோ போங்கள்! நானொரு அப்பாவி "கஷ்ட"மர்தான்.

கலையும் கலை சார்ந்த இடமும்

சென்னை கவின் கலைக் கல்லூரிக்கு (Madras Collage of Fine Arts) எதையாவது சாக்கிட்டு ஒரு முறையாவது போய்வர வேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசையாக இருந்தது. பின்னே ஓவியத்தின்பால் கொஞ்சம் ஆர்வம் வைத்திருக்கிற நான், அதுவும் சென்னையிலேயே இருந்துகொண்டு இதைப் பண்ணாமலிருந்தால் எப்படி?

போன வாரம் அந்த வாய்ப்புக் கிடைத்தது. ஆபிஸில் திடீரென கரெண்ட் கட்டாகி சும்மா உட்கார்ந்திருந்த நேரத்தில் போகலாமா என்று பாஸ் கூப்பிட்டார். ஆனால் சும்மா அல்ல. சந்தோஷ் என்கிற ஒரு நண்பன் கவின்கலைக் கல்லூரி வளாகத்திற்குள் வைத்திருந்த புகைப்படக் கண்காட்சியை பார்ப்பதற்கு.

நான் முன்பே எதிர்பார்த்திருந்த மாதிரி இல்லாமல் வேறு விதமான தோற்றத்தோடு இருந்தது கவின் கலைக் கல்லூரி. ஒரு குறுகலான கேட்டைத் தாண்டிப் போனால் அதற்கப்புறம் அதிகம் நடக்கிறதுக்கு வகையில்லாமல் உடனடியாக கட்டிடங்கள் வந்துவிடுகின்றன. சந்தோஷின் புகைப்படக் கண்காட்சி வாசலை ஒட்டின ஒரு ஹாலிலேயே இருந்தது. நல்ல கான்ட்ராஸ்ட்டுடன் கூடிய அழகிய புகைப்பட முயற்சிகள். இன்னும் உழைத்தால் பெரிய அளவில் வர வாய்ப்பு உண்டு.

கல்லூரி வளாகத்தினுள் நிறைய மரங்கள். மரங்கள் உதிர்த்த ஏராளமான சருகுகள். வளாகம் சுத்தம் செய்யப்பட்டு ஒரு மாமாங்கம் இருக்கும் என்றாலும் அதுவே அந்த சூழ்நிலைக்கு ஒரு இயற்கை அழகுபோல் பொருந்தியிருக்கிறது. மரங்களுக்கு நடுவில் ஆங்காங்கே முழுசாகவும், சிதைந்தும் நிறைந்து கிடக்கிற சிலைகள். எல்லாம் மாணவர்களாலோ அல்லது ஆசிரியர்களாலோ உருவாக்கப்பட்டவை. பல கோணங்களில் பல போஸ்களில் ஒரு முதியவர் சிலை ஆங்காங்கே கண்ணில் பட்டது. அந்தப் பெரியவர் அந்த கல்லூரிக்கு மாடலாக வேலை செய்கிறவராம். ரொம்பத் தள்ளாடி பலவீனமாக நடந்துவரும் அந்தப் பெரியவர் ஓய்வு நேரங்களில் எப்போதும் ஏதாவது குறுகிய இடத்திலேயே உடலைச் சுருக்கிக் கொண்டு உட்கார்ந்து டீ குடிப்பாராம். ஆனால் மாடலிங் க்ளாஸ் நடக்கும்போது ஆயிரம் வாட்ஸ் வெளிச்சத்தில் ஒரே கோணத்தில் அசையாமல் மூன்று நான்கு மணி நேரம்கூட உட்கார்ந்திருப்பாராம்.

மரத்தடியில் அரட்டையடித்தபடி மாணவர்களில் அதிகம்பேர் பெண்பிள்ளை மாதிரி நடுமுதுகு வரை தலைமுடி வளர்த்தியிருந்தார்கள். சிலபேர் குடுமி அல்லது கூந்தலை நன்றாகச் வாரி ரப்பர் பேண்ட் போட்டிருந்தார்கள். (போனி டெய்ல்?) அதிக பட்ச உடை ஜீன்ஸ் மற்றும் பனியனாக இருந்தது. தாங்கள் கலைஞர்கள் என்றோ மற்றவர்களிடமிருந்து ஏதோ ஒன்றில் வித்தியாசப்படுகிறோம் என்கிற செய்தி அறிவிப்பு அவர்களின் நடை, உடை, பாவனைகளில் இருக்கிறது. எனக்குத் தெரிந்த ஓவிய நண்பர்கள் ஓரிருவர்கூட அவ்வாறேதான் இருக்கின்றனர். நிறைய தலைமுடியும், மீசையும் தாடியும் எப்போதும் கலையின் அடையாளச் சின்னம் போலும்.

இன்றைக்கு க்ளாஸ் எதுவும் இல்லையா என்று சந்தோஷிடம் கேட்டபோது, இரண்டாம் வருடம் முதல் அப்படியொன்றும் கட்டாயமாய் மாணவர்களை உட்கார வைத்து வகுப்பெடுக்கிற வழக்கம் கிடையாது என்றும், கல்லூரி நேரங்களில் புற உலகிற்குப் போய் தாமாகவே பார்த்தும், கேட்டும் பயிற்சி செய்தும் கற்றுக்கொள்கிற சுதந்திரம் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறதென்றும் சொன்னான்.

அப்புறம் கொஞ்சமாய் அவர்கள் கவின்கலை உலகின் கூடங்களை ஒரு வலம் வந்தோம். முதலில் சிலைகள் உருவாகிற இடம். மான், மனிதன் என ஏகப்பட்ட ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மோல்டுகள். க்ளே மாடலிங் பண்ணுவதற்கு நிறைய களிமண் கொட்டப்பட்டிருந்தது. செய்கிற சிலைகளுக்கு சப்போர்ட்டாக வளைக்கப்பட்ட கம்பிகள் ஆங்காங்கே. குவிந்து கிடக்கிற மோல்டுகள். எல்லாக் கூடங்களும் இயற்கையாய் அதனதன் லட்சண சொரூபத்துடன் பழமை கவிந்து கிடக்கின்றன. நீங்கள் சினிமாவில் பார்த்து மகிழ்ந்திருக்கும் வில்லன்களின் அல்லது தீவிரவாதிகளின் கொட்டடி போன்ற தோற்றத்துடனேயே எல்லாக் கூடங்களும், அவற்றிற்குப் போகிற வழிகளும் இருந்தன என்றாலும் அப்படி இயல்பாய், இயற்கையாய் இருப்பதே அந்த கலை சார்ந்த இடத்தின் மதிப்பையும் சிருஷ்டிப்புத் தன்மையும் கூட்டுகிற விதமாய்த் தோன்றியது. எத்தனையெத்தனையோ பெரிய கலைஞர்களையும், ஓவியர்களையும் உருவாக்கிய இடமல்லவா அது.

திரும்பிய பக்கமெல்லாம் சுவர்களில் (ஒரு இடம் விடாமல்) ஓவியக் கிறுக்கல்கள். க்ளேஸ், களிமண், ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் இன்ன பிற பொருட்கள் உபயோகித்து ஆங்காங்கே கூடங்களின் மூலைகளில் சில மாணவர்கள் சின்னச் சின்னதாய் சிலை முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். ஒரு க்ளே மாடலிங் கூடத்திலிருந்து சாவதானமாய் வெளிவந்த நாயைப் பார்த்து நான் புருவம் உயர்த்தியபோது, அது நாய் அல்ல எங்களின் மாடல் என்று பதில் வந்தது. உள்ளே மாணவர் ஒருவர் விதவிதமாக ஒரே நாயை பல போஸில் களிமண்ணால் சின்னச் சின்னதாக சிலையாகப் பண்ணிக்கொண்டிருந்தார். படுத்திருக்கிற மாதிரி, தலையை சொறிவது மாதிரி, சோம்பல் முறிப்பது மாதிரி, நின்று முறைப்பது மாதிரி என நிறைய. அந்த நாயை ஐந்து மாதமாக ஸ்டடி செய்து பண்ணினதாம். Every dog has a day என்று இதைத்தான் சொல்கிறார்களா?

நேரமாகிவிட்டது என்பதால் ஓவியக் கூடங்களை இன்னொரு நாள் வந்து பார்க்கலாம் என்று ஆபிஸூக்குத் திரும்பி வந்துவிட்டோம். திரும்பும்போது வாழ்க்கையில் ஏதோ ஒரு பெரிய விஷயம் கிடைக்காமல் போனமாதிரி ஒரு இழப்பின் பரிதவிப்பு. இன்னும் அணையாமல் மனதின் ஏதோ ஒரு மூலையில் சுடராய் எரிந்துகொண்டிருக்கிற ஓவியத் தாகம்தான் அன்றைய தினம் என்னை அங்கே கொண்டு போயிற்று எனலாம். கதைகளும் நாவல்களும் படிக்க ஆரம்பித்தது மாதிரியே ஓவியம் வரைய ஆரம்பித்ததும் கூட ஆறாங்க்ளாஸில்தான் என்று சொல்லலாம். முதலில் ஒரு மான் வரைந்து கலரடித்தது ஞாபகம் இருக்கிறது. அப்படியே கிறுக்கிக்கொண்டிருந்ததில் சித்திரம் கைப்பழக்கம் ஆகியிருந்ததால் என்ஜினியரிங் படிக்கும்போது ட்ராயிங் க்ளாஸில் வரும் ஆர்தோக்ராஃபிக் ப்ரொஜக்ஷன், ஐஸோமெட்ரிக் ப்ரொஜக்ஷன் எல்லாம் என்னை அத்தனை பயமுறுத்தியிருக்கவில்லை. அரஸ், மணியம் செல்வம் போன்றோரின் ஓவியங்களையெல்லாம் பார்த்து அச்சு அசலாக வரைகிற என் கைத்திறனை மூக்கின் மேல் விரல்வைத்து வியக்கிறவர்களுக்கு அத்தனை ஓவிய ஞானம் இல்லாமலிருந்ததால் தப்பித்தேன். கிடைத்த இடத்திலெல்லாம் தவறாமல் பெண் படம் வரைகிற பழக்கத்தை அப்பாகூட எப்போதும் வன்மையாகக் கண்டித்தவண்ணம் இருந்தார். அப்புறம் எந்த வீட்டுக்குக் குடிபோனாலும் அடுப்புக் கரி கொண்டு சமையலறை சுவரில் தத்ரூபமாய் ஒரு கண் வரைந்து வைப்பேன். (பெண்ணின் கண்தான்). மனதில் இலக்கிய ஆர்வம் கவிந்தபிறகு நண்பர்கள் சேர்ந்து உருவாக்கிய கையெழுத்துப் பத்திரிக்கையில் நானே ஆஸ்தான ஓவியன்.

பின்னாளில் அட்வர்டைஸிங் துறைக்கு வந்ததும் அப்புறம் க்ராபிக்ஸ் மல்டிமீடியா என்று தாவினதுக்கும் என் ஓவியப் பயிற்சிகள்(!) நிச்சயம் துணை புரிந்தன எனலாம். இருந்தாலும் முறையாக ஓவியம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று மனதின் ஓரத்தில் லேசாய் ஒரு ஆசை இருந்தது. முடியவில்லை. இப்போதெல்லாம் என்றைக்காவது ஒரு நாள் பென்ஸிலையும் பேப்பரையும் எடுத்து வைத்துக்கொண்டு ஒரு அரைமணி நேரம் கிறுக்கினாலே ஜாஸ்தி. அத்தோடு என் ஓவிய தாகம் அணைந்துவிடுகிறது.

வாய்ப்பு அமைந்தால் எனக்கென்று ஒரு தனி அறை அமைத்துக்கொண்டு, அறை மத்தியில் (அல்லது மூலையில்) ஓவியம் வரைவதற்கான ஈஸல், பேலட்டுகள், தூரிகைகள், வாட்டர்கலர்கள், ஆயில் பெயிண்டிங் கலர்கள், கொஞ்சம் கேன்வாஸ், லின்ஸீட் ஆயில் இன்னபிறவற்றை கடைபரப்பிக் கொண்டு கொஞ்ச நாள் வாழவேண்டும் என்று என்னிடம் கனவொன்று இருக்கிறது. அங்கே நான் எதுவும் வரையாவிட்டாலும் பரவாயில்லை.