மாயாஜாலம்

எங்களுக்கு வில்சன் என்றொரு நண்பர் இருந்தார். கவனிக்கவும். 'எங்களுக்கு' என்று குறிப்பிட்டிருக்கிறேன். காரணம் எனக்கு மட்டுமே அவர் நண்பரல்ல என்பதுதான். எங்கள் செட்டான ஒரு ஐந்தாறு பேருக்கும் பொதுவான நண்பர் அவர். சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன் நாங்கள் வசித்துக் கொண்டிருந்த காலனிக்கு சற்றுத் தள்ளி நெடுஞ்சாலையில் அவர் வீடிருந்தது. வில்சன் எங்களையெல்லாம் விட பல வயது மூத்தவர் என்பதால் நாங்கள் எல்லோரும் அவரை அண்ணா என்றுதான் அழைப்போம். அவரும் ஒரு அளவிடற்கரிய ஸ்நேகத்துடன் 'தம்பிகளா..' என்று எங்களை அழைப்பது நன்றாய் இருக்கும். அடர்த்தியாய் தாடிவிட்டுக்கொண்டு, சற்றே உயரமாய் கொஞ்சம் மீடியம் உடம்புடன் இருப்பார். சற்றே பிசிறடித்த ஆனால் கம்பீரமான குரல் அவருடையது.

வில்சன் ஒரு மேஜிக் நிபுணர். கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட சுற்றுவட்டாரத்தில் அப்போதே 250-க்கும் மேற்பட்ட மேடைகளில் அவர் மேஜிக் நிகழ்ச்சி பண்ணியிருந்தார். நீங்கள் வழக்கமாய் மேஜிக் ஷோ-க்களில் கண்டு ரசித்திருக்கும் தொப்பிக்குள்ளிருந்து புறா எடுப்பது. சீட்டுக் கட்டுகளைக் கொண்டு வித்தை காண்பிப்பது, வாய்க்குள்ளிருந்து கோழி முட்டைகளை எடுத்துக்கொண்டேயிருப்பது, நியூஸ்பேப்பரை விரித்துக் காண்பித்துப் பின் அதை மடக்கி அதனுள்ளிருந்து தண்ணீர் கொட்டவைப்பது போன்ற வழக்கமான ஐட்டங்களோடு பெட்டிக்குள் ஆளை நிற்கவைத்து ரம்பம் வைத்து அறுத்து நாலைந்து துண்டாக்கிவிட்டுப் பின் ஆளை மறுபடி உயிரோடு(!) கொண்டு வருதல் போன்ற மெகா மாயாஜாலங்களையும் மேடைகளில் செய்வார். நிகழ்ச்சிகளின்போது கோட்டு சூட்டெல்லாம் போட்டு தலையில் நீளத் தொப்பி, கையில் மந்திரக்கோல் என்று ஃப்ரொப்ஷனலாகத்தான் தோன்றுவார். என்னதான் எங்கள் நண்பர் என்றாலும் எவ்வளவோ மன்றாடியும் அவர் பண்ணுகிற மேஜிக் ரகசியங்களைப் பற்றி மூச்சுவிட மாட்டார். போனால் போகிறதென்று ஒரு நாலணா காசை முழங்கையில் தேய்த்துத் தேய்த்து எப்படி மறைய வைப்பது என்கிற ட்ரிக்கை மட்டும் சொல்லிக் கொடுத்தார். வெகு சுலபமாக நான் கற்றுக் கொண்ட அந்த வித்தை குழந்தைகளிடம்தான் செல்லுபடியாகும். பெரியவர்கள் புத்திசாலிகளாக இருந்தால் கண்டுபிடித்துவிடுவார்கள். காலனி முக்கில் நாங்கள் கூடிப் பேசிக்கொண்டிருக்கிற இடத்துக்கு அவர் வந்து நின்றால் சடக்கென்று ஏதாவது எளிய வித்தை செய்து காட்டி அசத்துவார். உதாரணம் : என் சட்டைப் பாக்கெட்டில் கைவிட்டு பத்து ரூபாய்த்தாள் எடுத்து அதை நான்காக மடித்து வலது கை ஆள் காட்டி விரலுக்கும், நடு விரலுக்கும் இடையே வைத்து விஸ்ஸ்க் என்று இடதுகை உள்ளங்கையில் தட்டினார். மறுநொடி ரூபாய் நோட்டு அவரது இரண்டு கைகளிலும் இருக்காது. பத்து ரூபாயைத் திருப்பித் தரவேண்டுமானால் என் அப்பாவிடம் சொல்லி அவரிடம் டி.வி கேபிள் கனெக்ஷன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். ஆம். அவர் அந்த ஏரியாவுக்கு கேபிள் கனெக்ஷன் கொடுக்கிற வேலையையும் பார்த்து வந்தார்.

கேபிள் கனெக்ஷன் என்றால் அப்போதெல்லாம் தூர்தர்ஷன் தவிர எதுவும் கிடையாது. ஆனால் அதில் வெள்ளிக் கிழமை எட்டு மணிக்குப் போடுகிற ஒலியும் ஒளியும் பார்ப்பதற்கே எல்லார் வீட்டிலும் அப்படியொரு முன்னேற்பாடு நடக்கும். வில்சன் ஒவ்வொரு மதியமும் சினிமா வீடியோ கேசட்டுகளை வைத்து அவர் வீட்டிலிருந்தே ஒளிபரப்ப அது காலனி முழுக்க எல்லோருடைய டி.வியிலும் தெரிகிற டெக்னலாஜியை வியந்துகொண்டிருந்தோம். ஒரு தடவை கார்த்திக் படமான இரட்டைக் குழல் துப்பாக்கி என்கிற படத்தை கேபிளில் ஒளிபரப்பி காலனி தாய்மார்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட சம்பவமும் உண்டு. அப்போது சன் டிவியெல்லாம் கிடையாது. ஆனால் வில்சன் சன் டி.வி-யின் (ராஜ்?) முதல் முயற்சியான 'பூமாலை' என்கிற கேசட்டை போட்டு அவ்வப்போது ஒளிபரப்புவார். நாட்டு நடப்புகள், இசை நிகழ்ச்சிகள், காமெடி ஷோ, சினிமா பாட்டு என்று கலவையாய் மாதமொருமுறை தொகுத்து கேசட் வடிவில் வெளியிடப்பட்டுக் கொண்டிருந்ததுதான் பூமாலை என்று பெயரிடப்பட்ட அந்த கேசட். அதுதவிர வில்சன் புண்ணியத்தில் தூர்தர்ஷனில் ஞாயிறு மதியம் 1.00 மணிக்கு NFDC படங்களான எல்லா ஆர்ட் ஃபிலிம்களையும் உட்கார்ந்து பார்ப்போம். ஒன்றும் புரியாவிட்டாலும்.

வில்சன் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் விழா மேடைகளில் தோன்றி மைக் பிடித்து கம்பீரமாய்ப் பேசுவார். பேசுகிற விஷயங்களில் நிச்சயம் சமூக அக்கறை தொனிக்கும். அவர் பொள்ளாச்சியில் 'மனிதம் சேவை மையம்' என்கிற சமுக அமைப்புக்குத் தலைவராக இருந்தார். அவ்வப்போது நகரில் ரத்ததான முகாம், இலவச கண் பரிசோதனை முகாம் நடத்துவது, ஆதிவாசிகள் மற்றும் மலைவாழ் மக்களுக்கு உடைகள் சேகரித்துக் கொடுப்பது போன்ற காரியங்களில் தீவிரமாய் ஈடுபட்டிருந்தார். நாங்களெல்லோரும்கூட மனிதத்தில் உறுப்பினராகி அவருடன் சேர்ந்து சுற்றி சமுக சேவை செய்துகொண்டிருந்தோம். அவ்வப்போது ஆட்டோவில் மைக் வைத்து அறிவித்துக்கொண்டு சுற்றியிருக்கிற காலனிகளில் வீடுவீடாகப் போய் உடைகள் சேகரித்து ஆதிவாசிகளுக்கு கொண்டுபோய் வழங்குவோம். தவிர மனிதம் வெளியிட்டுக்கொண்டிருந்த "மனிதம் செய்திகள்" என்கிற சிற்றிதழில்(?) சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சமுக ஆக்கப்பணிகள் பற்றிய விவரங்கள் போக மீதி இருந்த இடத்தில் நாங்கள் கதை, கட்டுரை, கவிதைகள், படித்ததில் பிடித்தது, ஜோக்ஸ் என்று எதையாவது எழுதுவோம். சரசுராம் இதற்கு ஆசிரியராய் இருந்தார். ராஜீவ் காந்தி இறந்த சமயத்தில் அவர் எழுதின உருக்கமான கட்டுரையை முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் D.R. கார்த்திகேயன்கூட படித்துப் பாராட்டினார்.

ஒரு தடவை சாயங்காலம் ஐந்து மணிக்கு வில்சன் வேகமாய் வந்து நெகமம் அருகில் சேரிபாளையம் என்கிற ஊரில் நடக்கிற நவராத்திரி கலை விழாவில் அன்றைக்கு அவரின் மேஜிக் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதன்கூடவே நீங்களெல்லாம் சேர்ந்து சைடில் கலை நிகழ்ச்சி செய்கிறீர்களா என்று கேட்டார். ஏழு மணிக்கு ப்ரோக்ராம் என்றார். இரண்டு மணி நேரத்திக்குள் என்னத்தைத் தயார் பண்ணுவதென்று எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் அரை மனதாய் சரி என்று தலையாட்டிவிட்டு பரபரவென்று இரண்டு மணி நேரத்துக்குள் டாக்டர் கடீஸ்குமார் என்கிற காமெடி நாடகத்தை நான் மற்றும் நண்பர்களான ராம் (சரசுராம்), மீனாட்சி சுந்தரம் உட்கார்ந்து எழுதி முடித்துவிட்டோம். ஒரு சில நண்பர்களை வைத்து கடகடவென்று ஏழு மணிக்குள் ரிகர்சலும் பார்த்து வில்சனுடன் வேனில் கிளம்பிவிட்டோம். நான் அதில் ஒரு நோயாளி கேரக்டர். கூடவே நரம் தினசரி கேட்கிற ரேடியோ செய்திகளை நகைச்சுவையாய்த் திரித்து நான் அதை வாசிப்பது என்றும் முடிவு செய்து, வண்டி சேரிபாளையம் போய் சேர்வதற்குள் ராம் ஒரு முழு வெள்ளைத்தாளில் அதை இரண்டு பக்கத்துக்கு எழுதியும் கொடுத்துவிட்டார். அதோடு 'டிஸ்கோ டான்ஸ் ஆடிக் கலக்குகிறேன்' என்று தானாக முன்வந்த மஞ்சு என்ற பொடியனும் வேனில் ஜிகினா உடை சகிதம் தொற்றிக் கொண்டான்.

மின்நகர் கீதம் குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் இன்னும் சில நொடிகளில் ஆரம்பம் என்று மைக்கில் அமர்க்களமாய் அறிவித்துவிட்டு ஆரம்பித்தோம். அன்றைக்கு சேரி பாளையத்தை ஒரு வழி பண்ணிவிட்டோம் என்றுதான் சொல்லவேண்டும். மஞ்சு என்கிற அந்தப் பையன் அப்போது சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்த ஹாசன் ஜகாங்கீரின் "ஹவா ஹவா" பாட்டுக்கு அட்டகாசமாய் டான்ஸ் ஆடி பின்னி எடுத்துவிட்டான். அவசரகதியில் பண்ணின இந்த ஏற்பாடுக்கு அத்தனை வரவேற்பா என்று சத்தியமாய் நம்பமுடியவில்லை எங்களால். கொஞ்சம் கற்றுக்குட்டித்தனமாகவே இருந்தாலும் எங்கள் நாடகத்தையும், நியூஸையும் ரசித்துப் பார்த்த / கேட்ட சேரிபாளையப் பொதுமக்கள் சிரித்த சிரிப்பு இன்னும் மனதுக்குள் பத்திரமாய் இருக்கிறது. வில்சனுக்கோ ரொம்ப சந்தோஷம். இதற்கு நடுவே இப்போது நினைத்தாலும் நாங்கள் விழுந்து விழுந்து சிரிக்க நேரிட்ட சில வெளியே சொல்ல முடியாத சம்பவங்களும் நடந்தன.

அதற்கப்புறம் வில்சன் மேஜிக் ஷோ போகிற இடத்துக்கெல்லாம் எங்களைக் கூப்பிட ஆரம்பித்தார். நாங்கள் பிறகு நான்கைந்து மேடைகளில் வில்சன் தயவால் இன்னும் சில அயிட்டங்கள் சேர்த்து எங்கள் கலைத்திறமையைக் காட்டினோம். பிறகு பொள்ளாச்சி காந்தி மண்டபத்தில் நடைபெற்ற புத்தாண்டுக் கலைநிகழ்ச்சியில் நண்பனொருவன் டயலாக்கை முழுங்கிவிட்டு பேந்தப் பேந்த முழிக்க, ஆடியன்ஸிடமிருந்து விசிலும் கூக்குரலும் வர அத்தோடு எங்கள் கலைப் பயணம் முடிவுற்றது. இந்தக் கூத்துக்கெல்லாம் இப்போது இணையத்தில் எழுதும் எழுத்தாளர் ஒருவரும் சாட்சியாக இருந்தார்.

சுகமான நினைவுகளை ஞாபகப்படுத்தும் பழைய உருப்படிகளை எப்போதும் பத்திரப்படுத்தி வைக்க நினைக்கும் என்னிடம் 'மனிதம் செய்திகளின்' ஒரு சில பிரதிகளும், ஏழெட்டு மேடைகளில் நான் வாசித்த நகைச்சுவை செய்திகளின் பிரதியும் இருக்கின்றன. இரண்டு வருடங்களுக்குமுன் நான் பணியாற்றிய கம்பெனியின் "கெட்-டுகதர்" ஹோட்டல் ப்ரீஸில் நடந்தபோது செய்தி வாசித்ததில் கொஞ்சமாய் சிரித்துவைத்தார்கள். விரும்பிக் கேட்கிற நேயர்களுக்கு Footer-ல் காப்பிரைட் சித்ரன் என்று போட்டு அந்த செய்திகள் ரகசிய ஈமெயிலில் அனுப்பிவைக்கப்படும். செய்திகள் வாசிப்பது ரகுநாதவர்ம விஜயபுர சேதுபதி கணேச சுந்தரபாண்டிய குலோத்துங்க வீர வெங்கடேஷ்வர யோகி ஜகந்நாத சூர்யகாந்திப் பிரகாசராவ்....

நண்பர்கள் வேலை நிமித்தம் ஆளுக்கொரு திசைக்குப் பிரிந்தபிறகு வில்சனைப் சந்திக்கமுடியவில்லை. விசாரித்தபோது அவர் சொல்லாமல் கொள்ளாமல் வேறு ஏதோ ஊருக்கு குடும்பத்துடன் காலிபண்ணிவிட்டுப் போய்விட்டதாகப் பின் தகவல் கிடைத்தது. அவரிருக்கிற இடம் யாருக்கும் தெரியவில்லை. மனிதம் சேவை மையம் இப்போது இல்லை. வில்சனிடமிருந்து கற்றுக்கொண்ட ஒரே ஒரு நாலணா மேஜிக்கை இப்போது சமயம் கிடைக்கும் போதெல்லாம் என் பையனுக்கு செய்து காண்பித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த மாதிரி நட்புகள் என்னிடமிருந்து காணாமல் போகிறதா அல்லது நான்தான் அவர்களிடமிருந்து காணாமல் போய்விடுகிறேனா என்று எப்போதுமே எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. ஏதாவது மேஜிக் பண்ணி அவர்களை என் முன்னால் வரவழைத்துவிட முடியாதென்பது தெரியும். தேடினால் நிச்சயம் கிடைப்பார்கள்.

பாம்பாட்டம்

பாம்புகளைப் பற்றி இப்போது எழுதுவதன் அவசியம் சுமார் ஒண்ணரை மாதத்துக்கு முன் நிகழ்ந்தது. ஆரண்யம் இதழில் முன்பு சாரு நிவேதிதா எழுதிய "பாம்புக் கதைகளு'-க்கும்" இதற்கும் சம்பந்தமில்லையென்று முன்பே தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நாள் பட்டப்பகல் 1.00 மணிக்கு என் அம்மாவை பாம்பு கடித்துவிட்டதாக பதற்றமாய் கோவையிலிருந்து டெலிபோன் கால் வந்தது. கடித்தது (கொத்தியது?) நல்ல பாம்பு என்றும் அம்மா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், சினிமா டயலாக் மாதிரி 'எதையுமே 48 மணி நேரம் கழித்துத்தான் சொல்ல முடியும்' என்று டாக்டர் சொன்னதாகவும் தகவல்கள் கிடைத்தன. செல்போன் கண்டுபிடித்தவன் இருக்கிற திசைக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு கொட்டுவாயில் ரயிலேறி கோவை விரைந்தேன். வழியெல்லாம் காதிலிருந்து செல்போனை எடுக்காமல் நிலைமையை விசாரித்துக்கொண்டே சென்றேன். அன்றைக்கு நான் அடைந்த பதற்றமும் வேதனையும் இதற்குமுன் பட்டதில்லை. ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் போய்ப் பார்த்தபோது அம்மாவுக்கு ஆக்ஸிஜன் மாஸ்க், ECG மற்றும் இன்னபிற ஒயர்கள் இணைக்கப்பட்டு பார்க்கவே ரொம்ப பயமாய் இருந்தது. அது நல்லபாம்பில்லை. கெட்ட பாம்பு என்று நினைத்துக்கொண்டேன். பிறகு தெரிந்தது, அது கொஞ்சூண்டு நல்ல பாம்புதான் என்று. ஏனெனில் 4 நாட்கள் அவசர சிகிச்சைப் பிரிவின் கவனிப்பில் அம்மா நலம் என்று அறிக்கைகள் வந்தன. பாம்பு கடித்த (வலது கை நடுவிரல்) இடத்துக்கு மேலே மணிக்கட்டில் உடனடியாக அப்பா இறுக்கமாக கட்டுப் போட்டுவிட்டதும், கடித்த பாம்பை உடனே கொன்று கையோடு டாக்டரிடம் கொண்டுவந்து காட்டியதும், ரூபாய் 3500 மதிப்புள்ள Anti-Venom என்கிற 10 ml ஊசி உடனடியாக போடப்பட்டதும் + மற்ற சிகிச்சைகளும் அம்மாவை காப்பாற்றின.

பிறகு தனி ரூமில் அனுமதிக்கப்பட்டு உறவினர்கள், நண்பர்கள் வந்து பார்க்க அனுமதிக்கப்பட்டதும் நிறைய பாம்புக் கதைகளைக் கேள்விப்பட நேர்ந்தது. பக்கத்து ரூமில் சிறுநீரகக் கோளாறுக்கான ஆபரேஷனுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவரின் அம்மாவை 30 வருடங்களுக்குமுன் பைரானி என்கிற பாம்பு கடித்து தீவிர சிகிச்சைக்குப்பின் தப்பிப் பிழைத்தாராம். அந்தப் பாம்பு அவரது காலைக் கடித்தவாக்கிலேயே ஒரு புரண்டு புரண்டு பின் கடித்த இடத்தில் தன் வாலால் நச் நச் என்று நான்கு அடி அடித்ததாகச் சொன்னார். இதே மாதிரி என் நண்பனொருவன் தனது ஏழாவது வயதில் தன் இடுப்புயரமுள்ள ராஜ நாகம் காலில் ஒரு போடு போட்டதில் ரொம்ப அபாய நிலைக்குப் போய் ஏழு நாட்கள் கோமாவில் இருந்துவிட்டு டாக்டர்கள் முயற்சியில் இரண்டாம் ஜென்மம் எடுத்ததாகவும் தெரிவித்தான். இன்னும் அவனது வலது காலில் கொதித்த எண்ணையைக் கொட்டியது போன்ற தழும்பு விகாரமாய் உள்ளது. பாம்பு சீற்றமாய்க் கொத்தின கொத்தில் பாதம் அப்படியே ஒரு பந்துமாதிரி சுருண்டுபோய் விட்டதாகவும், பிறகு தொடையிலிருந்து சதையை எடுத்து பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணியிருப்பதாகவும் சொன்னான். கேட்கவே பயங்கரமாக இருந்தது.

அம்மாவுக்கான சிகிச்சையின்போது சில விஷயங்கள் தெரிந்துகொண்டேன். இரண்டு மணிக்கொருதரம் ப்ளீடிங் டைம், க்ளாட்டிங் டைம் என்று கடிபட்டவரின் ரத்தம் எடுத்துப் பரிசோதிக்கிறார்கள். ரத்தத்தின் உறைநிலையில் ஏதாவது மாற்றம் நேரிடின் கொஞ்சம் பிரச்சனைதான். இந்தமாதிரி கடிவாங்குபவர்களுக்கு இரண்டு விதமான விளைவுகள் ஏற்படுமாம். ஒன்று உடனடி விளைவு. இன்னொன்று பின் விளைவு. உடனடி விளைவானது விஷத்தால் நரம்பு மண்டலம், நுரையீரல்கள் போன்றவை பாதிக்கப்பட்டு மரணம் சம்பவித்தல். பின் விளைவு சில நாட்களுக்குப் பிறகு இதயம், சிறுநீரகம் போன்றவை பாதிப்புக்குள்ளாதல். எல்லாவற்றையும் நன்கு பரிசோதனை செய்த பிறகே வீட்டுக்கு அனுப்புகிறார்கள்.

பாம்புக்கடிக்கான சிகிச்சை அரசு மருத்துவமனைகளில்தான் சரியாக அளிக்கப்படுகிறது என்று ஒரு தரப்பு விவரம் சொல்லி பயமுறுத்தியது. சரியான விஷமுறிவு மருந்துகளை அவர்கள்தான் வைத்திருப்பார்களாம். தனியார் மருத்துவமனைகளில் சில சமயம் அவைகள் கிடைக்காது என்றும் சொன்னார்கள். அம்மா அனுமதிக்கப்பட்டிருந்து ஒரு தனியார் மருத்துவமனை என்பதால் லேசாய் கவலையாயிருந்தது. ஆனால் எதுவும் பிரச்சினைகளின்றி குறிப்பிட்ட மருந்துகள் சரியான சமயத்துக்கு கிடைத்தன என்றுதான் சொல்ல வேண்டும்.

சிறுவயதில் அம்மா வாழ்ந்து வளர்ந்த வீடு பாம்புகள் அதிகம் நடமாடும் ஒரு பெரிய தோட்டத்துக்கு நடுவேதான் இருந்தது. பள்ளி விடுமுறையின் போது அங்கே போகும்போது பெரிய முற்றத்தில் போட்டிருக்கிற மலர்க் கோலத்தைக் கலைத்தபடி சாரைப் பாம்புகள் ஊர்ந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன். மேலும் வீட்டின் உள்ளே மரப்படிகள் கொண்டு போய்ச் சேர்க்கும் மச்சின் மேல் ஏறி எட்டிப் பார்த்தால் இஸ்.. இஸ்.. என்று பாம்புகள் சீறுகிற சப்தம் கேட்கும். சாரைப் பாம்பில் ஆரம்பித்து கட்டுவிரியன், நாகப் பாம்பு, கூழைப்பாம்பு என்று அத்தனை வெரைட்டிகளும் மனிதர்களோடு சேர்ந்து புழங்குகிற இடம் அது. அங்கேயெல்லாம் தப்பித்து செடிகளும், மரங்களும் அருகிப்போன நகரத்தில் ஒரு கான்கிரீட் காலனியில் வந்து கடிவாங்க நேரிட்டதை என்ன சொல்ல?

கோவையில் ஒரு பெரிய மருத்துவமனை மருந்தகத்தில் பணிபுரியும் என் உறவினர் 'இதெல்லாம் சின்ன கேஸுங்க. உங்களுக்கு முப்பதாயிரம் ரூபாய் செலவுல ட்ரீட்மெண்ட் முடிஞ்சிருச்சு. எங்க ஆஸ்பத்திரில Anti-Venom எல்லாம் பெட்டி பெட்டியா வாங்கிட்டுப் போவாங்க" என்று அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். விஸிட்டராக வந்த இன்னொருவர் தந்த தகவல்: ஒரு 35 வயது இளைஞன் உடலில் எத்தனை புரோட்டின் இருக்குமோ அத்தனை புரோட்டினை பாம்பு கொத்தும்போது மனித உடலினுள் செலுத்துகிறது. இம்மாதிரி செலுத்தப்படும் கூடுதல் புரோட்டின்தான் அதன் பல்லில் இருக்கும் விஷமாக மனிதர்களை கொல்கிறது என்றார். உண்மையா தெரியவில்லை. அதே மாதிரி ஆளைக் கடித்த பாம்பு மயக்கமடைந்து கடித்த இடத்திலேயே கிடக்குமாம். ஏனென்றால் நமது ரத்தம் அதற்கு விஷமாம். இதையும் யாராவது தெளிவுபடுத்தவேண்டும். இதற்குமுன் நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு குறுக்கு வழியாக இருளடைந்த ஒரு சோளக்காடு, தென்னந்தோப்பைத் தாண்டிச் செல்லவேண்டும். ராத்திரி பதினொரு மணிக்கு பயமின்றி கையில் வைத்திருக்கிற ஒரு பென் டார்ச்சுடன் கீழே குனிந்தபடி ஒற்றையடிப் பாதையில் பளபளப்பாக நகரும் பாம்புகளைத் தவிர்த்து நடந்த அனுபவங்களை இப்போது அசைபோட்டால் உடல் குலுங்குகிறது.

கையில் கடிபட்ட இடத்தில் காயம் இன்னும் ஆறாத நிலையில் சிறிது ஓய்வெடுத்துக்கொள்ளலாம் என்று சென்னை வந்த அம்மாவை கிண்டி பாம்புப் பண்ணைக்கு அழைத்துச் சென்றேன். பாம்புகளைப் பற்றி நேஷனல் ஜியாகரஃபி, அனிமல் ப்ளானட், டிஸ்கவரி சேனல்கள் கற்றுக் கொடுத்ததுபோக மீதி விஷயங்களை அங்கே போனபோது தெரிந்துகொள்ள முடிந்தது. பாம்புகள் பற்றி நம்பப்படும் மூட நம்பிக்கைகளுக்கெல்லாம் விளக்கம் அளித்து போர்டு வைத்திருந்தார்கள். சில உதாரணங்கள்:

ஒரு பாம்பை அடித்தால் இன்னொரு பாம்பு பழிவாங்கும் - நிச்சயமாக இல்லை.
கொம்பேறி மூர்க்கன் ஆளைக் கடித்தபிறகு மரத்தின் மேலேறி பிணம் எரிகிறவரை பார்க்கும். - தவறு. கொ.மூர்க்கனுக்கு விஷம் கிடையாது.
பாம்பு விஷத்தை மந்திரம் ஜெபித்து இறக்கிவிடலாம். - நிச்சயமாய் முடியாது.
பறக்கும் பாம்பென்று ஒரு வெரைட்டி கிடையவே கிடையாது.

பாம்பு கடித்ததினால் ஏற்படும் மரணங்களில் 75 சதவீதம் அதிர்ச்சியால் ஏற்படுவதாம். தகுந்த முதலுதவி, பாதிக்கப்பட்டவர் நம்பிக்கையிழக்காமல் பார்த்துக்கொள்ளுதல், பதற்றமடையாமல் இருத்தல் போன்றவற்றின் மூலம் அதிகபட்சம் காப்பாற்றிவிடமுடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சில இடங்களில் கடிபட்டவரைப் படுக்க வைத்து மந்திரம் ஜெபிப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். என் நண்பரின் அண்ணனுடைய நண்பனின் அக்காவுக்கு வயலில் பாம்பு கடித்து ஒரு முழு இரவும் படுக்கவைத்து மந்திரம் சொல்லிக்கொண்டிருந்ததில் காலையில் அவர் இறந்துபோனது நினைவுக்கு வந்தது. அதுதவிர கோவை மாவட்டம் சோமனூர் அருகே இருக்கும் வாழைத்தோட்ட ஐயன் கோவிலுக்குப் போய் வருவதன் மூலம் பாம்பு தோஷங்களிலிருந்து விடுபட முடியும் என்றும் நம்பிக்கை நிலவுகிறது. அம்மாவை பாம்பு கடிப்பதற்கு ஒரு வாரம் முன்பு நானும் என் நான்கு வயது வாண்டும் இரவு பத்தரைக்கு பரமபதம் விளையாண்டு கொண்டிருந்ததுகூட காரணமாயிருக்கலாம் என்று என் மனைவிக்கு லேசான சந்தேகம்கூட இருக்கிறது.

அம்மா வந்திருந்தபோது போரடிக்கிறது என்று காலையில் டி.வி போட்டபோது முதலில் திரையில் தெரிந்தது சூர்யா டி.வியில் பாம்புகள் பற்றின ஒரு நிகழ்ச்சி. 'நம்மள் தம்மில்' என்று ஸ்ரீகண்டன் நாயர் என்பவர் நடத்துவது. அதில் 25 தடவைகள் அரணை (பாப்பராணி) கடித்த பெண்மணி, 32 தடவை பாம்புக்கடி வாங்கிய ஒரு நடுத்தர வயது பெண்மணி, ஒரு பாம்பு சாஸ்திர நிபுணர், பாம்புக்கடி மருத்துவ நிபுணர், 100க்கும் மேற்பட்ட விஷப் பாம்புகளைப் பிடித்து வளர்த்துகிற ஒரு வீரப்பன் மீசைக்காரர். கொஞ்சம் ஆடியன்ஸ் இவர்களை வைத்து ஒரு நிகழ்ச்சி. அந்தப் பெண்மணி சென்ற இடமெல்லாம் பாம்புகள் தேடிவந்து கடித்துவிட்டுப் போகிறதாம். அதற்கு விளக்கம் கேட்டதற்கு மருத்துவர் அந்தப் பெண்மணியின் உடலிலிருந்து வருகிற மணம் இப்படி பாம்புகளை ஈர்த்து அழைக்கிற தன்மையைப் பெற்றிருக்கலாம் என்று சந்தேகமாய் பதில் சொன்னார். தவிர கேள்வி கேட்டுவிட்டு யாராவது பதில் சொல்வதற்குள் அவர்களை ஓவர்லேப் அல்லது ஓவர்டேக் பண்ணி பேச ஆரம்பிக்கிற ஸ்ரீகண்டன் நாயரின் குணத்தால் - பாம்புக்கு காது கிடையாது, மகுடி இசை அதற்கு கேட்காது. மகுடியின் அசைவுக்கு ஏற்ப தலையசைப்பது அது இசைக்கு ஆடுவதுபோல் தோன்றுகிறது; நில அதிர்வுகளை வைத்தே ஆள் நெருங்குவதைக் தெரிந்துகொள்கிறது - என்கிற அடிப்படை விஷயங்களைத் தவிர எக்ஸ்பர்டுகள் தெரிவிக்க நினைத்த பாம்பு விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியாமல் போய்விட்டது.

பாம்புகள் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவதற்கு இணையம் சிறந்த இடமென்று தெரியும். இன்னும் உள்ளே போகவில்லை. என் பயோ டேட்டாவில் 'ஹாபி' என்பதற்கு நேராக பாம்பு ஆராய்ச்சி என்று போடாலாமா என்றும் யோசனை. மேற்படி நான் கேள்விப்பட நேர்ந்த விஷயங்களில் ஏதேனும் தவறிருப்பினும் கூடுதல் விவரம் தெரிந்து வைத்திருப்பவர்கள் சுட்டிக் காட்டவும்.

எப்படியோ நான் இப்போதெல்லாம் தரையில் ஒரு மண்புழு ஊர்ந்தால்கூட சந்தேகமாய்ப் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். பின்னே இருக்காதா?