Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

இந்தியா சுடர் – கல்விக்காக ஏற்றப்பட்ட தீபம்

ஒரு மழைநாளில் ஒரு இனிய மெல்லிசை கேட்பதைவிடவும், சரவணபவனில் சாம்பார் வடையை ரசித்து ருசித்துச் சாப்பிடுவதைவிடவும், கவிழ்ந்து படுத்து ஒரு புதினம் படிப்பதைவிடவும், ஒரு சிறுகதையோ வலைப்பதிவோ எழுதுவதைவிடவும் ஒரு மகிழ்ச்சியும் நிறைவும் திருப்தியும் நேற்று கிடைத்தது.

ராயபுரத்திலும், தண்டையார்ப்பேட்டையிலும் ஆக இரு அரசினர் குழந்தைகள் காப்பக மாணவர்களுக்கு எங்கள் அலுவலக நண்பர்கள் நோட்டுப்புத்தகங்கள், பென்சில், பேனா போன்றவைகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இதை ஏற்பாடு செய்திருந்தது இந்தியா சுடர் எனும் NGO. நண்பர்களும் நானும் ஆக ஒரு சுபயோக சுபதினத்தில் இந்தியா சுடரில் உறுப்பினரான கையோடு உருப்படியாய் ஏதாவது செய்ய வேண்டுமென்று யோசித்ததின் விளைவாக மேற்கண்ட நிகழ்ச்சி.

இந்தியா சுடர் - ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனம். இந்தியா முழுவதும் உள்ள வசதியற்ற மாணவர்களுக்கு கல்விக்கான உதவிகளைச் செய்வதற்காக இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம். இதன் நிறுவனர்கள் உதய் மற்றும் சற்குணன் மற்றும் சில எனெர்ஜிடிக் இளைஞர்கள் தன்னலமற்ற நோக்கோடு தனது நேரத்தையும் பணத்தையும் செலவு செய்யும் இவர்களை ஒரு வரியில் பாராட்டுவதென்பதெல்லாம் இயலாத காரியம். அவ்வளவு செய்கிறார்கள்.

இந்தியா சுடரின் உறுப்பினர்கள் அனைவருமே ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே அவ்வப்போது ஓய்வு நாட்களில் தங்களால் இயன்ற அளவு உதவிகளைச் செய்து வருபவர்கள்தான். அது சிறு துரும்பாயினும் இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் வசதியற்ற ஏதோ ஒரு சிறுவனோ அல்லது ஒரு சிறுமியோ கல்வி கிடைக்கப்பெற்று அவர்கள் அதன் மூலம் தன் வாழ்க்கையை புதுப்பித்துக் கொள்ளமுடிகிறதென்பது அருமையான விஷயம். மீனைத் தருவதற்கு பதில் மீன் பிடிக்கக் கற்றுத் தருதல்.

நலிந்த நிலையிலிருக்கும் அரசு பள்ளிகளை, குழந்தைகள் இல்லங்களைத் தேடியறிந்து அங்கே உள்ள மாணவர்களுக்குத் கல்விக்குத் தேவையானதை இந்தியா சுடர் செய்கிறது. ஆசிரியர் இல்லாத பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமித்துக் கொடுக்கிறது. கஷ்டப்படும் குடும்பங்களில் வாழும் மேற்படிப்புக்கு வசதியில்லாத மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்கிறது. இதன் பணிகள் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் இந்தியா முழுக்க விரவி நிற்கிறது. இதுவரை என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்தியா சுடரின் தளத்திற்குச் சென்று அறிந்து கொள்ளலாம்.

சென்னையில் ராயபுரம் மற்றும் தண்டையார்ப்பேட்டை பகுதியில் உள்ள இல்லங்களில் சிறார்களைச் சந்தித்தது ஒரு வித்தியாசமான அனுபவம். இவர்களில் சிலர் பெற்றோர்களை இழந்தவர்கள். சில பேர் வீட்டை விட்டு எதற்காகவோ ஓடிவந்து பின் பெற்றோருடன் சேரமுடியாதவர்கள். சில பேருக்குப் பெற்றோர் இருந்தும் வறுமை காரணமாக தங்களால் பார்த்துக்கொள்ள முடியவில்லையென இந்த இல்லங்களில் விடப்பட்டவர்கள்.

ஒரு ஐநூறு குழந்தைகளுக்காவது இந்த வருடப் படிப்பிற்காக நோட்டுப்புத்தகங்கள் வழங்கவேண்டும் என்பது எங்கள் திட்டமாக இருந்தது. ஆளுக்கு ஐம்பது அல்லது நூறு ரூபாய் கொடுத்தால் போதும் என்று ஆரம்பித்து நாங்கள் நினைத்ததை விடவும் அதிக தொகை சேர்ந்தது. அலுவலக நண்பர்கள் தாராளமாக நன்கொடை தந்து உதவினார்கள். இதில் ஒவ்வொரு துளியும் சரியாகத் திட்டமிடப்பட்டு சென்னையிலுள்ள ஆறு அரசினர் மாணவர் இல்லங்களுக்கு நோட்டுப் புத்தகங்களாக சரியான முறையில் பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது. இதை உற்சாகமாக முன்னின்று செயல்படுத்தியதில் நண்பர்கள் ஜான், தீனதயாளன், கார்த்திக், இங்கர்சால், பாலசரஸ்வதி, ப்ரேம், செந்தில், இந்தியா சுடர் தளபதிகள் உதய் மற்றும் சற்குணன் மற்றும் அனைத்து அலுவலக நண்பர்களும் இந்த நிகழ்வை சாத்தியமாக்குவதற்குக் காரணமாக இருந்தார்கள்.

மாணவர்களில் ஒரு சில பேர், தாங்கள் நன்றாகப் படித்து நிறைய மதிப்பெண்கள் வாங்கும் பட்சத்தில் மேற்படிப்புக்கு உதவுவீர்களா என்று கேட்டது நல்ல விஷயமாகப் பட்டது. படிப்பார்வம் கொண்ட இவர்களுக்கு நிச்சயம் உதவி செய்யலாம். எந்த வசதியுமில்லாமல் படித்து பத்தாம் வகுப்பில் 84% எடுத்த பையனொருவனைப் சந்தித்தோம். இன்னொரு சிறுவன் இந்த இல்லத்தில் தங்கி படித்துக்கொண்டே, வெளியில் வேலைக்குப் போய் அதில் கிடைத்த சொற்பப் பணத்தில் ஆயிரம் ரூபாயை வீட்டுக்கும், ஆயிரம் ரூபாயை அந்த இல்லத்திற்கு நன்கொடையாகவும் அளித்திருக்கிறான். சின்ன உருவம். பெரிய மனது.

இந்தியா சுடருக்கு வந்து சேரும் நன்கொடைத் தொகைகளின் ஒவ்வொரு பைசாவும் வழங்கியவர் பெயரோடு அதன் இணைய தளத்தில் கணக்கு வழக்குகளோடு வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, அஸ்ஸாம் என்று வகை பிரித்து இதுவரை செய்து முடித்த ப்ராஜக்டுகளின் விவரங்களும் இருக்கின்றன. தன்னை இன்னும் விரிவாக்கும் பொருட்டு இணைய சாத்தியங்களான ட்விட்டர், ஃபேஸ்புக், பிகாஸா வெப், ஆர்குட் என்று சகலத்திலும் இணைந்துள்ளதுடன், உறுப்பினர்களுக்கு இதன் அனைத்து செயல்பாடுகளும், தகவல்களும் யாஹூ குழுமம் மூலமாக உடனடியாகத் தெரிவிக்கப்படுகின்றன.

நம் பாக்கெட்டிலிருந்து வெளிப்படும் வெறும் ஒரு நூறு ரூபாயானது மற்றவர் வாழ்வில் எவ்வளவு பெரிய வித்தியாசத்தை அளிக்கிறதென்று நேற்று மனப்பூர்வமாய் உணர்ந்துகொண்டேன்.

மேலும் விவரங்களை இந்தியா சுடரின் தளத்திலிருந்து அறியலாம் :
http://www.indiasudar.org
http://picasaweb.google.com/indiasudar

இதுதான்டா செக்ஸ்!!

தெலுங்கு இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் ஷகிலா நடித்து வெளிவரவிருக்கும் சூடான படுக்கையறைக் காட்சிகள் நிறைந்த "பரங்கி மலை - ஜோதி" வகை திரைப்படம் என்று தலைப்பைப் பார்த்து ஊகித்தவர்கள் மன்னிக்கவும். சமீப நாட்களாய் எங்கு திரும்பினாலும் 'செக்ஸ் கல்வி' என்கிற வார்த்தை காதில் விழுந்து கொண்டிருக்கிறது. "30 வயதுக்கு மேல் குழந்தை பெற்..." என்று குங்குமம் பத்திரிக்கை நீட்டி முழக்கி ஜனங்களை மிரட்டியதை எதிர்த்தோ ஆதரித்தோ ஆங்காங்கே வலைப்பதிவுகள், பத்திரிக்கைச் செய்திகள் தோன்றியதும் அவற்றில் செக்ஸ் கல்வி பற்றி லேசாய் விவாதிக்கப்பட்டதும் இதை எழுத வந்ததற்குக் காரணமாக வைத்துக்கொள்கிறேன். ஏராளமான இளம் பருவத்து வாலிப/வாலிபி அன்பர்கள் செக்ஸ் பற்றின முறையான அறிவு இல்லாததால் தவறான அபிப்பிராயங்களுடன் மனப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிற இந்தச் சூழ்நிலையில் இதைப் பற்றி ஒவ்வொருவருமே எழுதுதல் அவசியம் என்று தோன்றுகிறது.

நீட்டி முழக்காமல் நேரடியாய் விஷயத்துக்கு வரட்டுமா? இந்த செக்ஸ் கல்வியாகப்பட்டது மாணவ மணிகளுக்கு எந்த பருவத்திலிருந்து எப்படி ஆரம்பிக்க வேண்டும், எதையெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்கிற யோசனையில் மொட்டை மாடியில் நான் சிகரெட் பிடிக்காமலே தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தபோது எனக்கு உதித்த சில உபாயங்கள், கருத்துக்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது.

நான் எப்படி 'எல்லாம்' கற்றுக் கொண்டேன் என்பதை சந்தடி சாக்கில் சொல்லிவிடுகிறேன். நான் ஞானம் பெறுவதற்கு போதி மரமாக விளங்கியது உடுமலைப் பேட்டையிலுள்ள ஒரு லைப்ரரி. இருங்கள்! எங்கே கிளம்பிவிட்டீர்கள்! இன்றைக்கு லைப்ரரி லீவு! தெரியாதா? அந்த லைப்ரரியினுள் புத்தக அலமாரிச் சந்துக்குள் புகுந்து நடந்தால் அந்தக் கோடியில் ஒருவராலும் சீண்டப்படாத 'மருத்துவம்' என்கிற பகுதி இருந்தது. கிட்டப் போனால் புழுக்கை வாசனை கொஞ்சம் அதிகமாய் அடிக்கிற அந்த அலமாரிதான் நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது என் அறிவுக் களஞ்சியமாக விளங்கியது. அங்கேயே எடுத்து கூடுமான வரையில் அங்கேயே நின்று படித்து அறிவை விருத்தி செய்து கொண்டேன். அவைகள் வீட்டுக்குக் எடுத்துச் செல்ல முடியாத புத்தகங்களாக இருந்தது சமூக துரதிருஷ்டம். அப்பா முதுகில் அறைவாரோ என்று பயம். அங்கே பெற்ற ஞானம் பிற்பாடு பத்தாம் வகுப்புப் படிக்கும் போது K.அசோக், வள்ளியப்பன், கிருஷ்ணசாமி போன்றவர்களின் குறுகுறுப்பான சந்தேகங்களை தெள்ளத் தெளிவாக தீர்த்து வைக்கப் பயன்பட்டது. உடனே என்னை லிட்டில் மாத்ருபூதம் என்று அழைக்கலாமா என்று சிலர் யோசிப்பது எனக்குக் கேட்கிறது. புத்தகத்தில் ஒளித்து வைத்துப் படித்த சரோஜா தேவி புத்தகங்கள், பார்த்த வீடியோப் படங்கள் எனக்குள் நிறைய சந்தேகங்களைக் கிளப்பியிருந்தாலும் எப்படியோ பின்னாளில் பார்த்துப் படித்து கற்றுத் தேர்ந்துவிட்டேன் எனச் சொல்லலாம்.

பத்தாம் வகுப்பு என்பது அநேக ஆண்கள் வயதுக்கு வருகிற பருவம். (ஆண்கள் வயதுக்கு வருவது பற்றி மரத்தடியில் நான் எழுதின கவிதை இங்கே). யாருக்கும் வெளியே தெரியாமல் ஆண்களுக்கு ரகசியமாய் நிகழ்ந்து விடுகிற இது நிறைய குழப்பங்களையும், கலவரங்களையும் மனதில் உடனே தோற்றுவித்து விடுகிறது. உதாரணமாக பத்தாம் வகுப்பு நண்பனொருவன் காலையில் அவனது உள்ளாடையில் ஒரு சில உலக வரைபடங்களைப் பார்த்து திடுக்கிட்டு என்னிடம் வந்தான். இந்த மாதிரி ஆரம்ப சந்தேகம் கொண்டவர்கள் அப்புறம் டோண்டு ராகவன் வலைப் பதிவில் போட்டிருக்கிற மாதிரி மாதிரி தப்பு சரிகளை அவர்களாகவே எப்படியாவது முட்டி மோதித் தெரிந்து கொண்டு விடுகிறார்கள். ஆனால் இந்தப் பெண்கள்? அவர்களுக்கு சரியான முறையில் எதையும் எடுத்துச் சொல்வதற்கு ஆளில்லையோ என்று தோன்றுகிறது. (அல்லது காலம் மாறிவிட்டதா?). என்னுடைய சில பழைய தோழிகளுக்கு ஒரு அக்கறையுள்ள நண்பனாக நான் 'எல்லா' விஷயங்களையும் பொறுமையாய் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். முதலிரவில் என்ன பண்ணுவார்கள் என்று ஓரளவு யூகித்தவர்களாக இருந்தாலும், அதற்கப்புறம் நிகழ்கிற விஷயங்கள் பற்றி கிஞ்சித்தும் ஐடியா இல்லாதவர்களாகத் தான் பெரும்பான்மையான பெண்கள் இருக்கிறார்கள்.

வீரியமின்மையா? ஆண்மைக் குறைவா? கெட்ட சொப்பனங்களா? என்று விளித்து இளைஞர்களை குறி வைத்து பயமுறுத்தும் லாட்ஜ் வைத்தியர்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க வேண்டுமெனில் இந்த செக்ஸ் கல்வி விஷயத்தை பொது மக்களிலிருந்து அரசாங்கம் வரை எல்லோரும் தீவிரமாய் சிந்திக்க வேண்டும். செக்ஸ் கல்வி என்றவுடன் அது எந்த வகுப்பிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்? 'மேத்ஸ் டீச்சர்', 'சயன்ஸ் டீச்சர்' மாதிரி 'செக்ஸ் டீச்சர்' என்று ஒருத்தர் இருக்க வேண்டுமா? போன்ற சந்தேகங்கள் எல்லாம் எல்லோரைப் போலவே எனக்கும் வருகின்றன. என் கருத்துக்கள் சிலவற்றை நான் சொல்லி விடுகிறேனே!

எட்டாம் வகுப்பு என்பது இதை ஆரம்பிக்க சரியான காலகட்டம் என்று தோன்றுகிறது. கிட்டத்தட்ட சிறுவர்/சிறுமிகள் வயதுக்கு வருகிற பருவம் என்பதால் அவர்களுக்கு ஏற்படும் உடனடி சந்தேகங்களுக்கு தீர்வு. இப்பாடத் திட்டத்தை படிப்படியாக பன்னிரண்டாம் வகுப்பு வரை கொண்டு செல்லலாம்.
கல்வித் துறையானது இயற்பியல், உயிரியல் மாதிரி பாலியல் என்று தனிப் பாடத்தையும் வகுப்பு நேரத்தையும் புகுத்துவதுடன் 'உடலுறவு' என்பதை நல்ல வார்த்தையாக மாற்ற முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இக்கல்வியை மாணவர்களுக்கு போதிப்பதில் ஆர்வமுள்ள பாலியல் வல்லுநர்களைக் கொண்டு வருடத்திற்கு இருமுறை மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொள்ளும் வகையில் கருத்தரங்கு, கண்காட்சி நடத்தலாம். ரொம்ப ஆர்வமாய்க் கற்றுக் கொண்டு இந்தப் பாடத்தில் எல்லோரும் 100க்கு 118 மதிப்பெண்கள் எடுத்துவிட வாய்ப்புண்டு.

"தி கம்ப்ளீட் செக்ஸ் கைட் ஃபார் ஸ்டூடண்ட்ஸ்" அல்லது "மாணவருக்கான முழு பாலியல் கையேடு" என்கிற புத்தகத்தை சுமார் ஆயிரம் பக்கத்துக்கு பாடநூல் கழக வெளியீடாகவோ அல்லது தனியார் பதிப்பக செம்பதிப்பு வெளியீடாகவோ மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம். இதில் வயதுக்கு வருவதிலிருந்து துவங்கி, தாம்பத்ய உறவு, குழந்தைப் பிறப்பு மற்றும் வளர்ச்சிச் சுழற்சி என்று கவர் பண்ணி மெனோ பாஸ் வரை விளக்கம் அளிப்பதுடன், மானிட உடற்கூற்றின் பாலியல் ரகசியங்கள், உறுப்புகளின் செயல் பாடுகள், விளக்கப்படங்கள், கேள்வி பதில் பகுதிகள், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs), பாலியல் நிபுணர்களின் கட்டுரைகள், இது வி்ஷயமாய் பொதுமக்களிடம் எடுக்கப் பட்ட பேட்டிகள், DOs & DON'0Ts, பாலியல் நோய்கள், எய்ட்ஸ் விழிப்புணர்வு, கருத்தடை சாதனங்களின் உபயோகங்கள் என்று எல்லாமே அடங்கிய ஒரே புத்தகமாக மாணவர்களுக்காகக் கொண்டு வந்து பள்ளி நிர்வாகம் அந்தப் புத்தகத்தை மாணவர்களின் பெற்றோரிடம் வழங்க வேண்டும். மேலும் ஏதாவது சந்தேகம் வந்தால் உடனே எடுத்துப் படிக்கிற (வாண்டுகளுக்கு எட்டாத) உயரத்தில் வீட்டில் வைக்கச் சொல்ல வேண்டும். கட்டாயப் பாடம் ஆகிவிட்ட பிறகு பையன்/பொண்ணு கண்ட புத்தகம் படிக்கிறான்/ள் என்று பெற்றோர்கள் நினைப்பதற்கும் வழியில்லை. ஒரு தெளிவுக்கு வந்துவிட்டால் பையன்கள்/பொண்ணுகள் கண்ட புத்தகங்கள் படிப்பதும் குறைந்துவிடும். மேலும் வயோதிக அன்பர்களுக்கும்கூட இப்புத்தகம் சில நேரம் பயன்படலாம் இல்லையா? யாரும் சொல்லிக் கொடுக்காததை ஒரு நல்ல சரியான புத்தகம் கற்றுக்கொடுத்துவிடும் என்று நான் நம்புகிறேன்.

மேலும் அரசாங்கத்தையும் கல்வித்துறையையும் விட பெற்றோர்களுக்கு இதில் அதிக பங்கு இருப்பதாக நினைக்கிறேன். சிறு குழந்தைகள் சில சமயம் தன் பிறப்புறுப்பை வைத்துக்கொண்டு விளையாடும்போது (குறிப்பாக ஆண்குழந்தைகள்) "கய்ய வெச்சுக்குட்டு சும்மார்ரா! டிங் டாங்-ல என்ன வெளையாட்டு ஒனக்கு?" என்று உடனே மிரட்டி அறிவுறுத்துகிற பெற்றோர்கள் பின்னாளில் தம் மக்கட்கு பாலியல் பற்றி குறைந்த பட்ச அறிவையாவது புகட்ட முன் வரவேண்டாமா?

இந்த விஷயத்தில் டாக்டர் மாத்ருபூதம் எப்படி முன்னோடியாகத் திகழ்ந்தாரோ அதே மாதிரி மேலும் சிலரும் தாமாகவே முன்வந்து மீடியாக்கள் மூலம் செக்ஸ் கல்வி போதிக்கலாம். குமுதத்தில் டாக்டர் ஷாலினி எழுதின ஒரு மருத்துவத் தொடர் படித்து நிறைய பேர் வாழ்க்கையில் ஒரு தெளிவு பிறந்ததை மறக்க, மறுக்க முடியாது. மேற்சொன்ன விஷயங்களில் எதுவுமே இப்போதைக்கு சாத்தியமில்லையெனில் இன்டர்நெட் கோலோச்சுகிற இந்தக் காலகட்டத்தில் கண்ணான மாணவ மணிகள் விழிபிதுங்க பலான சைட்டுகள் பார்ப்பதைக் குறைத்துக்கொண்டு நெட்டில் இது பற்றி உருப்படியாய் கற்றுக்கொள்ள முயற்சிக்கலாம்.

படிக்கிற காலத்தில் இளைஞ/இளைஞிகள் செக்ஸ் பற்றிய வீணான கற்பனைகள், தவறான அபிப்பிராயங்கள், அறியாமை, பயங்கள், கவலைகளால் செக்ஸ் ஒரு பாவச் செயல் அல்லது அது அசிங்கம் அல்லது அதுவேதான் வாழ்க்கை என்றெல்லாம் நினைத்து வாழ்க்கையைச் சிக்கலாக்கிக் கொள்ளாதிருக்க நம்மை மாதிரி 'வளர்ந்தவர்கள்' ஏதோ ஒரு துரும்பைக் கிள்ளிப் போடவேண்டாமா?

உங்கள் யோசனைகளையும் சொல்லுங்களேன்.