பதினோராயிரத்தில் ஒருவன்

கிரிக்கெட் என்கிற வார்த்தை முதல் முதலில் என் காதில் விழுந்தபோது எனக்கு எட்டோ ஒன்பதோ வயதிருக்கும் என்று நினைக்கிறேன். Made in Japan என்று எழுதியிருந்த அப்பாவின் சிவப்புக் கலர் Sanyo - ரேடியோவிலிருந்து ஒலிபரப்பான கமெண்ட்ரியிலிருந்துதான் அந்த வார்த்தையை முதலில் கேட்க நேரிட்டது. எங்கேயோ விளையாட்டு மைதானத்தின் விண்ணைப் பிளக்கிற கரகோஷத்துக்கு நடுவே நடக்கிற விளையாட்டை ஒருத்தர் மூச்சு விடாமல் வர்ணிக்கிறார்.

"...வருகிறார், வீசுகிறார், அருமையான பந்து. அந்தப் பந்தானது சுழன்று இறங்கி... இதோ கவாஸ்கர் மட்டையை வீசுகிறார். சரியான வீச்சு. பந்து பார்வையாளர் திசை நோக்கி பறக்கிறது. இதோ ஸிக்ஸர். இன்னும் அதிக டெசிபலில் கரகோஷம். 6 ரன்கள். இப்போது ஸ்கோர்: 152-2. கரகோஷமோ, வர்ணனையாளரின் உச்சஸ்தாயி குரலோ, ஸ்கோரோ எதுவும் பாதிக்காமல் அப்பா சலனமற்று கேட்டுக் கொண்டிருந்தார். எதுவும் புரியாமல் நான் உட்கார்ந்து கொண்டிருந்தேன். இது என்ன விளையாட்டு என்று கேட்டபோது Eleven fools are playing. Eleven thousand fools are watching என்றார். அன்றைய வயதுக்கு அது என்னமோ மண்டைக்குள் பச்சக் என்று ஒட்டிக் கொண்டது.

அதனால் கிரிக்கெட் என்கிற அந்த வார்த்தையானது, என் வயதையொத்த சக நண்பர்களுக்கு ஏற்படுத்தின பரவசத்தை எனக்குள் ஏனோ ஏற்படுத்தவில்லை. ஆனால் பரமபதத்திலிருந்து பம்பரம்வரை வகை தொகை பாராமல் விளையாண்டு கொண்டிருந்த என் நண்பர்கள் சட்டென்று மட்டையும் கையுமாய் அலைய ஆரம்பித்தது மட்டும் எனக்கு ஏனோ ஏமாற்றமாயிருந்தது.

இது இப்படி இருக்கிறதென்றால் பக்கத்து வீட்டில் சுப்ரமணியபுரம் சசிகுமார் மாதிரியாகத் தோற்றமளிக்கிற ஒரு அண்ணன் ஒரு சின்ன ட்ரான்ஸிஸ்டரை காதோடு அணைத்து புஸ் என்ற சப்தத்துடன் வாசலில் அமர்ந்து கிரிக்கெட் காமெண்ட்ரி கேட்டுக் கொண்டிருப்பார். அவரிடத்தில் கிரிக்கெட் பற்றிய குறைந்த பட்ச விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று போனேன். வெங்சர்க்கார் எனப்படுகிற கிரிக்கெட் வீரர் அவர் காதுக்குள் பந்து வீசி முடித்தவுடன் ரேடியோவை அகற்றி என்ன என்றார். சொன்னேன். அவர் நான் சொன்னதை சட்டை செய்யாமல் "அது இருக்கட்டும், உன் பேரை இனிமே யார் கேட்டாலும் ரகுநாத வர்ம சேதுபதி கணேஷ சுந்தர பாண்டிய குலோத்துங்க வீர வெங்கடேஷ்வர யோகி ஜகந்நாத சூர்ய காந்திப் ப்ரகாஷ ராவ்-ன்னு சொல்லணும். எங்கே சொல்லு பாக்கலாம். சொல்லேன்னா டைகரை அவுத்து விடுவேன்" என்றார் சம்பந்தமில்லாமல். தன் பெயர் உச்சரிக்கப்பட்ட மாத்திரத்தில் டைகர் என்றழைக்கப்படுகிற அல்சேஷன் நாய் கழுத்துச் சங்கிலியை இழுத்து "வ்வ்வவ்" என்று குறைத்துப் பரபரத்தது. ஒருவேளை வீரமாய் நகராமல் நான் அங்கேயே நின்றிருந்தால் என் மனத் துணிவை பாராட்டி குறைந்த பட்சம் "ஃபோர்" என்பதும் "பவுண்டரி" என்பதும் ஒன்றுதான் என்பதையாவது அவர் எனக்குச் சொல்லிகொடுத்திருக்கக் கூடும்.

அதன் பிறகு கிரிக்கெட்டின் மேல் எனக்கு எந்த ஒரு சுவாரஸ்யமும் ஏற்படாமல் அது எனக்கு ஒரு அந்நிய விளையாட்டாக மாறிப் போனது. பதினொரு முட்டாள்கள் விளையாடுகிறார்கள். பதினோராயிரம் முட்டாள்கள் பார்க்கிறார்கள். இந்தச் சொற்றொடரின் கவர்ச்சி பிடித்துப் போக, எனக்கு இந்த விளையாட்டு பிடிக்காமல் போனதற்கான சாக்காக இதை எல்லோரிடமும் சொல்ல ஆரம்பித்தேன். அது என்ன ஒரு பந்தை சுழற்றிச் சுழற்றி வீசுவதும் அதை ஒருவன் அடிப்பதும் ஒருவன் பிடிப்பதும். இதெல்லாம் ஒரு விளையாட்டா? சுத்த போர்.

ஆனால் இதனை மனதுக்குள் வர விடாமல் எத்தனை வேலி போட்டுத் தடுத்தாலும் டி.வி திரையில் கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் மட்டையுடன் தோன்றி பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி என்றார். (இதைப்பற்றி முன்னொரு பதிவின் நடுவில் எழுதியிருந்தேன். அது இங்கே) கபில்தேவின் தட்டையான மட்டையைவிட கட்டையான மீசை எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. நான் பெரிதானால் இப்படித்தான் மீசை வைத்திருக்கவேண்டும் என்பதற்கு என் ரோல் மாடல்கள் லிஸ்டில் 1) வாழ்வே மாயம் கமல் 2) கபில்தேவ் 3) சிசர்ஸ் விளம்பரத்தில் வருகிற ஒருவர்.

மீசை என்பதெல்லாம் நாய்க்குட்டி மாதிரி நம் இஷ்டத்துக்கு தேர்ந்தெடுத்து வளர்க்கிற ஒன்றல்ல என்று புரிகிற பருவம் வந்தபோது ரேடியோவுக்கு மவுசு குறைந்து டி.வி வந்திருந்தது. அப்போதுதான் ரேடியோவில் மட்டையும் பந்தும் வீசின நிபுணர்களை யார் யார் என்று அடையாளம் தெரிந்தது. அம்பயர் என்று ஒரு கேரக்டர் நடுவில் நின்று கொண்டிருப்பார் என்பதும். அப்புறம் என் நண்பர்கள் குழாம் கிரிக்கெட் மேட்ச் பார்க்கிறோம் என்று என்னை தனிமைப் படுத்தி வெறுப்பேற்ற ஆரம்பித்தார்கள். காலனிக்கு வெளியே காலி மனைகளில் மூன்று குச்சிகள் நட்டி டீம் பிரித்து விளையாட ஆரம்பித்தார்கள்.எனக்கு இது எதுவும் பிடிக்காவிட்டாலும், டி.வி- மேட்சில் விளையாடுபவர்களைப் போலவே பந்தை தொடையில் தேய்த்து தேய்த்து பசங்கள் பவுலிங் போடுவதை அசுவாரஸ்யமாய் மரத்தடி நிழலில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் பக்கத்தில் இருக்கிற தண்ணீரற்ற பொட்டல் கிணற்றில் அடிக்கடி விழுந்து விடுகிற பந்தை எப்படி எடுப்பது என்று தெரியாமல் நண்பர்கள் முழித்துக் கொண்டிருக்கும்போது நான் கயிறு கட்டி இறங்கி அட்வென்ஞ்சர் எல்லாம் செய்து எடுத்துக் கொடுப்பேன்.

அனில் கும்ளே, வினோத் காம்ப்ளி, ஸ்ரீகாந்த், கிரண்மோர், ரன் ரேட், ஓ.டி.ஐ, உலகக் கோப்பை, எல்.பி.டபிள்யூ, வைடு, நோ பால் என்று என்னென்னவோ பெயர்களும் வார்த்தைகளும் என் அனுமதியில்லாமலே அவ்வப்போது என் காதில் விழுந்து கொண்டிருந்தது. கல்கியில் வெளியான என் முதல் கதைக்கு "25 வயது சித்ரனின் முதன் இன்னிங்ஸ் இச்சிறுகதை" என்று அறிமுகம் கொடுத்து போட்டபோதுகூட கிரிக்கெட்டில் இன்னிங்ஸ் என்றால் என்ன என்று தெரியாமல்தான் இருந்தது. ஒரு ஓவருக்கு 6 பந்துகள் என்கிறதே எனக்கு ரொம்ப நாள் கழித்துதான் அறிவூட்டப்பட்டது.

அப்படியாக கிரிக்கெட்டை என் வாழ்க்கையின் கூண்டுக்குள் வர விடாமல் நான் பட்ட எத்தனங்கள் எல்லாவற்றையும் திடீரென இப்போது ஒதுக்கி வைக்க வேண்டியதாய் போயிற்று. காரணம் என் 8 வயது வாண்டு. அவன் ஒண்ணரை வயதாய் இருக்கும்போது சும்மா ஒரு ப்ளாஸ்டிக் கிரிக்கெட் பேட் ஒன்றை ஃபோட்டோ எடுப்பதற்காக கையில் கொடுத்தது தப்பாகப் போய்விட்டது. இன்று வரை அவனிடமிருந்து அதைப் பிடுங்க முடியவில்லை. டொக் டொக் என்று சதா வீட்டுக்குள் ப்ளாஸ்டிக் பேட்டின், பந்தின் சப்தம் கேட்க ஆரம்பித்தது. அவனது கிரிக்கெட் ஆர்வம் நாளடைவில் அதிகமாகி தீவிரமாகியது. ஒரு தடவை மொட்டை மாடியில் அவன் சகாப் பொடியன்களுடன் ஆடிய வேர்ல்டு கப் மேட்சில் சிக்ஸருக்குப் போன ஒரு பந்தைப் பிடிக்கப் போய் இடது கையில் Green Stick Fracture உடன் அழுதுகொண்டே திரும்பி வந்தான். மூன்று மாதம் மாவுக்கட்டு. அப்படியும் அடங்காமல் மாவுக் கட்டுத் தொட்டிலுடனேயே இல்லாத பேட்டால் இல்லாத பந்தை பவுண்டரிக்கோ, அரங்கத்துக்கு வெளியேயோ இடைவிடாமல் அனுப்பிக் கொண்டிருந்தான். வீட்டுக்கு வருகிற விருந்தினர்களிடமும் பந்தைக் கொடுத்து அவனுக்கு பவுலிங் போடச் சொல்லி ஆட்டத்துக்கு இழுத்துவிடுவான்.

என் அலுவலக நண்பர்கள் அடையாறு காந்தி நகர் மைதானத்துக்கு கிரிக்கெட் விளையாடக் கூப்பிட்டபோது என் மகனுக்காக ஞாயிற்றுக் கிழமை தூக்கத்தைக் தியாகம் செய்து அதிகாலை ஐந்தரை மணிக்குப் போனோம். நான் முதன் முதலாக பேட்டிங் செய்த நிகழ்வு அங்கே அரங்கேறியது. எனக்கு விளையாடத் தெரியாது என்று சொல்லியும் எக்ஸ்ப்ரஸ் வேகத்தில் பவுலிங் போட்டு முதல் பந்திலேயே அவுட் ஆக்கிவிட்டதை நான் ஒப்புக்கொள்ளவில்லை. நீ சுத்த வேஸ்ட்டு என்கிற மாதிரி பார்த்த மகனின் பார்வையைத் தவிர்த்து அந்தப் பக்கம் பார்த்தேன். அவன் இது நாள்வரை என்னை இன்னொரு சச்சின் என்றே நினைத்துக் கொண்டிருந்தான். பையனின் உயரத்துக்கும் உருவத்துக்கும் வயது வந்தவர்களின் மட்டையும் அதன் எடையும் ஒத்து வரவில்லையென்றாலும் சளைக்காமல் அதையும் முயற்சித்துப் பார்த்தான்.

இது தவிர பொடியன் இப்போது டி.வியில் பழைய மேட்செல்லாம் பார்க்க ஆரம்பித்துவிட்டான். எல்லா நாட்டினுடைய எல்லா அணி மெம்பர்களையும் உருப்போட்டு வைத்திருக்கிறான். எந்த மேட்சில் யார் எத்தனை ரன் எடுத்த்தார்கள், எப்படி அவுட் ஆனார்கள் என்று அவன் ரேன்ஞ்சுக்கு ஒரு மினி கிரிக்கெட் என்சைக்ளோப்பீடியாவாக உலா வந்து கொண்டிருக்கிறான். Puma Ballistic என்று எழுதியிருக்கிற மட்டைதான் வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்று வாங்கிக் கொண்டான். இதுவரை 128 பந்துகளைத் மொட்டை மாடியில் ஸிக்ஸர் அடித்துத் தொலைத்திருக்கிறான். ஒருமுறை அவன் இன்னும் சின்னக் குழந்தைதானே என்று என் மனைவி அவனுக்கு சோறு ஊட்டும்போது 'கிரீஸ்'-க்கு வெளில நின்னு ஊட்டினா எனக்கு எப்படி எட்டும். இன்னும் பக்கத்துல வா! என்றான். முழங்காலில் கட்டுகிற பட்டை, கையுறை, ஸ்டம்ப்ஸ் எல்லாம் வைத்திருக்கிறான். அஜந்தா மெந்திஸ்-ன் ஸ்பின் இப்படித்தான் இருக்கும் என்று சுழற்றி வீசி என் நெற்றியைப் பதம் பார்க்கிறான். கம்ப்யூட்டரில் ஆன்லைன் கிரிக்கெட் கேம் விளையாடுகிறான். இவையெல்லாற்றையும் மையப்படுத்தி, "அவனுக்கு கிரிக்கெட்-ல பயங்கர இண்டரெஸ்ட் இருக்கு, கோச்சிங் போட்டிருங்க." என்று ஒருத்தர் தவறாமல் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். வரவேற்பறையில் அவன் கிரிக்கெட் விளையாடி இரண்டு ட்யூப் லைட், ஒரு சுவர் கடிகாரம், இரண்டு மூன்று ஃபோட்டோ ஃப்ரேம் அப்புறம் பக்கத்து வீட்டு அகல் விளக்கு, காலிங் பெல் ஸ்விட்ச் என்று ஏகத்துக்கு உடைத்திருந்தாலும், கோச்சிங் பற்றி யோசித்துக் கொண்டுதானிருக்கிறேன்.

கிரிக்கெட் பேட்டை எப்படி கையில் சரியாகப் பிடித்து நிற்பது என்பதை முதன் முதலாக மகனிடமிருந்து சென்ற வாரம் கற்றுக் கொண்டேன்.