என். சொக்கனின் 'ஏ.ஆர் ரஹ்மான்'

’ஹைவே’ படத்திலிருந்து ஏ.ஆர். ரஹ்மானின் Implosive silence என்கிற இசையைக் கேட்டுக்கொண்டிருந்தபோது நண்பர் என். சொக்கன் எழுதிய ஏ.ஆர்.ரஹ்மான் புத்தகம் எனது ஃபோல்டருக்குள் (மின்புத்தகமாக) வெகுகாலமாகப் படிக்கப்படாமல் தூங்கிக்கொண்டிருப்பது ஞாபகம் வந்தது. இனியும் தாமதிக்கலாகாது என எடுத்தேன். ஒரே மூச்சில் படித்து முடித்தேன். இப்படிச் சொல்வதிலிருந்தே அது எவ்வளவு விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்டிருந்தது என்பதை சொல்லத்தேவையில்லை என்று நினைக்கிறேன். மிக அருமையாக, எளிமையாக, அரிய தகவல்களுடன்.

பொள்ளாச்சியில் நண்பர்கள் குழுவுடன் இளையராஜா, மற்றும் இன்னபிற இசையமைப்பாளர்களின் பாடல்களை சிலாகித்தும், கேட்டுப் புளகாங்கிதம் அடைந்தும் திரிந்துகொண்டிருந்த காலகட்டம். பொள்ளாச்சியின் கிராமங்களில் சுற்றித் திரியும்போது பின்னணியில் எங்கேயாவது எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் இளையராஜாவின் கிராமம் சார்ந்த படப்பாடல்கள் (கிழக்கு வாசல், சின்னத் தம்பி, மற்றும் பல ராமராஜன் படத்துப் பாடல்கள்) அந்தச் சூழ்நிலைக்குப் பொருத்தமானதாக, மனதுக்கு மிக நெருக்கமானதாக இருந்தன. 'மொட்டை.. சான்ஸே இல்ல..’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டு வெளியாகும் ராஜாவின் பாடல்களை ஒன்று விடாமல் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டு கிடந்த சமயத்தில் இனிய அதிர்ச்சியாக, அழகான ஆச்சரியமாக வந்து விழுந்தது “சின்னச் சின்ன ஆசை..”. ’யாருய்யா இது?’ என்று நிமிர்ந்து உட்கார்ந்தோம். முற்றிலும் புதிதாக, வித்தியாசமாக அதே சமயம் அட்டகாசமான பாடல்கள்.

சின்னச் சின்ன ஆசை வருவதற்கு முன்னரே DD-யில் வரும் உகாதி புரஸ்கார் என்னும் நிகழ்ச்சியில் ஏ.எஸ்.திலீப்குமார் இசைத்த அருமையான டைட்டில் இசைக்கு ரசிகனாக இருந்தேன். வாராவாரம் அதைக் கேட்பதற்காகவே அந்நிகழ்ச்சியைப் பார்ப்பேன். அந்த திலீப்குமார்தான் இந்த ரஹ்மான் என்றறிந்ததில் மேலும் ஆச்சரியமாகிப் போனது.

அடுத்தடுத்து வந்த ரஹ்மான் பாடல்கள் திரையிசையில் ஒரு புதிய துவக்கம் நிகழ்ந்திருப்பதை அறிவித்தவண்ணம் இருந்தன. அன்றைக்கு ஆரம்பித்து இன்றுவரை ரஹ்மானின் மகா ரசிகனாக ஆனவன் நான்.

ராஜாவைப் போலவே ரஹ்மானும் ஒரு மகா இசை ஆளுமை. ராஜாவை எவ்வளவு பிடிக்குமோ ரஹ்மானையும் அதே அளவு பிடிக்கும். ஒரு அபாரமான பர்சனாலிட்டியாகவும் ரஹ்மானை எனக்கு மிகவும் பிடிக்கும். ரஹ்மான் பிரபலமடையத் தொடங்கியிருந்த ஒரு காலகட்டத்தில் சென்னை ஸ்பென்ஸர் ப்ளாசா லாண்ட்மார்க் புத்தகக் கடைக்கு ஒரு முறை சென்றிருந்தேன். என் அருகில் நின்று ஷெல்ஃப்பிலிருந்து ஏதோ புத்தகத்தை மேய்ந்து கொண்டிருந்தவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. பிறகு சட்டென்று புரிந்துகொண்டேன். அவர் பாடகர் ஸ்ரீநிவாஸ். அவரோ புத்தகத்தில் ஒரு கண்ணை வைத்துக்கொண்டு திரும்பித் திரும்பி யாரையோ பார்த்துக்கொண்டிருந்ததை கவனித்தேன். ஆர்வமேற்பட்டு நானும் திரும்பிப் பார்த்தால் ஒரு பத்து பேருக்கு மத்தியில் நடுநாயமாக நின்றுகொண்டு ஏதோ இசை ஆல்பத்தை வெளியிட்டுக்கொண்டிருந்தார் ரஹ்மான். அப்போது இந்த மனிதர் இவ்வளவு உயரம் போவார் என்று தெரிந்திருக்கவில்லை.

இந்தப் புத்தகத்தில் சின்னச் சின்னச் சுவாரஸ்யமான தகவல்களுடன் ரஹ்மானின் இசைப் பயணத்தை, வாழ்க்கையை, அவரது உழைப்பை, இசையில் இந்த உயரத்தை எட்ட ரஹ்மான் அனுபவித்த கஷ்டங்களை ஒரு சாதாரணனுக்குக் கதை சொல்வது போலச் சொல்கிறார் சொக்கன். இந்தப் புத்தகம் ஒரு சின்ன மன எழுச்சியைக்கூட தந்தது எனலாம். கடின உழைப்பு + வித்தியாசமான சிந்தனைகள் + தொடர்ந்து கற்றுக்கொண்டே இருத்தல் + செய்வதை புதிதாக, நேர்த்தியாகச் செய்தல் + எப்போதும் அமைதியாக, தளும்பாமல் ’என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்றிருத்தல் - இவைதான் மாபெரும் வெற்றிக்கான சூத்திரம். இதையும் இந்தப் புத்தகத்தில் ரஹ்மானின் வாழ்க்கையை படிப்பதினூடே உணர்ந்துகொள்ளவும் முடிவதே அந்த மன எழுச்சிக்குக் காரணம்.

இப்புத்தகத்தை இலவசமாக அளித்த என்.சொக்கனுக்கு நன்றிகள் பல.

இந்த இலவச மின்புத்தகத்தை PDF ஆக டவுன்லோடு செய்து படிப்பதற்கான சுட்டி கீழே:

http://600024.com/store/a-r-rahman-biography-free-tamil-e-book