Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

வருஷம் 16

கோவையிலிருந்து செப்டம்பர் 13 அன்று மதியம் ஒரு ரயில் புறப்பட்டது. அதன் இரண்டாம் வகுப்புப் பெட்டியொன்றில் ஒரு ஜன்னலோர இருக்கையொன்றில் அவன் உட்கார்ந்திருந்தான். ரயில் புறப்படும்போது சென்னை வரை நீண்டிருக்கும் அதன் பாதையைப் போலவே அவன் நெற்றியில் கவலை ரேகைகள் நீண்டிருந்தன.

சென்னை ஒரு மாநகரம். அதை நோக்கிப் பயணிக்கிறோம் என்கிற பதட்டம் அவனுக்குள் லாரி குடிநீர் போல தளும்பிக்கொண்டிருந்தது. புதிய வேலை, புதிய இடம், புதிய மக்கள். புதிய தட்பவெப்பநிலை. இதைவிட மேலாக அடுத்த மாதம் குழந்தை பெறப்போகும் கர்ப்பிணி மனைவியை விட்டுப் பிரிந்து வரும் மனக்குடைச்சல்.

"சென்னைக்கா போறீங்க? அங்கெல்லாம் போய் குப்பை கொட்டறது ரொம்ப கஷ்டம்ங்க.. மறுபடி யோசிங்க"

"சென்னைத் தண்ணிய ஒரு ரெண்டு வருஷம் குடிச்சீங்கன்னா கிட்னி ஸ்டோன் வந்துரும்"

"ஆட்டோக்காரங்க, பஸ் கண்டக்டர் எல்லாம் மரியாதயில்லாம பேசுவாங்க.."

"இந்த அருமையான கோவை க்ளைமேட்டை விட்டுட்டு எங்க போறீங்க?"

அவன் பயணத் தீர்மானத்திலும், திட்டத்திலும் ஓட்டை போட நினைக்கும் வார்த்தைகள் நாலாப் பக்கமிருந்தும் வந்தன. அவன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. கனத்த மனதுடன் பிரயாணித்தான் என்பதால் கோவைக்கும் சென்னைக்குமான தூரம் தீராமல் ஒரு முடிவிலியாகப் போய்க்கொண்டிருந்தது போல உணர்ந்தான்.

சென்னைக்கு வந்ததும் முதலில் தோன்றியது உடனே ஊருக்குத் திரும்பிப் போய்விடவேண்டும் என்பதுதான்.

"ஒரு வருஷம் இருந்திட்டீன்னா அப்றம் இந்த ஊர விட்டுப் போகமாட்ட.."

இதைச் சொன்ன நண்பரின் வார்த்தைகளை இப்போது மறுபடியும் அசைபோட்டான். உண்மைதான். ஒரு வருஷம் தாக்குப் பிடிக்க முடியுமா என்று சந்தேகமாகத்தான் இருந்தது. ஆனால் சென்னை அவனை நல்ல முறையில் சுவீகரித்துக் கொண்டது. சென்னை வெயில் பழகிவிட்டது. மக்கள் பழகிவிட்டார்கள். சென்னையின் புவியியல் பழகிவிட்டது.

பதினாறு வருடங்கள் உருண்டோடிவிட்டன. இத்தனை வருடங்கள் காலண்டரைத் தவிர பெரிதாய் என்ன கிழித்தான் என்று தெரியவில்லை. ஆறு வேலை மாற்றிவிட்டான். ஓரிரு லேசான நில அதிர்வுகள், ஒரு சுனாமி, நகரத்தைக் கிட்டத்தட்ட மூழ்கடித்த ஒரு மழை வெள்ளப் பெருக்கு உட்பட ஆயிரம் அனுபவங்கள். தாடி, மீசை தலைமுடியில் நரை கண்டுவிட்டது. இளம்பெண்களும், பையன்களும் அவனை அங்க்கிள் என்று கூப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். பெருங்குடி டம்ப் யார்டில் (Dump yard) அவன் கொட்டிய குப்பையும் கணிசமான அளவில் சேர்ந்துவிட்டது.

பிறந்ததிலிருந்தே நாடோடியாக இருந்த அவன் 'நீங்க எந்த ஊர்?' என்று யாராவது கேட்டால் ஒரு நொடி தடுமாறுவான். எந்த ஊரில் நீ அதிகமாக இருந்தாயோ அதுதான் உன் ஊர் என்று தனக்குள்ளே ஒரு கான்செப்ட் உருவாக்கிக் கொண்டான். இனிமேல் 'சென்னை' என்றே பதில் சொல்லலாமா என்று யோசிக்கிறான்.

குரங்கு பெடல் என்றால் என்ன?

ஒரு வழியாக மகனுக்கு பாலன்ஸ் கிடைத்துவிட்டது. இது இரண்டாவது பாலன்ஸ். முதல் பாலன்ஸ் தவழ்கிற குழந்தை என்கிற நிலைப்பாட்டிலிருந்து ‘நடக்கிற குழந்தை’ என்கிற நிலையை அடைந்தது. அப்போது எல்லாக் குழந்தைகள் போலவும் ‘பொதக் பொதக்’ என்று நிறைய தடவை விழ வேண்டி வந்தாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் எப்படியோ நடக்கவும் பிறகும் ஓடவும் பழகிக் கொண்டான்.

ஓடப் பழகின பிறகு ஓட்டப் பழகவேண்டாமா? முதலில் வாங்கின மூன்று சக்கர சைக்கிள் மோகம் முடிந்து (நான் கூட அவ்வப்போது ஓட்டுவதுண்டு) ஹாண்டில் பாரில் அவனது முழங்கால் இடிக்க ஆரம்பித்தவுடன் மாநாடு கூட்டி அவனுக்கு பெரிய சைக்கிள் வாங்கலாம் என முடிவானது. பி.எஸ்.ஏ ராக்கெட் என்று போட்ட ஒரு சின்ன இரண்டு சக்கர சைக்கிள் (சைடு வீலையும் சேர்த்தால் நான்கு) வாங்கிவந்தோம். பேர்தான் ராக்கெட் என்று போட்டிருந்தார்களே தவிர தரையில் தான் ஓடியது.

ஆனால் அந்த சைக்கிளில் ஒரு பிரச்சனை. அது மகனைவிடப் பெரியதாக இருந்தது. அதாவது அவன் இன்னும் நான்கைந்து வருடங்கள் கழித்து ஓட்டவேண்டியதை அப்பொழுதே வாங்கிவிட்டேன். இருந்தாலும் சீட்டையும், ஹாண்டில் பாரையும் கொஞ்சம் தணித்து இறக்கித் தந்ததில் அதில் எப்படியோ ஏறப் பழகி மூன்றாவது மாடி வராந்தாவிலும், மொட்டை மாடியிலுமாக ஓட்ட முயற்சித்துக் கொண்டிருந்தான். கீழே விழாமலிருக்க சைடு வீல்கள் துணை புரிந்தாலும் அபார்ட்மெண்ட் வாசிகளுக்கு ஓட்டும்போது டர்ர்ர்ர் என்ற அதன் நாராசமான சத்தம் அத்தனை ரசிக்கவில்லை. அதற்காக அவனை ரோட்டில் போய் ஓட்ட வைக்கிற மயிர்க்கூச்செரியும் அட்வென்ஞ்சரை நான் எடுக்கத் தயாரில்லை.

சில நாட்கள் வேறு வழியில்லாமல் ஹாலுக்கும் பெட்ரூமுக்கும் கிடைத்த இடைவெளிகளில் கூட ஓட்டுவான். சில நாட்கள் இரவு உணவு முடித்துவிட்டு நடு ஜாமத்தில் ட்ராஃபிக் அடங்கின எங்கள் தெருவில் அவன் பின்னாலேயே ஓடி ஓடி உண்ட உணவு செரித்துக்கொண்டிருந்தது. அதிலும் முக்கியம் அங்கேயிருக்கிற மற்ற அபார்ட்மெண்டுகளில் பார்க்கிங் இல்லாமல் ரோட்டிலேயே நிறுத்திவைத்திருக்கும் கார்களின் மேல் அவன் சைக்கிள் மோதி கீறல் போடாமல் இருக்கவேண்டுமே என்கிற கவலை மூச்சிரைப்போடு சேர்ந்து பொங்கிவரும்.

“ப்ராண்ட் நியூ கார் ஸார் இது.. டெலிவரி எடுத்து ஒரு வாரம்கூட ஆகலை. பாருங்க எவ்ளோ பெரிய கீறல். உங்க மகனுக்கு சமூகப் பொறுப்புன்னா என்னன்னு நீங்க கத்துக் குடுத்திருக்க வேணாமா? திஸ் இஸ் ரிடிகுலஸ்.  எனக்கு மிகப் பெரிய மன உளைச்சலாயிருச்சு. கீறலுக்கான நஷ்ட ஈடா  பதினைந்தாயிரத்தை...”

என்று யாராவது கனவான் கேட்டில் நின்றுகொண்டு கத்துவதை கற்பனை செய்துகொண்டு அந்த பயத்துடனேயே மகனுக்கும் கார்களுக்குமிடையே இடைவெளி ஏற்படுத்துகிற முனைப்பிலேயே ஓட்டம் கழியும். சைக்கிள் அவன் உயரத்திற்குப் பொருந்தாமல் உயரமாக இருந்ததாலும், அவ்வப்போது சீறி வருகிற ஆட்டோ, பைக்வாலாக்களுக்கு பயந்து தடுமாறியதாலும் மற்றும் சென்னை சாலைகளின் பிரத்யேக அடையாளமான திடீர்க் குழிகளினாலும் அவ்வப்போது தடுமாறி விழவும் செய்தான். பாலன்ஸூம் கிடைக்காமல் சாய்ந்த நிலையிலேயே ஓட்டி ஓட்டி பக்கவாட்டுச் சக்கரங்களும் தேயத் தொடங்கியிருந்தது. நொடிகளும், நிமிடங்களும், நாட்களும், வருடங்களுமாக உருண்டோடியது. இந்த பெரு நகரத்துக்குள் வாழ்வின் அத்தியாவசிய தேவையான சைக்கிள் ஓட்டுதலைக் கற்றுக் கொடுப்பதற்குள் வுதா (இது ஒரு கெட்டவார்த்தை என யாரோ சொன்னதால் தலைகீழாக எழுதியிருக்கிறேன்) தீர்ந்து போய்விடும் என்று தான் தோன்றியது.

ஆனால் இந்தக் கோடை விடுமுறையின் போது ஊருக்குப் போய் அங்கே மரங்கள் சூழ்ந்த, சுத்தமாய் போக்குவரத்து இல்லாத, அகலமான ரோடுகள் கொண்ட மின்சார வாரிய குவார்டர்ஸூக்குள் அக்கா பசங்களின் (சைடு சக்கரங்கள் இல்லாத) சைக்கிள்களை ஓட்டி ஒரே நாளில் அட்சர சுத்தமாக நன்றாய் சைக்கிள் பழகிவிட்டான். ஆக வாழ்க்கைக்குத் தேவையான இரண்டாவது பாலன்ஸூம் ஒரு வழியாய்க் கிடைத்துவிட்டதில் அக மகிழ்வு ஏற்பட்டுவிட்டது.

இன்றைக்கு அவன் சைக்கிளை விட கொஞ்சம் உயரமாய் வளர்ந்துவிட்டான்.  சைடு வீல்களையும் நீக்கியாயிற்று. சீறுகிற ஆட்டோக்களை லாவகமாய்த் தவிர்க்கவும் பழகிவிட்டான். ரொம்ப குள்ளமாய் இருக்கிறதென்று ஸீட்டை கொஞ்சம் இன்னும் ஏற்றித்தரமுடியுமா என்று கேட்கிறான். இல்லையென்றால் கியர் எல்லாம் வைத்து மவுண்டன் பைக் டைப்பில் வேறு பெரிய சைக்கிள் வேண்டுமாம்.

நான் எண்பதுகளின் ப்ளாஷ்பேக் காட்சியொன்றை நினைவுகூர்ந்து அவனிடம் சொன்னேன். “நாங்கெல்லாம் எங்களை விட பெரிய சைக்கிள்ள குரங்கு பெடல் போட்டு ஓட்டிப் பழகினோம். இனி அந்த அனுபவமெல்லாம் உங்கள மாதிரி சிட்டிப் பசங்களுக்குக் கிடைக்காதுடா..”

“குரங்குப் பெடல்னா என்ன” என்றான்.

இந்த பதிவை போஸ்ட் பண்ணி முடித்தபிறகு விளக்குகிறேன் என்று சொல்லியிருக்கிறேன்.

அவர்

எதிர் ஃப்ளாட் பெரியவர் இறந்துவிட்டார். மற்ற ஃப்ளாட்வாசிகள் அறியாதவண்ணம் இன்று பல்ஸ் குறைந்து கடைசி கணத்தை மவுனமாகவோ சிரமமாகவோ வாழ்ந்து முடித்துச் சென்றுவிட்டார்.

நான் இதுவரை அவரைப் பார்த்ததில்லை.

எதிர்க்கதவாக இருப்பதனால், சென்று துக்கம் விசாரித்து வருதல் நாகரிகம் என்பதால் சென்றேன். பெரியவர் 10 சதவிகிதம் கண்கள் திறந்த நிலையில் அமைதியாய் கண்ணாடிப் பெட்டிக்குள் படுத்திருந்தார். நல்ல உயரம். நார்மலான உடம்பு. ரொம்ப நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் கஷ்டப்பட்டுவந்தது போன்ற தோற்றம் எதுவும் இல்லாமல் முகத்தில் மிஞ்சியிருந்த சிறு தேஜஸ்.

அவரது மகனிடம் ‘ஐயம் சாரி.. எத்தனை மணிக்கு இறந்தார்?” என்றேன். சம்பிரதாயமான கேள்வி.

‘டூ. தர்ட்டிக்கு! ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப் போனோம். ஐ டவுட்.. வீட்லயே மூச்சு நின்னிருக்கும்னு..”

சம்பிரதாயமான பதில்.

”என்ன வயசு அவருக்கு?”

”எய்ட்டி ஒன்!”

மேலும் ஓரிரு சம்பிரதாயமான கேள்விகளைக் கேட்டுவிட்டு ”ஏதாவது உதவி தேவைன்னா தயங்காம சொல்லுங்க சார்..” என்று சொல்லிவிட்டு, கண்ணாடிப் பெட்டியருகே நின்று மனசுக்குள் மரியாதை செலுத்திவிட்டு வந்துவிட்டேன்.

மொத்தமாய் ஐந்து நிமிடங்களுக்குள் எனது கடமை முடிந்துவிட்டது.

ஒருவர் காலமாகிவிட்டார் என்கிற ஆர்ப்பாட்டங்கள் ஏதுமில்லாமல் அமைதி காத்து நிற்கிறது அப்பார்ட்மெண்ட். ஷாமியானா இல்லை. சங்கு இல்லை. தென்னை ஓலைகள் கிடையாது. மடக்கு நாற்காலிகள் இல்லை. ஒப்பாரி அழுகை இல்லை. அதிகமாய் யாருக்கும் அவர் இருந்ததும் தெரியாது. இறந்ததும் தெரியாது.

உறவினர்களின் வருகையைத் தெரிவிக்கும் ஏழெட்டு ஜோடி செருப்புகள் மட்டும் கதவின் முன்னால். ’சாப்பிடாம இருக்காதீங்கோ. ரெண்டு இட்லியாவது சாப்பிடுங்கோ. பையன்ட்ட வாங்கிட்டு வரச் சொல்றேன்’ என்று யாரோ யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

இந்த மரணத்தினால் இம்மி அளவு கூட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் மற்ற ஃப்ளாட்டுகளில் டி.வி. சீரியல் சப்தங்கள், தாளிக்கும் வாசனை, சின்னப்பையன்கள் விளையாடும் உற்சாகக் குரல்கள், லிஃப்ட்டின் கிராதி கேட்டை அறைந்து மூடும் சப்தம். எஃப். எம் ரேடியோ.

நாளைக் காலை ஃப்யூனரல் சர்விஸ் மாருதி ஆம்னி வந்து அமைதியாய் எடுத்துப் போய் எலெக்ட்ரிக் க்ரிமடோரியத்தில் இறுதி அஞ்சலி முடிந்துவிடும்.

அபார்ட்மெண்ட் சுவர்களுக்குள் அடைபட்ட நகரமயமாக்கப்பட்ட வாழ்வு உறுத்தல்களற்றுத் தொடரும்.

ஜவ்வரிசி வடாம், உள் பனியன் மற்றும் ஒரு ரேடியோ விளம்பரம்

நான் அட்வர்டைசிங் துறைக்குள் நுழையலாம் என முடிவெடுத்த காலம். உடம்பும் மூளையும் பரபரவென்று ஆகிவிட்டது. என்னவொரு திடமான முடிவு. இதுதான் நீ வேலை செய்ய லாயக்கான துறை என்று மனசுக்குள் ஓரமாய் உறுதியாக ஒரு மணி அடித்து பல்பு தோரணமெல்லாம் எரிய ஆரம்பித்திருந்தது. உடனே நான் ஹாலோ ப்ளாக் கற்கள் அடுக்கிவைத்து மனக் கோட்டை கட்ட ஆரம்பித்துவிட்டதுடன் ஒரு புதிய அனுபவத்திற்கு வாழ்க்கையை தயார் பண்ணவும் துவங்கியிருந்தேன்.

அதற்கு முன் அட்வர்டைசிங் கம்பெனிகள் எப்படியிருக்கும் என்று நேரில் பார்த்ததில்லை. ஆனால் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். முற்றிலும் கிரியேட்டிவ்வான விஷூவலைசர் ஆர்ட் டைரக்டர்கள் எல்லாம் உலவுகிற இடம். குளிரூட்டப்பட்ட கண்ணாடி அறைகளுக்குள் க்ரியேட்டிவ் ஸ்டுடியோ. கிராஃபிக் டிசைன் மென்பொருள்கள் நிரம்பி வழிகிற கம்ப்யூட்டர்கள். ஷெல்ஃப்களில் வழியும் விளம்பர டிசைன் பத்திரிக்கைகள், புத்தகங்கள். ஸ்டைலாக நுனி நாக்கு ஆங்கிலம் பேசுகிற யுவதிகள். மீடியாவுடன் நெருங்கின சம்பந்தம் உள்ள வேலை. எட்செட்ரா.

நண்பர் ஒருவர் ஏதோ ஒரு கம்பெனியில் க்ராஃபிக் டிசைனர் வேலை காலியாயிருக்கிறதென்று கேள்விப்பட்டதாய் சொன்னார். உடனே நான் ஆர்வமாய் அட்ரஸ் ஃபோன் நம்பர் போன்ற தகவல் சேகரித்துக் கொண்டு அதை முயற்சித்துப் பார்த்துவிடவேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டேன்.

விசாரிக்க ஃபோன் செய்தபோது குயில் போன்ற இனிமையான குரலில் ஒரு இளம்பெண் எடுத்துப் பேசுவதற்குப் பதில் ஒரு வயசான கட்டைக்குரல் “சொல்லுங்க.. ஆமாங்க.. ஒரு ஆள் வேணும். காலைல பத்து மணிக்கு வந்து மேடம்-ஐ பாருங்க” என்று தமிழில் பேசியது ஏமாற்றத்தைத் தந்தாலும்.. மேடம் என்பது மேனேஜரா, எம்.டி யா என்று யோசித்துக்கொண்டே அடுத்தநாள் காலை சரியாக 9.45-க்கு அந்த அட்வர்டைஸிங் கம்பெனியிருக்கிற தெருவுக்குள் நுழைந்தேன்.

அது இரண்டாவது ஏமாற்றம். நான் ஏதோவொரு சின்னக் கண்ணாடிக் கட்டிடம் ஒரு அகலமான மெயின்ரோட்டில் இருக்கும் என்று கணக்குப் போட்டு வைத்திருந்தேன். இது என்னவென்றால் ஒரு சின்ன சந்துமாதிரி எதிரில் எருமை மாடு வந்தால் அதற்கு வழிவிட திரும்பி தெரு முனைவரை போய் அப்புறம் அது போன பிறகு மறுபடி சந்துக்குள் வருகிற அளவு மிகக் குறுகலாக இருந்தது.

அந்த அட்ரஸை ஒரு வழியாகக் கண்டுபிடித்து அதன் முன் போய் நின்றபோது மலைத்துப் போனேன். கசகசவென்று வீடுகளும் கடைகளுமாய் இருந்த அந்தச் சந்தில் நெரிசலில் சிக்கியதுபோல ஒரு மாடிவீடு விழி பிதுங்கி நின்று என்னை வரவேற்றது. வாசலில் கொடியில் உள்பாவாடை, வேட்டி எல்லாம் காய்ந்துகொண்டிருக்க ஓரமாய் ஜவ்வரிசி வடாம் காயப்போட்டிருந்தது. பக்கத்து மண்டியிலிருந்து மளிகைப்பொருட்களால் ஆன கதம்ப வாசனை. வீட்டின் முன்னால் அங்கே ஒரு கம்பெனி இருப்பதற்கான அடையாளமோ போர்டோ எதுவும் இல்லை. விசாரித்தபோது வீட்டை ஒட்டியிருந்த இருட்டுச் சந்துக்குள் போய் மரப்படிக்கட்டு வழியாக மேலே போகச் சொன்னார்கள். போனேன். படி முடிகிற இடத்தில் மேலே ஓட்டுக் கூரையுடன் கூடிய ஒரு தளத்தில் ஒரு பெரியவர் நெற்றியில் பட்டை போட்டுக் கொண்டு ஒரு மர டேபிளின் முன் ஒரே ஒரு ஃபைலை வைத்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தார்.

இண்டர்வ்யூக்கு வந்திருப்பதாய் அவரிடம் தகவல் தெரிவித்தவுடன் ஒரு கால் லேசாய் ஆடுகிற ஸ்டூலை நகர்த்திப் போட்டு காத்திருக்கச் சொல்லிவிட்டு அந்த ஒரே ஒரு ஃபைலை மறுபடி பார்க்க ஆரம்பித்தார். இன்னொரு இருட்டறையிலிருந்து பாதமிரண்டில் பொன்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட என்று பாட்டு வந்தது. நான் உட்கார்ந்திருந்த அறையை மலங்க மலங்கப் பார்த்தேன். அந்த அறையின் குறுக்கே ஒரு கயிறு கட்டப் பட்டிருக்க அதில் சின்ன சைசில் சில உள் பனியன்களைப் பார்த்து புருவம் உயர்ந்தது. நான் பெரியவரைப் பார்க்க அவர் கருமமே கண்ணாக ஃபைலில் நெருக்கி நெருக்கி என்னவோ எழுதிக் கொண்டிருந்தார். அவர் நிச்சயமாக ஒரு ஆர்ட் டைரக்டராக இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது. அட்ரஸ் மாறி வந்துவிட்டேனோ என்று சந்தேகமும் வந்தது.

போய்விடலாமா என்று யோசிப்பதற்குள் திடீரென்று உள்ளறையிலிருந்து ஒரு நாற்பத்தி ஐந்து வயது அம்மாள் காட்டன் புடவையில் தோன்றினார். ’வாங்க தம்பி’ என்றார். நான் ஸ்டூலிலிருந்து எழுந்து நிற்க.. ”உங்க சாம்பிள் ஒர்க் எல்லாம் கொண்டுவந்தீங்களா” என்றார். நான் கையோடு கொண்டு போயிருந்த ஒரு சின்ன ஃபோல்டரை நீட்டினேன். நின்றபடியே ஒவ்வொரு பக்கமாகப் பார்க்க ஆரம்பித்தார்.

“எக்ஸ்பீரியன்ஸ் இருக்கா?”

“அவ்வளவா இல்ல”

“நல்லா வரையறீங்க”

”தேங்க்ஸ் மேடம்”

சட்டென்று உடம்பில் ஒரு டவுசர் தவிர வேறு எதுவும் அணியாத ஒரு பையன் ஓடிவந்து கொடியிலிருந்த உள்பனியனை உருவி அதை தலைவழியே இறக்கி அணிந்தான். அந்த அம்மாள் அவனிடம் புளகாங்கிதமாய்த் திரும்பி “அங்கிள் ட்ராயிங் எல்லாம் சூப்பரா இருக்கு பாரு.. நீ அங்கிள் கிட்ட கத்துக்கோ.. சரியா” என்றார்.

நான் கலவரமடைந்து.. “ஆஃபிஸ் எங்க இருக்கு?” என்றேன்.

“இதான் ஆஃபிஸ்.. அவரு அக்கவுண்டண்ட்.. ரேடியோக்கு ஜிங்கிள்ஸ் நிறைய பண்ணிருக்கோம். நிறைய துணிக்கடை எங்க கிளையண்டு. ரேடியோல திருமணப் பண்டிகை மங்கலப் பட்டு-ன்னு ஒரு விளம்பரப் பாட்டு கேட்டிருப்பீங்களே. அது நானே ட்யூன் போட்டுப் பாடினது என்றுவிட்டு தொண்டையை செறுமி அதை பாடிக்காட்ட ஆரம்பித்தார்.

“மேடம்.. கம்ப்யூட்டர்...?”

”கம்ப்யூட்டர் எதும் இல்லை. வேணும்னா வாங்கிடலாம். என்ன விலை வரும்?”

திடீரென்று வீட்டுக்குள் சாம்பார் கொதிக்கிற வாசம் பலமாய் வந்தது. என்னை சந்தேகமாய்ப் பார்த்துக்கொண்டே ஒரு சாம்பல் நிறப் பூனை மியாவ் என்று கடந்தது. அந்த அம்மாள் ஃபோல்டரை திருப்பிக் கொடுத்தார். அக்கவுண்டண்டட் ஃபைலில் முற்றிலுமாய் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருந்தார்.

ரொம்ப நம்பிக்கையுடன் ”நீங்க மண்டேவே ஜாயின் பண்ணிக்கலாம். மண்டே வரும்போது அவர்ட்ட அப்பாயிண்ட் லெட்டர் தரச்சொல்றேன்” என்றார் மர டேபிள் மனிதரைக் காட்டி.

அந்த அம்மணியிடம் வெகு அவசரமாய் விடைபெற்றுக் கொண்டு மரப்படி இருட்டில் தடுமாறாமல் கவனமாய் இறங்கி வெளியே வந்து எருமைச் சாணியை மிதிக்காமல் வீட்டுக்குத் திரும்பும் வழியில் திருமணப் பண்டிகை மங்கலப் பட்டு என்று வாய் தன்னிச்சையாகப் பாடிக்கொண்டிருந்ததை உணர்ந்தேன்.

ஓம் சாந்தி!


கடந்த சில நாட்களாக எனக்கு ஒரு பிரச்சினை. அதுவும் எனக்கு அது அடிக்கடி நிகழ்வதாகவும் தோன்றுகிறது. அது என்னவென்றால் யாரையாவது பிடித்து சகட்டு மேனிக்குத் திட்டுவது. இதற்கு முன்பு இப்படி செய்ததற்கு பெரிய முன் அனுபவம் எதுவும் அதிகமாய் இல்லை. இது என் இயல்புக்கு மாறான விஷயமாகவும் கூட அடிக்கடி தோன்றுகிறது. என் இயல்பையும் சுபாவத்தையும் நெருக்கமாய் அறிந்தவர்கள் இதைப் பார்த்தால் நிச்சயம் ஆச்சரியப்படுவார்கள்.

திட்டுவதென்றவுடன் ஏதோ தணிக்கை செய்யப்பட்ட, படாத வார்த்தைகளை இட்டு நிரப்பி, பரம்பரைகளை வம்பிக்கிழுத்து அல்லது பிறப்பு பற்றின சந்தேகங்களைக் கிளப்புகிறேன் என்று தயவு செய்து தவறாக நினைத்துவிடாதீர்கள். சென்னையில் சுமார் எட்டு ஆண்டுகள் வாழ்ந்தும் அந்த அளவு முன்னேற்றத்திற்கு மனதளவில் நான் தயாரில்லை. அதற்காக சும்மா வாய்க்குள் யாருக்கும் கேட்காத மாதிரி முணுமுணுத்துவிட்டு நகர்ந்துவிடுவேன் என்றில்லாமல் நாகரிக உலகில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சில சொற்பதங்களுடன் பக்கத்தில் நிற்பவர், நடப்பவர் அல்லது உட்கார்ந்திருப்பவர் என்று எல்லோர் காதிலும் விழுவதுமாதிரி நன்றாக சத்தமாக இரைதல்.

இதன் காரணமாக என்ன மாதிரி விளைவுகள் எனக்கு நேருகிறதென்று சொல்கிறேன். 1. உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து நரம்புகள் லேசாக புடைத்துக்கொள்கிறது. 2. நின்றுகொண்டு திட்டுவதென்றால் அநிச்சையாய் நடு நெற்றியை விரல்களால் தீவிரமாகத் தேய்த்துக்கொண்டு குறிவைக்கப்பட்ட எதிராளியை நோக்கி உர்ரென்று ஒரு பார்வையை வீசுதல். 3. ஆப்தல்மாலஜிஸ்ட்-கள் சொல்வது போல கோபத்தில் கருவிழிக்குள்ளே பாப்பா விரிதல் 4. அதிக டென்ஷன் ஏற்படுவதால் லேசாய் பெருமூச்சு வாங்குதல். 5. கோபத்தால் உடலானது இன்னபிற வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படுதல். 6. சூழ்நிலை மறத்தல்.

எதனால் திட்டவேண்டியிருக்கிறது? கோபம் வருவதால். எதனால் கோபம் வருகிறது? யாரோ என்னவோ செய்வது என்னை பாதிப்பதால். ஆனால் அவையெல்லாம் நியாயமான விஷயங்களுக்கான நியாயமான கோபங்கள் என்று எனக்கு நன்றாய்த் தெரியும். இது கூட வராவிட்டால் அப்புறம் என்ன மனுஷன் நீ என்று என்னை நானே சில நேரம் கேட்டுக்கொள்வதன் பின்விளைவாகத்தான் மேற்படி விஷயங்கள் அரங்கேறுகின்றன. அதைக்கூட பண்ணமுடியவில்லையெனில் இளிச்சவாயன் என்கிற பட்டம் கட்டி அப்படியே கட்டம் கட்டிவிட மாட்டார்களா மக்கள் என்றொரு எண்ணமும் கூடவே எழுகிறது. தவிர நான் புத்தனோ அல்லது புத்தனின் வழியைக் கடைபிடிப்பவனும் அல்லன். மூன்றாம் முறை முகத்தில் அறைந்தால் புத்தனுக்கும் கோபம் வரும் என்று படித்ததில்லையா நீங்கள்?

வாசற்படியில் கட்டிப்போட்டிருக்கிற நாயைக் காட்டி “ஒண்ணும் பண்ணாதுங்க” என்று சொல்கிற மாதிரி நம்மையும் இனியும் யாரும் சொல்லிக் கொண்டிருக்கக்கூடாது என்கிற முனைப்பின் எதிரொலி இது. இவன் ஒரு அப்பாவி, பிள்ளைப்பூச்சி என்கிற மாதிரி பெயர்கள் நமக்கு அடைமொழியாகவோ, புனைபெயராகவோ வந்து சேராமலிருக்கவேண்டுமென்றால் நாம் கிடைத்த சந்தர்ப்பங்களில் குரல் உயர்த்தி நிரூபணம் செய்துகொண்டால்தான் ஆயிற்று இல்லையா?

இப்படிப் புலம்புகிற அளவுக்கு அப்படி என்ன ஆயிற்று? சொல்கிறேன். ஒரு பிரபல மொபைல் மற்றும் இன்டர்நெட் சேவை நிறுவனம் இந்த மாசம் காரணமில்லாமல் உங்கள் பில்தொகையை இரட்டிப்பாக அனுப்புகிறது. காரணம் கேட்டால் கூலாக ‘டெக்னிகல் எர்ரர்’ என்கிறார்கள். நீங்கள் சர்வீஸூக்குக் கொடுத்திருந்த வாகனத்தில் நீங்கள் சொல்லியிருந்த குறைகளை சரியாகச் செய்யாமல் விடுவதுடன் புதிதாக ஒரு சில குறைகளை உண்டுபண்ணி அனுப்புகிறார்கள். நீங்கள் ஒரு எலெக்ட்ரானிக் இசைக்கருவியை சரிசெய்ய ஆழ்வார்பேட்டையிலுள்ள ஒரு சர்வீஸ் சென்டரில் கொடுக்கிறீர்கள். 10 நாட்களாகியும் அவர்களிடமிருந்து எந்தத் தகவலும் இல்லையே என்று, நீங்கள் நேரில் போனபோது அதி முட்டாள்தனமான (அல்லது அதி புத்திசாலித்தனமான) காரியத்தைச் செய்து வைத்திருக்கிறார்கள். உங்கள் அபார்ட்மெண்டில் டூவீலர் ஸ்டாண்டுக்கு நேர் மேலே உள்ள வீட்டின் பால்கனியில் அவர்கள் காகத்துக்காக குழம்பு சோறு வைக்கிறார்கள். (நல்ல விஷயந்தான்) மறுநாள் நீங்கள் குழந்தையுடன் ஸ்கூலுக்கு அவசரமாய் கிளம்பும்போது உங்கள் டூ வீலரைப் பார்த்தால் அது தலையிலிருந்து கால் வரை குழம்பு சோறால் நாறியிருக்கிறது. அதை கழுவ நிச்சயம் ஒரு பக்கெட் தண்ணீர் தேவைப்படும். காக்கைகளின் கைங்கரியம்தான் அது என்றாலும் தப்பு யாருடையது என்று உணர்ந்து நீங்கள் மேலே பால்கனியைப் நிமிர்ந்து பார்க்கிறீர்கள். ரோட்டில் போகும்போது யாரோ செய்த ஒரு சாலை விதிமுறை மீறலுக்காக பக்கத்து வாகனக்காரன் உங்களைப் பார்த்து கைநீட்டி“அறிவேயில்லையா?” என்று கேட்டு விடுகிறான். இன்னொரு பைக்வாலா ஒருவன் அவன் சென்று கொண்டிருக்கிற ஒரு ரோட்டை அவன் முப்பாட்டன் காலத்திலேயே பட்டா போட்டு எழுதிவாங்கிக் கொண்ட மனோபாவத்தோடு பான் பராக் எச்சிலை அண்ணாந்து பாத்து வலப்புறமாகத் துப்ப ஒரு திடீர் ப்ரேக் அடித்து நீங்கள் அந்தச் சாரலிலிருந்து தப்பித்தது மட்டுமல்லாமல் சறுக்கி விழ இருந்த ஒரு பெரும் விபத்திலிருந்தும் அதிர்ஷ்டவசமாகத் தப்பித்து விட்டீர்கள்.

மேற்கண்ட விஷயங்கள் எல்லாம் ஒரு சிறு சாம்பிள் சாஷே பாக்கெட் மட்டுமே. இது போல நிறைய! நிறைய! நிறைய! இவையெல்லாம் இந்த வருஷம் ஆடிக்கு ஒன்றும் அடுத்த வருஷ அமாவாசைக்கொன்றுமாக இனிதே நடந்தேறி வந்தால் பரவாயில்லையே. விதி வீடியோ கேம் விளையாடியது போல எல்லாமே ஒரு இருபது நாட்களுக்குள் தொடர்ந்து நடந்துவந்தது.

நீங்கள் இந்த சூழ்நிலைகளில் என்ன செய்வீர்கள் என்று உங்களைப் பார்த்து ஒரு கேள்வியை இங்கே வீசுவதன் மூலம் என் நியாயமான கோபங்கள் குறித்தான ஆதரவுக்கு உங்களையும் இழுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நான் என்ன பண்ணினேன் என்றால் உடனே ரெளத்திரம் பழகி குரலுயர்த்திப் பார்த்ததுதான். என்னதான் நடக்கிறதென்று பார்ப்போமே! இது ஒரு மாதிரி பரிசோதனை முயற்சி. இதன் விளைவாக மூன்றாவது பாராவில் சொல்லப்பட்டது தவிர வேறெதாவது நடந்ததா? ம்ஹூம்! ஒரு சில இடங்கள் தவிர “பெரிதாய் ஒன்றும் இல்லை. தொண்டை வறண்டதுதான் மிச்சம்” என்று கொட்டை எழுத்துக்களில் வருத்தமாக சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்த விஷயங்கள் இன்றைய நகர நெரிசல் வாழ்க்கையில் பரபரத்துத் திரியும் மக்களின் பொதுவான மனோபாவத்தைக் குறித்து சிந்திக்கவைக்கிறது. மேற்கூறிய சம்பவங்களில் ஒரு சிலது நகர மனிதர்களுக்கு அடுத்தவர் மேலுள்ள அக்கறையின் கிராஃப் இறங்கிவிட்டதைக் குறிக்கிறது. ஒரு சில சம்பவங்கள் வாடிக்கையாளரின் திருப்தியை முன்னிறுத்திய சேவையை பொருட்படுத்தாமல் தேமே என்று வேலை செய்யும் பெருவாரியான கூட்டத்தை அடையாளம் காட்டுகிறது. அண்டை அயலார் மீதான பொதுவான நேசம் அல்லது சகோதரத்துவம் அருகி விட்டதென்பதை இன்னும் சிலது எடுத்துக்காட்டுகின்றன.

இந்த நிலைப்பாட்டை தினசரி எதிர்கொள்ள நேரிடுகிற சலிப்பை, எரிச்சலோ கோபமோ கலந்த வார்த்தைகளிலோ செயல்களிலோ வெளிப்படுத்திக் கொண்டிருந்தால் இந்த ஆயுள் போதாது என்றும் தோன்றுகிறது.

ஆகவே சாந்தி சாந்தி ஓம் சாந்தி.

கதை படிக்கிற குரல்

ஒரு லோக்கல் வாராந்தர நியூஸ் பேப்பரில் இந்த சின்ன வரி விளம்பரத்தைக் கண்டேன்.

"Wanted a lady to read novels in Tamil to an elderly gentleman. Clarity and good voice essential. Hours required 10 am to 11.30 or 3.30 to 5.00, 6 times a week. Kindly ring ......"

லேசான ஆச்சரியமும் நிறைய கேள்விகளும் எழுந்தன.

இதை ஒரு ஓய்வு பெற்ற கனவானின் பொழுது போக்கு அம்சமாய் மட்டுமே எடுத்துக் கொள்ளமுடியுமா என்று தெரியவில்லை. தமிழில் கதை, நாவல் படிக்க விரும்புகிறார். அதுவும் வாரத்துக்கு 6 நாட்கள், குறைந்த பட்சம் ஒன்றரை மணி நேரம். ஓய்வு நாட்களில் தன்னை எந்த வகையிலாவது பிஸியாக வைத்துக் கொள்ள அந்த முதியவரே செய்து கொள்கிற ஏற்பாடா? இல்லை மகன், மகள், மனைவி என்று வேறு யாராவது அவருக்காக எடுத்துக் கொண்ட முயற்சியா? அவருக்குத் தமிழ் தெரியாதா? அல்லது தெரிந்தும் படிக்க சோம்பேறித்தனமா? அல்லது வேறு காரணங்களா? ஏன் அவருக்கு ஆண் குரல் வேண்டாம்? எந்த மாதிரி தமிழ் நாவல்கள்? ராஜேஷ்குமாரா, பட்டுக்கோட்டை பிரபாகரா, சுஜாதாவா? அல்லது ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போல இலக்கிய நாவல்களா? சாண்டில்யன், கல்கி? எதுவானாலும் படிப்பதோ படிக்கச்சொல்லிக் கேட்பதோ நல்ல விஷயம்தான்.

ஈஸிச் சேரில் கண்ணை மூடிச் சாய்ந்து கொண்டு ஒரு பெண்மணி பக்கத்தில் உட்கார்ந்து கணீர் என்ற குரலில் கதை படிக்க, அந்த கதா பாத்திரங்களை உள்வாங்கிக் கொண்டு அவர் ஒரு புது உலகிற்கு சஞ்சரிக்கிற காட்சி ஓடுகிறது.

“அந்த பாராவை மறுபடி படி(ங்க)”
“சுத்த இழுவையா இருக்கே. இந்த நாவல் போதும். அடுத்ததைப் படிக்கலாம்”.
“மணி பதினொன்னரை ஆயிருச்சா? சரி ’தொடரும்’ போட்ரலாம். நாளைக்கு வாங்க.”
“என்ன இன்னிக்கு குரல் கரகரங்குது? த்ரோட் இன்ஃபெக்‌ஷனா?”

என்னுடைய ரிடையர்மென்ட் காலத்தை எப்படி பிஸியாக வைத்துக் கொள்ளப் போகிறேன் என்கிற யோசிப்பை கிளறிவிட்டது இது.

அன்பார்ந்த வாடிக்கையாளர்களே!

"A customer is the most important visitor on our premises. he is not dependent on us. We are dependent on him. He is not an interruption in our work. He is the purpose of it. He is not an outsider in our business. He is part of it. We are not doing him a favor by serving him. He is doing us a favor by giving us an opportunity to do so." -Mahatma Gandhi

வாடிக்கையாளர் என்பவர் ஒவ்வொரு ஸ்தாபனத்துக்கும் எவ்வளவு முக்கியம், ஒவ்வொரு வியாபாரத்திலும் அவர் எப்படி ஜீவநாடியாக இருக்கிறார் என்று மஹாத்மா காந்தி சொன்னதாக மேற்கண்ட வாசகங்கள் தாங்கிய போர்டு நிறைய இடங்களில் தொங்குவதைப் பார்த்திருப்பீர்கள். கஸ்டமர் சர்வீஸ் என்று ஆங்கிலத்தில் நளினமாகச் சொல்லப்படுகிற 'வாடிக்கையாளர் சேவை' குறித்து தொங்க விடப்பட்டிருக்கிற அந்த போர்டை எத்தனை பேர் முழுசாகப் படித்திருக்கிறார்கள்? எத்தனை பேர் அதை வாடிக்கையாளர் சேவையின் முக்கியத்தை உணர்ந்து நடந்துகொள்கிறார்கள் என்று நான் அடிக்கடி யோசிப்பதற்கான நேரங்கள் எனக்கு எப்படியோ அடிக்கடி வாய்த்துவிடுகின்றன.

கொஞ்ச நாள் முன்பு சென்னையிலுள்ள ஒரு பிரபலமான காமிரா ஷோரூமில் ஒரு காமிரா வாங்கினேன். கையில் காமிரா கிடைத்த மகிழ்ச்சியில் சில உலகப் புகழ்பெற்ற புகைப்படங்களை எடுத்துத் தள்ளிவிட்டு ஃபிலிமைக் கழுவி பிரிண்ட் போட்டுப் பார்த்தால் எல்லா போட்டோவிலும் இடது பக்கம் கொஞ்சம் கருப்பாக தீற்றல். போதாதற்கு ஃப்ளாஷூம் வேலை செய்யவில்லை. என்னடா இது என்று அதை எடுத்துக்கொண்டு வாங்கின கடைக்கே போனால், 'காமிரா வாரண்டியில் இருக்கிறது, ஆகவே சரி செய்ய முயற்சிக்கிறோம் இல்லையேல் வேறு புதிய காமிரா தருவோம்' என்றாள் அங்கொரு பெண். புதிய காமிரா பற்றிய அறிவிப்பில் நான் அகமகிழ்ந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் என் மனக் கஷ்டத்தை எடுத்துச்சொன்னேன். வாங்கி கொஞ்ச நாட்கள்கூட ஆகாத நிலையில் இப்படி பழுதடைந்து போனது வருத்தத்தைத் தருவதாகவும், கூடிய விரைவில் அது நல்ல முறையில் திரும்பக் கிடைத்தால் நல்லது என்றும் தெரிவித்தேன். அதற்கு அவள் சளைக்காமல் சர்வீஸ் ஆள் லீவில் போயிருப்பதாகவும் ஒரு பத்துநாள் ஆகும் என்றும் தெரிவித்தாள். அது சீக்கிரம் சரி செய்யப்பட்டு திரும்பக் கிடைப்பதன் தேவையை நான் அவளிடம் மறுபடி மறுபடி வலியுறுத்தினேன். உணர்ச்சியே இல்லாமல் எல்லாம் கேட்டுவிட்டு "ஏன் சார் இப்படி சலிச்சுக்கறீங்க!" என்றாள். எனக்கு வந்த கோபத்தில் பற்களை நறநறத்துவிட்டு அவளிடம் அவளுக்கு உறைக்கிற மாதிரி என்னமோ சொன்னேன். வார்த்தைகள் சரியாக நினைவில்லை.

காமிராவைக் கொடுத்துவிட்டு வந்து ஒரு மாதம் ஆகிறது. நான்கு முறை போன் பண்ணியபோதும் ஏனோ தானோவென்று பதில் வந்தது. இன்றைக்கு மறுபடி போன் பண்ணி கொஞ்சம் கடுமையாய் பேசினதுக்குப் பலனாக ஒழுங்காக பதில் வந்தாலும் காமராவின் நிலைபற்றி இன்னும் தெளிவாய் அறிந்துகொள்ள முடியவில்லை. பயங்கரக் கோபம் வருகிறது. ஆனால் என்னை மாதிரி இறைந்து பேசாத, அதிகாரம் செய்யத் தெரியாத, அமைதியாய் பேசுகிற ஆட்களுக்கு இதுதான் கதிபோலும். என் குணத்திற்கு நேர் மாறான நண்பர்கள் இரண்டு பேர் இருக்கிறார்கள். அவர்களுடன் நான் போன ஒரு சில இடங்களில் அவர்கள் நடந்து கொண்ட முறையால் நான் பல முறை வியந்திருக்கிறேன். அதிலும் ஒரு நண்பன் அவன் வீட்டில் மாட்ட ஏர்கண்டிஷனிங் மெஷின் வாங்க ஒரு பிரபல ஷோரூமுக்குப் போய் அடித்த கூத்து இருக்கிறதே! ஷோரூமில், ஏ.ஸி சாதனத்தை நாளைக்கு வீட்டில் டெலிவரி செய்துவிடுவோம், இப்போது இந்த டெலிவரி ரசீதில் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டுப் போங்கள் என்றார்கள். அதில் Goods received in good condition என்றிருப்பதைப் பார்த்து அதில் கையெழுத்துப் போட மறுத்துவிட்டான் நண்பன். பொருளைப் பெற்றுக் கொள்ளாமலே எப்படி பெற்றுக்கொண்டதாக கையெழுத்திட முடியும் என்பது அவன் வாதம். அதுவும் in good condition!! நியாயந்தான். கடைசியில் அவன்தான் ஜெயித்தான். அடுத்தநாள் ஏ.ஸி கிடைத்தபிறகு அதன் ஜில்லிப்பில் கையெழுத்திட்டுக் கொடுத்தான். நானானால் என்ன செய்திருப்பேன் என்று நீங்கள் சுலபத்தில் ஊகித்துக்கொள்ளலாம். நம்பிக்கையே வாழ்க்கை! நம்பிக் கெடுவதும் கூட!

மேற்கண்ட அனுபவங்களுக்கு நேர் மாறான அனுபவங்களும் ஏற்படுகின்றன. வீட்டுக்கு அருகாமையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு பிரபல காலணியகத்திற்கு ஷூ லேஸ் வாங்கப் போனேன். அங்கிருந்த கல்லாப் பெரியவர் புன்னகையுடன் சலாம் போட்டு வரவேற்று என்னிடமிருந்து ஒரு கணிசமான வியாபாரத்தை எதிர்பார்த்து நிற்க நான் தயக்கத்துடன் ஷூ லேஸை மட்டும் ஆறே ஆறு ரூபாய்க்கு வாங்கினேன். திரும்பும்போது இன்னொரு சலாம் போட்டு மறுபடியும் வாங்க சார் என்றார். அவர் சொன்ன வாய் முகூர்த்தம் மறுபடி அங்கே போக வேண்டியதாகப் போயிற்று. காரணம் இருக்கிறது. வாங்கிப் போன ஷூ லேஸை ஷூவின் துளைகளில் நுழைத்தெடுத்துவிட்டு கடைசியில் ஒரு நாட் போடுவோமில்லையா? அதற்கு நீளம் போதாமல் ரொம்ப்ப்ப்ப சின்னதாக இருந்தது. நுனியை விரலிலேயே பிடிக்க முடியவில்லை. ஆறு ரூபாய் வேஸ்ட். மறுபடியும் அதே கடைக்குப் போனபோது அதே பெரியவர். அதே புன்னகை. அதே சலாம். விஷயத்தைச் சொல்லிவிட்டு வேறு ஷூ லேஸ் பெரிதாக வாங்கிக்கொண்டேன். (மறுபடி எட்டு ரூபாய் கொடுத்துத்தான்). அப்போது அவர் ஒரு கூப்பனை என் கையில் கொடுத்து, உங்கள் குழந்தைக்கான ஸ்கூல் ஷூவை ஏப்ரலில் இங்கே வாங்கினால் ஒரு பரிசு கொடுப்பதுடன், அதிர்ஷ்டக்குலுக்கலிலும் உங்களுக்கு பரிசு கிடைக்க வாய்ப்புண்டு என்றும் மேலும் உங்கள் குழந்தை பரீட்சையில் முதல் மார்க்கில் தேற கடவுளிடம் வேண்டிக்கொள்வோம் என்றும் தெரிவித்தார். கடைசி வாக்கியம் நிஜமாகவே மனதை நெகிழ்த்துவதாக இருந்தது. சும்மா சொல்கிறார் என்று தோன்றவில்லை. அவர் நேர்மையாகவே அதைப் பண்ணுகிறவராகவும் இருக்கலாம். எனக்கு மறுபடி அந்தக் கடைக்குப் வரவேண்டும் என்று அங்கே நின்றுகொண்டிருக்கும்போதே தோன்றியது. எதுவும் வாங்காவிட்டாலும் குறைந்தபட்சம் அந்தப் பெரியவரைப் பார்ப்பதற்காவது. இது வாடிக்கையாளனின் ஒரு வகையான உணர்வு நிலை.

இதே மாதிரி என் இரு சக்கர வாகனத்துக்கு இன்ஸ்யூரன்ஸ் கட்டப் போனபோதும்கூட நடந்தது. ஒரு அரசு விடுமுறைக்கு முந்தைய தினம் என்பதால் அதிகம் பணியாட்கள் வராத நிலையில் அந்த இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் மேலாளரே இறங்கிவந்து நான் உட்பட ஒரு சில வாடிக்கையாளர்களை மிக மரியாதையுடன் நடத்தி கேஷியர் முதல் டெஸ்பாட்ச் வரை எல்லா வேலைகளையும் தாமாகவே செய்து முடித்து பாலிஸியை கையில் தந்தார். அவருடைய பொறுமையும் பணிவும், கடமையுணர்வும் என்னால் இன்னும் மறக்க முடியவில்லை.

ஒரு சில பெரிய நிறுவனங்கள் வாடிக்கையாளர் சேவையின் உன்னதத்தை உணர்ந்து செயல்பட்டு பெரிய அளவில் உயர்ந்த கதைகளும் உண்டு. எங்கே பணியாட்கள் வாடிக்கையாளர்களிடம் பணிவாகவும், சேவை மனப்பான்மையுடனும் நடந்து கொள்கிறார்களோ அங்கே வாடிக்கையாளர்கள் திரும்பத் திரும்ப வருவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. எந்த சந்தர்ப்பத்தை முன்னிட்டும் வாடிக்கையாயர்கள் முகம் சுழித்தாலோ, கோபப்பட்டாலோ, பொறுமையிழந்து திரும்பிப் போனாலோ அங்கே அந்த நிறுவனத்தில் கண்ணுக்குத் தெரியாத சரிவு ஏற்பட்டுவிடுகிறது. இதை நிறைய வளர்ந்த நிறுவனங்கள் தெளிவாய் தெரிந்து வைத்துள்ளன. உதாரணத்திற்கு என் அப்பா ஒரு மளிகைக் கடையில் வாங்கிவந்த ஒரு 7'O Clock ப்ளேடு பாக்கெட்டில் ஒரு ப்ளேடுகூட இல்லாமல் காலிப் பெட்டியாய் இருப்பதைப் பார்த்து (25 ப்ளேடுகள் அதில் இருக்கவேண்டும்) அந்த நிறுவனத்திற்கு தன் பணவிரய விஷயத்தை ஒரு கார்டில் எழுதிப் போட்டார். ஒரு வாரம் கழித்து 7'O Clock தயாரிப்பு நிறுவன மார்க்கெட்டிங் மேலாளரிடமிருந்து மன்னிப்புக் கோரி ஒரு கடிதமும் இரு ப்ளேடு பாக்கெட்டுகளும் வந்து சேர்ந்தன. அப்பா புல்லரித்துப் போனார். இந்த மாதிரி விஷயங்கள் அத்தி பூத்தாற்போல் என்றைக்காவது நடப்பதால் புல்லரிப்பதில் ஆச்சரியமொன்றுமில்லை.

ஒரு சில இடங்களில் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக என்னென்னமோ செய்கிறார்கள். பரிசுக் கூப்பன் கொடுக்கிறார்கள். பொங்கல் கொடுக்கிறார்கள். குடும்பத்தினர் பிறந்த நாட்களைக் குறித்து வைத்துக்கொண்டு வாழ்த்துக் கார்டு அனுப்புகிறார்கள். கஸ்டமர் உட்காரும்போது நாற்காலியை பிருஷ்டத்திற்கு சரியாக நகர்த்திக்கொடுக்கிறார்கள். குழந்தைகளுக்கு சாக்லேட் அல்லது பலூன் கொடுக்கிறார்கள். வாசல் கண்ணாடிக் கதவை நமக்காகத் திறந்து மூடுகிறார்கள். எங்களிடம் சர்வீஸ் பண்ணின உங்கள் டூ வீலர் எப்படி ஓடுகிறது என்று போன் பண்ணி விசாரிக்கிறது ஒரு சர்வீஸ் சென்டர். மே ஐ ஹெல்ப் யூ சார் என்று கேட்டு பாங்குகளில் டெபாசிட் ஃபார்ம் நிரப்பித் தருகிறார்கள். இது எல்லாமே மகிழ்ச்சியைத் தருகின்றன.

ஈஃதிப்படியிருக்க ஒரு பெரிய துணிக்கடையில் ஏராளமான பேரை ஆங்காங்கே நிறுத்திவைத்து சேவை என்கிற பெயரில் ரொம்ப சோதிப்பதும் உண்டு. அப்படி இப்படி திரும்பினால் போதும் இரண்டு பேர் ஓடி வந்து நின்று என்ன சார் வேணும் என்பார்கள். கண்ணைக்கூட சிமிட்ட முடியாது. உடனே பக்கத்தில் ஓடோடி வந்து நின்று விழுந்து விழுந்து கவனித்து நம் அசைவுகளின் சுதந்திரத்தைப் பறித்துவிடுவார்கள். ஓவர் சர்வீஸூம் திகட்டிவிடும் என்பதை அவர்கள் புரிந்து கொள்வது நல்லது. ஒரு பிரபல தனியார் செல்லுலார் கம்பெனியில் நாம் மொபைல் இணைப்பு எடுத்திருக்கும்போது நாம் சொல்கிற குறைகளுக்கெல்லாம் செவி சாய்க்காமல், நாம் கனெக்ஷன் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்தால் போதும் பத்துப் பதினைந்து பிரதிநிதிகள் வீட்டுக்கும் ஆபிஸூக்கும் படையெடுப்பார்கள். ஏன் சார் கட் பண்றீங்க என்று பதறுவார்கள். போதாததற்கு இணைப்பை நாம் சரண்டர் லெட்டரில் எழுதிக்கொடுத்த தேதியில் துண்டிக்காமல் ஒரு நாலைந்து மாதங்களுக்கு பாராமுகமாக இருப்பதுடன், நாம் பேசாத, உபயோகிக்காத இணைப்புக்கெல்லாம் பில் அனுப்பிக்க்க்க்கொண்ண்டே இருப்பார்கள். சரியான டார்ச்சர் அது! இத்தனைக்கும் தனியாக 'வாடிக்கையாளர் சேவைப் பிரிவு" ஒன்றை இந்த நிறுவனம் வைத்திருக்கிறது.

ஒரு நாள் காலை அவசரமாய் ஏதோ வாங்க ஒரு மளிகைக் கடைக்குப் போனபோது அங்கேயிருந்த வேலையாள் என்னைக் கொஞ்சம் காத்திருக்கச் சொன்னார். விசாரித்தபோது முதலாளி பூஜை பண்ணிக்கொண்டிருப்பதாகவும் அது முடிந்த பிறகே வியாபாரம் என்றார். நான்தான் முதல் போணியாம். அவர் பூஜையை செய்வதைப் பார்த்தால் அன்றைக்கெல்லாம் முடியாதுபோல் தோன்றியது. அத்தனை விலாவாரியாக பூஜை நடந்துகொண்டிருந்தது. எனக்கு காத்திருக்க நேரமில்லையாதலால் வேறு கடைக்குப் போய்விட்டேன். திரும்பும்போது ஒரே யோசனை. முதலாளி பூஜை செய்வது நல்ல விஷயம். ஆனால் எதற்காக? வாடிக்கையாளர் கடையைத் தேடி வரவேண்டுமென்பதற்காக. முழுசாய் முன்னால் வந்து நின்ற வாடிக்கையாளனும் அவர் பண்ணின பூஜையில் திரும்பிப்போய்விட்டானென்றால் அப்புறம் எதற்காக அதையெல்லாம் செய்கிறார் என்று கேள்வி எழுகிறது. செய்யும் தொழிலே தெய்வம். கஸ்டமரே கடவுள் என்று அவருக்கு ஏன் புரியவில்லை என்று நினைத்தேன். ஒரு வேளை என்னைப் போன்றவனுக்கு சில்லறை வியாபாரமல்லாமல் மொத்த விற்பனை, மெகா சேல் என்று பெரிய ப்ளான் எல்லாம் கைகூடவேண்டுமென்று வேண்டுதலோ என்னவோ!

கோடி கோடியாய் சம்பாதித்தும் கடைக்குள் வந்து நிற்பவன் வேர்த்து வடிய நின்றிருக்கும்போது மின் விசிறிகூட போடாதவனும் இருக்கிறான். காற்றே நுழைய முடியாத இடத்தில் புறாக்கூண்டு மாதிரி கடையை வைத்துக்கொண்டு நாம் போனதும் கூல்ட்ரிங் சாப்பிடறீங்களா சார் என்று கேட்பவனும் இருக்கிறான். வாங்குவது பதினைந்து பைசா தீப்பெட்டியானாலும் பின்னதுதுதான் வாடிக்கையாளனுக்கு மன நிறைவைத் தருகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

அதெல்லாம் இருக்கட்டும். நான் இன்று வாங்கி வந்த ஷூ லேஸ் முடிச்சுப்போடத் தேவையான நீளத்தைவிட ரொம்ப அதிகமாக இருந்து ஷூக்கு வெளியே ரொம்பத் தொங்குகிறது. எனக்கு மட்டும்தான் இப்படி வாய்க்கிறதா என்ன? என்னமோ போங்கள்! நானொரு அப்பாவி "கஷ்ட"மர்தான்.

மனிதம் எனப்படுவது யாதெனில்

கருத்த தேகம். குழி விழுந்த இரு கண்கள். தன் போக்கில் காடு போல் அடர்ந்து படர்ந்த தாடி மீசைக்குப் பின்னால் தொலைந்து போன முக அடையாளம். சிக்குப் பிடித்த ஜடை முடி. எங்கேயோ வெறித்த பார்வை. எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் அணிந்த இன்னும் கழற்ற முடியாத கிழிந்து கந்தலான உடை. சிறியதும் பெரியதுமாய் உடம்பு முழுவதும் தொங்கும் அழுக்கப்பிய எண்ணற்ற மூட்டைகள். அதற்குள் பொறுக்கிச் சேகரித்த அழுக்குத் துணிகள் மற்றும் காகிதங்கள். ஒரு பொக்கி்ஷத்தைப் போல அவைகளை தன் உடம்பிலிருந்து இறக்க மறுத்து சுமையோடு அலைகிற கால்கள். புண்கள். புண்களின் அரிப்பை அடக்க வழி தெரியாமல் அதன் மேல் சுற்றிக் கட்டின, குப்பையிலிருந்து பொறுக்கின பாலிதீன் பைகள். புண்களில் நெளியும் புழுக்கள். எச்சில் வழிகிற வாயிலிருந்து சதா மந்திரம் போல திரும்பத் திரும்ப அலைகிற புரியாத வார்த்தைகள். எதையோ தேடிக்கொண்டும், சைகை செய்துகொண்டும் காற்றில் வளைந்து நெளிகிற விரல்கள்.

மன நிலை பிறழ்ந்து சுய நினைவற்று தான் யாரெனத் தெரியாமல் (அல்லது தெரிந்து) மேற்சொன்ன மாதிரியான தோற்றத்துடன் தெருக்களில் அலைகிற சிலரை நான் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் எனக்கு மனதில் சில கேள்விகள் ஓடும். யார் இவர்கள்? ஏன் இப்படி ஆனார்கள்? பிறந்ததிலிருந்தே இப்படியிருக்க வாய்த்துவிட்டதா இவர்களுக்கு? அல்லது நடுவில் ஏதோ ஒரு சம்பவம் அவர்கள் வாழ்க்கையை இப்படி புரட்டிப் போட்டதா? எங்கே பிறந்து எப்படியெல்லாம் வளர்ந்தார்கள்?

உடுமலையில் வசித்தபோது மணி என்று ஒருவன் எங்கள் தெருவில் சுற்றிக்கொண்டிருப்பான். தவறாமல் அவன் தோளிலும் இரு மூட்டைகள். ஒன்றில் உடைந்த, உடையாத அல்லது உடைந்து ஒட்டவைக்கப்பட்டவை என வித விதமாய் ஏராளமான மூக்குக் கண்ணாடிகள். இன்னொரு மூட்டையில் முழுக்கப் முழுக்க ஐந்து பைசா, பத்துப் பைசாவாக சில்லறை நாணயங்கள். சாப்பாடு கொடுத்தால் வாங்கிக் கொள்வான். பாடச் சொன்னால் மூட்டைகளை இறக்கி வைத்துவிட்டு, இரு ஆள்காட்டி விரல்களையும் காதுக்குள் சொருகிக் கொண்டு ஆட்டியபடியே "கண்களும் கவி பாடுதே..." என்று தன்னை ஒரு பாகவதராய் உருவகப்படுத்திக்கொண்டு பாடுவான். தினம் ஒரு மூக்குக் கண்ணாடியைப் போட்டுக்கொண்டும் திரிவான். லூசு என்று எல்லோராலும் விளிக்கப்படுகிற அவன் தெருவிலேயே எங்காவது தூங்குவான். சில நேரம் சிறுவர்கள் அவன் மீது கல் வீசுவதும் உண்டு.

இன்னொருவன் இருந்தான். முதல் பாராவில் சொன்ன தோற்றமுடையவன் அவன். எப்போதும் விரல்கள் மடக்கி மடக்கி சதா கணக்குப்போட்டுக்கொண்டிருப்பான். அல்ஜீப்ரா ஃபார்முலா எதையாவது கேட்டால் தலைகீழாய் ஒப்பிப்பதைப் பார்த்து அப்போது பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த நான் மிக வியந்திருக்கிறேன். இம்மாதிரி ஆட்களின் தோற்றத்தையும், நடவடிக்கைகளையும், மன நிலையையும் பார்த்து பரிதாபப்பட்டு நாமெல்லாம் உடனே இடத்தை காலிசெய்து விடுகிறோம். அவர்களை அணுகி அவர்களின் பூர்வீகத்தையோ, பிறப்படத்தையோ, கடந்த காலத்தையோ அறிந்து கொள்ள நமக்கு ஒரு நாளாவது தோன்றியிருக்குமா? நமக்கோ ஆயிரம் வேலை. ஆறாயிரம் குடைச்சல்.

இந்த மாதிரி ஆட்களை அழைத்துப் போய் அவர்களைக் கழுவிக் குளிப்பாட்டிச் சுத்தம் செய்து, சவரம் செய்து, மருத்துவ சிகிச்சை அளித்து, பளிச்சென்று நல்ல உடைகளை உடுக்கச் செய்து கொண்டு வந்து நிறுத்தினால் நிச்சயம் அவர்களது தோற்றம் என்னைப் போலவோ உங்களைப் போலவோதான் இருக்கும். அவர்களுக்குள் அத்தனை நாள் ஒளிந்திருந்த பழைய பொலிவான மனிதன் வெளிப்படும்போது நமக்கு நம்பமுடியாத திகைப்பும், அதிர்ச்சியும் காத்திருக்கும். ஆனால் இதையெல்லாம் யாராவது செய்வார்களா? அத்தனை கருணை உள்ளமெல்லாம் யாருக்கு வாய்த்திருக்கிறது இங்கே? எல்லோரும் விலகிச் செல்கிறபோது நெருங்கி முன்வந்து அதைச் செய்கிறவரை கடவுள் என்று கருதிவிட மாட்டோமா? அப்படி யாராவது இருக்கிறார்களா என்ன?

இருக்கிறார். அவர் பெயர் முகம்மது ரஃபி.

ரஃபி செய்து கொண்டிருக்கிற அரிய காரியம் இப்படிச் சாலையோரமாய் மனநிலை பிறழ்ந்து திரியும் ஜீவன்களை அழைத்துச் சென்று, அன்பு காட்டி அரவணைத்து, உரிய சிகிச்சை அளித்து அவர்களை மீண்டும் மனிதர்களாக்க முயற்சிப்பது. இது போன்றவர்களை வைத்துப் பராமரிக்க போதிய பண வசதி இல்லாத நிலையில் தன் குடும்பத்தாரை ஊருக்கு அனுப்பிவிட்டு தன் வீட்டையே காப்பகமாக்கினவர். இந்தியா பிளாஸ்டிக் என்ற பெயரில் சொந்தமாக தொழில் புரிந்துவரும் ரஃபி அதில் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியிலும், நண்பர்கள் அளிக்கிற நன்கொடைகளின் துணை கொண்டும் வளர்ந்த இந்தக் காப்பகம் பலருக்கு நல்ல வழியைக் காட்டியிருக்கிறது. ரஃபியின் சேவையைக் கண்டு வியந்த ஹிந்து பத்திரிக்கை ஒரு ஆம்புலன்ஸ் வண்டியை நன்கொடையாக வழங்கியிருக்கிறது. மேலும் சென்னை சில்க்ஸ் நிறுவனம் காப்பகம் கட்டுவதற்காக அன்பளிப்பாக அளித்த ஒரு நிலத்தில் நண்பர்களின் தன்னார்வம் மிக்க சிலரோடு சேர்ந்து ஒரு சேவை அமைப்பை ஏற்படுத்தி, நல்ல காப்பகம் ஒன்றை உருவாக்கி அதற்கு 'அன்பகம்' என்று பெயரிட்டிருக்கிறார். சென்னையிலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் உருவாக்கப்பட்டிருக்கிற அன்பகம் தற்போது 40 பேரை பராமரிக்கக் கூடிய வசதிகளோடு ஒப்பற்ற சேவையை செய்து வருகிறது. இதுவரை இங்கு பராமரிக்கப்பட்டு, சிகிச்சையாய் குணம் பெற்று அவரவர் குடும்பத்தோடு சேர்த்துவைக்கப்பட்ட மன நோயாளிகளின் எண்ணிக்கை 270. தற்போது 35 பேர் அன்பகத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். முகம்மது ரஃபியின் சேவையைப் பாராட்டி மீனம்பாக்கம் ரோட்டரி சங்கம் அவருக்கு "For the Sake of Honour Award" என்னும் விருதை வழங்கி கெளரவப்படுத்தியிருக்கிறது.

முகம்மது ரஃபியின் காப்பகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு குணமடைந்த மனநோயாளிகளின் சிகிச்சைக்கு முன்பும் பின்புமான புகைப்படங்கள் மட்டுமே இப்போதைக்கு காணக் கிடைத்தன. பார்த்தால் வியப்பில் நிச்சயம் நம் கண்கள் விரியும். முன்பு அழுக்குக் குப்பையாய் அவலட்சணமாய் அடையாளமற்றுத் திரிந்து கொண்டிருந்தவர்கள் ரஃபியின் கைபட்டு மறு அவதாரம் எடுத்திருக்கிற புகைப்படங்கள். அந்த புகைப்படங்களிலிருந்து ஒரு சாம்பிள் கீழே கொடுத்திருக்கிறேன்.

யாரும் செய்யத் துணியாத ஒரு காரியத்தைச் சேவையாய் செய்துவரும் திரு. முகம்மது ரஃபிக்கு என் சிரம் தாழ்ந்த வந்தனங்கள்.

ஐநூறு ரூபாயில் ஒரு அனுபவம்


மேற்கண்ட படத்தில் நீங்கள் பார்ப்பது ஒரு பேட்டரி. பட்டன் செல் என்றும்கூட இதற்கு புனைபெயர் இருக்கிறது. குவார்ட்ஸ் கைக்கடிகாரம், சிறிய பென் டார்ச், PDA, Organiser போன்ற சாதனங்கள், குழந்தைகளின் சில விளையாட்டுப் பொருட்கள் போன்ற எத்தனையோ சாதனங்களில் உபயோகம் இது ஒரு சட்டைப் பொத்தானைவிட பெரிய அல்லது சிறிய அளவுகளில் கிடைக்கக்கூடியது. இந்த பேட்டரியின் மேற்புறம் நிக்கல் காட்மியம் எனும் உலோகத்தினாலானது. இதன் பாஸிட்டிவ் நெகட்டிவ்வுக்கு மத்தியில் மெஷின் பாக்கிங்கில் அடைபட்டிருக்கிற பொருள் ஸில்வர் ஆக்சைடு அல்லது மெர்க்குரிக் ஆக்ஸைடு அல்லது லித்தியம் இவைகளில் ஏதாவது ஒன்று. கைக்கடிகாரத்தில் போட்டால் ஒரு வருடமும், கணினிக்குள் போட்டால் ஒரு இரண்டு வருடமும் அதன் தரத்திற்கேற்ப உழைக்கிறது.

ஒரு நல்ல பகல் பொழுதில் மதிய உணவுக்கு முன்னர் தன் பொம்மைக் காமராவை சுக்கு நூறாக உடைத்து அதிலிருந்த இந்த பேட்டரியை வாயில் போட்டுக் கொண்டான் என் பையன். அவனுக்கு அது "ஜெம்ஸ்" மிட்டாய் மாதிரி சுவைத்ததா எனத் தெரியவில்லை. அப்படியே முழுங்கிவிட்டு பொறுப்பான மகனாய் அம்மாவிடம் தகவலறிவித்துவிட்டான்.

அதற்கப்புறம்தான் கூத்து. உடனே வீட்டிலிருந்து டெலிபோன். ஆபிஸில் "சொல்யூஷன் ஆர்க்கிடெக்ச்சர்" வரைந்து கொண்டிந்தவன் அப்படியே அம்போவென்று விட்டுவிட்டு புரவியேறி கடுகி விரைந்தேன் வீட்டுக்கு. (உடனே புருவம் உயர்த்தாதீர்கள்). நான் திட்டுவேன் என்று பயந்து போய் நின்றிருந்தவனிடம் அவன் முழுங்கிய பொருள் மேற்படி பேட்டரிதானா என்று ஒரு புலன் விசாரணை செய்து உறுதிப்படுத்திவிட்டு அருகாமையிலுள்ள பெரிய தனியார் மருத்துவமனைக்கு மறுபடி கடுகி விரைந்தோம். அவன் பேட்டரியை விழுங்கின கையோடு இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்து சமையலுக்கு வைத்திருந்த பச்சை பீன்ஸ் விதைகளை வேறு ஒரு கைப்பிடி தின்றிருந்தான். அவன் என்னவோ ரொம்ப உற்சாகமாய்த்தான் இருந்தான் என்றாலும் அம்மா சொன்ன 'டாக்டரங்கிள் உன் வயித்த கீச் கீச்னு அறுத்து பேட்டரிய எடுக்கப்போறாங்க பாரு' -என்பதில் அவன் கொஞ்சம் பயந்திருந்தான்.

கேசுவாலிட்டி பிரிவில் நோயாளிகள் அதிரும் வண்ணம் "டேய் மச்சி.. நீ மெட்ராஸிலேயா இருக்க. எப்படா வந்த?" என்று கத்திக் கத்தி செல்போனில் பேசிக்கொண்டிருந்தவர்தான் டாக்டர் என்று சத்தியமாய் நம்ப முடியவில்லை. ஒரு சின்ன வயசுப் பையன். வயது 25 இருக்கலாம். தயக்கத்துடன் பேட்டரி வி்ஷயத்தைச் சொன்னவுடன் எழுந்து நின்று யோசனையாய் மோவாக்கட்டையை சொறிந்து போஸ் கொடுத்தார். நான் நம்பிக்கையில்லாமல் மனைவியையும் பையனையும் பார்த்தேன். மறுநிமிடம் நான் நினைத்த மாதிரியே "எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துவிடலாம்" என்றார் முகத்தில் பல்ப் எரிய.

பதினைந்து நிமிடத்தில் எக்ஸ்ரே தயாரானது. அதை வெளிச்சத்தில் உயரத் தூக்கிப் பார்த்தபோது பேட்டரியானது பையன் வயிற்றுப் பகுதியில் எலும்புகள் அரணாய் சூழ்ந்திருக்க, பாதுகாப்பாய் சாய்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. சின்ன டாக்டரின் பக்கத்தில் நின்றிருந்த நர்ஸ் "எண்டோஸ்கோபி பண்ணி எடுத்துறலாம்" என்று குத்து மதிப்பாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டது. "மோஸ்ட்லி மோஷன்ல வந்துரும். 'எதுக்கும்' பெரிய டாக்டரை கன்ஸல்ட் பண்ணிக்கோங்க." என்று தன் முடிவைத் தெரிவித்தார் சின்னப் பையன் டாக்டர்.

நிறைய காத்திருந்து பெரிய டாக்டரைப் பார்த்தோம். அவரும் எக்ஸ்ரேவை ஒரே ஒரு செகண்ட் பார்த்துவிட்டு "முழுங்கின அஞ்சு ரூபா காயினே கக்கா போனா வந்துருது. இது நிச்சயம் வந்துரும். கவலப்படாதீங்க. இங்க குழந்தைகளுக்கான எண்டோஸ்கோபி இன்ட்ஸ்ருமெண்ட்ஸ் எல்லாம் இல்ல. நீங்க 'எதுக்கும்' அடையாறில இந்த டாக்டரை கன்ஸல்ட் பண்ணுங்க" என்று அட்ரஸ் தந்தார். இந்த 'எதுக்கும்' என்கிற வார்த்தை படுத்துகிற பாடு இருக்கிறதே!!! அங்கிருந்து வெளியே வரும்போது ரூ. 252 செலவாகியிருந்தது.

அடையாரில் அந்த லேடி டாக்டரைத் தேடிப் போனபோதும் நிறைய நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. காத்திருந்த நேரத்தில் 'எதுக்குடா பேட்டரிய முழுங்கின?' என்று கோபமாய் விசாரித்தபோது "பவர் வர்ரதுக்குதான்' என்றான் மகன் அமைதியாய். வருகிற நோயாளிகளையும், க்ளீனிக் நடவடிக்கைகளையும் பார்த்துக் கொள்கிற மூன்று பெண்களில் ஒன்று வாயை மூடாமல் 'லொக் லொக்' என்று நோயாளி மாதிரி இருமிக் கொண்டிருந்தது. இன்னொன்று "என்னடி இந்த மாத்திரை நல்லாவேயில்ல. கரையவே மாட்டேங்குது" என்று வாயைத் திறந்து இன்னொருத்திக்குக் காட்டியதிலிருந்து அதுக்கும் என்னவோ பிரச்சனையென்று புரிந்தது. டாக்டர் வந்துவிட்ட பிறகும்கூட கவலையே படாமல் அவர்கள் பாட்டுக்கு டேபிளில் ஒய்யாரமாய் குங்குமம் இதழை பிரித்து வைத்துக்கொண்டு "ஏய் பாத்தியாடி.. நம்மாளு 'ஜெயம்' ரவிக்கு மேஷ ராசின்னு போட்ருக்கான்." என்று கெக்கே பிக்கேயென்று சிரித்துவைத்து "நம்ம டாக்டர் ராசியும் அதானே.." என்றது. டாக்டர் எந்த ராசியானாலும் பிரச்சனையில்லை. கைராசியாய் இருந்தால் சரி என்று நினைத்துக் கொண்டேன்.

எங்கள் முறை வந்தது. லேடி டாக்டரும் அதே மாதிரி எக்ஸ்ரேவை ஒரு செகண்ட் தூக்கிப் பார்த்துவிட்டு, "இது குழந்தை கக்கா போகும்போது வந்துரும். வாளப்பளம் வாங்கிக் குடுங்க. அப்படி வரலைன்னா அடுத்தது என்ன செய்யலாம்னு பார்ப்போம். இப்ப அநாவசியமா கைவெச்சா நாலாயிர்ரூவா ஆகும்" என்றார். வெளியே வந்தபோது கன்ஸல்டேஷன் 250 ரூபாய் என்றாள் 'ஜெயம்' ரவி ரசிகை. ஆக இதுவரை மொத்தமாய் ஐநூறை முழுங்கிவிட்டது இந்த விஷயம்.

'வாளப்பளம்' வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தோம். அக்கம் பக்கத்தாரின் விசாரிப்புக்கெல்லாம் ஒரே கதையை திரும்பத் திரும்ப சொல்லிவிட்டு (பேட்டரி என்று சொன்னவுடன் பெரிய டார்ச்சுக்குப் போடுகிற பெரிய எவரெடி பேட்டரி என்று நினைத்துக்கொள்கிறார்கள் பாவம்!) கவலையுடன் தூங்கப் போய்விட்டோம். எல்லாருடனும் பேசியதில் இந்த ழுழுங்குகிற கலாச்சாரம் குழந்தைகளுக்கு புதிதல்ல என்றும் எல்லாக் குழந்தைகளுமே அவரவர் விருப்பத்திற்கேற்ப புளியங்கொட்டை, தேங்காய் மூடி (சிரட்டைத் துண்டு), ஸேஃப்டி பின், போல்ட் அல்லது நட், நாணயங்கள், க்ரையான் துண்டு என்று இப்படி எதையாவது முழுங்கித் தொலைத்த வீர வரலாறுகளையும் அறிந்துகொள்ள முடிந்தது.

பிறகென்ன? மறுநாள் பையன் கக்கா வருவதற்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கத் தொடங்கினோம். அது வருவதற்கான எந்த அறிகுறியும் பையன் முகத்திலிருந்து அறிந்து கொள்ள முடியாத அவஸ்தையுடன் பொழுது ஓடியது. அவன் எந்தக் கவலையும் இல்லாமல் ஜாலியாய் விளையாண்டு கொண்டிருந்தான். எனக்கோ பேட்டரிக்கு உள்ளேயிருக்கிற ரசாயனப் பொருட்கள் குறித்த கவலை. ஏதாவது லீக் ஆகி எதையாவது பாதிக்குமா என்று. இதே நினைப்புடன் ஆபிஸூக்கு லேட்டாக போய் சொல்யூ்ஷன் ஆர்க்கிடெக்ச்சரை மறுபடி பிராண்ட ஆரம்பித்தபோது செல்பேசியில் வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. காதில் வைத்ததும் பையன் குரல் கேட்டது.

"வந்திரிச்சு! பேட்டரி வந்திரிச்சு!"

உங்களுக்கு முந்தா நேத்து பக்கத்தில் ஏதோ சுழல்காற்று அடித்த மாதிரி சப்தம் கேட்டதா? அது ஒன்றுமில்லை. நான் விட்ட நிம்மதிப் பெருமூச்சுதான்.

ஜீவித்திருப்பவர்கள்

சென்னையில் வசிப்பவர்களுக்கு, அதுவும் கடலிலிருந்து ஒரு பத்து கிலோமீட்டர்களுக்குள் வசிப்பவர்களுக்கு ஒரு செளகரியம் உண்டு. நினைத்தவுடனே அவரவர் செளகரியத்திற்கேற்ப ஏதாவதொரு வாகனத்தில் பயணித்து சடுதியில் கடற்கரையை அடைந்து கால் நனைத்துவிடலாம். கடற்கரை ஒரு அழகான பொழுது போக்கிடம். பெரியவர்கள் விரும்பினால் தங்கள் குழந்தைகள் சார்பாக ஒரு பட்டம் வாங்கிக்கொண்டு மணலில் ஒரு ஓரமாய் உட்கார்ந்து மீண்டும் குழந்தையாகி மகிழலாம். நானும் சில சமயம் அப்படியே. சென்னைக்கு வந்த இந்த நாலு வருஷத்தில் எத்தனை முறை கடற்கரைக்குச் சென்றேன் என்று கணக்கில்லை. கடற்கரைக்கு இன்னும் கொஞ்சம் பக்கமாய் வீடு மாறியபின் அநேக ஞாயிற்றுக் கிழமைகள் வண்டியை எடுத்துக்கொண்டு மெரீனாவுக்குப் போய்விடுவது வழக்கம். வார நாட்களில் கூட ஒரு சில நண்பர்களைச் சந்திக்கும் பொருட்டு இரவு எட்டு மணிக்குமேல்கூட அடிக்கடி அங்கே போவதுண்டு.

கடற்கரைக்குப் போகிற சமயங்களில் இருட்டுவதற்கு முன் சமுத்திரத்தை ஒரு முறை தரிசனம் பண்ணிவிடுகிற ஆசை எப்போதும் மேலோங்கியிருக்கும். அப்படி வாய்ப்பு அமைந்தால் என் நாலு வயசு வாண்டை மகிழ்விக்கிற சாக்கில் நானும் கொஞ்சம் அலைகளில் விளையாடுவதுண்டு. பேண்ட்டை மேலே சுருட்டிவிட்டுக் கொண்டு இறங்கி அவன் விரல்களை இறுகப் பிடித்துக் கொண்டு, முழங்காலளவு வந்து திரும்புகிற அலையில் காலடியில் மணல் சரசரவென்று நழுவ, பாதங்கள் புதைகிற அபத்திர உணர்வில் இருவரின் கைப்பிடியும் இறுகும். சில நேரம் எதிர்பாராமல் மிகப் பெரிய அலை வந்து அவனை முழுதாகவும் என்னை முகம் வரையிலும் நனைக்கிற போது உற்சாகத்தில் "க்ரீச்" என்று அருகாமை ஜனங்கள் நடுங்கிப் போகுமளவு கத்துவான். கடற்கரைக்கு போகும்போதே இருட்டியிருந்தால் இந்த விளையாட்டு ஆசையையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, வந்து திரும்பும் அலையின் மிஞ்சிய நுரையில் லேசாய் செருப்பை நனைப்பதோடு சரி. ஞாயிற்றுக் கிழமைகளில் அலைகடலென(!) திரண்டிருக்கிற கூட்டத்திற்கு கடலும் அலைகளும் ஒரு வேடிக்கைப் பொருளாக, ஒரு எக்ஸிபிஷன் தன்மையுடன் இருப்பதாக நான் எப்போதும் நினைத்துக்கொள்வேன்.

கடல் எல்லோருக்கும் பிடிக்கிறது. கடல் நீரில் கால் நனைப்பது, கடற்கரையில் கடலை சாப்பிடுவது, கடலின் விளிம்பில் உட்கார்ந்து கொண்டு காதல் பண்ணுவது, கடல் மணலில் கால் புதைய பேசிக்கொண்டே நடப்பது அல்லது வெறுமனே வேடிக்கை மட்டும் பார்ப்பது என எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் அல்லது எல்லா விதத்திலுமே கடலின் அருகாமை மிகப் பிடித்தமானதாக இருக்கிறது. எனக்கு கடலின் தூரத்து நேர்கோட்டு விளிம்பில் பார்வையை செலுத்தி எதையாவது யோசித்துக்கொண்டிருப்பது பிடிக்கும். கற்பனைக்கெட்டாத அதன் தூரம், ஆழம், அது மறைத்து வைத்திருக்கிற உயிரின ரகசியங்கள் எல்லாம் யோசிப்பின் தீவிரத்தில் ஆச்சரியங்களாய் விரியும். மனிதனின் பிரபஞ்ச எல்லையைப் பற்றிய வியப்பின் ஒரு மினியேச்சர் மாதிரிதான் இது. ஞாயிற்றுக்கிழமை அல்லாத மற்ற வார நாட்களில் மெரீனாவில் கடலுக்கு இன்னொரு முகம் இருப்பதுபோல் தோன்றும். அதிகம் கூட்டமில்லாமல், தன் பாட்டுக்கு ஏதோ யோசனையோடு அமைதியாய் வந்து போகிற அலைகள். அந்த எக்ஸிபிஷன் தன்மை இல்லாதிருப்பதுபோல் அல்லது கொஞ்சம் குறைந்திருப்பது போல் தோன்றும். அதுவும் இருட்டில் தூரத்துக் கப்பல் விளக்குகளோடு சேர்ந்து பார்க்கும் போது கருமை படர்ந்த கடலின் அமைதி மனதை என்னவோ செய்யும். அலைகளின் லேசான இரைச்சல் ஒரு தாலாட்டு மாதிரி இருக்கும். வாழ்க்கைக்கும் தினசரி பரபரப்புக்கும் இடையை இருக்கிற பிணைப்பு தற்காலிகமாய் அறுந்த மாதிரி கொஞ்சம் ஆசுவாசமாகத் தோன்றும். திரும்பி மெயின் ரோட்டுக்கு வரும்வரைதான் அந்த ஆசுவாசம் எல்லாம். டிசம்பர் 26க்கு ஒரு வாரத்துக்கு முன் மனைவி மகனுடன் ஒரு இருட்டின மாலையில் அலைகளுக்கு நெருக்கமாய் தூர வானத்தில் எரிநட்சத்திரம் விழுவதைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தபோதுகூட இதே ஆசுவாசம் மனதில் நிறைந்திருந்தது.

அதற்கப்புறம் ரொம்ப நாளைக்கு கடற்கரைப்பக்கம் போக முடியாமல் போய்விட்டது. போய்ப் பார்க்கவேண்டும் என்று நினைத்து ஏனோ தள்ளிப் போய்க்கொண்டேயிருந்தது. மெரீனாவை நினைக்கும்போது தினத்தந்தியின் டபுள் ஸ்ப்ரெட் ஏரியல் புகைப்படம் நினைவில் நிழலாடி மனதை பிசைகிறது. கடலையும் கடல் சார்ந்த இடங்களையும் மனதில் காட்சிப்படுத்திப் பார்க்கும்போது அந்தக் காட்சிக்குக் கீழே துக்கத்தில் தோய்த்தெடுத்த ஒரு ஸ்க்ரால் நியூஸ் ஓடுவது மாதிரி ஒரு பிரமை.

ரொம்ப நாள் கழித்து இந்த ஞாயிற்றுக்கிழமை மறுபடியும் நண்பர்களுடன் போனேன். பெசன்ட் நகர் கடற்கரை. போகும்போதே நன்றாய் இருட்டியிருந்தது. அன்றைய தினத்திற்கு கூட்டம் ரொம்பக் குறைச்சல் என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் நிறைய பேர் இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கவில்லையெனத் தெரிகிறது. கடற்கரை தன் முகத்தை மாற்றிக்கொண்டதுபோல் ஒரு உணர்வு. மணலில் கடலை நோக்கி நடக்கும்போது எல்லோருக்கும் கால்களில் தயக்கம் பின்னுக்கிழுக்கிறது. செருப்பைக் கழற்றிவிட்டு நடந்தால் அரைக் கிலோமீட்டருக்கு மணல்வெளியில் இன்னும் ஈரப்பதம். எப்போதும் நம்மை அற்பமாய் உணரச்செய்யும் கடல் இன்று அதன் கூடவே எல்லோர் மனதிலும் லேசான பய உணர்ச்சியையும் சேர்த்துவிட்டது. அன்று யாரும் அலையருகில் உட்கார்ந்து நான் பார்க்கவில்லை. அதுமாதிரியே கால் நனைத்து விளையாடுபவர்களும். அலைகள் தன் வழக்கமான எல்லைக் கோட்டை மாற்றி வரைந்திருந்ததாகப் பட்டது. யானொன்றுமறியேன் பராபரமே என்பதுபோல் தேமே என்றிருக்கும் கடற்பரப்பின் அகண்ட வெளியில் எல்லோர் பார்வையும் ஒரு சந்தேகத்துடன் குத்திட்டு நிற்கிறது. நாங்கள் போன அன்று பெளர்ணமிக்கு இரண்டு நாள் முந்தியாதலால் 98 சதவிகித நிலா வானத்தில் இருந்தது. பளிச்சிடும் வெண்மையான நிலவொளியில் அலுமினிய ஃபாயில்களை சுருட்டுவது போன்ற தோற்றத்துடன் இருளில் பளபளப்புடன் புரண்டு வந்த அலைகளில் கால் நனைத்தபோது உயிரின் நரம்பு லேசாக நடுங்கிச் சிலிர்த்தது. இந்தப் பிஞ்சு வயசிலேயே தொலைகாட்சிச் சேனல்களிலின் 'லைவ்' காட்சிகள் மற்றும் செய்திகள் மூலம் ஏதோ புரிந்து வைத்திருந்த என் பையன் ஒரு உறைந்த பார்வையுடன் கடலை கொஞ்சம் வெறித்துவிட்டு என் கைகளை இறுக்க்க்க்க்க்கிகொண்டு என்னை அண்ணாந்து பார்த்தவாறு மெதுவே அலை நுரைகளைக் கால் விரல்களால் தீண்டிப் பார்த்தான்.

அன்று அலையருகில் உட்காரவும் இல்லை. அதிக நேரம் நிற்கவுமில்லை. கொஞ்சம் பாதுகாப்பான தூரம் என்று பட்ட இடத்தில் மணல்வெளியில் உட்கார்ந்துகொண்டோம். பாதுகாப்பான இடம் என்பதும் பாதுகாப்பாய் இருக்கிறோம் என்கிற இந்த நினைப்பும் எத்தனை அபத்தம்!! புத்தாண்டுக்கு அடுத்தநாள் எனக்கு நேரிட்ட சின்னஞ்சிறு விபத்து கூட இதையேதான் சொல்கிறது.

கனத்த மனத்துடன் கடற்கரையிலிருந்து திரும்பி வரும்போதும் ஒரே சிந்தனை. இவ்வுலகின் இத்தனை கோடி ஜனங்களும் ஏதோ ஒன்றிலிருந்து தப்பிப் பிழைத்து இந்தக் கணம் ஜீவித்திருப்பவர்கள்தான் என்று திரும்பத் திரும்பத் தோன்றுகிறது.

இனி நல்லவையே நடக்க எல்லாம் வல்ல Super Nature Power அருள் பாலிக்கட்டும்.

மாயாஜாலம்

எங்களுக்கு வில்சன் என்றொரு நண்பர் இருந்தார். கவனிக்கவும். 'எங்களுக்கு' என்று குறிப்பிட்டிருக்கிறேன். காரணம் எனக்கு மட்டுமே அவர் நண்பரல்ல என்பதுதான். எங்கள் செட்டான ஒரு ஐந்தாறு பேருக்கும் பொதுவான நண்பர் அவர். சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன் நாங்கள் வசித்துக் கொண்டிருந்த காலனிக்கு சற்றுத் தள்ளி நெடுஞ்சாலையில் அவர் வீடிருந்தது. வில்சன் எங்களையெல்லாம் விட பல வயது மூத்தவர் என்பதால் நாங்கள் எல்லோரும் அவரை அண்ணா என்றுதான் அழைப்போம். அவரும் ஒரு அளவிடற்கரிய ஸ்நேகத்துடன் 'தம்பிகளா..' என்று எங்களை அழைப்பது நன்றாய் இருக்கும். அடர்த்தியாய் தாடிவிட்டுக்கொண்டு, சற்றே உயரமாய் கொஞ்சம் மீடியம் உடம்புடன் இருப்பார். சற்றே பிசிறடித்த ஆனால் கம்பீரமான குரல் அவருடையது.

வில்சன் ஒரு மேஜிக் நிபுணர். கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட சுற்றுவட்டாரத்தில் அப்போதே 250-க்கும் மேற்பட்ட மேடைகளில் அவர் மேஜிக் நிகழ்ச்சி பண்ணியிருந்தார். நீங்கள் வழக்கமாய் மேஜிக் ஷோ-க்களில் கண்டு ரசித்திருக்கும் தொப்பிக்குள்ளிருந்து புறா எடுப்பது. சீட்டுக் கட்டுகளைக் கொண்டு வித்தை காண்பிப்பது, வாய்க்குள்ளிருந்து கோழி முட்டைகளை எடுத்துக்கொண்டேயிருப்பது, நியூஸ்பேப்பரை விரித்துக் காண்பித்துப் பின் அதை மடக்கி அதனுள்ளிருந்து தண்ணீர் கொட்டவைப்பது போன்ற வழக்கமான ஐட்டங்களோடு பெட்டிக்குள் ஆளை நிற்கவைத்து ரம்பம் வைத்து அறுத்து நாலைந்து துண்டாக்கிவிட்டுப் பின் ஆளை மறுபடி உயிரோடு(!) கொண்டு வருதல் போன்ற மெகா மாயாஜாலங்களையும் மேடைகளில் செய்வார். நிகழ்ச்சிகளின்போது கோட்டு சூட்டெல்லாம் போட்டு தலையில் நீளத் தொப்பி, கையில் மந்திரக்கோல் என்று ஃப்ரொப்ஷனலாகத்தான் தோன்றுவார். என்னதான் எங்கள் நண்பர் என்றாலும் எவ்வளவோ மன்றாடியும் அவர் பண்ணுகிற மேஜிக் ரகசியங்களைப் பற்றி மூச்சுவிட மாட்டார். போனால் போகிறதென்று ஒரு நாலணா காசை முழங்கையில் தேய்த்துத் தேய்த்து எப்படி மறைய வைப்பது என்கிற ட்ரிக்கை மட்டும் சொல்லிக் கொடுத்தார். வெகு சுலபமாக நான் கற்றுக் கொண்ட அந்த வித்தை குழந்தைகளிடம்தான் செல்லுபடியாகும். பெரியவர்கள் புத்திசாலிகளாக இருந்தால் கண்டுபிடித்துவிடுவார்கள். காலனி முக்கில் நாங்கள் கூடிப் பேசிக்கொண்டிருக்கிற இடத்துக்கு அவர் வந்து நின்றால் சடக்கென்று ஏதாவது எளிய வித்தை செய்து காட்டி அசத்துவார். உதாரணம் : என் சட்டைப் பாக்கெட்டில் கைவிட்டு பத்து ரூபாய்த்தாள் எடுத்து அதை நான்காக மடித்து வலது கை ஆள் காட்டி விரலுக்கும், நடு விரலுக்கும் இடையே வைத்து விஸ்ஸ்க் என்று இடதுகை உள்ளங்கையில் தட்டினார். மறுநொடி ரூபாய் நோட்டு அவரது இரண்டு கைகளிலும் இருக்காது. பத்து ரூபாயைத் திருப்பித் தரவேண்டுமானால் என் அப்பாவிடம் சொல்லி அவரிடம் டி.வி கேபிள் கனெக்ஷன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். ஆம். அவர் அந்த ஏரியாவுக்கு கேபிள் கனெக்ஷன் கொடுக்கிற வேலையையும் பார்த்து வந்தார்.

கேபிள் கனெக்ஷன் என்றால் அப்போதெல்லாம் தூர்தர்ஷன் தவிர எதுவும் கிடையாது. ஆனால் அதில் வெள்ளிக் கிழமை எட்டு மணிக்குப் போடுகிற ஒலியும் ஒளியும் பார்ப்பதற்கே எல்லார் வீட்டிலும் அப்படியொரு முன்னேற்பாடு நடக்கும். வில்சன் ஒவ்வொரு மதியமும் சினிமா வீடியோ கேசட்டுகளை வைத்து அவர் வீட்டிலிருந்தே ஒளிபரப்ப அது காலனி முழுக்க எல்லோருடைய டி.வியிலும் தெரிகிற டெக்னலாஜியை வியந்துகொண்டிருந்தோம். ஒரு தடவை கார்த்திக் படமான இரட்டைக் குழல் துப்பாக்கி என்கிற படத்தை கேபிளில் ஒளிபரப்பி காலனி தாய்மார்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட சம்பவமும் உண்டு. அப்போது சன் டிவியெல்லாம் கிடையாது. ஆனால் வில்சன் சன் டி.வி-யின் (ராஜ்?) முதல் முயற்சியான 'பூமாலை' என்கிற கேசட்டை போட்டு அவ்வப்போது ஒளிபரப்புவார். நாட்டு நடப்புகள், இசை நிகழ்ச்சிகள், காமெடி ஷோ, சினிமா பாட்டு என்று கலவையாய் மாதமொருமுறை தொகுத்து கேசட் வடிவில் வெளியிடப்பட்டுக் கொண்டிருந்ததுதான் பூமாலை என்று பெயரிடப்பட்ட அந்த கேசட். அதுதவிர வில்சன் புண்ணியத்தில் தூர்தர்ஷனில் ஞாயிறு மதியம் 1.00 மணிக்கு NFDC படங்களான எல்லா ஆர்ட் ஃபிலிம்களையும் உட்கார்ந்து பார்ப்போம். ஒன்றும் புரியாவிட்டாலும்.

வில்சன் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் விழா மேடைகளில் தோன்றி மைக் பிடித்து கம்பீரமாய்ப் பேசுவார். பேசுகிற விஷயங்களில் நிச்சயம் சமூக அக்கறை தொனிக்கும். அவர் பொள்ளாச்சியில் 'மனிதம் சேவை மையம்' என்கிற சமுக அமைப்புக்குத் தலைவராக இருந்தார். அவ்வப்போது நகரில் ரத்ததான முகாம், இலவச கண் பரிசோதனை முகாம் நடத்துவது, ஆதிவாசிகள் மற்றும் மலைவாழ் மக்களுக்கு உடைகள் சேகரித்துக் கொடுப்பது போன்ற காரியங்களில் தீவிரமாய் ஈடுபட்டிருந்தார். நாங்களெல்லோரும்கூட மனிதத்தில் உறுப்பினராகி அவருடன் சேர்ந்து சுற்றி சமுக சேவை செய்துகொண்டிருந்தோம். அவ்வப்போது ஆட்டோவில் மைக் வைத்து அறிவித்துக்கொண்டு சுற்றியிருக்கிற காலனிகளில் வீடுவீடாகப் போய் உடைகள் சேகரித்து ஆதிவாசிகளுக்கு கொண்டுபோய் வழங்குவோம். தவிர மனிதம் வெளியிட்டுக்கொண்டிருந்த "மனிதம் செய்திகள்" என்கிற சிற்றிதழில்(?) சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சமுக ஆக்கப்பணிகள் பற்றிய விவரங்கள் போக மீதி இருந்த இடத்தில் நாங்கள் கதை, கட்டுரை, கவிதைகள், படித்ததில் பிடித்தது, ஜோக்ஸ் என்று எதையாவது எழுதுவோம். சரசுராம் இதற்கு ஆசிரியராய் இருந்தார். ராஜீவ் காந்தி இறந்த சமயத்தில் அவர் எழுதின உருக்கமான கட்டுரையை முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் D.R. கார்த்திகேயன்கூட படித்துப் பாராட்டினார்.

ஒரு தடவை சாயங்காலம் ஐந்து மணிக்கு வில்சன் வேகமாய் வந்து நெகமம் அருகில் சேரிபாளையம் என்கிற ஊரில் நடக்கிற நவராத்திரி கலை விழாவில் அன்றைக்கு அவரின் மேஜிக் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதன்கூடவே நீங்களெல்லாம் சேர்ந்து சைடில் கலை நிகழ்ச்சி செய்கிறீர்களா என்று கேட்டார். ஏழு மணிக்கு ப்ரோக்ராம் என்றார். இரண்டு மணி நேரத்திக்குள் என்னத்தைத் தயார் பண்ணுவதென்று எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் அரை மனதாய் சரி என்று தலையாட்டிவிட்டு பரபரவென்று இரண்டு மணி நேரத்துக்குள் டாக்டர் கடீஸ்குமார் என்கிற காமெடி நாடகத்தை நான் மற்றும் நண்பர்களான ராம் (சரசுராம்), மீனாட்சி சுந்தரம் உட்கார்ந்து எழுதி முடித்துவிட்டோம். ஒரு சில நண்பர்களை வைத்து கடகடவென்று ஏழு மணிக்குள் ரிகர்சலும் பார்த்து வில்சனுடன் வேனில் கிளம்பிவிட்டோம். நான் அதில் ஒரு நோயாளி கேரக்டர். கூடவே நரம் தினசரி கேட்கிற ரேடியோ செய்திகளை நகைச்சுவையாய்த் திரித்து நான் அதை வாசிப்பது என்றும் முடிவு செய்து, வண்டி சேரிபாளையம் போய் சேர்வதற்குள் ராம் ஒரு முழு வெள்ளைத்தாளில் அதை இரண்டு பக்கத்துக்கு எழுதியும் கொடுத்துவிட்டார். அதோடு 'டிஸ்கோ டான்ஸ் ஆடிக் கலக்குகிறேன்' என்று தானாக முன்வந்த மஞ்சு என்ற பொடியனும் வேனில் ஜிகினா உடை சகிதம் தொற்றிக் கொண்டான்.

மின்நகர் கீதம் குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் இன்னும் சில நொடிகளில் ஆரம்பம் என்று மைக்கில் அமர்க்களமாய் அறிவித்துவிட்டு ஆரம்பித்தோம். அன்றைக்கு சேரி பாளையத்தை ஒரு வழி பண்ணிவிட்டோம் என்றுதான் சொல்லவேண்டும். மஞ்சு என்கிற அந்தப் பையன் அப்போது சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்த ஹாசன் ஜகாங்கீரின் "ஹவா ஹவா" பாட்டுக்கு அட்டகாசமாய் டான்ஸ் ஆடி பின்னி எடுத்துவிட்டான். அவசரகதியில் பண்ணின இந்த ஏற்பாடுக்கு அத்தனை வரவேற்பா என்று சத்தியமாய் நம்பமுடியவில்லை எங்களால். கொஞ்சம் கற்றுக்குட்டித்தனமாகவே இருந்தாலும் எங்கள் நாடகத்தையும், நியூஸையும் ரசித்துப் பார்த்த / கேட்ட சேரிபாளையப் பொதுமக்கள் சிரித்த சிரிப்பு இன்னும் மனதுக்குள் பத்திரமாய் இருக்கிறது. வில்சனுக்கோ ரொம்ப சந்தோஷம். இதற்கு நடுவே இப்போது நினைத்தாலும் நாங்கள் விழுந்து விழுந்து சிரிக்க நேரிட்ட சில வெளியே சொல்ல முடியாத சம்பவங்களும் நடந்தன.

அதற்கப்புறம் வில்சன் மேஜிக் ஷோ போகிற இடத்துக்கெல்லாம் எங்களைக் கூப்பிட ஆரம்பித்தார். நாங்கள் பிறகு நான்கைந்து மேடைகளில் வில்சன் தயவால் இன்னும் சில அயிட்டங்கள் சேர்த்து எங்கள் கலைத்திறமையைக் காட்டினோம். பிறகு பொள்ளாச்சி காந்தி மண்டபத்தில் நடைபெற்ற புத்தாண்டுக் கலைநிகழ்ச்சியில் நண்பனொருவன் டயலாக்கை முழுங்கிவிட்டு பேந்தப் பேந்த முழிக்க, ஆடியன்ஸிடமிருந்து விசிலும் கூக்குரலும் வர அத்தோடு எங்கள் கலைப் பயணம் முடிவுற்றது. இந்தக் கூத்துக்கெல்லாம் இப்போது இணையத்தில் எழுதும் எழுத்தாளர் ஒருவரும் சாட்சியாக இருந்தார்.

சுகமான நினைவுகளை ஞாபகப்படுத்தும் பழைய உருப்படிகளை எப்போதும் பத்திரப்படுத்தி வைக்க நினைக்கும் என்னிடம் 'மனிதம் செய்திகளின்' ஒரு சில பிரதிகளும், ஏழெட்டு மேடைகளில் நான் வாசித்த நகைச்சுவை செய்திகளின் பிரதியும் இருக்கின்றன. இரண்டு வருடங்களுக்குமுன் நான் பணியாற்றிய கம்பெனியின் "கெட்-டுகதர்" ஹோட்டல் ப்ரீஸில் நடந்தபோது செய்தி வாசித்ததில் கொஞ்சமாய் சிரித்துவைத்தார்கள். விரும்பிக் கேட்கிற நேயர்களுக்கு Footer-ல் காப்பிரைட் சித்ரன் என்று போட்டு அந்த செய்திகள் ரகசிய ஈமெயிலில் அனுப்பிவைக்கப்படும். செய்திகள் வாசிப்பது ரகுநாதவர்ம விஜயபுர சேதுபதி கணேச சுந்தரபாண்டிய குலோத்துங்க வீர வெங்கடேஷ்வர யோகி ஜகந்நாத சூர்யகாந்திப் பிரகாசராவ்....

நண்பர்கள் வேலை நிமித்தம் ஆளுக்கொரு திசைக்குப் பிரிந்தபிறகு வில்சனைப் சந்திக்கமுடியவில்லை. விசாரித்தபோது அவர் சொல்லாமல் கொள்ளாமல் வேறு ஏதோ ஊருக்கு குடும்பத்துடன் காலிபண்ணிவிட்டுப் போய்விட்டதாகப் பின் தகவல் கிடைத்தது. அவரிருக்கிற இடம் யாருக்கும் தெரியவில்லை. மனிதம் சேவை மையம் இப்போது இல்லை. வில்சனிடமிருந்து கற்றுக்கொண்ட ஒரே ஒரு நாலணா மேஜிக்கை இப்போது சமயம் கிடைக்கும் போதெல்லாம் என் பையனுக்கு செய்து காண்பித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த மாதிரி நட்புகள் என்னிடமிருந்து காணாமல் போகிறதா அல்லது நான்தான் அவர்களிடமிருந்து காணாமல் போய்விடுகிறேனா என்று எப்போதுமே எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. ஏதாவது மேஜிக் பண்ணி அவர்களை என் முன்னால் வரவழைத்துவிட முடியாதென்பது தெரியும். தேடினால் நிச்சயம் கிடைப்பார்கள்.

லைவ்

இதய பலவீனமுள்ளவர்களும் குழந்தைகளும் பின்வரும் காட்சிகளைப் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு டி.வியில் அதைக் காட்டினார்கள். தீயின் நாக்குகள் தின்று உமிழ்ந்த உயிர்கள் கரித்துண்டுகளாய் குவிந்துகிடப்பதும், பிஞ்சு மலர்களின் சாம்பல் காற்றில் பறப்பதும், கும்பகோணம் துன்பகோணம் ஆன காட்சிகள். அது இதய பலமுள்ளவர்களையும் பலவீனமாக்கிவிட்டது என்பதில் சந்தேகமில்லை. 'நெஞ்சே வெடித்துவிடும் போல் இருந்தது' என்று சாதரணமாகக் கதைகளில் எழுதுவதை உண்மையாய் உணர்ந்தது அதைப் பார்த்தபோதுதான்.

இந்த மாதிரி உலகின் மகா துயரங்களையும் கோர சம்பவங்களையும் சதுரக் காட்சிகளாய் லைவ் ரிலே அல்லது ரெகார்ட் பண்ணப்பட்ட கோப்புக் காட்சிகள் என்று வரவேற்பரைக்கு முன் கொட்டத் துவங்கிவிட்டது டி.வி சானல்கள். அதை பார்த்துப் பார்த்து அன்றாட வாழ்க்கையின் பரபரப்பை இன்னும் கொஞ்சம் அதிகரித்துக் கொண்டு தவித்துக் கிடக்கிறோம்.

முன்பு ஒரு முறை தர்மபுரியில் ஒரு பஸ்ஸுக்குள் மூன்று மாணவிகள் மரண ஓலங்களுடன் எரிவது பல கோணங்களில் காட்டப்பட்டது. 'ஐயோ' என்று நெஞ்சு பதைக்கப் பார்த்ததைத் தவிர நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்தச் சூழ்நிலையில் படமெடுத்த காமிராக்காரருக்கு ஏன் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடத் தோன்றவில்லை என்று இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

இதேபோல் கேரளாவில் ஒரு மதம் பிடித்த யானை தன் பாகனை துதிக்கையால் தூக்கி வீசிப் பந்தாடி கீழே போட்டு உருட்டி காலால் நசுக்கிச் சாகடித்ததை நீங்கள் நிச்சயம் பார்த்து திடுக்கிட்டிருப்பீர்கள். அதையும் மறக்காமல் திரும்பத் திரும்ப எல்லா செய்தி நேரத்தின் போதும் மறுஒளிபரப்பு பண்ணி அடிவயிற்றைப் பிசைய வைத்தார்கள். பார்த்து இரண்டு வேளை சோறு தொண்டைக்குள் இறங்கவில்லை.

அதே மாதிரி ஒரு மனநோயாளி ஒரு கோயில் பணியாளரை தெப்பக்குளத்துக்குள் பார்ப்பவர்களின் கண் முன்னே மூழ்கடித்துக் கொன்ற கொடூரக் காட்சி. காமிரா சுழன்று அதை விலாவாரியாய் பதிவு பண்ணி நமக்குக் காட்டியது. இது மாதிரி இன்னும் நிறைய. 'ஐயோ கொல பண்றாங்க' என்ற ஓலத்துடன் கலைஞரை கைது செய்யும் காட்சியை ஐந்து நிமிடங்களுக்கொருமுறை ஒளிபரப்பி இயல்பு வாழ்க்கையை ஸ்தம்பிக்கச் செய்தது ஒரு சேனல். பார்லிமெண்டில் நுழைந்த தீவிரவாதிகள் தூண்களுக்குப் பின் மறைந்து சுடும் காட்சியும் இறுதியில் புல்லட் துளைக்கப்பட்ட அவர்களின் உடல்களையும் பார்த்தோம். மும்பை இண்டியா கேட் அருகே வெடிகுண்டு விபத்தில் சிதறினவர்கள். கோவை தொடர் வெடிகுண்டு விபத்துக்களின் நேரடி ஒளிபரப்பு. ராஜீவ் காந்தி கொலை, அஸ்ஸாம் புயல் சேதம், ஏர்வாடி தீ விபத்து, ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட குஜராத் நிலநடுக்கம், பாலங்களில் ரயில் பெட்டிகள் தடம்புரண்டு கவிழந்து தொங்குவது. மெரீனா காந்தி சிலையருகே நடந்த பேரணியில் நிகழ்ந்த கலவரத்தில் ஒருத்தனை ஓட ஓட விரட்டி நடுமுதுகில் வெட்டுகிற காட்சி. குஜராத் ரயில் பெட்டி எரிப்பும் அதைத் தொடர்ந்த கலவரங்கள். விமானங்கள் தகர்த்துப் பிளந்த WTC கட்டிடங்கள் சுமார் ஆறாயிரம் பேருடன் இடிந்து தரை தட்டல். லேசர் குண்டுகளால் ஈராக்கைத் துளைத்தெடுக்கிற போர் விமானங்கள். இந்திய விமானம் ஆப்கனுக்கு கடத்தப்பட்டபோது கொன்று வீசப்பட்ட புது மணமகனின் உடல். அப்புறம் இது போதாதென்று ஒரு பணயக் கைதியின் தலையை தனியே அறுத்தெடுக்கும் கோரக் காட்சி. போலீஸ் என்கெளண்டர்கள் என பதற வைக்கும் காட்சிகள் டி.வி என்கிற அபார சாதனத்தின் உபயத்தில் கண் முன்னே விரிகின்றன. இது போல் இன்ன பிற.

சம்பவ இடங்களில் உடனுக்குடன் பதிவுசெய்யப்படும் 'நேரடிக் காட்சிகள்' டி.வி சேனல்களின் வேகமான டெக்னாலஜி திறமையை பறைசாற்றாமலில்லை. இத்தனை காலம் ரேடியோவில் கேட்டுக் கொண்டிருந்த இந்த கோர துயர நிகழ்ச்சிகளை இப்போது சிவப்பு வண்ணம் பூசின கோப்புக் காட்சிகளாக அல்லது லைவ்வாக இயக்கமற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எத்தனை தவிர்த்தாலும் இறந்த உடல்களையும், ஓடுகிற ரத்த ஆறையும் குழந்தைகளும் கூட சர்வ சாதாரணமாய் பார்க்க ஆரம்பித்துவிட்டன. அவர்கள் வளர்கிற போது காணக்கிடைக்கிற நிஜம் அப்படியொன்றும் அவர்களிடம் அதிர்வுகளை ஏற்படுத்திவிடாது என்று தோன்றுகிறது. இந்தச் செய்திகள் எல்லாம் மக்களுக்கு உடனுக்குடன் யார் முந்தித் தருவது என்ற போட்டியில் மரணங்களையும், கலவரங்களையும், விபத்துக்களையும், ரத்தச் சிவப்பையும் தேடி காமிராக்கள் அலைகின்றன. எடுக்கப்பட்ட வீடியோக்கள், சேனல்களில் திரும்பத் திரும்ப ஓட்டப்பட்டு மெல்லிதயங்களைக் கலக்குகின்றன. உறைந்த மனங்களோடு இப்போது இவைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிற நமக்கு ஒரு நாள் மரத்துப் போய் விடும் என்றே தோன்றுகிறது.

பார்க்கவும் முடியவில்லை. தவிர்க்கவும் முடியவில்லை. இந்த லைவ் ரிலேக்களை என்ன செய்வதென்றும் புரியவில்லை.

சுட்டது யார்?

மேட்டுப் பாளையம் மெயின் ரோட்டிலிருந்து ராமசாமிக் கவுண்டர் தோட்டம் வழியாக நாங்கள் முன்பு குடியிருந்த திருமுருகன் நகருக்குக் குறுக்கு வழி இருந்தது. பொது வழி அல்ல என்று போர்டு போட்டிருந்தாலும் நடக்கிறவர்கள் நடந்துகொண்டுதான் இருந்தார்கள். முதலில் பரந்து விரிந்த ஒரு ரோஜாத் தோட்டம் இருக்கும். கோவை பூமார்க்கெட்டுக்கு அங்கிருந்து நிறைய சப்ளை உண்டு. அதைத் தாண்டி நடந்தால் அப்புறம் கவுண்டர் வீடும் அதையொட்டின வாழைத் தோட்டமும் இருக்கும், அங்கிருந்து ஒரு தென்னந்தோப்பின் நிழல் சூழ்ந்த மண்பாதை ஆரம்பமாகும். அதெல்லாம் நான் நிறைய ரசித்து ரசித்து நடந்த வழிகள். அதிகம் ஆட்கள் நடமாட்டமற்ற தனிமையில் இத்தனை தூரம் கடந்து வந்தால் பிறகு அந்தப்பக்கம் இருக்கிற காலனியை தன் அடர்த்தியால் மறைக்கிற ஆளுயர சோளக்காடு. அதற்குள் புகுந்து நடக்க வேண்டும். சோளம் நன்றாய் வளர்ந்திருந்தால் ஒரு ஆள் நடக்கிற வழி மட்டுமே இருக்கும். இரவானால் அந்த வழியே நடப்பதானால் கொஞ்சம் ரிஸ்க்தான். துளி வெளிச்சம்கூட இல்லாத இருளடடைந்த அந்தச் சோளக்காட்டின் நடுவேயான ஒற்றையடிப்பாதையில், காலடியில் ஊரும் பாம்புகளை பயத்துடன் தவிர்த்து நடக்கையில் எதற்காக அப்பா இப்படியொரு காலனியில் வீடு பார்த்தார் என்று கோபமாய் வரும். வழியில் நடுவில் ஒரு பெரிய ஒற்றை வேப்பமரமும், அதனடியில் ஒரு பாம்புப் புற்றும் உண்டு. இப்படி ஒரு பெரிய நகரத்துக்கு நடுவில் இந்த கிராமிய சூழ்நிலை தாண்டி திடீரென்று ஒரு காலனி விரிவது கொஞ்சம் வியப்பாய்தான் இருக்கும். தள்ளித் தள்ளி தனித்தனி வீடுகள் கொண்ட காலனி.

அது ஒரு நல்ல வீடு. அப்பாவின் ட்ரான்ஸ்ஃபர் பந்தாடல்களுக்கு நடுவில் நாங்கள் இருக்க நேரிட்ட இன்னொரு ஜாகை. எனக்கு மிகவும் பிடித்த வீடு அது. முன்னால் வட்டவடிவில் ஒரு சிட் அவுட், சின்ன தோட்டத்துடன் கொஞ்சம் அழகாகத்தான் இருக்கும். வீட்டின் பின்புறமும் உபரி ரம்மியமாய் கொஞ்சம் தென்னந்தோப்புகள், அதன் பின் புலத்தில் நீல நிறத்தில் ஒரு குட்டி மலைத்தொடர்.

அன்றைக்கு எதற்கோ வேலைக்கு லீவு போட்டு வீட்டில் இருந்தேன். ஒரு நல்ல வெயிலடிக்கிற பகல் பொழுது அது. எதேச்சையாக வீட்டு ஜன்னலின் வழியே பார்வை ஓட்டியபோது அவர்களைக் பார்த்தேன். இரண்டு பேர் என் வீட்டுக்கு எதிரில் நின்றிருந்தார்கள். அவர்கள் என் வீட்டைச் சுட்டிக்காட்டி என்னவோ பேசிக்கொண்டிருக்கிறார்கள். நான் வெகுநேரம் அவர்களைக் கவனித்துக்கொண்டிருந்தேன். யார் அவர்கள்? என்ன பேசுகிறார்கள்? என்று புதிராய் இருந்தது. அதில் ஒரு ஆள் லேசாய் வீட்டருகில் வந்து சுற்றுமுற்றும் பார்வையால் அளந்துவிட்டு பின் மறுபடி இன்னொரு ஆளிடம் போய் என்னவோ சொல்வதைப் பார்த்தேன். எனக்கு லேசாய் சந்தேகமாய் இருந்தது. பின்னர் இருவருமாக மேலும் நெருங்கி மறுபடி வீட்டை நோட்டம் பார்க்க ஆரம்பித்தார்கள். நான் இருக்கக் கொள்ளாமல் டக்கென்று கதவு திறந்து வெளியே வந்தேன்.

என்னைப் பார்த்ததும் அவர்கள் மையமாய் சிரித்தார்கள். நான் சிரிக்காமல், யார் நீங்க? என்ன வேணும்? என்றேன்.

"விஜய் டி.விக்காக ஒரு சீரியல் ஷூட்டிங் பக்கத்துல நடந்துட்டிருக்கு தம்பி. நாங்கதான் அதுக்கு ப்ரொடியூசர்ஸ். உங்க வீடு அமைப்பு நல்லா இருக்கு. இங்க ரெண்டு மூணு ஷாட்ஸ் எடுக்கலாமான்னு டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தோம்." என்றார் ஒருவர். ஓஹோ என்றேன் நான். அவர்கள் வீட்டுக்கு எதிரில் நின்று உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது சந்தேகம் வரவழைத்ததைச் சொன்னேன். சிரித்தார்கள்.

"சொல்லுங்க தம்பி ரெண்டு மூணு சீன் இங்க எடுத்துக்கலாமா?" என்றார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியாவிட்டாலும் கொஞ்சம் ஆர்வமாய்த்தான் இருந்தது. 'தேவர் மகன்' ஷூட்டிங் யூனிட்டுடன் பொள்ளாச்சி சூலக்கல், ஊத்துக்குளி வட்டார படப்பிடிப்பிலெல்லாம் மூன்று நாட்கள் அலைந்தது ஞாபகம் வந்தது. ஆஹா இப்போது என் வீடே படப்பிடிப்புத்தளமாகிவிட்ட பாக்கியம் கிடைத்துவிட்டது. இதோ நான் அனுமதித்தால் விஜய் டி.வி.யில் என் வீடு தெரியும். எனக்கு பயங்கர திரில்லாகிவிட்டது. அப்பா ஆபிஸ் போயிருக்கிறார். அம்மாவிடம் ஓடி விஷயத்தைச் சொன்னேன். அம்மாவுக்கு அது பற்றியெல்லாம் தெளிவான ஞானம் இருக்கவில்லை. என்னமோ நம்மளை தொந்தரவு பண்ணாம நடத்தினாங்கன்னா சரி என்றாள்.

நான் வெளியில் வந்து "ஷாட்ஸ் எடுத்துக்கோங்க ஆனா வீட்டுக்குள்ள எல்லாம் வேண்டாம்" என்றேன் அவர்களிடம். ஒத்துக்கொண்டார்கள். தோ வந்துர்றோம் என்று மறைந்தார்கள். திரும்பி வரும்போது கேமரா, ரிஃப்ளக்டர், லைட்டுகள் சகிதம் ஒரு படையே வந்தது. நடுவில் நடுநாயகமாய் ஆறேழு வீடுகள் தள்ளி குடியிருக்கிற பாலன் குட்டி பளபளவென்று நடந்து வருகிறார். அவர் முகத்தில் ரோஸ் பவுடர், உதட்டில் லேசாய் லிப்ஸ்டிக். ஜெல் போட்டு தலையை படிய வாரி, கோட்டெல்லாம் போட்டிருந்தார். என்னைப் பார்த்து மந்தாரமாய் மேக்கப் கலையாமல் சிரித்தார். விஜய் டி.வி. சீரியலில் அவர்தான் ஹீரோ என்றார். எனக்கு பகீரென்றது. அவருக்கு ஒரு ஐம்பது வயதிருக்கும். அவர் தமிழ் பேசினால் கேரளா பார்டரில் இருக்கிறமாதிரி ஃபீலிங் வந்துவிடும். ஆங்காங்கே மலையாள சமாஜ் ப்ரோக்ராம்களில் நன்றாய் கதகளி எல்லாம் ஆடுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சரிதான். அவர் கலை ஆர்வம் டி.வி. வரை வந்துவிட்டதுபோலிருக்கிறது என்று நினைத்தேன். நான் ஆவல் மேலிட என்ன கதைங்க? என்றேன்.

துப்பறியும் கதை தம்பி. கொஞ்சம் காமெடியா பண்றோம். சுட்டது யார்னு டைட்டில் என்றார் தயாரிப்பாளர். பின்னர் பரபரவென்று சுற்றுமுற்றும் ஆராய்ந்துவிட்டு. "தம்பி உங்க டேப்ரிக்கார்டரோட ஸ்பீக்கர் கொஞ்சம் கழட்டித் தாங்க வீட்டு வாசல்ல மாட்டணும். கதைப் பிரகாரம் இதுதான் துப்பறியும் நிபுணர் வீடு" என்றார். நான் என்னடா ப்ரொடியூஸர்தான் டைரக்ஷணும் பண்ணுகிறாரா என்று வியந்து கொண்டே கழற்றிக் கொடுத்தேன். அதை வீட்டு வாசலில் தொங்க விட்டார்கள். அதற்கு மேல் ஒரு புலியின் படத்தை ஒட்டினார்கள். பாலன் குட்டி தயாரானார். லைட்ஸ்! கேமரா! ஆக்ஷன். கேமரா ஓட ஆரம்பித்தது. என் வீட்டு ப்ளக் பாயிண்டில் ஒயர்கள் சொருகப்பட்டு பளிச்சென்று 2KVA விளக்கு எரிந்தது. இன்னொரு நடிகர் ஒருவர் எங்கிருந்தோ என் வீட்டு வாசலுக்கு வந்து நின்றார். மிஸ்டர் துளசிங்கம் என்று கூப்பிட்டார். உடனே ஸ்பீக்கரிலிருந்து குரல் வருவது மாதிரி யூனிட்டின் மினி டேப்பிலிருந்து ஒரு புலியின் உறுமல் கேட்டுவிட்டு 'எஸ்.. ஐ ஏம் கமிங்' என்று குரல் கேட்டது. பாலன் குட்டி என் வீட்டுக்குள்ளிருந்து வெளிப்பட்டார். அப்புறம் வந்த ஆளை நோக்கி ஒரு டயலாக் சொல்லவேண்டும்.. "நான்தான் உலகப் புகழ்பெற்ற துப்பறியும் டைகர் துளசிங்கம். நீங்க யாரு?" என்பதுதான் அந்த டயலாக். நான் டைகருக்கும் சிங்கத்துக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது பாலன் குட்டி டையை சரிபண்ணிக்கொண்டு சொன்னார். "நாந்தான் உழகப் புஹழ்பெற்ற துப்பறியும் டைகர் துழசிம்ஹம். நிங்ஙள் யாரு?"

எனக்கு குபீர் என்று சிரிப்பு வந்தது. நல்ல காமெடி சீரியல்தான் போலும். இதே டயலாக்கை திரும்பத்திரும்ப சொல்லி பத்து பன்னிரெண்டு தடவை டேக் எடுத்தார்கள். அவர் வாயில் கடிபட்டு சிங்கமும் புலியும் செத்தே போயிற்று. அப்புறம் எல்லாவற்றையும் கழற்றிவிட்டு, தென்னந்தோப்பில் வில்லனை துளசிங்கம் ஸ்கூட்டரில் துரத்துகிற சீன் எடுக்கப் போய்விட்டார்கள். சுற்றிலும் ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க கூடியிருந்த கும்பல் என் வீட்டை ஆச்சரியமாய் பார்ப்பதை கவனித்தேன். மானசீகமாய் நான் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டேன். ஷூட்டிங்கெல்லாம் நடந்த வீடு என்றால் சும்மாவா? நான் ஸ்பீக்கரை தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் போனேன்.

அப்பா வந்தார். விஷயம் கேள்விப்பட்டு என்னை முறைத்தார். பணம் ஏதாவது கொடுத்தார்களா என்றார். நான் இல்லை என்றேன். உடனே போய் E.B மீட்டரைப் பார்த்தார். 2000 வாட்ஸ் பல்புகள் அரை நாள் எரிந்ததில் மீட்டர் ரீடிங் எகிறியிருந்தது. அய்யய்யோ இதை நான் யோசிக்கவேயில்லை. அப்பா டென்்ஷனாய் திரும்பி என்னைத் திட்டுவதற்கு தேடும்போது நான் கவுண்டர் தோட்டமெல்லாம் தாண்டி மெயின் ரோட்டுக்குப் பறந்து வந்திருந்தேன்.

சுட்டது யார் என்ற அந்த காமெடி சீரியலை எப்போதாவது யாராவது விஜய் டி.வியில் பார்த்தீர்களா? எங்கள் வீடு தெரிந்ததா? சொல்லுங்க.

நடுநிசிப் பேய்கள்

எங்கள் பாட்டி கதை சொல்லி வளர்ந்தவளா இல்லை கதை சொல்லி வளர்க்கப்பட்டவளா என்று எனக்குத் தெரியாது. ஆனால் பாட்டி ஒரு நல்ல கதை சொல்லி. என் கதைவிடும் திறன்கூட பாட்டி தன் டி.என்.ஏ குணாம்சங்களை எனக்குத் தாரை வார்த்துக்கொடுத்ததுதானோ என்றொரு சந்தேகமுண்டு.

பாட்டி சொல்கிற கதைகளில் தொண்ணூற்றைந்து சதவீதம் அட்வென்சர், திரில்லர், ஹார்ரர் ரகமாகத்தான் இருக்கும். கேட்கிறவர்கள் அதிகபட்சம் சின்னப் பையன், பொண்ணுங்களாக இருந்ததால் நெஞ்சுறைந்து கேட்டுக் கிடப்பார்கள். பி.டி. சாமி ரேஞ்ஜில் அமானுஷ்யமான கதைகள் நிறைய சொல்வாள். ஊரில் நடந்தது. அக்கம்பக்கத்தில் நடந்தது என்று விழிகள் விரிய கதைசொல்லி பயமுறுத்துவாள். கேட்டால் இரண்டு நாட்களுக்குத் தூக்கம் வராமல் புரள வேண்டியிருக்கும்.

மோயாறு மின்சார வாரிய க்வார்டஸில் இருந்தபோது நிகழ்ந்தவை என்று சிலது சொல்வாள். அப்போது நான் ஒரு வயசுக் குழந்தையாம். மோயாறு - மலைமேல் அமைந்திருக்கிற ஒரு அடர் காடு. வனத்துறை மற்றும் மின்சார வாரிய ஆட்கள் மட்டுமே புழங்குகிற இடம். EB க்வார்டஸில் சொற்பமாய் வீடுகள். எல்லோரும் சாயங்காலம் ஏழு மணிக்கெல்லாம் கதவைச் சாத்தி விடுவார்கள் என்று பாட்டி சொல்வாள். காரணம் காட்டு யானைகள். கூட்டமாய் வீட்டு வாசலுக்கு வந்து முன்புற தோட்டத்தில் இருக்கிற வாழை மரங்களை தினசரி துவம்சம் செய்துவிட்டுப் போய்விடுமாம். ஜன்னல் கதவை நூல் இடைவெளியில் திறந்து வைத்து இருட்டுக்குள் யானைகளைப் பார்த்துக்கொண்டிருப்பார்களாம். அவைகள் கண்ணில் பட்டால் வாழை மரங்களுக்கு ஏற்படுகிற கதிதான் நமக்கும் என்றாள் பாட்டி. ஒரு முறை அப்பா நண்பர்கள் சிலருடன் எங்கேயோ போய்விட்டு வருவதற்கு லேட்டாக, திரும்பி வரும்போது இருளில் சடசடவென சப்தம் கேட்டதாம். ரொம்ப அருகில் ஒரு பெரிய காட்டு யானை மூத்திரம் பேய்ந்து கொண்டிருக்கிற சப்தம்தானாம் அது. அங்கிருந்து பிடித்த ஓட்டம் வீட்டுக்கு வந்துதான் நின்றார்களாம்.

ஒரு வைல்ட் லைஃப் எக்ஸ்பெர்ட் மாதிரி மேலும் சில கதிகலக்குகிற விஷயங்கள் சொல்வாள். யானை தவிர இருட்டினதும் திருப்பதி லட்டு சைஸுக்கு ஒரு வண்டு டொக் டொக் என்று ராப்பூராவும் கதவில் மோதிக்கொண்டே இருந்தது, ஒரு சிறுத்தை தன் இரு குட்டிகளுடன் வீட்டுக் கூரையில் விடிகாலையில் உட்கார்ந்து கொண்டு கர் கர் என்று கத்திக்கொண்டிருந்தது என்று நிறைய சொல்வாள். நான் இதையெல்லாம் பின்னாளில் கதைகளாய்க் கேட்கும்போது ஆறாங்கிளாஸோ என்னமோ படித்துக்கொண்டிருந்தேன்.

மலையிலிருந்து இறங்கி டவுனுக்கு வந்த பிறகு பாட்டியின் கதைகளில் மாறுதல் வந்துவிட்டன. திடீரென்று ஒரு நாள் காலையில் எழுந்ததும், இரவு ஏதோ ஒரு அமுக்கான் (இது பற்றி தனியே எழுதவேண்டும்) தன் கழுத்தைப் பிடித்து மூச்சுத் திணறும்வரை வெகு நேரம் அமுக்கிக்கொண்டிருந்துவிட்டு பின் போய்விட்டதாக சொன்னாள். இன்னொரு நாள் எதற்கோ வீட்டுக்குள்ளிருந்து வெளியில் வந்தபோது வானத்தில் ஒரு தேர் வந்து நின்றதாகவும், அதிலிருந்து தேவர்கள் மாதிரி இருவர் பாட்டியை தம்முடன் வருமாறு அழைத்ததாகவும், பிறகு என்ன தோன்றியதோ சட்டென்று தேரைத் திருப்பிக்கொண்டு சர்ரென்று போய்விட்டதாகவும் சொன்னாள். அவர்கள் போனபிறகு வானத்தில் கழுத்தில் மட்டும் வெள்ளை நிறமிருக்கும் பருந்து வட்டமடித்துப் போனதாகவும் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னாள். அன்றைக்குக் காலை நாலு வீடு தள்ளி ஒரு பாட்டி பரலோக பதவியடைந்துவிட்டதை தன் கதையின் ஒரு அத்தியாயமாய் சேர்ந்துகொண்டு அதற்கு தெளிவுரையும் அளித்தாள். தன்னைக் கூப்பிட வந்த தேர் அந்தப் பாட்டியை அழைத்துக்கொண்டு போய்விட்டதாம். எதைச் சொன்னாலும் அப்படியே நம்புகிற வயதல்லவா? கேட்டதும் எங்களுக்கு அடிவயிற்றுத் திகில் அதிகமாகிவிட்டது.

பாட்டி பக்கத்துவீட்டில் லலிதா என்று ஒரு பெண் இருந்ததாகவும் அது ஒருநாள் தற்கொலை செய்து கொண்டதாகவும் அதன் ஆவி அந்த வீட்டுக்குள்ளேயே அலைவதாகவும் சொல்லி ஒருநாள் பயமுறுத்திவிட்டாள். நான் இரவில் எழுந்து பாத்ரூம் போவதைக்கூட நிறுத்திவிட்டேன். அவள் தினமும் நடுநிசியில் பின்புற சந்தில் இருக்கிற கதவைத் தட்டுவதாகவும், யாரும் திறக்காவிட்டால் லேசாய் தேம்பி அழுகிற சப்தமும் கேட்கும் என்றாள். மல்லிகைப் பூ வாசம் வரும். ஜல் ஜல் என்று கொலுசொலி எல்லாம் கேட்கும் என்பாள். பாட்டி இதையெல்லாம் சும்மா மேம்போக்காய் சொல்லிவிட்டுப் போக மாட்டாள். ஒரு சினிமாத் தயாரிப்பாளரிடம் ஒரு புது இயக்குநர் எப்படி கதை சொல்வாரோ அப்படி சொல்வாள். கைகாலெல்லாம் ஆட்டி, விழிகள் விரித்து முக பாவங்களோடு. கேட்கிற பொடிசுகளுக்கு குலை நடுங்கிவிடும்.

எனக்கு ஒருநாள் நடுநிசியில் விழிப்பு வந்தது. மணி பன்னிரண்டரை இருக்கும். பாட்டி சொன்னது சட்டென்று ஞாபகம் வந்தது. உற்றுக் கேட்டபோது பக்கத்துவீட்டில் கதவைத் தட்டுகிற சப்தம் கேட்டது. எனக்கு உடலெங்கும் ஒரு முறை சிலிர்த்து அடங்கிவிட்டது. போர்வையை சர்ரென்று இழுத்து தலையோடு முக்காடிட்டுக் கொண்டேன். கொலுசு சப்தத்தைக் காதுகள் தேடின. மல்லிகைப் பூ வாசம் வருகிறதாவென பார்த்தேன். கொஞ்ச நேரத்தில் கதவு தட்டல் சப்தம் பலமாகிவிட்டது. பிறகு சட்டென்று நின்றுவிட்டது. பேய் போய்விட்டது போலும். நான் பிறகு இரவு முழுவதும் தூங்காமல் நடுங்கிக் கிடந்தேன். அதன்பிறகும் ஒரு சில நாட்களில் அந்தச் சப்தத்தை மறுபடி மறுபடி கேட்டிருக்கிறேன்.

பாட்டி இதுமாதிரி அதற்கப்புறம் சொன்ன நிறைய கதைகள் ராஜேஷ்குமாரின் "உலராத ரத்தம்" சுஜாதாவின் "கொலையுதிர் காலம்". இந்துமதியின் "ஒரு நிமிடம் தா ஒரு கொலை செய்கிறேன்" ஆகியவைகளை மிஞ்சுகிற திகில் கதைகளாக இருந்தன.

பிறகு ஒருநாள் தெரிந்துவிட்டது. டெக்ஸ்டைல் மில்கள் நிறைந்த ஊர் அது. பகல் மூன்று மணிக்கு மில்லுக்குப் போய்விட்டு நடுநிசி பன்னிரண்டு மணிக்குத் வீட்டுக்குத் திரும்பும் பணியாளர்களின் நடுநிசிக் கதவு தட்டல்தான் நான் தினசரி கேட்டுக்கொண்டிருந்தது.

நான் வளர்ந்தபிறகு என் வீடு இருக்கிற காலனிக்குப் போகிற குறுக்கு வழியான இருளடைந்த சோளக்காட்டுக்குள் பென் டார்ச் துணையுடன் தனியாக நடக்கும்போது பாட்டி சொன்ன பேய்க்கதைகள் ஞாபகத்துக்கு வரும். சிரித்துக்கொண்டே நடப்பேன். ஆனால் அந்த ஒற்றை மரத்தைத் தாண்டி நடக்கும்போது மட்டும் கொஞ்சம் அமானுஷ்யமாக இருக்கும்.

என் நண்பன் சதீஷ் எப்போது வீட்டுக்கு வந்தாலும் பேய்க்கத சொல்லுங்க பாட்டி என்று விரும்பிக் கேட்டு உட்கார்ந்துவிடுவான். ஜாலியாய் சிரித்துக்கேட்டு பாட்டியை கொஞ்சம் கிண்டல் பண்ணி விளையாடிவிட்டுப் போய்விடுவான்.

பாட்டி இப்போது இல்லை. பாட்டி சொன்ன கதைகள் அப்படியே நெஞ்சுக்குள் பத்திரமாய் அதே திகில் வாசனைகளோடு இருக்கின்றன.

இப்போதுகூட எங்கள் அபார்ட்மெண்டில் நடுநிசியில் ஏதோ ஒரு வீட்டில் அடிக்கடி கதவு பலமாய் தட்டப்படும் சப்தம் கேட்டது. ஜல் ஜல் என்று கொலுசு சப்தம்கூட கேட்கிறது. பாட்டியை நினைத்துக்கொண்டு காலையில் மெதுவாய் விசாரித்தபோது "கால் சென்டர்ல வேலைங்க. நைட்டு வேன்ல கொணாந்து ட்ராப் பண்ணிருவாங்க" என தகவல் கிடைத்தது.

விஜிகள்

மீச்சாதான் அந்தப் பெண்ணை எனக்கு முதன் முதலில் காட்டினான். நான் ஸ்தம்பித்து நின்றுவிட்டேன். நான் வாழ்க்கையில் முதன் முதலாகப் பார்க்கிற அழகான பெண். அப்போது எனக்கு வயது சுமார் 20 இருக்கலாம். நான் முதன் முதலில் அவளைப் பார்க்கும்போது எப்படியிருந்தாள் என்று கொஞ்சமாய் வர்ணித்துவிடுகிறேன். மஞ்சள் புடவை. கையில் வெயிலுக்குப் பூப்போட்ட குடை. இன்னொரு கையில் சுருட்டப்பட்ட வெள்ளைத் தாள். அவள் நல்ல நிறம். மையிட்ட அழகான கண்கள். எடுப்பாய் திருத்தப்பட்ட புருவங்கள். ரோஸ் நிறத்தில் உதடுகள். ரூஜ் உபயத்தில் சிவந்த கன்னக் கதுப்பு. நடையில் இயற்கையாய் நளினம். நீள ஜடை. எங்கள் காலனியிலிருந்து டைப் ரைட்டிங் பழக டெய்லி பதினொரு மணிக்குப் இப்படிப் போவாள் என்றான் மீச்சு. அழகு என்றால் அப்படியொரு அழகு.

அவள் கடந்தவுடன் ரோட்டில் அவள் நடந்த புழுதியைத் மீச்சா தொட்டுக் கும்பிட்டுக் கொண்டான். என்னா பிகருடா என்று அங்கலாய்த்தான். தினம் பதினோரு மணிக்கு இந்த இடத்தில் ஆஜராகிவிடுவானாம். நான் மஞ்சள் புடவை கண்ணிலிருந்து மறைகிற வரை பார்த்துக்கொண்டிருந்தேன். மீச்சா தவிர அந்தக் காலனியின் இன்னபிற இளைஞர்களும் அந்தப் பெண்ணிற்கு பெரிய அளவில் ரசிகர் மன்றங்கள் வைத்திருந்தார்கள் என்று மெல்ல மீச்சா மூலம் தெரிய வந்தது. அவள் டைப் ரைட்டிங் போகும்போது, திரும்பி வரும்போது என தினம் இரண்டு தடவை அவன் ஜென்மம் சாபல்யமடைந்துவிடுவதாகச் சொன்னான் அவன். எனக்கே அந்தக் கணம் அப்படித்தான் இருந்தது.

சினிமா டைரக்டர் யாராவது பார்த்தால் கேள்வி கேட்காமல் கொத்திக் கொண்டு போய்விடுவார்கள். அவ்வளவு செளந்தர்யமாக இருந்தாள். கண்ணில் அறைகிற அழகு என்று சொல்லலாம். மேலும் ஓரிரு தடவைகள் மீச்சுவுடன் நின்றிருக்கும்பேது அவள் போவதைப் பார்க்க நேரிட்டபோது அவள் அழகு பற்றி ஓரிரு வார்த்தைகளில் நானும்கூட சிலாகித்ததுண்டு.

ஈதிப்படி இருக்க நாங்கள் வீடு மாற்றத் தீர்மானித்தோம். அப்பா நிறைய இடம் தேடி கடைசியில் ஒரு வீட்டை முடிவு பண்ணினார். ஒரு சுபயோக சுபதினத்தில் பால் காய்ச்சி புது வீட்டுக்குக் குடிபோனாம். மாடியில் ஒன்றும் கீழே இரண்டுமாக தனி காம்பவுண்டுக்குள் போர்ஷன்கள் இருந்தன. குடிபோனதற்கு அடுத்தநாள் காலை திண்ணையில் நின்று சுற்றுப் புறத்தை பார்வையால் அளவெடுத்துக் கொண்டிருந்தேன். மாடியிலிருந்து அந்தப் பெண் நைட்டியில் இறங்கிவந்தாள். பார்த்ததும் எனக்குள் மத்தாப்பு நட்சத்திரங்கள். "நிங்ஙளானோ இவிடெ வந்நிரிக்குந்நது?" என்றாள் புன்னகைத்தபடி. நான் என்னைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டேன்.

அடுத்த நொடி தகவல் பரவிவிட்டது. என்னைக் குசலம் விசாரிக்க நண்பர்களெல்லாம் அடிக்கடி வீட்டுக்கு வர ஆரம்பித்தார்கள். உனக்கு எங்கயோ மச்சம்டா என்றான் மீச்சா. ரமேஷ், குண்ஸ் எல்லாம் என் மூலம் அந்தப் பெண் பற்றி இன்னபிற தகவல்களைப் பெற்று அறிவு அபிவிருத்தி அடைந்தார்கள். அவள் பெயர் விஜி என்று தெரிந்தது. அவளுக்கு கல்யாணமாகி புருஷனோடு தனியே மாடியில் வசிக்கிறாள். தினம் ஹீரோ ஹோண்டாவில் வேலைக்குப் போகிற அவள் புருஷன் அவளைவிட கொஞ்சம் சுமாராகத்தான் இருந்தான். ரெண்டு பேருக்கும் ஊர் கேரளாவாம். ரெண்டுபேரும் வீட்டு சம்மதத்துடன் லவ் மேரேஜ் பண்ணிக்கொண்டவர்களாம்.

விஜி என் அம்மாவை "சேச்சி" என்றழைத்து என் வீட்டுக்குள்ளேயே அடிக்கடி வளையவர ஆரம்பித்தாள். எங்கள் குடும்பத்துடன் நன்றாக ஒட்டிக்கொண்டும் விட்டாள். அவள் குடும்ப ஆல்பம் எல்லாம் எடுத்துவந்து காட்டினாள். சுபாவத்திலேயும், பழகுவதிலும் ரொம்ப நல்ல பெண். என்னிடம் சகஜமாய் பேச ஆரம்பித்தாள். நண்பர்கள் காதில் புகைவிட்டார்கள். "நிங்ஙளுடெ ப்ரெண்ட் எந்தினா என்னெ வெறுதெ மொறச்சு நோக்குந்நது?" என்றாள் குண்சைக் காட்டி. அவன் நார்மலான பார்வையே அப்படித்தான் என்றேன்.

அப்புறம் பிரசவத்துக்காக ஒரு ஆறுமாசம் பிறந்தவீடு போய்விட்டாள். புருஷனும் ஹீரோ ஹோண்டாவும் மட்டும் இங்கேயே இருந்தார்கள். விஜி திரும்பி வரும்போது அவளை மாதிரியே அழகான குழந்தையுடன் வந்தாள். நல்ல கொழுக் மொழுக்கென்று இருந்தது. அப்புறம் அவர்கள் குடும்பத்தில் கூடுதல் சந்தோஷம் கலகலக்க ஆரம்பித்தது.

அப்பாவுக்கு மறுபடி மாற்றலாகி நாங்கள் கோவைக்கு போகவேண்டியதாயிற்று. கிளம்புகிற நேரம் விஜி, கணவன் மற்றும் குழந்தையுடன் ஊருக்குப் போயிருந்தாள். ஆகவே அவர்களிடம் சொல்லிக்கொண்டு போகமுடியவில்லை.

கோவை வந்து ஒரு மாதிரி செட்டில் ஆகி பழைய ஞாபகத்தில் ஒருநாள் பழைய வீட்டுக்குப் போனபோது மீச்சா தகவல் சொன்னான். விஜி அவளது ஊரில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டாளாம். என்ன நடந்ததென்று தெரியவில்லையென்றான் சோகமாய். நான் அதிர்ந்தேன். அந்தச் செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. ஏன் இப்படியொரு திடீர் முடிவு? அதுவும் அத்தனை பிஞ்சுக் கைக்குழந்தையை தனியாய் தவிக்கவிட்டு...என்ன காரணம் என்று மனதைக் குடைந்த கேள்விகளுக்கு இன்றுவரை விடை கிடைக்கவில்லை.

இதற்குமுன் நாங்கள் குடியிருந்த ஊரிலும் எதிர் வீட்டில் இதே மாதிரி ஒரு பெண் இருந்தாள். அவளுக்கு மாமியார் கொடுமை, புருஷன்காரனிடம் அடி என்று தினசரி பிரச்சனைகள் இருந்தன. அப்போது நான் இன்னும் ரொம்பச் சின்னப் பையன். என்றாலும் எல்லாக் காட்சிகளும் இன்னும் எனக்கு தெள்ளத் தெளிவாய் நினைவிலிருக்கின்றன. என்னக்கா பண்ணிட்டு இருக்கீங்க என்று வாசற்படியில் நிற்கிற அம்மாவிடமும் பாட்டியிடமும் கேஷூவலாக கேட்டபடி வீட்டுக்குள் வருவாள். உள்ளே வந்த மறுநிமிடம் கதவுக்குப் பின் சாய்ந்துகொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதபடி தன் துக்கத்தையெல்லாம் அம்மாவிடம் கொட்டுவாள். அம்மாவும் பாட்டியும் அவளுக்கு ஆறுதல் சொல்வார்கள்.

அந்த ஊரிலிருந்தும் அப்பாவுக்கு மாற்றல் ஆகி வேறு ஊர் போனோம். ஆறு மாசம் கழித்து யாரோ சொன்னார்கள். அந்தப் பெண் அவள் வீட்டுக்குள்ளேயே அதிகாலை நாலுமணிக்கு தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டாள் என்று.

எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. அவள் பெயரும்கூட விஜிதான்.

ஹேப்பி பர்த்டே!!

அப்பா எங்கள் பிறந்த தினங்களில்
பெயரிட்ட பெரிய வட்டக் கேக்குகளை
எச்சில் காற்றால் கேண்டில் அணைத்து
வெட்டச் சொல்லி பாட்டுப்பாடினார்...
*
அங்கேயிருக்க நேரும் பத்துப்பேரிலும்
அப்பாவால் மட்டும்தான்
வெட்கத்தைவிட்டுப் பாடமுடியும்,
இது உனக்கொரு சந்தோஷமான பிறந்த தினம்...
இது உனக்கொரு சந்தோஷமான பிறந்த தினம்...
*
அப்பாவின் பிறந்த நாட்களில் பாட ஆளிருக்காது.
நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் பரஸ்பர நம்பிக்கையற்றுப்
பார்த்துக்கொண்டபின்
ஹாப்பி - என்று துவங்கிய நானும்
என் ஒற்றைக் குரலின் பைசாசத்திற்கு பயந்து
பாட்டை நிறுத்திப்
பேந்தப்பேந்த விழித்துக்கொண்டிருப்பேன்.
*
அப்புறம் காலப்போக்கில் எங்களுக்குத் தைரியம் வந்தது.
ஆனால் அப்போது
அப்பா எங்கள் பிறந்த தினங்களை மறந்துவிட்டிருந்தார்
நாங்கள் அவர் பிறந்த தினங்களை மறந்து போயிருந்தோம்.

"அப்பாவின் பிறந்த தினங்கள்" - கவிதை.
- சுதேசமித்திரனின் 'அப்பா' கவிதைத் தொகுப்பிலிருந்து.

*
பாலக்காடு. ஒரு குக்கிராமம். ஏராளமான மரங்களும், கோழிகள் அடைகிற கூண்டும், சில மாடுகள் அடங்கிய தொழுவத்தையும் உள்ளடக்கிய தோட்டத்தின் நடுவே ஒரு மச்சுவீடு. அங்கே முப்பத்தி மூன்று வருடங்களுக்குமுன் ஒரு புதன்கிழமை காலையில் ஒரு குழந்தை பிறந்தபோது (நான்தான்) "என்ட கொச்சு மோனே" என்று ஈன்றபொழுதில் பெரிதுவர்த்தவர்கள், இவன் பிற்காலத்தில் தமிழில் சிறுகதையெல்லாம் எழுதி, அப்புறம் தமிழ் வலைப்பதிவு எல்லாம் ஆரம்பிப்பான் என்று யோசித்திருக்கக்கூட மாட்டார்கள். வருடங்களின் சுழற்சியில் சிந்தனைகளும், சிந்திக்கிற மொழியும் மாறிவிட்டன. எந்த மொழியில் வளர்ந்தாயோ அது தாய் மொழி. எந்த இடம் உனக்கு சோறு போட்டதோ அது சொந்த பூமி என்றாகிவிட்டது. சரி அதை விடுங்கள்.

இதை இப்போது நினைவுகூர்வதற்குக் காரணம் இந்த வருடமும் என் பிறந்தநாள் வந்துவிட்டதுதான். அப்போதெல்லாம் ஒவ்வொரு வருடமும் பிறந்தநாள் வரும்போது நிறைய எதிர்பார்ப்புகளை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு காத்திருப்பேன். நிறைய பேர் வாழ்த்துக்கள் சொல்வார்கள். நிறைய பரிசுப்பொருள்கள் வரும். புதுசாய் உடை அணிந்து கொள்ளலாம். முக்கியமாய் ஸ்பெஷலான ஆட்கள் தரும் ஸ்பெஷலான பரிசுகளுக்காய் மனசு தவம் கிடக்கும். ஸ்பெஷல் என்றால் அப்படி ஒரு ஸ்பெஷல். நிறைய பிறந்தநாட்களில் சந்தோஷத்தில் மனசும் விழிகளும் கலங்கியிருக்கின்றன. பிறகு நண்பர்களுடன் பர்த்டே ட்ரீட்டுக்குப் போகிற இடங்களும், கழிகிற பொழுதுகளும் அடுத்த பிறந்தநாள்வரை ஞாபகம் இருக்கும். அதே போலத்தான் நான் விரும்பி அடுத்தவர் பிறந்தநாளைக் கொண்டாடுவதும்.

ஒவ்வொரு வருடமும் என் பிறந்த தேதி நெருங்க நெருங்க எனக்குப் பிடித்த, என்னைப் பிடித்த நண்பர்கள் உறவினர்கள் முதுகுப்புறம் எதையோ மறைத்துக்கொண்டு (பரிசுப்பொருட்கள்தான் வேறென்ன?) வட்டமாய் என்னை நெருங்குகிற மாதிரி கற்பனை வரும். இனிமை கலந்த நெர்வஸ் ஒன்று முதுகுத் தண்டில் ஓடும். என் பிறந்த நாளை மறந்துவிட்ட ஒரு நண்பனை ஏன்டா ஒரு விஷ்கூட பண்ணல என்று கன்னா பின்னாவென்று திட்டியிருக்கிறேன்.

சிலோன் ரேடியோவில் "பிறந்த நாள்.... இன்று பிற....ந்...த நாள்!" என்று பாட்டு போட்டு யாருக்காவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்வதைக் கேட்கும்போது ஆஹா! என்றிருக்கும். தாத்தா, பாட்டி, பெரியப்பா, சித்தப்பா, அம்மும்மா, அக்கக்கா என்று வாழ்த்தியவர்கள் லிஸ்ட்டை நீளமாய்ப் படிப்பதைக் கேட்கும்போது ஒருத்தன் பிறந்ததற்கு இத்தனை பேர் சந்தோஷப்படுகிறார்களே என்று வியப்பாக இருக்கும்.

வாழ்வின் நிறைய வருடங்கள் அதற்குள்ளாகக் கடந்துவிட்டன என்று ஏதோ ஒரு நாள் திடீரென்று ஏனோ உணர்ந்துவிட்டேன் போலும். பிறகு பி.நாள் கொண்டாடுவதன் சுவாரஸ்யம் லேசாய் குறைந்துபோய்விட்டது. நான் இன்னும் என்னைச் சின்னப்பையனாதான் ஃபீல் பண்றேன் என்று சொல்கிற பொய், கண்ணாடியைப் பார்க்கும்போது உடைந்து சிதறிவிடுகிறது. (இதைப்படிக்கிற அன்பர்கள் உடனே என்னை ஒரு குடுகுடு கிழவனாக கற்பனை செய்து ஏமாந்து போகாதீர்கள் என்று எச்சரிக்கிறேன்).

எனக்கொரு மகன் பிறந்தபிறகு சென்டர் ஆஃப் அட்ராக்ஷன் மாறியதில் என் பிறந்தநாளின் முக்கியத்துவம் பங்கு மார்க்கெட் மாதிரி சரிந்தது. நல்லது! அதையேதான் நானும் எதிர்பார்த்தேன். பெரிய வட்ட கேக். நடுவே நம்பர் கேண்டில் வைத்து குவிந்த வாயால் குழந்தை சுடரை ஊதிக் கைதட்டுகிற குதூகல தருணங்களில் முடிவு செய்துகொண்டேன். இனி நான் என் பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை. இனியென்ன? இதோ இப்போது வரப்போகிற பி.நாள் தானாகக் கடந்துபோகட்டும். அப்படியும் நினைவு வைத்துக்கொண்டு வாழ்த்துபவர்களுக்கு சின்னதாய் ஒரு தேங்க்யூ சொல்லி முடித்துவிடவேண்டும். ட்ரீட் என்று நிர்பந்தித்தால் நான் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை என்று அறிவத்துவிட்டு ஒரு காஃபி பைட்டோ, காஃபியோ வாங்கிக்கொடுத்துவிட்டு நைஸாய் கழன்று கொள்ள வேண்டும். எல்லா நாளையும்போல இது இன்னொருநாள் அவ்வளவே!

இதோ என் இருப்பை ஞாபகப்படுத்தும் இந்த வருடத்திற்கான பிறந்ததினம் வந்துவிட்டது. வயது ஏற ஏற டென்ஷனும், டெக்னாலஜியும் அதிகமாகிவிட்டது பாருங்கள். காலை 5.30க்கு 'மெனி மோர் ஹேப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் தி டே!' என்று SMS வருகிறது. தொடர்ந்து பல இப்படியே. பிறகு தட்டப்பட்ட கதவைத்திறந்தால் நண்பர்கள். கையில் கிஃப்ட் பேக். மலங்க முழித்துநின்ற என்னைப்பார்த்து "வாழ்த்துக்கள்! என்றார்கள். 'இந்த சிகப்பு டி-சர்ட் உனக்கு எடுப்பாக இருக்குமென்று வாங்கினேன்.' நண்பன் சொல்கிறான். பிரித்த கிஃப்ட் கவர்களிலிருந்து புத்தகங்களை உருவி எடுக்கிறேன். "ப்ஷீர் வரலாறு". அப்புறம் "முகவீதி" - ராஜசுந்தரராஜன் கவிதைகள். நான் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்த புத்தகங்கள். நன்றி. நன்றி. நன்றி!

டெலிபோன் அடிக்கிறது. எடுத்தால் மறுமுனையில் கோயமுத்தூரிலிருந்து ராகம் போட்டு பையனின் பாட்டு.. "ஹாப்பி பர்த்டே டூ யூ". லேசாய் நெகிழ்கிறது. "கே.பி.என் பார்சல் சர்வீஸ்ல உனக்கு ஒரு பார்சல் கிப்ஃட் அனுப்பியிருக்கேன்.. மறக்காமப் போய் வாங்கிக்கோ" என்கிறாள் மனைவி. பிறகு ஆஃபீஸ் கிளம்புகிற வரை நிறைய போன்கள். நிறைய வாழ்த்துக்கள். கடவுளே!

என்னை மீறி இவையெல்லாம் நிகழ்ந்துவிட்டது. சரி! அலுவலகத்திலாவது யாருக்கும் இதைப் பற்றி நான் ப்ரஸ்தாபிக்காமல் இருத்தல் நலம். அங்கே யாருக்கும் இது தெரியாது. அலுவலகத்திற்கு நண்பன் கொடுத்த டி-சர்ட்டைப் போட்டுக்கொண்டு நல்ல பிள்ளையாய் போய் தேமே என்று வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டேன். அலுவலக முகவரிக்கு குரியரில் வந்த க்ரீட்டிங் கார்டுகளை மற்றவர்கள் பார்க்காமல் பிரித்துப் பார்த்து பின் ஒளித்தும் வைத்துவிட்டேன். மின் அஞ்சலில் வந்த ஒரு சில வாழ்த்துக்களை ப்ரவுசர் மினிமைஸ் பண்ணிவைத்துப் படித்தேன். பிறகு அலுவலக போனிலும் செல் போனிலும் வந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். எல்லாவற்றிற்கும் மற்றவர்கள் கேட்காமல் குரலைத் தணித்துப் பேசிச் சமாளித்தேன். போதாக்குறைக்கு "Airtel wishes a very happy birthday" என்று செல்போன் ப்ரொவைடரின் ஆட்டோமேட்டட் வாய்ஸ் வேறு. அப்படியும் ஒருத்தன் ஆஃபிஸில் கேட்டுவிட்டான். "இன்னைக்கு என்ன ரொம்ப உற்சாகமா இருக்கீங்க?". நான் சிரித்து மழுப்பினேன்.

ஹா! எப்படியோ நாலு மணி வரையிலும் இப்படியே ஓட்டியாயிற்று!

பிறகு 123greetings.com-ல் இருந்து ஒரு வாழ்த்து வந்தது பாருங்கள்! யாருக்கும் தெரியாமல் லேசாய் அதைத் திறந்தபோது.. அடப்பாவி அதில்.. மிடி ஃபைலாக அதில் ம்யூசிக் வேறு இணைத்து அனுப்பியிருக்கிறான். டி...டி... டீ....டி. டீ... டீ! என்று ஹேப்பி பர்த்டே ட்யூன். என் ஸ்பீக்கர் வால்யூமை நான் ஏன் இத்தனை வைத்துத் தொலைத்தேன்? அருகில் இருந்தவன் சடாரென்று திரும்பினான். என்னது? என்றான். நான் வால்யூமை சடாலென்று குறைப்பதற்குள் புரிந்து கொண்டுவிட்டான். "ஷிட்.. மறந்தே போயிட்டேன்.." என்று அவன் அருகில் வந்து கைகுலுக்க... நிமிடத்தில் என்னைச்சுற்றிக் கூட்டம். 'ஆனாலும் நீ இத்தனை கமுக்கமாய் இருக்கக்கூடாது' என்றார்கள். ட்ரீட்க்கு எங்கே போகலாம் என்று பேரம் நடந்தது. முடிவாய் திருமயிலை அடையாறு ஆனந்த பவனில் என் பிறந்த நாள் ட்ரீட் இனிதே முடிந்தது.

ஆக இந்த வருடம் இந்த நாள் அபாரமாய்க் கழிந்துவிட்டது. இந்த நாளின் மகிழ்ச்சி வயதொன்று ஏறிவிட்ட சோகத்தை தற்காலிகமாய் மழுங்கடித்துவிட்டதுதான்

'அதெல்லாம் சரிதான். இந்த தினத்தை நிறைவானதாக ஆக்கும் பொருட்டு அடுத்தவேளை சோற்றுக்கு வழியில்லாத, உன்னிலும் மிக ஏழ்மையான யாருக்கேனும்.. பத்து ரூபாய்க்கோ, ஒரு பிடி அரிசிக்கோ ஏதாவது வழிவகை செய்து உதவினாயா? அப்படியொன்றை நினைத்தாவது பார்த்தாயா?'

எதிர்பாராத (பார்த்த?) வகையில் இத்தனை சிறப்பாய் கழிந்த நாளின் இறுதியில் எழுந்த இந்தக் கேள்வி சுருக்கென்று ஆழமாய்த் தைக்கிறது மனதை.

ஹேப்பி பர்த்டே டு மி!