சண்டை

முன்னொரு காலத்தில் சினிமாக்களில் எம்.ஜி.ஆர், சிவாஜி என்றழைக்கப்படும் நடிகர்கள் வாழ்ந்து வந்தார்கள். சினிமாவில் எங்கெல்லாம் எப்பொழுதெல்லாம் அக்கிரமக்கார்கள் அப்பாவிகளுக்கு வஞ்சனையால் அநீதியிழைக்கிறார்களோ, அங்கெல்லாம் குதிரை, ரிக்ஷா போன்ற கிடைக்கிற வாகனங்களில் கடுகி விரைந்து வந்து வானத்தில் எம்பிக் குதித்து அக்கிரமக்காரர்களை உதைத்து பூமியில் உருட்டிவிட்டார்கள். சாட்டை, பட்டாக்கத்தி, வாள், வேல் முதலான சாமானியர்கள் கையாள்வதற்கியலாத ஆயுதங்களை அநாயசமாக கையாண்டு சளைக்காமல் சண்டையிட்டார்கள். அடிபட்டு விழுந்தாலும் வில்லனை நோக்கி ஒரு அலட்சியப் பார்வையை வீசிவிட்டு இதழ்கடையோரம் அரும்பிய உதிரத்தை வலது கை கட்டை விரலால் ஸ்டைலாக துடைத்துவிட்டு முழு வீச்சோடு பாய்ந்தார்கள். இறுதியில் தன் சக்தியையெல்லாம் இழந்து கீழே குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கும் பகைவனின் நெஞ்சில் காலும் அவன் கழுத்தில் கத்தியும் பதித்து ஓரிரு டயலாக் உதிர்த்து அவனை மன்னித்து விடுதலை செய்தார்கள். அல்லது உத்தரத்தை நோக்கிச் சுட்டுக்கொண்டே கடைசி காட்சியில் உள்ளே நுழைந்த இன்ஸ்பெக்டரிடம் அவனை ஒப்படைத்துவிட்டு சட்டத்துக்கு காவலர்களானார்கள்.

இந்த மாதிரி காட்சிகளில் கத்திச் சண்டையாயிருந்தால் டிணிங் டிணிங் என்ற சப்தமும், வெறும் கை என்றால் டிஸ்யூம் டிஸ்யூம் என்ற சப்தமும் ஒரு இருபது நிமிடங்களுக்கு இடைவிடாது கேட்டுக்கொண்டிருக்கும். பிண்ணனியில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும்பொருட்டு பாம் பாம் பாம், தடுபுடுதடுபுடுதடுபுடுதடுபுடு என்று இசையமைப்பாளர் ட்ரம்ஸையும் ட்ரம்பட்டையும் உருட்டியவாறிருந்தார். இடையிடையே கதாநாயகர்களின் அருமை வளர்ப்பான குதிரை, அல்லது கறுப்பு நாய் முதலானவை, வில்லனால் கட்டிப்போடப்பட்டிருக்கும் குடும்ப உறுப்பினர்களின் கட்டை அவிழ்த்தோ அல்லது வெடிக்கவிருக்கும் குண்டின் திரியில் சிறுநீர் கழித்தோ தம்மாலான வகையில் நீதிக்குத் துணைபுரிந்தன.

இந்தமாதிரி சண்டைக்காட்சிகளில் திரையரங்கில் கரகோ்ஷங்களும், விசில்களுமாக அதிர்ந்து தூள் பறந்தன. சினிமா அதன் அழகிய பொய்களை, செல்லுலாய்ட் கதாநாயகர்களின் வீரத்தோடு கலந்து உறுத்தாமல் ரசிகர்களுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தது. அவர்களின் மனம் திரையரங்கைவிட்டு வெளியில் வரும்போது மிக உற்சாகமாயிருந்தது.
கமலஹாசன், ரஜனிகாந்த் போன்றோர் வந்தபிறகு வில்லன்கள் சற்று ஆடித்தான் போனார்கள். பின்னே இவர்களுக்கு கராத்தேவும், குங்ஃபூவும் வேறு தெரிந்திருக்கிறதே. செகண்டுக்கு முப்பத்தியிரண்டு குண்டுகள் வீதம் பொழியும் இருபத்துக்கும் மேற்பட்ட இயந்திரத் துப்பாக்கிகளாலும் இவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. சாக்கில் கட்டி கடலில் வீசினாலும் மிதந்து எழுந்து வந்தார்கள். நிஜமான பராக்கிரமசாலிகள்தான். ஆகவே இதுபோன்ற சாகாவரம்பெற்ற கதாநாயகர்களை அடியோடு ஒழித்துக்கட்ட ராக்கெட் லாஞ்ச்சர்களும், க்ரானைடு குண்டுகளும் வில்லன்களுக்கு நிறைய தேவைப்பட்டன. கமலஹாசனுக்கே இப்படியென்றால் மாருதி காரையெல்லாம் ஒற்றைவிரலால் தூக்குகிற சரத்குமார்களை வெறுங்கையால் சண்டையிட்டுக்கொல்வதென்ன சாதாரண விஷயமா என்ன? தயாரிப்பாளர்களுக்கு செலவு இழுக்கத் தொடங்கியது.

சினிமாவில் கொள்ளைக்கூட்டத் தலைவர்கள் மறைந்து, தங்கத்தைக் கடத்துபவர்களின் ட்ராஃபிக் அதிகமாகத் தொடங்கியது. அப்புறம் தங்கம் தீர்ந்துபோய் அதிகம் சிரமமில்லாமல் ப்ரெளன் சுகர். இடைஞ்சலாய் இருக்கிற கதாநாயகர்களை துவம்சம் செய்யப் போன அடியாட்கள் கைகாலில் கட்டுடன் திரும்பி வந்தார்கள். ஆட்கள் போதவில்லை. ஆயுதங்களும். எத்தனை நாள்தான் கஞ்சாவையே கடத்துதென்று அலுத்து சாராயம் காய்ச்சிப் பார்த்தார்கள். அங்கேயும் விஜயகாந்த் எழுந்தருளி மேற்படி சட்டவிரோதக்காரர்களை பக்கத்து மரத்தில் கால் வைத்து எகிறி அடித்தமையால் பேசாமல் அரசியல்வாதியாவதைத் தவிர வில்லன்களுக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது. அரசியலென்றால் எப்படியும் அடியாட்கள் எனப்படுபவர்களையும் கழுத்தில் ஒரு கிலோ சங்கலியணிந்த தாதா என்றழைக்கப்படுகிற அதிபயங்கர வில்லன்களையும் ஏவி கதாநாயர்களின் வீரத்துக்கு சவால்விட ஆரம்பிக்கலாமே. இதன் மூலம் அணுகுண்டை நெஞ்சில் தடுத்து மாண்புமிகு வில்லர்களின்பால் திருப்பியனுப்பும் கதாநாயகனுக்கு அரிவாள் என்கிற ஒரு பயங்கர ஆயுதத்தை அறிமுகம் செய்ததன்மூலம் தமிழ்த்திரை சண்டைக்காட்சி ரசிகர்களை கொஞ்சமாய் நகர்த்தி சீட் நுனியில் உட்கார வைத்தார்கள்.

இப்போது ரசிகன் உற்றுப் பார்க்க... ஸாரி... கேட்க ஆரம்பித்தான். அடடே... அந்த டிஸ்யூம் டிஸ்யூம் சப்தத்தையே காணோமே. அதற்குப் பதில் என்ன இது இடி இடிக்கிற மாதிரி.. ஓ... DTS... அப்படியொன்று வந்துதான் பல நாட்களாயிற்றே..! வருடங்கள் எத்தனை உருண்டிருந்தாலும், எத்தனைதான் நையப் புடைத்து அனுப்பியிருந்தாலும் மறுபடி மறுபடி எதிரே தோன்றுகிற இந்த தாதாக்களை ஒழிக்க நம்மருமை கதாநாயகனுக்கு ஒரேயொரு வழிதான் இருந்தது. அது தப்பித்து ஓடுகிற மாதிரி ஓடி துரத்துகிற அடியாட்களை ஒரு சந்து முனையில் கார்னர் செய்து திரும்பி நின்று எரிமலையை கண்களில் தேக்கி வைத்து முறைப்பது. இந்த இடத்தில் ரீ ரெகார்டிங் அனைத்தையும் நிறுத்திவிட்டு நம் கதாநாயகனின் வலது அல்லது இடது கை விரல்கள் மடங்குவதை ஒரு மாதிரி நெறிபடுகிற சப்தத்துடன் மிக மிக டைட் குளோசப்பில் காட்டவேண்டும். அரை நூற்றாண்டு காலமாக சண்டைக் காட்சிகளில் ஊறித் திளைத்திருந்த ரசிகப் பெருமகனானவன் அடுத்து என்ன நடக்கிறதென்பதை மிக சுளுவாக ஊகித்துக்கொண்டான். கதாநாயகனிடம் முதல் அடி வாங்குகிற அடியாளைப் பார்த்தீர்களா? அந்த முதல் அடி என்பது மிக முக்கியம். அது நாயகன் எப்படிப் பட்டிவன் என்பதற்கான முன்னுரை. திடீரென DTS சர்ரெளண்ட் சவுண்டு ஸ்பீக்கர் தன் அதிக பட்ச இடியை ரசிகனின் காது ஜவ்வுகள் அதிரப் பாய்ச்ச இதோ அடியாள் அந்தரத்தில் 13 கரணம் போட்டு (இது கொஞ்சம் ஸ்லோ மோஷனில் காட்டிவிட்டு) தூரத்தில் ஊருக்கு ஒளி வழங்கும் ட்ரான்ஸ்ஃபார்மர் ஒன்றின்மேல் பொறி தெரிக்க (இது கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஃபாஸ்ட் மேட்ரிக்ஸ் எஃபெக்டில்) வெடித்து விழுந்தான் பாருங்கள். மற்ற அடியாட்கள் தொண்டையில் எச்சில் விழுங்கினார்கள். பின்னே கதாநாயகனும் முன்பு தாதாவாக இருந்ததும் அவனுக்கு இன்னொரு பெயர் இருந்ததும் பின்னர் தெரிய வந்தது.

அதற்கப்புறம் விழந்த ஒவ்வொரு அடியிலும் தியேட்டரில் ரசிகனின் தாடை கிழிந்து தொங்கியது. அவன் ரத்தம் சூடாகி நரம்புகள் ஜிலீர் ஜீலீர் என்று அதிர்ந்தன. அடியா இது. இடி. போததற்கு ஒரு பாட்டி வேறு வந்து கதாநாயகனை உற்சாகப் படுத்தும் வகையில் பாட நிஜமாகவே அவன் ஒரு சூறாவளிக் காற்றென சுழன்று எழுந்தான். க.நா அடியாட்களின் கைகளைத் திருகி வீசுகிற போது எக்ஸ்ரேயில் எலும்புகள் ஒடிவது தெரிந்தன. இந்த கிராஃபிக்ஸ் என்று ஒன்று வந்து சேர்ந்துவிட்டதாமே நடுவில். நல்லதாகப் போயிற்று. இனி தாதாக்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் சிம்ம சொப்பனம்தான். வில்லனைப் பந்தாட விஜய் நடந்துவரும்போது அவர் ஷுவில் பட்டாசு எதுவும் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை. அப்புறம் எப்படி சாணை பிடிப்பது மாதிரி தீப்பொறி பறக்கிறது? ஓ! கிராஃபிக்ஸ். இனி காலைச்சுழற்றி தரையில் புயல்காற்றை உருவாக்கி வில்லன்களை கதிகலங்கச் செய்வது சுலபம். இப்படி எத்தனையோ!

கதாநாயகன் DTS, க்ராஃபிக்ஸ், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மற்றும் எடிட்டிங் துணைகொண்டு முஷ்டி மடக்கி விசிறின ஒவ்வொரு அடியிலும், மண்டை பிளந்து, கைகால் முறிந்து, தாடைச் சதைகள் பிய்ந்துபோய், கழுத்தெலும்பு மளுக்கென்று முறிக்கப்பட்டு, சுவரோடு அடித்துத் துவைக்கப்பட்டு, கண்கள் பிதுங்கி, நரம்புகள் தளர்ந்து உயிர்நாடி ஊசலாடி ஓய்ந்து இருக்கைகளில் கிடக்கிறான், தொன்று தொட்டு குடும்பத்தோடு திரைப்படம் காணவந்து கொண்டிருக்கும் ரசிகன். இதற்கு முன் பார்த்த திரைப்படத்தில் ஒரு சண்டைக்காட்சியினைக் கண்ணுற்று இதயம் நடுங்கி அதிர்ந்து மிகவும் பயந்துபோய் இரவெல்லாம் உளறின தன் குழந்தைக்கு காதில் வைப்பதற்கு பஞ்சோடு இன்றைக்கு "அந்நியன்" என்ற இந்தப் படத்தைக் காண வந்தவனும் கொஞ்சம் நடுங்கித்தான் போய்விட்டான் இந்தத் தடவை. வெளியே வந்தபோது விண் விண் என்று தலை வலித்தது.

வந்த கையோடு இந்த வலைப்பதிவையும் எழுதி வைத்தான். எம்.ஜியாரும் சிவாஜியும் வந்து இந்த DTS என்கிற வில்லனை எப்படியாவது ஒழித்துக்கட்டினால் இனி குழந்தைகளையும் தைரியமாய் சண்டைப்படத்துக்கு கூட்டிக்கொண்டு போகலாமென்று அவனுக்குத் தோன்றுகிறது.

இன்னொரு மழைக்கு முன்பு

என் நண்பரும் எழுத்தாளருமான சரசுராமின் முதல் சிறுகதைத் தொகுப்பான 'இன்னொரு மழைக்கு முன்பு' மித்ர ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ் வெளியீடாக வந்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

17 சிறுகதைகளால் ஆன இந்த தொகுப்பில் உள்ளடங்கிய கதைகள் அனைத்தும் ஆனந்த விகடன், சாவி, கல்கி, புதிய பார்வை, தினமணி கதிர் போன்ற பத்திரிக்கைகளில் வெளியானவை. 136 பக்கங்கள்.

மனித உறவுப் பின்னல்களின் நுண்ணிய சிக்கல்களையும், யதார்த்த உணர்வுகளின் நீரோட்டத்தையும், நெகிழ்ந்த மன வெளிப்பாடுகளின் உன்னத கணங்களையும், மென்மை தோய்ந்த அணுகுமுறையில் சிறந்த சிறுகதைகளாய் மாற்றும் திறமை சரசுராமின் பேனாவுக்கு உண்டு. மரங்கள் அடர்ந்த சாலையில் சன்னமாய் அடிக்கிற காற்றில் ஒரு சாயங்கால வேளை slow cycling மாதிரி எந்தப் பரபரப்பில்லாமல் மென்மையாய் கைபற்றி சீரான வேகத்தில் நம்மைக் கூட்டிச் செல்கிறது சரசுராமின் இத்தொகுப்பு.

இந்த புத்தகத்தின் முன்னுரையில் "என் கதைகள் பெரும்பாலும் பாசிட்டிவான விஷயங்களாக இருப்பதாகக் கேள்வி வந்ததுண்டு. இனிமேலும் வரலாம். அதற்கு என் பதில் - என் வாழ்வில் எனக்கு நடந்த சம்பவங்கள் பெரும்பாலும் நல்லவையே. நான் சந்தித்த மனிதர்கள் பெரும்பாலும் நல்லவர்களே. ஆக, இது என் அனுபவம். இவர்கள் என் மனிதர்கள். நான் ஆசைப்படும் மனிதர்கள் அல்லது நான் எதிர்பார்க்கும் மனிதர்கள். இவர்களைச் சொல்லவே ஆசைப்படுகிறேன். அப்படி எழுதுவதையே பெருமையாக நினைக்கிறேன்" என்கிறார் சரசுராம். முற்றிலும் உண்மை.

என்றைக்கோ வந்திருக்கவேண்டிய இத்தொகுப்பு மிக தாமதமாக வெளிவந்திருந்தாலும் நல்ல சிறுகதை வாசிப்பை விரும்பும் வாசகர்களை இத்தொகுப்பு திருப்தி செய்யும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

நானும் சிறுகதை எழுத ஆசைப்பட்டபோது அதன் வடிவம், உள்ளமைப்பு, உரைநடை உள்ளிட்ட இன்னபிற நுணுக்கங்களைக் கற்றுத்தந்து என்னை சிறுகதையாளனாக உருமாற்றிய பெருமைகூட சரசுராமையே சேரும்.

சரசுராம் இப்போது பணியாற்றிக் கொண்டிருப்பது திரைத்துறையில் இணை இயக்குநராக.

இன்னுமொரு மழைக்கு முன்பு
சிறுகதை தொகுப்பு - சரசுராம்
விலை - ரூ. 75
மித்ர ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ்
32/9, ஆற்காடு சாலை
கோடம்பாக்கம், சென்னை - 600024
போன் : +91 44 23723182, 24735314
mithra2001in@yahoo.co.in