மிளகாய்ப் பொடியும் மாங்கொட்டையும்


முன்பெல்லாம் பைக்கில் போகும்போது யாராவது லிஃப்ட் கேட்டால் உடனே எனது கருணை உள்ளம் விழித்துக் கொண்டு வண்டியை நிறுத்துவேன். சில போலீஸ்காரர்கள் வண்டியை கைகாட்டி நிறுத்தி அது அவருடைய சொந்த வாகனமேபோல் ஏறி உட்கார்ந்துகொண்டு ’அந்த பூத்தாண்ட விட்ருங்க’ என்று உரிமையாகச் சொல்வார்கள். அவர் கையிலோ சட்டைப் பாக்கெட்டிலோ வைத்திருக்கும் வாக்கி டாக்கியானது சகிக்க இயலாவண்ணம் இடையிடையே ஒரு பாம்புச் சீறல் சப்தத்துடன் அடித்தொண்டையில் கமறிக்கொண்டிருக்கும். அதே போல பெரியவர்கள் யாராவது கை காட்டினால் நிறுத்திவிடுவேன். சில டாஸ்மாக் பயனர்களும் அதில் அடங்குவர். (அதாவது அடங்க மாட்டார்கள்).

எனது கோவை நண்பரொருவர் ஒரு சம்பவத்தைச் சொன்னார். கோவையில் அவர் பைக்கில் போய்க்கொண்டிருக்கும்போது லிஃப்ட் கேட்டிருக்கிறார் ஒரு டிப்டாப்(!) ஆசாமி. இவரும் கொடுத்திருக்கிறார். ஒரு இருட்டான இடம் வந்ததும் ’இங்கே இறங்கிக் கொள்கிறேன்’ என்று நிறுத்தச் சொல்லி நண்பர் சுதாரிப்பதற்குள் அவர் கண்களில் ஆச்சி மிளகாப் பொடியைத் தூவி அவரை ஸ்தம்பிக்க வைத்து கத்தி முனையில் பர்ஸ், செயின் முதலானவற்றை வழிப்பறி செய்யப்பார்க்க, ஏற்பட்ட எரிச்சலில் சடாரென்று நடுரோட்டில் வண்டியை சைடு ஸ்டாண்ட் போட்டு இறங்கி கத்திவாலாவை நண்பர் நையப் புடைக்க ஆரம்பித்தாராம். அவனைக் கீழே தள்ளி மிதி மிதியென்று மிதித்து பிறகு அவ்வழியே வந்த ஒவ்வொருவராக இக்காட்சியைக் கண்ணுற்று தன் பங்குக்கு ’பொதுமாத்துக்’கலையை பயில ஆரம்பித்தார்களாம். இத்தனைக்கும் நண்பர் சீனாவிலுள்ள ஷாலின் டெம்பிளின் முப்பத்தாறு சேம்பர்களில் எந்த ஒன்றிலும் மழைக்குக் கூட ஒதுங்காதவர். ஆனால் மரண அடி கொடுத்தாராம்.

’அதனால யாருக்கும் லிஃப்ட் குடுக்கவே குடுக்காதீங்க” என்று அறிவுறுத்தினார். அசிடிட்டி காரணமாக எனக்கு மிளகாய்ப் பொடி அவ்வளவாக ஒத்துக்கொள்ளாது என்பதால் நிறைய யோசித்து பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு இனிமேல் யாருக்கும் லிஃப்ட் கொடுப்பதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றினேன்.

அதன் பிறகு என் வண்டிக்கு முன் நீண்ட கரங்கள் அனைத்தும் தோல்வியுடன் கீழே விழுந்தன. யார் கட்டை விரலை உயர்த்திக் காட்டினாலும் ஒரு தலையசைப்பைக் கூட வழங்காமல் விர்ரென்று ஸ்பீடைக்கூட்டிப் போய்விடுவேன்.

இன்று காலை ஒரு சாலைத் திருப்பத்தில் என் ஹோண்டா ஆக்டிவாவைத் திருப்பும்போது ஒரு எட்டுவயது மதிக்கத்தக்க ஒரு அழுக்கான பையன் ‘ண்ணா ..ண்ணா’ என்று கை நீட்டினான். ‘அங்க விட்ருங்கண்ணா..’ என்றான். நான் எனது லிஃப்ட் மறுப்புக் கொள்கையைத் தளர்த்தாமல் ஆக்ஸிலரேட்டரை முறுக்க அவன் வலது கையில் பிடித்திருந்த மாங்கொட்டையைச் சப்பியபடி கூடவே ஓடிவந்தான். திருப்பம் என்பதால் நான் வண்டியின் வேகத்தைக் குறைத்திருக்க அவனுக்கு வசதியாகப் போய்விட்டது. ஓடும் வண்டியைப் பிடித்து ஏறப்பார்த்தான். எனக்குப் பதறிவிட்டது. எங்கேயாவது விழுந்துவிடப்போகிறானே என்று வேகத்தை இன்னும் குறைத்த மறுகணம் லாகவமாக ஏறி பில்லியனில் உட்கார்ந்துவிட்டான்.

ஏறி உட்கார்ந்த மறுகணம் அவன் என் இடுப்பைப் பிடித்துக்கொள்ளப் பார்க்க, “எலேய்.. என்னப் புடிக்காம உக்காரு.. எங்கடா போணும்?” என்றேன். நான் நெளிய என் வாகனமும் நெளிந்தது. அவன் கையில் மாம்பழச்சாறு முழங்கை வரை வழிந்துகொண்டிருந்தது. நான் போட்டிருந்ததோ வெள்ளை நிறம் கலந்த ஒரு டீ-சர்ட். கறை நல்லதுதான். ஆனால் போகாது.

அடுத்த திருப்பத்தில் இறங்குவான் என்று பார்த்தால் அவன் பயணம் முடிவிலியாக இருந்தது. எனக்கு கவனம் முழுக்க அவன் மாங்கொட்டையில் மையம் கொண்டிருந்தது. திடீரென்று முப்பது கிமீ வேகத்தில் செல்லும் என் வாகனத்தை ஓவர்டேக் செய்து ஏதோ ஒரு வஸ்து மஞ்சளாக வந்து விழுந்ததைக் கவனித்தேன். வேறொன்றுமில்லை. தன் கடைசி ருசிவரை உறிஞ்சப்பட்ட மாங்கொட்டைதான். அடுத்ததாக அவனுக்கு தன் கையை என் டீசர்ட்டில் துடைக்கும் எண்ணம் உதிக்கும் முன்னே சட்டென்று நிறுத்தினேன். ‘எறங்கிக்கடா.. நான் இங்கே எறங்கணும்..”

அவன் நிறுத்திவிட்டு “தாங்ஸ்ண்ணா..” என்று குதிநடை போட்டு இலக்கில்லாமல் அடுத்த சந்தில் திரும்பினான்.

அவனை நிறுத்தி “எப்டியோ.. என் சட்டை பூரா மாம்பழக் கையத் தொடச்சிட்ட..” என்றேன்.

’இல்லண்ணா..’ என்று சொல்லிவிட்டு தொள தொள பாக்கெட்டில் கைவிட்டு எதையோ எடுத்தான். அவன் கை கொள்ளாத இன்னொரு பெரிய மாம்பழம். அதை பந்து போல தூக்கிப் போட்டுப் பிடித்துக் கொண்டே சினிமாவில் க்ளைமேக்ஸில் வருவது போல ஆடியன்ஸூக்கு முதுகைக் காட்டியவாறு நடந்து போய்க்கொண்டேயிருந்தான்.

நான் ஏரிக்கரை மேலிருந்து..

சென்னையில் மடிப்பாக்கம் என்னும் ஊர் உண்டு. அதில் ஓர் ஏரி உண்டு. சுமார் முக்கால் கிலோமீட்டர் நீளம். இந்த ஏரிக்கரையில், ஒரு காலத்தில் அந்தப் பகுதியில் குடியிருப்பவர்களைத் தவிர வேறு ஆள் நடமாட்டமில்லாமல் இருக்கும்.  இப்போது அதே ஏரிக்கரை வேறு மாதிரி உருக்கொண்டுவிட்டது.

மக்கள் மேல் அக்கறை கொண்ட இந்தப் பகுதியின் கவுன்சிலரோ யாரோ ஏரிக்கரையோரமாக இருந்த சாலையை சரி செய்து, மின் கம்பங்கள் அமைத்து, பெஞ்சுகள் போட்டு மெருகூட்டியதில் அதிகாலையில் வாக்கிங், ஜாக்கிங் என களைகட்ட ஆரம்பித்தது. மாலையில் ஏகப்பட்ட குடும்பங்கள் காற்று வாங்க அங்கே வர ஆரம்பிக்க ஒரு மினி கடற்கரை போல் மாறிவிட்டது இந்த ஏரிக்கரை.

கூட்டம் சேர்ந்ததும் சூப், காளான் ஃப்ரை, பேல் பூரி, பானிப்பூரி கடைகள் முளைக்கத் தொடங்கின. நடைபாதையில் நடக்க முடியாத அளவுக்குக் கூட்டம்.

இன்று குடும்பத்துடன் ஒரு நடை போய்வந்தேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை மக்கள் தலைகள். வரிசையாக டூவீலர்கள், கார்கள். நிறைய கல்லூரி மாணவர்களுக்கு ‘ஹாங்க் அவுட்’ இடமாகவும் இது மாறிக்கொண்டிருப்பதைக் காணமுடிந்தது. ஆனால் அவர்களெல்லோரும் தத்தம் நண்பர்களுடன் வந்திருந்தாலும் ஆளுக்கொரு மொபைலில் ஆழ்ந்திருந்தார்கள்.

ஏரியானது டிசம்பரில் பெய்த பெருமழையின் மிச்சத்தை இன்னும் தன் மடியில் தேக்கிவைத்து மின்விளக்குகளை அழகாய் பிரதிபலித்துக்கொண்டிருந்தது. ஜிலுஜிலுவென்று காற்று வீசியது. ஏரிக்குள் இருட்டில் அசை போட்டபடி எருமைகள் மிதந்தன. நிறைய குப்பைத் தொட்டிகள் இருக்க, காகித, ப்ளாஸ்டிக் குப்பைகள் ஏரிக்கரை சரிவில் பெருமளவில் வீசப்பட்டிருந்ததையும் காண முடிந்தது. அலங்கோலமாக இருக்கும் ஒரு இடத்தை அழகாக்கி மறுபடி அதை வேறுவிதத்தில் அலங்கோலமாக்குவதில் நம் மக்களுக்கு ஈடு இணை கிடையாது.

நடைபாதையில் ஓரிடத்தில் வரிசையாக ஆறு இளைஞர்கள்  உட்கார்ந்திருந்தார்கள். அவர்களை முதுகுப் பக்கமாக நாங்கள் கடக்கும்போது, ஆறு பேர் கையிலும் ஒவ்வொரு மொபைல் இருப்பது கண்ணில் பட்டது. ஆறையும் “லாண்ட்ஸ்கேப்” பொசிஷனில் வைத்திருந்தார்கள். ஆறிலும் ஒரே வீடியோ, ஒரே காட்சி ஓடிக்கொண்டிருந்தது. ஆறுபேரும் அதை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

நான் என் மகனிடம் “ஒரே வீடியோவை தனித்தனியா ஒரே நேரத்துல ஓடவிட்டுப் பாக்கறாங்க. அதுக்கு எல்லோரும் ஒரே மொபைல்ல பாத்தா பேட்டரியாவது மிச்சமாகும்.” என்றேன்.

அதற்கு அவன் “அது வீடியோ இல்ல. மினி மிலிஷியான்னு ஒரு கேம். ஒரே நேரத்துல எல்லாரும் விளையாடறது. குண்டு போட்டுக்கிட்டே சுட்டுக்கிட்டே இருக்கணும். கடைசி வரை யார் தாக்குப் பிடிக்கறாங்களோ அவங்கதான் வின்னு.”

“அதுக்கு அவங்கவங்க வீட்லயே ஒக்காந்து விளையாடலாமில்ல..” என்றேன்.

பிறகு “நாங்கெல்லாம் அந்தக் காலத்துல..” என்று ஆரம்பிக்க வாய் துடித்ததை அடக்கிக்கொண்டேன். அப்புறம் அடுத்த தடவை ஏரிக்கரைக்குக் கூப்பிட்டால் வர யோசிப்பான்.