Showing posts with label சென்னை. Show all posts
Showing posts with label சென்னை. Show all posts

டபுள் டெக்கர் டீஸண்ட் ஃபேமிலீஸ்

"ஹவ் டேர் யு டாக் லைக் திஸ்?" என்ற ஒரு கர்ஜனைக் குரல் கேட்டு திடுக்கிட்டு காதிலிருந்த ஹெட்ஃபோனைக் கழற்றினேன். பெங்களூர்-சென்னை டபுள் டெக்கர் எக்ஸ்ப்ரஸ். குரல் வந்த திசையில் உயரமாய், அகலமாய் பவுன்ஸர் போன்ற தோற்றத்துடன் ஒரு இளைஞன். அந்தக் கேள்வி வீசப்பட்டது அவனது முன்சீட்டில் உட்கார்ந்திருந்த ஒரு 35 வயது மதிக்கத்தக்க பாப் தலை யுவதியிடம்.
குரல் தாக்குதல் தொடர்ந்தது. பங்காருப் பேட்டையிலிருந்து சென்னைக்கே கேட்கும் போல கத்தினான். "டு யு திங் வி ஆர் ஃப்ரம் அன் இல்லிட்ரேட் ஃபேமிலி? ஹவ் கேன் யு ஆஸ்க் திஸ் கொஸ்ஸன் டு மை ஃபாதர் யு @#₹%&? வாட் இஸ் யுவர் ஏஜ்? வாட் இஸ் மை ஃபாதர்ஸ் ஏஜ்? அறிவில்ல ஒனக்கு? அட்ச்சி பல்லெல்லாம் ஒட்சிர்வேன். ஹவ் கேன் யு டெல் லைக் திஸ் டு மை ஃபாதர் ஹூ இஸ் ஃப்ரம் அ வெரி டீசண்ட் ஃபேமிலி அண்ட் ஆல்ஸோ வித் அ ரெஸ்பெக்டபிள் ப்ரொஃபெஸ்ஸன். எச்ச நாயி!. யு லுக் லைக் அ பிட்ச் ஃப்ரம் அ லோக்கல் இன் சென்னை." - உச்சஸ்தாயியில் கத்தினான்.
அந்தப் பெண்மணி சக பயணிகளைப் பார்த்து, "என்னங்க இவ்ரு இப்டி பேஸரார்? ஐ ஜஸ்ட் ஆஸ்க்டு ஹிம் - கொஞ்சம் நேரா உக்காருங்க, மேல படுது-ன்னு! இது தப்பா? வாட்ஸ் ராங் இன் தட்?"
கடோத்கஜ இளைஞன் இம்முறை மும்பைக்கே கேட்கும்படி இரைந்தான். "வாட் த ஃப்.. நீ எப்டி கேக்கலாம்? அவருக்கு அம்பத்து மூணு வயசு." இந்த சண்டையில் மேலே இடித்ததாகச் சொல்லப்பட்ட அவன் தந்தை "என்னப் பாத்தா உனக்கு எப்டித் தெரியுது? நான் என்ன பொறுக்கியா? யு ஸூட் மைண்ட் யுவர் வேர்ட்ஸ்."
போனை எடுத்துக் காதில் வைத்தார். கடோத்கஜன் "கமிஷனர கூப்டுங்கப்பா.. இவள சும்மா விடக்கூடாது.." இதை மூன்றாம் உலகப்போராக மாற்றியே தீருவது என்கிற தீர்மானத்துடன் அவனும் ஃபோனை எடுத்துக் காதில் வைத்தான்.
அப்பனும் மகனும் உறுமிக்கொண்டே கோச்சுக்குள் வேறு பக்கம் நகர்ந்து போனார்கள். அவர்கள் அந்தப்பக்கம் போனதும் இந்த அம்மணி நியாயம் கேட்டுக் கத்த ஆரம்பித்தாள். உடனே அந்தப் பையனின் அம்மா அவளிடம் வந்து ஏதோ காதில் சொல்ல, பாப்தலைப் பெண்மணி "நீங்க எதுக்கூ என் கால்லே வுளறீங்க. உங்க பைய்னை ஒழுங்கா வளக்கப் பார்ங்க. எப்டி இண்டீஸண்டா கத்றான் பாருங்க.. அதுவும் இன் சச் அ பப்ளிக் ப்ளேஸ்.. ஸ்கவ்ண்ட்ரல்.."
பையனும் அப்பனும் காதில் ஃபோனோடு திரும்பவும் சம்பவ இடத்துக்கு பரபரப்பாக வந்தார்கள். இருவர் கண்களிலும் கனல் பறந்தது. அந்தப் பெண்மணியை நெருப்பாகப் பார்த்தார்கள். பிறகு மீண்டும் ஃபோனில் ரயில்வே போலீஸ், கமிஷனர், ஐஜி, ஹை கோர்ட் ஜட்ஜ், 108 ஆம்புலன்ஸ், ஃபயர் சர்வீஸ், கமாண்டோ படை, சீ.பி.ஆர்.எஃப், சி.பி.ஐ, ஆளுங்கட்சி, எதிர்கட்சி, இடைக்கால முதல்வர், பிரதம மந்திரி, ராணுவ அதிகாரிகள், குடியரசுத் தலைவர், எஃப்.பி.ஐ, யு.எஸ். நேவி ஸீல், இஸ்ரேல் உளவு அமைப்புகள், அவன் ஆஃபிஸ் வாட்ச்மேன் அனைத்தையும் முயற்சி செய்துவிட்டு லைன் கிடைக்காமல் 'டிடிஆரை கூப்டுப்பா..' என்றான் கடைசியாக. "ஐ வாண்ட் திஸ் ப்ளடி லேடி டு கெட் டவுன் இன் தி நெக்ஸ்ட் ஸ்டேஷன். ஸோ தட் எவ்ரிபடி இன் திஸ் ட்ரெய்ன் கேன் கண்டின்யூ திஸ் ஜர்னி இன் அ பீஸ்ஃபுல் மேன்னர். அதர்வைஸ், நான் இவளப் புடிச்சு வெளில தள்ளி கொன்னுட்டு ஜெயிலுக்குப் போய் பத்தே நாள்ள வெளில வந்துருவேன். பாக்றீங்களா.. பாக்றீங்களா? யாருகிட்ட? இவ அத்தினி பேரு முன்னாடியும் எங்கப்பாகிட்ட மன்னிப்புக் கேக்கணும். இல்லேன்னா நான் சும்மா விட மாட்டேன். யு ஆல் டோண்ட் நோ ஹூ ஐ ஏம். ஐ வில் ஷோ நவ்.. ரைட்ட்ட் நவ்.."
அர்னாப் கோசாமியிடம் ட்ரெய்னிங்க் எடுத்ததுபோல அவன் குரல் டெஸிபல் எக்கச்சக்கமாக உயர்ந்து ரயிலின் மேற்கூரை பிளக்கும் அபாயம் எழுந்தது. அவன் ஓங்கி அடித்தால் ரயில் தடம் புரண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
"தம்பி.. விடுப்பா.. கீப் கொயட் ஃபார் சம் டைம். தெரியாம ஏதோ சொல்லிட்டாங்க.. விடு விடு.. போய் உக்காரு" என்ற ஒருவரை.. "உங்கப்பாவ யாராச்சும் தப்பா பேசினா கேட்டுட்டு சும்மா இருப்பீங்களா?" என்று கேட்டான். கேட்டவர் காதில் நிச்சயம் ஓட்டை ஏற்பட்டிருக்கும். சத்தம் அப்படி!
பாப்தலை கோபம் தலைக்கேறி திடீரென்று "அ யம் காலிங் த போலீஸ் நவ்.."என்று அறிவித்தாள். போனை எடுத்தாள்.
" கூப்டுறீ.. பொறம்போக்கு.. வரச் சொல்லு.. நாங்க இங்கதான் இருப்போம். பெரியவங்ககிட்ட எப்டிப் பேசணும்னு தெரியாத எச்சக்கல.." துணைக்கு அப்பங்காரனும் சேர்ந்துகொண்டார்.
நான் பொறுமையிழந்து.."ப்ரதர்.. விடுங்க.. போய் உக்காருங்க. ஒரு சின்ன விஷயத்துக்கு ஏன் இப்டி கோபப்படறீங்க... அமைதியா இருங்க.." என்றேன். அவன் என்னைப் பார்த்த பார்வையில் 'உன்னையும் ரயிலிலிருந்து தள்ளி விடுவேன்" என்கிற பதில் இருந்தது.
தலையில் கைவைத்து உட்கார்ந்திருந்த அவன் அம்மா எழுந்து இருவரிடமும் "போதும் விடுங்க.. ப்ளீஸ்.." என்று கும்பிட்டுக் கெஞ்ச, பவுன்ஸர் பாய் கண்களை உருட்டி "அம்மா.. இது சும்மா வுட வேண்டிய பிரச்னயில்ல. நீ பேசாம உக்காரு.. அயம் டாக்கிங் டு அ தேர்ட் ரேட்டட் பன்னாட ஹூ ஹேஸ் டிஸ்ஹானர்ட் யுவர் ஹஸ்பண்ட் இன் அ பப்ளிக் ப்ளேஸ்.. மைண்ட் இட்... நீ இப்டி அவளுக்கு வக்காலத்து வாங்கினா மிதிச்சுட்டு போய்ட்டே இருப்பா..."
அவனை அடங்கி உட்காரச் சொல்லி ரயிலுக்குள் கண்டனக் குரல்கள் எழுந்தன. அவனோ 'அவள எங்கப்பாட்ட மன்னிப்புக் கேக்கச் சொல்லுங்க..' என்கிற ஒரே தீவிரவாதக் கோரிக்கையை திரும்பத் திரும்ப முன்வைத்துக் கொண்டிருந்தான்.' இந்தக் களேபரத்துக்கு நடுவில் "பஜ்ஜீ.. சூடான வடேய்ய்ய்ய்.." என்று இடைபுகுந்தவனுக்கு வழிவிட்டு .."நீங்க போங்கண்ணா.. போய் வ்யாபாரத்தப் பாருங்க.." என்றுவிட்டு ஆடியன்ஸிடம்.. "ஹவ் டேர் ஷீ.. " என்று மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பித்தான்.
ஒரு மிகப்பெரிய கோர சம்பவம் இந்த ரயிலில் நிகழப் போவதை அறியாமல் என் பக்கத்து இருக்கைக்காரர் மொபைலில் 'சங்கிலி புங்கிலி கதவத் தொற' பார்த்துக் கொண்டிருந்தார். எதிர் ஸீட்டு ஜடாமுடி இளைஞன் சரசர சத்தத்தோடு "லேஸ்' பாக்கெட்டைக் காலி செய்துகொண்டே என்னிடம் 'அயம் ப்ரெத்தி ஸ்ஸ்ஸ்யூர் தத் தீஸ் கைஸ் கான்னா எந்தத்தெய்ன்ன்ன் அஸ் ஃபார் நெக்ஸ்த் தூ அண்த் ஹாஃப் அவஸ்.." என்றான்.
"பட்டப் பகலில் ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிட்டு பெண்.." என்று நான் தினத்தந்தி தலைப்பு யோசித்துக் கொண்டிருக்கும்போது டிடிஆர் வந்தார். என்ன ப்ரச்ச்னை என்று குசுகுசுவென்று கேட்டார். அவனது கத்தலை அவர் லாகவமாகக் கையாண்டார். அந்தப் பெண்மணியைப் பார்த்து "நான் உங்களுக்கு வேற ஸீட் தர்ரேன்.. வாங்க" என்று பக்கத்து கம்பார்ட்மெண்டுக்குக் கூட்டிப் போனார். கடைசிவரை மன்னிப்பெல்லாம் கேட்காமல் "பாஸ்டர்ட்ஸ்.." என்று சன்னமாய் சொல்லிக்கொண்டே டிடிஆரின் பின்னால் போனாள். தடியன் தொடர்ந்து கத்திக்கொண்டேயிருந்தான்.
அவள் போன திசையைப் பார்த்து ஹிஸ்டீரியா வந்தவனைப் போல "ஐ வில் கில் யூ" என்று கத்தினான். கொஞ்ச நேரத்தில் குரல் தளர்ந்து இருக்கையில் விழுந்தான். பிறகு ரயிலின் சப்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. நான் எழுந்து பாத்ரூம் போகும் வழியில் அவனைப் பார்த்தேன். வாயைப் பிளந்து தூங்கிக் கொண்டிருந்தான். அந்நியனிலிருந்து அம்பியாக மாறியிருந்தான். ஒரு கருட புராண கபீம் குபாம் தவிர்க்கப்பட்ட நிம்மதியுடன் அனைவரும் தத்தம் மொபைல்களில் மீண்டும் அமிழத் தொடங்கினார்கள்.

வருஷம் 16

கோவையிலிருந்து செப்டம்பர் 13 அன்று மதியம் ஒரு ரயில் புறப்பட்டது. அதன் இரண்டாம் வகுப்புப் பெட்டியொன்றில் ஒரு ஜன்னலோர இருக்கையொன்றில் அவன் உட்கார்ந்திருந்தான். ரயில் புறப்படும்போது சென்னை வரை நீண்டிருக்கும் அதன் பாதையைப் போலவே அவன் நெற்றியில் கவலை ரேகைகள் நீண்டிருந்தன.

சென்னை ஒரு மாநகரம். அதை நோக்கிப் பயணிக்கிறோம் என்கிற பதட்டம் அவனுக்குள் லாரி குடிநீர் போல தளும்பிக்கொண்டிருந்தது. புதிய வேலை, புதிய இடம், புதிய மக்கள். புதிய தட்பவெப்பநிலை. இதைவிட மேலாக அடுத்த மாதம் குழந்தை பெறப்போகும் கர்ப்பிணி மனைவியை விட்டுப் பிரிந்து வரும் மனக்குடைச்சல்.

"சென்னைக்கா போறீங்க? அங்கெல்லாம் போய் குப்பை கொட்டறது ரொம்ப கஷ்டம்ங்க.. மறுபடி யோசிங்க"

"சென்னைத் தண்ணிய ஒரு ரெண்டு வருஷம் குடிச்சீங்கன்னா கிட்னி ஸ்டோன் வந்துரும்"

"ஆட்டோக்காரங்க, பஸ் கண்டக்டர் எல்லாம் மரியாதயில்லாம பேசுவாங்க.."

"இந்த அருமையான கோவை க்ளைமேட்டை விட்டுட்டு எங்க போறீங்க?"

அவன் பயணத் தீர்மானத்திலும், திட்டத்திலும் ஓட்டை போட நினைக்கும் வார்த்தைகள் நாலாப் பக்கமிருந்தும் வந்தன. அவன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. கனத்த மனதுடன் பிரயாணித்தான் என்பதால் கோவைக்கும் சென்னைக்குமான தூரம் தீராமல் ஒரு முடிவிலியாகப் போய்க்கொண்டிருந்தது போல உணர்ந்தான்.

சென்னைக்கு வந்ததும் முதலில் தோன்றியது உடனே ஊருக்குத் திரும்பிப் போய்விடவேண்டும் என்பதுதான்.

"ஒரு வருஷம் இருந்திட்டீன்னா அப்றம் இந்த ஊர விட்டுப் போகமாட்ட.."

இதைச் சொன்ன நண்பரின் வார்த்தைகளை இப்போது மறுபடியும் அசைபோட்டான். உண்மைதான். ஒரு வருஷம் தாக்குப் பிடிக்க முடியுமா என்று சந்தேகமாகத்தான் இருந்தது. ஆனால் சென்னை அவனை நல்ல முறையில் சுவீகரித்துக் கொண்டது. சென்னை வெயில் பழகிவிட்டது. மக்கள் பழகிவிட்டார்கள். சென்னையின் புவியியல் பழகிவிட்டது.

பதினாறு வருடங்கள் உருண்டோடிவிட்டன. இத்தனை வருடங்கள் காலண்டரைத் தவிர பெரிதாய் என்ன கிழித்தான் என்று தெரியவில்லை. ஆறு வேலை மாற்றிவிட்டான். ஓரிரு லேசான நில அதிர்வுகள், ஒரு சுனாமி, நகரத்தைக் கிட்டத்தட்ட மூழ்கடித்த ஒரு மழை வெள்ளப் பெருக்கு உட்பட ஆயிரம் அனுபவங்கள். தாடி, மீசை தலைமுடியில் நரை கண்டுவிட்டது. இளம்பெண்களும், பையன்களும் அவனை அங்க்கிள் என்று கூப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். பெருங்குடி டம்ப் யார்டில் (Dump yard) அவன் கொட்டிய குப்பையும் கணிசமான அளவில் சேர்ந்துவிட்டது.

பிறந்ததிலிருந்தே நாடோடியாக இருந்த அவன் 'நீங்க எந்த ஊர்?' என்று யாராவது கேட்டால் ஒரு நொடி தடுமாறுவான். எந்த ஊரில் நீ அதிகமாக இருந்தாயோ அதுதான் உன் ஊர் என்று தனக்குள்ளே ஒரு கான்செப்ட் உருவாக்கிக் கொண்டான். இனிமேல் 'சென்னை' என்றே பதில் சொல்லலாமா என்று யோசிக்கிறான்.

நான் ஏரிக்கரை மேலிருந்து..

சென்னையில் மடிப்பாக்கம் என்னும் ஊர் உண்டு. அதில் ஓர் ஏரி உண்டு. சுமார் முக்கால் கிலோமீட்டர் நீளம். இந்த ஏரிக்கரையில், ஒரு காலத்தில் அந்தப் பகுதியில் குடியிருப்பவர்களைத் தவிர வேறு ஆள் நடமாட்டமில்லாமல் இருக்கும்.  இப்போது அதே ஏரிக்கரை வேறு மாதிரி உருக்கொண்டுவிட்டது.

மக்கள் மேல் அக்கறை கொண்ட இந்தப் பகுதியின் கவுன்சிலரோ யாரோ ஏரிக்கரையோரமாக இருந்த சாலையை சரி செய்து, மின் கம்பங்கள் அமைத்து, பெஞ்சுகள் போட்டு மெருகூட்டியதில் அதிகாலையில் வாக்கிங், ஜாக்கிங் என களைகட்ட ஆரம்பித்தது. மாலையில் ஏகப்பட்ட குடும்பங்கள் காற்று வாங்க அங்கே வர ஆரம்பிக்க ஒரு மினி கடற்கரை போல் மாறிவிட்டது இந்த ஏரிக்கரை.

கூட்டம் சேர்ந்ததும் சூப், காளான் ஃப்ரை, பேல் பூரி, பானிப்பூரி கடைகள் முளைக்கத் தொடங்கின. நடைபாதையில் நடக்க முடியாத அளவுக்குக் கூட்டம்.

இன்று குடும்பத்துடன் ஒரு நடை போய்வந்தேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை மக்கள் தலைகள். வரிசையாக டூவீலர்கள், கார்கள். நிறைய கல்லூரி மாணவர்களுக்கு ‘ஹாங்க் அவுட்’ இடமாகவும் இது மாறிக்கொண்டிருப்பதைக் காணமுடிந்தது. ஆனால் அவர்களெல்லோரும் தத்தம் நண்பர்களுடன் வந்திருந்தாலும் ஆளுக்கொரு மொபைலில் ஆழ்ந்திருந்தார்கள்.

ஏரியானது டிசம்பரில் பெய்த பெருமழையின் மிச்சத்தை இன்னும் தன் மடியில் தேக்கிவைத்து மின்விளக்குகளை அழகாய் பிரதிபலித்துக்கொண்டிருந்தது. ஜிலுஜிலுவென்று காற்று வீசியது. ஏரிக்குள் இருட்டில் அசை போட்டபடி எருமைகள் மிதந்தன. நிறைய குப்பைத் தொட்டிகள் இருக்க, காகித, ப்ளாஸ்டிக் குப்பைகள் ஏரிக்கரை சரிவில் பெருமளவில் வீசப்பட்டிருந்ததையும் காண முடிந்தது. அலங்கோலமாக இருக்கும் ஒரு இடத்தை அழகாக்கி மறுபடி அதை வேறுவிதத்தில் அலங்கோலமாக்குவதில் நம் மக்களுக்கு ஈடு இணை கிடையாது.

நடைபாதையில் ஓரிடத்தில் வரிசையாக ஆறு இளைஞர்கள்  உட்கார்ந்திருந்தார்கள். அவர்களை முதுகுப் பக்கமாக நாங்கள் கடக்கும்போது, ஆறு பேர் கையிலும் ஒவ்வொரு மொபைல் இருப்பது கண்ணில் பட்டது. ஆறையும் “லாண்ட்ஸ்கேப்” பொசிஷனில் வைத்திருந்தார்கள். ஆறிலும் ஒரே வீடியோ, ஒரே காட்சி ஓடிக்கொண்டிருந்தது. ஆறுபேரும் அதை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

நான் என் மகனிடம் “ஒரே வீடியோவை தனித்தனியா ஒரே நேரத்துல ஓடவிட்டுப் பாக்கறாங்க. அதுக்கு எல்லோரும் ஒரே மொபைல்ல பாத்தா பேட்டரியாவது மிச்சமாகும்.” என்றேன்.

அதற்கு அவன் “அது வீடியோ இல்ல. மினி மிலிஷியான்னு ஒரு கேம். ஒரே நேரத்துல எல்லாரும் விளையாடறது. குண்டு போட்டுக்கிட்டே சுட்டுக்கிட்டே இருக்கணும். கடைசி வரை யார் தாக்குப் பிடிக்கறாங்களோ அவங்கதான் வின்னு.”

“அதுக்கு அவங்கவங்க வீட்லயே ஒக்காந்து விளையாடலாமில்ல..” என்றேன்.

பிறகு “நாங்கெல்லாம் அந்தக் காலத்துல..” என்று ஆரம்பிக்க வாய் துடித்ததை அடக்கிக்கொண்டேன். அப்புறம் அடுத்த தடவை ஏரிக்கரைக்குக் கூப்பிட்டால் வர யோசிப்பான்.

மாயாஜால மழை

பல வருடங்களாக சென்னையில்தான் இருக்கிறேன். ஆனால் பார்க்கவேண்டும் என்கிற லிஸ்டில் இன்னும் காத்திருப்பிலேயே இருக்கிற மூன்று இடங்கள் : 1) பாண்டிச்சேரி 2) கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள சோழமண்டலம் ஃபைன் ஆர்ட்ஸ் வில்லேஜ் 3) மாயாஜால்.

இந்த மாயாஜாலைப் பற்றி அநேகம் பேர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். எங்கேயோ போகும்போது வழியில் பார்த்திருக்கிறேன். ஒரு சில சினிமாக்களில் நாயக நாயகிகள் சந்திக்கும் இடமாகக் கண்டிருக்கிறேன். மற்றபடி பயணிக்கிற தூரத்திலிருந்தும் போவதற்கான வாய்ப்பு அமையவில்லை. 

போனவாரம் ஒரு நண்பர் இந்த மாயாஜால் என்னுமிடத்தில் நடந்த ஒரு சம்பவத்தை என்னிடம் விவரித்தார். மாயாஜாலில் இரவு காட்சியோ ஏதோ ஒன்றிற்கு மனைவியுடன் போயிருக்கிறார். இருவரும் வேலை நேரம் முடிந்து நேராக அங்கே சென்று திரைப்படம் ஆரம்பிக்குமுன் அங்கேயே இரவு உணவை முடித்து விடலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் போன நேரம் அங்கேயிருக்கிற எல்லா உணவகங்களும் மூடப்பட்டிருக்கின்றன.

நண்பர் அங்கே அரை குறையாய் மூடப்பட்டிருந்த ஒரு உணவகத்தின் முன் நின்றிருந்த இளைஞரை அணுகி சாப்பிடுவதற்கு ஏதாவது எங்கேயாவது கிடைக்குமா என்று கேட்டிருக்கிறார். அவர் அந்த உணவகத்தில் வேலை செய்பவர் போலும். ‘எல்லாமே க்ளோஸ் பண்ணியிருப்பாங்களே சார்’ என்று சொன்ன இளைஞர் சில விநாடிகள் யோசித்துவிட்டு, ’சார் நீங்க தப்பா நினைக்கலேன்னா, நான் சாப்பிடறதுக்காக கொஞ்சம் எடுத்து வெச்சிருக்கேன். அதை சாப்பிடறீங்களா?’ என்று கேட்டிருக்கிறார். நண்பரோ சங்கோஜமாய் “அய்யய்யோ.. அதெல்லாம் வேணாம்.. ஒண்ணும் ப்ராப்ளமில்ல ப்ரதர்.. நாங்க மேனேஜ் பண்ணிக்கிறோம். கேட்டதுக்கு ரொம்ப தாங்க்ஸ்” என்றிருக்கிறார்.

ஆனால் இளைஞர் விடாமல், “சார்.. இந்நேரத்துக்கு நீங்க எங்க போய் சாப்பிடுவீங்க.. வாங்க சார்.. உக்காருங்க.. நான் எடுத்துட்டு வர்ரேன்.”

“இல்லைங்க.. பரவாயில்லை.. உங்களோடதை எங்களுக்குக் குடுத்துட்டு நீங்க சாப்பிடறதுக்கு என்ன பண்ணுவீங்க?”

”நான் வெளில போய்க்கூட சாப்டுக்குவேன் சார். நீங்க வாங்க!!” 

நண்பர் எவ்வளவு மறுத்தும் வலுக்கட்டாயமாக அவர்களை அழைத்து உட்காரச் சொல்லிவிட்டு உள்ளே போயிருக்கிறார் இளைஞர். 

இதென்னடா வம்பாகப் போயிற்று என்று நண்பரும் அவர் மனைவியும் தர்மசங்கடமாகக் காத்திருந்திருக்க, உள்ளூர ஒரு சந்தேகம் ஓடிக்கொண்டுதான் இருந்திருக்கிறது. என்னடா வலுக்கட்டாயமாக இழுத்து வைத்து உபசரிக்கிறானே.. இதற்குப் பின்னால் ஏதாவது சதி வேலை இருக்குமோ? காலம் வேறு போன வாரம் வாங்கின வாழைப்பழம் கணக்காக கெட்டுக் கிடக்கிறது. 

ஒரு சில நிமிடங்களில் அந்த இளைஞர் உணவோடு வருகிறார். அவர்கள் நினைத்ததோ அவர் சாப்பிடுவதற்காக வைத்திருந்த, ஆறிபோன எதையோ கொண்டுவரப்போகிறார் என்று. ஆனால் நடந்ததோ வேறு மாதிரி. 

பீங்கான் தட்டுக்களின் மேல் அலுமினியம் ஃபாயில்களில் அழகாக வைக்கப்பட்ட சூடான சப்பாத்தி, அதற்கு சைட் டிஷ்ஷாக இரண்டு பௌல்களில் அருமையான குருமா, இன்னும் இருவகை சட்டினிகள், கண்ணாடி தம்ளர்களில் குடிநீர், கை துடைக்க டிஷ்யூ பேப்பர் என அருமையாக கவனித்திருக்கிறார்.

எதிர்பாராத விருந்தோம்பல்தான் என்றாலும் தயக்கத்துடனும் குறுகுறுப்பான பயத்துடனும் சாப்பிட்டு முடித்திருக்கிறார்கள். சப்பாத்தியும் குருமாவும் சட்னியும் ரொம்ப சுவையாக வேறு இருந்திருக்கிறது. 

சாப்பிட்டு முடித்தபிறகு இளைஞரிடம் “இங்க பாருங்க.. இதுக்கு நாங்க பணம் குடுத்துடறோம். பாவம் நீங்க வேற வெளியே போய் சாப்பிடணுமில்ல..” என்று பர்ஸை எடுத்திருக்கிறார்.

அதற்கு இளைஞரோ பணம் எதுவும் வாங்க மறுத்து சிரித்தபடி “ச்சேச்சே... பணமெல்லாம் எதுக்கு சார்.. இது ஒரு நட்பா இருந்துட்டுப் போகட்டுமே...” என்றாராம்.

இந்த இடத்தில் “இந்த உலகத்துல இப்படியும் சில ஆத்மாக்கள் இருக்காங்க பாருங்க” என்று கதையை முடித்தார் நண்பர் என்னிடம்,

நேற்றைக்குப் பெய்த மழை அந்த இளைஞர் பொருட்டுதான் எல்லோருக்கும் பெய்ததோ என்னமோ!!

டீலக்ஸ் பஸ்


என் வீட்டிலிருந்து மகா தொலைவிலிருக்கும் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிற்கு இன்று காலை போக வேண்டியிருந்தது. நான் எப்பவும் தேர்ந்தெடுக்கிற பிரயாண உபாயம் முதலில் ஒரு பேருந்து பிடித்து பரங்கி மலை ரயிலடி வரை சென்று பிறகு எலெக்ட்ரிக் ட்ரெய்ன் பிடித்து ‘பார்க்’ -ல் இறங்கிக் கொள்வது.

இன்று அதேபோல் செய்ய நினைத்து வந்து நின்ற ஒரு பேருந்தில் ஏறி கண்டக்டரிடம் பத்து ரூபாயை நீட்டியபோது “இன்னும் ஒர்ருவா குடுங்க” என்றார். அதாவது ஏழு ரூபாய் டிக்கெட் இப்போது ரூபாய் பதினொன்று. வெறும் நாலேகால் கிலோமீட்டர் தூரத்திற்கு. ‘அட அநியாயமே..’ என்றார் பொது ஜனம் ஒருவர்.

பழக்க தோஷத்தில் கம்மியாக காசை நீட்டியவர்களிடமெல்லாம் ”பதினோரு ரூபா குடுங்க” என்று கட்டண உயர்வை நினைவு படுத்திக்கொண்டிருந்தார் கண்டக்டர். ஒரு மூதாட்டி “எப்பவும் ஏழு ரூவா தான? இன்னாத்துக்கு பதினோர்ரூவா கேக்குற?” என்று நியாயம் கேட்டதற்கு “இது டீலக்ஸ் பஸ்” என்றார் கண்டக்டர்.

இதைக் கேட்டதும் நான் பேருந்துக்குள் சுற்றுமுற்றும் பார்த்து ஏதாவது டீலக்ஸ்தனமான விஷயம் அகப்படுகிறதா என்று தேடினேன். சொல்லிக்கொள்கிறார்ப்போல் பெரிதாக ஒன்றும் இல்லை. சும்மா கைப்பிடிக் கம்பிகளுக்கு மஞ்சள் பெயிண்ட் அடித்து கல் மாதிரியிருக்கிற ரெக்ஸின் இருக்கைகள். அவ்வளவுதான். மற்றபடிக்கு சாதா பேருந்திற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்று புரியவில்லை. மாறாக, மெதுவாக ஓட்டினாலே அந்த பேருந்தை உருவாக்கப் பயன்படுத்தியிருந்த மொத்த தகரமும், ஃபைபர் சமாச்சாரங்களும், இன்னபிற முக்கிய உதிரி பாகங்களும் அநியாயத்துக்குத் தடதடத்தன. ட்ரைவர் ஒவ்வொரு தடவை கியர் மாற்றும் போதும் பிருஷ்டத்தில் “நங்”-கென்று ஒரு அதிர்வு ஓடியது. தவிர ஒவ்வொரு ஸ்டாப்பில் நின்று கிளம்பும் போதும் ”தடங்” என்று நடு ரோட்டில் எஞ்ஜின் தற்காலிக மரணமடைந்து கொண்டிருந்தது. “இன்னாப்பா ட்ரைவர்.. உன் டீலக்ஸ் வண்டிய எறங்கி தள்ளணுமா?” என்று பின்னாலிருந்து யாரோ குரல் கொடுத்தார்கள்.

கட்டணம் உயர்த்தப்பட்டு மூன்று நாட்களாகியும் மக்கள் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லையென்பது பேருந்தினுள்ளே கேட்ட சில சம்பாஷணைகளிலிருந்து தெரிந்தது. ஒரு சில பொதுஜனக் குமுறல்கள் நிஜமாகவே வருத்தத்தை வரவழைத்தன. விலைவாசி உயர்வு என்கிற ஏவுகணை நேரடியாக வந்து தாக்குமிடம் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் வயிறுதான் என்பது அவர்களின் பேச்சின் ஒவ்வொரு வரியிலும் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. அங்கலாய்ப்புகளுக்குப் பிறகு அரசாங்கத்தைச் சபிக்கும் வார்த்தைகளும் வந்து விழுந்தன. நாலேகால் கிலோமீட்டரைக் கடப்பதற்குள் பேருந்துக் கட்டண உயர்வு பற்றி அநேகம் பேர் தங்களின் ஏகோபித்த எதிர்ப்பை காற்றில் பதிவு செய்திருந்தார்கள்.

பரங்கிமலை ரயிலடியில் இறங்கி மீதமுள்ள பதினேழேமுக்கால் கிலோமீட்டரை எலெக்ட்ரிக் ட்ரெய்னில் வெறும் ஐந்தே ரூபாய் மட்டும் கொடுத்து சென்றடைந்தேன். கூடிய விரைவில் இதையும் இரண்டுமடங்காக உயர்த்திவிட்டால் உலக அரங்கில் தமிழ்நாடு வல்லரசாக மாற பிரகாசமான வாய்ப்புள்ளது.

மக்களின் இந்தக் கட்டண உயர்வுக் கவலைகளை மறக்க நவீன எலைட் மதுபான பார்களைத் திறக்கவும் அரசு முடிவு செய்திருக்கிறதாகச் செய்திகள் கூறுகின்றன.

‘குடி’யுயர கோல் உயரும்தான்.

குதிரைகள் நடக்கின்றன

நேற்று சென்னை கோட்டூர்புரத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குச் சென்றிருந்தோம். நான், தங்கமணி, பையன். நான் வாழ்நாளில் பார்த்த மிகப் பெரிய நூலகம் இதுதான். ஒரு ஐ.டி பார்க் கட்டிடம் போன்ற அமைப்பு. மோஸ்தர். மெட்டல் டிடெக்டருடன் செக்யூரிட்டி. மிகப்பெரிய லாபி. ஒளி விளக்குகள். லிஃப்ட். கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் எஸ்கலேட்டர்கள். வெளிச்சத்தை பிரதிபலிக்கும் பளபளவென்ற தரை. கண்ணாடிக் கதவுகள், ஜன்னல்கள். சொகுசு இருக்கைகள். ஜம்மென்று சோபாக்கள்.

முதல் மாடியில் குழந்தைகளுக்கென்று மிகப் பெரிய பிரிவு. ஒரு பிக்னிக் போன்று பெற்றோர்களுடன் மகிழ்ச்சியாக வாண்டுகள் வந்து செல்கிறார்கள். ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கான புத்தகங்கள். மல்டிமீடியா சிடிக்களுடன் கம்ப்யூட்டர்கள். சுவர்களில் கார்ட்டூன் படங்கள்.

இரண்டாம் மாடியில் இரண்டு பிரிவுகளாக தமிழ் புத்தகங்கள். இலக்கியம், புதினம், சிறுகதைகள் என்று ரக வாரியாக பிரிக்கப்பட்டு அழகாக அடுக்கப்பட்டிருக்கின்றன. மூன்றாவது, நான்காவது, ஐந்தாவதிலெல்லாம் என்ன இருக்கிறதென்று பார்க்கவில்லை. இன்னும் திறக்கப்படாததால் அனுமதியில்லை.

லைப்ரரி என்று இப்படி ஒரு விஷயம் உலகில் இருப்பதை முதன் முறையாகப் பார்த்து பையன் மலைத்து நின்றுவிட்டான். தங்கமணிக்கோ அத்தனை புத்தகங்களைப் பார்த்து கண்ணில் நீர் துளிர்த்துவிட்டது. காரணம் தங்கமணி ஒரு ஓயாத புத்தகப் புழு. என்னைவிட அதிக புத்தகம் படித்த/படிக்கிற ஆள் என்ற வகையில் எனக்கு தங்கமணிமேல் லேசான பொறாமைகூட உண்டு.

புத்தகங்கள் தவிர கூட்டங்கள் நடத்துவதற்கென கூடங்களும், குறும்படங்கள் திரையிடுவதற்கான தியேட்டர் வசதிகளும் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அது தவிர இன்னும் எத்தனையோ வசதிகள். கூடிய விரைவில் அவைகளும் பயன்பாட்டுக்கு வரும்.

தின/வார/மாத பத்திரிகைகள் பிரிவில் கணிசமான பேர் புத்தகங்கள் மேய்ந்துகொண்டிருந்தார்கள். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளிவரும் அத்தனை வாராந்திர, மாதாந்திரங்களும் அலமாரிகளில் பெயரிடப்பட்டு ஒழுங்காக வைக்கப்பட்டிருக்கின்றன. அங்கே இருக்கிற ஒரே பிரச்சனை காலடிச் சத்தம். ஹைஹீல்ஸ் அல்லது கட்டையான செருப்புப் போட்ட பெண்களும், ஷூ அணிந்த ஆண்களும் புத்தகம் தேடி அலமாரிகளிடையே நடக்கும்போது ஃப்ளைவுட் தரையில் டடக் டடக் என்று குதிரைக் குளம்படிகள் போன்ற சப்தம் அகாலமாய்க் கேட்கிறது. படிப்பவர் கவனம் சிதறுகிறது. அதுவே நிறைய பேர் நடக்கும்போது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிகள் குதிரைப்படையுடன் மறுபடி ஊருக்குள் உலவுகிற எஃபெக்ட் ஏற்படுகிறது. மற்ற தளங்களைப் போல இங்கேயும் தரையில் கார்ப்பெட் போட்டால் இந்தக் குதிரைகள் பூனைகள் ஆகும்.

மற்றபடி இது பிரம்மாண்டமான ஒரு ஹை-டெக் லைப்ரரி. உறுப்பினராகச் சேர விண்ணப்பங்கள் கொடுக்கப்படுகின்றன. ஜனவரி முதல் புத்தகங்கள் எடுத்துக்கொள்ளலாமாம்.

இந்த நூலகம் பற்றி நிறைய தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இந்த வலைப்பதிவை அணுகலாம். இந்த நூலகம் பற்றி எக்கச்சக்கமான விவரங்கள் தரப்பட்டிருக்கிறது.

புலம் - தீபாவளி மலர் சிறுகதை

தமிழோவியம்.காம் இணைய இதழின் தீபாவளி மலரில் எனது சிறுகதை..

ணி செண்ட்ரலில் ரயில் இறங்கி ஆட்டோ பிடித்து அபிராமபுரத்திலுள்ள கேசவனின் வீட்டுக்கு போய் இறங்கினபோது லேசாய் ஆச்சரியப்பட்டான். கேசவனின் வீடு காலி செய்யப்படுகிற முகாந்திரமாய் வீடு நிறைய மூட்டை முடிச்சுகள். அட்டைப் பெட்டிகள். அடுக்கத் தயாராயிருந்த சாமான்கள். குறுக்கும் நெடுக்குமாய் ஒழுங்கில்லாமல் சோஃபா, கவிழ்ந்த சேர்கள், நியூஸ் பேப்பர் குப்பைகள். கயிறுகள். பேக்கிங் டேப் சுருள்கள்.

மணி பொருட்குவியல்களுக்கு ஓரமாய் ட்ராவல் பேகை வைத்துவிட்டு வியப்புடன் புரியாமல் கேசவனைப் பார்த்தான். "வீடு காலி பண்றீங்களா?" என்றான்.

...

...

மேலும் படிக்க..

குரங்கு பெடல் என்றால் என்ன?

ஒரு வழியாக மகனுக்கு பாலன்ஸ் கிடைத்துவிட்டது. இது இரண்டாவது பாலன்ஸ். முதல் பாலன்ஸ் தவழ்கிற குழந்தை என்கிற நிலைப்பாட்டிலிருந்து ‘நடக்கிற குழந்தை’ என்கிற நிலையை அடைந்தது. அப்போது எல்லாக் குழந்தைகள் போலவும் ‘பொதக் பொதக்’ என்று நிறைய தடவை விழ வேண்டி வந்தாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் எப்படியோ நடக்கவும் பிறகும் ஓடவும் பழகிக் கொண்டான்.

ஓடப் பழகின பிறகு ஓட்டப் பழகவேண்டாமா? முதலில் வாங்கின மூன்று சக்கர சைக்கிள் மோகம் முடிந்து (நான் கூட அவ்வப்போது ஓட்டுவதுண்டு) ஹாண்டில் பாரில் அவனது முழங்கால் இடிக்க ஆரம்பித்தவுடன் மாநாடு கூட்டி அவனுக்கு பெரிய சைக்கிள் வாங்கலாம் என முடிவானது. பி.எஸ்.ஏ ராக்கெட் என்று போட்ட ஒரு சின்ன இரண்டு சக்கர சைக்கிள் (சைடு வீலையும் சேர்த்தால் நான்கு) வாங்கிவந்தோம். பேர்தான் ராக்கெட் என்று போட்டிருந்தார்களே தவிர தரையில் தான் ஓடியது.

ஆனால் அந்த சைக்கிளில் ஒரு பிரச்சனை. அது மகனைவிடப் பெரியதாக இருந்தது. அதாவது அவன் இன்னும் நான்கைந்து வருடங்கள் கழித்து ஓட்டவேண்டியதை அப்பொழுதே வாங்கிவிட்டேன். இருந்தாலும் சீட்டையும், ஹாண்டில் பாரையும் கொஞ்சம் தணித்து இறக்கித் தந்ததில் அதில் எப்படியோ ஏறப் பழகி மூன்றாவது மாடி வராந்தாவிலும், மொட்டை மாடியிலுமாக ஓட்ட முயற்சித்துக் கொண்டிருந்தான். கீழே விழாமலிருக்க சைடு வீல்கள் துணை புரிந்தாலும் அபார்ட்மெண்ட் வாசிகளுக்கு ஓட்டும்போது டர்ர்ர்ர் என்ற அதன் நாராசமான சத்தம் அத்தனை ரசிக்கவில்லை. அதற்காக அவனை ரோட்டில் போய் ஓட்ட வைக்கிற மயிர்க்கூச்செரியும் அட்வென்ஞ்சரை நான் எடுக்கத் தயாரில்லை.

சில நாட்கள் வேறு வழியில்லாமல் ஹாலுக்கும் பெட்ரூமுக்கும் கிடைத்த இடைவெளிகளில் கூட ஓட்டுவான். சில நாட்கள் இரவு உணவு முடித்துவிட்டு நடு ஜாமத்தில் ட்ராஃபிக் அடங்கின எங்கள் தெருவில் அவன் பின்னாலேயே ஓடி ஓடி உண்ட உணவு செரித்துக்கொண்டிருந்தது. அதிலும் முக்கியம் அங்கேயிருக்கிற மற்ற அபார்ட்மெண்டுகளில் பார்க்கிங் இல்லாமல் ரோட்டிலேயே நிறுத்திவைத்திருக்கும் கார்களின் மேல் அவன் சைக்கிள் மோதி கீறல் போடாமல் இருக்கவேண்டுமே என்கிற கவலை மூச்சிரைப்போடு சேர்ந்து பொங்கிவரும்.

“ப்ராண்ட் நியூ கார் ஸார் இது.. டெலிவரி எடுத்து ஒரு வாரம்கூட ஆகலை. பாருங்க எவ்ளோ பெரிய கீறல். உங்க மகனுக்கு சமூகப் பொறுப்புன்னா என்னன்னு நீங்க கத்துக் குடுத்திருக்க வேணாமா? திஸ் இஸ் ரிடிகுலஸ்.  எனக்கு மிகப் பெரிய மன உளைச்சலாயிருச்சு. கீறலுக்கான நஷ்ட ஈடா  பதினைந்தாயிரத்தை...”

என்று யாராவது கனவான் கேட்டில் நின்றுகொண்டு கத்துவதை கற்பனை செய்துகொண்டு அந்த பயத்துடனேயே மகனுக்கும் கார்களுக்குமிடையே இடைவெளி ஏற்படுத்துகிற முனைப்பிலேயே ஓட்டம் கழியும். சைக்கிள் அவன் உயரத்திற்குப் பொருந்தாமல் உயரமாக இருந்ததாலும், அவ்வப்போது சீறி வருகிற ஆட்டோ, பைக்வாலாக்களுக்கு பயந்து தடுமாறியதாலும் மற்றும் சென்னை சாலைகளின் பிரத்யேக அடையாளமான திடீர்க் குழிகளினாலும் அவ்வப்போது தடுமாறி விழவும் செய்தான். பாலன்ஸூம் கிடைக்காமல் சாய்ந்த நிலையிலேயே ஓட்டி ஓட்டி பக்கவாட்டுச் சக்கரங்களும் தேயத் தொடங்கியிருந்தது. நொடிகளும், நிமிடங்களும், நாட்களும், வருடங்களுமாக உருண்டோடியது. இந்த பெரு நகரத்துக்குள் வாழ்வின் அத்தியாவசிய தேவையான சைக்கிள் ஓட்டுதலைக் கற்றுக் கொடுப்பதற்குள் வுதா (இது ஒரு கெட்டவார்த்தை என யாரோ சொன்னதால் தலைகீழாக எழுதியிருக்கிறேன்) தீர்ந்து போய்விடும் என்று தான் தோன்றியது.

ஆனால் இந்தக் கோடை விடுமுறையின் போது ஊருக்குப் போய் அங்கே மரங்கள் சூழ்ந்த, சுத்தமாய் போக்குவரத்து இல்லாத, அகலமான ரோடுகள் கொண்ட மின்சார வாரிய குவார்டர்ஸூக்குள் அக்கா பசங்களின் (சைடு சக்கரங்கள் இல்லாத) சைக்கிள்களை ஓட்டி ஒரே நாளில் அட்சர சுத்தமாக நன்றாய் சைக்கிள் பழகிவிட்டான். ஆக வாழ்க்கைக்குத் தேவையான இரண்டாவது பாலன்ஸூம் ஒரு வழியாய்க் கிடைத்துவிட்டதில் அக மகிழ்வு ஏற்பட்டுவிட்டது.

இன்றைக்கு அவன் சைக்கிளை விட கொஞ்சம் உயரமாய் வளர்ந்துவிட்டான்.  சைடு வீல்களையும் நீக்கியாயிற்று. சீறுகிற ஆட்டோக்களை லாவகமாய்த் தவிர்க்கவும் பழகிவிட்டான். ரொம்ப குள்ளமாய் இருக்கிறதென்று ஸீட்டை கொஞ்சம் இன்னும் ஏற்றித்தரமுடியுமா என்று கேட்கிறான். இல்லையென்றால் கியர் எல்லாம் வைத்து மவுண்டன் பைக் டைப்பில் வேறு பெரிய சைக்கிள் வேண்டுமாம்.

நான் எண்பதுகளின் ப்ளாஷ்பேக் காட்சியொன்றை நினைவுகூர்ந்து அவனிடம் சொன்னேன். “நாங்கெல்லாம் எங்களை விட பெரிய சைக்கிள்ள குரங்கு பெடல் போட்டு ஓட்டிப் பழகினோம். இனி அந்த அனுபவமெல்லாம் உங்கள மாதிரி சிட்டிப் பசங்களுக்குக் கிடைக்காதுடா..”

“குரங்குப் பெடல்னா என்ன” என்றான்.

இந்த பதிவை போஸ்ட் பண்ணி முடித்தபிறகு விளக்குகிறேன் என்று சொல்லியிருக்கிறேன்.

கீட்ஸ் படிச்சிருக்கியா?

கதைகளோ, நாவல்களோ படிப்பது என்பது சும்மா பொழுதுபோக்கிற்காகவா? அல்லது குறிப்பிட்ட எழுத்தாளர்களின் எழுத்து நடைக்கான ஆராதனை அல்லது ஆர்வமா? இலக்கிய (அல்லது கமர்ஷியல்) தாகமா? கதையில் வரும் சம்பவங்களோடு தன் வாழ்வில் எதையாவது பொருத்திப் பார்த்து மகிழ்ச்சி அல்லது துக்கப்படுவதற்கா? அல்லது தன் வாழ்வுக்கெட்டாத, கற்பனை செய்து பார்க்க இயலாத நிகழ்வுகளை கதைகளில் படித்துக் களிக்கிற திருப்தியா? பொது அறிவு வளர்ப்பதற்கா?

இது எல்லாமும் ஆக இருக்கலாம் அல்லது இவற்றில் ஏதாவது ஒன்று. ஆனால் கடைசியில் சொல்கிற பாயிண்டை கவனியுங்கள். பொது அறிவு வளர்ப்பது.

கதைகள், நாவல்கள் படிப்பதால் நம் பொது அறிவு வளருமா என்றால் நிச்சயம் ஓரளவுக்கு வளரும் என்பதற்கான பதிவு இது. எனக்கு கொஞ்சமாய் வளர்ந்திருக்கிறது. குறிப்பாக சின்ன வயசிலிருந்து படித்த வணிக எழுத்தாளர்களின் கதைகள், நாவல்கள் மூலம். பல்வேறு விஷயங்கள் பற்றிய ஞானத்தைப் பெற அவைகள் வெகுவாக துணை புரிந்திருக்கின்றன.

அப்போது பெருமளவில் வந்துகொண்டிருந்த பாக்கெட், மாத நாவல்களை எடுத்துக்கொள்ளுங்கள். (உடனே எடுக்கப் போய்விடாதீர்கள்). ராஜேஷ்குமாரிலிருந்து ஆரம்பித்தால் சுஜாதாவரை ஒரு பெரிய ரவுண்டு வரலாம். இந்த மாதிரி எழுத்தாளர்கள் தாராளமான ஆங்கிலக் கலப்போடு எழுதினார்கள் என்பது வாசகர்களின் வொக்காபுலரி அல்லது ஒக்கபிலேரியை முன்னேற்றப் பயன்பட்டன. நான் சொல்வது அதிகமாய் விஷய ஞானமற்ற வயதில் இவைகளைப் படிப்பவர்களுக்கு (அல்லது படித்தவர்களுக்கு). நான் ஆறாங்கிளாஸ் படிக்கும்போதே அம்புலிமாமா ரத்னபாலாவிலிருந்து ப்ரொமோஷன் ஆகி மாத நாவல்களுக்கு வந்துவிட்டேனாக்கும். அப்போது ராஜேஷ்குமார் “அவன் காரிடாரில் நடந்து வெளியே வந்தான்” என்று எழுதினால் எனக்கு காரிடார் என்ற புதிய வார்த்தை கிடைக்கிறது. அப்போது இவையெல்லாம் நான் கேள்விப்படாத வார்த்தைகளாகியிருந்தது. இப்போதுகூட எங்கேயாவது நீண்ட காரிடாரில் நடக்கும்போது ராஜேஷ்குமார் சிலசமயம் சட்டென்று நினைவுக்கு வருவதுண்டு. இதே போல் சில உதாரணங்களைச் சொல்லவேண்டுமென்றால். (சும்மா படித்த ஞாபகத்திலிருந்து உதாரணத்துக்கு மட்டுமே. சரியான வரிகள் அல்ல)

  • அவன் போர்டிகோவில் காரை செருகி நிறுத்தினான்.
  • அவள் லவுஞ்சில் காத்திருந்த மாதவனை நோக்கிக் கையசைத்தாள்.
  • அந்த விமானம் ஒரு அலுமினியப் பறவை போல மிதந்துவந்தது.
  • ஸ்க்வாட்ரன் லீடர் குமார் கீழே விழுந்தபோது ஒரு பந்துபோல தன்னைச் சுருட்டிக்கொண்டான்.
  • அவன் அவளை நரிமன் பாயிண்டிற்கு வரச் சொல்லியிருந்தான்.
  • வஸந்த் ஒருவித ரிஃப்ளெக்‌ஷ் இயக்கத்தில் செயல்பட்டு உடனே குனிந்துகொண்டான்.
  • அவன் யமஹாவை உதைத்துக் கிளப்பிச் சீறினான்.
  • சோடியம் வேப்பர் விளக்கு வெளிச்சத்தில் அவள் முகம் இன்னும் அழகாக இருந்தது.

மேலுள்ளவற்றில் காணப்படும் வரிகளில் போர்டிகோ, லவுஞ்ச், அலுமினியத்தால் செய்யப்படும் விமானம், ராணுவத்தில் இருக்கிற ஸ்க்வாட்ரன் லீடர் என்ற பதவி, மும்பையின் நரிமன் பாயிண்ட், ரிப்ளெக்ஸ், இந்த மாதிரி புதிய வார்த்தைகள் எல்லாம் ஆறாங்கிளாஸ் தமிழ் மீடியம் படிக்கிற பையனுக்கு எதேஷ்டமான பொது அறிவா இல்லையா? நிச்சயம் நான் யமஹாவையோ, சோடியம் வேப்பர் விளக்கையோ அப்போது பார்த்ததில்லை. அப்புறம்.. மார்ச்சுவரி, போஸ்ட்மார்ட்டம், ஃபாரன்ஸிக், அப்ஜெக்‌ஷன் யுவர் ஆனர், வென்ட்டிலேட்டர், பாயிண்ட் 33 பிஸ்டல், ஸிர்ரஸ் மேகத்தீற்றல்கள், ஜானவாசக் கார், காக்டெயில், ப்ரீஃப்கேஸ், ஃபேக்ஸ், ரிகர்மாட்டிஸ், ரிஸீவர், மவுத் பீஸ், ஹேபியஸ் கார்பஸ், காஸனோவா, சாண்ட்லியர் விளக்குகள், வாய்ஸ் ரெகக்னிஷன், பீத்தோவனின் ஸிம்பனி, ஹாலோகிராம், அப்பெர்ச்சர், வியூஃபைண்டர், ஸாட்டின் பாவாடை இன்னபிற.

இது மட்டுமல்லாமல் மனிதர்களைப் பற்றி, சில பிரபலங்களைப் பற்றித் தெரிந்துகொள்வதும். சுஜாதா ஒரு கதையில் ‘அவன் ஒரு நவீன மெஸ்ஸையா போல தோற்றமளித்தான்’ என்று எழுதியிருப்பார். யாருடா இது மெஸ்ஸையா (
messiah) என்று ரொம்ப நாள் மண்டைக் குடைச்சலாக இருந்தது. கணேஷ் வஸந்திடம் “கீட்ஸ் படிச்சிருக்கியா” என்று கேட்கும்போது ஒரு பிரபல உலகக் கவிஞரைத் தெரிந்துகொள்ள முடிந்தது. (ஆனால் படித்ததில்லை). இந்த வரிசையில் ஷெல்லி, பைரன் எல்லோரும் அடிக்கடி வருவார்கள்.

நான் சென்னைக்கு வரும் முன்பே இந்த நகரம் எனக்குப் பரிச்சயமான இடமாகத் தோற்றமளித்ததற்குக்கூட மேற்கூறிய எழுத்தாளர்களுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. பொதுவாக அநேக கதைகள், மாத நாவல்கள் சென்னையைக் களமாக வைத்து எழுதப்பட்டன என்கிற வகையில் மிகக் கொஞ்சமாக அதன் பேட்டைகளைப்பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது. ‘அவன் தேனாம்பேட்டை சிக்னலைக் கடந்து...’ அல்லது ‘மெரீனாவில் கண்ணகி சிலையருகே காத்திருந்தான்’ ‘மவுண்ட் ரோட்டில் ஜெமினி மேம்பாலத்துக்கு அருகே அவன் அலுவலகம் இருந்தது’ அல்லது ‘எலியட்ஸ் பீச்சின் மணலில் இருவரும் நடந்தார்கள்’ அல்லது ‘தம்புச் செட்டி தெருவில் உள்ள அவன் அலுவலகத்துக்குப் போனபோது...’ அல்லது ‘ஹிக்கின் பாதம்ஸின் அருகே காரை நிறுத்தினான்’ ‘கொத்தவால் சாவடிக்கு இடது பக்கமாக பைக்கை வளைத்துத் திருப்பினான்’ - இவை போதாதா சென்னையைப் பற்றி சும்மா போகிற போக்கில் தெரிந்து கொள்வதற்கு? (சென்னை கொத்தவால் சாவடி மார்க்கெட்டை கோயம்பேட்டுக்கு மாற்றின விஷயத்தை மக்களுக்கு அறிவிக்கும் விதமாக “கொத்தால் சாவடி லேடி நீ கோயம்பேடு வாடீ..” என்ற பொது அறிவுப்பாடலை கேட்டிருக்கிறீர்களா?).

மேலும் ராஜேந்திரகுமார், புஷ்பா தங்கதுரை, சாண்டில்யன் கதைகளின் மூலம் கொஞ்சமாய் ‘அந்த’ அறிவு வளர்ந்ததையும், பட்டுக்கோட்டை பிரபாகரின் ஹீரோயின் சுசீலாவின் பனியன் வாசகங்கள் (I like Tennis, because they play with two balls) மூலம் டென்னிஸ்-ஸில் இரண்டு பந்துகளை வைத்து விளையாடுவார்கள் என்கிற மகா அறிவு கிடைத்ததையும் சொல்லியாக வேண்டும்.

வணிக எழுத்துக்களில் மட்டும்தான் என்றில்லை. இன்றைக்கும் ஆதவன் எழுத்துக்களைப் படித்தால் ஒரு அலுவலகத்தின் இயக்கம், அன்றைய ஹாலிவுட் ஹீரோக்கள், ஹீரோயினிகள் (ஆட்ரே ஹெப்பர்ன்), டெல்லியின் இடங்கள் என்று எத்தனையோ விஷயங்கள் தெரிந்துகொள்ள முடிகிறது. எவ்வகை எழுத்தாளராக இருந்தாலும் அவர்கள் கதையினூடாக லேசாகத் தெளித்துவிடும் விவரங்கள் இது மாதிரி நிறைய இருக்கும்தான்.

இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் நான் என்ன சொல்ல வந்தேன் என்று புரிவதற்கு இத்தனை போதும் என்று நினைக்கிறேன். படிப்பது என்பது நிச்சயம் அறிவை வளர்க்க உதவும் செயல். நிறைய ஆங்கில புத்தகங்களாகப் படித்துத் தள்ளியிருந்தால் இதைவிட மேம்பட்ட விஷயங்கள், விவரங்கள் எத்தனையோ கிடைத்திருக்கலாம்தான். நான் அதிகம் படித்தது தமிழ் புத்தகங்கள்தான். எனக்கு இப்போதிருக்கிற அறிவின் ஒரு பகுதி நிச்சயம் சின்ன வயசில் படித்த தமிழ் கதைகள், நாவல்களால் வந்ததுதான் என்று நிச்சயம் சொல்லமுடியும். நீங்களும் கூட இதை உணர்ந்திருப்பீர்கள். இல்லையா?

பையனும் டார்வினும் பின்னே ஞானும்


சென்ற வெள்ளி - சனியில் பன்றிக் காய்ச்சல் எச்சரிக்கைகளையும் மீறி என் பையன் படிக்கும் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. அவன் படிக்கிற ’நாலாப்பு’ சார்பாக கையில் ஒரு ரிமோட் கண்ட்ரோல் எஸ்கவேட்டர் கொடுத்து ஒரு அறையில் நிற்க வைத்துவிட்டார்கள். கண்காட்சிக்கு வருகை புரிபவர்கள் அவனிருக்கிற குறிப்பிட்ட பகுதிக்கு வந்ததும் "This is called excavator. This is used for digging the trenches, holes... " என்று டீச்சர் சொல்லிக்கொடுத்த ப்ளா ப்ளா-க்களை மள மளவென ஒப்பிக்க வேண்டும். (நானே நான்கு தடவை அவனருகில் போய் நின்று “can you please explain this?" என்று கேட்க சின்ன தயக்கச் சிரிப்புடன் சளைக்காமல் விளக்கினான்)

சரி ஸயின்ஸ் எக்ஸ்போவில் அப்படி என்னதான் இருக்கிறதென்று பார்க்கலாமே என்று போனவனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. சும்மா சொல்லக் கூடாது. டீச்சர்களும், மாணவ மாணவிகளும், பள்ளி நிர்வாகமும் ஒன்று சேர்ந்து அற்புதமாகக் கலக்கிவிட்டார்கள். க்ரவுண்ட் ஃப்ளோரில் சிவப்புக் கம்பளம் விரித்து எல்.சி.டி. டிவியில் நிகழ்ச்சிகளின் வீடியோ விரிய, ஸ்பீக்கரில் இசை முழுங்குகிறது. இதை வந்து பாருங்கள் அதை வந்து பாருங்கள் என்று மாடிப் படிகள் முழுக்க மாணவர்கள் தயாரித்து ஒட்டிய விளம்பர நோட்டீஸ்கள். அலங்கார வளைவுகள். கலை நயம். ஜிகினா.

மெட்ரோ ரயில் சிஸ்டம், ஹைட்ரோ பவர் சிஸ்டம், டெலி கம்யூனிகேஷன் நெட்வொர்க், ரோபோட்டிக்ஸ், ஓரிகமி, டேன்கிராம்ஸ், குளோபல் வார்மிங் என்று ஒரு சப்ஜெக்டையும் விட்டு வைக்காமல் பள்ளிக் கட்டிடத்தின் மூன்று தளங்களிலும் கலக்கலான செட்டப்புகள். முக்கால்வாசி சாதனங்களை தெர்மோகோல், ஃபெவிகால், வாட்டர்கலர் கொண்டே தயாரித்து விட்டார்கள். சின்னச் சின்ன பொடிசுகள் லேப்டாப், ப்ரொஜக்டர்கள் எல்லாம் வைத்துக் கொண்டு விண்டோஸ் மூவி மேக்கரில் தயாரித்த வீடியோ படங்களை இயக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தபோது ’ஆச்சரியத்தால் கண்கள் விரிந்தன’ என்று அடிக்கடி இந்த எழுத்தாளர்கள் எல்லாம் எழுதுகிறார்களே அது என்ன என்று புரிந்தது.

ஒவ்வொரு பிரிவிலும் நிற்க வைக்கப்பட்டிருந்த குழந்தைகள் நாம் உள்ளே நுழைந்ததும் போட்டி போட்டுக் கொண்டு “அங்கிள்! (அல்லது ஆண்ட்டி) can I explain this?" என்று கேட்டுவிட்டு ஜெட் வேகத்தில் ஆங்கிலத்தில் குறைந்தது ஐம்பது விநாடிகள் பட்டையைக் கிளப்பிவிட்டு கடைசியில் “தேங்ங்ங்ங்க்க்க்க்க்யூ” என்று ராகம் பாடி முடித்தன. மனப்பாடம் செய்து கொண்டு ஒப்பிக்கிறதுகள் என்றாலும் ஒவ்வொரு டேபிளிலும் பொறுமையாய் அந்த மழலைக் குரல்களை ஓரிரு நிமிடங்கள் கேட்டுக் கொண்டிருப்பது மிகப் பெரிய சுகம். அநியாயத்துக்கு இத்தனை பேர் ’படிப்ஸ்’ஆக இருக்கிறார்களே என்று ஆச்சரியமாக இருந்தது. அதுவும் க்ளோபல் வார்மிங் பற்றி விளக்கின பையனிடம் நான் ஏதோ சந்தேகம் கேட்க. “இட் இஸ் தேர் இன் த இண்டெர்நெட் அங்கிள். யு கேன் டவுன்லோட் இட் ஃப்ரம் தேர்.” என்று முத்தாய்ப்பு வைத்தான். சொல்லி முடித்தபிறகு அவர்கள் நீட்டுகிற Feedback நோட்டுப் புத்தகத்தில் உங்கள் பெயரெழுதி உங்கள் கருத்தை அல்லது பாராட்டை எழுதிக் கொடுத்தீர்களானால் குழந்தைகள் முகத்தில் பொங்குகிற சந்தோஷம் இருக்கிறதே. அப்பப்பா! (சொக்கன் கவனிக்க). நான் நீட்டப்பட்ட நோட்டுகளில் எல்லாம் “excellent presentation" என்று தாராளமாக எழுதிக் கொடுத்தேன். (ஆனால் பாராட்டி கை கொடுத்தால் மட்டும் பன்றிக் காய்ச்சல் பயத்துடன் கையை பின்னுக்கு இழுத்துக் கொள்கிறார்கள். அப்புறம் என்னை நானே திட்டிக்கொண்டு அதை தவிர்க்க ஆரம்பித்தேன்.)

ஆறாங்கிளாஸ் படிக்கிற மூன்று சிறுமிகள் அவர்களின் கிளாஸ்மேட்டுகளான சில வாண்டுப் பையன்களைக் காட்டி “அங்கிள்! கன் வி எக்ஸ்ப்ளெய்ன் அபெளட் தெம்” என்று குசும்புச் சிரிப்புடன் கேட்க, நானும் என்னவென்று புரியாமல் தலையாட்ட, “தெ ஆர் ஆல் மங்கீஸ். தெ ஹவ் எஸ்கேப்ப்டு ஃப்ரம் வண்டலூர் ஜூ. தெ நார்மலி ஈட் பனானாஸ்” என்று கலாய்த்து வெடிச்சிரிப்பு சிரித்தார்கள்.

இதைக் கேட்டதும் ஒரு தடவை என் பையனுக்கும் எனக்கும் இரவு தூக்கம் வருவதற்கு முந்தைய பொழுதில் நடந்த சம்பாஷணை ஞாபகத்திற்கு வந்தது.

நான்: குரங்கிலிருந்து மனுஷன் வந்தான்னு யார் கண்டுபுடிச்சா தெரியுமா?

பையன்: ஆங்... தெரியும். லெஸன்ல இருக்கு. அது வந்து...

நான்: சார்லஸ் டார்வின்

பையன்: ஆ! ஆமா.. டார்வின் தியரி..

நான்: கரெக்ட்டு.. மில்லியன் மில்லியன் வருஷத்துக்கு முன்னால குரங்கா இருந்து அதிலேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா மனுஷன் வந்தான். அப்போ அவனுக்கு உடம்பு பூரா நிறைய முடி இருந்துச்சு. வால் இருந்துச்சு. கை காலெல்லாம் பெருசு பெருசா இருக்கும். மரத்துக்கு மரம் தாவிகிட்டு இருந்தான். அப்றம் அதெல்லாம் போய் இப்போ பாத்தியா இப்ப என்னை மாதிரி ஆயிட்டான்.

பையன்: (மெளனமாய் சில விநாடிகள் யோசித்துவிட்டு) “அப்ப இதுக்கு முன்னாடி நீ கொரங்கா இருந்தியா?”.

அடுத்த ஜெனரேஷன் பசங்களிடம் கொஞ்சம் அல்ல நிறையவே ஜாக்கிரதையாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

ஓம் சாந்தி!


கடந்த சில நாட்களாக எனக்கு ஒரு பிரச்சினை. அதுவும் எனக்கு அது அடிக்கடி நிகழ்வதாகவும் தோன்றுகிறது. அது என்னவென்றால் யாரையாவது பிடித்து சகட்டு மேனிக்குத் திட்டுவது. இதற்கு முன்பு இப்படி செய்ததற்கு பெரிய முன் அனுபவம் எதுவும் அதிகமாய் இல்லை. இது என் இயல்புக்கு மாறான விஷயமாகவும் கூட அடிக்கடி தோன்றுகிறது. என் இயல்பையும் சுபாவத்தையும் நெருக்கமாய் அறிந்தவர்கள் இதைப் பார்த்தால் நிச்சயம் ஆச்சரியப்படுவார்கள்.

திட்டுவதென்றவுடன் ஏதோ தணிக்கை செய்யப்பட்ட, படாத வார்த்தைகளை இட்டு நிரப்பி, பரம்பரைகளை வம்பிக்கிழுத்து அல்லது பிறப்பு பற்றின சந்தேகங்களைக் கிளப்புகிறேன் என்று தயவு செய்து தவறாக நினைத்துவிடாதீர்கள். சென்னையில் சுமார் எட்டு ஆண்டுகள் வாழ்ந்தும் அந்த அளவு முன்னேற்றத்திற்கு மனதளவில் நான் தயாரில்லை. அதற்காக சும்மா வாய்க்குள் யாருக்கும் கேட்காத மாதிரி முணுமுணுத்துவிட்டு நகர்ந்துவிடுவேன் என்றில்லாமல் நாகரிக உலகில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சில சொற்பதங்களுடன் பக்கத்தில் நிற்பவர், நடப்பவர் அல்லது உட்கார்ந்திருப்பவர் என்று எல்லோர் காதிலும் விழுவதுமாதிரி நன்றாக சத்தமாக இரைதல்.

இதன் காரணமாக என்ன மாதிரி விளைவுகள் எனக்கு நேருகிறதென்று சொல்கிறேன். 1. உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து நரம்புகள் லேசாக புடைத்துக்கொள்கிறது. 2. நின்றுகொண்டு திட்டுவதென்றால் அநிச்சையாய் நடு நெற்றியை விரல்களால் தீவிரமாகத் தேய்த்துக்கொண்டு குறிவைக்கப்பட்ட எதிராளியை நோக்கி உர்ரென்று ஒரு பார்வையை வீசுதல். 3. ஆப்தல்மாலஜிஸ்ட்-கள் சொல்வது போல கோபத்தில் கருவிழிக்குள்ளே பாப்பா விரிதல் 4. அதிக டென்ஷன் ஏற்படுவதால் லேசாய் பெருமூச்சு வாங்குதல். 5. கோபத்தால் உடலானது இன்னபிற வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படுதல். 6. சூழ்நிலை மறத்தல்.

எதனால் திட்டவேண்டியிருக்கிறது? கோபம் வருவதால். எதனால் கோபம் வருகிறது? யாரோ என்னவோ செய்வது என்னை பாதிப்பதால். ஆனால் அவையெல்லாம் நியாயமான விஷயங்களுக்கான நியாயமான கோபங்கள் என்று எனக்கு நன்றாய்த் தெரியும். இது கூட வராவிட்டால் அப்புறம் என்ன மனுஷன் நீ என்று என்னை நானே சில நேரம் கேட்டுக்கொள்வதன் பின்விளைவாகத்தான் மேற்படி விஷயங்கள் அரங்கேறுகின்றன. அதைக்கூட பண்ணமுடியவில்லையெனில் இளிச்சவாயன் என்கிற பட்டம் கட்டி அப்படியே கட்டம் கட்டிவிட மாட்டார்களா மக்கள் என்றொரு எண்ணமும் கூடவே எழுகிறது. தவிர நான் புத்தனோ அல்லது புத்தனின் வழியைக் கடைபிடிப்பவனும் அல்லன். மூன்றாம் முறை முகத்தில் அறைந்தால் புத்தனுக்கும் கோபம் வரும் என்று படித்ததில்லையா நீங்கள்?

வாசற்படியில் கட்டிப்போட்டிருக்கிற நாயைக் காட்டி “ஒண்ணும் பண்ணாதுங்க” என்று சொல்கிற மாதிரி நம்மையும் இனியும் யாரும் சொல்லிக் கொண்டிருக்கக்கூடாது என்கிற முனைப்பின் எதிரொலி இது. இவன் ஒரு அப்பாவி, பிள்ளைப்பூச்சி என்கிற மாதிரி பெயர்கள் நமக்கு அடைமொழியாகவோ, புனைபெயராகவோ வந்து சேராமலிருக்கவேண்டுமென்றால் நாம் கிடைத்த சந்தர்ப்பங்களில் குரல் உயர்த்தி நிரூபணம் செய்துகொண்டால்தான் ஆயிற்று இல்லையா?

இப்படிப் புலம்புகிற அளவுக்கு அப்படி என்ன ஆயிற்று? சொல்கிறேன். ஒரு பிரபல மொபைல் மற்றும் இன்டர்நெட் சேவை நிறுவனம் இந்த மாசம் காரணமில்லாமல் உங்கள் பில்தொகையை இரட்டிப்பாக அனுப்புகிறது. காரணம் கேட்டால் கூலாக ‘டெக்னிகல் எர்ரர்’ என்கிறார்கள். நீங்கள் சர்வீஸூக்குக் கொடுத்திருந்த வாகனத்தில் நீங்கள் சொல்லியிருந்த குறைகளை சரியாகச் செய்யாமல் விடுவதுடன் புதிதாக ஒரு சில குறைகளை உண்டுபண்ணி அனுப்புகிறார்கள். நீங்கள் ஒரு எலெக்ட்ரானிக் இசைக்கருவியை சரிசெய்ய ஆழ்வார்பேட்டையிலுள்ள ஒரு சர்வீஸ் சென்டரில் கொடுக்கிறீர்கள். 10 நாட்களாகியும் அவர்களிடமிருந்து எந்தத் தகவலும் இல்லையே என்று, நீங்கள் நேரில் போனபோது அதி முட்டாள்தனமான (அல்லது அதி புத்திசாலித்தனமான) காரியத்தைச் செய்து வைத்திருக்கிறார்கள். உங்கள் அபார்ட்மெண்டில் டூவீலர் ஸ்டாண்டுக்கு நேர் மேலே உள்ள வீட்டின் பால்கனியில் அவர்கள் காகத்துக்காக குழம்பு சோறு வைக்கிறார்கள். (நல்ல விஷயந்தான்) மறுநாள் நீங்கள் குழந்தையுடன் ஸ்கூலுக்கு அவசரமாய் கிளம்பும்போது உங்கள் டூ வீலரைப் பார்த்தால் அது தலையிலிருந்து கால் வரை குழம்பு சோறால் நாறியிருக்கிறது. அதை கழுவ நிச்சயம் ஒரு பக்கெட் தண்ணீர் தேவைப்படும். காக்கைகளின் கைங்கரியம்தான் அது என்றாலும் தப்பு யாருடையது என்று உணர்ந்து நீங்கள் மேலே பால்கனியைப் நிமிர்ந்து பார்க்கிறீர்கள். ரோட்டில் போகும்போது யாரோ செய்த ஒரு சாலை விதிமுறை மீறலுக்காக பக்கத்து வாகனக்காரன் உங்களைப் பார்த்து கைநீட்டி“அறிவேயில்லையா?” என்று கேட்டு விடுகிறான். இன்னொரு பைக்வாலா ஒருவன் அவன் சென்று கொண்டிருக்கிற ஒரு ரோட்டை அவன் முப்பாட்டன் காலத்திலேயே பட்டா போட்டு எழுதிவாங்கிக் கொண்ட மனோபாவத்தோடு பான் பராக் எச்சிலை அண்ணாந்து பாத்து வலப்புறமாகத் துப்ப ஒரு திடீர் ப்ரேக் அடித்து நீங்கள் அந்தச் சாரலிலிருந்து தப்பித்தது மட்டுமல்லாமல் சறுக்கி விழ இருந்த ஒரு பெரும் விபத்திலிருந்தும் அதிர்ஷ்டவசமாகத் தப்பித்து விட்டீர்கள்.

மேற்கண்ட விஷயங்கள் எல்லாம் ஒரு சிறு சாம்பிள் சாஷே பாக்கெட் மட்டுமே. இது போல நிறைய! நிறைய! நிறைய! இவையெல்லாம் இந்த வருஷம் ஆடிக்கு ஒன்றும் அடுத்த வருஷ அமாவாசைக்கொன்றுமாக இனிதே நடந்தேறி வந்தால் பரவாயில்லையே. விதி வீடியோ கேம் விளையாடியது போல எல்லாமே ஒரு இருபது நாட்களுக்குள் தொடர்ந்து நடந்துவந்தது.

நீங்கள் இந்த சூழ்நிலைகளில் என்ன செய்வீர்கள் என்று உங்களைப் பார்த்து ஒரு கேள்வியை இங்கே வீசுவதன் மூலம் என் நியாயமான கோபங்கள் குறித்தான ஆதரவுக்கு உங்களையும் இழுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நான் என்ன பண்ணினேன் என்றால் உடனே ரெளத்திரம் பழகி குரலுயர்த்திப் பார்த்ததுதான். என்னதான் நடக்கிறதென்று பார்ப்போமே! இது ஒரு மாதிரி பரிசோதனை முயற்சி. இதன் விளைவாக மூன்றாவது பாராவில் சொல்லப்பட்டது தவிர வேறெதாவது நடந்ததா? ம்ஹூம்! ஒரு சில இடங்கள் தவிர “பெரிதாய் ஒன்றும் இல்லை. தொண்டை வறண்டதுதான் மிச்சம்” என்று கொட்டை எழுத்துக்களில் வருத்தமாக சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்த விஷயங்கள் இன்றைய நகர நெரிசல் வாழ்க்கையில் பரபரத்துத் திரியும் மக்களின் பொதுவான மனோபாவத்தைக் குறித்து சிந்திக்கவைக்கிறது. மேற்கூறிய சம்பவங்களில் ஒரு சிலது நகர மனிதர்களுக்கு அடுத்தவர் மேலுள்ள அக்கறையின் கிராஃப் இறங்கிவிட்டதைக் குறிக்கிறது. ஒரு சில சம்பவங்கள் வாடிக்கையாளரின் திருப்தியை முன்னிறுத்திய சேவையை பொருட்படுத்தாமல் தேமே என்று வேலை செய்யும் பெருவாரியான கூட்டத்தை அடையாளம் காட்டுகிறது. அண்டை அயலார் மீதான பொதுவான நேசம் அல்லது சகோதரத்துவம் அருகி விட்டதென்பதை இன்னும் சிலது எடுத்துக்காட்டுகின்றன.

இந்த நிலைப்பாட்டை தினசரி எதிர்கொள்ள நேரிடுகிற சலிப்பை, எரிச்சலோ கோபமோ கலந்த வார்த்தைகளிலோ செயல்களிலோ வெளிப்படுத்திக் கொண்டிருந்தால் இந்த ஆயுள் போதாது என்றும் தோன்றுகிறது.

ஆகவே சாந்தி சாந்தி ஓம் சாந்தி.

கலையும் கலை சார்ந்த இடமும்

சென்னை கவின் கலைக் கல்லூரிக்கு (Madras Collage of Fine Arts) எதையாவது சாக்கிட்டு ஒரு முறையாவது போய்வர வேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசையாக இருந்தது. பின்னே ஓவியத்தின்பால் கொஞ்சம் ஆர்வம் வைத்திருக்கிற நான், அதுவும் சென்னையிலேயே இருந்துகொண்டு இதைப் பண்ணாமலிருந்தால் எப்படி?

போன வாரம் அந்த வாய்ப்புக் கிடைத்தது. ஆபிஸில் திடீரென கரெண்ட் கட்டாகி சும்மா உட்கார்ந்திருந்த நேரத்தில் போகலாமா என்று பாஸ் கூப்பிட்டார். ஆனால் சும்மா அல்ல. சந்தோஷ் என்கிற ஒரு நண்பன் கவின்கலைக் கல்லூரி வளாகத்திற்குள் வைத்திருந்த புகைப்படக் கண்காட்சியை பார்ப்பதற்கு.

நான் முன்பே எதிர்பார்த்திருந்த மாதிரி இல்லாமல் வேறு விதமான தோற்றத்தோடு இருந்தது கவின் கலைக் கல்லூரி. ஒரு குறுகலான கேட்டைத் தாண்டிப் போனால் அதற்கப்புறம் அதிகம் நடக்கிறதுக்கு வகையில்லாமல் உடனடியாக கட்டிடங்கள் வந்துவிடுகின்றன. சந்தோஷின் புகைப்படக் கண்காட்சி வாசலை ஒட்டின ஒரு ஹாலிலேயே இருந்தது. நல்ல கான்ட்ராஸ்ட்டுடன் கூடிய அழகிய புகைப்பட முயற்சிகள். இன்னும் உழைத்தால் பெரிய அளவில் வர வாய்ப்பு உண்டு.

கல்லூரி வளாகத்தினுள் நிறைய மரங்கள். மரங்கள் உதிர்த்த ஏராளமான சருகுகள். வளாகம் சுத்தம் செய்யப்பட்டு ஒரு மாமாங்கம் இருக்கும் என்றாலும் அதுவே அந்த சூழ்நிலைக்கு ஒரு இயற்கை அழகுபோல் பொருந்தியிருக்கிறது. மரங்களுக்கு நடுவில் ஆங்காங்கே முழுசாகவும், சிதைந்தும் நிறைந்து கிடக்கிற சிலைகள். எல்லாம் மாணவர்களாலோ அல்லது ஆசிரியர்களாலோ உருவாக்கப்பட்டவை. பல கோணங்களில் பல போஸ்களில் ஒரு முதியவர் சிலை ஆங்காங்கே கண்ணில் பட்டது. அந்தப் பெரியவர் அந்த கல்லூரிக்கு மாடலாக வேலை செய்கிறவராம். ரொம்பத் தள்ளாடி பலவீனமாக நடந்துவரும் அந்தப் பெரியவர் ஓய்வு நேரங்களில் எப்போதும் ஏதாவது குறுகிய இடத்திலேயே உடலைச் சுருக்கிக் கொண்டு உட்கார்ந்து டீ குடிப்பாராம். ஆனால் மாடலிங் க்ளாஸ் நடக்கும்போது ஆயிரம் வாட்ஸ் வெளிச்சத்தில் ஒரே கோணத்தில் அசையாமல் மூன்று நான்கு மணி நேரம்கூட உட்கார்ந்திருப்பாராம்.

மரத்தடியில் அரட்டையடித்தபடி மாணவர்களில் அதிகம்பேர் பெண்பிள்ளை மாதிரி நடுமுதுகு வரை தலைமுடி வளர்த்தியிருந்தார்கள். சிலபேர் குடுமி அல்லது கூந்தலை நன்றாகச் வாரி ரப்பர் பேண்ட் போட்டிருந்தார்கள். (போனி டெய்ல்?) அதிக பட்ச உடை ஜீன்ஸ் மற்றும் பனியனாக இருந்தது. தாங்கள் கலைஞர்கள் என்றோ மற்றவர்களிடமிருந்து ஏதோ ஒன்றில் வித்தியாசப்படுகிறோம் என்கிற செய்தி அறிவிப்பு அவர்களின் நடை, உடை, பாவனைகளில் இருக்கிறது. எனக்குத் தெரிந்த ஓவிய நண்பர்கள் ஓரிருவர்கூட அவ்வாறேதான் இருக்கின்றனர். நிறைய தலைமுடியும், மீசையும் தாடியும் எப்போதும் கலையின் அடையாளச் சின்னம் போலும்.

இன்றைக்கு க்ளாஸ் எதுவும் இல்லையா என்று சந்தோஷிடம் கேட்டபோது, இரண்டாம் வருடம் முதல் அப்படியொன்றும் கட்டாயமாய் மாணவர்களை உட்கார வைத்து வகுப்பெடுக்கிற வழக்கம் கிடையாது என்றும், கல்லூரி நேரங்களில் புற உலகிற்குப் போய் தாமாகவே பார்த்தும், கேட்டும் பயிற்சி செய்தும் கற்றுக்கொள்கிற சுதந்திரம் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறதென்றும் சொன்னான்.

அப்புறம் கொஞ்சமாய் அவர்கள் கவின்கலை உலகின் கூடங்களை ஒரு வலம் வந்தோம். முதலில் சிலைகள் உருவாகிற இடம். மான், மனிதன் என ஏகப்பட்ட ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மோல்டுகள். க்ளே மாடலிங் பண்ணுவதற்கு நிறைய களிமண் கொட்டப்பட்டிருந்தது. செய்கிற சிலைகளுக்கு சப்போர்ட்டாக வளைக்கப்பட்ட கம்பிகள் ஆங்காங்கே. குவிந்து கிடக்கிற மோல்டுகள். எல்லாக் கூடங்களும் இயற்கையாய் அதனதன் லட்சண சொரூபத்துடன் பழமை கவிந்து கிடக்கின்றன. நீங்கள் சினிமாவில் பார்த்து மகிழ்ந்திருக்கும் வில்லன்களின் அல்லது தீவிரவாதிகளின் கொட்டடி போன்ற தோற்றத்துடனேயே எல்லாக் கூடங்களும், அவற்றிற்குப் போகிற வழிகளும் இருந்தன என்றாலும் அப்படி இயல்பாய், இயற்கையாய் இருப்பதே அந்த கலை சார்ந்த இடத்தின் மதிப்பையும் சிருஷ்டிப்புத் தன்மையும் கூட்டுகிற விதமாய்த் தோன்றியது. எத்தனையெத்தனையோ பெரிய கலைஞர்களையும், ஓவியர்களையும் உருவாக்கிய இடமல்லவா அது.

திரும்பிய பக்கமெல்லாம் சுவர்களில் (ஒரு இடம் விடாமல்) ஓவியக் கிறுக்கல்கள். க்ளேஸ், களிமண், ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் இன்ன பிற பொருட்கள் உபயோகித்து ஆங்காங்கே கூடங்களின் மூலைகளில் சில மாணவர்கள் சின்னச் சின்னதாய் சிலை முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். ஒரு க்ளே மாடலிங் கூடத்திலிருந்து சாவதானமாய் வெளிவந்த நாயைப் பார்த்து நான் புருவம் உயர்த்தியபோது, அது நாய் அல்ல எங்களின் மாடல் என்று பதில் வந்தது. உள்ளே மாணவர் ஒருவர் விதவிதமாக ஒரே நாயை பல போஸில் களிமண்ணால் சின்னச் சின்னதாக சிலையாகப் பண்ணிக்கொண்டிருந்தார். படுத்திருக்கிற மாதிரி, தலையை சொறிவது மாதிரி, சோம்பல் முறிப்பது மாதிரி, நின்று முறைப்பது மாதிரி என நிறைய. அந்த நாயை ஐந்து மாதமாக ஸ்டடி செய்து பண்ணினதாம். Every dog has a day என்று இதைத்தான் சொல்கிறார்களா?

நேரமாகிவிட்டது என்பதால் ஓவியக் கூடங்களை இன்னொரு நாள் வந்து பார்க்கலாம் என்று ஆபிஸூக்குத் திரும்பி வந்துவிட்டோம். திரும்பும்போது வாழ்க்கையில் ஏதோ ஒரு பெரிய விஷயம் கிடைக்காமல் போனமாதிரி ஒரு இழப்பின் பரிதவிப்பு. இன்னும் அணையாமல் மனதின் ஏதோ ஒரு மூலையில் சுடராய் எரிந்துகொண்டிருக்கிற ஓவியத் தாகம்தான் அன்றைய தினம் என்னை அங்கே கொண்டு போயிற்று எனலாம். கதைகளும் நாவல்களும் படிக்க ஆரம்பித்தது மாதிரியே ஓவியம் வரைய ஆரம்பித்ததும் கூட ஆறாங்க்ளாஸில்தான் என்று சொல்லலாம். முதலில் ஒரு மான் வரைந்து கலரடித்தது ஞாபகம் இருக்கிறது. அப்படியே கிறுக்கிக்கொண்டிருந்ததில் சித்திரம் கைப்பழக்கம் ஆகியிருந்ததால் என்ஜினியரிங் படிக்கும்போது ட்ராயிங் க்ளாஸில் வரும் ஆர்தோக்ராஃபிக் ப்ரொஜக்ஷன், ஐஸோமெட்ரிக் ப்ரொஜக்ஷன் எல்லாம் என்னை அத்தனை பயமுறுத்தியிருக்கவில்லை. அரஸ், மணியம் செல்வம் போன்றோரின் ஓவியங்களையெல்லாம் பார்த்து அச்சு அசலாக வரைகிற என் கைத்திறனை மூக்கின் மேல் விரல்வைத்து வியக்கிறவர்களுக்கு அத்தனை ஓவிய ஞானம் இல்லாமலிருந்ததால் தப்பித்தேன். கிடைத்த இடத்திலெல்லாம் தவறாமல் பெண் படம் வரைகிற பழக்கத்தை அப்பாகூட எப்போதும் வன்மையாகக் கண்டித்தவண்ணம் இருந்தார். அப்புறம் எந்த வீட்டுக்குக் குடிபோனாலும் அடுப்புக் கரி கொண்டு சமையலறை சுவரில் தத்ரூபமாய் ஒரு கண் வரைந்து வைப்பேன். (பெண்ணின் கண்தான்). மனதில் இலக்கிய ஆர்வம் கவிந்தபிறகு நண்பர்கள் சேர்ந்து உருவாக்கிய கையெழுத்துப் பத்திரிக்கையில் நானே ஆஸ்தான ஓவியன்.

பின்னாளில் அட்வர்டைஸிங் துறைக்கு வந்ததும் அப்புறம் க்ராபிக்ஸ் மல்டிமீடியா என்று தாவினதுக்கும் என் ஓவியப் பயிற்சிகள்(!) நிச்சயம் துணை புரிந்தன எனலாம். இருந்தாலும் முறையாக ஓவியம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று மனதின் ஓரத்தில் லேசாய் ஒரு ஆசை இருந்தது. முடியவில்லை. இப்போதெல்லாம் என்றைக்காவது ஒரு நாள் பென்ஸிலையும் பேப்பரையும் எடுத்து வைத்துக்கொண்டு ஒரு அரைமணி நேரம் கிறுக்கினாலே ஜாஸ்தி. அத்தோடு என் ஓவிய தாகம் அணைந்துவிடுகிறது.

வாய்ப்பு அமைந்தால் எனக்கென்று ஒரு தனி அறை அமைத்துக்கொண்டு, அறை மத்தியில் (அல்லது மூலையில்) ஓவியம் வரைவதற்கான ஈஸல், பேலட்டுகள், தூரிகைகள், வாட்டர்கலர்கள், ஆயில் பெயிண்டிங் கலர்கள், கொஞ்சம் கேன்வாஸ், லின்ஸீட் ஆயில் இன்னபிறவற்றை கடைபரப்பிக் கொண்டு கொஞ்ச நாள் வாழவேண்டும் என்று என்னிடம் கனவொன்று இருக்கிறது. அங்கே நான் எதுவும் வரையாவிட்டாலும் பரவாயில்லை.

ஜீவித்திருப்பவர்கள்

சென்னையில் வசிப்பவர்களுக்கு, அதுவும் கடலிலிருந்து ஒரு பத்து கிலோமீட்டர்களுக்குள் வசிப்பவர்களுக்கு ஒரு செளகரியம் உண்டு. நினைத்தவுடனே அவரவர் செளகரியத்திற்கேற்ப ஏதாவதொரு வாகனத்தில் பயணித்து சடுதியில் கடற்கரையை அடைந்து கால் நனைத்துவிடலாம். கடற்கரை ஒரு அழகான பொழுது போக்கிடம். பெரியவர்கள் விரும்பினால் தங்கள் குழந்தைகள் சார்பாக ஒரு பட்டம் வாங்கிக்கொண்டு மணலில் ஒரு ஓரமாய் உட்கார்ந்து மீண்டும் குழந்தையாகி மகிழலாம். நானும் சில சமயம் அப்படியே. சென்னைக்கு வந்த இந்த நாலு வருஷத்தில் எத்தனை முறை கடற்கரைக்குச் சென்றேன் என்று கணக்கில்லை. கடற்கரைக்கு இன்னும் கொஞ்சம் பக்கமாய் வீடு மாறியபின் அநேக ஞாயிற்றுக் கிழமைகள் வண்டியை எடுத்துக்கொண்டு மெரீனாவுக்குப் போய்விடுவது வழக்கம். வார நாட்களில் கூட ஒரு சில நண்பர்களைச் சந்திக்கும் பொருட்டு இரவு எட்டு மணிக்குமேல்கூட அடிக்கடி அங்கே போவதுண்டு.

கடற்கரைக்குப் போகிற சமயங்களில் இருட்டுவதற்கு முன் சமுத்திரத்தை ஒரு முறை தரிசனம் பண்ணிவிடுகிற ஆசை எப்போதும் மேலோங்கியிருக்கும். அப்படி வாய்ப்பு அமைந்தால் என் நாலு வயசு வாண்டை மகிழ்விக்கிற சாக்கில் நானும் கொஞ்சம் அலைகளில் விளையாடுவதுண்டு. பேண்ட்டை மேலே சுருட்டிவிட்டுக் கொண்டு இறங்கி அவன் விரல்களை இறுகப் பிடித்துக் கொண்டு, முழங்காலளவு வந்து திரும்புகிற அலையில் காலடியில் மணல் சரசரவென்று நழுவ, பாதங்கள் புதைகிற அபத்திர உணர்வில் இருவரின் கைப்பிடியும் இறுகும். சில நேரம் எதிர்பாராமல் மிகப் பெரிய அலை வந்து அவனை முழுதாகவும் என்னை முகம் வரையிலும் நனைக்கிற போது உற்சாகத்தில் "க்ரீச்" என்று அருகாமை ஜனங்கள் நடுங்கிப் போகுமளவு கத்துவான். கடற்கரைக்கு போகும்போதே இருட்டியிருந்தால் இந்த விளையாட்டு ஆசையையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, வந்து திரும்பும் அலையின் மிஞ்சிய நுரையில் லேசாய் செருப்பை நனைப்பதோடு சரி. ஞாயிற்றுக் கிழமைகளில் அலைகடலென(!) திரண்டிருக்கிற கூட்டத்திற்கு கடலும் அலைகளும் ஒரு வேடிக்கைப் பொருளாக, ஒரு எக்ஸிபிஷன் தன்மையுடன் இருப்பதாக நான் எப்போதும் நினைத்துக்கொள்வேன்.

கடல் எல்லோருக்கும் பிடிக்கிறது. கடல் நீரில் கால் நனைப்பது, கடற்கரையில் கடலை சாப்பிடுவது, கடலின் விளிம்பில் உட்கார்ந்து கொண்டு காதல் பண்ணுவது, கடல் மணலில் கால் புதைய பேசிக்கொண்டே நடப்பது அல்லது வெறுமனே வேடிக்கை மட்டும் பார்ப்பது என எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் அல்லது எல்லா விதத்திலுமே கடலின் அருகாமை மிகப் பிடித்தமானதாக இருக்கிறது. எனக்கு கடலின் தூரத்து நேர்கோட்டு விளிம்பில் பார்வையை செலுத்தி எதையாவது யோசித்துக்கொண்டிருப்பது பிடிக்கும். கற்பனைக்கெட்டாத அதன் தூரம், ஆழம், அது மறைத்து வைத்திருக்கிற உயிரின ரகசியங்கள் எல்லாம் யோசிப்பின் தீவிரத்தில் ஆச்சரியங்களாய் விரியும். மனிதனின் பிரபஞ்ச எல்லையைப் பற்றிய வியப்பின் ஒரு மினியேச்சர் மாதிரிதான் இது. ஞாயிற்றுக்கிழமை அல்லாத மற்ற வார நாட்களில் மெரீனாவில் கடலுக்கு இன்னொரு முகம் இருப்பதுபோல் தோன்றும். அதிகம் கூட்டமில்லாமல், தன் பாட்டுக்கு ஏதோ யோசனையோடு அமைதியாய் வந்து போகிற அலைகள். அந்த எக்ஸிபிஷன் தன்மை இல்லாதிருப்பதுபோல் அல்லது கொஞ்சம் குறைந்திருப்பது போல் தோன்றும். அதுவும் இருட்டில் தூரத்துக் கப்பல் விளக்குகளோடு சேர்ந்து பார்க்கும் போது கருமை படர்ந்த கடலின் அமைதி மனதை என்னவோ செய்யும். அலைகளின் லேசான இரைச்சல் ஒரு தாலாட்டு மாதிரி இருக்கும். வாழ்க்கைக்கும் தினசரி பரபரப்புக்கும் இடையை இருக்கிற பிணைப்பு தற்காலிகமாய் அறுந்த மாதிரி கொஞ்சம் ஆசுவாசமாகத் தோன்றும். திரும்பி மெயின் ரோட்டுக்கு வரும்வரைதான் அந்த ஆசுவாசம் எல்லாம். டிசம்பர் 26க்கு ஒரு வாரத்துக்கு முன் மனைவி மகனுடன் ஒரு இருட்டின மாலையில் அலைகளுக்கு நெருக்கமாய் தூர வானத்தில் எரிநட்சத்திரம் விழுவதைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தபோதுகூட இதே ஆசுவாசம் மனதில் நிறைந்திருந்தது.

அதற்கப்புறம் ரொம்ப நாளைக்கு கடற்கரைப்பக்கம் போக முடியாமல் போய்விட்டது. போய்ப் பார்க்கவேண்டும் என்று நினைத்து ஏனோ தள்ளிப் போய்க்கொண்டேயிருந்தது. மெரீனாவை நினைக்கும்போது தினத்தந்தியின் டபுள் ஸ்ப்ரெட் ஏரியல் புகைப்படம் நினைவில் நிழலாடி மனதை பிசைகிறது. கடலையும் கடல் சார்ந்த இடங்களையும் மனதில் காட்சிப்படுத்திப் பார்க்கும்போது அந்தக் காட்சிக்குக் கீழே துக்கத்தில் தோய்த்தெடுத்த ஒரு ஸ்க்ரால் நியூஸ் ஓடுவது மாதிரி ஒரு பிரமை.

ரொம்ப நாள் கழித்து இந்த ஞாயிற்றுக்கிழமை மறுபடியும் நண்பர்களுடன் போனேன். பெசன்ட் நகர் கடற்கரை. போகும்போதே நன்றாய் இருட்டியிருந்தது. அன்றைய தினத்திற்கு கூட்டம் ரொம்பக் குறைச்சல் என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் நிறைய பேர் இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கவில்லையெனத் தெரிகிறது. கடற்கரை தன் முகத்தை மாற்றிக்கொண்டதுபோல் ஒரு உணர்வு. மணலில் கடலை நோக்கி நடக்கும்போது எல்லோருக்கும் கால்களில் தயக்கம் பின்னுக்கிழுக்கிறது. செருப்பைக் கழற்றிவிட்டு நடந்தால் அரைக் கிலோமீட்டருக்கு மணல்வெளியில் இன்னும் ஈரப்பதம். எப்போதும் நம்மை அற்பமாய் உணரச்செய்யும் கடல் இன்று அதன் கூடவே எல்லோர் மனதிலும் லேசான பய உணர்ச்சியையும் சேர்த்துவிட்டது. அன்று யாரும் அலையருகில் உட்கார்ந்து நான் பார்க்கவில்லை. அதுமாதிரியே கால் நனைத்து விளையாடுபவர்களும். அலைகள் தன் வழக்கமான எல்லைக் கோட்டை மாற்றி வரைந்திருந்ததாகப் பட்டது. யானொன்றுமறியேன் பராபரமே என்பதுபோல் தேமே என்றிருக்கும் கடற்பரப்பின் அகண்ட வெளியில் எல்லோர் பார்வையும் ஒரு சந்தேகத்துடன் குத்திட்டு நிற்கிறது. நாங்கள் போன அன்று பெளர்ணமிக்கு இரண்டு நாள் முந்தியாதலால் 98 சதவிகித நிலா வானத்தில் இருந்தது. பளிச்சிடும் வெண்மையான நிலவொளியில் அலுமினிய ஃபாயில்களை சுருட்டுவது போன்ற தோற்றத்துடன் இருளில் பளபளப்புடன் புரண்டு வந்த அலைகளில் கால் நனைத்தபோது உயிரின் நரம்பு லேசாக நடுங்கிச் சிலிர்த்தது. இந்தப் பிஞ்சு வயசிலேயே தொலைகாட்சிச் சேனல்களிலின் 'லைவ்' காட்சிகள் மற்றும் செய்திகள் மூலம் ஏதோ புரிந்து வைத்திருந்த என் பையன் ஒரு உறைந்த பார்வையுடன் கடலை கொஞ்சம் வெறித்துவிட்டு என் கைகளை இறுக்க்க்க்க்க்கிகொண்டு என்னை அண்ணாந்து பார்த்தவாறு மெதுவே அலை நுரைகளைக் கால் விரல்களால் தீண்டிப் பார்த்தான்.

அன்று அலையருகில் உட்காரவும் இல்லை. அதிக நேரம் நிற்கவுமில்லை. கொஞ்சம் பாதுகாப்பான தூரம் என்று பட்ட இடத்தில் மணல்வெளியில் உட்கார்ந்துகொண்டோம். பாதுகாப்பான இடம் என்பதும் பாதுகாப்பாய் இருக்கிறோம் என்கிற இந்த நினைப்பும் எத்தனை அபத்தம்!! புத்தாண்டுக்கு அடுத்தநாள் எனக்கு நேரிட்ட சின்னஞ்சிறு விபத்து கூட இதையேதான் சொல்கிறது.

கனத்த மனத்துடன் கடற்கரையிலிருந்து திரும்பி வரும்போதும் ஒரே சிந்தனை. இவ்வுலகின் இத்தனை கோடி ஜனங்களும் ஏதோ ஒன்றிலிருந்து தப்பிப் பிழைத்து இந்தக் கணம் ஜீவித்திருப்பவர்கள்தான் என்று திரும்பத் திரும்பத் தோன்றுகிறது.

இனி நல்லவையே நடக்க எல்லாம் வல்ல Super Nature Power அருள் பாலிக்கட்டும்.

ஆட்டோகிராஃப்

ஆட்டோ 1 : ஓரிரு வருடங்களுக்குமுன் நன்றாய் வெயில் கொளுத்துகிற ஒரு மதிய நேரம். நான் மற்றும் என் இரண்டு நண்பர்கள். கோவை சாயிபாபா காலனியில் உள்ள ஒரு ஹோட்டலில் தயிர் சாதமும், எலுமிச்சைச் சாதமும் இருபத்தைந்து பொட்டலங்கள் ஆர்டர் பண்ணிவிட்டுக் காத்திருக்கிறோம். அடுத்தநாள் மதுரையில் நடக்கவிருக்கும் ஒரு நண்பனின் கல்யாணத்துக்கு மதியம் ஒண்ணரை மணி ட்ரெயின் பிடித்து 25 பேர் போகிறோம். எல்லோரும் மதிய உணவை ட்ரெயினிலேயே முடித்துக்கொள்ளலாம் என்று சாப்பாடுப் பொட்டலங்களை ஏற்பாடு செய்ய வேண்டிய பொறுப்பை எங்களிடம் விட்டிருந்தார்கள். பொட்டலங்கள் வந்தன. அவற்றை சேகரித்துக்கொண்டு மணி பார்த்தபோது ஒன்று ஆகியிருந்தது. மீதி 22 பேரும் இந்நேரம் ட்ரெயினுக்கு வந்திருப்பார்கள். நாங்கள் இன்னும் அரை மணிக்குள் ரயில் நிலையம் போக வேண்டும். சரி ஒரு ஆட்டோ பிடித்துக்கொள்ளலாம் என்று முடிவு பண்ணினோம். கைதட்டினவுடன் அரை வட்டமடித்து ஆட்டோ ஒன்று வந்து நின்றது. ஏறிக்கொண்டு எங்கள் அவசரத்தைச் சொன்னோம். நிதானமாய்ப் போனால் போதும் என்றும் உபரியாய் சொல்லி வைத்தோம். ஆட்டோ கிளம்பியது.

ஒரு அரை ஃபர்லாங் கூட போயிருக்கமாட்டோம். ஒரு வளைவில் ஒரு யமஹா பைக்கில் இரண்டு பேர் ஸ்டைலாய் திரும்ப, சட்டென்று அந்தக் குறுக்கீட்டில் சுதாரிக்க முடியாமல் யமஹாவின் மீது டமால் என்று நேருக்கு நேர் மோதல். அப்புறம் நடந்ததை எப்படி வர்ணிப்பதென்று தெரியவில்லை. ஒடித்துத் திருப்பியதில் ஆட்டோ நிலை தடுமாறி சைடில் கவிழ்ந்து, இரண்டு முறை உருண்டு செத்த பல்லி மாதிரி சொத்தென்று தலைகீழாய் வீழ்ந்தது தரையில். நேராய் பார்த்தபோது வானம் தெரிந்தது. ஓ! நான் ஆட்டோவுக்கு அடியில் கீழே கிடக்கிறேன். நெஞ்சுப்பகுதி விலா எலும்பில் வலி உயிர் போகிறது. அலங்கோலமாய்க் கிடந்த எங்கள் மூவரையும் யாரோ வந்து தூக்கிவிட்டார்கள். எனக்குக் கைகால்கள் நடுங்குகின்றன. மண்டையிலிருந்து ரத்தம் வழிய மூர்ச்சையான ஆட்டோ ட்ரைவரைச் சுமந்து கொண்டு இன்னொரு ஆட்டோ ஆஸ்பத்திரிக்கு விரைகிறது. ரோடெங்கும் தயிர்சாத, எலுமிச்சைச் சாத பொட்டலங்கள் சிதறிக்கிடக்கின்றன.

ஆட்டோ 2 : நான். என் நண்பர். அவர் மனைவி, குழந்தை. சென்னை சென்ட்ரலிலிருந்து எங்களைச் சுமந்துகொண்டு தி. நகருக்கு விரைகிறது அந்த ஆட்டோ. ட்ரைவர் அப்போதுதான் ஒரு ஜேம்ஸ்பாண்ட் படம் பார்த்துவிட்டு வருகிறார் போல. கச கசவென்று வாகனங்கள் விரைகிற மெளண்ட் ரோட்டில் முறுக்கிப் பிடித்து அமுக்குகிறார் ஆக்ஸிலேட்டரை. சிக்னல்களில் ஆரஞ்சு விழுந்தாலும் மதிக்காமல் பறக்கிறது ஆட்டோ. சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுவது எப்படி என்பதை அன்றுதான் தெரிந்து கொண்டேன். நண்பர் ட்ரைவரைக் கூப்பிட்டு இரண்டு மூன்று முறை சொல்லிவிட்டார். எங்களுக்கு அவசரமில்லை. மெதுவாகவே போகலாம். அதற்கப்புறம்தான் ஜேம்ஸ்பாண்டுக்கு உற்சாகம் பீறிட்டுவிட்டது. ஆக்ஸிலேட்டரே பிய்ந்துபோகுமளவுக்கு முறுக்க ஆரம்பித்துவிட்டார். முதன் முதலாய் உயிர் பயத்தை மிகவும் உணர்ந்தது அன்றுதான் எனலாம். ஒரு ரோலர் கோஸ்டர் சவாரிக்கு ஈடான த்ரில் அடி வயிற்றில் பந்தாய் உருள்கிறது. சரி! இந்தாள் பாச்சா உஸ்மான் ரோடு வந்தால் பலிக்காது. அங்கே நெரிக்கிற ட்ராஃபிக்குக்கு வேகத்தைக் குறைத்தே ஆகவேண்டும். ஆனால் நாம் வாழ்க்கையில் தப்புக்கணக்குப் போடுகிறோம்.

உஸ்மான் ரோடு வந்ததும் ட்ரைவர் நாங்கள் மயிர்க்கூச்செரியும் வகையில் ஒரு காரியம் செய்தார். அவர் இருக்கையிலிருந்து டக் என்று எழுந்து நின்று ஓட்ட ஆரம்பித்தார். வளைந்து வளைந்து லாவகமாய் வழியில் நிறைய பேருக்கு உயிர்ப்பிச்சையிட்டபடி ஆட்டோ பாய்கிறது. ஒரு வழியாய் தப்பித்து வீடு வந்து சேர்ந்தோம். நண்பர் 'நீ ஓட்டின ஓட்டுக்கு இவ்வளவுதான் கொடுக்க முடியும்' என்று சொல்லிவிட்டு பேசினதில் பாதித் தொகையை மட்டும் கோபத்துடன் அவனிடம் வீசி விட்டு திரும்பி வீட்டுக்குள் போய்விட்டார். கொஞ்ச நேரம் புலம்பிக்கொண்டிருந்துவிட்டு ஆட்டோ அரைவட்டம் போட்டுத்திரும்பிப் போனது.

ஆட்டோ 3 : மறுபடியும் சென்ட்ரலிலிருந்து ஒரு பயணம். இந்தத் தடவை என் அக்கா குடும்பம். இரண்டு குழந்தைகள். இந்த ஆட்டோ ட்ரைவர் இன்னொரு ஜேம்ஸ்பாண்டு. சீறிப் பாய்ந்து கிளம்பிய அந்த ஆட்டோவின் ட்ரைவர் எங்களை கதிகலங்க வைக்கப் பண்ணின முதல் காரியம் சர் என்று ஒரு ஒருவழிப் பாதைக்குள் புகுந்தது. எதிர் வரும் வாகனங்கள் நிலைதடுமாறி ஒதுங்க.. ஆட்டோ ட்ரைவருக்கு எந்தக் கவலையுமில்லை. நான் அவரைக் கூப்பிட்டு சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டேன். ஆனால் வேகத்தை துளியேனும் குறைப்பது அவமானமாய் போய்விடும் என்று நினைத்தார் போலும். மேலும் திடீரென்று ஹாண்டில் பாரிலிருந்து இரண்டு கையையும் விட்டு சர்ட் காலரை ஸ்டைலாய் இழுத்துவிட்டுக்கொண்டார். பிறகு ஒரு பான்பராக் பாக்கெட்டை லாவகமாய் பிரித்து வாயில் அடக்கினார். ஆட்டோ ஏதோ ஒரு சக்திக்குக் கட்டுப்பட்டார்போல அதுபாட்டுக்கு தேமே என்று போய்க்கொண்டிருக்கிறது. நான் மற்றும் என் அக்கா குடும்பம் கிடைத்த கம்பிகளையெல்லாம் இறுகப் பற்றிக்கொண்டு பேச்சு மூச்சற்றுப்போய் உட்கார்ந்திருந்தோம். போக்குவரத்து விதிகள் என்று என்னென்ன இருக்கிறதோ அது அத்தனையையும் ஒன்று விடாமல் மீறின ஒருத்தனை அன்றுதான் பார்த்தேன். ராயப்பேட்டை பாலம் தாண்டின அந்தப் பெட்ரோல் பங்க் அருகில் இன்னொரு ஆட்டோ பெட்ரோல் போட சரேலென்று திரும்ப ட்ரைவர் நிதானமிழந்து ஆட்டோவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்து.. டமார் என்று நேருக்கு நேர் மோதி.. அதன் தாக்கத்தில் ஆட்டோ இடப்பக்கம் சாய்ந்து கிட்டத்தட்ட கவிழப்போய் பின் என்ன நினைத்ததோ இரக்கம் கொண்டு பழைய நிலைக்கே ஆடி நின்றது. அன்று குழந்தைகள் இருவரும் கத்திய கத்தல் இன்னும் காதுக்குள்ளேயே எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

எனக்கு வாய்த்த இன்னும் சில மோசமான ஆட்டோ அனுபவங்களை இங்கே சொல்லவில்லை. எனக்கு மட்டும்தான் இப்படி வாய்த்ததா என்றும்கூட நினைத்ததுண்டு. குறிப்பாய் சென்ட்ரலிலிருந்து வேறு வேறு திசைகளுக்குப் பயணிக்கிற ஆட்டோக்கள் மட்டும்தான் இப்படியிருக்கிறதோ என்று ஒரு சந்தேகமும் உண்டு. திரும்பி வந்து அடுத்த ட்ரெயினிலிருந்து இறங்குகிற கூட்டத்திலிருந்து சவாரி பிடிப்பதற்கான அவசரம்தான் அவர்களை இவ்வளவு வேகமாக ஓட்டத் தூண்டுகிற காரணம் என்று நினைக்கிறேன். என்றாலும் குடும்பமாய் குழந்தைகளையும், லக்கேஜையும் சுமந்துகொண்டு நம்பிக்கையாய் பயணம்போகிறவர்களின் உணர்வுகளை ஏன் இவர்கள் கண்டுகொள்வதே இல்லை என்று புரியவில்லை. ஒரு நிதானத்துடன், பயணிகளின் மற்றும் சாலையில் நடக்கிறவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஓட்டும் ஆட்டோ ட்ரைவர்கள் ரொம்பக் குறைவே என்று தோன்றுகிறது. ஒரு அவசரத்துக்கும் செளகரியத்துக்கும் நாம் தேர்ந்தெடுக்கும் இந்த ஆட்டோப் பயணம் காசையும் கொடுத்துவிட்டு கலவரத்தை அடிமடியில் கட்டிக்கொண்டு போகும் விஷயமாகவே படுகிறது. மற்ற ஊர்களில் எப்படி என்று தெரியவில்லை. நிஜமாகவே அட்வெஞ்சரில் ஆர்வமுள்ளவர்கள் இங்கே ஒரு சில ஆட்டோக்களை முயன்று பார்க்கலாம்.

"சார் ஆட்டோ வேணுமா?" என்று குரல் கேட்டால் இப்போதெல்லாம் வேகமாய் திரும்பி நடந்துவிடுகிறேன்.