Showing posts with label சிறுகதைகள். Show all posts
Showing posts with label சிறுகதைகள். Show all posts

தொடர்பு எல்லைக்கு வெளியே - சிறுகதைகள் - மின்னூல்


http://freetamilebooks.com/ebooks/thodarbu-ellaikku-veliye/
கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ’மனதில் உனது ஆதிக்கம்’ என்கிற எனது முதல் சிறுகதைத் தொகுப்பு தந்த உற்சாகம் மேலும் தொடர்ந்து சிறுகதைகள் எழுதுவதில் கவனம் கொள்ள வைத்தது. நிறைய இல்லாவிட்டாலும் எப்பொழுதெல்லாம் எழுத வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது மட்டுமே பத்திரிக்கைகளிலும், இணையத்திலுமாக எழுதிக்கொண்டிருந்தேன். அப்படி வெளியான சில சிறுகதைகளின் தொகுப்பு இது. இதில் இருபது கதைகள் உள்ளன.
இந்தச் சிறுகதைகளின் கருக்கள் பெரும்பாலும் அகண்ட வாழ்வின் சின்னத் துணுக்குகளால் கோர்க்கப்பட்டவை. எதிர்ப்படுகிற ஏதாவது சம்பவங்களில் கிளர்ந்த சிறு பொறிகள் சிறுகதைகளாய் வடிவம் பெற்றிருக்கின்றன. இந்தச் சிறுகதைகள் கடந்த ஏழெட்டு வருட கால கட்டங்களில் எழுதப்பட்டவை. இந்தத் தொகுப்பை மின்னூலாக வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
இவைகளை வெளியிட்ட கல்கி, குமுதம், ஃபெமினா தமிழ், நம் தோழி ஆகிய பத்திரிக்கைகளுக்கும், தமிழோவியம்.காம், பதாகை.காம், செந்தமிழ்.காம் ஆகிய இணைய இதழ்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
தொடர்பு எல்லைக்கு வெளியே - சிறுகதைத் தொகுப்பை இலவச மின்னூலாக தரவிறக்கிப் படிக்க இங்கே சொடுக்கவும்.
மின்னூல் வெளியீடு :http://FreeTamilEbooks.com
உரிமை – கிரியேட்டிவ் காமன்சு. எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

இன்னொரு மழைக்கு முன்பு

என் நண்பரும் எழுத்தாளருமான சரசுராமின் முதல் சிறுகதைத் தொகுப்பான 'இன்னொரு மழைக்கு முன்பு' மித்ர ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ் வெளியீடாக வந்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

17 சிறுகதைகளால் ஆன இந்த தொகுப்பில் உள்ளடங்கிய கதைகள் அனைத்தும் ஆனந்த விகடன், சாவி, கல்கி, புதிய பார்வை, தினமணி கதிர் போன்ற பத்திரிக்கைகளில் வெளியானவை. 136 பக்கங்கள்.

மனித உறவுப் பின்னல்களின் நுண்ணிய சிக்கல்களையும், யதார்த்த உணர்வுகளின் நீரோட்டத்தையும், நெகிழ்ந்த மன வெளிப்பாடுகளின் உன்னத கணங்களையும், மென்மை தோய்ந்த அணுகுமுறையில் சிறந்த சிறுகதைகளாய் மாற்றும் திறமை சரசுராமின் பேனாவுக்கு உண்டு. மரங்கள் அடர்ந்த சாலையில் சன்னமாய் அடிக்கிற காற்றில் ஒரு சாயங்கால வேளை slow cycling மாதிரி எந்தப் பரபரப்பில்லாமல் மென்மையாய் கைபற்றி சீரான வேகத்தில் நம்மைக் கூட்டிச் செல்கிறது சரசுராமின் இத்தொகுப்பு.

இந்த புத்தகத்தின் முன்னுரையில் "என் கதைகள் பெரும்பாலும் பாசிட்டிவான விஷயங்களாக இருப்பதாகக் கேள்வி வந்ததுண்டு. இனிமேலும் வரலாம். அதற்கு என் பதில் - என் வாழ்வில் எனக்கு நடந்த சம்பவங்கள் பெரும்பாலும் நல்லவையே. நான் சந்தித்த மனிதர்கள் பெரும்பாலும் நல்லவர்களே. ஆக, இது என் அனுபவம். இவர்கள் என் மனிதர்கள். நான் ஆசைப்படும் மனிதர்கள் அல்லது நான் எதிர்பார்க்கும் மனிதர்கள். இவர்களைச் சொல்லவே ஆசைப்படுகிறேன். அப்படி எழுதுவதையே பெருமையாக நினைக்கிறேன்" என்கிறார் சரசுராம். முற்றிலும் உண்மை.

என்றைக்கோ வந்திருக்கவேண்டிய இத்தொகுப்பு மிக தாமதமாக வெளிவந்திருந்தாலும் நல்ல சிறுகதை வாசிப்பை விரும்பும் வாசகர்களை இத்தொகுப்பு திருப்தி செய்யும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

நானும் சிறுகதை எழுத ஆசைப்பட்டபோது அதன் வடிவம், உள்ளமைப்பு, உரைநடை உள்ளிட்ட இன்னபிற நுணுக்கங்களைக் கற்றுத்தந்து என்னை சிறுகதையாளனாக உருமாற்றிய பெருமைகூட சரசுராமையே சேரும்.

சரசுராம் இப்போது பணியாற்றிக் கொண்டிருப்பது திரைத்துறையில் இணை இயக்குநராக.

இன்னுமொரு மழைக்கு முன்பு
சிறுகதை தொகுப்பு - சரசுராம்
விலை - ரூ. 75
மித்ர ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ்
32/9, ஆற்காடு சாலை
கோடம்பாக்கம், சென்னை - 600024
போன் : +91 44 23723182, 24735314
mithra2001in@yahoo.co.in

மனதில் உனது ஆதிக்கம்

'மனதில் உனது ஆதிக்கம்' என்ற எனது சிறுகதைத் தொகுப்பு இன்று வெளியாகியிருக்கிறது. இந்தப் புத்தகம் மூலம் நான் உங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மொத்தம் 11 சிறுகதைகளும் கல்கியில் வெளியான நான்கு வார குறுந்தொடர் ஒன்றும் அடங்கியது இத்தொகுப்பு. 95லிருந்து துவங்கி வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட சிறுகதைகள் இவை. இச்சிறுகதைகளில் அதிகபட்சம் கல்கியில் வெளியானவை. என் எழுத்தில் நம்பிக்கை கொண்டு, என்னை ஊக்குவித்து இதை வெளியிடுவதில் பெருமளவில் உதவிய பா.ராகவன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மனதில் உனது ஆதிக்கம்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம், சென்னை