வருஷம் 16

கோவையிலிருந்து செப்டம்பர் 13 அன்று மதியம் ஒரு ரயில் புறப்பட்டது. அதன் இரண்டாம் வகுப்புப் பெட்டியொன்றில் ஒரு ஜன்னலோர இருக்கையொன்றில் அவன் உட்கார்ந்திருந்தான். ரயில் புறப்படும்போது சென்னை வரை நீண்டிருக்கும் அதன் பாதையைப் போலவே அவன் நெற்றியில் கவலை ரேகைகள் நீண்டிருந்தன.

சென்னை ஒரு மாநகரம். அதை நோக்கிப் பயணிக்கிறோம் என்கிற பதட்டம் அவனுக்குள் லாரி குடிநீர் போல தளும்பிக்கொண்டிருந்தது. புதிய வேலை, புதிய இடம், புதிய மக்கள். புதிய தட்பவெப்பநிலை. இதைவிட மேலாக அடுத்த மாதம் குழந்தை பெறப்போகும் கர்ப்பிணி மனைவியை விட்டுப் பிரிந்து வரும் மனக்குடைச்சல்.

"சென்னைக்கா போறீங்க? அங்கெல்லாம் போய் குப்பை கொட்டறது ரொம்ப கஷ்டம்ங்க.. மறுபடி யோசிங்க"

"சென்னைத் தண்ணிய ஒரு ரெண்டு வருஷம் குடிச்சீங்கன்னா கிட்னி ஸ்டோன் வந்துரும்"

"ஆட்டோக்காரங்க, பஸ் கண்டக்டர் எல்லாம் மரியாதயில்லாம பேசுவாங்க.."

"இந்த அருமையான கோவை க்ளைமேட்டை விட்டுட்டு எங்க போறீங்க?"

அவன் பயணத் தீர்மானத்திலும், திட்டத்திலும் ஓட்டை போட நினைக்கும் வார்த்தைகள் நாலாப் பக்கமிருந்தும் வந்தன. அவன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. கனத்த மனதுடன் பிரயாணித்தான் என்பதால் கோவைக்கும் சென்னைக்குமான தூரம் தீராமல் ஒரு முடிவிலியாகப் போய்க்கொண்டிருந்தது போல உணர்ந்தான்.

சென்னைக்கு வந்ததும் முதலில் தோன்றியது உடனே ஊருக்குத் திரும்பிப் போய்விடவேண்டும் என்பதுதான்.

"ஒரு வருஷம் இருந்திட்டீன்னா அப்றம் இந்த ஊர விட்டுப் போகமாட்ட.."

இதைச் சொன்ன நண்பரின் வார்த்தைகளை இப்போது மறுபடியும் அசைபோட்டான். உண்மைதான். ஒரு வருஷம் தாக்குப் பிடிக்க முடியுமா என்று சந்தேகமாகத்தான் இருந்தது. ஆனால் சென்னை அவனை நல்ல முறையில் சுவீகரித்துக் கொண்டது. சென்னை வெயில் பழகிவிட்டது. மக்கள் பழகிவிட்டார்கள். சென்னையின் புவியியல் பழகிவிட்டது.

பதினாறு வருடங்கள் உருண்டோடிவிட்டன. இத்தனை வருடங்கள் காலண்டரைத் தவிர பெரிதாய் என்ன கிழித்தான் என்று தெரியவில்லை. ஆறு வேலை மாற்றிவிட்டான். ஓரிரு லேசான நில அதிர்வுகள், ஒரு சுனாமி, நகரத்தைக் கிட்டத்தட்ட மூழ்கடித்த ஒரு மழை வெள்ளப் பெருக்கு உட்பட ஆயிரம் அனுபவங்கள். தாடி, மீசை தலைமுடியில் நரை கண்டுவிட்டது. இளம்பெண்களும், பையன்களும் அவனை அங்க்கிள் என்று கூப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். பெருங்குடி டம்ப் யார்டில் (Dump yard) அவன் கொட்டிய குப்பையும் கணிசமான அளவில் சேர்ந்துவிட்டது.

பிறந்ததிலிருந்தே நாடோடியாக இருந்த அவன் 'நீங்க எந்த ஊர்?' என்று யாராவது கேட்டால் ஒரு நொடி தடுமாறுவான். எந்த ஊரில் நீ அதிகமாக இருந்தாயோ அதுதான் உன் ஊர் என்று தனக்குள்ளே ஒரு கான்செப்ட் உருவாக்கிக் கொண்டான். இனிமேல் 'சென்னை' என்றே பதில் சொல்லலாமா என்று யோசிக்கிறான்.