Showing posts with label பொழுதுபோக்கு. Show all posts
Showing posts with label பொழுதுபோக்கு. Show all posts

என்னைச் சுற்றி இத்தனை பறவைகளா?

Common Myna
இதை சென்ற பதிவின் தொடர்ச்சியாகக்கூடக் கொள்ளலாம். நண்பரும், பறவை ஆராய்ச்சியாளரும், புகைப்படக்கலைஞரும் ஆன கௌதம் இன்று வீட்டுக்கு வருகை புரிந்திருந்தார். அவர் கையோடு கொண்டுவந்திருந்த பையில் ஒரு நல்ல பைனாக்குலர் இருந்தது.

மொட்டைமாடியிலும் அருகிலுள்ள ஏரிக்கரையிலும் கொஞ்சநேரம் திரிந்ததில் இன்றைக்குக் கண்ணுற்ற பறவைகள் (நண்பர் உதவியோடு):

1. சிறிய நீர்க்காகம் (Little Cormorant)
2. மாடப்புறா (Blue Rock Pigeon)
3. சிறிய கரும்பருந்து (Black Shouldered Kite)
4. கூழைக்கடா (Spot Billed Pelican)
5. அரிவாள் மூக்கன் (Ibis)
6. இராக்கொக்கு (Night Heron)
7. கருங்கரிச்சான் (Black Drongo)
8. சிறு மீன்கொத்தி (Little Kingfisher)
9. வெண்மார்பு மீன்கொத்தி (White Breasted Kingfisher)
10. தையல் சிட்டு (Tailorbird)
11. ஊதாப்பிட்டத் தேன்சிட்டு (Purple Rumped Sunbird)
12. உண்ணிக்கொக்கு (Cattle Egret)
13. மைனா (Common Myna)

இதுவரை வாழ்நாளில் பார்த்திருந்த பறவைகளின் பெயர்கள் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. பெயர் மட்டுமே கேள்விப்பட்டிருந்த பறவைகளை இதுவரை பார்த்திருந்ததில்லை. பரபரப்பான இந்த நகர வாழ்க்கையில் என்னைச் சுற்றிப் பறக்கின்ற பறவைகளை பொறுமையாய் கவனிக்கவும் அவைகளைப் பற்றி விவரமாகத் தெரிந்துகொள்ளவும் வழிவகுத்த நண்பர் கௌதமுக்கு நன்றிகள்.

தொடர்புடைய பதிவுகள்: 1 | 2

கீட்ஸ் படிச்சிருக்கியா?

கதைகளோ, நாவல்களோ படிப்பது என்பது சும்மா பொழுதுபோக்கிற்காகவா? அல்லது குறிப்பிட்ட எழுத்தாளர்களின் எழுத்து நடைக்கான ஆராதனை அல்லது ஆர்வமா? இலக்கிய (அல்லது கமர்ஷியல்) தாகமா? கதையில் வரும் சம்பவங்களோடு தன் வாழ்வில் எதையாவது பொருத்திப் பார்த்து மகிழ்ச்சி அல்லது துக்கப்படுவதற்கா? அல்லது தன் வாழ்வுக்கெட்டாத, கற்பனை செய்து பார்க்க இயலாத நிகழ்வுகளை கதைகளில் படித்துக் களிக்கிற திருப்தியா? பொது அறிவு வளர்ப்பதற்கா?

இது எல்லாமும் ஆக இருக்கலாம் அல்லது இவற்றில் ஏதாவது ஒன்று. ஆனால் கடைசியில் சொல்கிற பாயிண்டை கவனியுங்கள். பொது அறிவு வளர்ப்பது.

கதைகள், நாவல்கள் படிப்பதால் நம் பொது அறிவு வளருமா என்றால் நிச்சயம் ஓரளவுக்கு வளரும் என்பதற்கான பதிவு இது. எனக்கு கொஞ்சமாய் வளர்ந்திருக்கிறது. குறிப்பாக சின்ன வயசிலிருந்து படித்த வணிக எழுத்தாளர்களின் கதைகள், நாவல்கள் மூலம். பல்வேறு விஷயங்கள் பற்றிய ஞானத்தைப் பெற அவைகள் வெகுவாக துணை புரிந்திருக்கின்றன.

அப்போது பெருமளவில் வந்துகொண்டிருந்த பாக்கெட், மாத நாவல்களை எடுத்துக்கொள்ளுங்கள். (உடனே எடுக்கப் போய்விடாதீர்கள்). ராஜேஷ்குமாரிலிருந்து ஆரம்பித்தால் சுஜாதாவரை ஒரு பெரிய ரவுண்டு வரலாம். இந்த மாதிரி எழுத்தாளர்கள் தாராளமான ஆங்கிலக் கலப்போடு எழுதினார்கள் என்பது வாசகர்களின் வொக்காபுலரி அல்லது ஒக்கபிலேரியை முன்னேற்றப் பயன்பட்டன. நான் சொல்வது அதிகமாய் விஷய ஞானமற்ற வயதில் இவைகளைப் படிப்பவர்களுக்கு (அல்லது படித்தவர்களுக்கு). நான் ஆறாங்கிளாஸ் படிக்கும்போதே அம்புலிமாமா ரத்னபாலாவிலிருந்து ப்ரொமோஷன் ஆகி மாத நாவல்களுக்கு வந்துவிட்டேனாக்கும். அப்போது ராஜேஷ்குமார் “அவன் காரிடாரில் நடந்து வெளியே வந்தான்” என்று எழுதினால் எனக்கு காரிடார் என்ற புதிய வார்த்தை கிடைக்கிறது. அப்போது இவையெல்லாம் நான் கேள்விப்படாத வார்த்தைகளாகியிருந்தது. இப்போதுகூட எங்கேயாவது நீண்ட காரிடாரில் நடக்கும்போது ராஜேஷ்குமார் சிலசமயம் சட்டென்று நினைவுக்கு வருவதுண்டு. இதே போல் சில உதாரணங்களைச் சொல்லவேண்டுமென்றால். (சும்மா படித்த ஞாபகத்திலிருந்து உதாரணத்துக்கு மட்டுமே. சரியான வரிகள் அல்ல)

  • அவன் போர்டிகோவில் காரை செருகி நிறுத்தினான்.
  • அவள் லவுஞ்சில் காத்திருந்த மாதவனை நோக்கிக் கையசைத்தாள்.
  • அந்த விமானம் ஒரு அலுமினியப் பறவை போல மிதந்துவந்தது.
  • ஸ்க்வாட்ரன் லீடர் குமார் கீழே விழுந்தபோது ஒரு பந்துபோல தன்னைச் சுருட்டிக்கொண்டான்.
  • அவன் அவளை நரிமன் பாயிண்டிற்கு வரச் சொல்லியிருந்தான்.
  • வஸந்த் ஒருவித ரிஃப்ளெக்‌ஷ் இயக்கத்தில் செயல்பட்டு உடனே குனிந்துகொண்டான்.
  • அவன் யமஹாவை உதைத்துக் கிளப்பிச் சீறினான்.
  • சோடியம் வேப்பர் விளக்கு வெளிச்சத்தில் அவள் முகம் இன்னும் அழகாக இருந்தது.

மேலுள்ளவற்றில் காணப்படும் வரிகளில் போர்டிகோ, லவுஞ்ச், அலுமினியத்தால் செய்யப்படும் விமானம், ராணுவத்தில் இருக்கிற ஸ்க்வாட்ரன் லீடர் என்ற பதவி, மும்பையின் நரிமன் பாயிண்ட், ரிப்ளெக்ஸ், இந்த மாதிரி புதிய வார்த்தைகள் எல்லாம் ஆறாங்கிளாஸ் தமிழ் மீடியம் படிக்கிற பையனுக்கு எதேஷ்டமான பொது அறிவா இல்லையா? நிச்சயம் நான் யமஹாவையோ, சோடியம் வேப்பர் விளக்கையோ அப்போது பார்த்ததில்லை. அப்புறம்.. மார்ச்சுவரி, போஸ்ட்மார்ட்டம், ஃபாரன்ஸிக், அப்ஜெக்‌ஷன் யுவர் ஆனர், வென்ட்டிலேட்டர், பாயிண்ட் 33 பிஸ்டல், ஸிர்ரஸ் மேகத்தீற்றல்கள், ஜானவாசக் கார், காக்டெயில், ப்ரீஃப்கேஸ், ஃபேக்ஸ், ரிகர்மாட்டிஸ், ரிஸீவர், மவுத் பீஸ், ஹேபியஸ் கார்பஸ், காஸனோவா, சாண்ட்லியர் விளக்குகள், வாய்ஸ் ரெகக்னிஷன், பீத்தோவனின் ஸிம்பனி, ஹாலோகிராம், அப்பெர்ச்சர், வியூஃபைண்டர், ஸாட்டின் பாவாடை இன்னபிற.

இது மட்டுமல்லாமல் மனிதர்களைப் பற்றி, சில பிரபலங்களைப் பற்றித் தெரிந்துகொள்வதும். சுஜாதா ஒரு கதையில் ‘அவன் ஒரு நவீன மெஸ்ஸையா போல தோற்றமளித்தான்’ என்று எழுதியிருப்பார். யாருடா இது மெஸ்ஸையா (
messiah) என்று ரொம்ப நாள் மண்டைக் குடைச்சலாக இருந்தது. கணேஷ் வஸந்திடம் “கீட்ஸ் படிச்சிருக்கியா” என்று கேட்கும்போது ஒரு பிரபல உலகக் கவிஞரைத் தெரிந்துகொள்ள முடிந்தது. (ஆனால் படித்ததில்லை). இந்த வரிசையில் ஷெல்லி, பைரன் எல்லோரும் அடிக்கடி வருவார்கள்.

நான் சென்னைக்கு வரும் முன்பே இந்த நகரம் எனக்குப் பரிச்சயமான இடமாகத் தோற்றமளித்ததற்குக்கூட மேற்கூறிய எழுத்தாளர்களுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. பொதுவாக அநேக கதைகள், மாத நாவல்கள் சென்னையைக் களமாக வைத்து எழுதப்பட்டன என்கிற வகையில் மிகக் கொஞ்சமாக அதன் பேட்டைகளைப்பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது. ‘அவன் தேனாம்பேட்டை சிக்னலைக் கடந்து...’ அல்லது ‘மெரீனாவில் கண்ணகி சிலையருகே காத்திருந்தான்’ ‘மவுண்ட் ரோட்டில் ஜெமினி மேம்பாலத்துக்கு அருகே அவன் அலுவலகம் இருந்தது’ அல்லது ‘எலியட்ஸ் பீச்சின் மணலில் இருவரும் நடந்தார்கள்’ அல்லது ‘தம்புச் செட்டி தெருவில் உள்ள அவன் அலுவலகத்துக்குப் போனபோது...’ அல்லது ‘ஹிக்கின் பாதம்ஸின் அருகே காரை நிறுத்தினான்’ ‘கொத்தவால் சாவடிக்கு இடது பக்கமாக பைக்கை வளைத்துத் திருப்பினான்’ - இவை போதாதா சென்னையைப் பற்றி சும்மா போகிற போக்கில் தெரிந்து கொள்வதற்கு? (சென்னை கொத்தவால் சாவடி மார்க்கெட்டை கோயம்பேட்டுக்கு மாற்றின விஷயத்தை மக்களுக்கு அறிவிக்கும் விதமாக “கொத்தால் சாவடி லேடி நீ கோயம்பேடு வாடீ..” என்ற பொது அறிவுப்பாடலை கேட்டிருக்கிறீர்களா?).

மேலும் ராஜேந்திரகுமார், புஷ்பா தங்கதுரை, சாண்டில்யன் கதைகளின் மூலம் கொஞ்சமாய் ‘அந்த’ அறிவு வளர்ந்ததையும், பட்டுக்கோட்டை பிரபாகரின் ஹீரோயின் சுசீலாவின் பனியன் வாசகங்கள் (I like Tennis, because they play with two balls) மூலம் டென்னிஸ்-ஸில் இரண்டு பந்துகளை வைத்து விளையாடுவார்கள் என்கிற மகா அறிவு கிடைத்ததையும் சொல்லியாக வேண்டும்.

வணிக எழுத்துக்களில் மட்டும்தான் என்றில்லை. இன்றைக்கும் ஆதவன் எழுத்துக்களைப் படித்தால் ஒரு அலுவலகத்தின் இயக்கம், அன்றைய ஹாலிவுட் ஹீரோக்கள், ஹீரோயினிகள் (ஆட்ரே ஹெப்பர்ன்), டெல்லியின் இடங்கள் என்று எத்தனையோ விஷயங்கள் தெரிந்துகொள்ள முடிகிறது. எவ்வகை எழுத்தாளராக இருந்தாலும் அவர்கள் கதையினூடாக லேசாகத் தெளித்துவிடும் விவரங்கள் இது மாதிரி நிறைய இருக்கும்தான்.

இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் நான் என்ன சொல்ல வந்தேன் என்று புரிவதற்கு இத்தனை போதும் என்று நினைக்கிறேன். படிப்பது என்பது நிச்சயம் அறிவை வளர்க்க உதவும் செயல். நிறைய ஆங்கில புத்தகங்களாகப் படித்துத் தள்ளியிருந்தால் இதைவிட மேம்பட்ட விஷயங்கள், விவரங்கள் எத்தனையோ கிடைத்திருக்கலாம்தான். நான் அதிகம் படித்தது தமிழ் புத்தகங்கள்தான். எனக்கு இப்போதிருக்கிற அறிவின் ஒரு பகுதி நிச்சயம் சின்ன வயசில் படித்த தமிழ் கதைகள், நாவல்களால் வந்ததுதான் என்று நிச்சயம் சொல்லமுடியும். நீங்களும் கூட இதை உணர்ந்திருப்பீர்கள். இல்லையா?

கதை படிக்கிற குரல்

ஒரு லோக்கல் வாராந்தர நியூஸ் பேப்பரில் இந்த சின்ன வரி விளம்பரத்தைக் கண்டேன்.

"Wanted a lady to read novels in Tamil to an elderly gentleman. Clarity and good voice essential. Hours required 10 am to 11.30 or 3.30 to 5.00, 6 times a week. Kindly ring ......"

லேசான ஆச்சரியமும் நிறைய கேள்விகளும் எழுந்தன.

இதை ஒரு ஓய்வு பெற்ற கனவானின் பொழுது போக்கு அம்சமாய் மட்டுமே எடுத்துக் கொள்ளமுடியுமா என்று தெரியவில்லை. தமிழில் கதை, நாவல் படிக்க விரும்புகிறார். அதுவும் வாரத்துக்கு 6 நாட்கள், குறைந்த பட்சம் ஒன்றரை மணி நேரம். ஓய்வு நாட்களில் தன்னை எந்த வகையிலாவது பிஸியாக வைத்துக் கொள்ள அந்த முதியவரே செய்து கொள்கிற ஏற்பாடா? இல்லை மகன், மகள், மனைவி என்று வேறு யாராவது அவருக்காக எடுத்துக் கொண்ட முயற்சியா? அவருக்குத் தமிழ் தெரியாதா? அல்லது தெரிந்தும் படிக்க சோம்பேறித்தனமா? அல்லது வேறு காரணங்களா? ஏன் அவருக்கு ஆண் குரல் வேண்டாம்? எந்த மாதிரி தமிழ் நாவல்கள்? ராஜேஷ்குமாரா, பட்டுக்கோட்டை பிரபாகரா, சுஜாதாவா? அல்லது ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போல இலக்கிய நாவல்களா? சாண்டில்யன், கல்கி? எதுவானாலும் படிப்பதோ படிக்கச்சொல்லிக் கேட்பதோ நல்ல விஷயம்தான்.

ஈஸிச் சேரில் கண்ணை மூடிச் சாய்ந்து கொண்டு ஒரு பெண்மணி பக்கத்தில் உட்கார்ந்து கணீர் என்ற குரலில் கதை படிக்க, அந்த கதா பாத்திரங்களை உள்வாங்கிக் கொண்டு அவர் ஒரு புது உலகிற்கு சஞ்சரிக்கிற காட்சி ஓடுகிறது.

“அந்த பாராவை மறுபடி படி(ங்க)”
“சுத்த இழுவையா இருக்கே. இந்த நாவல் போதும். அடுத்ததைப் படிக்கலாம்”.
“மணி பதினொன்னரை ஆயிருச்சா? சரி ’தொடரும்’ போட்ரலாம். நாளைக்கு வாங்க.”
“என்ன இன்னிக்கு குரல் கரகரங்குது? த்ரோட் இன்ஃபெக்‌ஷனா?”

என்னுடைய ரிடையர்மென்ட் காலத்தை எப்படி பிஸியாக வைத்துக் கொள்ளப் போகிறேன் என்கிற யோசிப்பை கிளறிவிட்டது இது.

வர்ணமயமான வாழ்க்கை

என் எழுத்தாள நண்பர்கள் எழுதின புத்தகங்களை சும்மா எடுத்துப் புரட்டிக்கொண்டிருந்தபோது அதில் ஐந்தாறு புத்தகங்களின் அட்டையை நான் வடிவமைத்திருந்ததைப் பார்த்தேன். ரொம்ப மோசம் என்று சொல்லமுடியாமல் சுமார் ரகத்தில் இருந்தன அவை. கோவை ஞானியின் ’தமிழன் - வாழ்வும் வரலாறும்’ என்கிற சின்ன புத்தகத்திற்கான அட்டைப்படம்தான் முதல் முயற்சி. அதில் நான் வரைந்து கொடுத்த ஒரு ஓவியம் அட்டையாய் வந்தது.


ஃபோட்டோஷாப் என்கிற வஸ்து என் வாழ்வில் வந்ததற்கப்புறம் கிரியேட்டிவிட்டியை கையாள்கிற விஷயம் சுலபமாய்ப் போய்விட்டது. அதை நான் முதன் முதலில் உபயோகித்து உருவாக்கினது பாலைநிலவனின் “கடல்முகம்” கவிதைத் தொகுப்பின் முகப்பு. அதற்கப்புறம் சில பல அட்டைகள். ஒரு நல்ல கிராஃபிக் டிசைனராக நண்பர்கள் வட்டாரத்தில் அறியப்பட்டிருந்தேன் என்பது இந்த மாதிரி வடிவமைப்பு வாய்ப்புகளுக்கு ஆதாரமாய் இருந்தது.

சின்ன வயதில் கையில் கிடைத்த பேப்பரிலெல்லாம் எதையாவது கிறுக்கிக் கொண்டிருப்பேன். அப்பாவிடம் லோடு லோடாக திட்டுவாங்க அதுவே போதுமானதாக இருந்தது. ஒரு பதினைந்து வயதிற்கப்புறம் திடீரென பெண்களின் முகங்களை வரைவதின்பால் ஒரு நாட்டம் ஏற்பட்டது. பென்சில், கரி, பேனா, சாக்பீஸ் என்று எது கிடைத்தாலும் குறைந்தபட்சம் ஒரு பெண்ணின் கண்களையாவது வரைந்துவிடுவது என்பது ஒரு பழக்கமாகவே ஆகியிருந்தது. பொம்பளைப் படம் வரைவதைத் தவிர வேறு எதுவும் இவனுக்கு உருப்படியாகத் தெரியாது என்பது அப்பாவும் தன் தினசரி கண்டனக் கடமையை தவறாமல் செய்து கொண்டிருந்தார். நாங்கள் குடிபோகிற வீடுகளிலெல்லாம் சமையலறை சுவற்றில் ஒரு பெண்ணின் முகத்தை பென்சிலால் தீட்டி வைத்திருப்பேன். (அப்பா அதிகம் நுழையாத இடம் அது ஒன்றுதான் என்பதால்). இப்போதுகூட என் வீட்டு வரவேற்பறை ஹால் சுவற்றில் அதுபோல ஒன்றை நீங்கள் பார்க்கலாம். இப்போது பையன் “என்னை wall-ல scribble பண்ணக்கூடாதுன்னு சொல்லிட்டு நீ மட்டும் ஏன் பண்றே?” என்று திட்டுகிறான். ஆக இரண்டு தலைமுறைகளாக எதிர்ப்பு தொடர்கிறது.

நண்பர்கள் நடத்தின கீதம் என்கிற கையெழுத்துப் பிரதிகள் என் கிராஃபிக் டிசைன் திறமையை பட்டை தீட்டிய முதல் கல். வெள்ளைத்தாள்களில் கதைகளுக்கும் கவிதைகளுக்கும் ஓவியம் வரைந்து பள பளா பத்திரிக்கைகளிலிருந்து படங்கள் கத்தரித்து ஒட்டி, பார்டர் போட்டு லே-அவுட் எல்லாம் செய்து வெளியிட்ட காலத்திலிருந்து இந்த டிசைனிங் ஆர்வம் படிப்படியாக வளர்ந்து ஒரு நாள் இன்ஜினியரிங் துறையிலிருந்து என்னைக் கழற்றி விளம்பரக் கம்பெனியின் வாசலில் வீசிவிட்டது.

விளம்பரக் கம்பெனிகளுக்கு வருவதற்கு முன்னால், ஒரு எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனியில் மெக்கானிக்கல் இன்ஜினியராக (!) முதன் முதலாக கணினியில் நான் கற்றுக்கொண்டது ஆட்டோ கேட் (AutoCad) என்கிற மென்பொருள். அதில் பிள்ளையார் சுழிக்குப் பதில் முதன் முதலில் ஒரு பெண்ணின் முகத்தை வரைந்து முதலாளியிலிருந்து ஆஃபீஸ் பையன் வரை பாராட்டு வாங்கி காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டேன். ஆனால் அதையே செய்து கொண்டிருந்தால் சம்பளம் கிடைக்காதென்பது புரிந்து வேறு வழியில்லாமல் இன்ஜினியரிங் ட்ராயிங்கும் போட்டுத் தொலைக்க வேண்டியிருந்தது.

இந்த கிராஃபிக் டிசைன் மற்றும் மல்டிமீடியா என்கிற இந்த கிரியேட்டிவ் துறைக்குள் நான் எப்படி அடியெடுத்து வைத்தேன் என்று ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் ஓட்டிப் பார்த்தேன். நிறைய விஷயங்கள் அலையடித்தன. கோயமுத்தூரில் True illusions Graphics & Animations Private Limited என்ற பெரிய பெயர் கொண்ட ஒரு விளம்பர நிறுவனம்தான் முதன் முதலில் என்னை சுவீகரித்து இந்தத் திசையில் என் பயணத்திற்கு உதவியது எனலாம். “உங்களுக்கு கோரல்ட்ரா (CorelDraw) தெரியுமா?” என்று இன்டர்வ்யூவில் என்னைப் பார்த்து கேட்ட அந்த நிறுவன நிர்வாக மேலாளரிடம் “ஓ! நன்றாய்த் தெரியும்” என்று நான் அப்பட்டமாய் சொன்ன பொய்யினால்தான் இந்த திருப்பம் நிகழ்ந்தது. (இந்த ரகசியத்தை அப்புறம் அவரிடம் சொல்லிவிட்டேன்).

கிட்டத்தட்ட பதிமூன்று வருடங்களாக இந்தக் குதிரை ஓடிக்கொண்டிருக்கிறது. அல்லது ஓட்டிக்கொண்டிருக்கிறேன். WANTED என்று 5 செ.மீ x 2 காலத்திற்கு கட்டம் கட்டின தினத்தந்தி விளம்பரங்களிலிருந்து ஆரம்பித்து பின்னர் Brand Identity, Print Design, மல்டிமீடியா, இணையதள வடிவமைப்பு (web designing), eLearning, Deskop GUI என இந்த ஏரியாவின் அநேக இடங்களிலும் கால் பதித்தாயிற்று. அடுத்த கட்டத்துக்கான நகர்தலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

நேற்று http://www.thefwa.com என்ற வலைத்தளத்தை மறுபடி மேய்ந்துகொண்டிருந்தபோது எல்லாவற்றையும் ஆரம்பத்திலிருந்து ஒழுங்காய் கற்றுக்கொண்டு வரவேண்டும் என்று தோன்றியது.

சண்டை

முன்னொரு காலத்தில் சினிமாக்களில் எம்.ஜி.ஆர், சிவாஜி என்றழைக்கப்படும் நடிகர்கள் வாழ்ந்து வந்தார்கள். சினிமாவில் எங்கெல்லாம் எப்பொழுதெல்லாம் அக்கிரமக்கார்கள் அப்பாவிகளுக்கு வஞ்சனையால் அநீதியிழைக்கிறார்களோ, அங்கெல்லாம் குதிரை, ரிக்ஷா போன்ற கிடைக்கிற வாகனங்களில் கடுகி விரைந்து வந்து வானத்தில் எம்பிக் குதித்து அக்கிரமக்காரர்களை உதைத்து பூமியில் உருட்டிவிட்டார்கள். சாட்டை, பட்டாக்கத்தி, வாள், வேல் முதலான சாமானியர்கள் கையாள்வதற்கியலாத ஆயுதங்களை அநாயசமாக கையாண்டு சளைக்காமல் சண்டையிட்டார்கள். அடிபட்டு விழுந்தாலும் வில்லனை நோக்கி ஒரு அலட்சியப் பார்வையை வீசிவிட்டு இதழ்கடையோரம் அரும்பிய உதிரத்தை வலது கை கட்டை விரலால் ஸ்டைலாக துடைத்துவிட்டு முழு வீச்சோடு பாய்ந்தார்கள். இறுதியில் தன் சக்தியையெல்லாம் இழந்து கீழே குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கும் பகைவனின் நெஞ்சில் காலும் அவன் கழுத்தில் கத்தியும் பதித்து ஓரிரு டயலாக் உதிர்த்து அவனை மன்னித்து விடுதலை செய்தார்கள். அல்லது உத்தரத்தை நோக்கிச் சுட்டுக்கொண்டே கடைசி காட்சியில் உள்ளே நுழைந்த இன்ஸ்பெக்டரிடம் அவனை ஒப்படைத்துவிட்டு சட்டத்துக்கு காவலர்களானார்கள்.

இந்த மாதிரி காட்சிகளில் கத்திச் சண்டையாயிருந்தால் டிணிங் டிணிங் என்ற சப்தமும், வெறும் கை என்றால் டிஸ்யூம் டிஸ்யூம் என்ற சப்தமும் ஒரு இருபது நிமிடங்களுக்கு இடைவிடாது கேட்டுக்கொண்டிருக்கும். பிண்ணனியில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும்பொருட்டு பாம் பாம் பாம், தடுபுடுதடுபுடுதடுபுடுதடுபுடு என்று இசையமைப்பாளர் ட்ரம்ஸையும் ட்ரம்பட்டையும் உருட்டியவாறிருந்தார். இடையிடையே கதாநாயகர்களின் அருமை வளர்ப்பான குதிரை, அல்லது கறுப்பு நாய் முதலானவை, வில்லனால் கட்டிப்போடப்பட்டிருக்கும் குடும்ப உறுப்பினர்களின் கட்டை அவிழ்த்தோ அல்லது வெடிக்கவிருக்கும் குண்டின் திரியில் சிறுநீர் கழித்தோ தம்மாலான வகையில் நீதிக்குத் துணைபுரிந்தன.

இந்தமாதிரி சண்டைக்காட்சிகளில் திரையரங்கில் கரகோ்ஷங்களும், விசில்களுமாக அதிர்ந்து தூள் பறந்தன. சினிமா அதன் அழகிய பொய்களை, செல்லுலாய்ட் கதாநாயகர்களின் வீரத்தோடு கலந்து உறுத்தாமல் ரசிகர்களுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தது. அவர்களின் மனம் திரையரங்கைவிட்டு வெளியில் வரும்போது மிக உற்சாகமாயிருந்தது.
கமலஹாசன், ரஜனிகாந்த் போன்றோர் வந்தபிறகு வில்லன்கள் சற்று ஆடித்தான் போனார்கள். பின்னே இவர்களுக்கு கராத்தேவும், குங்ஃபூவும் வேறு தெரிந்திருக்கிறதே. செகண்டுக்கு முப்பத்தியிரண்டு குண்டுகள் வீதம் பொழியும் இருபத்துக்கும் மேற்பட்ட இயந்திரத் துப்பாக்கிகளாலும் இவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. சாக்கில் கட்டி கடலில் வீசினாலும் மிதந்து எழுந்து வந்தார்கள். நிஜமான பராக்கிரமசாலிகள்தான். ஆகவே இதுபோன்ற சாகாவரம்பெற்ற கதாநாயகர்களை அடியோடு ஒழித்துக்கட்ட ராக்கெட் லாஞ்ச்சர்களும், க்ரானைடு குண்டுகளும் வில்லன்களுக்கு நிறைய தேவைப்பட்டன. கமலஹாசனுக்கே இப்படியென்றால் மாருதி காரையெல்லாம் ஒற்றைவிரலால் தூக்குகிற சரத்குமார்களை வெறுங்கையால் சண்டையிட்டுக்கொல்வதென்ன சாதாரண விஷயமா என்ன? தயாரிப்பாளர்களுக்கு செலவு இழுக்கத் தொடங்கியது.

சினிமாவில் கொள்ளைக்கூட்டத் தலைவர்கள் மறைந்து, தங்கத்தைக் கடத்துபவர்களின் ட்ராஃபிக் அதிகமாகத் தொடங்கியது. அப்புறம் தங்கம் தீர்ந்துபோய் அதிகம் சிரமமில்லாமல் ப்ரெளன் சுகர். இடைஞ்சலாய் இருக்கிற கதாநாயகர்களை துவம்சம் செய்யப் போன அடியாட்கள் கைகாலில் கட்டுடன் திரும்பி வந்தார்கள். ஆட்கள் போதவில்லை. ஆயுதங்களும். எத்தனை நாள்தான் கஞ்சாவையே கடத்துதென்று அலுத்து சாராயம் காய்ச்சிப் பார்த்தார்கள். அங்கேயும் விஜயகாந்த் எழுந்தருளி மேற்படி சட்டவிரோதக்காரர்களை பக்கத்து மரத்தில் கால் வைத்து எகிறி அடித்தமையால் பேசாமல் அரசியல்வாதியாவதைத் தவிர வில்லன்களுக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது. அரசியலென்றால் எப்படியும் அடியாட்கள் எனப்படுபவர்களையும் கழுத்தில் ஒரு கிலோ சங்கலியணிந்த தாதா என்றழைக்கப்படுகிற அதிபயங்கர வில்லன்களையும் ஏவி கதாநாயர்களின் வீரத்துக்கு சவால்விட ஆரம்பிக்கலாமே. இதன் மூலம் அணுகுண்டை நெஞ்சில் தடுத்து மாண்புமிகு வில்லர்களின்பால் திருப்பியனுப்பும் கதாநாயகனுக்கு அரிவாள் என்கிற ஒரு பயங்கர ஆயுதத்தை அறிமுகம் செய்ததன்மூலம் தமிழ்த்திரை சண்டைக்காட்சி ரசிகர்களை கொஞ்சமாய் நகர்த்தி சீட் நுனியில் உட்கார வைத்தார்கள்.

இப்போது ரசிகன் உற்றுப் பார்க்க... ஸாரி... கேட்க ஆரம்பித்தான். அடடே... அந்த டிஸ்யூம் டிஸ்யூம் சப்தத்தையே காணோமே. அதற்குப் பதில் என்ன இது இடி இடிக்கிற மாதிரி.. ஓ... DTS... அப்படியொன்று வந்துதான் பல நாட்களாயிற்றே..! வருடங்கள் எத்தனை உருண்டிருந்தாலும், எத்தனைதான் நையப் புடைத்து அனுப்பியிருந்தாலும் மறுபடி மறுபடி எதிரே தோன்றுகிற இந்த தாதாக்களை ஒழிக்க நம்மருமை கதாநாயகனுக்கு ஒரேயொரு வழிதான் இருந்தது. அது தப்பித்து ஓடுகிற மாதிரி ஓடி துரத்துகிற அடியாட்களை ஒரு சந்து முனையில் கார்னர் செய்து திரும்பி நின்று எரிமலையை கண்களில் தேக்கி வைத்து முறைப்பது. இந்த இடத்தில் ரீ ரெகார்டிங் அனைத்தையும் நிறுத்திவிட்டு நம் கதாநாயகனின் வலது அல்லது இடது கை விரல்கள் மடங்குவதை ஒரு மாதிரி நெறிபடுகிற சப்தத்துடன் மிக மிக டைட் குளோசப்பில் காட்டவேண்டும். அரை நூற்றாண்டு காலமாக சண்டைக் காட்சிகளில் ஊறித் திளைத்திருந்த ரசிகப் பெருமகனானவன் அடுத்து என்ன நடக்கிறதென்பதை மிக சுளுவாக ஊகித்துக்கொண்டான். கதாநாயகனிடம் முதல் அடி வாங்குகிற அடியாளைப் பார்த்தீர்களா? அந்த முதல் அடி என்பது மிக முக்கியம். அது நாயகன் எப்படிப் பட்டிவன் என்பதற்கான முன்னுரை. திடீரென DTS சர்ரெளண்ட் சவுண்டு ஸ்பீக்கர் தன் அதிக பட்ச இடியை ரசிகனின் காது ஜவ்வுகள் அதிரப் பாய்ச்ச இதோ அடியாள் அந்தரத்தில் 13 கரணம் போட்டு (இது கொஞ்சம் ஸ்லோ மோஷனில் காட்டிவிட்டு) தூரத்தில் ஊருக்கு ஒளி வழங்கும் ட்ரான்ஸ்ஃபார்மர் ஒன்றின்மேல் பொறி தெரிக்க (இது கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஃபாஸ்ட் மேட்ரிக்ஸ் எஃபெக்டில்) வெடித்து விழுந்தான் பாருங்கள். மற்ற அடியாட்கள் தொண்டையில் எச்சில் விழுங்கினார்கள். பின்னே கதாநாயகனும் முன்பு தாதாவாக இருந்ததும் அவனுக்கு இன்னொரு பெயர் இருந்ததும் பின்னர் தெரிய வந்தது.

அதற்கப்புறம் விழந்த ஒவ்வொரு அடியிலும் தியேட்டரில் ரசிகனின் தாடை கிழிந்து தொங்கியது. அவன் ரத்தம் சூடாகி நரம்புகள் ஜிலீர் ஜீலீர் என்று அதிர்ந்தன. அடியா இது. இடி. போததற்கு ஒரு பாட்டி வேறு வந்து கதாநாயகனை உற்சாகப் படுத்தும் வகையில் பாட நிஜமாகவே அவன் ஒரு சூறாவளிக் காற்றென சுழன்று எழுந்தான். க.நா அடியாட்களின் கைகளைத் திருகி வீசுகிற போது எக்ஸ்ரேயில் எலும்புகள் ஒடிவது தெரிந்தன. இந்த கிராஃபிக்ஸ் என்று ஒன்று வந்து சேர்ந்துவிட்டதாமே நடுவில். நல்லதாகப் போயிற்று. இனி தாதாக்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் சிம்ம சொப்பனம்தான். வில்லனைப் பந்தாட விஜய் நடந்துவரும்போது அவர் ஷுவில் பட்டாசு எதுவும் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை. அப்புறம் எப்படி சாணை பிடிப்பது மாதிரி தீப்பொறி பறக்கிறது? ஓ! கிராஃபிக்ஸ். இனி காலைச்சுழற்றி தரையில் புயல்காற்றை உருவாக்கி வில்லன்களை கதிகலங்கச் செய்வது சுலபம். இப்படி எத்தனையோ!

கதாநாயகன் DTS, க்ராஃபிக்ஸ், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மற்றும் எடிட்டிங் துணைகொண்டு முஷ்டி மடக்கி விசிறின ஒவ்வொரு அடியிலும், மண்டை பிளந்து, கைகால் முறிந்து, தாடைச் சதைகள் பிய்ந்துபோய், கழுத்தெலும்பு மளுக்கென்று முறிக்கப்பட்டு, சுவரோடு அடித்துத் துவைக்கப்பட்டு, கண்கள் பிதுங்கி, நரம்புகள் தளர்ந்து உயிர்நாடி ஊசலாடி ஓய்ந்து இருக்கைகளில் கிடக்கிறான், தொன்று தொட்டு குடும்பத்தோடு திரைப்படம் காணவந்து கொண்டிருக்கும் ரசிகன். இதற்கு முன் பார்த்த திரைப்படத்தில் ஒரு சண்டைக்காட்சியினைக் கண்ணுற்று இதயம் நடுங்கி அதிர்ந்து மிகவும் பயந்துபோய் இரவெல்லாம் உளறின தன் குழந்தைக்கு காதில் வைப்பதற்கு பஞ்சோடு இன்றைக்கு "அந்நியன்" என்ற இந்தப் படத்தைக் காண வந்தவனும் கொஞ்சம் நடுங்கித்தான் போய்விட்டான் இந்தத் தடவை. வெளியே வந்தபோது விண் விண் என்று தலை வலித்தது.

வந்த கையோடு இந்த வலைப்பதிவையும் எழுதி வைத்தான். எம்.ஜியாரும் சிவாஜியும் வந்து இந்த DTS என்கிற வில்லனை எப்படியாவது ஒழித்துக்கட்டினால் இனி குழந்தைகளையும் தைரியமாய் சண்டைப்படத்துக்கு கூட்டிக்கொண்டு போகலாமென்று அவனுக்குத் தோன்றுகிறது.

உலகத் தொலைகாட்சி

நான் முதன் முதலில் டி.வி பார்த்தது என் ஒன்பதாம் வகுப்புத் தோழன் நாகராஜ் வீட்டில்தான். என் வீடிருந்த தெருவுக்கு அடுத்த சந்தில், படுத்திருக்கும் ஒரு சில நாய்களைக் கடிவாங்காமல் தாண்டிப் போனால் அவன் வீடு வரும். தரையில் தாருக்குப் பதில் சிமெண்ட் ஸ்லாப்களாகப் பதித்திருக்கும் சந்திலிருந்து செங்குத்தாக ஐந்து படிகள் ஏறினால் அவன் வீட்டின் முன்னறை. அதற்கு நேராய்த் தெரியும் அதற்கு அடுத்த அறையில் அதை வைத்திருந்தார்கள். நீலச்சாம்பல் கலரில், வீட்டுக் கூரையின் ஆண்டென்னா உபயத்தில் அப்போதெல்லாம் தூர்தர்ஷன் மட்டுமே. நிகழ்ச்சிகளைவிட "தடங்கலுக்கு வருந்துகிறோம்"-ஐ அதிகம் ஒலிபரப்பின தொலைக்காட்சி. ஒரு நிகழ்ச்சி முடிந்ததும் கிடைக்கிற இடைவெளியில் ஒரு ரோஜாப்பூ ஸ்லைடு போட்டு லொட் லொட் என்று பட்டறையில் தட்டுகிற சப்தம் மாதிரி ஒரு ம்யூசிக் போடுவார்கள்.

நான் புதன் கிழமையானால் எட்டுமணிக்குத் தவறாமல் போய் அவன் வீட்டு முன்னறைப்படியில் உட்கார்ந்துவிடுவேன். (உள்ளே போகமுடியாதபடிக்கு எக்கச்சக்கமான கூட்டம் இருக்கும்) அங்கிருந்து பார்த்தாலே ஓரளவுக்கு ரிஷிகபூர், ஹேமமாலினி எல்லாம் தெளிவாகத் தெரிவார்கள். சித்ரஹாரைத்தான் சொல்கிறேன். சாட்டிலைட்டிலிருந்து புரியாத ஹிந்திப் பாடல் காட்சிகளை டெக்னாலஜித் தூண்டில் போட்டு இழுத்து திரையில் காண்பிக்கும் அந்தப் பெட்டியை எல்லோரும் வியந்து வியந்து பார்த்துக்கொண்டிருந்த காலம் அது. அதிலும் நீலம் என்று ஒரு நடிகை அடிக்கடி ஏதாவதொரு பாட்டில் வருவது பிடித்துப் போய் வாராவாரம் தவறாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். சித்ரஹார் போட்டாலே நாகராஜ் வீடு நிரம்பிவிடும். அவன் வீட்டை விட்டால் வேறு டி.வி அந்தத் தெருவில் எங்கும் இல்லாதிருந்தது.

டி.வி ஓடும்போது தவறாமல் விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிடுவார்கள். இருட்டுக்குள் நீலத்திரை மட்டும் ஒளிரும். சித்ரஹாரைத்தவிர அடுத்ததாய் அதிக மவுசு உள்ள நிகழ்ச்சியாய் கிரிக்கெட் மேட்ச்தான் இருந்தது. கிரிக்கெட் என்றால் ஒரு கஜம் என்ன விலையாகிறதென்று கேட்பவனாகிய நான், ஹிர்வானி என்ற பட்டையாய் கண்ணாடி போட்ட ப்ளேயர் ஓடி ஓடி வந்து பவுலிங் போடுவதை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். நடுநடுவில் வருகிற "வா்ஷிங் பெளடர் நிர்மா" அப்புறம் கபில்தேவ் வருகிற "பூஸ்ட் - ஸீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி" எல்லாம் எத்தனை தடவை போட்டாலும் பார்ப்பேன். அப்புறம் கணேஷ் வீட்டில் அதைவிட பெரிய டி.வி வாங்கினதும் பெரிய செளகரியமாய் போய்விட்டது. 1. அவன் வீடு நாகராஜ் வீட்டைவிட இன்னும் கிட்டத்தில் இருந்தது. 2. தாண்டவேண்டிய கடிநாய்களின் எண்ணிக்கை குறைவு 3. கணேஷ் வீட்டு உள்ளறையிலேயே சேர் போட்டு உட்கார்ந்து பார்க்கலாம். 4. டி.வி நிகழ்ச்சிகளின் நடுவே அவன் அம்மாவின் அன்பான டீ கிடைக்கும். ஆனால், அதுவும் கருப்பு வெள்ளைதான். தவறாமல் அதற்கும் முகத்தில் ஒரு நீலக் கண்ணாடி அணிவித்திருந்தார்கள். அந்த கணேஷாகப்பட்டவன் பல சமயம் டி.வியை ட்யூன் பண்ணுகிறேன் பேர்வழி என்று புஸ் என்று சப்தத்துடன் எப்போதும் புள்ளி புள்ளியாய் ஓடவிடுவான். அது ஓரளவு அட்ஜஸ்ட் ஆகி திரையில் காட்சி தெரிவதற்கு ஒரு அரைமணி ஆகிவிடும். அவன் வீட்டு டிவியில் புள்ளிகளைத்தவிர என்னெல்லாம் பார்த்தேன் என்று தெள்ளத் தெளிவாக ஞாபகமில்லை. அசுவாரஸ்யமாகப் பாரத்த ஓரிரு கிரிக்கெட் மேட்ச்கள் மட்டும் ஞாபக நிழலில் துண்டு போட்டு உட்கார்ந்திருக்கின்றன.

கொஞ்சநாள் கழித்து ஜாகை மாறி வேறு ஊருக்குப் போனபோது டி.வி என்கிற வஸ்துவின் உள்ளடக்கம் பொருளடக்கம் எல்லாம் மாறியிருந்தது. தூர்தர்ஷனில் ஒளியும் ஒலியும் என்று ஸ்லைடுபோட்டு வெள்ளிக்கிழமை அமர்களப்பட ஆரம்பித்தது. பெண்கள் அன்றைக்கு எட்டு மணிக்குள் அவசரமாய் கோவிலுக்குப் போய்விட்டு பறந்தோடி வீட்டுக்கு வர ஆரம்பித்தார்கள். டி.வி வைத்திருந்த பக்கத்துவீட்டுப் புண்ணியவான்கள் தயவில் கமலும் ரஜினியும் வீட்டுக்கு வந்துவிட்டுப்போனார்கள். நிகழ்ச்சிக்கு இடையிடையே ஸ்டேஷனில் ஒளி, ஒலி இரண்டும் கட்டாகும். முன்பு சொன்னதுபோல், தடங்கலுக்கு வருந்துவதாக தகரத்தட்டல் பிண்ணனி இசையோடு ஸ்லைடு போட்டுவிட்டு விட்ட இடத்திலிருந்து தொடர்வார்கள். டி.வியில் ஒலியும் ஒளியும் மட்டுமல்லாது ஞாயிறு மதியம் 1 மணிக்கு NFDC படங்கள் ஒலிபரப்பாகின்றன என்று தெரிந்தபிறகு எங்கள் ரசனை நரம்புகள் உசுப்பப்பட்டு அதையெல்லாம் நண்பர்கள் குழாமுடன் விழுந்து விழுந்து பார்க்க ஆரம்பித்தோம். இதில் பெரும்பாலும் மலையாள நடிகர் கோபி நடித்த கலைப்படங்கள். வாழ்க்கையில் நிறைய பொறுமையை கற்றுக்கொண்டது இந்த காலகட்டத்தில்தான் என்று சொல்லலாம். (ஒரு படத்தில் கோபி ஒரு பூங்காவின் இந்த கேட்டிலிருந்து அந்த கேட் வரை பதினைந்து நிமிடம் நடந்து கடந்ததை உதாரணத்துக்குச் சொல்லலாம்.) கலைப்படங்கள் பார்ப்பதற்கான வயது அது அல்ல என்பதனால் அவைகளை ரசிக்க முடியாமல் மனதில் ஒட்டாமல் போய்விட்டன.

எல்லோர் வீட்டிலும் டி.வி வந்துவிட்டதே என்று குமார் எலெக்ட்ரானிக்ஸ்க்கு போய் ஃபிலிப்ஸ் போர்ட்டபிள் கருப்பு வெள்ளை ஒன்றை பூஸ்டருடன் சேர்ந்து என் அப்பாவும் வாங்கிவந்துவிட்டார். அன்றைக்கு மொட்டை மாடியில் ஒரு மிக நீளமான இரும்பு பைப்பின் உச்சியில் ஆன்டென்னாவை மாட்டுவதற்குப் பட்ட பாடு நன்றாய் ஞாபகமிருக்கிறது. பைப்பின் தலையில் ஆன்டென்னாவை மாட்டிவிட்டு அப்படியே புவியீர்ப்பு விசைக்கு எதிராய் அதை தூக்க வேண்டும். ஒரு கழைக்கூத்தாடியின் லாவகத்துடன் பாலன்ஸ் செய்து அது சரிந்து மண்டையில் விழுவதற்கு முன்பாக மொட்டைமாடிக் கைப்பிடிச்சுவரில் அடிக்கப்பட்டிருக்கும் க்ளாம்ப்-ல் சட்டென்று மாட்டிவிட வேண்டும். இப்படியாக எங்கள் வீட்டிலும் டி.வி.

அதற்கப்புறம் உலகம் படுவேகமாக சுருங்க ஆரம்பித்தது. ஆன்டென்னாவை கேரளத்தின் திசை நோக்கித் திருப்பினால் ஒளியும் ஒலியும் மற்றும் சித்ரஹாருக்கு கொஞ்சமும் குறைவில்லாத "சித்ர கீதம்" தெரிகிறது என்பதை என் அப்பா R&D பண்ணிக் கண்டுபிடித்தார். திருவனந்தபுரம் சேனல். வியாழக்கிழமை எட்டு மணிக்கு! ஆக கொஞ்சம் கொஞ்சமாய் எல்லோருடைய நேரத்தையும் சாப்பிட ஆரம்பித்தது டி.வி. நடுநடுவே Turning Point, The world this week போன்ற உருப்படியான நிகழ்ச்சிகள். ரேணுகா சஹானே மற்றும்... ம்ம்.. இன்னொருவர் பெயர் மறந்துவிட்டது... அவர்களிருவரும் சேர்ந்து நடத்திய "சுரபி" நான் வெகுவாக விரும்பிப் பார்த்த ஒன்று. அப்புறம் ்ஷாருக் கான் நடித்த ஃபாஜி மற்றும் சர்க்கஸ் என்ற ஸீரியல்கள். பங்கஜ் கபூர் நடித்த ஒரு சோக ஸீரியல். R.K. நாராயணின் மால்குடி டேஸ். மோகன் கோகலே நடித்த "மிஸ்டர் யோகி", திலிப்குமார் என்கிற ஒரிஜினல் பெயரில் ஏ. ஆர். ரஹ்மான் டைட்டில் மியூசிக் போட்ட உகாதி புரஸ்கார், அடிக்கடி ஒலிபரப்பின பூபேந்தர் சிங், மிடாலி கச்சேரி (பின்னாளில் இளையராஜா இந்த மிடாலியை "தளபதி" படத்தில் பாடவைத்ததற்கு நான் உளமாற பூரிப்படைந்தேன்), இடையிடையே ரெமோ ஃபெர்னாண்டஸ் பாப், ஜாவத் ஜாஃப்ரி நடனம் என்று கலவையாய் ஒரு மாதிரி பார்த்த வரைக்கும் நிறைவாகவே இருந்தது. டி.வியை மிக விரும்பிய காலகட்டம் அது. அருகில் போனால் அந்தக்கால ப்ளாக் அண்ட் ஒயிட் டி.விக்கு ஒரு வாசனைகூட இருந்ததாக ஒரு உணர்வு. பிரமையா என்று தெரியவில்லை. அதன் சேனல் செலக்டரை கடக் கடக் என்று திருப்பிப் பார்ப்பதில்கூட ஒரு சுகம் இருந்தது.

ராமாயணம், மகாபாரதம் என்று மெகா சீரியல்கள் ஆரம்பித்தபிறகுதான் டி.வி தன் உண்மையான சொரூபத்தைக் காட்ட ஆரம்பித்தது. அப்புறம் சந்திரகாந்தா வந்தவுடன் வில்லனின் யக்க்கூ யக்க்கூ என்ற கூவல் கேட்டது. ஜூனூன் வந்து ரசிகப் பெருமக்களைப் புரட்டிப்போட்டதில். தமிழகத்திற்கு புதிய தமிழ் கிடைத்தது. அப்புறம் சேனல்கள் ஒன்றாகி இரண்டாகி பல்கிப் பெருகத் தொடங்கின. அபாயமான உடைகளில் M டிவியில் 11 மணிக்குமேல் மாவு அரைக்க ஆரம்பித்தார்கள். ஆங்கில எழுத்துக்களின் அத்தனை எழுத்துகளிலும், அத்தனை கோள்களின் பெயரிலும் சேனல்கள் வர ஆரம்பித்தன. டெலிபோனில் கால்போட்டு பிடித்தபாட்டு கேட்க ஆரம்பித்தார்கள் மக்கள். கால்மேல் கால்போட்டு திரைப்பட விமர்சனம். நன்கு சூடான தோசைக்கல்லில் ஒரு டம்ளர் தண்ணீரை விசிறி அடிக்கும்போது எழும் சப்தம் மாதிரி துவக்க ம்யூசிக் போட்டு பயமுறுத்துகிற குரலில் தலைப்புச் செய்தி சொன்னார்கள். விளம்பர இடைவேளைகள் அதிகமாயின. டி.வியை தூரத்திலிருந்தே இயக்கிக்கொள்கிற வசதி வந்ததற்கப்புறம் மனிதன் இன்னும் அலைபாய ஆரம்பித்தான். 100 சேனல்கள் அவனுக்குப் போதவில்லை. இப்போது திரும்பின பக்கமெல்லாம் ஒளியும், ஒலியும்தான். தோசைமாவு, முறுக்குக் கம்பி, பேரீட்சம்பழத் தயாரிப்பாளர்கள் நிகழ்ச்சிகளுக்கு உபயதாரர்களாக ஆனார்கள். இடுப்பு வெட்டுகிற குத்துப்பாட்டுகளும், உதட்டு முத்தமும், நீர்வீழ்ச்சியில் உடல்கள் நனைந்த டூயட்டும், மேலாடை துறந்த ஃபேஷன் சேனல்களும் நம் அருமைக் குழந்தைகளுக்கு காணக்கிடைத்தன. வீடுதோறும் சீரியல்களின் ஒப்பாரி. காமெடி ஷோக்களில் நாம் சிரிப்பதற்கு வேலை வைக்காமல் அவர்களே ரெகார்டட் சிரிப்பலையை கூடவே ஒலிபரப்பிவிடுகிறார்கள். உலகத்தொலைகாட்சிகளில் முதன்முறையாக திரைக்கு வந்து சில தினங்களே ஆன படத்தை போட்டு ஐந்தே மணிநேரத்தில் முடித்துவிடுகிறார்கள். பெண்களை கும்பலாய் ஆடவிட்டு ஜவுளிக் கடல் விளம்பரங்கள் எடுக்கிற யுக்தி நமக்கு பழகிவிட்டது. நவரத்தினக்கல், வாஸ்து, எண்கணிதம் என்று திரையின் ஒவ்வொரு சதுர செ.மீ பரப்பையும் வாடகைக்கு விட்டுவிட்டார்கள். சினிமாவை, சினிமா உலகத்தைப் பொடிபண்ணி திரைக்கு வெளியே தூவுகிறது சேனல்கள். ரசிகப்பெருமக்கள் விழுந்துகிடக்கிறார்கள்.

நான் விளம்பரத் துறையில் இருந்தபோது அங்கு "Black Box" என்று வீடியோ கேஸட்டுகள் இருக்கும். இந்திய, அகில உலக நாடுகளில் எடுக்கப்பட்ட அருமையான விளம்பரப்படங்கள் அடங்கின கேஸட் அது. அது ஓட ஆரம்பிக்குமுன் டைட்டிலில் "Advertisements without the interruption of stupid programs" என்று போடுவார்கள். நான் அந்த ஹாஸ்யத்தை ரசித்திருக்கிறேன்.

இப்போது என்னிடம் ஒரு நல்ல கலர் டி.வி இருக்கிறது. ரங்கநாதன் தெரு முக்கில் வாங்கின ப்ளாஸ்டிக் கவர் அணிவித்த ரிமோட் இருக்கிறது. எப்போதாவது நேரம் கிடைத்தால் நல்லதும் கெட்டதுமாய் வண்டி வண்டியாய் கொட்டிக்கிடக்கிற அத்தனை சேனல்களினிடையே சிலவற்றைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கிறேன். அதில் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது. எது எப்படியிருந்தாலும் நான் முதன்முதலில் தரிசித்த மற்றும் ஸ்பரிசித்த அந்த முதல் டி.வியின் வாசனையை இப்போது உணரமுடியவில்லை.

ஜீவித்திருப்பவர்கள்

சென்னையில் வசிப்பவர்களுக்கு, அதுவும் கடலிலிருந்து ஒரு பத்து கிலோமீட்டர்களுக்குள் வசிப்பவர்களுக்கு ஒரு செளகரியம் உண்டு. நினைத்தவுடனே அவரவர் செளகரியத்திற்கேற்ப ஏதாவதொரு வாகனத்தில் பயணித்து சடுதியில் கடற்கரையை அடைந்து கால் நனைத்துவிடலாம். கடற்கரை ஒரு அழகான பொழுது போக்கிடம். பெரியவர்கள் விரும்பினால் தங்கள் குழந்தைகள் சார்பாக ஒரு பட்டம் வாங்கிக்கொண்டு மணலில் ஒரு ஓரமாய் உட்கார்ந்து மீண்டும் குழந்தையாகி மகிழலாம். நானும் சில சமயம் அப்படியே. சென்னைக்கு வந்த இந்த நாலு வருஷத்தில் எத்தனை முறை கடற்கரைக்குச் சென்றேன் என்று கணக்கில்லை. கடற்கரைக்கு இன்னும் கொஞ்சம் பக்கமாய் வீடு மாறியபின் அநேக ஞாயிற்றுக் கிழமைகள் வண்டியை எடுத்துக்கொண்டு மெரீனாவுக்குப் போய்விடுவது வழக்கம். வார நாட்களில் கூட ஒரு சில நண்பர்களைச் சந்திக்கும் பொருட்டு இரவு எட்டு மணிக்குமேல்கூட அடிக்கடி அங்கே போவதுண்டு.

கடற்கரைக்குப் போகிற சமயங்களில் இருட்டுவதற்கு முன் சமுத்திரத்தை ஒரு முறை தரிசனம் பண்ணிவிடுகிற ஆசை எப்போதும் மேலோங்கியிருக்கும். அப்படி வாய்ப்பு அமைந்தால் என் நாலு வயசு வாண்டை மகிழ்விக்கிற சாக்கில் நானும் கொஞ்சம் அலைகளில் விளையாடுவதுண்டு. பேண்ட்டை மேலே சுருட்டிவிட்டுக் கொண்டு இறங்கி அவன் விரல்களை இறுகப் பிடித்துக் கொண்டு, முழங்காலளவு வந்து திரும்புகிற அலையில் காலடியில் மணல் சரசரவென்று நழுவ, பாதங்கள் புதைகிற அபத்திர உணர்வில் இருவரின் கைப்பிடியும் இறுகும். சில நேரம் எதிர்பாராமல் மிகப் பெரிய அலை வந்து அவனை முழுதாகவும் என்னை முகம் வரையிலும் நனைக்கிற போது உற்சாகத்தில் "க்ரீச்" என்று அருகாமை ஜனங்கள் நடுங்கிப் போகுமளவு கத்துவான். கடற்கரைக்கு போகும்போதே இருட்டியிருந்தால் இந்த விளையாட்டு ஆசையையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, வந்து திரும்பும் அலையின் மிஞ்சிய நுரையில் லேசாய் செருப்பை நனைப்பதோடு சரி. ஞாயிற்றுக் கிழமைகளில் அலைகடலென(!) திரண்டிருக்கிற கூட்டத்திற்கு கடலும் அலைகளும் ஒரு வேடிக்கைப் பொருளாக, ஒரு எக்ஸிபிஷன் தன்மையுடன் இருப்பதாக நான் எப்போதும் நினைத்துக்கொள்வேன்.

கடல் எல்லோருக்கும் பிடிக்கிறது. கடல் நீரில் கால் நனைப்பது, கடற்கரையில் கடலை சாப்பிடுவது, கடலின் விளிம்பில் உட்கார்ந்து கொண்டு காதல் பண்ணுவது, கடல் மணலில் கால் புதைய பேசிக்கொண்டே நடப்பது அல்லது வெறுமனே வேடிக்கை மட்டும் பார்ப்பது என எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் அல்லது எல்லா விதத்திலுமே கடலின் அருகாமை மிகப் பிடித்தமானதாக இருக்கிறது. எனக்கு கடலின் தூரத்து நேர்கோட்டு விளிம்பில் பார்வையை செலுத்தி எதையாவது யோசித்துக்கொண்டிருப்பது பிடிக்கும். கற்பனைக்கெட்டாத அதன் தூரம், ஆழம், அது மறைத்து வைத்திருக்கிற உயிரின ரகசியங்கள் எல்லாம் யோசிப்பின் தீவிரத்தில் ஆச்சரியங்களாய் விரியும். மனிதனின் பிரபஞ்ச எல்லையைப் பற்றிய வியப்பின் ஒரு மினியேச்சர் மாதிரிதான் இது. ஞாயிற்றுக்கிழமை அல்லாத மற்ற வார நாட்களில் மெரீனாவில் கடலுக்கு இன்னொரு முகம் இருப்பதுபோல் தோன்றும். அதிகம் கூட்டமில்லாமல், தன் பாட்டுக்கு ஏதோ யோசனையோடு அமைதியாய் வந்து போகிற அலைகள். அந்த எக்ஸிபிஷன் தன்மை இல்லாதிருப்பதுபோல் அல்லது கொஞ்சம் குறைந்திருப்பது போல் தோன்றும். அதுவும் இருட்டில் தூரத்துக் கப்பல் விளக்குகளோடு சேர்ந்து பார்க்கும் போது கருமை படர்ந்த கடலின் அமைதி மனதை என்னவோ செய்யும். அலைகளின் லேசான இரைச்சல் ஒரு தாலாட்டு மாதிரி இருக்கும். வாழ்க்கைக்கும் தினசரி பரபரப்புக்கும் இடையை இருக்கிற பிணைப்பு தற்காலிகமாய் அறுந்த மாதிரி கொஞ்சம் ஆசுவாசமாகத் தோன்றும். திரும்பி மெயின் ரோட்டுக்கு வரும்வரைதான் அந்த ஆசுவாசம் எல்லாம். டிசம்பர் 26க்கு ஒரு வாரத்துக்கு முன் மனைவி மகனுடன் ஒரு இருட்டின மாலையில் அலைகளுக்கு நெருக்கமாய் தூர வானத்தில் எரிநட்சத்திரம் விழுவதைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தபோதுகூட இதே ஆசுவாசம் மனதில் நிறைந்திருந்தது.

அதற்கப்புறம் ரொம்ப நாளைக்கு கடற்கரைப்பக்கம் போக முடியாமல் போய்விட்டது. போய்ப் பார்க்கவேண்டும் என்று நினைத்து ஏனோ தள்ளிப் போய்க்கொண்டேயிருந்தது. மெரீனாவை நினைக்கும்போது தினத்தந்தியின் டபுள் ஸ்ப்ரெட் ஏரியல் புகைப்படம் நினைவில் நிழலாடி மனதை பிசைகிறது. கடலையும் கடல் சார்ந்த இடங்களையும் மனதில் காட்சிப்படுத்திப் பார்க்கும்போது அந்தக் காட்சிக்குக் கீழே துக்கத்தில் தோய்த்தெடுத்த ஒரு ஸ்க்ரால் நியூஸ் ஓடுவது மாதிரி ஒரு பிரமை.

ரொம்ப நாள் கழித்து இந்த ஞாயிற்றுக்கிழமை மறுபடியும் நண்பர்களுடன் போனேன். பெசன்ட் நகர் கடற்கரை. போகும்போதே நன்றாய் இருட்டியிருந்தது. அன்றைய தினத்திற்கு கூட்டம் ரொம்பக் குறைச்சல் என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் நிறைய பேர் இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கவில்லையெனத் தெரிகிறது. கடற்கரை தன் முகத்தை மாற்றிக்கொண்டதுபோல் ஒரு உணர்வு. மணலில் கடலை நோக்கி நடக்கும்போது எல்லோருக்கும் கால்களில் தயக்கம் பின்னுக்கிழுக்கிறது. செருப்பைக் கழற்றிவிட்டு நடந்தால் அரைக் கிலோமீட்டருக்கு மணல்வெளியில் இன்னும் ஈரப்பதம். எப்போதும் நம்மை அற்பமாய் உணரச்செய்யும் கடல் இன்று அதன் கூடவே எல்லோர் மனதிலும் லேசான பய உணர்ச்சியையும் சேர்த்துவிட்டது. அன்று யாரும் அலையருகில் உட்கார்ந்து நான் பார்க்கவில்லை. அதுமாதிரியே கால் நனைத்து விளையாடுபவர்களும். அலைகள் தன் வழக்கமான எல்லைக் கோட்டை மாற்றி வரைந்திருந்ததாகப் பட்டது. யானொன்றுமறியேன் பராபரமே என்பதுபோல் தேமே என்றிருக்கும் கடற்பரப்பின் அகண்ட வெளியில் எல்லோர் பார்வையும் ஒரு சந்தேகத்துடன் குத்திட்டு நிற்கிறது. நாங்கள் போன அன்று பெளர்ணமிக்கு இரண்டு நாள் முந்தியாதலால் 98 சதவிகித நிலா வானத்தில் இருந்தது. பளிச்சிடும் வெண்மையான நிலவொளியில் அலுமினிய ஃபாயில்களை சுருட்டுவது போன்ற தோற்றத்துடன் இருளில் பளபளப்புடன் புரண்டு வந்த அலைகளில் கால் நனைத்தபோது உயிரின் நரம்பு லேசாக நடுங்கிச் சிலிர்த்தது. இந்தப் பிஞ்சு வயசிலேயே தொலைகாட்சிச் சேனல்களிலின் 'லைவ்' காட்சிகள் மற்றும் செய்திகள் மூலம் ஏதோ புரிந்து வைத்திருந்த என் பையன் ஒரு உறைந்த பார்வையுடன் கடலை கொஞ்சம் வெறித்துவிட்டு என் கைகளை இறுக்க்க்க்க்க்கிகொண்டு என்னை அண்ணாந்து பார்த்தவாறு மெதுவே அலை நுரைகளைக் கால் விரல்களால் தீண்டிப் பார்த்தான்.

அன்று அலையருகில் உட்காரவும் இல்லை. அதிக நேரம் நிற்கவுமில்லை. கொஞ்சம் பாதுகாப்பான தூரம் என்று பட்ட இடத்தில் மணல்வெளியில் உட்கார்ந்துகொண்டோம். பாதுகாப்பான இடம் என்பதும் பாதுகாப்பாய் இருக்கிறோம் என்கிற இந்த நினைப்பும் எத்தனை அபத்தம்!! புத்தாண்டுக்கு அடுத்தநாள் எனக்கு நேரிட்ட சின்னஞ்சிறு விபத்து கூட இதையேதான் சொல்கிறது.

கனத்த மனத்துடன் கடற்கரையிலிருந்து திரும்பி வரும்போதும் ஒரே சிந்தனை. இவ்வுலகின் இத்தனை கோடி ஜனங்களும் ஏதோ ஒன்றிலிருந்து தப்பிப் பிழைத்து இந்தக் கணம் ஜீவித்திருப்பவர்கள்தான் என்று திரும்பத் திரும்பத் தோன்றுகிறது.

இனி நல்லவையே நடக்க எல்லாம் வல்ல Super Nature Power அருள் பாலிக்கட்டும்.

சொர்க்கத்தின் குழந்தைகள்

போனவாரம் ஒரு சில பிற மொழிப் படங்களைப் பார்த்தேன். சில்ட்ரன் ஆஃப் ஹெவன், நோ மேன்ஸ் லேண்ட், சேவியர் மற்றும் சிக்ஸ்த் சென்ஸ். இதில் சில்ட்ரன். ஆஃப் ஹெவனும், நோ மேன்ஸ் லேண்ட்டும் ஏற்கனவே பார்த்தவைகள்தான். ஆனால் மறுபடி பார்க்கத் தூண்டுகிற படங்கள்.

'சில்ரன் ஆஃப் ஹெவன்' பற்றி சிலாகித்தே ஆகவேண்டும். இது ஒரு ஈரானியப் படம். இத் திரைப்படத்தின் முக்கியப் பாத்திரங்கள் ஸ்கூல் போகிற ஒரு பையனும் அவன் தங்கையும், அப்புறம் ஒரு ஜோடி ஷூவும்தான். இன்னும் சொல்லப் போனால் ஷூதான் படத்தில் ஹீரோ. சின்னச் சின்ன உணர்வுக் கலவைகளோடு ரசிக்கத்தக்க வகையில் சுவாரஸ்யமாய் இப்படிக்கூட கதை சொல்ல முடியுமாவென்று ஆச்சரியமாய் மறுபடி மறுபடி பார்த்தேன். நம்மூர் புது இயக்குநர்கள் சில்ரன் ஆஃப் ஹெவனை பத்து தடவையாவது போட்டுப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. எந்த ஆர்ப்பாட்டமும் கூத்தும் இல்லாத எளிய திரைக்கதை அமைப்பைக் கொண்ட இப்படத்தைப் பார்த்து முடிக்கும்போது ஒரு நல்ல சிறுகதை அல்லது குறுநாவல் படித்த உணர்வு நிச்சயம் எழும் என்பதற்கு நான் கியாரண்டி தருகிறேன்.

இதே மாதிரி தி சிக்ஸ்த் சென்ஸ். 1999 ல் பல ஆஸ்கார்களை வென்று குவித்த இந்தப் படத்தை ரொம்ப லேட்டாகப் பார்க்க நேரிட்டது என் துரதிருஷ்டம். புத்திசாலித்தனமான திரைக்கதை அமைப்பு, சைக்கலாஜிகல் திரில்லர் என்றெல்லாம் உலகலாவிய பாராட்டைப் பெற்ற இந்தப் படம் தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தபோது ஏனோ பார்க்கவில்லை. படத்தில் என்ன கதை என்பதை வரிந்து வரிந்து நண்பனொருவன் விளக்கிச் சொன்னதும்கூட நான் சுவாரஸ்யமிழக்கக் காரணமாயிருந்திருக்கலாம். இப்போது காணக் கிடைத்தபோது நிஜமாய் பிரமிப்பாய் இருந்தது. டை-ஹார்ட்-ல் கிழிந்த பனியனும் கையில் துப்பாக்கியுமாக அட்வென்சர் ஆசாமியாகப் பார்த்த ப்ரூஸ் வில்லீஸை, டாக்டர் மேல்கம் க்ராவ் என்ற பாத்திரத்தில் அமைதியான உணர்ச்சிகரமான ஒரு குழந்தைகள் சைக்காலஜிஸ்ட்டாகப் பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ப்ரூஸ் வில்லீஸூடன் போட்டி போட்டு நடித்திருக்கும் அந்தப் பையன் ஹேலி ஜோயல் ஆஸ்மெண்ட்-ன் முகம் மனசைவிட்டு அகல மறுக்கிறது. (இப்போது பெரிய பையனாகிவிட்டான் போல!) இந்தப் படத்திலும் எல்லாவற்றையும்விட, புருவத்தை உயரவைக்கும் திரைக்கதைதான் ஹீரோ என்பதில் சந்தேகமில்லை. பார்த்த அன்று இரவு தூக்கம் வரவில்லை. இருட்டிக்குள் போக லேசாய் பயமாயிருந்தது. ஏனென்பது படம் பார்த்தவர்களுக்குத் தெரியும். ரொம்ப லேட்டாய்ப் பார்த்தாலும் மிகவும் அசத்திய இந்தப் படத்தின் விவரங்களை நெட்டில் தேடிக்கொண்டிருந்தபோது திடீரென்று அதன் ஸ்க்ரிப்ட் அகப்பட்டதும் மனம் புளகாங்கிதமடைந்துவிட்டது. டெளன்லோடு பண்ணி ஒரே மூச்சில் படித்து முடித்தேன். படிக்கப் படிக்க ஆச்சரியம் உயர்ந்துகொண்டே போகிறது. என்னமாய் எழுதியிருக்கிறார். ஒரு நல்ல தரமான திரில்லர் நாவல் படித்து முடித்த திருப்தி கிடைத்தது. (இந்தத் திரைக்கதையின் நோட்பேடு வடிவத்தைப் பார்த்தால் மூவி மேஜிக் அல்லது அல்லது ஃபைனல் ட்ராஃப்ட் போன்ற மென்பொருள்களின் உதவியால் எழுதப்பட்டிருக்கலாம் என்று தோன்றியது.)

தி சிக்ஸ்த் சென்ஸ் போல இன்னும் நிறைய புகழ்பெற்ற ஹாலிவுட் திரைக்கதைகள் html, pdf அல்லது txt வடிவங்களில் கிடைக்கின்றன. இந்த மாதிரி சிலவற்றை என் கணினியில் இறக்கி வைத்திருக்கிறேன். அவற்றில் சில - American Beauty, Gladiator, Breave Heart, Rush Hour, Face/Off, Signs, Cast Away, Terninator 2, Trueman show, Saving Private Ryan, etc. Roberto Benigni-யின் "Life is beautiful" என்ற படத்தின் திரைக்கதையை தேடிக் கொண்டிருக்கிறேன். இன்னும் கிடைக்கவில்லை. இம்மாதிரி திரைக்கதைகளில் எது திரைப்படமாக்கப்பட்ட இறுதி வடிவம் என்று தேடிப் பார்த்து இறக்குமதி செய்ய வேண்டியது அவசியம். சிலவற்றில் "third draft" என்றோ "Shooting script" என்றோ கூட போட்டிருக்கும். சிலவற்றை இறக்குமதி செய்ய பைசா கேட்கிறார்கள். திரைக்கதை எழுதுவது எப்படி என்பதற்கு புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்துக்கொண்டிருக்கும் வருங்கால இயக்குநர்கள் கூடுமானால் இந்த ஸ்கிரிப்டுகள் எல்லாவற்றையும் ஒரு புரட்டு புரட்டிப் பார்த்தால் அவர்களுக்கும் மக்களுக்கும் உதவியாயிருக்கும் என்று நினைக்கிறேன். தமிழில்கூட வெற்றி பெற்ற / பெறாத சில படங்களின் திரைக்கதைகள் புத்தகமாக வெளிவந்திருப்பதை அறிவேன். (உதா : சேது, ஹே ராம்.) ஹாலிவுட் ஸ்கிரிப்ட்கள் மாதிரி நல்ல தமிழ்த் திரைக்கதைகளையும் எப்போது வலையில் இறக்குமதி செய்கிற வசதி கிடைக்குமென்பதையும், அப்படி ஏதேனும் முயற்சிகள் நடக்கின்றனவாவென்பதையும் அறிய அவா!

ஹாலிவுட் பிரியர்களுக்கு எனக்கு தெரிந்த ஏதோ சில உபரி தகவல்களையும் சொல்லிவிடலாமென்று நினைக்கிறேன். www.imdb.com என்கிற வலைத்தளம் உலகளாவிய வகையில் திரைப்படங்கள், அவற்றின் இயக்குநர்கள், மற்றும் இன்னபிற விவரங்களைத் தொகுத்துத் தருகிறது. மணிரத்னம் என்று தேடினாலும் கிடைக்கிறது. ஸ்பீல்பெர்க் என்று தேடினாலும் கிடைக்கிறது. இந்த மகா வலைத்தளத்தை உருவாக்கிய புண்ணியவானுக்கு என் வந்தனங்கள். அது மாதிரி www.apple.com/trailers என்று போட்டுப் பாருங்கள். இப்போது ஹாலிவுட்டில் தயாரிக்கப்பட்ட அத்தனை புத்தம்புது படங்களின் ட்ரைலர்களைப் அவரவர் Band Width செளகரியத்தில் பார்க்க அருமையான வலைத்தளம். இங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆங்கிலப் படங்களின் ட்ரைலர்கள் சிறியதும் பெரியதுமாக சுமார் 70 வைத்திருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒரு சிறுகதை மாதிரி மிரட்டக்கூடியவை. முன்பு கிடைத்துக்கொண்டிருந்த Broad Band நெட் வசதி என் வாழ்விலிருந்து துண்டிக்கப்பட்டதும் இந்த ட்ரைலர் சேகரிக்கிற பழக்கம் நின்று போனது. மீண்டும் கிடைத்தால் தொடர விருப்பம்.

இது மாதிரி இணையப் பெருங்கடலில் நிறைய ஆழ்ந்து கிடக்கின்றன. ஆழமாய் மூழ்கிப் பொறுமையாய்த் தேடினால் நிறைய ஆச்சரியங்கள் கிடைக்கும்.