Showing posts with label சுதேசமித்திரன். Show all posts
Showing posts with label சுதேசமித்திரன். Show all posts

அர்த்தமண்டபக்காரர்

கோவையிலிருக்கும் என் எழுத்தாள நண்பர் சுதேசமித்திரன் வலைப்பதிவு ஆரம்பித்திருக்கிறார். தன் வலைப்பதிவுக்கு அர்த்த மண்டபம் (Hall of Meaning) என்று பெயரிட்டு முதலில் ஒரு சிறுகதையுடன் இணையத்தில் தன் பயணத்தைத் துவக்கியிருக்கிறார். சுதேசமித்திரன் இலக்கிய உலகில் பரவலாக அறியப்படுபவர். ஒரு தேர்ந்த எழுத்தாளர். தமிழ் இலக்கியத்தின் முன்னணி எழுத்தாளர்களின் படைப்புகளைத் தாங்கி வந்துகொண்டிருந்த 'ஆரண்யம்' என்னும் கலை இலக்கிய காலாண்டிதழின் ஆசிரியர்களில் ஒருவர். ஆரண்யத்தின் ஒவ்வொரு இதழிலும் எம்.டி. வாசுதேவன் நாயர், சத்யஜித் ரே போன்றவர்களின் பல புகழ்பெற்ற திரைக்கதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளிவந்துகொண்டிருந்தது மிகச் சிறப்பான விஷயம். இந்த இலக்கியப் பத்திரிக்கையில் வெளியான படைப்புகளுக்கு நான் ஓவியம் வரைந்திருக்கிறேன் என்கிற வகையில் என் பங்கும் உண்டு. சுதேசமித்திரன் இப்போது கோவையிலிருந்து 'சாம்பல்' என்னும் இலக்கியப் பத்திரிக்கையை வெளியிட்டு நடத்திக்கொண்டிருக்கிறார். (இது பற்றி பா.ரா ஒரு முறை தன் வலைப்பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.)

சுதேசமித்திரன் ஒரு நல்ல கவிஞரும்கூட. இதற்குமுன் "அப்பா" என்ற இவரது கவிதைத் தொகுதி வெளியாகியுள்ளது. விரைவில் இவரது ஒரு சிறுகதைத் தொகுப்பும், ஒரு நாவலும் வெளியாகவிருக்கின்றன. விகடன் குமுதம் போன்ற முன்னணி வார இதழ்களில் இவர் நிறைய அருமையான சிறுகதைகள் எழுதியுள்ளார். சுதேசமித்திரன் ஒரு நல்ல ஓவியரும்கூட. இவரைப் போன்ற நல்ல படைப்பாளிகள் இணைய நீரோடையில் இணைவது நல்ல விஷயம். சுதேசமித்திரனை வரவேற்போம்.

ஹேப்பி பர்த்டே!!

அப்பா எங்கள் பிறந்த தினங்களில்
பெயரிட்ட பெரிய வட்டக் கேக்குகளை
எச்சில் காற்றால் கேண்டில் அணைத்து
வெட்டச் சொல்லி பாட்டுப்பாடினார்...
*
அங்கேயிருக்க நேரும் பத்துப்பேரிலும்
அப்பாவால் மட்டும்தான்
வெட்கத்தைவிட்டுப் பாடமுடியும்,
இது உனக்கொரு சந்தோஷமான பிறந்த தினம்...
இது உனக்கொரு சந்தோஷமான பிறந்த தினம்...
*
அப்பாவின் பிறந்த நாட்களில் பாட ஆளிருக்காது.
நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் பரஸ்பர நம்பிக்கையற்றுப்
பார்த்துக்கொண்டபின்
ஹாப்பி - என்று துவங்கிய நானும்
என் ஒற்றைக் குரலின் பைசாசத்திற்கு பயந்து
பாட்டை நிறுத்திப்
பேந்தப்பேந்த விழித்துக்கொண்டிருப்பேன்.
*
அப்புறம் காலப்போக்கில் எங்களுக்குத் தைரியம் வந்தது.
ஆனால் அப்போது
அப்பா எங்கள் பிறந்த தினங்களை மறந்துவிட்டிருந்தார்
நாங்கள் அவர் பிறந்த தினங்களை மறந்து போயிருந்தோம்.

"அப்பாவின் பிறந்த தினங்கள்" - கவிதை.
- சுதேசமித்திரனின் 'அப்பா' கவிதைத் தொகுப்பிலிருந்து.

*
பாலக்காடு. ஒரு குக்கிராமம். ஏராளமான மரங்களும், கோழிகள் அடைகிற கூண்டும், சில மாடுகள் அடங்கிய தொழுவத்தையும் உள்ளடக்கிய தோட்டத்தின் நடுவே ஒரு மச்சுவீடு. அங்கே முப்பத்தி மூன்று வருடங்களுக்குமுன் ஒரு புதன்கிழமை காலையில் ஒரு குழந்தை பிறந்தபோது (நான்தான்) "என்ட கொச்சு மோனே" என்று ஈன்றபொழுதில் பெரிதுவர்த்தவர்கள், இவன் பிற்காலத்தில் தமிழில் சிறுகதையெல்லாம் எழுதி, அப்புறம் தமிழ் வலைப்பதிவு எல்லாம் ஆரம்பிப்பான் என்று யோசித்திருக்கக்கூட மாட்டார்கள். வருடங்களின் சுழற்சியில் சிந்தனைகளும், சிந்திக்கிற மொழியும் மாறிவிட்டன. எந்த மொழியில் வளர்ந்தாயோ அது தாய் மொழி. எந்த இடம் உனக்கு சோறு போட்டதோ அது சொந்த பூமி என்றாகிவிட்டது. சரி அதை விடுங்கள்.

இதை இப்போது நினைவுகூர்வதற்குக் காரணம் இந்த வருடமும் என் பிறந்தநாள் வந்துவிட்டதுதான். அப்போதெல்லாம் ஒவ்வொரு வருடமும் பிறந்தநாள் வரும்போது நிறைய எதிர்பார்ப்புகளை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு காத்திருப்பேன். நிறைய பேர் வாழ்த்துக்கள் சொல்வார்கள். நிறைய பரிசுப்பொருள்கள் வரும். புதுசாய் உடை அணிந்து கொள்ளலாம். முக்கியமாய் ஸ்பெஷலான ஆட்கள் தரும் ஸ்பெஷலான பரிசுகளுக்காய் மனசு தவம் கிடக்கும். ஸ்பெஷல் என்றால் அப்படி ஒரு ஸ்பெஷல். நிறைய பிறந்தநாட்களில் சந்தோஷத்தில் மனசும் விழிகளும் கலங்கியிருக்கின்றன. பிறகு நண்பர்களுடன் பர்த்டே ட்ரீட்டுக்குப் போகிற இடங்களும், கழிகிற பொழுதுகளும் அடுத்த பிறந்தநாள்வரை ஞாபகம் இருக்கும். அதே போலத்தான் நான் விரும்பி அடுத்தவர் பிறந்தநாளைக் கொண்டாடுவதும்.

ஒவ்வொரு வருடமும் என் பிறந்த தேதி நெருங்க நெருங்க எனக்குப் பிடித்த, என்னைப் பிடித்த நண்பர்கள் உறவினர்கள் முதுகுப்புறம் எதையோ மறைத்துக்கொண்டு (பரிசுப்பொருட்கள்தான் வேறென்ன?) வட்டமாய் என்னை நெருங்குகிற மாதிரி கற்பனை வரும். இனிமை கலந்த நெர்வஸ் ஒன்று முதுகுத் தண்டில் ஓடும். என் பிறந்த நாளை மறந்துவிட்ட ஒரு நண்பனை ஏன்டா ஒரு விஷ்கூட பண்ணல என்று கன்னா பின்னாவென்று திட்டியிருக்கிறேன்.

சிலோன் ரேடியோவில் "பிறந்த நாள்.... இன்று பிற....ந்...த நாள்!" என்று பாட்டு போட்டு யாருக்காவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்வதைக் கேட்கும்போது ஆஹா! என்றிருக்கும். தாத்தா, பாட்டி, பெரியப்பா, சித்தப்பா, அம்மும்மா, அக்கக்கா என்று வாழ்த்தியவர்கள் லிஸ்ட்டை நீளமாய்ப் படிப்பதைக் கேட்கும்போது ஒருத்தன் பிறந்ததற்கு இத்தனை பேர் சந்தோஷப்படுகிறார்களே என்று வியப்பாக இருக்கும்.

வாழ்வின் நிறைய வருடங்கள் அதற்குள்ளாகக் கடந்துவிட்டன என்று ஏதோ ஒரு நாள் திடீரென்று ஏனோ உணர்ந்துவிட்டேன் போலும். பிறகு பி.நாள் கொண்டாடுவதன் சுவாரஸ்யம் லேசாய் குறைந்துபோய்விட்டது. நான் இன்னும் என்னைச் சின்னப்பையனாதான் ஃபீல் பண்றேன் என்று சொல்கிற பொய், கண்ணாடியைப் பார்க்கும்போது உடைந்து சிதறிவிடுகிறது. (இதைப்படிக்கிற அன்பர்கள் உடனே என்னை ஒரு குடுகுடு கிழவனாக கற்பனை செய்து ஏமாந்து போகாதீர்கள் என்று எச்சரிக்கிறேன்).

எனக்கொரு மகன் பிறந்தபிறகு சென்டர் ஆஃப் அட்ராக்ஷன் மாறியதில் என் பிறந்தநாளின் முக்கியத்துவம் பங்கு மார்க்கெட் மாதிரி சரிந்தது. நல்லது! அதையேதான் நானும் எதிர்பார்த்தேன். பெரிய வட்ட கேக். நடுவே நம்பர் கேண்டில் வைத்து குவிந்த வாயால் குழந்தை சுடரை ஊதிக் கைதட்டுகிற குதூகல தருணங்களில் முடிவு செய்துகொண்டேன். இனி நான் என் பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை. இனியென்ன? இதோ இப்போது வரப்போகிற பி.நாள் தானாகக் கடந்துபோகட்டும். அப்படியும் நினைவு வைத்துக்கொண்டு வாழ்த்துபவர்களுக்கு சின்னதாய் ஒரு தேங்க்யூ சொல்லி முடித்துவிடவேண்டும். ட்ரீட் என்று நிர்பந்தித்தால் நான் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை என்று அறிவத்துவிட்டு ஒரு காஃபி பைட்டோ, காஃபியோ வாங்கிக்கொடுத்துவிட்டு நைஸாய் கழன்று கொள்ள வேண்டும். எல்லா நாளையும்போல இது இன்னொருநாள் அவ்வளவே!

இதோ என் இருப்பை ஞாபகப்படுத்தும் இந்த வருடத்திற்கான பிறந்ததினம் வந்துவிட்டது. வயது ஏற ஏற டென்ஷனும், டெக்னாலஜியும் அதிகமாகிவிட்டது பாருங்கள். காலை 5.30க்கு 'மெனி மோர் ஹேப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் தி டே!' என்று SMS வருகிறது. தொடர்ந்து பல இப்படியே. பிறகு தட்டப்பட்ட கதவைத்திறந்தால் நண்பர்கள். கையில் கிஃப்ட் பேக். மலங்க முழித்துநின்ற என்னைப்பார்த்து "வாழ்த்துக்கள்! என்றார்கள். 'இந்த சிகப்பு டி-சர்ட் உனக்கு எடுப்பாக இருக்குமென்று வாங்கினேன்.' நண்பன் சொல்கிறான். பிரித்த கிஃப்ட் கவர்களிலிருந்து புத்தகங்களை உருவி எடுக்கிறேன். "ப்ஷீர் வரலாறு". அப்புறம் "முகவீதி" - ராஜசுந்தரராஜன் கவிதைகள். நான் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்த புத்தகங்கள். நன்றி. நன்றி. நன்றி!

டெலிபோன் அடிக்கிறது. எடுத்தால் மறுமுனையில் கோயமுத்தூரிலிருந்து ராகம் போட்டு பையனின் பாட்டு.. "ஹாப்பி பர்த்டே டூ யூ". லேசாய் நெகிழ்கிறது. "கே.பி.என் பார்சல் சர்வீஸ்ல உனக்கு ஒரு பார்சல் கிப்ஃட் அனுப்பியிருக்கேன்.. மறக்காமப் போய் வாங்கிக்கோ" என்கிறாள் மனைவி. பிறகு ஆஃபீஸ் கிளம்புகிற வரை நிறைய போன்கள். நிறைய வாழ்த்துக்கள். கடவுளே!

என்னை மீறி இவையெல்லாம் நிகழ்ந்துவிட்டது. சரி! அலுவலகத்திலாவது யாருக்கும் இதைப் பற்றி நான் ப்ரஸ்தாபிக்காமல் இருத்தல் நலம். அங்கே யாருக்கும் இது தெரியாது. அலுவலகத்திற்கு நண்பன் கொடுத்த டி-சர்ட்டைப் போட்டுக்கொண்டு நல்ல பிள்ளையாய் போய் தேமே என்று வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டேன். அலுவலக முகவரிக்கு குரியரில் வந்த க்ரீட்டிங் கார்டுகளை மற்றவர்கள் பார்க்காமல் பிரித்துப் பார்த்து பின் ஒளித்தும் வைத்துவிட்டேன். மின் அஞ்சலில் வந்த ஒரு சில வாழ்த்துக்களை ப்ரவுசர் மினிமைஸ் பண்ணிவைத்துப் படித்தேன். பிறகு அலுவலக போனிலும் செல் போனிலும் வந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். எல்லாவற்றிற்கும் மற்றவர்கள் கேட்காமல் குரலைத் தணித்துப் பேசிச் சமாளித்தேன். போதாக்குறைக்கு "Airtel wishes a very happy birthday" என்று செல்போன் ப்ரொவைடரின் ஆட்டோமேட்டட் வாய்ஸ் வேறு. அப்படியும் ஒருத்தன் ஆஃபிஸில் கேட்டுவிட்டான். "இன்னைக்கு என்ன ரொம்ப உற்சாகமா இருக்கீங்க?". நான் சிரித்து மழுப்பினேன்.

ஹா! எப்படியோ நாலு மணி வரையிலும் இப்படியே ஓட்டியாயிற்று!

பிறகு 123greetings.com-ல் இருந்து ஒரு வாழ்த்து வந்தது பாருங்கள்! யாருக்கும் தெரியாமல் லேசாய் அதைத் திறந்தபோது.. அடப்பாவி அதில்.. மிடி ஃபைலாக அதில் ம்யூசிக் வேறு இணைத்து அனுப்பியிருக்கிறான். டி...டி... டீ....டி. டீ... டீ! என்று ஹேப்பி பர்த்டே ட்யூன். என் ஸ்பீக்கர் வால்யூமை நான் ஏன் இத்தனை வைத்துத் தொலைத்தேன்? அருகில் இருந்தவன் சடாரென்று திரும்பினான். என்னது? என்றான். நான் வால்யூமை சடாலென்று குறைப்பதற்குள் புரிந்து கொண்டுவிட்டான். "ஷிட்.. மறந்தே போயிட்டேன்.." என்று அவன் அருகில் வந்து கைகுலுக்க... நிமிடத்தில் என்னைச்சுற்றிக் கூட்டம். 'ஆனாலும் நீ இத்தனை கமுக்கமாய் இருக்கக்கூடாது' என்றார்கள். ட்ரீட்க்கு எங்கே போகலாம் என்று பேரம் நடந்தது. முடிவாய் திருமயிலை அடையாறு ஆனந்த பவனில் என் பிறந்த நாள் ட்ரீட் இனிதே முடிந்தது.

ஆக இந்த வருடம் இந்த நாள் அபாரமாய்க் கழிந்துவிட்டது. இந்த நாளின் மகிழ்ச்சி வயதொன்று ஏறிவிட்ட சோகத்தை தற்காலிகமாய் மழுங்கடித்துவிட்டதுதான்

'அதெல்லாம் சரிதான். இந்த தினத்தை நிறைவானதாக ஆக்கும் பொருட்டு அடுத்தவேளை சோற்றுக்கு வழியில்லாத, உன்னிலும் மிக ஏழ்மையான யாருக்கேனும்.. பத்து ரூபாய்க்கோ, ஒரு பிடி அரிசிக்கோ ஏதாவது வழிவகை செய்து உதவினாயா? அப்படியொன்றை நினைத்தாவது பார்த்தாயா?'

எதிர்பாராத (பார்த்த?) வகையில் இத்தனை சிறப்பாய் கழிந்த நாளின் இறுதியில் எழுந்த இந்தக் கேள்வி சுருக்கென்று ஆழமாய்த் தைக்கிறது மனதை.

ஹேப்பி பர்த்டே டு மி!