தேர்ந்தெடுத்த வலைப்பதிவுகள்: ஜவ்வரிசி வடாம், உள் பனியன் மற்றும் ஒரு ரேடியோ விளம்பரம்

http://freetamilebooks.com/ebooks/javvarasi-vadam/
ஜவ்வரிசி வடாம், உள் பனியன் மற்றும் ஒரு ரேடியோ விளம்பரம்” - எனது இந்த வலைப்பதிவுத் தளத்திலிருந்து எடுத்துக் கோர்க்கப்பட்ட பதிவுகளின் தொகுப்பு. இதில் சுமார் ஐம்பது பதிவுகள் உள்ளன. இதை இலவச மின்னூலாக வெளியிட்டிருப்பது Freetamilebooks,com

இதனை PDF, ePub மற்றும் Mobi வடிவங்களில் இங்கே தரவிறக்கிப் படிக்கலாம்.

இந்தப் புத்தகத்தின் ’என்னுரை’-யிலிருந்து:
2004 ஏப்ரல் ஐந்தாம் தேதியை சுபதினமாக பாவித்து வலைப்பதிவு எழுத ஆரம்பித்தேன். ‘புள்ளி’ என்று நாமகரணமிட்டு பொட்டு பூவெல்லாம் வைத்து அமர்க்களமாகத்தான் துவங்கினேன். அப்போதிருந்த சக வலைப்பதிவர்களுடன் போட்டிபோட்டு (அப்போது சுமார் 50 பேர் தேறுவார்கள் என்று நினைக்கிறேன். குறுகிய காலத்திற்குள்ளேயே மளமளவென்று நான்கு ஐந்து பதிவுகள் எழுதிக் குவித்தேன்!) இதோ இத்தோடு பதினொரு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. பல்லாயிரக்கணக்கான பதிவுகள் எழுதப்பட்டுவிட்டன. (அட எல்லோருடையதையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்). அதில் என்னுடையது எவ்வளவு என்று பார்த்தால் சற்றேறக்குறைய ஆயிரத்திலிருந்து தொள்ளாயிரத்தைம்பதை கழித்தால் எவ்வளவு வருமோ அவ்வளவு.
எண்ணிக்கையா முக்கியம்? என்ன எழுதினோம் என்பதுதானே முக்கியம் என்று எனக்கு நானே சமாதானம் செய்துகொள்கிறேன். முத்தோ குப்பையோ அவ்வப்போது எதையாவது கிறுக்கிக்கொண்டு, இன்னும் இழுத்து சாத்தப்படாத ப்ளாக்கர் மற்றும் வேர்டுப்ரஸ் கடைகள் உபயத்தில் என் வலைப்பதிவுகள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. ஒரு நாளைக்கு தோராயமாக என்னையும் சேர்த்து பதினேழரைப் பேர் பார்க்கிறார்கள்.
‘புள்ளி’ என்ற என்னுடைய வலைத்தளம் தவிர சித்ரன் டாட் காம் மற்றும் “இன்று” தளங்களிலும் அவ்வவ்போது எழுதிக்கொண்டிருந்தேன். ‘இன்று’ என்பது ஒரு கூட்டு வலைப்பதிவு என்பதால் இதைவிட அங்கே வாசகர்கள் ஜாஸ்தி.
ஏன் அதிகம் எழுதுவதில்லை என்று நண்பர்கள் என்னிடம் கேட்கும்போது அதை ஒரு எதிரொலி போல உடனே என்னிடமே கேட்டுவிடுவேன். அப்போது வந்து குதிக்கும் பாருங்கள் சால்ஜாப்புகள்!! அப்பப்பா! எல்லோரும் பொதுவாகச் சொல்கிற காரணமான “எங்க சார்? எதுக்குமே டைமே கிடைக்கறதில்ல” என்ற ஒரு அருமையான சாக்கு இருக்கிறதே! சில சமயம் “ரைட்டர்ஸ் ப்ளாக்” (Writer’s block) என்கிற மிகப்பெரிய சவுகரிய வட்டத்துக்குள் உட்கார்ந்துகொண்டு பெரும்பாலும் வாழ்வாதாரத்திற்கான வேலைகளை மட்டும் சிரமேற்கொண்டிருந்தேன்.
இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்கிற சப்பைக்கட்டு அது என்று எனக்கே தெரியும்தான். ரொம்ப யோசித்துப் பார்த்தால் ஏதோ ஒரு சின்ன ஆயாசம். வாழ்க்கையில் எதையோ தேடி ஓடுகிற அவசரத்தில் “எழுத்துதானே? கிடக்கட்டும் கழுதை!” என்கிற அலட்சியம். இன்னும் பல காரணங்களைச் சொல்லலாம். எதுவும் எழுதாமலே “எழுத்தாளர்” என்கிற பட்டத்தைச் சுமப்பது தர்மசங்கடத்திற்குரியது. ஒரு நாளைக்கு ஐந்து KB கூட எழுதாதவன் எப்படி எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்ள முடியும்?
“சிறுகதை எழுதுதல்” என்கிற விஷயத்தில்தான் என் எழுத்துலகப் பிரவேசம் நிகழ்ந்தது. முன்னணிப் பத்திரிக்கைகளில் நிறைய சிறுகதைகள் வெளியானதும், கிழக்கு பதிப்பகம் வெளியாடாக ஒரு சிறுகதைத் தொகுப்பு பதிப்பிக்கப்பட்டதும், மின்னூலாக இன்னொரு சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டதையும் தவிர சொல்லிக்கொள்கிற மாதிரி வேறு கின்னஸ் சாதனைகள் இல்லை.
ஆயிரத்தெட்டு வேலைகளுக்கு நடுவில் ஆயிரெத்தெட்டு வலைப்பதிவுகளும், தொடர்களும், கதைகளும், புத்தகங்களும் எழுதிக் குவிப்பவர்கள் எப்போதுமே எனது மதிப்பிற்கும் பொறாமைக்கும் உரியவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் எப்படி ஒரு நாளைக்கு இருபத்தைந்து மணி நேரம் வாய்க்கிறது?
ஆனாலும் இந்த எழுத்துக் கழுதை கூடவே வருகிற பிராணியாக இருக்கிறது. அதற்கு ஆகாரம், குடியிருக்கக் கொட்டாரம் என்றெல்லாம் கொடுத்து ரொம்பவும் சிஷ்ருஷை செய்ய முடியாவிட்டாலும் ஒரு ஓரமாய் படுத்துக்கிடக்கட்டுமே என்று தோன்றுகிறது. எதையாவது எழுதித் தொலையேண்டா என்று அரற்றுகிற மனக் குரல் இதனால் கொஞ்சம் சமாதானமடையலாம். அப்படியாக சின்னச் சின்னதாக சுவாரஸ்யமாக எதையாவது எழுத வேண்டும் என்கிற எண்ணத்தில் உருவானவைதான் இந்தப் பதிவுகள்.
பல வருடங்களுக்கு முன் மைக்ரோ ப்ளாகிங் ட்ரெண்டெல்லாம் வருவதற்கு முன்னால் எழுதப்பட்டவை என்பதால் இந்தப் பதிவுகள் எல்லாம் கொஞ்சம் நீளமாகவே இருக்கும். மேலும் இதில் நிறைய விஷயங்கள் அந்தந்த கால கட்டத்தைச் சார்ந்தவையாக இருக்கும் என்பது முன்கூட்டிய டிஸ்க்ளைமர்.
கணினி என்பது அலைபேசியாகவும், டேப்லட் ஆகவும் சுருங்கிவிட்ட இந்தக் காலத்தில் இனிமேல் தேவைப்பட்டாலொழிய நீளமான வலைப்பதிவுகள் எழுதுவதில்லை என்பது தீர்மானம். இந்த துரித உணவு உலகில் இரண்டு பேராக்களுக்குமேல் ஒரு வாசகரை உட்கார வைப்பது பாவச் செயல். அப்படிச் செய்தால் அடுத்த ஜென்மத்தில் கிண்டி உயிரியல் பூங்காவில் ஆமையாகப் பிறந்து ஊர்ந்து ஊர்ந்தே நூற்றைம்பது வருடங்கள் வாழவேண்டியிருக்கும்.