Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

முதல் பாடல்

‘ஆத்தாடி... ஒரு பறவ பறக்குதா...’

நான் எழுதிய முதல் திரைப்பாடல் இது. 2012 ஆம் வருடம் பிறந்த கையோடு ஒரு சுப தினத்தில் மதிப்பிற்குரிய முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. அப்துல் கலாம்  வெளியிட இதோ இந்தப் பாடல் இப்போது ஆங்காங்கே ஒலிக்கவும் ஆரம்பித்துவிட்டது. படம்: கிருஷ்ணவேணி பஞ்சாலை.

கல்கி இதழில் முதல் சிறுகதை வெளியானபோது மனம் எவ்விதமான குதூகலத்தில் மிதந்ததோ அதற்கு இணையாக இப்போதும் உணர்கிறேன். மனதுக்குள் ஒரு பறவை பறக்கிறது.

பரவசமும் பயமும் கலந்த ஓர் உணர்ச்சி வந்து சேர்ந்திருக்கிறது. நீண்ட வரலாறு கொண்ட தமிழ்த் திரையுலகில் எத்தனையோ கவி ஜாம்பவான்களுக்கு நடுவே ஒரு ஓரமாய் ஒரு துணுக்காக நானும் அறிமுகப்படுத்தப்படுகிறேன் என்பது பரவசம். அவர்கள் சாதித்ததில் ஒரு சில துளிகளாவது நானும் சாதிக்கவேண்டுமே என்பது பயம்.



இதன் மூலகாரணமாக இருந்த நண்பரும் இயக்குநரும் ஆன தனபால் பத்மநாபனுக்கும், இசையமைப்பாளர் என். ஆர். ரகுநந்தன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

குழந்தையாக இருந்தது முதற்கொண்டு இன்று வரை வாழ்வின் பின்னணியில் சதா ஒலித்துக்கொண்டிருந்த பல்லாயிரம் தமிழ்த் திரைப்பாடல்களை ரசித்துத் திளைத்திருந்த எனக்கு முதன் முதலாக நான் எழுதிய வரிகள் திரை இசையால் உயிர்பெற்று அதை நானே கேட்பதை உன்னதமான தருணமாக உணர்கிறேன்.

இந்தப் பாடல் ஒரு ரொமான்ஸ் டூயட்-டாக அமைந்தது நல்ல விஷயம். ஒரு பஞ்சாலையை பின்னணிக் களமாகக் கொண்டது. முதலில் திருகலான வரிகளுடன் கொஞ்சம் கவித்துவமாகத்தான் எழுதிக்கொடுத்தேன். இசையமைப்பாளரும் இயக்குநரும் எல்லோருக்கும் புரியும்படி எளிமையாக இருக்கட்டுமே என்று கேட்டுக்கொண்டதிற்கிணங்க முயற்சித்ததில் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் ஒரு பாடலை எழுத முடிந்திருக்கிறது என்று நம்புகிறேன். இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு நண்பர்களிடமிருந்து வந்த பெரும்பாலான கருத்துக்களின் சாரம் இவ்வாறு இருக்கிறது. “தெளிவான, எளிமையான, சுகமான இசையுடன் என்பதுகளின் திரைப்பாடல் கேட்பதுபோன்ற இதமான அனுபவம்”. இந்தப் பாடல் பரவலாக எல்லோராலும் ரசிக்கப்படும் என்கிற நம்பிக்கையைத் தருகிறது இது.

பயணங்கள் முடிவதில்லை, நான் பாடும் பாடல் போன்ற படங்களில் மட்டுமே பார்த்திருந்த ரெக்கார்டிங் ஸ்டுடியோக்களில் விஜய் பிரகாஷ், சித்தாரா போன்ற முன்னணிப் பாடகர்கள் பாட அருகிலிருந்து பார்த்த பாடல் பதிவுகள் கூடுதல் அனுபவம்.

தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளரான என். ஆர். ரகுநந்தன் மிகத் துடிப்பான ஒரு மனிதர். தமிழ் திரையிசையின் நுணுக்கங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர். தெ.மே.பருவக்காற்றுக்கு அப்புறம் வரிசையாய் நிறைய படங்கள் கைவசம் சேர ஆரம்பித்தாலும், நல்ல ப்ராஜெக்ட்டுகளை மட்டும் தேர்ந்தெடுத்து கவனமாக இசையமைத்துக்கொண்டிருக்கிறார். கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தின் பாடல்கள் தவிர இவர் அதற்கு அமைத்திருக்கும் பின்னணி இசையும் ரசிகர்களிடையே தனித்த கவனம் பெறும் என்பதிலும், ஒரு முன்னணி இசையமைப்பாளராக இவர் உருவாகிக் கொண்டிருக்கிறார் என்பதிலும் சந்தேகமே இல்லை.

தனபால் பத்மநாபன் வித்தியாசமான பின்னணியுடன் அமைந்த இத்திரைப்படத்தினை மிகுந்த சிரத்தையுடன் உருவாக்கியிருக்கிறார். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதல் முதலாக காஸ்டிங் டைரக்டர் என்ற ஒரு பதவியில் நடிகர் திரு சண்முகராஜாவை இப்படத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். பாடல்களுக்கான காட்சிகளும் அதிசயராஜ் மற்றும் சுரேஷ் பார்கவ்-வின் ஒளிப்பதிவில் அருமையாக வந்துள்ளது. பிப்ரவரியில் வெளிவந்துவிடும் என்று தெரிகிறது.

பாடலைக் கேட்க:. http://soundcloud.com/info4u-chennai/aathaadi-oru

காஞ்சிவரம்



தேன்மாவின் கொம்பத்து, மணிச்சித்ரதாழ், காலாபானி போன்ற அருமையான படங்களைத் தந்த பிரியதர்ஷனிடமிருந்து உலகத் தரத்திற்கு அருகாமையில் மற்றுமொரு படைப்பு காஞ்சிவரம். டொரன்டோ போன்ற உலகத் திரைப்படவிழாக்களில் அமர்க்களமில்லாமல் திரையிடப்பட்டுக் கொண்டாடப்பட்ட செய்திகளும், ”பிரியதர்ஷன் செதுக்கியிருக்கிறார்” என்ற வாய்வழிப் பரிந்துரைகளும் இந்தப் படத்தைக் காணும் ஆர்வத்தைத் தூண்டியது.

இந்தப் படத்திற்காக பிரியதர்ஷன் எடுத்துக் கொண்ட காலகட்டம் (1948 ) மற்றும் களம் நிச்சயம் வித்தியாசமானதுதான். பீரியட் பட முயற்சிகளில் தன் திறமையை காலாபானியில் ஏற்கனவே பிரம்பாண்டமாய் நிலைநாட்டிவிட்டதால் அதோடு ஒப்பிடும்போது இது ரொம்ப எளிமையாகவே உணரவைக்கிறது என்றாலும் எளிமையாய்ப் பண்ணுவதுதான் எப்போதும் கஷ்டமான விஷயம் என்பதையும் மறுப்பதற்கில்லை. அந்த வகையில் பிரியதர்ஷன் ஜெயித்திருக்கிறார்.

உலகத்தரத்தை நோக்கிய இந்திய சினிமாவின் பயணத்தில் பிரியதர்ஷனும் இணைந்துகொண்டிருக்கிறார். அதோடு சாபு சிரில், திரு போன்ற திரைக் கலைஞர்களும் தம்மாலான பங்களிப்பை இந்தப் படத்தின் மூலம் அருமையாய் அளித்திருக்கிறார்கள். பிரகாஷ் ராஜ் போன்ற நல்ல நடிகர்களைத் தேர்வு செய்ததும் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய பலம்தான்.

இந்தப் படத்தில் பிரியதர்ஷன் எடுத்துக் கொண்ட கதையின் “இழை”, பெரிய எட்டாத ஆசைகளை மனதில் சேமித்து வைத்துக் கொண்டு அதன் மூலம் நலிந்து போன கனவுகளை எப்படியாவது பின்ன முயற்சிக்கும் சாதாரண மனிதனைப் பற்றிச் சொல்கிறது. இதையொட்டி நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிற திரைக்கதை.

சிறையிலிருந்து கைவிலங்குடன் எதற்காகவோ பரோலில் வெளிவரும் பிரகாஷ்ராஜை, கொட்டும் மழையில் சொந்த ஊருக்கு காவலுடன் ஒரு பஸ்ஸில் அழைத்துச் செல்வதிலிருந்து துவங்குகிறது படம். இடையிடையே பஸ் அடிக்கடி ஏதாவது இடர்ப்பாடுகளில் சிக்கி நிற்க அந்த இடைவெளிகளினூடே ஃப்ளாஷ்பேக் பயணம் போகிறார் பிரகாஷ்ராஜ்.

ஒரு அவார்டு வாங்கின வங்காளப் படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வை ஆரம்பக் காட்சிகள் உணர வைக்கிறது. அப்புறம் இரண்டு மணி நேரம் போவதே தெரியவில்லை. காரணம் இந்தத் தலைமுறை இதுவரை பார்த்திராத அந்தக்கால வாழ்க்கைக் காட்சிகள். படம் பெரும்பாலும் மங்கிய வெளிச்சத்தில் நகர்கிறது. லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் நடிகர்களின் முகங்கள் பொன்னிறமாய் மின்னுகின்றன. கதாபாத்திரங்கள் பேசிக் கொள்ளும் ரஷ்யன், ஜெர்மன் மகாயுத்த விவரங்கள், பிரகாஷ்ராஜின் சைக்கிள் விளக்கு, கிராமத்துக்கு முதல் முதலாய் வரும் மோட்டார் வண்டியை ஒரு திருவிழா போலப் பார்க்கும் கூட்டம். பெரிய பொட்டு வைத்த ஸ்மிதா பட்டேல் சாயல் கொண்ட பெண்கள், கூரைவீடுகள், வெள்ளைக் காரனுக்கு ஜமீந்தாரின் (அல்லது அதிகாரியின்) உதவியாளனின் ஆங்கில மொழிபெயர்ப்பு, நான்கு பெண் குழந்தைகள் தோளில் கை போட்டுக் கொண்டு சேர்ந்து ஆடும் ஊஞ்சல், ஸ்லேட் எடுத்துக்கொண்டு கதை பேசியபடி பள்ளிக்குப் போகும் குழந்தைகள், யானையின் கால்களுக்கு இடையில் ஓடும் குழந்தைகள், பட்டாளத்துக்குப் போகும் பையன், காந்தி இறந்ததனால் ரேடியோவில் ஒலிபரப்பாகும் சோக இசை, தொழிலாளிகளை எப்போதும் சுரண்டிப் பிழைக்கிற பகட்டான முதலாளி, அடுப்பு ஊதி சமைத்துக் களைக்கிற, கணவன்பின் நடக்கிற அப்பாவி மனைவிகள், ஒரே ஒரு வாளித்தண்ணீரை ஒரு சீன் முழுக்க இறைகிற பெண் (தண்ணீர் அவ்வளவு ஆழத்தில்), மழைச் சகதியில் உருண்டு ஓடுகிற பஸ்ஸின் ஸ்டெப்னி டயர், நெசவாளர்கள் நடத்தும் கம்யூனிஸம் பூசிய முதலாளித்துவ எதிப்பு நாடகம் என சுவாரஸ்யமான விஷூவல் ட்ரீட்மெண்ட்கள் இறுதிவரை அழகாக எளிதாக படத்தை நகர்த்திவிடுகின்றன.

எளிய உழைப்பாளிகளின் வாழ்க்கையின் வலியை அழகாக நறுக்கென்று சொல்ல முயற்சித்திருக்கிறார் பிரியதர்ஷன். ஆனால் இது அவரின் “பெஞ்ச் மார்க்” படமா என்று யோசித்தால் இல்லையென்றுதான் தோன்றுகிறது. படத்தின் “prelude"-ல் கோடிகாட்டிச் சொல்லப்படும் விஷயங்களும், பிரகாஷ் ராஜின் நடவடிக்கைகளும் முடிவு இப்படித்தான் இருக்கவேண்டுமென்று ஊகிக்க வைத்துவிட்டது. மேலும் பிரகாஷ்ராஜுக்கு இது முக்கியமான படமாகக் கொண்டாலும், அவரின் உச்சபட்ச நடிப்புத்திறனை வெளிக் கொணர்ந்த படமென்றும் சொல்லிவிட முடியாது. இதைவிடச் சிறப்பாக எத்தனையோ செய்திருக்கிறார். எம்.ஜி. ஸ்ரீகுமாரின் இசையில் மலையாளச் சாயலுடனான ஒரு பாடலும், பின்னணி இசையும் மோசமில்லையென்று சொல்லலாம். ஸ்ரேயா ரெட்டி, ஷம்மு போன்றவர்களின் மிகையில்லாத இயல்பான நடிப்பும் படத்தின் காட்சிகளுக்கு ஒரு புதிய வண்ணத்தைச் சேர்க்கிறது.

மழையினூடான பஸ் பயணத்தில் காவலரின் தொப்பியில் பேட்ஜ் அறுந்துவிட அது இல்லாமல் அதிகாரியின் முன்னால் போய் நின்றால் வேலை போய்விடும் அபாயம். பிரகாஷ் ராஜின் ஃப்ளாஷ்பேக் பகுதிகள் ஒவ்வொன்றாய் நிறைவுபெறும் இடைவெளிகளில் காவலர் பேட்ஜை தைக்கிற முயற்சிகளை மேற்கொள்கிறார். இறுதியில் அவரது பிரயாசை தோல்வியில் முடிகிறது. பிரதான படத்தை விட்டு விலகியிருந்தாலும் ஒரு சிறுகதைக்கான அல்லது குறும்படத்துக்கான விஷயமாக அநாயாசமாக வந்துபோகிறது இது.

பார்த்து முடித்தபிறகு மனசுக்குள் நான் எதிர்பார்த்திருந்த ஏதோ ஒரு பெரிய “இம்பேக்ட்” இதில் மிஸ்ஸிங் போலத்தோன்றியது. (ஒரு வேளை இளையராஜாவாக இருக்குமோ?) முக்கியமாக சோகமான காட்சிகள் ஒரு பெரிய நெகிழ்வை ஏற்படுத்தத் தவறியது போலொரு உணர்வு.

உலக சினிமாக்களின் தரத்துக்கு இணையாக இப்போதைக்கு காஞ்சிவரத்தை உயர்த்திப் பேசமுடியாது என்றாலும் நம் ஆட்களின் அபார சிந்தனைகளும் இது போன்ற முயற்சிகளும், நம் இந்திய சினிமா ரசிகர்களை அபத்தமான குத்துப் பாட்டுகளிலிருந்தும், ஹீரோயிச பில்டப்களிலிருந்தும், காதல் காட்சிகளிலிருந்தும் மீட்டு, ரசனையின் தரத்தை நிச்சயம் உயர்த்தும்.

ஒரு நாள் நம் சினிமாவும் உலக சினிமா ஆகும் என்கிற நம்பிக்கையை மீண்டும் அளித்த பிரியதர்ஷனுக்கு என் பாராட்டுக்கள்.

இந்தப்படத்தைப் பார்த்து முடித்ததும் எப்போதோ படித்த கவிதை ஒன்று ஞாபகத்திலிருந்து குதித்தது. படத்திற்கும் இதற்கும் ஏதோ சம்பந்தமிருப்பதுபோலக் கூடத் தோன்றியது. எழுதியவர் பெயர் “மார்க்ஸ்” (Marx) என்று குறித்து வைத்திருக்கிறேன்.

”பட்டுப்பூச்சி பட்டிழை நூற்கிறது.
பட்டிழையை நெய்வது
அதன் இயல்பாகிவிட்டது.
நூற்காமல் அதனால் இருக்க முடியாது.
வாழ முடியாது.
நூற்பதனால் அதற்கு
சாவு விதிக்கப் பட்டிருக்கிறது.
வேண்டாம் என்றால் கேட்காது.
நூற்பதே வாழ்வு.
சாவு ஒரு பொருட்டல்ல என்பது
அதன் பதிலாக இருக்கக் கூடும்.
பட்டு அழகானது!! அற்புதமானது!!
அதற்காக உயிரைக் கொடுக்கலாம்.
தப்பில்லை.”

சண்டை

முன்னொரு காலத்தில் சினிமாக்களில் எம்.ஜி.ஆர், சிவாஜி என்றழைக்கப்படும் நடிகர்கள் வாழ்ந்து வந்தார்கள். சினிமாவில் எங்கெல்லாம் எப்பொழுதெல்லாம் அக்கிரமக்கார்கள் அப்பாவிகளுக்கு வஞ்சனையால் அநீதியிழைக்கிறார்களோ, அங்கெல்லாம் குதிரை, ரிக்ஷா போன்ற கிடைக்கிற வாகனங்களில் கடுகி விரைந்து வந்து வானத்தில் எம்பிக் குதித்து அக்கிரமக்காரர்களை உதைத்து பூமியில் உருட்டிவிட்டார்கள். சாட்டை, பட்டாக்கத்தி, வாள், வேல் முதலான சாமானியர்கள் கையாள்வதற்கியலாத ஆயுதங்களை அநாயசமாக கையாண்டு சளைக்காமல் சண்டையிட்டார்கள். அடிபட்டு விழுந்தாலும் வில்லனை நோக்கி ஒரு அலட்சியப் பார்வையை வீசிவிட்டு இதழ்கடையோரம் அரும்பிய உதிரத்தை வலது கை கட்டை விரலால் ஸ்டைலாக துடைத்துவிட்டு முழு வீச்சோடு பாய்ந்தார்கள். இறுதியில் தன் சக்தியையெல்லாம் இழந்து கீழே குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கும் பகைவனின் நெஞ்சில் காலும் அவன் கழுத்தில் கத்தியும் பதித்து ஓரிரு டயலாக் உதிர்த்து அவனை மன்னித்து விடுதலை செய்தார்கள். அல்லது உத்தரத்தை நோக்கிச் சுட்டுக்கொண்டே கடைசி காட்சியில் உள்ளே நுழைந்த இன்ஸ்பெக்டரிடம் அவனை ஒப்படைத்துவிட்டு சட்டத்துக்கு காவலர்களானார்கள்.

இந்த மாதிரி காட்சிகளில் கத்திச் சண்டையாயிருந்தால் டிணிங் டிணிங் என்ற சப்தமும், வெறும் கை என்றால் டிஸ்யூம் டிஸ்யூம் என்ற சப்தமும் ஒரு இருபது நிமிடங்களுக்கு இடைவிடாது கேட்டுக்கொண்டிருக்கும். பிண்ணனியில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும்பொருட்டு பாம் பாம் பாம், தடுபுடுதடுபுடுதடுபுடுதடுபுடு என்று இசையமைப்பாளர் ட்ரம்ஸையும் ட்ரம்பட்டையும் உருட்டியவாறிருந்தார். இடையிடையே கதாநாயகர்களின் அருமை வளர்ப்பான குதிரை, அல்லது கறுப்பு நாய் முதலானவை, வில்லனால் கட்டிப்போடப்பட்டிருக்கும் குடும்ப உறுப்பினர்களின் கட்டை அவிழ்த்தோ அல்லது வெடிக்கவிருக்கும் குண்டின் திரியில் சிறுநீர் கழித்தோ தம்மாலான வகையில் நீதிக்குத் துணைபுரிந்தன.

இந்தமாதிரி சண்டைக்காட்சிகளில் திரையரங்கில் கரகோ்ஷங்களும், விசில்களுமாக அதிர்ந்து தூள் பறந்தன. சினிமா அதன் அழகிய பொய்களை, செல்லுலாய்ட் கதாநாயகர்களின் வீரத்தோடு கலந்து உறுத்தாமல் ரசிகர்களுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தது. அவர்களின் மனம் திரையரங்கைவிட்டு வெளியில் வரும்போது மிக உற்சாகமாயிருந்தது.
கமலஹாசன், ரஜனிகாந்த் போன்றோர் வந்தபிறகு வில்லன்கள் சற்று ஆடித்தான் போனார்கள். பின்னே இவர்களுக்கு கராத்தேவும், குங்ஃபூவும் வேறு தெரிந்திருக்கிறதே. செகண்டுக்கு முப்பத்தியிரண்டு குண்டுகள் வீதம் பொழியும் இருபத்துக்கும் மேற்பட்ட இயந்திரத் துப்பாக்கிகளாலும் இவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. சாக்கில் கட்டி கடலில் வீசினாலும் மிதந்து எழுந்து வந்தார்கள். நிஜமான பராக்கிரமசாலிகள்தான். ஆகவே இதுபோன்ற சாகாவரம்பெற்ற கதாநாயகர்களை அடியோடு ஒழித்துக்கட்ட ராக்கெட் லாஞ்ச்சர்களும், க்ரானைடு குண்டுகளும் வில்லன்களுக்கு நிறைய தேவைப்பட்டன. கமலஹாசனுக்கே இப்படியென்றால் மாருதி காரையெல்லாம் ஒற்றைவிரலால் தூக்குகிற சரத்குமார்களை வெறுங்கையால் சண்டையிட்டுக்கொல்வதென்ன சாதாரண விஷயமா என்ன? தயாரிப்பாளர்களுக்கு செலவு இழுக்கத் தொடங்கியது.

சினிமாவில் கொள்ளைக்கூட்டத் தலைவர்கள் மறைந்து, தங்கத்தைக் கடத்துபவர்களின் ட்ராஃபிக் அதிகமாகத் தொடங்கியது. அப்புறம் தங்கம் தீர்ந்துபோய் அதிகம் சிரமமில்லாமல் ப்ரெளன் சுகர். இடைஞ்சலாய் இருக்கிற கதாநாயகர்களை துவம்சம் செய்யப் போன அடியாட்கள் கைகாலில் கட்டுடன் திரும்பி வந்தார்கள். ஆட்கள் போதவில்லை. ஆயுதங்களும். எத்தனை நாள்தான் கஞ்சாவையே கடத்துதென்று அலுத்து சாராயம் காய்ச்சிப் பார்த்தார்கள். அங்கேயும் விஜயகாந்த் எழுந்தருளி மேற்படி சட்டவிரோதக்காரர்களை பக்கத்து மரத்தில் கால் வைத்து எகிறி அடித்தமையால் பேசாமல் அரசியல்வாதியாவதைத் தவிர வில்லன்களுக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது. அரசியலென்றால் எப்படியும் அடியாட்கள் எனப்படுபவர்களையும் கழுத்தில் ஒரு கிலோ சங்கலியணிந்த தாதா என்றழைக்கப்படுகிற அதிபயங்கர வில்லன்களையும் ஏவி கதாநாயர்களின் வீரத்துக்கு சவால்விட ஆரம்பிக்கலாமே. இதன் மூலம் அணுகுண்டை நெஞ்சில் தடுத்து மாண்புமிகு வில்லர்களின்பால் திருப்பியனுப்பும் கதாநாயகனுக்கு அரிவாள் என்கிற ஒரு பயங்கர ஆயுதத்தை அறிமுகம் செய்ததன்மூலம் தமிழ்த்திரை சண்டைக்காட்சி ரசிகர்களை கொஞ்சமாய் நகர்த்தி சீட் நுனியில் உட்கார வைத்தார்கள்.

இப்போது ரசிகன் உற்றுப் பார்க்க... ஸாரி... கேட்க ஆரம்பித்தான். அடடே... அந்த டிஸ்யூம் டிஸ்யூம் சப்தத்தையே காணோமே. அதற்குப் பதில் என்ன இது இடி இடிக்கிற மாதிரி.. ஓ... DTS... அப்படியொன்று வந்துதான் பல நாட்களாயிற்றே..! வருடங்கள் எத்தனை உருண்டிருந்தாலும், எத்தனைதான் நையப் புடைத்து அனுப்பியிருந்தாலும் மறுபடி மறுபடி எதிரே தோன்றுகிற இந்த தாதாக்களை ஒழிக்க நம்மருமை கதாநாயகனுக்கு ஒரேயொரு வழிதான் இருந்தது. அது தப்பித்து ஓடுகிற மாதிரி ஓடி துரத்துகிற அடியாட்களை ஒரு சந்து முனையில் கார்னர் செய்து திரும்பி நின்று எரிமலையை கண்களில் தேக்கி வைத்து முறைப்பது. இந்த இடத்தில் ரீ ரெகார்டிங் அனைத்தையும் நிறுத்திவிட்டு நம் கதாநாயகனின் வலது அல்லது இடது கை விரல்கள் மடங்குவதை ஒரு மாதிரி நெறிபடுகிற சப்தத்துடன் மிக மிக டைட் குளோசப்பில் காட்டவேண்டும். அரை நூற்றாண்டு காலமாக சண்டைக் காட்சிகளில் ஊறித் திளைத்திருந்த ரசிகப் பெருமகனானவன் அடுத்து என்ன நடக்கிறதென்பதை மிக சுளுவாக ஊகித்துக்கொண்டான். கதாநாயகனிடம் முதல் அடி வாங்குகிற அடியாளைப் பார்த்தீர்களா? அந்த முதல் அடி என்பது மிக முக்கியம். அது நாயகன் எப்படிப் பட்டிவன் என்பதற்கான முன்னுரை. திடீரென DTS சர்ரெளண்ட் சவுண்டு ஸ்பீக்கர் தன் அதிக பட்ச இடியை ரசிகனின் காது ஜவ்வுகள் அதிரப் பாய்ச்ச இதோ அடியாள் அந்தரத்தில் 13 கரணம் போட்டு (இது கொஞ்சம் ஸ்லோ மோஷனில் காட்டிவிட்டு) தூரத்தில் ஊருக்கு ஒளி வழங்கும் ட்ரான்ஸ்ஃபார்மர் ஒன்றின்மேல் பொறி தெரிக்க (இது கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஃபாஸ்ட் மேட்ரிக்ஸ் எஃபெக்டில்) வெடித்து விழுந்தான் பாருங்கள். மற்ற அடியாட்கள் தொண்டையில் எச்சில் விழுங்கினார்கள். பின்னே கதாநாயகனும் முன்பு தாதாவாக இருந்ததும் அவனுக்கு இன்னொரு பெயர் இருந்ததும் பின்னர் தெரிய வந்தது.

அதற்கப்புறம் விழந்த ஒவ்வொரு அடியிலும் தியேட்டரில் ரசிகனின் தாடை கிழிந்து தொங்கியது. அவன் ரத்தம் சூடாகி நரம்புகள் ஜிலீர் ஜீலீர் என்று அதிர்ந்தன. அடியா இது. இடி. போததற்கு ஒரு பாட்டி வேறு வந்து கதாநாயகனை உற்சாகப் படுத்தும் வகையில் பாட நிஜமாகவே அவன் ஒரு சூறாவளிக் காற்றென சுழன்று எழுந்தான். க.நா அடியாட்களின் கைகளைத் திருகி வீசுகிற போது எக்ஸ்ரேயில் எலும்புகள் ஒடிவது தெரிந்தன. இந்த கிராஃபிக்ஸ் என்று ஒன்று வந்து சேர்ந்துவிட்டதாமே நடுவில். நல்லதாகப் போயிற்று. இனி தாதாக்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் சிம்ம சொப்பனம்தான். வில்லனைப் பந்தாட விஜய் நடந்துவரும்போது அவர் ஷுவில் பட்டாசு எதுவும் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை. அப்புறம் எப்படி சாணை பிடிப்பது மாதிரி தீப்பொறி பறக்கிறது? ஓ! கிராஃபிக்ஸ். இனி காலைச்சுழற்றி தரையில் புயல்காற்றை உருவாக்கி வில்லன்களை கதிகலங்கச் செய்வது சுலபம். இப்படி எத்தனையோ!

கதாநாயகன் DTS, க்ராஃபிக்ஸ், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மற்றும் எடிட்டிங் துணைகொண்டு முஷ்டி மடக்கி விசிறின ஒவ்வொரு அடியிலும், மண்டை பிளந்து, கைகால் முறிந்து, தாடைச் சதைகள் பிய்ந்துபோய், கழுத்தெலும்பு மளுக்கென்று முறிக்கப்பட்டு, சுவரோடு அடித்துத் துவைக்கப்பட்டு, கண்கள் பிதுங்கி, நரம்புகள் தளர்ந்து உயிர்நாடி ஊசலாடி ஓய்ந்து இருக்கைகளில் கிடக்கிறான், தொன்று தொட்டு குடும்பத்தோடு திரைப்படம் காணவந்து கொண்டிருக்கும் ரசிகன். இதற்கு முன் பார்த்த திரைப்படத்தில் ஒரு சண்டைக்காட்சியினைக் கண்ணுற்று இதயம் நடுங்கி அதிர்ந்து மிகவும் பயந்துபோய் இரவெல்லாம் உளறின தன் குழந்தைக்கு காதில் வைப்பதற்கு பஞ்சோடு இன்றைக்கு "அந்நியன்" என்ற இந்தப் படத்தைக் காண வந்தவனும் கொஞ்சம் நடுங்கித்தான் போய்விட்டான் இந்தத் தடவை. வெளியே வந்தபோது விண் விண் என்று தலை வலித்தது.

வந்த கையோடு இந்த வலைப்பதிவையும் எழுதி வைத்தான். எம்.ஜியாரும் சிவாஜியும் வந்து இந்த DTS என்கிற வில்லனை எப்படியாவது ஒழித்துக்கட்டினால் இனி குழந்தைகளையும் தைரியமாய் சண்டைப்படத்துக்கு கூட்டிக்கொண்டு போகலாமென்று அவனுக்குத் தோன்றுகிறது.

சொர்க்கத்தின் குழந்தைகள்

போனவாரம் ஒரு சில பிற மொழிப் படங்களைப் பார்த்தேன். சில்ட்ரன் ஆஃப் ஹெவன், நோ மேன்ஸ் லேண்ட், சேவியர் மற்றும் சிக்ஸ்த் சென்ஸ். இதில் சில்ட்ரன். ஆஃப் ஹெவனும், நோ மேன்ஸ் லேண்ட்டும் ஏற்கனவே பார்த்தவைகள்தான். ஆனால் மறுபடி பார்க்கத் தூண்டுகிற படங்கள்.

'சில்ரன் ஆஃப் ஹெவன்' பற்றி சிலாகித்தே ஆகவேண்டும். இது ஒரு ஈரானியப் படம். இத் திரைப்படத்தின் முக்கியப் பாத்திரங்கள் ஸ்கூல் போகிற ஒரு பையனும் அவன் தங்கையும், அப்புறம் ஒரு ஜோடி ஷூவும்தான். இன்னும் சொல்லப் போனால் ஷூதான் படத்தில் ஹீரோ. சின்னச் சின்ன உணர்வுக் கலவைகளோடு ரசிக்கத்தக்க வகையில் சுவாரஸ்யமாய் இப்படிக்கூட கதை சொல்ல முடியுமாவென்று ஆச்சரியமாய் மறுபடி மறுபடி பார்த்தேன். நம்மூர் புது இயக்குநர்கள் சில்ரன் ஆஃப் ஹெவனை பத்து தடவையாவது போட்டுப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. எந்த ஆர்ப்பாட்டமும் கூத்தும் இல்லாத எளிய திரைக்கதை அமைப்பைக் கொண்ட இப்படத்தைப் பார்த்து முடிக்கும்போது ஒரு நல்ல சிறுகதை அல்லது குறுநாவல் படித்த உணர்வு நிச்சயம் எழும் என்பதற்கு நான் கியாரண்டி தருகிறேன்.

இதே மாதிரி தி சிக்ஸ்த் சென்ஸ். 1999 ல் பல ஆஸ்கார்களை வென்று குவித்த இந்தப் படத்தை ரொம்ப லேட்டாகப் பார்க்க நேரிட்டது என் துரதிருஷ்டம். புத்திசாலித்தனமான திரைக்கதை அமைப்பு, சைக்கலாஜிகல் திரில்லர் என்றெல்லாம் உலகலாவிய பாராட்டைப் பெற்ற இந்தப் படம் தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தபோது ஏனோ பார்க்கவில்லை. படத்தில் என்ன கதை என்பதை வரிந்து வரிந்து நண்பனொருவன் விளக்கிச் சொன்னதும்கூட நான் சுவாரஸ்யமிழக்கக் காரணமாயிருந்திருக்கலாம். இப்போது காணக் கிடைத்தபோது நிஜமாய் பிரமிப்பாய் இருந்தது. டை-ஹார்ட்-ல் கிழிந்த பனியனும் கையில் துப்பாக்கியுமாக அட்வென்சர் ஆசாமியாகப் பார்த்த ப்ரூஸ் வில்லீஸை, டாக்டர் மேல்கம் க்ராவ் என்ற பாத்திரத்தில் அமைதியான உணர்ச்சிகரமான ஒரு குழந்தைகள் சைக்காலஜிஸ்ட்டாகப் பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ப்ரூஸ் வில்லீஸூடன் போட்டி போட்டு நடித்திருக்கும் அந்தப் பையன் ஹேலி ஜோயல் ஆஸ்மெண்ட்-ன் முகம் மனசைவிட்டு அகல மறுக்கிறது. (இப்போது பெரிய பையனாகிவிட்டான் போல!) இந்தப் படத்திலும் எல்லாவற்றையும்விட, புருவத்தை உயரவைக்கும் திரைக்கதைதான் ஹீரோ என்பதில் சந்தேகமில்லை. பார்த்த அன்று இரவு தூக்கம் வரவில்லை. இருட்டிக்குள் போக லேசாய் பயமாயிருந்தது. ஏனென்பது படம் பார்த்தவர்களுக்குத் தெரியும். ரொம்ப லேட்டாய்ப் பார்த்தாலும் மிகவும் அசத்திய இந்தப் படத்தின் விவரங்களை நெட்டில் தேடிக்கொண்டிருந்தபோது திடீரென்று அதன் ஸ்க்ரிப்ட் அகப்பட்டதும் மனம் புளகாங்கிதமடைந்துவிட்டது. டெளன்லோடு பண்ணி ஒரே மூச்சில் படித்து முடித்தேன். படிக்கப் படிக்க ஆச்சரியம் உயர்ந்துகொண்டே போகிறது. என்னமாய் எழுதியிருக்கிறார். ஒரு நல்ல தரமான திரில்லர் நாவல் படித்து முடித்த திருப்தி கிடைத்தது. (இந்தத் திரைக்கதையின் நோட்பேடு வடிவத்தைப் பார்த்தால் மூவி மேஜிக் அல்லது அல்லது ஃபைனல் ட்ராஃப்ட் போன்ற மென்பொருள்களின் உதவியால் எழுதப்பட்டிருக்கலாம் என்று தோன்றியது.)

தி சிக்ஸ்த் சென்ஸ் போல இன்னும் நிறைய புகழ்பெற்ற ஹாலிவுட் திரைக்கதைகள் html, pdf அல்லது txt வடிவங்களில் கிடைக்கின்றன. இந்த மாதிரி சிலவற்றை என் கணினியில் இறக்கி வைத்திருக்கிறேன். அவற்றில் சில - American Beauty, Gladiator, Breave Heart, Rush Hour, Face/Off, Signs, Cast Away, Terninator 2, Trueman show, Saving Private Ryan, etc. Roberto Benigni-யின் "Life is beautiful" என்ற படத்தின் திரைக்கதையை தேடிக் கொண்டிருக்கிறேன். இன்னும் கிடைக்கவில்லை. இம்மாதிரி திரைக்கதைகளில் எது திரைப்படமாக்கப்பட்ட இறுதி வடிவம் என்று தேடிப் பார்த்து இறக்குமதி செய்ய வேண்டியது அவசியம். சிலவற்றில் "third draft" என்றோ "Shooting script" என்றோ கூட போட்டிருக்கும். சிலவற்றை இறக்குமதி செய்ய பைசா கேட்கிறார்கள். திரைக்கதை எழுதுவது எப்படி என்பதற்கு புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்துக்கொண்டிருக்கும் வருங்கால இயக்குநர்கள் கூடுமானால் இந்த ஸ்கிரிப்டுகள் எல்லாவற்றையும் ஒரு புரட்டு புரட்டிப் பார்த்தால் அவர்களுக்கும் மக்களுக்கும் உதவியாயிருக்கும் என்று நினைக்கிறேன். தமிழில்கூட வெற்றி பெற்ற / பெறாத சில படங்களின் திரைக்கதைகள் புத்தகமாக வெளிவந்திருப்பதை அறிவேன். (உதா : சேது, ஹே ராம்.) ஹாலிவுட் ஸ்கிரிப்ட்கள் மாதிரி நல்ல தமிழ்த் திரைக்கதைகளையும் எப்போது வலையில் இறக்குமதி செய்கிற வசதி கிடைக்குமென்பதையும், அப்படி ஏதேனும் முயற்சிகள் நடக்கின்றனவாவென்பதையும் அறிய அவா!

ஹாலிவுட் பிரியர்களுக்கு எனக்கு தெரிந்த ஏதோ சில உபரி தகவல்களையும் சொல்லிவிடலாமென்று நினைக்கிறேன். www.imdb.com என்கிற வலைத்தளம் உலகளாவிய வகையில் திரைப்படங்கள், அவற்றின் இயக்குநர்கள், மற்றும் இன்னபிற விவரங்களைத் தொகுத்துத் தருகிறது. மணிரத்னம் என்று தேடினாலும் கிடைக்கிறது. ஸ்பீல்பெர்க் என்று தேடினாலும் கிடைக்கிறது. இந்த மகா வலைத்தளத்தை உருவாக்கிய புண்ணியவானுக்கு என் வந்தனங்கள். அது மாதிரி www.apple.com/trailers என்று போட்டுப் பாருங்கள். இப்போது ஹாலிவுட்டில் தயாரிக்கப்பட்ட அத்தனை புத்தம்புது படங்களின் ட்ரைலர்களைப் அவரவர் Band Width செளகரியத்தில் பார்க்க அருமையான வலைத்தளம். இங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆங்கிலப் படங்களின் ட்ரைலர்கள் சிறியதும் பெரியதுமாக சுமார் 70 வைத்திருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒரு சிறுகதை மாதிரி மிரட்டக்கூடியவை. முன்பு கிடைத்துக்கொண்டிருந்த Broad Band நெட் வசதி என் வாழ்விலிருந்து துண்டிக்கப்பட்டதும் இந்த ட்ரைலர் சேகரிக்கிற பழக்கம் நின்று போனது. மீண்டும் கிடைத்தால் தொடர விருப்பம்.

இது மாதிரி இணையப் பெருங்கடலில் நிறைய ஆழ்ந்து கிடக்கின்றன. ஆழமாய் மூழ்கிப் பொறுமையாய்த் தேடினால் நிறைய ஆச்சரியங்கள் கிடைக்கும்.

மறுபடியும் கணேஷ்

இதற்கு முந்தைய வலைப்பதிவில் என் நண்பனுக்குக் கொடுத்தனுப்பிய துண்டுச்சீட்டுக் கடிதம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாய் ஒரு நிகழ்வு என் வாழ்க்கையில் சம்பவித்ததையும் இங்கே சொல்லிவிடலாம் என்று நினைக்கிறேன். அவன் பெயர் கணேஷ். இடம் உடுமலைப்பேட்டை. கவனிக்க! ஊர், பெயர் மாற்றப்படவில்லை. நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம். என் வீட்டுக்கு நாலுவீடு தள்ளி அவன் வீடு இருந்ததாலும், நான் படித்த டியூசன் வாத்தியாரிடமே அவனும் படித்தான் என்பதும் நானும் அவனும் உற்ற நண்பர்களாயிருப்பதற்கு ஒரு சில காரணங்களாயிருந்தன. அப்பொழுதெல்லாம் வீட்டில் எதையாவது சொல்லிவிட்டு, கல்பனா தியேட்டரில் வாராவாரம் மாற்றும் "மிடில் ஷோ" ஆங்கிலப்படங்களை ரெண்டுபேரும் எப்படியாவது பார்த்துவிடுவோம். (அதாவது ஃபர்ஸ்ட் ஷோவிற்கும், செகண்ட் ஷோவிற்கும் நடுவில் ஒரு இடைச்சொருகலாய் ஒரு காட்சி ஓட்டுவார்கள்.) மிக முக்கியமாய் ஜாக்கிசான், ஜேம்ஸ்பாண்ட். இன்னபிற இங்கிலீஷ் ஆக்்ஷன் படங்கள்.

இன்ன தியேட்டர் என்று குறிப்பிட்டு சினிமா போலாமா என்று கேட்டு என் தம்பியிடம் மேற்படி துண்டுச்சீட்டைக் கொடுத்தனுப்புவேன். தம்பிக்காரனும் ஒரு தபால்காரரின் சிரத்தையுடன் அதை கணேஷிடம் ஒப்படைத்துவிட்டு வருவான். கணேஷ் அவன் பெற்றோர்களுடன் அது குறித்து விவாதித்து முடிவெடுத்து அதை அவன் தம்பிக்காரனிடம் எழுதிக்கொடுத்தனுப்பிவிடுவான். இப்படியாக தகவல் பரிமாற்றத்துக்கு தம்பிகளையும், துண்டுப் பேப்பர்களையும் வெகுவாக உபயோகித்து அபிமான குங்ஃபூ படங்களை தவறவிடாமல் பார்த்துக்கொண்டிருந்தோம். எந்த உலகக் கவலைகளின் சுவடையும் மிதிக்காமல், மதிக்காமல் மிக சந்தோஷமான காலகட்டம் அது.

நிற்க!. மேற்படி துண்டுச்சீட்டுகளில் ஒன்றை நான் ஞாபகமாய் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். (இது போல் நிறைய உண்டு). ஓரிரு கரப்பான் பூச்சிகள் உள்நுழைந்திருந்த என் பெட்டிக்குள் அது பல வருடம் பாதுகாப்பாய் இருந்தது. கணேஷ் என்கிற என் நண்பன் அதற்கப்புறம் காலம் எட்டி உதைத்ததில் டெல்லிப்பக்கம் போய் விழுந்திருந்தான். பிறகு ஓரிரு வருடங்கள் அப்படியும் இப்படியுமாக கடிதப்போக்குவரத்தில் நட்பு ஓடிக்கொண்டிருந்தது. பிறகு என்ன ஆயிற்றோ தெரியவில்லை. அதுவும் திடீரென்று நின்றுபோய்.. 700 கோடி பேர்களுள் ஒருவனாய் அவன் காணாமல் போய்விட்டான். பெரிய படிப்பு, பெரிய வேலை என்று அவன் எல்லைகளை விஸ்தரித்துக்கொண்டு போனான். கடிகாரத்தை பார்க்கக்கூட சமயமில்லாமல் உழைத்ததில் ஒரு சில உயரங்களை அடைந்திருந்தான் என்று வேறு சில நண்பர்கள் மூலம் தெரிந்துகொண்டேன். நான்தான் அவன் வட்டத்திலிருந்து தொலைந்துவிட்டேன் போல. பிறகு அவன் எங்கேயிருக்கிறான், என்ன பண்ணிக்கொண்டிருக்கிறான் என்று தெரியாமல் ஒரு சில தேடல் முயற்சிகளுடன் நிறுத்திக்கொண்டேன். வருடங்கள் உருண்டன.

அப்புறம் திடீரென்று ஒருநாள் திடுதிப்பென்று என் வாழ்வில் டெக்னலாஜிக்கல் மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. வலது கையில் மெளசும் இடது கையில் கீபோர்டுமாக கம்ப்யூட்டர் திரையை வெறித்துப்பார்க்கும் வேலையொன்று எனக்கு அமைந்துவிட்டது. அந்தப்பக்கம் இந்தப்பக்கம் அசையவிடாமல் என் இருக்கையைச்சுற்றி இன்டெர்நெட்டும் வலை பின்னத்தொடங்கியிருந்தது அதன் மகா ஆச்சரியப்பக்கங்களை விலக்கி விலக்கி தேடிக்கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது ஒரு வலைத்தளம். அலும்னி டாட் நெட்! வாழ்க்கையில் தொலைந்து போன உங்கள் மனதிற்கினிய க்ளாஸ்மேட்டுகளை இந்த வலைத்தளத்தின் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்று பறைசாற்றுகிற அதை முதன் முதலில் பார்த்தபோது கணேஷ் ஞாபகம்தான் வந்தது. உடனே விரல்கள் பரபரப்பாகி அந்த வலைத்தள கடலுக்குள் டைவ் அடித்துவிட்டேன். ஆனால் ஒன்று நினைவு வந்தது. அவன் என் க்ளாஸ்மேட்டும் அல்ல. அப்புறம் எப்படி கண்டுபிடிப்பது? இருந்தாலும் விடாமுயற்சியுடன் தேடியதில் கணேஷ் என்கிற பெயர் ஒரு விவரப்பக்கத்தில் அகப்பட்டது. ஆயிரம் கணேஷ்களில் அவன்தானா அது? தெரியாது. 50-50. இருந்தாலும் என்ன கெட்டுப்போயிற்று என்று அங்கே கிடைத்த மின்னஞ்சல் முகவரிக்கு கீழ்க்கண்டவாறு எழுதினேன். "நீ நெல்லுக்கடை வீதி முக்கு வீட்டுல குடியிருந்த கணேஷ் எனில் பதில் எழுதவும். இல்லையேல் சிரமத்திற்கு மன்னிக்கவும்."

இண்டர்நெட் என்கிற வேதாளம் எப்படி பாதாளம்வரை பாய்கிறது என்பதை கண்கள் விரிய, மயிர்கால்கள் சிலிர்க்க கண்ணுற்ற சம்பவம் மறுநாள் நிகழ்ந்தேவிட்டது. "நான் அதே கணேஷ்தான். நீ எங்கடா இருக்கே?" என்று பதில் வந்திருந்தது. துண்டுச்சீட்டு, மிடில் ஷோ ஜாக்கிசான் இன்னபிற விஷயங்களை லேசாய் கேட்டு அவன்தான் என்று உறுதிப்படுத்திக்கொண்டேன். உட்கார்ந்த இடத்திலிருந்து அவனைக் கண்டுபிடித்துவிட்ட ஆச்சரியம் ஒரு இரண்டு மூன்று நாட்களுக்கு இருந்தது. என்னிடம் அவன் பிடிபட்டபோது பக்ரைனில் இருந்தான். கல்யாணமாகி ரெண்டு குழந்தைகள் என்றான். உடனே அவன் குடும்பப் புகைப்படங்களை JPG -களாக ஆன்லைனில் பகிர்ந்துகொண்டான். என் புகைப்படங்களையும் கேட்டிருந்தான். அனுப்பிவைத்தேன். கூடவே பல வருடங்களுக்கு முந்தைய அந்தத் துண்டுச்சீட்டை ஸ்கேன் பண்ணி அவனுக்கு அவனுக்கு மின்னஞ்சலில் அனுப்பிவைத்தேன். அதில் லேசாய் கசங்கியிருந்த இங்க் பேனாவால் எழுதப்பட்ட அவன் கையெழுத்து. "ஞாபகமிருக்கிறதா?" என்று ஒற்றை வரியில் கேட்டிருந்தேன். மறுநாள் பதில் வந்தது. "எப்படி மறக்கமுடியும்? கல்பனா தியேட்டர்ல மிடில் ஷோ போன கதைகளை அடிக்கடி ஒய்ஃப் கிட்ட சொல்வேண்டா!"

அது சரி!!

இப்போது ஜப்பானில் இருக்கிறானாம். ஜாக்கிசானை அப்ப நேர்ல பாத்தா கேட்டதா சொல்லு என்றேன். சிரித்தான். கணேஷ் இப்போது எப்போதும் ஆன்லைனில்தான் இருக்கிறான். எப்போதும் அவன் ஸ்டேட்டஸ்ஸில் பிஸி என்று இருப்பதை காணமுடிகிறது. நல்லது. அதனால் என்ன? இப்போது அவன் என் பக்கத்திலேயே அல்லது பக்கத்து வீட்டிலேயே உட்கார்ந்துகொண்டிருப்பதுபோன்ற உணர்வு. எப்போதாவது ஹாய் சொன்னால் நிச்சயம் வந்து பேசுகிறான். அதுபோதும். இதைக்கூட இப்போது அவன் படித்துச் சிரித்துக்கொண்டிருக்கலாம்.

அவன் மறுபடி என்னிடமிருந்து தொலைந்து போகாமலிருக்க எல்லாம் வல்ல அருள்மிகு இண்டர்நெட்டேஸ்வரன் திருக்கோயிலுக்கு நேர்ந்திருக்கிறேன்.