ஓம் சாந்தி!


கடந்த சில நாட்களாக எனக்கு ஒரு பிரச்சினை. அதுவும் எனக்கு அது அடிக்கடி நிகழ்வதாகவும் தோன்றுகிறது. அது என்னவென்றால் யாரையாவது பிடித்து சகட்டு மேனிக்குத் திட்டுவது. இதற்கு முன்பு இப்படி செய்ததற்கு பெரிய முன் அனுபவம் எதுவும் அதிகமாய் இல்லை. இது என் இயல்புக்கு மாறான விஷயமாகவும் கூட அடிக்கடி தோன்றுகிறது. என் இயல்பையும் சுபாவத்தையும் நெருக்கமாய் அறிந்தவர்கள் இதைப் பார்த்தால் நிச்சயம் ஆச்சரியப்படுவார்கள்.

திட்டுவதென்றவுடன் ஏதோ தணிக்கை செய்யப்பட்ட, படாத வார்த்தைகளை இட்டு நிரப்பி, பரம்பரைகளை வம்பிக்கிழுத்து அல்லது பிறப்பு பற்றின சந்தேகங்களைக் கிளப்புகிறேன் என்று தயவு செய்து தவறாக நினைத்துவிடாதீர்கள். சென்னையில் சுமார் எட்டு ஆண்டுகள் வாழ்ந்தும் அந்த அளவு முன்னேற்றத்திற்கு மனதளவில் நான் தயாரில்லை. அதற்காக சும்மா வாய்க்குள் யாருக்கும் கேட்காத மாதிரி முணுமுணுத்துவிட்டு நகர்ந்துவிடுவேன் என்றில்லாமல் நாகரிக உலகில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சில சொற்பதங்களுடன் பக்கத்தில் நிற்பவர், நடப்பவர் அல்லது உட்கார்ந்திருப்பவர் என்று எல்லோர் காதிலும் விழுவதுமாதிரி நன்றாக சத்தமாக இரைதல்.

இதன் காரணமாக என்ன மாதிரி விளைவுகள் எனக்கு நேருகிறதென்று சொல்கிறேன். 1. உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து நரம்புகள் லேசாக புடைத்துக்கொள்கிறது. 2. நின்றுகொண்டு திட்டுவதென்றால் அநிச்சையாய் நடு நெற்றியை விரல்களால் தீவிரமாகத் தேய்த்துக்கொண்டு குறிவைக்கப்பட்ட எதிராளியை நோக்கி உர்ரென்று ஒரு பார்வையை வீசுதல். 3. ஆப்தல்மாலஜிஸ்ட்-கள் சொல்வது போல கோபத்தில் கருவிழிக்குள்ளே பாப்பா விரிதல் 4. அதிக டென்ஷன் ஏற்படுவதால் லேசாய் பெருமூச்சு வாங்குதல். 5. கோபத்தால் உடலானது இன்னபிற வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படுதல். 6. சூழ்நிலை மறத்தல்.

எதனால் திட்டவேண்டியிருக்கிறது? கோபம் வருவதால். எதனால் கோபம் வருகிறது? யாரோ என்னவோ செய்வது என்னை பாதிப்பதால். ஆனால் அவையெல்லாம் நியாயமான விஷயங்களுக்கான நியாயமான கோபங்கள் என்று எனக்கு நன்றாய்த் தெரியும். இது கூட வராவிட்டால் அப்புறம் என்ன மனுஷன் நீ என்று என்னை நானே சில நேரம் கேட்டுக்கொள்வதன் பின்விளைவாகத்தான் மேற்படி விஷயங்கள் அரங்கேறுகின்றன. அதைக்கூட பண்ணமுடியவில்லையெனில் இளிச்சவாயன் என்கிற பட்டம் கட்டி அப்படியே கட்டம் கட்டிவிட மாட்டார்களா மக்கள் என்றொரு எண்ணமும் கூடவே எழுகிறது. தவிர நான் புத்தனோ அல்லது புத்தனின் வழியைக் கடைபிடிப்பவனும் அல்லன். மூன்றாம் முறை முகத்தில் அறைந்தால் புத்தனுக்கும் கோபம் வரும் என்று படித்ததில்லையா நீங்கள்?

வாசற்படியில் கட்டிப்போட்டிருக்கிற நாயைக் காட்டி “ஒண்ணும் பண்ணாதுங்க” என்று சொல்கிற மாதிரி நம்மையும் இனியும் யாரும் சொல்லிக் கொண்டிருக்கக்கூடாது என்கிற முனைப்பின் எதிரொலி இது. இவன் ஒரு அப்பாவி, பிள்ளைப்பூச்சி என்கிற மாதிரி பெயர்கள் நமக்கு அடைமொழியாகவோ, புனைபெயராகவோ வந்து சேராமலிருக்கவேண்டுமென்றால் நாம் கிடைத்த சந்தர்ப்பங்களில் குரல் உயர்த்தி நிரூபணம் செய்துகொண்டால்தான் ஆயிற்று இல்லையா?

இப்படிப் புலம்புகிற அளவுக்கு அப்படி என்ன ஆயிற்று? சொல்கிறேன். ஒரு பிரபல மொபைல் மற்றும் இன்டர்நெட் சேவை நிறுவனம் இந்த மாசம் காரணமில்லாமல் உங்கள் பில்தொகையை இரட்டிப்பாக அனுப்புகிறது. காரணம் கேட்டால் கூலாக ‘டெக்னிகல் எர்ரர்’ என்கிறார்கள். நீங்கள் சர்வீஸூக்குக் கொடுத்திருந்த வாகனத்தில் நீங்கள் சொல்லியிருந்த குறைகளை சரியாகச் செய்யாமல் விடுவதுடன் புதிதாக ஒரு சில குறைகளை உண்டுபண்ணி அனுப்புகிறார்கள். நீங்கள் ஒரு எலெக்ட்ரானிக் இசைக்கருவியை சரிசெய்ய ஆழ்வார்பேட்டையிலுள்ள ஒரு சர்வீஸ் சென்டரில் கொடுக்கிறீர்கள். 10 நாட்களாகியும் அவர்களிடமிருந்து எந்தத் தகவலும் இல்லையே என்று, நீங்கள் நேரில் போனபோது அதி முட்டாள்தனமான (அல்லது அதி புத்திசாலித்தனமான) காரியத்தைச் செய்து வைத்திருக்கிறார்கள். உங்கள் அபார்ட்மெண்டில் டூவீலர் ஸ்டாண்டுக்கு நேர் மேலே உள்ள வீட்டின் பால்கனியில் அவர்கள் காகத்துக்காக குழம்பு சோறு வைக்கிறார்கள். (நல்ல விஷயந்தான்) மறுநாள் நீங்கள் குழந்தையுடன் ஸ்கூலுக்கு அவசரமாய் கிளம்பும்போது உங்கள் டூ வீலரைப் பார்த்தால் அது தலையிலிருந்து கால் வரை குழம்பு சோறால் நாறியிருக்கிறது. அதை கழுவ நிச்சயம் ஒரு பக்கெட் தண்ணீர் தேவைப்படும். காக்கைகளின் கைங்கரியம்தான் அது என்றாலும் தப்பு யாருடையது என்று உணர்ந்து நீங்கள் மேலே பால்கனியைப் நிமிர்ந்து பார்க்கிறீர்கள். ரோட்டில் போகும்போது யாரோ செய்த ஒரு சாலை விதிமுறை மீறலுக்காக பக்கத்து வாகனக்காரன் உங்களைப் பார்த்து கைநீட்டி“அறிவேயில்லையா?” என்று கேட்டு விடுகிறான். இன்னொரு பைக்வாலா ஒருவன் அவன் சென்று கொண்டிருக்கிற ஒரு ரோட்டை அவன் முப்பாட்டன் காலத்திலேயே பட்டா போட்டு எழுதிவாங்கிக் கொண்ட மனோபாவத்தோடு பான் பராக் எச்சிலை அண்ணாந்து பாத்து வலப்புறமாகத் துப்ப ஒரு திடீர் ப்ரேக் அடித்து நீங்கள் அந்தச் சாரலிலிருந்து தப்பித்தது மட்டுமல்லாமல் சறுக்கி விழ இருந்த ஒரு பெரும் விபத்திலிருந்தும் அதிர்ஷ்டவசமாகத் தப்பித்து விட்டீர்கள்.

மேற்கண்ட விஷயங்கள் எல்லாம் ஒரு சிறு சாம்பிள் சாஷே பாக்கெட் மட்டுமே. இது போல நிறைய! நிறைய! நிறைய! இவையெல்லாம் இந்த வருஷம் ஆடிக்கு ஒன்றும் அடுத்த வருஷ அமாவாசைக்கொன்றுமாக இனிதே நடந்தேறி வந்தால் பரவாயில்லையே. விதி வீடியோ கேம் விளையாடியது போல எல்லாமே ஒரு இருபது நாட்களுக்குள் தொடர்ந்து நடந்துவந்தது.

நீங்கள் இந்த சூழ்நிலைகளில் என்ன செய்வீர்கள் என்று உங்களைப் பார்த்து ஒரு கேள்வியை இங்கே வீசுவதன் மூலம் என் நியாயமான கோபங்கள் குறித்தான ஆதரவுக்கு உங்களையும் இழுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நான் என்ன பண்ணினேன் என்றால் உடனே ரெளத்திரம் பழகி குரலுயர்த்திப் பார்த்ததுதான். என்னதான் நடக்கிறதென்று பார்ப்போமே! இது ஒரு மாதிரி பரிசோதனை முயற்சி. இதன் விளைவாக மூன்றாவது பாராவில் சொல்லப்பட்டது தவிர வேறெதாவது நடந்ததா? ம்ஹூம்! ஒரு சில இடங்கள் தவிர “பெரிதாய் ஒன்றும் இல்லை. தொண்டை வறண்டதுதான் மிச்சம்” என்று கொட்டை எழுத்துக்களில் வருத்தமாக சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்த விஷயங்கள் இன்றைய நகர நெரிசல் வாழ்க்கையில் பரபரத்துத் திரியும் மக்களின் பொதுவான மனோபாவத்தைக் குறித்து சிந்திக்கவைக்கிறது. மேற்கூறிய சம்பவங்களில் ஒரு சிலது நகர மனிதர்களுக்கு அடுத்தவர் மேலுள்ள அக்கறையின் கிராஃப் இறங்கிவிட்டதைக் குறிக்கிறது. ஒரு சில சம்பவங்கள் வாடிக்கையாளரின் திருப்தியை முன்னிறுத்திய சேவையை பொருட்படுத்தாமல் தேமே என்று வேலை செய்யும் பெருவாரியான கூட்டத்தை அடையாளம் காட்டுகிறது. அண்டை அயலார் மீதான பொதுவான நேசம் அல்லது சகோதரத்துவம் அருகி விட்டதென்பதை இன்னும் சிலது எடுத்துக்காட்டுகின்றன.

இந்த நிலைப்பாட்டை தினசரி எதிர்கொள்ள நேரிடுகிற சலிப்பை, எரிச்சலோ கோபமோ கலந்த வார்த்தைகளிலோ செயல்களிலோ வெளிப்படுத்திக் கொண்டிருந்தால் இந்த ஆயுள் போதாது என்றும் தோன்றுகிறது.

ஆகவே சாந்தி சாந்தி ஓம் சாந்தி.

6 comments:

  1. சில நேரங்களில் இப்படி அடுத்தவரை இரைச்சலாய் திட்டுவதில் என்னைப் பொருத்தவரை மனம் லேசாவதாகவே உணர்கிறேன் - குறிப்பாக காலை / மாலை வாகனம் ஓட்டும் போது.... நீங்கள் சொல்வது போலவே, "நாகரீகமான வார்த்தைகளில்"...

    ஒரு சிக்னலில் திட்டியவரை அடுத்த சிக்னலில் பார்க்கும் போது மறந்து விடுகிறேன். சில நேரம் அவருடனே சேர்ந்து இன்னொருவரை திட்ட ஆரம்பித்துவிடுகிறேன்...


    எனக்கு இது இயல்பாகவே மாறி விட்டது...

    ReplyDelete
  2. இதை படிக்கும்போதுதான் ஒரு சுய பரிசோதனை மேற்கொண்டேன். முடிவு : நகரத்தில் வாழ்வதால் கோபமே வரக்கூடாத ஜந்துவாய் வாழ்கிறோம்.

    ஜீவா
    http://www.jeevartistjeeva.blogspot.com

    ReplyDelete
  3. உங்கள் முடிவு சரிதான். ஓம் சாந்தி ஓம்.

    -தனபால்.

    ReplyDelete
  4. கோப்படுவதால் நம்முடைய உடல் நலத்திற்குத்தான் தீங்கு. ஆகவே, சாந்தம் ஒன்றே நமக்கு செளக்கியம் தரும். இருந்தாலும், புழுவைப் போல் வாழ்வதில் எனக்கும் உடன்பாடில்லை. ரௌத்திரம் பழகு ! மகாகவி அறிவுரை.

    -பொன். மகாலிங்கம்
    சிங்கப்பூர்

    ReplyDelete
  5. At times it is good to vent your feelings. If you think it is anger, then let it be. there is a small line between irritation and anger. what u have experienced is irritation and u have expressed your feelings. If you are shouting for irritation, then you are having Blood pressure.

    Venkatesh.

    ReplyDelete
  6. Dear Chitran Sir, most of the experience which triggered your anger, also happened to me in Chennai. The lesson I have learned from such experience is not to get angry for some body else stupidity, but that does not mean I am nerd(eelichavayan). All these helped me to develop a new way of handling such situation. I started to let them know their stupidity in a very friendly manner. For sample, when somebody spit while driving, I first greet them (Vanakkana), then request him to do it in a better way, that it will not disturb others. I do not know others have changed by this, but it helped me to vent out immediately and keep me away from anger. - Sentil

    ReplyDelete

இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்து?