குதிரைகள் நடக்கின்றன

நேற்று சென்னை கோட்டூர்புரத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குச் சென்றிருந்தோம். நான், தங்கமணி, பையன். நான் வாழ்நாளில் பார்த்த மிகப் பெரிய நூலகம் இதுதான். ஒரு ஐ.டி பார்க் கட்டிடம் போன்ற அமைப்பு. மோஸ்தர். மெட்டல் டிடெக்டருடன் செக்யூரிட்டி. மிகப்பெரிய லாபி. ஒளி விளக்குகள். லிஃப்ட். கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் எஸ்கலேட்டர்கள். வெளிச்சத்தை பிரதிபலிக்கும் பளபளவென்ற தரை. கண்ணாடிக் கதவுகள், ஜன்னல்கள். சொகுசு இருக்கைகள். ஜம்மென்று சோபாக்கள்.

முதல் மாடியில் குழந்தைகளுக்கென்று மிகப் பெரிய பிரிவு. ஒரு பிக்னிக் போன்று பெற்றோர்களுடன் மகிழ்ச்சியாக வாண்டுகள் வந்து செல்கிறார்கள். ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கான புத்தகங்கள். மல்டிமீடியா சிடிக்களுடன் கம்ப்யூட்டர்கள். சுவர்களில் கார்ட்டூன் படங்கள்.

இரண்டாம் மாடியில் இரண்டு பிரிவுகளாக தமிழ் புத்தகங்கள். இலக்கியம், புதினம், சிறுகதைகள் என்று ரக வாரியாக பிரிக்கப்பட்டு அழகாக அடுக்கப்பட்டிருக்கின்றன. மூன்றாவது, நான்காவது, ஐந்தாவதிலெல்லாம் என்ன இருக்கிறதென்று பார்க்கவில்லை. இன்னும் திறக்கப்படாததால் அனுமதியில்லை.

லைப்ரரி என்று இப்படி ஒரு விஷயம் உலகில் இருப்பதை முதன் முறையாகப் பார்த்து பையன் மலைத்து நின்றுவிட்டான். தங்கமணிக்கோ அத்தனை புத்தகங்களைப் பார்த்து கண்ணில் நீர் துளிர்த்துவிட்டது. காரணம் தங்கமணி ஒரு ஓயாத புத்தகப் புழு. என்னைவிட அதிக புத்தகம் படித்த/படிக்கிற ஆள் என்ற வகையில் எனக்கு தங்கமணிமேல் லேசான பொறாமைகூட உண்டு.

புத்தகங்கள் தவிர கூட்டங்கள் நடத்துவதற்கென கூடங்களும், குறும்படங்கள் திரையிடுவதற்கான தியேட்டர் வசதிகளும் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அது தவிர இன்னும் எத்தனையோ வசதிகள். கூடிய விரைவில் அவைகளும் பயன்பாட்டுக்கு வரும்.

தின/வார/மாத பத்திரிகைகள் பிரிவில் கணிசமான பேர் புத்தகங்கள் மேய்ந்துகொண்டிருந்தார்கள். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளிவரும் அத்தனை வாராந்திர, மாதாந்திரங்களும் அலமாரிகளில் பெயரிடப்பட்டு ஒழுங்காக வைக்கப்பட்டிருக்கின்றன. அங்கே இருக்கிற ஒரே பிரச்சனை காலடிச் சத்தம். ஹைஹீல்ஸ் அல்லது கட்டையான செருப்புப் போட்ட பெண்களும், ஷூ அணிந்த ஆண்களும் புத்தகம் தேடி அலமாரிகளிடையே நடக்கும்போது ஃப்ளைவுட் தரையில் டடக் டடக் என்று குதிரைக் குளம்படிகள் போன்ற சப்தம் அகாலமாய்க் கேட்கிறது. படிப்பவர் கவனம் சிதறுகிறது. அதுவே நிறைய பேர் நடக்கும்போது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிகள் குதிரைப்படையுடன் மறுபடி ஊருக்குள் உலவுகிற எஃபெக்ட் ஏற்படுகிறது. மற்ற தளங்களைப் போல இங்கேயும் தரையில் கார்ப்பெட் போட்டால் இந்தக் குதிரைகள் பூனைகள் ஆகும்.

மற்றபடி இது பிரம்மாண்டமான ஒரு ஹை-டெக் லைப்ரரி. உறுப்பினராகச் சேர விண்ணப்பங்கள் கொடுக்கப்படுகின்றன. ஜனவரி முதல் புத்தகங்கள் எடுத்துக்கொள்ளலாமாம்.

இந்த நூலகம் பற்றி நிறைய தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இந்த வலைப்பதிவை அணுகலாம். இந்த நூலகம் பற்றி எக்கச்சக்கமான விவரங்கள் தரப்பட்டிருக்கிறது.

புலம் - தீபாவளி மலர் சிறுகதை

தமிழோவியம்.காம் இணைய இதழின் தீபாவளி மலரில் எனது சிறுகதை..

ணி செண்ட்ரலில் ரயில் இறங்கி ஆட்டோ பிடித்து அபிராமபுரத்திலுள்ள கேசவனின் வீட்டுக்கு போய் இறங்கினபோது லேசாய் ஆச்சரியப்பட்டான். கேசவனின் வீடு காலி செய்யப்படுகிற முகாந்திரமாய் வீடு நிறைய மூட்டை முடிச்சுகள். அட்டைப் பெட்டிகள். அடுக்கத் தயாராயிருந்த சாமான்கள். குறுக்கும் நெடுக்குமாய் ஒழுங்கில்லாமல் சோஃபா, கவிழ்ந்த சேர்கள், நியூஸ் பேப்பர் குப்பைகள். கயிறுகள். பேக்கிங் டேப் சுருள்கள்.

மணி பொருட்குவியல்களுக்கு ஓரமாய் ட்ராவல் பேகை வைத்துவிட்டு வியப்புடன் புரியாமல் கேசவனைப் பார்த்தான். "வீடு காலி பண்றீங்களா?" என்றான்.

...

...

மேலும் படிக்க..

படித்ததும் பிடித்ததும்

எப்பவோ ஒரு காலத்தில் நமக்குப் பிடித்தது இப்போது பிடிக்காமல் போவதும், அப்போது பிடிக்காமல் இருந்தது இப்போது பிடித்துவிடுவதும் நிகழத்தான் செய்கிறது. இதைத்தான் வேறு விதமாக “இப்பப் பாத்த புதுசு பாக்கப் பாக்கப் பழசாகி எப்பவுமே பாக்காத பழசு பாத்தவுடனே புதுசாத் தெரியும்” என்று மீனாட்சி சுந்தரனார் கூற முயற்சித்தார். ஆனால் இது முதல் வரிக்கு சம்பந்தமில்லாமல் இருப்பதால் அதிகம் யோசிக்காமல் அடுத்த பாராவுக்குப் போய்விடலாம்.

பொள்ளாச்சி சேரன் போக்குவரத்துக் கழகத்திலிருந்து யாரோ கொடுத்த 1988- ஆம் ஆண்டு டயரி, எதையோ தேடும்போது கண்ணில் பட்டது. புரட்டிப் பார்த்தபோது அதில் மணி மணியான கையெழுத்தில் அப்போது படித்தவைகளிலிருந்து பிடித்த பேராக்கள் அல்லது வரிகளை ’படித்ததில் பிடித்தது’ என்று போட்டு எழுதி வைத்திருந்தேன். என் அப்போதைய வாசிப்பானுபவ ரசனை ரொம்ப தத்துப் பித்தென்றெல்லாம் இல்லாமல் கொஞ்சம் பரவாயில்லையாக இருந்ததாக நிழலடிக்கிறது. இப்போது அவைகளைத் திரும்பப் படித்துப் பார்க்கும்போது எனக்குப் பிடித்ததை எழுதியவர்களின் பெயர்கள் எல்லாம் ஒரு கலவையாக அவியல் போல இருக்கிறது.

கார்த்திகா ராஜ்குமார், காண்டேகர், பாப்ரியா, அனுராதா ரமணன், இந்திரன், காப்ரியேல் ஒகாரா, சுந்தர ராமசாமி, லே ஹண்ட், மு.மேத்தா, மாலன், கார்ல் மார்க்ஸ், வண்ண நிலவன், சி.சு. செல்லப்பா, க.நா.சு, அப்புறம் ஜப்பானிய பழமொழிகள், பெயரில்லாத தத்துவங்கள் ஒன்றிரண்டு. யாரோ என்று போட்டு சில. இந்த யாரோ என்பது யாராக இருக்கும் என்று ரொம்ப நாட்களாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். இதில் லே ஹண்ட், ஒகாரா, மார்க்ஸ், காண்டேகர் போன்றவர்களின் பெயர்களைப் பார்த்து யாரும் பயப்படவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அது சும்மாவாச்சும் அவர்களுடைய ஏதாவது ஒரு பேரா எங்கேயாவது தட்டுப்பட்டதை டயரியில் எழுதி வைத்திருப்பேன். மற்றபடி ரொம்ப தடிமனான புத்தகங்கள் படிக்கிற கெட்ட பழக்கம் எதுவும் அப்போது எனக்கு இருந்ததில்லை. பொன்னியின் செல்வன் கூட ரிடையர்மெண்டுக்கு அப்புறம் படிக்கலாம் என்று எடுத்துவைத்திருக்கிறேன்.

ஆனால் கிடைத்ததையெல்லாம் வாசிக்கிற வெறி ஒரு மானாவாரித்தனத்தைக் (பார்த்தீர்களா! தமிழில் புதிய சொல்லாடல்) கொடுத்திருந்தது. பாலகுமாரனை விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருந்த அதே நேரம் சைடுவாக்கில் க.நா.சு வருகிறார். கி.ராஜநாராயணன், தி.ஜா என்று வாசிப்பு அனுபவத்தை அடுத்த தளத்திற்குக் கொண்டு போகவேண்டுமென்று பிரயத்தனம் மேற்கொண்ட காலகட்டம் அது. பிடித்த எழுத்தாளர்கள் என்று ஒரு இறுதிப் பட்டியல் உருவாகுவதற்கு முன் வரை எல்லோருமே இதுபோல சகட்டுமேனிக்குப படித்து வைத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருப்பார்கள்.

பொள்ளாச்சி லைப்ரரியில் மேற்படி இலக்கிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் இருக்கும். ஆனால் எல்லா புத்தகங்களிலும் வாசகர்கள் தனக்குப் பிடித்த வரிகளை பென்சிலாலோ பேனாவாலோ அடிக்கோடிட்டு அடிக்கோடிட்டு புத்தகம் முழுவதும் கோடு கோடாக இருக்கும். போதாதற்கு கடைசி பக்கத்தில் ‘அருமையான புத்தகம்” என்றோ, “மரணக் கடி. படிக்காதே” (இதை முதல் பக்கத்திலல்லவா எழுதியிருக்கவேண்டும்) என்றோ தங்களது உண்மையான விமர்சனத்தை பதிந்தும் வைத்திருப்பார்கள். ஆக அடிக்கோடு போடுகிற வேலையை நான் செய்யவேண்டாம் என்று படித்ததில் பிடித்ததை தனியாக சேரன் போக்குவரத்துக் கழக டயரிக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன்.

இந்த மாதிரி படித்ததில் பிடித்ததை தொகுத்து பொள்ளாச்சியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘மனிதம் செய்திகள்’ என்கிற சிற்றிதழில்(!) போட்டுக் கொண்டிருந்தோம். கோபால் பில்டிங் பக்கத்தில் கடை வைத்திருந்தவர்கள் எல்லாருக்கும் ஒரு காப்பி போகும்.

ப.பி-இல் ஒரு சில இப்போது படித்தாலும் பிடிக்கத்தான் செய்கிறது. அவைகளில் சில தத்துவார்த்தமாக இருப்பதே காரணம் என நினைக்கிறேன். ஒரு சிலது மரண மொக்கை.

படித்ததில் பிடித்ததில் சில இங்கே..

****
குழந்தைகள் உலக சத்தியங்கள். கையுயர்த்தித் தந்ததெல்லாம் கடைசிவரை காப்பாற்றுவேன் என்னும் நியாயப் பிரமாணங்கள். வாழ்க்கையையே விளையாட்டாய் கழித்ததுபோல் குதிபோடும் பையன் நாட்கள். இலக்குகள் பதுங்கியிருக்க அவற்றைக் கண் கட்டித் தேடக் கிளம்பும் வாழ்க்கை. ஜரூராய் இருந்து இடமாறிப் பிழைக்கும் கிளித்தட்டு. ஏமாந்தவனை எழுப்பிவிட்டுத் தான் உட்கார்ந்து கொள்ளும் கொக்கோ. மூச்சுப் பிடித்து மூலைவரை சென்று எதிரியை கால் தாக்கி எற்றித் திரும்பும் சடுகுடு. வளைத்து வளைத்து இரண்டு சக்கரத்தையும் பாலன்ஸ் செய்து ஓட்டிச் செல்லும் வாடகை சைக்கிள். வாழ்க்கை விளையாட்டாய்த்தான் ஆரம்பிக்கிறது.

- மாலன், நந்தலாலா நாவலில்

*****

எனது பூப்பு நாளில்
நான் கட்டிய பச்சைப் பட்டு
இன்னனும் நெஞ்சுக்குள் பசுமையாய்
நினைவிருக்க..
காலையில் சாப்பிட்டது நினைவில்லை.
மறதி.. பனித்துளி போல மறதி.
காலம் கரையுது. காலம் கரையுது.
காதுக்குள் பேரொலி.
என்னுள் என்னை நான் இழந்திருக்கையிலே..
உலகம் என்னை இழந்து கொண்டிருக்கிறது.

- அனுராதா ரமணன்

***

கொஞ்சமாக தெரிந்து வைத்துக் கொண்டிருக்கும்போது தெரிந்து கொண்டுவிட்டோம் என்றும், அதிகமாகத் தெரிந்துகொண்டிருக்கும்போது தெரிந்து கொள்ளவில்லை என்ற எண்ணமும் ஏற்படுகிறது. ஒரு கதவு திறக்கும்போது திறக்காத பல கதவுகள் தெரியும் விசித்திரக் கோட்டை இது. அவற்றையும் திறக்கும்போது, மேலும் பல கதவுகள் மூடிக்கிடப்பதைப் பார்க்கிறோம். அப்படியானால் இதற்கு முடிவு என்ன? திறப்பதே திறக்காத கதவுகளைப் பார்க்கத்தானா? பெரிய சவால்தான் இது.

- சுந்தர ராமசாமி, ‘ஜே.ஜே சில குறிப்புகள்’ நாவலில்.

***

கடைசிக் கதவும் திறக்கப் போகிறது. நான் ஒரு சுதந்திர மனிதன் ஆகிவிடுவேன். அந்தக் கதவு நிலையிலிருந்து ஒரு எட்டு வெளியே எட்டிப் போட்டதும் என் இருதயம் நிரம்பி இருந்தது. நிம்மதியா அல்லது கனமா? இரண்டும் அல்ல. அது ஓர் அபிமான இருதயத்தின் அடியிலிருந்து எழும் அனுதாபக் குரலின் தொனி போல எனக்குப் பட்டது. அந்தத் தொனியோடு கடைசிக் கதவும் திறந்து கொண்டது. எதையும் நான் சொல்லிவிடக்கூடும். அந்த க்ஷணத்து உணர்ச்சியை மட்டும் சொல்ல முடியாது. அது இருதயத்தின் தனிச் சொத்து. அதற்கு பாஷையே இல்லை.

-சி.சு. செல்லப்பா

***

மூன்றாம் முறை முகத்தில் அறைந்தால் புத்தருக்கும் கோபம் வரும்.

-யாரோ

குரங்கு பெடல் என்றால் என்ன?

ஒரு வழியாக மகனுக்கு பாலன்ஸ் கிடைத்துவிட்டது. இது இரண்டாவது பாலன்ஸ். முதல் பாலன்ஸ் தவழ்கிற குழந்தை என்கிற நிலைப்பாட்டிலிருந்து ‘நடக்கிற குழந்தை’ என்கிற நிலையை அடைந்தது. அப்போது எல்லாக் குழந்தைகள் போலவும் ‘பொதக் பொதக்’ என்று நிறைய தடவை விழ வேண்டி வந்தாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் எப்படியோ நடக்கவும் பிறகும் ஓடவும் பழகிக் கொண்டான்.

ஓடப் பழகின பிறகு ஓட்டப் பழகவேண்டாமா? முதலில் வாங்கின மூன்று சக்கர சைக்கிள் மோகம் முடிந்து (நான் கூட அவ்வப்போது ஓட்டுவதுண்டு) ஹாண்டில் பாரில் அவனது முழங்கால் இடிக்க ஆரம்பித்தவுடன் மாநாடு கூட்டி அவனுக்கு பெரிய சைக்கிள் வாங்கலாம் என முடிவானது. பி.எஸ்.ஏ ராக்கெட் என்று போட்ட ஒரு சின்ன இரண்டு சக்கர சைக்கிள் (சைடு வீலையும் சேர்த்தால் நான்கு) வாங்கிவந்தோம். பேர்தான் ராக்கெட் என்று போட்டிருந்தார்களே தவிர தரையில் தான் ஓடியது.

ஆனால் அந்த சைக்கிளில் ஒரு பிரச்சனை. அது மகனைவிடப் பெரியதாக இருந்தது. அதாவது அவன் இன்னும் நான்கைந்து வருடங்கள் கழித்து ஓட்டவேண்டியதை அப்பொழுதே வாங்கிவிட்டேன். இருந்தாலும் சீட்டையும், ஹாண்டில் பாரையும் கொஞ்சம் தணித்து இறக்கித் தந்ததில் அதில் எப்படியோ ஏறப் பழகி மூன்றாவது மாடி வராந்தாவிலும், மொட்டை மாடியிலுமாக ஓட்ட முயற்சித்துக் கொண்டிருந்தான். கீழே விழாமலிருக்க சைடு வீல்கள் துணை புரிந்தாலும் அபார்ட்மெண்ட் வாசிகளுக்கு ஓட்டும்போது டர்ர்ர்ர் என்ற அதன் நாராசமான சத்தம் அத்தனை ரசிக்கவில்லை. அதற்காக அவனை ரோட்டில் போய் ஓட்ட வைக்கிற மயிர்க்கூச்செரியும் அட்வென்ஞ்சரை நான் எடுக்கத் தயாரில்லை.

சில நாட்கள் வேறு வழியில்லாமல் ஹாலுக்கும் பெட்ரூமுக்கும் கிடைத்த இடைவெளிகளில் கூட ஓட்டுவான். சில நாட்கள் இரவு உணவு முடித்துவிட்டு நடு ஜாமத்தில் ட்ராஃபிக் அடங்கின எங்கள் தெருவில் அவன் பின்னாலேயே ஓடி ஓடி உண்ட உணவு செரித்துக்கொண்டிருந்தது. அதிலும் முக்கியம் அங்கேயிருக்கிற மற்ற அபார்ட்மெண்டுகளில் பார்க்கிங் இல்லாமல் ரோட்டிலேயே நிறுத்திவைத்திருக்கும் கார்களின் மேல் அவன் சைக்கிள் மோதி கீறல் போடாமல் இருக்கவேண்டுமே என்கிற கவலை மூச்சிரைப்போடு சேர்ந்து பொங்கிவரும்.

“ப்ராண்ட் நியூ கார் ஸார் இது.. டெலிவரி எடுத்து ஒரு வாரம்கூட ஆகலை. பாருங்க எவ்ளோ பெரிய கீறல். உங்க மகனுக்கு சமூகப் பொறுப்புன்னா என்னன்னு நீங்க கத்துக் குடுத்திருக்க வேணாமா? திஸ் இஸ் ரிடிகுலஸ்.  எனக்கு மிகப் பெரிய மன உளைச்சலாயிருச்சு. கீறலுக்கான நஷ்ட ஈடா  பதினைந்தாயிரத்தை...”

என்று யாராவது கனவான் கேட்டில் நின்றுகொண்டு கத்துவதை கற்பனை செய்துகொண்டு அந்த பயத்துடனேயே மகனுக்கும் கார்களுக்குமிடையே இடைவெளி ஏற்படுத்துகிற முனைப்பிலேயே ஓட்டம் கழியும். சைக்கிள் அவன் உயரத்திற்குப் பொருந்தாமல் உயரமாக இருந்ததாலும், அவ்வப்போது சீறி வருகிற ஆட்டோ, பைக்வாலாக்களுக்கு பயந்து தடுமாறியதாலும் மற்றும் சென்னை சாலைகளின் பிரத்யேக அடையாளமான திடீர்க் குழிகளினாலும் அவ்வப்போது தடுமாறி விழவும் செய்தான். பாலன்ஸூம் கிடைக்காமல் சாய்ந்த நிலையிலேயே ஓட்டி ஓட்டி பக்கவாட்டுச் சக்கரங்களும் தேயத் தொடங்கியிருந்தது. நொடிகளும், நிமிடங்களும், நாட்களும், வருடங்களுமாக உருண்டோடியது. இந்த பெரு நகரத்துக்குள் வாழ்வின் அத்தியாவசிய தேவையான சைக்கிள் ஓட்டுதலைக் கற்றுக் கொடுப்பதற்குள் வுதா (இது ஒரு கெட்டவார்த்தை என யாரோ சொன்னதால் தலைகீழாக எழுதியிருக்கிறேன்) தீர்ந்து போய்விடும் என்று தான் தோன்றியது.

ஆனால் இந்தக் கோடை விடுமுறையின் போது ஊருக்குப் போய் அங்கே மரங்கள் சூழ்ந்த, சுத்தமாய் போக்குவரத்து இல்லாத, அகலமான ரோடுகள் கொண்ட மின்சார வாரிய குவார்டர்ஸூக்குள் அக்கா பசங்களின் (சைடு சக்கரங்கள் இல்லாத) சைக்கிள்களை ஓட்டி ஒரே நாளில் அட்சர சுத்தமாக நன்றாய் சைக்கிள் பழகிவிட்டான். ஆக வாழ்க்கைக்குத் தேவையான இரண்டாவது பாலன்ஸூம் ஒரு வழியாய்க் கிடைத்துவிட்டதில் அக மகிழ்வு ஏற்பட்டுவிட்டது.

இன்றைக்கு அவன் சைக்கிளை விட கொஞ்சம் உயரமாய் வளர்ந்துவிட்டான்.  சைடு வீல்களையும் நீக்கியாயிற்று. சீறுகிற ஆட்டோக்களை லாவகமாய்த் தவிர்க்கவும் பழகிவிட்டான். ரொம்ப குள்ளமாய் இருக்கிறதென்று ஸீட்டை கொஞ்சம் இன்னும் ஏற்றித்தரமுடியுமா என்று கேட்கிறான். இல்லையென்றால் கியர் எல்லாம் வைத்து மவுண்டன் பைக் டைப்பில் வேறு பெரிய சைக்கிள் வேண்டுமாம்.

நான் எண்பதுகளின் ப்ளாஷ்பேக் காட்சியொன்றை நினைவுகூர்ந்து அவனிடம் சொன்னேன். “நாங்கெல்லாம் எங்களை விட பெரிய சைக்கிள்ள குரங்கு பெடல் போட்டு ஓட்டிப் பழகினோம். இனி அந்த அனுபவமெல்லாம் உங்கள மாதிரி சிட்டிப் பசங்களுக்குக் கிடைக்காதுடா..”

“குரங்குப் பெடல்னா என்ன” என்றான்.

இந்த பதிவை போஸ்ட் பண்ணி முடித்தபிறகு விளக்குகிறேன் என்று சொல்லியிருக்கிறேன்.

இந்தியா சுடர் – கல்விக்காக ஏற்றப்பட்ட தீபம்

ஒரு மழைநாளில் ஒரு இனிய மெல்லிசை கேட்பதைவிடவும், சரவணபவனில் சாம்பார் வடையை ரசித்து ருசித்துச் சாப்பிடுவதைவிடவும், கவிழ்ந்து படுத்து ஒரு புதினம் படிப்பதைவிடவும், ஒரு சிறுகதையோ வலைப்பதிவோ எழுதுவதைவிடவும் ஒரு மகிழ்ச்சியும் நிறைவும் திருப்தியும் நேற்று கிடைத்தது.

ராயபுரத்திலும், தண்டையார்ப்பேட்டையிலும் ஆக இரு அரசினர் குழந்தைகள் காப்பக மாணவர்களுக்கு எங்கள் அலுவலக நண்பர்கள் நோட்டுப்புத்தகங்கள், பென்சில், பேனா போன்றவைகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இதை ஏற்பாடு செய்திருந்தது இந்தியா சுடர் எனும் NGO. நண்பர்களும் நானும் ஆக ஒரு சுபயோக சுபதினத்தில் இந்தியா சுடரில் உறுப்பினரான கையோடு உருப்படியாய் ஏதாவது செய்ய வேண்டுமென்று யோசித்ததின் விளைவாக மேற்கண்ட நிகழ்ச்சி.

இந்தியா சுடர் - ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனம். இந்தியா முழுவதும் உள்ள வசதியற்ற மாணவர்களுக்கு கல்விக்கான உதவிகளைச் செய்வதற்காக இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம். இதன் நிறுவனர்கள் உதய் மற்றும் சற்குணன் மற்றும் சில எனெர்ஜிடிக் இளைஞர்கள் தன்னலமற்ற நோக்கோடு தனது நேரத்தையும் பணத்தையும் செலவு செய்யும் இவர்களை ஒரு வரியில் பாராட்டுவதென்பதெல்லாம் இயலாத காரியம். அவ்வளவு செய்கிறார்கள்.

இந்தியா சுடரின் உறுப்பினர்கள் அனைவருமே ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே அவ்வப்போது ஓய்வு நாட்களில் தங்களால் இயன்ற அளவு உதவிகளைச் செய்து வருபவர்கள்தான். அது சிறு துரும்பாயினும் இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் வசதியற்ற ஏதோ ஒரு சிறுவனோ அல்லது ஒரு சிறுமியோ கல்வி கிடைக்கப்பெற்று அவர்கள் அதன் மூலம் தன் வாழ்க்கையை புதுப்பித்துக் கொள்ளமுடிகிறதென்பது அருமையான விஷயம். மீனைத் தருவதற்கு பதில் மீன் பிடிக்கக் கற்றுத் தருதல்.

நலிந்த நிலையிலிருக்கும் அரசு பள்ளிகளை, குழந்தைகள் இல்லங்களைத் தேடியறிந்து அங்கே உள்ள மாணவர்களுக்குத் கல்விக்குத் தேவையானதை இந்தியா சுடர் செய்கிறது. ஆசிரியர் இல்லாத பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமித்துக் கொடுக்கிறது. கஷ்டப்படும் குடும்பங்களில் வாழும் மேற்படிப்புக்கு வசதியில்லாத மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்கிறது. இதன் பணிகள் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் இந்தியா முழுக்க விரவி நிற்கிறது. இதுவரை என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்தியா சுடரின் தளத்திற்குச் சென்று அறிந்து கொள்ளலாம்.

சென்னையில் ராயபுரம் மற்றும் தண்டையார்ப்பேட்டை பகுதியில் உள்ள இல்லங்களில் சிறார்களைச் சந்தித்தது ஒரு வித்தியாசமான அனுபவம். இவர்களில் சிலர் பெற்றோர்களை இழந்தவர்கள். சில பேர் வீட்டை விட்டு எதற்காகவோ ஓடிவந்து பின் பெற்றோருடன் சேரமுடியாதவர்கள். சில பேருக்குப் பெற்றோர் இருந்தும் வறுமை காரணமாக தங்களால் பார்த்துக்கொள்ள முடியவில்லையென இந்த இல்லங்களில் விடப்பட்டவர்கள்.

ஒரு ஐநூறு குழந்தைகளுக்காவது இந்த வருடப் படிப்பிற்காக நோட்டுப்புத்தகங்கள் வழங்கவேண்டும் என்பது எங்கள் திட்டமாக இருந்தது. ஆளுக்கு ஐம்பது அல்லது நூறு ரூபாய் கொடுத்தால் போதும் என்று ஆரம்பித்து நாங்கள் நினைத்ததை விடவும் அதிக தொகை சேர்ந்தது. அலுவலக நண்பர்கள் தாராளமாக நன்கொடை தந்து உதவினார்கள். இதில் ஒவ்வொரு துளியும் சரியாகத் திட்டமிடப்பட்டு சென்னையிலுள்ள ஆறு அரசினர் மாணவர் இல்லங்களுக்கு நோட்டுப் புத்தகங்களாக சரியான முறையில் பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது. இதை உற்சாகமாக முன்னின்று செயல்படுத்தியதில் நண்பர்கள் ஜான், தீனதயாளன், கார்த்திக், இங்கர்சால், பாலசரஸ்வதி, ப்ரேம், செந்தில், இந்தியா சுடர் தளபதிகள் உதய் மற்றும் சற்குணன் மற்றும் அனைத்து அலுவலக நண்பர்களும் இந்த நிகழ்வை சாத்தியமாக்குவதற்குக் காரணமாக இருந்தார்கள்.

மாணவர்களில் ஒரு சில பேர், தாங்கள் நன்றாகப் படித்து நிறைய மதிப்பெண்கள் வாங்கும் பட்சத்தில் மேற்படிப்புக்கு உதவுவீர்களா என்று கேட்டது நல்ல விஷயமாகப் பட்டது. படிப்பார்வம் கொண்ட இவர்களுக்கு நிச்சயம் உதவி செய்யலாம். எந்த வசதியுமில்லாமல் படித்து பத்தாம் வகுப்பில் 84% எடுத்த பையனொருவனைப் சந்தித்தோம். இன்னொரு சிறுவன் இந்த இல்லத்தில் தங்கி படித்துக்கொண்டே, வெளியில் வேலைக்குப் போய் அதில் கிடைத்த சொற்பப் பணத்தில் ஆயிரம் ரூபாயை வீட்டுக்கும், ஆயிரம் ரூபாயை அந்த இல்லத்திற்கு நன்கொடையாகவும் அளித்திருக்கிறான். சின்ன உருவம். பெரிய மனது.

இந்தியா சுடருக்கு வந்து சேரும் நன்கொடைத் தொகைகளின் ஒவ்வொரு பைசாவும் வழங்கியவர் பெயரோடு அதன் இணைய தளத்தில் கணக்கு வழக்குகளோடு வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, அஸ்ஸாம் என்று வகை பிரித்து இதுவரை செய்து முடித்த ப்ராஜக்டுகளின் விவரங்களும் இருக்கின்றன. தன்னை இன்னும் விரிவாக்கும் பொருட்டு இணைய சாத்தியங்களான ட்விட்டர், ஃபேஸ்புக், பிகாஸா வெப், ஆர்குட் என்று சகலத்திலும் இணைந்துள்ளதுடன், உறுப்பினர்களுக்கு இதன் அனைத்து செயல்பாடுகளும், தகவல்களும் யாஹூ குழுமம் மூலமாக உடனடியாகத் தெரிவிக்கப்படுகின்றன.

நம் பாக்கெட்டிலிருந்து வெளிப்படும் வெறும் ஒரு நூறு ரூபாயானது மற்றவர் வாழ்வில் எவ்வளவு பெரிய வித்தியாசத்தை அளிக்கிறதென்று நேற்று மனப்பூர்வமாய் உணர்ந்துகொண்டேன்.

மேலும் விவரங்களை இந்தியா சுடரின் தளத்திலிருந்து அறியலாம் :
http://www.indiasudar.org
http://picasaweb.google.com/indiasudar