வர்ணமயமான வாழ்க்கை

என் எழுத்தாள நண்பர்கள் எழுதின புத்தகங்களை சும்மா எடுத்துப் புரட்டிக்கொண்டிருந்தபோது அதில் ஐந்தாறு புத்தகங்களின் அட்டையை நான் வடிவமைத்திருந்ததைப் பார்த்தேன். ரொம்ப மோசம் என்று சொல்லமுடியாமல் சுமார் ரகத்தில் இருந்தன அவை. கோவை ஞானியின் ’தமிழன் - வாழ்வும் வரலாறும்’ என்கிற சின்ன புத்தகத்திற்கான அட்டைப்படம்தான் முதல் முயற்சி. அதில் நான் வரைந்து கொடுத்த ஒரு ஓவியம் அட்டையாய் வந்தது.


ஃபோட்டோஷாப் என்கிற வஸ்து என் வாழ்வில் வந்ததற்கப்புறம் கிரியேட்டிவிட்டியை கையாள்கிற விஷயம் சுலபமாய்ப் போய்விட்டது. அதை நான் முதன் முதலில் உபயோகித்து உருவாக்கினது பாலைநிலவனின் “கடல்முகம்” கவிதைத் தொகுப்பின் முகப்பு. அதற்கப்புறம் சில பல அட்டைகள். ஒரு நல்ல கிராஃபிக் டிசைனராக நண்பர்கள் வட்டாரத்தில் அறியப்பட்டிருந்தேன் என்பது இந்த மாதிரி வடிவமைப்பு வாய்ப்புகளுக்கு ஆதாரமாய் இருந்தது.

சின்ன வயதில் கையில் கிடைத்த பேப்பரிலெல்லாம் எதையாவது கிறுக்கிக் கொண்டிருப்பேன். அப்பாவிடம் லோடு லோடாக திட்டுவாங்க அதுவே போதுமானதாக இருந்தது. ஒரு பதினைந்து வயதிற்கப்புறம் திடீரென பெண்களின் முகங்களை வரைவதின்பால் ஒரு நாட்டம் ஏற்பட்டது. பென்சில், கரி, பேனா, சாக்பீஸ் என்று எது கிடைத்தாலும் குறைந்தபட்சம் ஒரு பெண்ணின் கண்களையாவது வரைந்துவிடுவது என்பது ஒரு பழக்கமாகவே ஆகியிருந்தது. பொம்பளைப் படம் வரைவதைத் தவிர வேறு எதுவும் இவனுக்கு உருப்படியாகத் தெரியாது என்பது அப்பாவும் தன் தினசரி கண்டனக் கடமையை தவறாமல் செய்து கொண்டிருந்தார். நாங்கள் குடிபோகிற வீடுகளிலெல்லாம் சமையலறை சுவற்றில் ஒரு பெண்ணின் முகத்தை பென்சிலால் தீட்டி வைத்திருப்பேன். (அப்பா அதிகம் நுழையாத இடம் அது ஒன்றுதான் என்பதால்). இப்போதுகூட என் வீட்டு வரவேற்பறை ஹால் சுவற்றில் அதுபோல ஒன்றை நீங்கள் பார்க்கலாம். இப்போது பையன் “என்னை wall-ல scribble பண்ணக்கூடாதுன்னு சொல்லிட்டு நீ மட்டும் ஏன் பண்றே?” என்று திட்டுகிறான். ஆக இரண்டு தலைமுறைகளாக எதிர்ப்பு தொடர்கிறது.

நண்பர்கள் நடத்தின கீதம் என்கிற கையெழுத்துப் பிரதிகள் என் கிராஃபிக் டிசைன் திறமையை பட்டை தீட்டிய முதல் கல். வெள்ளைத்தாள்களில் கதைகளுக்கும் கவிதைகளுக்கும் ஓவியம் வரைந்து பள பளா பத்திரிக்கைகளிலிருந்து படங்கள் கத்தரித்து ஒட்டி, பார்டர் போட்டு லே-அவுட் எல்லாம் செய்து வெளியிட்ட காலத்திலிருந்து இந்த டிசைனிங் ஆர்வம் படிப்படியாக வளர்ந்து ஒரு நாள் இன்ஜினியரிங் துறையிலிருந்து என்னைக் கழற்றி விளம்பரக் கம்பெனியின் வாசலில் வீசிவிட்டது.

விளம்பரக் கம்பெனிகளுக்கு வருவதற்கு முன்னால், ஒரு எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனியில் மெக்கானிக்கல் இன்ஜினியராக (!) முதன் முதலாக கணினியில் நான் கற்றுக்கொண்டது ஆட்டோ கேட் (AutoCad) என்கிற மென்பொருள். அதில் பிள்ளையார் சுழிக்குப் பதில் முதன் முதலில் ஒரு பெண்ணின் முகத்தை வரைந்து முதலாளியிலிருந்து ஆஃபீஸ் பையன் வரை பாராட்டு வாங்கி காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டேன். ஆனால் அதையே செய்து கொண்டிருந்தால் சம்பளம் கிடைக்காதென்பது புரிந்து வேறு வழியில்லாமல் இன்ஜினியரிங் ட்ராயிங்கும் போட்டுத் தொலைக்க வேண்டியிருந்தது.

இந்த கிராஃபிக் டிசைன் மற்றும் மல்டிமீடியா என்கிற இந்த கிரியேட்டிவ் துறைக்குள் நான் எப்படி அடியெடுத்து வைத்தேன் என்று ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் ஓட்டிப் பார்த்தேன். நிறைய விஷயங்கள் அலையடித்தன. கோயமுத்தூரில் True illusions Graphics & Animations Private Limited என்ற பெரிய பெயர் கொண்ட ஒரு விளம்பர நிறுவனம்தான் முதன் முதலில் என்னை சுவீகரித்து இந்தத் திசையில் என் பயணத்திற்கு உதவியது எனலாம். “உங்களுக்கு கோரல்ட்ரா (CorelDraw) தெரியுமா?” என்று இன்டர்வ்யூவில் என்னைப் பார்த்து கேட்ட அந்த நிறுவன நிர்வாக மேலாளரிடம் “ஓ! நன்றாய்த் தெரியும்” என்று நான் அப்பட்டமாய் சொன்ன பொய்யினால்தான் இந்த திருப்பம் நிகழ்ந்தது. (இந்த ரகசியத்தை அப்புறம் அவரிடம் சொல்லிவிட்டேன்).

கிட்டத்தட்ட பதிமூன்று வருடங்களாக இந்தக் குதிரை ஓடிக்கொண்டிருக்கிறது. அல்லது ஓட்டிக்கொண்டிருக்கிறேன். WANTED என்று 5 செ.மீ x 2 காலத்திற்கு கட்டம் கட்டின தினத்தந்தி விளம்பரங்களிலிருந்து ஆரம்பித்து பின்னர் Brand Identity, Print Design, மல்டிமீடியா, இணையதள வடிவமைப்பு (web designing), eLearning, Deskop GUI என இந்த ஏரியாவின் அநேக இடங்களிலும் கால் பதித்தாயிற்று. அடுத்த கட்டத்துக்கான நகர்தலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

நேற்று http://www.thefwa.com என்ற வலைத்தளத்தை மறுபடி மேய்ந்துகொண்டிருந்தபோது எல்லாவற்றையும் ஆரம்பத்திலிருந்து ஒழுங்காய் கற்றுக்கொண்டு வரவேண்டும் என்று தோன்றியது.

1 comment:

  1. :-) அந்த புத்தக அட்டைகளை பெரிய படமாய் போட்டிருக்கலாம்..

    ReplyDelete

இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்து?