Showing posts with label எழுத்தாளர். Show all posts
Showing posts with label எழுத்தாளர். Show all posts

ஒப்பணக்கார வீதியிலிருந்து ஒரு வாசகர் கடிதம்

95-ல் என் முதல் கதை கல்கி இதழில் வெளியானபோது எனக்கு ஏற்பட்டது புல்லரிப்பு என்றால், அதற்கு வந்த வாசகர் கடிதத்தை என் முகவரிக்கு ஒரு உறையில் போட்டு கல்கி அலுவலகம் அனுப்பிவைத்தது புளகாங்கிதம் என்று சொல்லலாம். கோவை ஒப்பணக்கார வீதியிலிலிருந்து சந்திரன் என்பவர் கதையை வெகுவாகப் பாராட்டி எழுதியிருந்தார். நானும் அப்போது கோவையில்தான் இருந்தேன். முதல் வாசகர் கடிதம் என்பதால் பத்திரமாக ரொம்ப நாள் அது என் பேகிலேயே இருந்தது.

இந்தக் கடிதம் வந்த ஒரு மாதத்திற்குப் பிறகு நானும் என் நண்பன் சரவணனும் ஒரு சாயங்கால வேளையில் ஒப்பணக்கார வீதிப் பக்கம் ஒரு வேலையாகப் போனோம். வேலை முடிந்து ஒரு பேக்கரியில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று சந்திரன் என்கிற அந்த வாசகரின் நினைப்பு வந்தது. பேகிலிருந்து அவரின் அந்தக் கடிதத்தை எடுத்து முகவரியைப் பார்த்தால் பக்கத்தில்தான் எங்கேயோ இருக்கிறார் என்று தெரிந்தது. அலுவலக முகவரி போலும். தொலைபேசி எண்ணையும் கொடுத்திருந்தார். சட்டென்று ஒரு யோசனை வந்தது. சரவணனிடம் அதைச் சொன்னபோது முதலில் தயங்கிப் பின்னர் சரி என்றான். ஒரு சின்ன விளையாட்டு!

சரவணன் ஒரு பப்ளிக் டெலிஃபோன் பூத்திலிருந்து சந்திரனைக் கூப்பிட்டு, தன்னை சித்ரன் என்று அறிமுகம் செய்துகொண்டு அவரிடமிருந்து கடிதம் வந்ததைச் சொன்னான். ”உங்க ஏரியாலதான் இருக்கோம். இப்போ வந்தா உங்களப் பாக்க முடியுமா?” என்று கேட்டான். மறுமுனையில் சந்திரன் ”செம சர்ப்ரைஸ்ங்க.. வாங்க வாங்க..” என்றது எனக்கே கேட்டது.

நாங்கள் போனபோது சந்திரன் அவர் அலுவலகத்தில் எங்களுக்காக ஆவலோடு காத்துக்கொண்டிருந்தார். முன்பே பேசி வைத்துக்கொண்டபடி சரவணன் தன்னை ’சித்ரன்’ என்றும் என்னை ’சரவணன்’ என்றும் அறிமுகப்படுத்தினான். ”நீங்க என்னைப் பாக்க வந்தது ரொம்ப சந்தோஷம்..” என்று சரவணனின் கையைப் பிடித்து இறுக்கமாய்க் குலுக்கினார். என் கையை லேசாக. பின்னர் அலுவலகத்துக்குள்ளேயே அவர் தங்கியிருந்த ஒரு அறைக்கு எங்களைக் கூட்டிச் சென்றார்.

நான் ஒரு ஓரமாய் உட்கார்ந்து அங்கே கிடந்த பாக்யா வார இதழைப் புரட்ட ஆரம்பிக்க, அவர்களிருவருக்குமிடையே குதூகலமாக உரையாடல் தொடர்ந்தது. நான் சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

சந்திரன்: “எப்படி உங்களுக்கு இந்த மாதிரி கதைக்கரு எல்லாம் தோணுது?”

சரவணன் (என்னை ஓரக்கண்ணால் பார்த்தபடியே): ”எல்லாம் அப்பப்ப அப்படி அப்படியே தோணும்! எழுதிருவேன்..”

சந்திரன்: ”நிறைய எழுதியிருப்பீங்க போல.. உங்க எழுத்துல ரொம்ப முதிர்ச்சி தெரியுது.”

சரவணன்: “இல்ல இது என் முதல் கதைதான். போனாப் போகுதுன்னு ஏதோ போட்டிருக்காங்க போல கல்கியில..”

சந்திரன்: சேச்சே.. அது அருமையான கதைங்க. திரும்பத் திரும்பப் படிச்சேன்.. என்ன இருந்தாலும் உங்களுக்குத் தன்னடக்கம் ஜாஸ்தி..”

இப்படியே மேலும் ஒரு பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கு சந்திரன் வீசிய கலை இலக்கிய பந்துகளை சரவணன் சரமாரியாக சமாளித்துக் கொண்டிருந்தான்.

சந்திரன் சட்டென்று “தி.ஜா படிச்சிருக்கீங்களா? நாஞ்சில் நாடன்? நம்மூருதாங்க அவரு” என்பது போன்ற டஃப்ஃபான கேள்விகளின்போது திருதிருவென்று முழித்து பிறகு ஒருவாறு சமாளித்து “பின்னே படிக்காம? என்னமா எழுதுவாங்க!” என்றான்.

சந்திரன்: “நாவல், தொடர்கதை எல்லாம் எழுதற ஐடியா இருக்கா? இல்லை சிறுகதைகள் மட்டும்தானா?”

“எழுதிட்டாப் போச்சு? என்னடா எளுத்தாளர் சித்ரன்.. என்ன சொல்ற!..” என்றான் என்னைப் பார்த்து. ”இந்தா.. இடத்தை மாத்திக்கலாம்.. இதுக்கு மேல முடியல..” என்று எழுந்தான்.

நான் பாக்யாவிலிருந்து நிமிர்ந்து சந்திரனைப் பார்க்க, அவர் புரியாமல் எங்களிருவரையும் மாறி மாறிப் பார்த்தார்.

நான் சிரித்தபடி “ஒரு சுவாரஸ்யத்துக்கு ஒரு சின்ன விளையாட்டு விளையாடலாம்னு நினைச்சோம்.. நாந்தான் சித்ரன். அவன் சரவணன். ஸாரி..” என்றேன்.

புரியாமையிலிருந்து குழப்பத்துக்குள் விழுந்து, சந்தேகத்துக்கு மாறி, ஏமாற்றத்தைத் தொட்டு பின் சட்டென்று விடுபட்ட சந்திரன் முகம் போன போக்கை விவரிக்கவே முடியாது.

”இவந்தான் இந்த ஐடியாவைச் சொன்னான். என்னைத் திட்டாதீங்க..” என்று சரவணன் என்னைக் கை காட்ட..

சந்திரன் உடனே சமாளித்துச் சிரித்து “அதான பாத்தேன்..  ஆரம்பத்திலிருந்தே எனக்கு ஏதோ சரியில்லைன்னு பட்டுச்சு..” என்றார்.

அர்த்தமண்டபக்காரர்

கோவையிலிருக்கும் என் எழுத்தாள நண்பர் சுதேசமித்திரன் வலைப்பதிவு ஆரம்பித்திருக்கிறார். தன் வலைப்பதிவுக்கு அர்த்த மண்டபம் (Hall of Meaning) என்று பெயரிட்டு முதலில் ஒரு சிறுகதையுடன் இணையத்தில் தன் பயணத்தைத் துவக்கியிருக்கிறார். சுதேசமித்திரன் இலக்கிய உலகில் பரவலாக அறியப்படுபவர். ஒரு தேர்ந்த எழுத்தாளர். தமிழ் இலக்கியத்தின் முன்னணி எழுத்தாளர்களின் படைப்புகளைத் தாங்கி வந்துகொண்டிருந்த 'ஆரண்யம்' என்னும் கலை இலக்கிய காலாண்டிதழின் ஆசிரியர்களில் ஒருவர். ஆரண்யத்தின் ஒவ்வொரு இதழிலும் எம்.டி. வாசுதேவன் நாயர், சத்யஜித் ரே போன்றவர்களின் பல புகழ்பெற்ற திரைக்கதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளிவந்துகொண்டிருந்தது மிகச் சிறப்பான விஷயம். இந்த இலக்கியப் பத்திரிக்கையில் வெளியான படைப்புகளுக்கு நான் ஓவியம் வரைந்திருக்கிறேன் என்கிற வகையில் என் பங்கும் உண்டு. சுதேசமித்திரன் இப்போது கோவையிலிருந்து 'சாம்பல்' என்னும் இலக்கியப் பத்திரிக்கையை வெளியிட்டு நடத்திக்கொண்டிருக்கிறார். (இது பற்றி பா.ரா ஒரு முறை தன் வலைப்பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.)

சுதேசமித்திரன் ஒரு நல்ல கவிஞரும்கூட. இதற்குமுன் "அப்பா" என்ற இவரது கவிதைத் தொகுதி வெளியாகியுள்ளது. விரைவில் இவரது ஒரு சிறுகதைத் தொகுப்பும், ஒரு நாவலும் வெளியாகவிருக்கின்றன. விகடன் குமுதம் போன்ற முன்னணி வார இதழ்களில் இவர் நிறைய அருமையான சிறுகதைகள் எழுதியுள்ளார். சுதேசமித்திரன் ஒரு நல்ல ஓவியரும்கூட. இவரைப் போன்ற நல்ல படைப்பாளிகள் இணைய நீரோடையில் இணைவது நல்ல விஷயம். சுதேசமித்திரனை வரவேற்போம்.

சுஜாதா... சுஜாதா

பல வருடங்களுக்கு முன்னால் எனக்கு அவசரமாய் ஒரு பாஸ்போ¡ட் சைஸ் புகைப்படம் எடுக்க வேண்டியிருந்தது. மதியம் ஒரு மணி வெயிலில் கோவை டவுன்ஹால் அருகில் ஒரு ஸ்டுடியோவுக்கு விரைந்தேன். என் அவசரத்தைத் தெரிவித்துவிட்டு, மேக்அப் அறைக் கண்ணாடியில் முக லட்சணங்களை சரிபார்த்துவிட்டு காமிரா முன் உட்கார, பளிச் என ஒரு மின்னலை என் மேல் சொடுக்கிவிட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வாங்க என்றார் ஸ்டுடியோக்காரர். வரவரவென்று அடிக்கும் இந்த மத்தியான வெயிலில் ஒரு மணி நேரத்தை எங்கே தொலைப்பது என்று வெளியில் வந்தவனுக்கு பக்கத்தில் புத்தகச்சுமைதாங்கி நிற்கும் நூலகக்கட்டிடம் தென்பட்டது. ஆஹா! இதைவிட வேறென்ன வேண்டும்? உடனே உள்நுழைந்தேன். மெல்ல முதல் மாடிக்கு படிகளில் ஏற கிரவுண்ட் ஃப்ளோரில் மாடிப்படிக்கு இந்தப்பக்கம் கும்பலாய் சில பேர். உற்றுப் பார்த்தால் நடுநாயகமாய் S டைப் சேரில் எழுத்தாளர் சுஜாதா உட்கார்ந்துகொண்டிருக்கிறார். என்னவோ உரையாடல் போய்க்கொண்டிருக்கிறது. நான் ஆர்வமாய் உடனே கீழே இறங்கி வந்து கும்பலில் தலை நுழைத்து எட்டிப் பார்த்தேன். எல்லோரும் ஆளாளுக்கு கேள்விகளை அவர்மீது வீசிக்கொண்டிருக்க பதிலுக்கு பதில்களை லாவகமாய்த் திருப்பி வீசிக்கொண்டிருந்தார். எனக்குப் மிகப்பிடித்த எழுத்தாளரை மிகப் பக்கத்தில் பார்த்த வியப்பிலிருந்து மீள முடியாமல் நின்றிருந்தேன். பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வாழ்க.

சுற்றி நிற்பவர்களில் ஒருவன் கேட்கிறான். "சார் குவாண்டம் தியரியை கொஞ்சம் விளக்க முடியுமா?". நான் அவனைப் பார்க்கிறேன். எல்லாரும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள் போல. சுஜாதா விளக்க ஆரம்பித்தார். அடுத்த ஆள் தேச ஒற்றுமை குறித்து கேட்க அதற்கும் பதில். (தேச ஒற்றுமை இருக்கிற இடங்கள் என்று சலூன் மற்றும் விபசார விடுதிகள் என்று குறிப்பிட்டது ஞாபகம் வருகிறது). ஒரு ஜீனியஸிடமிருந்து பதில்கள் கிடைத்த சந்தோ்ஷத்தில் அவர்கள் தலைகள் ஆடுகின்றன.

நான் சுஜாதாவை படிக்க ஆரம்பித்தது ஆறாம் வகுப்பு படிக்கும்போது என்று தெள்ளத் தெளிவாக ஞாபகம் இருக்கிறது. அறிமுகப்படுத்தியது அவருடைய "மறுபடியும் கணேஷ்" நாவல். மாலைமதியோ ராணிமுத்தோ நினைவில்லை. அப்போது தமிழ் அதிகம் பரிச்சியமில்லாத என் வீட்டுக்குள் அது எப்படி நுழைந்திருந்தது என்று தெரியவில்லை. கட்டிலுக்கு அடியில், அலமாரியில், அடுக்களையில் விறகு கொட்டப்பட்ட இடத்தில் என்று பூனையோல் எங்கேயாவது கிடக்கும் அதை மறுபடி மறுபடி தேடியெடுத்து கிட்டத்தட்ட 100 தடவைகளாவது படித்திருப்பேன். இன்றைய தேதிக்கு ஒப்பிடுகையில் அது ஒன்றும் சுஜாதாவின் முக்கிய படைப்பு அல்ல என்றாலும் என் அன்றைய வயசுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை அள்ளிக்கொணர்ந்தது அது. அதை ஏன் பேப்பர்காரனுக்கு போடாமல் அல்லது அடுப்பு மூட்ட உபயோகிக்காமல் வீட்டில் விட்டு வைத்தார்கள் என்பது மிக ஆச்சர்யம். இத்தனைக்கும் சுஜாதாவை வீட்டில் யாருக்கும் தெரியாது. புதுசாய் வாழ்க்கையில் எதையோ பார்த்துவிட்டமாதிரி ஏறக்குறைய பக்கங்கள் மஞ்சளாகியிருந்த அதை நேரம் கிடைத்தபோதெல்லாம் எடுத்துப் படித்தேன். அப்புறம் உடுமலை நூலகத்தில் கதைக் களஞ்சியமோ, சிறுவர் கதைப் பூங்காவோ தேடிக்கொண்டிருந்தபோது சுஜாதாவின் "மேற்கே ஒரு குற்றம்" கண்ணில் படுகிறது. ஒரு இன்ப அதிர்ச்சியுடன் அதைக் கவர்ந்துகொண்டு ஒரே பாய்ச்சலில் வீட்டுக்குவந்து அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் அதை படித்துமுடித்துவிட்டது ஞாபகத்துக்கு வருகிறது.

அப்புறம் நான் தேடாமலே சுஜாதா புத்தகங்களாய் கிடைக்க ஆரம்பித்தது லைப்ரரியில். சுஜாதாவின் வசீகரமான எழுத்து நடையும், கதைக்களங்களும், கதை மாந்தர்களும், சயின்ஸ் கலந்த புதிய கொலை உத்திகளும், கணே்ஷும் வசந்தும் ராஜேந்திரனும், வித்தியாசமான தலைப்புகளும் பெரிதும் கவர சுஜாதாவின் கதைப்புத்தகங்கள் தேடி வெறிகொண்டு அலைய ஆரம்பித்தேன். பத்தாம் வகுப்பு தேறுவதற்குள் சுஜாதா வி்ஷயத்தில் நன்கு தேறியிருந்தேன். வளர்ந்தபிறகு நண்பர்களுக்கு நான் சுவாரஸ்யமாய் கடிதங்கள் எழுத முனைந்ததிலும், பின்னர் பிற்காலத்தில் சில சிறுகதைகள் எழுதினதிலும் சுஜாதாவின் பாதிப்பு இருந்ததாகக் கொள்ளலாம். அவரின் பதினாலு நாட்கள், ஜே.கே. சொர்க்கத்தீவு, வானமென்னும் வீதியிலே, பிரிவோம் சந்திப்போம், கொலையுதிர்காலம், வைரம், காகிதச்சங்கிலிகள் போன்ற மறக்க இயலாத நாவல்களில் மிரண்டதும், மேலும் கணையாழியின் கடைசிப்பக்கங்களில் ஆழ்ந்ததும் நினைவுக்கு வருகின்றன.

பிறகு ஒருநாள் சென்னையில் தசரா கணையாழியைத் தத்தெடுத்துக்கொண்ட விழாவில் அவர் பேசினதைக் கேட்கிறபோது சுஜாதா தாண்டி என் வாசிப்பு ரசனைகள் தி.ஜா, அசோகமித்ரன், ஆதவன், வண்ணதாசன் என்று மாறிப்போயிருந்தது. அதேபோல் புக்பாயிண்ட் அரங்கில் ஒரு சி.டி வெளியீட்டு விழாவில் இருமல்களோடு சேர்த்து இருபத்தி ஐந்து நிமிடம் அவர் பேசினதை கேட்டபோதும்.

இப்படியாக பல வருடங்கள் தாண்டி இப்போது சுஜாதா வீட்டுக்குப் பத்து வீடுகள் தள்ளி என் ஆபிஸ். ஒரு நாளைக்கு நான்கு தடவை சுஜாதாவின் வீட்டைத் தாண்டித்தான் போக வேண்டியிருக்கிறது. எப்போதாவது எதேச்சையாய் லஸ் சிக்னலில் நான் நிற்கும்போது பக்கத்தில் காருக்குள் அவர் உட்கார்ந்துகொண்டிருப்பார். எல்லா நிகழ்வுகளும் ஏதோ ஒரு காரியத்தின் பொருட்டே நிகழ்கின்றன என்று தோன்றுகிறது.

சுஜாதாவுடனான அம்பலம் ஆன்லைன் அரட்டையில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது யாரோ ஒருவர் அணுசக்தி, எனர்ஜி என்று ஏதேதோ சுஜாதாவிடம் சந்தேகம் கேட்டுக்கொண்டிருந்தார். லைப்ரரியில் கேள்விகேட்ட அதே ஆள்தானோ என்று சந்தேகம் வந்தது. சுஜாதாவும் சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தார். நானும் ஆசைக்கு ஓரிரு கேள்விகள் கேட்டுவிட்டு வந்துவிட்டேன்.

என்னைப் போல ஒரு குறு எழுத்தாளன் எங்கிருந்து வருகிறான் என்று தெரியப்படுத்துவதற்கு மேற்கண்ட நினைவுகூறல்கள் தேவைப்படுகிறது. நிறைய எழுத்தாளர்களைப் போலவே சுஜாதாவின் எழுத்தைக் கூர்ந்து கவனித்து ஏதோ கற்றுக்கொண்டதில் நானும் ஒருவன் என்று சொல்லலாம்.

"மறுபடியும் கணேஷ்" என்ற அந்தப் பழைய புத்தகம் கடைசியில் எங்கே போனது என்று இப்போது யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

புள்ளி

இதோ இந்தப்புள்ளியிலிருந்து ஆரம்பிக்கிறேன். நட்சத்திரங்கள் மாதிரி பரந்து சிதறிக்கிடக்கும் கோடானுகோடி வலைத்தளங்களுக்கிடையே இந்தப் புள்ளியைத் தேர்ந்தெடுத்து வந்து உட்கார்ந்திருக்கிறேன். பல ஒளியாண்டுகள் பயணித்து இதை அணுகுகிறவருக்கு இங்கு என்ன கிடைக்கும் என்று தெரியவில்லை. எனது இந்த வலைப்பதிவு முயற்சி எதையாவது எழுது என சதா யோசனைகளை பிராண்டுகிற மனதை சமாதானப்படுத்துவதற்கு என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்களேன்.

தெரியாத்தனமாய் எனக்குள் ஒளிந்திருந்த ஒரு எழுத்தாளனைக் கண்டுபிடித்து முதன்முதலாய் சிறுகதை எழுதுவது எப்படி என்று எனக்குக் கற்றுத்தந்த நண்பர் சரசுராமையும், என் கதைகளை அதிகம் வெளியிட்டு என்னை வளர்த்திய கல்கி இதழையும் மற்றும் என் எழுத்தில் நம்பிக்கை வைத்து என்னை ஊக்கப்படுத்திய திரு. பா.ராகவன் அவர்களையும் நன்றியுடன் நினைத்து என் வலைப்பதியலை துவக்குகிறேன்.

இனி உங்கள் பாடு.