Showing posts with label வலைப்பதிவு. Show all posts
Showing posts with label வலைப்பதிவு. Show all posts

அர்த்தமண்டபக்காரர்

கோவையிலிருக்கும் என் எழுத்தாள நண்பர் சுதேசமித்திரன் வலைப்பதிவு ஆரம்பித்திருக்கிறார். தன் வலைப்பதிவுக்கு அர்த்த மண்டபம் (Hall of Meaning) என்று பெயரிட்டு முதலில் ஒரு சிறுகதையுடன் இணையத்தில் தன் பயணத்தைத் துவக்கியிருக்கிறார். சுதேசமித்திரன் இலக்கிய உலகில் பரவலாக அறியப்படுபவர். ஒரு தேர்ந்த எழுத்தாளர். தமிழ் இலக்கியத்தின் முன்னணி எழுத்தாளர்களின் படைப்புகளைத் தாங்கி வந்துகொண்டிருந்த 'ஆரண்யம்' என்னும் கலை இலக்கிய காலாண்டிதழின் ஆசிரியர்களில் ஒருவர். ஆரண்யத்தின் ஒவ்வொரு இதழிலும் எம்.டி. வாசுதேவன் நாயர், சத்யஜித் ரே போன்றவர்களின் பல புகழ்பெற்ற திரைக்கதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளிவந்துகொண்டிருந்தது மிகச் சிறப்பான விஷயம். இந்த இலக்கியப் பத்திரிக்கையில் வெளியான படைப்புகளுக்கு நான் ஓவியம் வரைந்திருக்கிறேன் என்கிற வகையில் என் பங்கும் உண்டு. சுதேசமித்திரன் இப்போது கோவையிலிருந்து 'சாம்பல்' என்னும் இலக்கியப் பத்திரிக்கையை வெளியிட்டு நடத்திக்கொண்டிருக்கிறார். (இது பற்றி பா.ரா ஒரு முறை தன் வலைப்பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.)

சுதேசமித்திரன் ஒரு நல்ல கவிஞரும்கூட. இதற்குமுன் "அப்பா" என்ற இவரது கவிதைத் தொகுதி வெளியாகியுள்ளது. விரைவில் இவரது ஒரு சிறுகதைத் தொகுப்பும், ஒரு நாவலும் வெளியாகவிருக்கின்றன. விகடன் குமுதம் போன்ற முன்னணி வார இதழ்களில் இவர் நிறைய அருமையான சிறுகதைகள் எழுதியுள்ளார். சுதேசமித்திரன் ஒரு நல்ல ஓவியரும்கூட. இவரைப் போன்ற நல்ல படைப்பாளிகள் இணைய நீரோடையில் இணைவது நல்ல விஷயம். சுதேசமித்திரனை வரவேற்போம்.

புள்ளி

இதோ இந்தப்புள்ளியிலிருந்து ஆரம்பிக்கிறேன். நட்சத்திரங்கள் மாதிரி பரந்து சிதறிக்கிடக்கும் கோடானுகோடி வலைத்தளங்களுக்கிடையே இந்தப் புள்ளியைத் தேர்ந்தெடுத்து வந்து உட்கார்ந்திருக்கிறேன். பல ஒளியாண்டுகள் பயணித்து இதை அணுகுகிறவருக்கு இங்கு என்ன கிடைக்கும் என்று தெரியவில்லை. எனது இந்த வலைப்பதிவு முயற்சி எதையாவது எழுது என சதா யோசனைகளை பிராண்டுகிற மனதை சமாதானப்படுத்துவதற்கு என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்களேன்.

தெரியாத்தனமாய் எனக்குள் ஒளிந்திருந்த ஒரு எழுத்தாளனைக் கண்டுபிடித்து முதன்முதலாய் சிறுகதை எழுதுவது எப்படி என்று எனக்குக் கற்றுத்தந்த நண்பர் சரசுராமையும், என் கதைகளை அதிகம் வெளியிட்டு என்னை வளர்த்திய கல்கி இதழையும் மற்றும் என் எழுத்தில் நம்பிக்கை வைத்து என்னை ஊக்கப்படுத்திய திரு. பா.ராகவன் அவர்களையும் நன்றியுடன் நினைத்து என் வலைப்பதியலை துவக்குகிறேன்.

இனி உங்கள் பாடு.