Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

முதல் காதல். முதல் முத்தம். முதல் சமையல்.

இந்த மு.கா, மு.மு இரண்டும் 'ப்யூர்லி பர்சனல்' ஆக இருப்பதால் அதை இங்கே தணிக்கை செய்து விட்டு தலைப்பின் மூன்றாவது விஷயத்துக்கு நேரடியாக வருகிறேன். நான் முதன் முதலில் சமையல் செய்த அனுபவம் கொஞ்சம் விட்டிருந்தால் நாளிதழில் எட்டுப்பக்க செய்தியாக மாறுகிற அபாயம் வரை போனதை யாராவது சொன்னார்களா?

தங்கமணி (மனைவியை இப்படி குறிப்பிடுவது ஜாலியாகத்தான் இருக்கிறது. வாழ்க மணிரத்னம்!) ஊருக்குப் போவதற்கு (சுமார் ஒரு மாதம் வெக்கேஷனாம்) ஒரு வாரம் முன்னரே கொஞ்சம் கிலியால் லேசாய் வயிறு புரள ஆரம்பித்துவிட்டது. சாப்பாட்டுக்கு என்ன செய்யப் போகிறேன்? மூன்று வேளை ஹோட்டலில் சாப்பிடுவதென்பது ஒத்துவராத ஒரு காரியம். ஆக வேறு வழியில்லாமல் நானே சமைத்து நானே சாப்பிட வேண்டிய நிர்பந்தத்திற்கு காலம் என்னைத் தள்ளிவிடப்போகிறதா?

"முதல்ல குக்கரை எடுத்து.." என்ற தங்கமணியை கையமர்த்தித் தடுத்தேன். "எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் அம்மணி. இதெல்லாம் ஒரு பெரிய விஷயமேயில்லை! நீ எதுவும் சொல்ல வேண்டாம். நான் சமையல் கற்றுக்கொள்வதற்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. நானாக கற்றுக்கொண்டு சமையலில் ஒரு கலக்கு கலக்குகிறேன் பார்!. நீ கவலைப்படாமல் ஊருக்குக் கிளம்பு".

தங்கமணி அப்போது பார்த்த பார்வையின் அர்த்தம் அடுத்த நாள் விடியலில் தெரிந்துவிட்டது. முதன் முதலாக வெறிச்சோடிக்கிடந்த சமையலறைக்குள் லேசான ஜேம்ஸ்பாண்ட்தனத்துடன் எட்டிப் பார்த்தேன். ஓ! இதுதான் நான் இனிமேல் இயங்க வேண்டிய களம். இந்தக் குக்கர் எங்கேயிருக்கிறது?. அதோ!. ம்! தங்கமணி சொன்னது என்ன? "முதல்ல குக்கரை எடுத்து...

எடுத்து???

'எங்கே நீ சொல்லவிட்டாய் மானிடா...!! எக்கேடோ கெட்டுப்போ! நீயாச்சு! உன் சமையலாச்சு!' என்று விட்டத்தில் அசரீரி கேட்டது.

என்றோ ஒரு நாள் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு முயற்சியாய் சேர்ந்து சமைத்த அனுபவங்களை ஞாபக அடுக்கில் விரட்டி விரட்டி தேடி மனதில் ஒரு சில குறிப்புகள் தயார் செய்துகொண்டேன். இதோ ஆரம்பித்தாயிற்று. ஒரு வழியாய் ஆயத்தங்கள் முடிந்து குக்கர் நீலமாய் எரிகிற அடுப்பின்மேல் உட்கார்ந்திருக்கிறது. இன்னொரு பத்து நிமிடத்தில் சாப்பாடு ரெடி. அதற்குள் ரசம் வைத்து முடித்துவிடலாம். குழம்பு வைப்பதெல்லாம் ஒரு வேலையா என்ன? எல்லாமே தாளித்துத் தாளித்து கொட்டுவதுதானே?. சரி! ரசம். அதற்குத் தேவையான பொருட்கள், உபகரணங்கள் என்னென்ன? முதலில் புளியை ஊறவைத்து பிறகு தக்காளிக் கரைசலில்... என்று கரெக்டாக ஆரம்பித்துவிட்டேன் பாருங்கள்.

நான் தடுத்ததையும் மீறி தங்கமணி "குக்கர் நாலு விசில் அடிச்சா அடுப்பை ஆஃப் பண்ணிருங்க" என்று கோவை எக்ஸ்பிரஸ் கிளம்பும் போது ஜன்னல் வழியே சொன்னது நினைவுக்கு வருகிறது. நான் விசிலுக்காகக் காத்திருந்தேன். இன்னும் வரவில்லை. மாறாக என்ன இது லேசாய் ரப்பர் கருகுகிற வாசம்?. நான் மெதுவாய் குக்கரை அணுகினேன். என்னவோ தப்பு. அதன் மூடி மற்றும் இன்னபிற விஷயங்களைச் சோதித்தேன். நேரமாக ஆக குக்கரின் மகா மெளனம் என்னை சோதிக்க ஆரம்பித்தது. கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்துக்கும் மேலாகிவிட்டது. எங்கே விசில்? விசிலடிப்பதெல்லாம் அதற்குப் பிடிக்காதோ என்னவோ..!!

திறந்து பார்த்துவிடலாமா என்று யோசிக்கும்போது.. குக்கரிலிருந்து வரக்கூடாத இடத்திலிருந்தெல்லாம் நீராவி கசிய ஆரம்பித்ததை பார்த்தேன். ஏய்!! என்னிடம் மட்டும் இது என்ன விளையாட்டு? ரப்பர் வாசம் வீடெங்கும் பரவ ஆரம்பித்தது. எனக்கு உடனே தீபாவளியன்று வெடிக்கும் பச்சை நிற அணுகுண்டும், எரிமலை வெடிப்பதற்குமுன் லேசாய் புகைவதும் நினைவுக்குவர... சட்டென்று தீர்மானித்து குக்கர் மூடியை சடால் என்று திறந்தேன். அத்தனை நேரம் அடக்கி வைத்த மகாகோபம் புஸ் என்று நீராவியாய் சீறி முகத்தில் அடிக்க நான் பத்தடி எகிறி நின்றேன். இன்னும் ஒரு ஐந்து நிமிடம் பொறுத்திருந்தால் அது நிச்சயம் வெடித்துச் சிதறியிருக்கக்கூடிய அபாயம் ரொம்ப லேட்டாய் உறைத்தது. இப்போது இன்னும் அதிகமாய் ரப்பர் வாசம்.

சுதாரித்து மெதுவாய் குக்கர் மூடியை ஆராய்ந்தேன். வெப்பம் தாங்காமல் வால்வ் ஓட்டையாகியிருக்கிறது பார்! இத்தனை நேரமாகியும் சாப்பாடு வெந்திருக்கவில்லை. நான் யோசனையாய் நின்றேன். ப்ரெஷர் குக்கர் வேலை செய்யும் முறைபற்றி தீவிரமாய் யோசிக்க ஆரம்பித்தேன். இன்றைக்கு ஹவ் ஸ்டஃப் ஒர்க்ஸ் டாட் காமில் தேட வேண்டும். எங்கேயோ லாஜிக் இடிக்கிறது. பாஃர்முலா வேலை செய்யவில்லை.

வால்வின் ஈயம் உருகி சாப்பாட்டோடு கலந்திருக்கும் என்பதால் இனி அதை வைத்துக்கொண்டு மேற்கொண்டு எதையும் யோசிப்பது உசிதமல்ல என்று பட்டது. இதோ ரசம் கூட இப்போது கொதிநிலைக்கு வந்துவிட்டது. ரசப்பொடியை ஸ்பூனில் எடுக்கும்போதுதான் இந்தக் குக்கரின் அபாய நிலை உணர்ந்து அருகில் போய்ப்பார்த்தது. பொடியை போட்டேனா இல்லையா? திடீர் சந்தேகம்! அப்புறம் ரசத்தை கொஞ்சமாய் கரண்டியில் எடுத்து ருசி பார்க்க.. உவ்வே!

எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு வசந்தபவனுக்குப்போய் ரெண்டு இட்டிலி, ஒரு கல்தோசையை உள்ளே தள்ளி பசியாற்றிக்கொண்டேன்.

நலமாய் ஊர் போய் சேர்ந்துவிட்டதாக தங்கமணியிடமிருந்து இரவு போன் வந்தது. பிரயாண செளகரியங்கள் பற்றியெல்லாம் பொதுவாய் கேட்டறிந்துவிட்டு அப்புறம் குரலைத் தணித்துக்கொண்டு மெதுவாய் கேட்டேன். "முதல்ல குக்கரை எடுத்து...சொல்லு.! அப்பறம் என்ன பண்ணனும்?"

ஒரு கடிதம்

நான் என் முதல் கடிதத்தை எப்போது யாருக்கு எழுதினேன் என்பது நினைவில்லை. பத்தாம் வகுப்பு பரீட்சை முடிந்ததும் "தாஜ் தியேட்டரில் சினிமாவுக்குப் போகலாமா?" என்று நாலுவீடு தள்ளி இருக்கிற கணேஷூக்கு என் தம்பியிடம் கொடுத்தனுப்பிய துண்டுச் சீட்டுகூட என் முதல் கடிதமாக இருந்திருக்கலாம். எங்கேயோ எப்படியோ தொடங்கிவிட்டது அது. அடிக்கடி படிப்பு வேலையென எல்லோரும் இடம் மாற நேர்ந்த சூழ்நிலைதான் யாருக்காவது கடிதமெழுதுவதன் அவசியத்தைத் ஏற்படுத்தியது என்றாலும்.. சில முக்கியமான தகவல்களைத் தெரிவிப்பதற்கென என்று இல்லாமல்.. அது பின்னாளில் ஒரு சுவாரஸ்யமான விஷயமாகிவிட்டது. அப்போது கடிதமெழுதுவதென்பது ஒரு போதை மாதிரி. அந்த அனுவங்களையெல்லாம் சொல்ல இங்கே இடம் போதாது. கடிதமெழுதுவதில் என்னென்ன புதுமைகள் செய்ய முடியுமோ அத்தனையும் பண்ணி தபால்காரரிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட சம்பவங்களும் உண்டு. உதாரணத்துக்கு போஸ்ட் கார்டில் படம் ஒட்டி லே-அவுட் செய்து அனுப்புவதும், அட்ரஸை தலைகீழாய் பின்கோடிலிருந்து ஆரம்பித்து எழுதுவது.. இன்னபிற! இன்றைய தேதிக்கு நான் எழுத்துலகுக்கு நல்லமுறையில் அறிமுகமாயிருப்பதற்கு கடிதப் பயிற்சி முதல் மூலகாரணம். நானும் இலக்கியம் சார்ந்த என் நண்பர்களும் எழுத்துநடையைப் பக்குவப்படுத்திக்கொண்டதற்கு கடிதம் எழுதுவதை ஒரு கருவியாய் உபயோகித்துக்கொண்டோம் என்று நிச்சயம் சொல்லலாம்.

போஸ்ட் கார்டு, இன்லேண்ட் லெட்டர், என்வலப் என்று மாய்ந்து மாய்ந்து என் நண்பர்கள் எழுதிய கடிதங்களைக் கிழிக்க மனமில்லாமல் எடுத்துவைத்ததில் ஒரு சூட்கேஸ் நிறைய குவிந்து கிடக்கிறது. அதில் நிறைய கடிதங்கள் இப்போது நிறம் மங்கி பழுப்பேறத்துவங்கிவிட்டது, கொஞ்சமல்ல - ரொம்பவே வருத்தமாயிருக்கிறது. சந்தோஷப்பட வைத்தது, வேதனைகளைக் கொண்டுவந்தது.. தளர்ந்தபோது உத்வேகமும், உற்சாகமும் அளித்தது, எரிச்சலடைய வைத்தது, நெகிழ்வாய் கண்கலங்க வைத்தது.. துள்ளிக் குதிக்க வைத்தது... வாய்விட்டுச் சிரிக்க வைத்தது, தர்மசங்கடத்தில் நெளிய வைத்தது.. யாருக்கும் சொல்லாதே என்று ரகசியங்களைத் தாங்கி வந்தது.... இப்படி எண்ணற்ற கடிதங்கள். என்றோ, யாரோ எழுதிய கடிதத்தை இப்போது எடுத்துப்படித்துப் பார்ப்பது சுகமான விஷயம். ஆனால் ஒரு சில சமயம் என்றோ நடந்த ஒரு நிகழ்வுக்கு இன்று படிக்கும்போது மனசை கனக்கச் செய்யும்விதமான கடிதங்களும் அதில் உண்டு.

நேற்று அதுமாதிரி பழையவைகளை லேசாய் கிளறியபோது கண்ணில்பட்டது ஒரு கடிதம். 75 பைசா இன்லண்ட் லெட்டர். பதினைந்து வருடம் முன்னால் என் நண்பர் சரசுராம் எனக்கெழுதியது. படிக்கும்போது அந்தக் கடிதத்தில் புதைந்திருந்த, அது எழுதப்பட்ட காலத்தின் வேதனையை இப்போதுகூட உணரமுடிந்தது. அந்தக் கடிதம் அத்தனை பர்சனலாக இல்லாமல் பொதுவாய் ஒரு சிறுகதைத்தனத்துடன் இருந்ததால், இங்கே அதை பகிர்ந்துகொள்கிற விருப்பத்தை எனக்குக் கொடுத்தது. ஆக, சரசுராமின் அனுமதியுடன் அதை இதோ இங்கே...

-----------------------------------------------------------------------------------------------------
பொள்ளாச்சி
4-4-91

"வாழ்க்கை என்பது துவந்த யுத்தமா? விரிந்த கனவா? ஆச்சரிய நிமிடங்கள் அடங்கிய கதையா? தீக்குள் விரலை வைத்துத் தீண்டும் இன்பத்தைக் காணும் தவமா? எனக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை." - மாலன்.

*****

ப்ரிய ரகுவிற்கு....ராம்

இந்தக் கடிதம் முழுவதும் பாட்டியைப் பற்றியே எழுதும் எண்ணம் நான் முன்பே யோசித்ததல்ல. ஆனால் அது தவிர, தற்போதைய என் நினைப்பில் அல்லது ஏதோவொரு நியாயத்தில் இடமில்லை. போன வாரத்தின் ஒரு தினத்தில், புழு மாதிரி சுருண்டு கிடந்த பாட்டியை பார்த்துவிட்டு மாமா அழுதாரே பார்க்கணும். எல்லோரும் நிறுத்தச்சொல்ல.. முடியவே முடியாமல் அழுதார். எனக்கு சமாதானப்படுத்த விருப்பமேயில்லை. அழட்டும்! நிறைய அழட்டும் என்றுதான் இருந்தது. ஒரு துக்க நேரத்தில் சமாதானம் சொல்வதைவிட வேறென்ன அசிங்கம் இருந்துவிடமுடியும்? அழுகை நிஜமாய் மனதின் கவிதை. அது தரும் ஒத்தடம் வார்த்தைகளில் இல்லை. நம்மால் பிரியப்பட்டவர்களின் உயிர் நாட்கள் எண்ணப்படுவது எவ்வளவு கொடுமை? ஏழு வருட தண்டனைக்குப்பின், சாவின்போதுகூட ஒரு சின்ன சுகத்துடன் போக முடியாத அவர்களின் நிலைமை எதிரிக்குக்கூட ஏற்படக்கூடாது. ஒரு மனித உயிர் இவ்வளவு தூரம் சித்திரவதைக்கப்படுவதைக் நான் பார்ப்பது இதுவே முதன் முறை.

கடவுள் மீதான எண்ணத்தில் மேலும் விரிசல் விழுந்துகொண்டிருப்பதெல்லாம் இத்தகைய நிகழ்ச்சியின்போதுதான். பாட்டி கும்பிடாத சாமியா? அவர்கள் செய்யாத பூஜையா? அவர்களிடம் இல்லாத சுத்தமா? செய்யாத நல்லவைகளா? பிறகும் இவர்களுக்கு இப்படியொரு நிலைமை என்றால்...? தீர்க்கமுடியாத பிரச்சனைக்கு விதி என்று பெயரிட்டு... - எல்லாம் விதியெனில் கடவுள் எதற்கு?

தினம் தினம் எல்லோரும் சுற்றிலும் நின்று பாட்டியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பாட்டிக்கு வந்தவர்களில் எத்தனைபேரை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது என்பது தெரியாது. ஆனால் வந்தவர்களைப் பார்க்கும் அந்த ஸ்நேகமான பார்வை கொஞ்சமும் இன்னும் குறையவேயில்லை. வந்தவர்கள் நீ பிழைக்கவே மாட்டாய் என்கிற மாதிரிதான் ஆறுதல் சொல்கிறார்கள். தலையசைத்தால்... தண்ணி வேணுமா? என்கிறார்கள். கண் உருண்டால் காபியா வேணும்? என்கிறார்கள்.

பாட்டி எல்லோருக்கும் ஒரு குழந்தை. அவரின் ஒவ்வொரு அசைவுக்கும் காரணங்கள் திணிக்கப்படுகிறது. பாட்டி உயிருள்ள ஒரு ஜடம். பாட்டியை எண்ணுகிறபோதெல்லாம், அவர்கள் பற்றி நினைவுகள் தோன்றாமல் இருப்பதில்லை. ஒவ்வொருவரைப்பற்றியும் நினைக்க ஏதாவதொரு நினைவு நிச்சயம் இருக்கும். அது பெரியவர்களானாலும்.. ஒருவயது குழந்தையானாலும் கூட!

உள்ளே நுழைந்ததும் தனக்கு தெரிந்த முறையில் வரவேற்கும் பாங்கும், சாப்பிடச்சொல்லி, டீ குடிக்கச் சொல்லி.. திக்கிக் திக்கித் துண்டு துண்டாய் வந்து விழும் வார்த்தைகளும், அதை மறுக்கிறபோது.. அந்த முகச்சுருக்கம் மீறி தெரிகிற அசைவுகளும், (நான் கோபமென நினைத்துக்கொள்வதுண்டு!). இதற்கிடையில், சில சந்தோஷ நிமிடங்களில், அந்தக் கோணிப்போன வாயிலிருந்து வரும், இன்னும் மறந்துபோகாத சில பாடல்களும்... இன்னமும் சின்னச் சின்னதாய் என்னென்னவோ... மறக்க நாளாகும். எப்படி அழகு ததும்பின உருவம் அது! இப்போது முழுவதும் உருகிப்போய்.. வெறும் எலும்புக்கூடும், அதற்குப் பாதுகாப்பென மிக லேசாய் தொங்கும் தோலும்.. ச்சே.. வாழ்க்கை வெறுப்பாகிப் போகிறது.

திங்கட்கிழமை, நானும் மாமாவும், கோயிலுக்குப் போய் குங்குமத்துடன் வீடு திரும்ப, வீட்டில் கூட்டம். பாட்டி மூச்சுத்திணறிக் கொண்டிருந்தார்கள். வாயில் ஒரு வித சப்தம். கையிலிருந்த குங்குமம் வைக்கச்சொன்னார்கள். வைத்து ஐந்து நிமிடத்தில் உயிர் பிரிந்தது. அந்த உயிர் பிரிந்த நிகழ்வு, எல்லோருக்கும் அழுகையை வெளிப்படுத்த, எனக்கு மட்டும் சந்தோஷமாயிருந்தது.

அன்புடன்
-ராம்.

பிஸ்லெரி கருணைகள்

சின்ன வயதில் எனக்கு செடி வளர்ப்பது ரொம்பப் பிடிக்கும். நாங்கள் முன்பிருந்த ஊரில் குடியிருந்த வீட்டில் அடுக்களைக்குப் பின்பக்கமாய் நல்ல செம்மண் புஷ்டியுடன் ஒரு தோட்டம் இருந்தது. சிறிது காலம் வேலையில்லாமல் வெட்டியாய் வீட்டில் இருந்தபோது அப்பாவின் பார்வையைத் தவிர்ப்பதற்காய் அம்மாவுக்கு தோட்டத்தில் உதவுவது மாதிரி பாவ்லா பண்ணிக்கொண்டிருந்ததுதான் தாவரம் வளர்ப்பது குறித்தான எனது முதல் ஆவலைத் தூண்டியது எனலாம். அம்மா வெண்டைக்காய், கத்தரிக்காய், பச்சை மிளகாய் போன்ற தினசரி சமையல் வஸ்துக்களை எப்படி வீட்டுத் தோட்டத்திலேயே தயாரித்துக்கொள்வதென்கிற கலையை கற்று வைத்திருந்தாள். ஒரு தடவை தோட்டத்தில் காய்த்த அந்த முதல் பூசனிக்காயை சமைக்காமல் வைத்து வைத்துப் புளகாங்கிதமாய் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அம்மா காய்கறிகளை மட்டுமே பயிரிடுவது எனக்கு அத்தனை சுவாரஸ்யமில்லாமலிருந்தது. கொஞ்சம் பூச்செடிகள் வேண்டாமா? என் விருப்பத்தை அம்மாவுடன் சொன்னபோது தன் ஒரு சில காய்கறி அறுவடைகளை முடித்துக்கொண்டு எனக்கான இடம் ஒதுக்கினாள். ஒரு நண்பன் வீட்டில் பார்த்த அந்த மஞ்சள் பூச்செடியின் விதைகளை கொண்டுவந்தேன். மண்தோண்டி விதை விதைத்து, சிறிது தண்ணீரும் ஊற்றிவிட்டு பிறகு தினம் அது முளைக்கிறதா என்று வந்து வந்து பார்க்கிற சுகம் அலாதியாயிருந்தது. ஒரு துளிர் முளைத்ததைப் பார்த்துவிட்டபோது மனம் சந்தோ்ஷத்தில் துள்ளியது. ஒரு சில தினங்கள் கழித்து மஞ்சள் நிறத்தில் கொத்துக்கொத்தாய் பூத்த அதற்கு சைனா ரோஸ் என்று பெயர் சொன்னார்கள். திடீரென்று தோட்டத்துக்கு உயிர் வந்துவிட்டது. அதற்கப்புறம் ரோஜா, பட்டன் ரோஸ், குரோட்டன்ஸ்கள், நித்ய கல்யாணி, சூரியகாந்தி, செம்பருத்தி என்று என்னென்னவோ தோட்டத்தில் முளைத்துவிட்டதைப் பார்த்து அம்மா வியந்து நின்றாள். அப்பாவின் பார்வை இன்னும் கடுமையாய் மாறியது.

பிறகு திடீரென்று எனக்கு வேலை கிடைத்துவிட்டதும், வீடு மாறினதும், மாறின வீட்டில் செடிவைக்க அதிகமாய் இடமில்லாமல் போனதும் ஆக தாவரத்திட்டங்கள் பின்னாளில் கொஞ்சம் கொஞ்சமாய் கைவிடப்பட்டன. அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைக்குத் தாவினதற்கப்புறம் குழிதோண்டி விதைபோட்டு செடி வளர்ப்பது கற்பனையில் மட்டுமே முடிந்தது. வேண்டுமானால் தொட்டிச்செடிகளாய் சிலது வைத்து அழகுபார்த்துக்கொள்ளலாம். அவற்றிற்கு விதைகளும், கொம்புகளும், செடிகளும் கிடைத்தாலும், சுற்றிலும் சுவர்கள் மறைத்து காற்றுக்கே அனுமதி மறுக்கப்பட்டுவிட்ட அபார்ட்மெண்ட் வராண்டாவில் வெயில் எங்கேயிருந்து வரும்? பச்சையம் தயாரித்தல் எப்படி நிகழும்? இவையெதும் தேவையற்ற ஜீவனற்ற பிளாஸ்டிக் செடிகள் மேலோ அத்தனை விருப்பமில்லை.

இருந்தாலும்... விட்டுவிடமுடியுமா? அலுவலக பால்கனி மணிப்ளாண்ட் செடியிலிருந்து கொஞ்சம் களவாடிவந்து ஹார்லிக்ஸ் பாட்டிலில் பிஸ்லெரி வாட்டர் (!) நிரப்பி செடியைப்போட்டு என் மூன்றாவது மாடி பால்கனி க்ரில்லில் அதை அபத்திரமாய் தொங்க விட்டேன். ஜென்மம் சாபல்யமடைந்ததுபோல் ஒரு உணர்வு. தினம் அதன் வளர்ச்சியை உற்றுக் கவனிக்க ஆரம்பித்தேன். ஒரு இலை, இரு இலை, என்று வெயில்தேடி மணிப்ளாண்டின் கைகள் பால்கனி க்ரில்லைத்தாண்டி விரிய ஆரம்பித்தது. ஆஹா! இந்த அபார்ட்மெண்டின் வரட்டு வாழ்க்கைக்கு அர்த்தம் வந்து விட்டது. ஆனால் இப்படியும் ஒரு செடி இருக்குமா? முளைத்து மூன்று இலை விடுவதற்குள், குடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல் மூச்சுத்திணறுகிற நகரத்தில் நான் என்னை பாரிவள்ளல் மாதிரி நினைத்துக்கொண்டு பாட்டிலில் ஊற்றுகிற பிஸ்லெரி வாட்டரை அந்தச் செடி அசுரவேகத்தில் குடித்துக் காலிபண்ணிக்கொண்டிருந்தது. பாட்டிலில் நிரப்பிவைக்கிற தண்ணீர் இரண்டு நாள் கழித்துப்பார்த்தால் பாதிக்கு வந்துவிடுகிறது. சரியான ராட்சஸ செடிபோல என்று நினைத்துக்கொண்டேன்.

ஒரு நாள் காலை அதன் தற்போதைய வளர்ச்சிநிலையை மேற்பார்வையிட பால்கனி கதவைத் திறந்தபோது எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாட்டில் அப்படியே இருக்கிறது. மணிப்ளாண்டைக் காணவில்லை. எங்கே போயிற்று? உடனே தாமதியாமல் பால்கனி கிரில் வழியே எட்டிப்பார்த்தேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை கீழே எங்கேயும் அதன் பச்சை தட்டுப்படவில்லை. இத்தனை உயரம் ஏறிவந்து இதை யாரேனும் திருடிக்கொண்டு போகவேண்டியதன் அவசியத்துக்கு வாய்ப்பிருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தேன். மின்கம்பிமேல் உட்கார்ந்திருந்த காக்கைமேல் எனக்கு சந்தேகம் வந்தது. பயங்கர சோகமாகிவிட்டது. கீழே போய்த் தேடிப்பார்த்தேன். எங்கேயும் காணோம்.

சரி எனக்குக் கொடுப்பினை அவ்வளவுதான்போல என்று மனம் சமாதானத்திற்கு வந்தது. மறுபடி இன்னொரு செடியை கொண்டுவருவதுபற்றிய யோசனையைக் கைவிட்டேன். இதெல்லாம் சரிவராது போல. தண்ணீர் பாதி தீர்ந்துபோன பாட்டிலை மட்டும் அப்புறப் படுத்தாமல் அப்படியே விட்டுவைத்திருந்தேன். அது அங்கேயே இருக்கட்டும். மணிப்ளாண்ட் சில நாள் என்வீட்டில் வாழ்ந்ததை நினைவுபடுத்திக்கொண்டு.

மறுநாள் எதற்கோ மறுபடியும் பால்கனி கதவைத் திறந்தபோது அதைப் பார்த்தேன். மணிப்ளாண்ட்டை அல்ல. ஒரு அணில். கிரில் கம்பியில் ஒரு சர்க்கஸ் லாவகத்துடன் தலைகீழாக தவழ்ந்துவந்து பாட்டிலுக்குள் தலை நுழைத்து தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தது. ஓஹோ! இப்போது எல்லா மர்மங்களும் பளிச் என்று விளங்கிவிட்டன. மணிப்ப்ளாண்ட்டாவது இவ்வளவு வேகமாய் தண்ணீரை உறிஞ்சுவதாவது. லேசாய் சிரிப்பு வந்தது. எல்லாம் இதன் வேலை! இந்த அணிலைக் கோபித்துக்கொள்ளமுடியுமா? தண்ணீர் குடித்துவிட்டு டுபுக் டுபுக் என்று உற்சாகமாய் வாலாட்டியபடி அணில் இடத்தைக் காலிபண்ணியது.

நான் யோசிக்கவேயில்லை. உடனே சமையலறைக்கு ஓடிப்போய் கேனிலிருந்து பிஸ்லெரி வாட்டர் எடுத்துவந்து பாட்டிலில் நிறைத்தேன்.

அணிலோ செடியோ.. ஏதாவது ஒன்று. வாழ்க்கை நிறைவாயிருக்கிறது.