கீட்ஸ் படிச்சிருக்கியா?

கதைகளோ, நாவல்களோ படிப்பது என்பது சும்மா பொழுதுபோக்கிற்காகவா? அல்லது குறிப்பிட்ட எழுத்தாளர்களின் எழுத்து நடைக்கான ஆராதனை அல்லது ஆர்வமா? இலக்கிய (அல்லது கமர்ஷியல்) தாகமா? கதையில் வரும் சம்பவங்களோடு தன் வாழ்வில் எதையாவது பொருத்திப் பார்த்து மகிழ்ச்சி அல்லது துக்கப்படுவதற்கா? அல்லது தன் வாழ்வுக்கெட்டாத, கற்பனை செய்து பார்க்க இயலாத நிகழ்வுகளை கதைகளில் படித்துக் களிக்கிற திருப்தியா? பொது அறிவு வளர்ப்பதற்கா?

இது எல்லாமும் ஆக இருக்கலாம் அல்லது இவற்றில் ஏதாவது ஒன்று. ஆனால் கடைசியில் சொல்கிற பாயிண்டை கவனியுங்கள். பொது அறிவு வளர்ப்பது.

கதைகள், நாவல்கள் படிப்பதால் நம் பொது அறிவு வளருமா என்றால் நிச்சயம் ஓரளவுக்கு வளரும் என்பதற்கான பதிவு இது. எனக்கு கொஞ்சமாய் வளர்ந்திருக்கிறது. குறிப்பாக சின்ன வயசிலிருந்து படித்த வணிக எழுத்தாளர்களின் கதைகள், நாவல்கள் மூலம். பல்வேறு விஷயங்கள் பற்றிய ஞானத்தைப் பெற அவைகள் வெகுவாக துணை புரிந்திருக்கின்றன.

அப்போது பெருமளவில் வந்துகொண்டிருந்த பாக்கெட், மாத நாவல்களை எடுத்துக்கொள்ளுங்கள். (உடனே எடுக்கப் போய்விடாதீர்கள்). ராஜேஷ்குமாரிலிருந்து ஆரம்பித்தால் சுஜாதாவரை ஒரு பெரிய ரவுண்டு வரலாம். இந்த மாதிரி எழுத்தாளர்கள் தாராளமான ஆங்கிலக் கலப்போடு எழுதினார்கள் என்பது வாசகர்களின் வொக்காபுலரி அல்லது ஒக்கபிலேரியை முன்னேற்றப் பயன்பட்டன. நான் சொல்வது அதிகமாய் விஷய ஞானமற்ற வயதில் இவைகளைப் படிப்பவர்களுக்கு (அல்லது படித்தவர்களுக்கு). நான் ஆறாங்கிளாஸ் படிக்கும்போதே அம்புலிமாமா ரத்னபாலாவிலிருந்து ப்ரொமோஷன் ஆகி மாத நாவல்களுக்கு வந்துவிட்டேனாக்கும். அப்போது ராஜேஷ்குமார் “அவன் காரிடாரில் நடந்து வெளியே வந்தான்” என்று எழுதினால் எனக்கு காரிடார் என்ற புதிய வார்த்தை கிடைக்கிறது. அப்போது இவையெல்லாம் நான் கேள்விப்படாத வார்த்தைகளாகியிருந்தது. இப்போதுகூட எங்கேயாவது நீண்ட காரிடாரில் நடக்கும்போது ராஜேஷ்குமார் சிலசமயம் சட்டென்று நினைவுக்கு வருவதுண்டு. இதே போல் சில உதாரணங்களைச் சொல்லவேண்டுமென்றால். (சும்மா படித்த ஞாபகத்திலிருந்து உதாரணத்துக்கு மட்டுமே. சரியான வரிகள் அல்ல)

  • அவன் போர்டிகோவில் காரை செருகி நிறுத்தினான்.
  • அவள் லவுஞ்சில் காத்திருந்த மாதவனை நோக்கிக் கையசைத்தாள்.
  • அந்த விமானம் ஒரு அலுமினியப் பறவை போல மிதந்துவந்தது.
  • ஸ்க்வாட்ரன் லீடர் குமார் கீழே விழுந்தபோது ஒரு பந்துபோல தன்னைச் சுருட்டிக்கொண்டான்.
  • அவன் அவளை நரிமன் பாயிண்டிற்கு வரச் சொல்லியிருந்தான்.
  • வஸந்த் ஒருவித ரிஃப்ளெக்‌ஷ் இயக்கத்தில் செயல்பட்டு உடனே குனிந்துகொண்டான்.
  • அவன் யமஹாவை உதைத்துக் கிளப்பிச் சீறினான்.
  • சோடியம் வேப்பர் விளக்கு வெளிச்சத்தில் அவள் முகம் இன்னும் அழகாக இருந்தது.

மேலுள்ளவற்றில் காணப்படும் வரிகளில் போர்டிகோ, லவுஞ்ச், அலுமினியத்தால் செய்யப்படும் விமானம், ராணுவத்தில் இருக்கிற ஸ்க்வாட்ரன் லீடர் என்ற பதவி, மும்பையின் நரிமன் பாயிண்ட், ரிப்ளெக்ஸ், இந்த மாதிரி புதிய வார்த்தைகள் எல்லாம் ஆறாங்கிளாஸ் தமிழ் மீடியம் படிக்கிற பையனுக்கு எதேஷ்டமான பொது அறிவா இல்லையா? நிச்சயம் நான் யமஹாவையோ, சோடியம் வேப்பர் விளக்கையோ அப்போது பார்த்ததில்லை. அப்புறம்.. மார்ச்சுவரி, போஸ்ட்மார்ட்டம், ஃபாரன்ஸிக், அப்ஜெக்‌ஷன் யுவர் ஆனர், வென்ட்டிலேட்டர், பாயிண்ட் 33 பிஸ்டல், ஸிர்ரஸ் மேகத்தீற்றல்கள், ஜானவாசக் கார், காக்டெயில், ப்ரீஃப்கேஸ், ஃபேக்ஸ், ரிகர்மாட்டிஸ், ரிஸீவர், மவுத் பீஸ், ஹேபியஸ் கார்பஸ், காஸனோவா, சாண்ட்லியர் விளக்குகள், வாய்ஸ் ரெகக்னிஷன், பீத்தோவனின் ஸிம்பனி, ஹாலோகிராம், அப்பெர்ச்சர், வியூஃபைண்டர், ஸாட்டின் பாவாடை இன்னபிற.

இது மட்டுமல்லாமல் மனிதர்களைப் பற்றி, சில பிரபலங்களைப் பற்றித் தெரிந்துகொள்வதும். சுஜாதா ஒரு கதையில் ‘அவன் ஒரு நவீன மெஸ்ஸையா போல தோற்றமளித்தான்’ என்று எழுதியிருப்பார். யாருடா இது மெஸ்ஸையா (
messiah) என்று ரொம்ப நாள் மண்டைக் குடைச்சலாக இருந்தது. கணேஷ் வஸந்திடம் “கீட்ஸ் படிச்சிருக்கியா” என்று கேட்கும்போது ஒரு பிரபல உலகக் கவிஞரைத் தெரிந்துகொள்ள முடிந்தது. (ஆனால் படித்ததில்லை). இந்த வரிசையில் ஷெல்லி, பைரன் எல்லோரும் அடிக்கடி வருவார்கள்.

நான் சென்னைக்கு வரும் முன்பே இந்த நகரம் எனக்குப் பரிச்சயமான இடமாகத் தோற்றமளித்ததற்குக்கூட மேற்கூறிய எழுத்தாளர்களுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. பொதுவாக அநேக கதைகள், மாத நாவல்கள் சென்னையைக் களமாக வைத்து எழுதப்பட்டன என்கிற வகையில் மிகக் கொஞ்சமாக அதன் பேட்டைகளைப்பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது. ‘அவன் தேனாம்பேட்டை சிக்னலைக் கடந்து...’ அல்லது ‘மெரீனாவில் கண்ணகி சிலையருகே காத்திருந்தான்’ ‘மவுண்ட் ரோட்டில் ஜெமினி மேம்பாலத்துக்கு அருகே அவன் அலுவலகம் இருந்தது’ அல்லது ‘எலியட்ஸ் பீச்சின் மணலில் இருவரும் நடந்தார்கள்’ அல்லது ‘தம்புச் செட்டி தெருவில் உள்ள அவன் அலுவலகத்துக்குப் போனபோது...’ அல்லது ‘ஹிக்கின் பாதம்ஸின் அருகே காரை நிறுத்தினான்’ ‘கொத்தவால் சாவடிக்கு இடது பக்கமாக பைக்கை வளைத்துத் திருப்பினான்’ - இவை போதாதா சென்னையைப் பற்றி சும்மா போகிற போக்கில் தெரிந்து கொள்வதற்கு? (சென்னை கொத்தவால் சாவடி மார்க்கெட்டை கோயம்பேட்டுக்கு மாற்றின விஷயத்தை மக்களுக்கு அறிவிக்கும் விதமாக “கொத்தால் சாவடி லேடி நீ கோயம்பேடு வாடீ..” என்ற பொது அறிவுப்பாடலை கேட்டிருக்கிறீர்களா?).

மேலும் ராஜேந்திரகுமார், புஷ்பா தங்கதுரை, சாண்டில்யன் கதைகளின் மூலம் கொஞ்சமாய் ‘அந்த’ அறிவு வளர்ந்ததையும், பட்டுக்கோட்டை பிரபாகரின் ஹீரோயின் சுசீலாவின் பனியன் வாசகங்கள் (I like Tennis, because they play with two balls) மூலம் டென்னிஸ்-ஸில் இரண்டு பந்துகளை வைத்து விளையாடுவார்கள் என்கிற மகா அறிவு கிடைத்ததையும் சொல்லியாக வேண்டும்.

வணிக எழுத்துக்களில் மட்டும்தான் என்றில்லை. இன்றைக்கும் ஆதவன் எழுத்துக்களைப் படித்தால் ஒரு அலுவலகத்தின் இயக்கம், அன்றைய ஹாலிவுட் ஹீரோக்கள், ஹீரோயினிகள் (ஆட்ரே ஹெப்பர்ன்), டெல்லியின் இடங்கள் என்று எத்தனையோ விஷயங்கள் தெரிந்துகொள்ள முடிகிறது. எவ்வகை எழுத்தாளராக இருந்தாலும் அவர்கள் கதையினூடாக லேசாகத் தெளித்துவிடும் விவரங்கள் இது மாதிரி நிறைய இருக்கும்தான்.

இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் நான் என்ன சொல்ல வந்தேன் என்று புரிவதற்கு இத்தனை போதும் என்று நினைக்கிறேன். படிப்பது என்பது நிச்சயம் அறிவை வளர்க்க உதவும் செயல். நிறைய ஆங்கில புத்தகங்களாகப் படித்துத் தள்ளியிருந்தால் இதைவிட மேம்பட்ட விஷயங்கள், விவரங்கள் எத்தனையோ கிடைத்திருக்கலாம்தான். நான் அதிகம் படித்தது தமிழ் புத்தகங்கள்தான். எனக்கு இப்போதிருக்கிற அறிவின் ஒரு பகுதி நிச்சயம் சின்ன வயசில் படித்த தமிழ் கதைகள், நாவல்களால் வந்ததுதான் என்று நிச்சயம் சொல்லமுடியும். நீங்களும் கூட இதை உணர்ந்திருப்பீர்கள். இல்லையா?

17 comments:

  1. பதிவு நல்லா இருக்கு.நானும் இந்த மாதிரி பதிவு போடனும்னு இருந்தேன்.நீங்க போட்டுட்டீங்க.

    நானும் இந்த அனுபவங்களைப் பெற்று இருக்கிறேன்.
    ”ஞானக்கூத்தனின் ‘அது வேறு காலம்” என்று சுஜாதா
    ஏதோ ஒரு கதையில் வரும்.உடனே ஞானக்கூத்தனைப் படித்தேன்.இது மாதிரி name dropping நிறைய வரும்.

    ReplyDelete
  2. ஆமாம் சித்ரன் நீங்கள் சொல்வது உண்மைதான். அதே போல அம்புலிமாமாவுக்கும், முத்து காமிக்ஸ்க்கும் அடுத்து நாம் படித்த ராணி, கல்கண்டு, பின் குமுதம், விகடன், தினமணிகதிர் போன்றவைகளின் மூலமும் பல விசயங்களை தெரிந்திருக்கிறோம் என்பதும் உண்மையே.

    ReplyDelete
  3. சும்மா சொல்லப்டாது. உங்கள் கருத்தை நான் 200% ஆமோதிக்கிறேன். நான் அந்த காலத்தில் கலைமகள் வெளியீடான கண்ணன் (சிறுவர்களுக்கான புத்தகம்) தான் முதலில் படிக்க ஆரம்பித்து பின்னர் இரண்டனா சேர்த்து வைத்து ஸ்வராஜ்யா வாங்கி படிக்கும் அளவுக்கு முன்னேறி அப்புறம் James Hadley Chase, Desmond Bagley வரை படித்து நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். பிற்காலத்தில் கதை எழுதவும் அது பெரிதும் உதவியது. மிக நல்ல பதிவை படித்த திருப்தி.

    ரேகா ராகவன்.

    ReplyDelete
  4. Well Said Chitran Sir. Kudos!!!

    Sujatha's Enn Eeniya Jeeno, was main catalyst of my IT dream during my half-trouser age. Word like hallucination used in that story, had defenitely helped me in increasing my vocabulary.

    Though I missed to start my career in IT field, Words like Targa, bits, umatic, etc... were handled at ease during my markring job in an advertising firm.

    ReplyDelete
  5. அப்படியே என்னைப் படித்தது போலவே இருக்கு.....
    ஆனாலும் என்னால் இவ்வளவு சிறப்பாக அதை வெளிப்படுத்தியிருக்க முடிந்திருக்காது

    ReplyDelete
  6. நன்றி ரவிஷங்கர், மஞ்சூர் ராசா, செந்தழல் ரவி, ரேகா ராகவன், செந்தில், அஹமத்.

    @ ரவிஷங்கர் @மஞ்சூர் ராசா: எழுத்தாளர்கள் இந்த மாதிரி "Name Dropping" செய்வது ”எனக்கு இதெல்லாம் தெரியுமாக்கும்” என்று காட்டிக்கொள்வதற்காகத்தான் என்றாலும் நமக்கும் உபயோகமாயிருக்கிறது என்ற வகையில் ஓகே என்று எடுத்துக்கொள்ளலாம்.

    @ ரேகா ராகவன்: உங்கள் வாசிப்பு அனுபவம் நிச்சயம் பெரிதாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

    @செந்தில்: ஒரு சின்ன கரெக்‌ஷன். அது என் இனிய இயந்திரா. சுஜாதா பொதுவாகவே நிறைய டெக்னாலஜி வார்த்தைகள் உபயோகிப்பவர். கிடாரின் ‘ஜி’ கம்பியை மீட்டியது போல சிரித்தாள் என்று எழுதியவர்.

    ReplyDelete
  7. ரொம்பச் சுவாரஸ்யமான பதிவு - நானும் தமிழ் மீடியம்தான், ’இங்க்லீஷ்’ என்று சப்ஜெக்ட் இருப்பினும், பல்ப் மாத நாவல்கள், ஹெரால்ட் ராபின்ஸ், சிட்னி ஷெல்டன் ஆகியோரே எனது கொஞ்சநஞ்ச ஆங்கில அறிவுக்குக் குருநாதர்கள், சுஜாதாவின் சிபாரிசில் ஒன்றிரண்டு சீரியஸ் இலக்கியங்களைப் படிக்க ஆரம்பித்ததுதான் நான் செய்த முதல் உருப்படியான காரியம், அவர்மட்டும் இல்லாவிட்டால் நான் வெறும் சம்பளக்காரனாகமட்டும் முழுத் திருப்தி அடைந்திருப்பேன்!

    - என். சொக்கன்,
    பெங்களூர்.

    ReplyDelete
  8. பத்தாவது படிக்கும்போதே சாண்டில்யனின் உப்பலான புத்தகங்களை படிக்க ஆரம்பித்துவிட்டேன், வர்ணனையெல்லாம் அடுத்தபக்கம் போவதற்குள் மறந்துபோகும்,


    நான் +2 ஃபெயில் ஆனதே இந்த தாகத்தால் தான், என் பாட புத்தகத்துக்குள் பலான புத்தகத்துக்கு பதில் ராஜேஸ்குமார், சுபா, பிகேபி, சுஜாதா இவர்களெல்லாம் தான் ஒளிந்துகொண்டிருப்பார்கள்,
    அதில் விஷய கிடைத்த ஞானத்தை வைத்துகொண்டு கதை எழுதுகிறேன் என்று மணிக்கணக்கில் பேனாவையும் பேப்பரையும் வைத்துகொண்டு கிறுக்கி கொண்டிருப்பேன், இரண்டு மூன்று பேராவுக்கு மேல் எழுத வராது, எழுத்தாளனாக வேண்டுமென்று அப்போதே ஆசைபட்டேன், இப்போதுதான் ஓரளவு எழுதவே ஆரம்பித்திருக்கிறேன்.

    - ஆரியவர்தன்
    http://www.ariyavardhan.com/

    ReplyDelete
  9. புஷ்பா தங்கதுரை அந்த வகையில் நிறைய பங்களித்திருக்கிறார். போஸ்ட் மார்ட்டம், பாரன்சிக் தகவல்களை நிறைய கொட்டியிருக்கிறார். [பாலியல் கல்வி அளித்து வந்தது தனிக்கதை :-) ]

    ReplyDelete
  10. நன்றி சொக்கன், ஆரியவர்தன், SRK!

    யாராவது அழகாபுரி அழகப்பன், குறும்பூர் குப்புசாமி படித்திருக்கிறீர்களா?

    ReplyDelete
    Replies
    1. எங்காயாவது இப்போ அழகாபுரி அழகப்பன் புத்தகங்கள் கிடைக்குமா? மிக எதிர்பார்க்கிறேன்

      Delete
  11. //யாராவது அழகாபுரி அழகப்பன், குறும்பூர் குப்புசாமி படித்திருக்கிறீர்களா?//
    உள்ளேன் ஐயா :-)

    ReplyDelete
  12. நீங்கள் சொல்வதைப்போலவே எனக்கும் சிறிய வயதில் அறிமுகமான முதல் நாவல் ராஜேஷ்குமார் அவர்களின் க்ரைம் நாவல்தான். அப்புறம் சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர்....

    எந்த ஒரு மனிதனுக்கும் முதன் முதலில் வாசிக்கும் பழக்கத்தை தூண்டுபவை க்ரைம் நாவல்களே...

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. நன்றி கிருஷ்ணசாமி.

    ReplyDelete
  14. I am a very big fan of Rajeshkumar.. His sentence formation is something different. For example, போக்குவரத்தில் கலந்தான்,
    காரை செலுத்தினாள்,
    கதவு தயங்கி திறந்தது,
    அவரின் உயரம் அபாரமாக இருந்தது,
    வாயில் கசிந்த புகையுடன் இருந்த சிகரெட், etc...

    But still i dont know what is the sujatha's famous joke ”மெக்சிகோ சலவைக்காரி”... யாருக்காவது தெரியுமா??

    ReplyDelete
  15. Rajeshkumar sir
    Evergreen hero in crime stories
    Many fans he has

    ReplyDelete

இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்து?