ஜீவகாருண்யம்


எங்கள் தெருவில் நிறைய நாய்கள் இருக்கின்றன. தெருவில் என்று சொன்னதாலேயே அவைகள் தெருநாய்கள்தான் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒரு பதினைந்து இருபது இருக்கலாம். ஒரே பிரசவத்தில் 15 குட்டிகளை ஈன்றுதல் போன்ற நிகழ்வுகளால் அவைகளின் வம்சம் அனுதினம் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. கடிப்பது, ஆளைப்பார்த்தால் உறுமுவது போன்ற உபத்திரவங்கள் தராத சாது நாய்கள்தான். இரவில் ஊர் அடங்கியபின் அவைகளின் இன்னிசைக் கச்சேரி ஆரம்பமாகிவிடும். அவைகளுக்கிருக்கிற டெர்ரிடரி மற்றும் இன்னபிற பிரச்சனைகள் காரணமாக கர்ணகடூரமான குறைப்புகள், ஊளையிடுதல் என்று விதம் விதமாக சப்தங்கள் கோரஸாகத் தொடரும். இந்த வீட்டுக்குக் குடிவந்த துவக்கத்தில் இது மிக மிக எரிச்சலைத் தருவதாக இருந்தது. பல தினங்களில் இரவு சரியாக 11.45க்கு நாய்களின் ஊளைச் சத்தம் ஆரம்பிக்கும். இந்த அமானுஷ்யமும் புரிபடாமலேயே இருக்கிறது. ஒரு நாள் இரவு வெகுநேரம் மொட்டைமாடிக்கு மேல் இருக்கும் தண்ணீர்த் தொட்டியின் மேலமர்ந்து நானும் என் மச்சினரும் பேசிக்கொண்டிருக்கும்போது இதேபோல் நாய்கள் ஊளையிட ஆரம்பித்தன. உடனே நான். ’சரி வாங்க கீழே போவோம். மணி பதினொன்னே முக்கால் ஆயிருச்சு’ என்று சொல்ல அவர் உடனே மொபைலில் மணி பார்த்து, ‘எப்படி இவ்வளவு சரியா சொல்ற?’ என்று கேட்டார். நாய் ஊளைச் சத்தத்தை வைத்துச் சொன்னேன். டெய்லி இதே நேரத்துக்கு சரியா ஆரம்பிக்கும்’ என்று சொன்னதும் பயந்துபோய் ’வா.. போகலாம்.’ என்று வேகமாக படியிறங்க ஆரம்பித்தார்.

விஷயம் இதுவல்ல. எதிர் அபார்ட்மெண்டில் ஒருவர் இருக்கிறார். ரிடையர்டு ஆசாமி. அவரிடம் ஒரு பேஷ்ஹௌண்ட் வகை நாய் இருக்கிறது. அதை மேய்ப்பதற்காக தினமும் ரோட்டுக்கு வரும்போது கூடவே தெருநாய்களும் அவருடன் ஊர்வலமாகப் போகும். அவரது மனைவி, வீட்டுக்குப் பக்கத்திலேயே இருக்கும் கடைக்குச் சென்று (தெரு நாய்களும் கூடவே போகும்) ரொட்டி வாங்கி அதைத் துண்டுகளாக்கி நாய்களுக்குப் போடுவார். அவரது மகள் காலேஜூக்கோ, வேலைக்கோ போய்விட்டு ஸ்கூட்டியில் திரும்பியவுடன் நேராகக் கடைக்குச் சென்று பிஸ்கட் பாக்கெட் வாங்கி அந்த நாய்களுக்கு விநியோகம் செய்துவிட்டு பிறகுதான் வீட்டுக்கே செல்வார். காலேஜ் படிப்பது போலிருக்கிற அவரது மகன் அவ்வப்போது ஒரு ஸ்ப்ரேயர் போன்ற டப்பாவுடன் வீட்டிலிருந்து வெளிப்பட்டு ஏதாவது ஒரு தெரு நாயைப் பிடித்து வைத்துக்கொண்டு, ரோட்டிலேயே குத்தவைத்து உட்கார்ந்து அதைத் தடவிக்கொடுத்து அதற்கு ஏதோ ஸ்ப்ரே எல்லாம் அடித்து, புண்களுக்கு மருந்து போட்டு, பஞ்சால் ஒற்றி வைத்தியம் செய்வதைப் பார்த்திருக்கிறேன். பராமரிப்பு முடியும்வரை நாய்களும் சொகுசாக இணங்கி நிற்கும். அவர்களுடைய காம்பவுண்ட்டுக்கு வெளியே இரண்டு சின்னத் தொட்டிகளில் தெரு நாய்கள் குடிப்பதற்கு தண்ணீர் இருக்கும். அதில் Blue Cross என்று பெயிண்டில் எழுதப்பட்டிருக்கிறது. இந்தத் தெருநாய்கள் கூட்டாகத் தூங்குவது அதிகபட்சம் அவர்களுடைய அபார்ட்மெண்ட் வாசலில்தான்.

இவையெல்லாம் தினசரி என் வீட்டு ஜன்னல்வழிக் காட்சிகள். ’உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்’ என்பதற்கு உதாரணமாக, ஒரு குடும்பமே இந்த தெருநாய்கள் விஷயத்தில் மிக ஈடுபாட்டுடன் இருப்பதும், அன்பு செலுத்துவதும், அவைகளுக்கு உணவளித்து, உடல்நலம் பேணுவதும் மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது. அது அவர்களுடைய தினசரி கடமைகளில் ஒன்றாகவே மாறிவிட்டதைப் பார்க்கிறேன்.

இப்போதெல்லாம் இரவில் தெருநாய்கள் குறைத்தாலோ ஊளையிட்டாலோ நான் எரிச்சலடைவதில்லை. ஏதோ என்னால் முடிந்தது.

இறந்தவன் - சிறுகதை


ஃபெமினா தமிழ் – ஜூன் 1, 2012
ஆறு மாதத்திற்கு முன்பு நிகழ்ந்த பைக் விபத்தொன்றில் வசந்தன் இறந்துவிட்டானாம். இதைச் சொல்வதற்காகவே நேரங்கெட்ட நேரத்தில் சிங்கப்பூரிலிருந்து போன் பண்ணியிருந்தான் நடராஜ்.

மிகத் தாமதமாக வந்த அதிர்ச்சி செய்தி. கேட்டுவிட்டு இந்த முனையில் அஷோக் உறைந்துபோய் சில விநாடிகள் பேச்சற்று நின்றான்.
ஆறு மாசத்துக்கு முன்னாலா? எப்படி இது இத்தனை நாள் தனக்குத் தெரியாமல் போனது?

எனக்கே இப்பதாண்டா தெரியும். ரொம்ப கஷ்டமாயிருச்சு. பாவம்டா அவன். அல்பாயுசு! எப்பவும்போல பைக்-ல கண்ணு மண்ணு தெரியாமப் பறந்திருப்பான். வினையாயிருக்கும். எத்தனை தடவை படிச்சுப் படிச்சு சொல்லிருப்போம். கேட்டானா?” என்றான் நடராஜ்.

மழைக்காதல் - சிறுகதை

காதலர் தினத்தை முன்னிட்டு எங்கு பார்த்தாலும் காதல் காய்ச்சல் தொற்றிக்கொண்டிருந்த பிப்ரவரி மாதத்தில் ‘நம் தோழி’ இதழில் வெளியானது எனது சிறுகதை ஒன்று. இதுவும் ஒரு காதல் கதைதான் என்று தலைப்பே சொல்கிறதே. வேறென்ன? அதேதான்.

கதையைப் படிக்க இங்கே கிளிக்கவும் >>: மழைக்காதல்

முதல் பாடல்

‘ஆத்தாடி... ஒரு பறவ பறக்குதா...’

நான் எழுதிய முதல் திரைப்பாடல் இது. 2012 ஆம் வருடம் பிறந்த கையோடு ஒரு சுப தினத்தில் மதிப்பிற்குரிய முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. அப்துல் கலாம்  வெளியிட இதோ இந்தப் பாடல் இப்போது ஆங்காங்கே ஒலிக்கவும் ஆரம்பித்துவிட்டது. படம்: கிருஷ்ணவேணி பஞ்சாலை.

கல்கி இதழில் முதல் சிறுகதை வெளியானபோது மனம் எவ்விதமான குதூகலத்தில் மிதந்ததோ அதற்கு இணையாக இப்போதும் உணர்கிறேன். மனதுக்குள் ஒரு பறவை பறக்கிறது.

பரவசமும் பயமும் கலந்த ஓர் உணர்ச்சி வந்து சேர்ந்திருக்கிறது. நீண்ட வரலாறு கொண்ட தமிழ்த் திரையுலகில் எத்தனையோ கவி ஜாம்பவான்களுக்கு நடுவே ஒரு ஓரமாய் ஒரு துணுக்காக நானும் அறிமுகப்படுத்தப்படுகிறேன் என்பது பரவசம். அவர்கள் சாதித்ததில் ஒரு சில துளிகளாவது நானும் சாதிக்கவேண்டுமே என்பது பயம்.



இதன் மூலகாரணமாக இருந்த நண்பரும் இயக்குநரும் ஆன தனபால் பத்மநாபனுக்கும், இசையமைப்பாளர் என். ஆர். ரகுநந்தன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

குழந்தையாக இருந்தது முதற்கொண்டு இன்று வரை வாழ்வின் பின்னணியில் சதா ஒலித்துக்கொண்டிருந்த பல்லாயிரம் தமிழ்த் திரைப்பாடல்களை ரசித்துத் திளைத்திருந்த எனக்கு முதன் முதலாக நான் எழுதிய வரிகள் திரை இசையால் உயிர்பெற்று அதை நானே கேட்பதை உன்னதமான தருணமாக உணர்கிறேன்.

இந்தப் பாடல் ஒரு ரொமான்ஸ் டூயட்-டாக அமைந்தது நல்ல விஷயம். ஒரு பஞ்சாலையை பின்னணிக் களமாகக் கொண்டது. முதலில் திருகலான வரிகளுடன் கொஞ்சம் கவித்துவமாகத்தான் எழுதிக்கொடுத்தேன். இசையமைப்பாளரும் இயக்குநரும் எல்லோருக்கும் புரியும்படி எளிமையாக இருக்கட்டுமே என்று கேட்டுக்கொண்டதிற்கிணங்க முயற்சித்ததில் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் ஒரு பாடலை எழுத முடிந்திருக்கிறது என்று நம்புகிறேன். இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு நண்பர்களிடமிருந்து வந்த பெரும்பாலான கருத்துக்களின் சாரம் இவ்வாறு இருக்கிறது. “தெளிவான, எளிமையான, சுகமான இசையுடன் என்பதுகளின் திரைப்பாடல் கேட்பதுபோன்ற இதமான அனுபவம்”. இந்தப் பாடல் பரவலாக எல்லோராலும் ரசிக்கப்படும் என்கிற நம்பிக்கையைத் தருகிறது இது.

பயணங்கள் முடிவதில்லை, நான் பாடும் பாடல் போன்ற படங்களில் மட்டுமே பார்த்திருந்த ரெக்கார்டிங் ஸ்டுடியோக்களில் விஜய் பிரகாஷ், சித்தாரா போன்ற முன்னணிப் பாடகர்கள் பாட அருகிலிருந்து பார்த்த பாடல் பதிவுகள் கூடுதல் அனுபவம்.

தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளரான என். ஆர். ரகுநந்தன் மிகத் துடிப்பான ஒரு மனிதர். தமிழ் திரையிசையின் நுணுக்கங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர். தெ.மே.பருவக்காற்றுக்கு அப்புறம் வரிசையாய் நிறைய படங்கள் கைவசம் சேர ஆரம்பித்தாலும், நல்ல ப்ராஜெக்ட்டுகளை மட்டும் தேர்ந்தெடுத்து கவனமாக இசையமைத்துக்கொண்டிருக்கிறார். கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தின் பாடல்கள் தவிர இவர் அதற்கு அமைத்திருக்கும் பின்னணி இசையும் ரசிகர்களிடையே தனித்த கவனம் பெறும் என்பதிலும், ஒரு முன்னணி இசையமைப்பாளராக இவர் உருவாகிக் கொண்டிருக்கிறார் என்பதிலும் சந்தேகமே இல்லை.

தனபால் பத்மநாபன் வித்தியாசமான பின்னணியுடன் அமைந்த இத்திரைப்படத்தினை மிகுந்த சிரத்தையுடன் உருவாக்கியிருக்கிறார். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதல் முதலாக காஸ்டிங் டைரக்டர் என்ற ஒரு பதவியில் நடிகர் திரு சண்முகராஜாவை இப்படத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். பாடல்களுக்கான காட்சிகளும் அதிசயராஜ் மற்றும் சுரேஷ் பார்கவ்-வின் ஒளிப்பதிவில் அருமையாக வந்துள்ளது. பிப்ரவரியில் வெளிவந்துவிடும் என்று தெரிகிறது.

பாடலைக் கேட்க:. http://soundcloud.com/info4u-chennai/aathaadi-oru

மாயாஜால மழை

பல வருடங்களாக சென்னையில்தான் இருக்கிறேன். ஆனால் பார்க்கவேண்டும் என்கிற லிஸ்டில் இன்னும் காத்திருப்பிலேயே இருக்கிற மூன்று இடங்கள் : 1) பாண்டிச்சேரி 2) கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள சோழமண்டலம் ஃபைன் ஆர்ட்ஸ் வில்லேஜ் 3) மாயாஜால்.

இந்த மாயாஜாலைப் பற்றி அநேகம் பேர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். எங்கேயோ போகும்போது வழியில் பார்த்திருக்கிறேன். ஒரு சில சினிமாக்களில் நாயக நாயகிகள் சந்திக்கும் இடமாகக் கண்டிருக்கிறேன். மற்றபடி பயணிக்கிற தூரத்திலிருந்தும் போவதற்கான வாய்ப்பு அமையவில்லை. 

போனவாரம் ஒரு நண்பர் இந்த மாயாஜால் என்னுமிடத்தில் நடந்த ஒரு சம்பவத்தை என்னிடம் விவரித்தார். மாயாஜாலில் இரவு காட்சியோ ஏதோ ஒன்றிற்கு மனைவியுடன் போயிருக்கிறார். இருவரும் வேலை நேரம் முடிந்து நேராக அங்கே சென்று திரைப்படம் ஆரம்பிக்குமுன் அங்கேயே இரவு உணவை முடித்து விடலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் போன நேரம் அங்கேயிருக்கிற எல்லா உணவகங்களும் மூடப்பட்டிருக்கின்றன.

நண்பர் அங்கே அரை குறையாய் மூடப்பட்டிருந்த ஒரு உணவகத்தின் முன் நின்றிருந்த இளைஞரை அணுகி சாப்பிடுவதற்கு ஏதாவது எங்கேயாவது கிடைக்குமா என்று கேட்டிருக்கிறார். அவர் அந்த உணவகத்தில் வேலை செய்பவர் போலும். ‘எல்லாமே க்ளோஸ் பண்ணியிருப்பாங்களே சார்’ என்று சொன்ன இளைஞர் சில விநாடிகள் யோசித்துவிட்டு, ’சார் நீங்க தப்பா நினைக்கலேன்னா, நான் சாப்பிடறதுக்காக கொஞ்சம் எடுத்து வெச்சிருக்கேன். அதை சாப்பிடறீங்களா?’ என்று கேட்டிருக்கிறார். நண்பரோ சங்கோஜமாய் “அய்யய்யோ.. அதெல்லாம் வேணாம்.. ஒண்ணும் ப்ராப்ளமில்ல ப்ரதர்.. நாங்க மேனேஜ் பண்ணிக்கிறோம். கேட்டதுக்கு ரொம்ப தாங்க்ஸ்” என்றிருக்கிறார்.

ஆனால் இளைஞர் விடாமல், “சார்.. இந்நேரத்துக்கு நீங்க எங்க போய் சாப்பிடுவீங்க.. வாங்க சார்.. உக்காருங்க.. நான் எடுத்துட்டு வர்ரேன்.”

“இல்லைங்க.. பரவாயில்லை.. உங்களோடதை எங்களுக்குக் குடுத்துட்டு நீங்க சாப்பிடறதுக்கு என்ன பண்ணுவீங்க?”

”நான் வெளில போய்க்கூட சாப்டுக்குவேன் சார். நீங்க வாங்க!!” 

நண்பர் எவ்வளவு மறுத்தும் வலுக்கட்டாயமாக அவர்களை அழைத்து உட்காரச் சொல்லிவிட்டு உள்ளே போயிருக்கிறார் இளைஞர். 

இதென்னடா வம்பாகப் போயிற்று என்று நண்பரும் அவர் மனைவியும் தர்மசங்கடமாகக் காத்திருந்திருக்க, உள்ளூர ஒரு சந்தேகம் ஓடிக்கொண்டுதான் இருந்திருக்கிறது. என்னடா வலுக்கட்டாயமாக இழுத்து வைத்து உபசரிக்கிறானே.. இதற்குப் பின்னால் ஏதாவது சதி வேலை இருக்குமோ? காலம் வேறு போன வாரம் வாங்கின வாழைப்பழம் கணக்காக கெட்டுக் கிடக்கிறது. 

ஒரு சில நிமிடங்களில் அந்த இளைஞர் உணவோடு வருகிறார். அவர்கள் நினைத்ததோ அவர் சாப்பிடுவதற்காக வைத்திருந்த, ஆறிபோன எதையோ கொண்டுவரப்போகிறார் என்று. ஆனால் நடந்ததோ வேறு மாதிரி. 

பீங்கான் தட்டுக்களின் மேல் அலுமினியம் ஃபாயில்களில் அழகாக வைக்கப்பட்ட சூடான சப்பாத்தி, அதற்கு சைட் டிஷ்ஷாக இரண்டு பௌல்களில் அருமையான குருமா, இன்னும் இருவகை சட்டினிகள், கண்ணாடி தம்ளர்களில் குடிநீர், கை துடைக்க டிஷ்யூ பேப்பர் என அருமையாக கவனித்திருக்கிறார்.

எதிர்பாராத விருந்தோம்பல்தான் என்றாலும் தயக்கத்துடனும் குறுகுறுப்பான பயத்துடனும் சாப்பிட்டு முடித்திருக்கிறார்கள். சப்பாத்தியும் குருமாவும் சட்னியும் ரொம்ப சுவையாக வேறு இருந்திருக்கிறது. 

சாப்பிட்டு முடித்தபிறகு இளைஞரிடம் “இங்க பாருங்க.. இதுக்கு நாங்க பணம் குடுத்துடறோம். பாவம் நீங்க வேற வெளியே போய் சாப்பிடணுமில்ல..” என்று பர்ஸை எடுத்திருக்கிறார்.

அதற்கு இளைஞரோ பணம் எதுவும் வாங்க மறுத்து சிரித்தபடி “ச்சேச்சே... பணமெல்லாம் எதுக்கு சார்.. இது ஒரு நட்பா இருந்துட்டுப் போகட்டுமே...” என்றாராம்.

இந்த இடத்தில் “இந்த உலகத்துல இப்படியும் சில ஆத்மாக்கள் இருக்காங்க பாருங்க” என்று கதையை முடித்தார் நண்பர் என்னிடம்,

நேற்றைக்குப் பெய்த மழை அந்த இளைஞர் பொருட்டுதான் எல்லோருக்கும் பெய்ததோ என்னமோ!!