டபுள் டெக்கர் டீஸண்ட் ஃபேமிலீஸ்

"ஹவ் டேர் யு டாக் லைக் திஸ்?" என்ற ஒரு கர்ஜனைக் குரல் கேட்டு திடுக்கிட்டு காதிலிருந்த ஹெட்ஃபோனைக் கழற்றினேன். பெங்களூர்-சென்னை டபுள் டெக்கர் எக்ஸ்ப்ரஸ். குரல் வந்த திசையில் உயரமாய், அகலமாய் பவுன்ஸர் போன்ற தோற்றத்துடன் ஒரு இளைஞன். அந்தக் கேள்வி வீசப்பட்டது அவனது முன்சீட்டில் உட்கார்ந்திருந்த ஒரு 35 வயது மதிக்கத்தக்க பாப் தலை யுவதியிடம்.
குரல் தாக்குதல் தொடர்ந்தது. பங்காருப் பேட்டையிலிருந்து சென்னைக்கே கேட்கும் போல கத்தினான். "டு யு திங் வி ஆர் ஃப்ரம் அன் இல்லிட்ரேட் ஃபேமிலி? ஹவ் கேன் யு ஆஸ்க் திஸ் கொஸ்ஸன் டு மை ஃபாதர் யு @#₹%&? வாட் இஸ் யுவர் ஏஜ்? வாட் இஸ் மை ஃபாதர்ஸ் ஏஜ்? அறிவில்ல ஒனக்கு? அட்ச்சி பல்லெல்லாம் ஒட்சிர்வேன். ஹவ் கேன் யு டெல் லைக் திஸ் டு மை ஃபாதர் ஹூ இஸ் ஃப்ரம் அ வெரி டீசண்ட் ஃபேமிலி அண்ட் ஆல்ஸோ வித் அ ரெஸ்பெக்டபிள் ப்ரொஃபெஸ்ஸன். எச்ச நாயி!. யு லுக் லைக் அ பிட்ச் ஃப்ரம் அ லோக்கல் இன் சென்னை." - உச்சஸ்தாயியில் கத்தினான்.
அந்தப் பெண்மணி சக பயணிகளைப் பார்த்து, "என்னங்க இவ்ரு இப்டி பேஸரார்? ஐ ஜஸ்ட் ஆஸ்க்டு ஹிம் - கொஞ்சம் நேரா உக்காருங்க, மேல படுது-ன்னு! இது தப்பா? வாட்ஸ் ராங் இன் தட்?"
கடோத்கஜ இளைஞன் இம்முறை மும்பைக்கே கேட்கும்படி இரைந்தான். "வாட் த ஃப்.. நீ எப்டி கேக்கலாம்? அவருக்கு அம்பத்து மூணு வயசு." இந்த சண்டையில் மேலே இடித்ததாகச் சொல்லப்பட்ட அவன் தந்தை "என்னப் பாத்தா உனக்கு எப்டித் தெரியுது? நான் என்ன பொறுக்கியா? யு ஸூட் மைண்ட் யுவர் வேர்ட்ஸ்."
போனை எடுத்துக் காதில் வைத்தார். கடோத்கஜன் "கமிஷனர கூப்டுங்கப்பா.. இவள சும்மா விடக்கூடாது.." இதை மூன்றாம் உலகப்போராக மாற்றியே தீருவது என்கிற தீர்மானத்துடன் அவனும் ஃபோனை எடுத்துக் காதில் வைத்தான்.
அப்பனும் மகனும் உறுமிக்கொண்டே கோச்சுக்குள் வேறு பக்கம் நகர்ந்து போனார்கள். அவர்கள் அந்தப்பக்கம் போனதும் இந்த அம்மணி நியாயம் கேட்டுக் கத்த ஆரம்பித்தாள். உடனே அந்தப் பையனின் அம்மா அவளிடம் வந்து ஏதோ காதில் சொல்ல, பாப்தலைப் பெண்மணி "நீங்க எதுக்கூ என் கால்லே வுளறீங்க. உங்க பைய்னை ஒழுங்கா வளக்கப் பார்ங்க. எப்டி இண்டீஸண்டா கத்றான் பாருங்க.. அதுவும் இன் சச் அ பப்ளிக் ப்ளேஸ்.. ஸ்கவ்ண்ட்ரல்.."
பையனும் அப்பனும் காதில் ஃபோனோடு திரும்பவும் சம்பவ இடத்துக்கு பரபரப்பாக வந்தார்கள். இருவர் கண்களிலும் கனல் பறந்தது. அந்தப் பெண்மணியை நெருப்பாகப் பார்த்தார்கள். பிறகு மீண்டும் ஃபோனில் ரயில்வே போலீஸ், கமிஷனர், ஐஜி, ஹை கோர்ட் ஜட்ஜ், 108 ஆம்புலன்ஸ், ஃபயர் சர்வீஸ், கமாண்டோ படை, சீ.பி.ஆர்.எஃப், சி.பி.ஐ, ஆளுங்கட்சி, எதிர்கட்சி, இடைக்கால முதல்வர், பிரதம மந்திரி, ராணுவ அதிகாரிகள், குடியரசுத் தலைவர், எஃப்.பி.ஐ, யு.எஸ். நேவி ஸீல், இஸ்ரேல் உளவு அமைப்புகள், அவன் ஆஃபிஸ் வாட்ச்மேன் அனைத்தையும் முயற்சி செய்துவிட்டு லைன் கிடைக்காமல் 'டிடிஆரை கூப்டுப்பா..' என்றான் கடைசியாக. "ஐ வாண்ட் திஸ் ப்ளடி லேடி டு கெட் டவுன் இன் தி நெக்ஸ்ட் ஸ்டேஷன். ஸோ தட் எவ்ரிபடி இன் திஸ் ட்ரெய்ன் கேன் கண்டின்யூ திஸ் ஜர்னி இன் அ பீஸ்ஃபுல் மேன்னர். அதர்வைஸ், நான் இவளப் புடிச்சு வெளில தள்ளி கொன்னுட்டு ஜெயிலுக்குப் போய் பத்தே நாள்ள வெளில வந்துருவேன். பாக்றீங்களா.. பாக்றீங்களா? யாருகிட்ட? இவ அத்தினி பேரு முன்னாடியும் எங்கப்பாகிட்ட மன்னிப்புக் கேக்கணும். இல்லேன்னா நான் சும்மா விட மாட்டேன். யு ஆல் டோண்ட் நோ ஹூ ஐ ஏம். ஐ வில் ஷோ நவ்.. ரைட்ட்ட் நவ்.."
அர்னாப் கோசாமியிடம் ட்ரெய்னிங்க் எடுத்ததுபோல அவன் குரல் டெஸிபல் எக்கச்சக்கமாக உயர்ந்து ரயிலின் மேற்கூரை பிளக்கும் அபாயம் எழுந்தது. அவன் ஓங்கி அடித்தால் ரயில் தடம் புரண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
"தம்பி.. விடுப்பா.. கீப் கொயட் ஃபார் சம் டைம். தெரியாம ஏதோ சொல்லிட்டாங்க.. விடு விடு.. போய் உக்காரு" என்ற ஒருவரை.. "உங்கப்பாவ யாராச்சும் தப்பா பேசினா கேட்டுட்டு சும்மா இருப்பீங்களா?" என்று கேட்டான். கேட்டவர் காதில் நிச்சயம் ஓட்டை ஏற்பட்டிருக்கும். சத்தம் அப்படி!
பாப்தலை கோபம் தலைக்கேறி திடீரென்று "அ யம் காலிங் த போலீஸ் நவ்.."என்று அறிவித்தாள். போனை எடுத்தாள்.
" கூப்டுறீ.. பொறம்போக்கு.. வரச் சொல்லு.. நாங்க இங்கதான் இருப்போம். பெரியவங்ககிட்ட எப்டிப் பேசணும்னு தெரியாத எச்சக்கல.." துணைக்கு அப்பங்காரனும் சேர்ந்துகொண்டார்.
நான் பொறுமையிழந்து.."ப்ரதர்.. விடுங்க.. போய் உக்காருங்க. ஒரு சின்ன விஷயத்துக்கு ஏன் இப்டி கோபப்படறீங்க... அமைதியா இருங்க.." என்றேன். அவன் என்னைப் பார்த்த பார்வையில் 'உன்னையும் ரயிலிலிருந்து தள்ளி விடுவேன்" என்கிற பதில் இருந்தது.
தலையில் கைவைத்து உட்கார்ந்திருந்த அவன் அம்மா எழுந்து இருவரிடமும் "போதும் விடுங்க.. ப்ளீஸ்.." என்று கும்பிட்டுக் கெஞ்ச, பவுன்ஸர் பாய் கண்களை உருட்டி "அம்மா.. இது சும்மா வுட வேண்டிய பிரச்னயில்ல. நீ பேசாம உக்காரு.. அயம் டாக்கிங் டு அ தேர்ட் ரேட்டட் பன்னாட ஹூ ஹேஸ் டிஸ்ஹானர்ட் யுவர் ஹஸ்பண்ட் இன் அ பப்ளிக் ப்ளேஸ்.. மைண்ட் இட்... நீ இப்டி அவளுக்கு வக்காலத்து வாங்கினா மிதிச்சுட்டு போய்ட்டே இருப்பா..."
அவனை அடங்கி உட்காரச் சொல்லி ரயிலுக்குள் கண்டனக் குரல்கள் எழுந்தன. அவனோ 'அவள எங்கப்பாட்ட மன்னிப்புக் கேக்கச் சொல்லுங்க..' என்கிற ஒரே தீவிரவாதக் கோரிக்கையை திரும்பத் திரும்ப முன்வைத்துக் கொண்டிருந்தான்.' இந்தக் களேபரத்துக்கு நடுவில் "பஜ்ஜீ.. சூடான வடேய்ய்ய்ய்.." என்று இடைபுகுந்தவனுக்கு வழிவிட்டு .."நீங்க போங்கண்ணா.. போய் வ்யாபாரத்தப் பாருங்க.." என்றுவிட்டு ஆடியன்ஸிடம்.. "ஹவ் டேர் ஷீ.. " என்று மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பித்தான்.
ஒரு மிகப்பெரிய கோர சம்பவம் இந்த ரயிலில் நிகழப் போவதை அறியாமல் என் பக்கத்து இருக்கைக்காரர் மொபைலில் 'சங்கிலி புங்கிலி கதவத் தொற' பார்த்துக் கொண்டிருந்தார். எதிர் ஸீட்டு ஜடாமுடி இளைஞன் சரசர சத்தத்தோடு "லேஸ்' பாக்கெட்டைக் காலி செய்துகொண்டே என்னிடம் 'அயம் ப்ரெத்தி ஸ்ஸ்ஸ்யூர் தத் தீஸ் கைஸ் கான்னா எந்தத்தெய்ன்ன்ன் அஸ் ஃபார் நெக்ஸ்த் தூ அண்த் ஹாஃப் அவஸ்.." என்றான்.
"பட்டப் பகலில் ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிட்டு பெண்.." என்று நான் தினத்தந்தி தலைப்பு யோசித்துக் கொண்டிருக்கும்போது டிடிஆர் வந்தார். என்ன ப்ரச்ச்னை என்று குசுகுசுவென்று கேட்டார். அவனது கத்தலை அவர் லாகவமாகக் கையாண்டார். அந்தப் பெண்மணியைப் பார்த்து "நான் உங்களுக்கு வேற ஸீட் தர்ரேன்.. வாங்க" என்று பக்கத்து கம்பார்ட்மெண்டுக்குக் கூட்டிப் போனார். கடைசிவரை மன்னிப்பெல்லாம் கேட்காமல் "பாஸ்டர்ட்ஸ்.." என்று சன்னமாய் சொல்லிக்கொண்டே டிடிஆரின் பின்னால் போனாள். தடியன் தொடர்ந்து கத்திக்கொண்டேயிருந்தான்.
அவள் போன திசையைப் பார்த்து ஹிஸ்டீரியா வந்தவனைப் போல "ஐ வில் கில் யூ" என்று கத்தினான். கொஞ்ச நேரத்தில் குரல் தளர்ந்து இருக்கையில் விழுந்தான். பிறகு ரயிலின் சப்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. நான் எழுந்து பாத்ரூம் போகும் வழியில் அவனைப் பார்த்தேன். வாயைப் பிளந்து தூங்கிக் கொண்டிருந்தான். அந்நியனிலிருந்து அம்பியாக மாறியிருந்தான். ஒரு கருட புராண கபீம் குபாம் தவிர்க்கப்பட்ட நிம்மதியுடன் அனைவரும் தத்தம் மொபைல்களில் மீண்டும் அமிழத் தொடங்கினார்கள்.

மாயக்கதவுகளுக்கு முன்

நம்மைச் சுற்றி நடக்கும் எத்தனையோ விஷயங்கள் வாழ்வு பற்றிய நம்பிக்கைகளை தினசரி தகர்த்துக் கொண்டிருக்க தூரத்தில் தெரியும் ஒளி போன்று ஏதாவது ஒரு விஷயம் அந்நம்பிக்கைகளை திரும்பவும் வலுப்படுத்தி வாழ்வின் மீதான பிடிப்பை அதிகப்படுத்தும். அவை சில நல்ல வார்த்தைகளாகவும் இருக்கலாம்.

பதாகை.காம் இணைய இலக்கிய இதழில் அத்தகைய வார்த்தைகளைக் கோர்த்து எழுதிய புத்தாண்டுச் செய்தி இதோ!

வருஷம் 16

கோவையிலிருந்து செப்டம்பர் 13 அன்று மதியம் ஒரு ரயில் புறப்பட்டது. அதன் இரண்டாம் வகுப்புப் பெட்டியொன்றில் ஒரு ஜன்னலோர இருக்கையொன்றில் அவன் உட்கார்ந்திருந்தான். ரயில் புறப்படும்போது சென்னை வரை நீண்டிருக்கும் அதன் பாதையைப் போலவே அவன் நெற்றியில் கவலை ரேகைகள் நீண்டிருந்தன.

சென்னை ஒரு மாநகரம். அதை நோக்கிப் பயணிக்கிறோம் என்கிற பதட்டம் அவனுக்குள் லாரி குடிநீர் போல தளும்பிக்கொண்டிருந்தது. புதிய வேலை, புதிய இடம், புதிய மக்கள். புதிய தட்பவெப்பநிலை. இதைவிட மேலாக அடுத்த மாதம் குழந்தை பெறப்போகும் கர்ப்பிணி மனைவியை விட்டுப் பிரிந்து வரும் மனக்குடைச்சல்.

"சென்னைக்கா போறீங்க? அங்கெல்லாம் போய் குப்பை கொட்டறது ரொம்ப கஷ்டம்ங்க.. மறுபடி யோசிங்க"

"சென்னைத் தண்ணிய ஒரு ரெண்டு வருஷம் குடிச்சீங்கன்னா கிட்னி ஸ்டோன் வந்துரும்"

"ஆட்டோக்காரங்க, பஸ் கண்டக்டர் எல்லாம் மரியாதயில்லாம பேசுவாங்க.."

"இந்த அருமையான கோவை க்ளைமேட்டை விட்டுட்டு எங்க போறீங்க?"

அவன் பயணத் தீர்மானத்திலும், திட்டத்திலும் ஓட்டை போட நினைக்கும் வார்த்தைகள் நாலாப் பக்கமிருந்தும் வந்தன. அவன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. கனத்த மனதுடன் பிரயாணித்தான் என்பதால் கோவைக்கும் சென்னைக்குமான தூரம் தீராமல் ஒரு முடிவிலியாகப் போய்க்கொண்டிருந்தது போல உணர்ந்தான்.

சென்னைக்கு வந்ததும் முதலில் தோன்றியது உடனே ஊருக்குத் திரும்பிப் போய்விடவேண்டும் என்பதுதான்.

"ஒரு வருஷம் இருந்திட்டீன்னா அப்றம் இந்த ஊர விட்டுப் போகமாட்ட.."

இதைச் சொன்ன நண்பரின் வார்த்தைகளை இப்போது மறுபடியும் அசைபோட்டான். உண்மைதான். ஒரு வருஷம் தாக்குப் பிடிக்க முடியுமா என்று சந்தேகமாகத்தான் இருந்தது. ஆனால் சென்னை அவனை நல்ல முறையில் சுவீகரித்துக் கொண்டது. சென்னை வெயில் பழகிவிட்டது. மக்கள் பழகிவிட்டார்கள். சென்னையின் புவியியல் பழகிவிட்டது.

பதினாறு வருடங்கள் உருண்டோடிவிட்டன. இத்தனை வருடங்கள் காலண்டரைத் தவிர பெரிதாய் என்ன கிழித்தான் என்று தெரியவில்லை. ஆறு வேலை மாற்றிவிட்டான். ஓரிரு லேசான நில அதிர்வுகள், ஒரு சுனாமி, நகரத்தைக் கிட்டத்தட்ட மூழ்கடித்த ஒரு மழை வெள்ளப் பெருக்கு உட்பட ஆயிரம் அனுபவங்கள். தாடி, மீசை தலைமுடியில் நரை கண்டுவிட்டது. இளம்பெண்களும், பையன்களும் அவனை அங்க்கிள் என்று கூப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். பெருங்குடி டம்ப் யார்டில் (Dump yard) அவன் கொட்டிய குப்பையும் கணிசமான அளவில் சேர்ந்துவிட்டது.

பிறந்ததிலிருந்தே நாடோடியாக இருந்த அவன் 'நீங்க எந்த ஊர்?' என்று யாராவது கேட்டால் ஒரு நொடி தடுமாறுவான். எந்த ஊரில் நீ அதிகமாக இருந்தாயோ அதுதான் உன் ஊர் என்று தனக்குள்ளே ஒரு கான்செப்ட் உருவாக்கிக் கொண்டான். இனிமேல் 'சென்னை' என்றே பதில் சொல்லலாமா என்று யோசிக்கிறான்.