இன்னொரு மழைக்கு முன்பு

என் நண்பரும் எழுத்தாளருமான சரசுராமின் முதல் சிறுகதைத் தொகுப்பான 'இன்னொரு மழைக்கு முன்பு' மித்ர ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ் வெளியீடாக வந்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

17 சிறுகதைகளால் ஆன இந்த தொகுப்பில் உள்ளடங்கிய கதைகள் அனைத்தும் ஆனந்த விகடன், சாவி, கல்கி, புதிய பார்வை, தினமணி கதிர் போன்ற பத்திரிக்கைகளில் வெளியானவை. 136 பக்கங்கள்.

மனித உறவுப் பின்னல்களின் நுண்ணிய சிக்கல்களையும், யதார்த்த உணர்வுகளின் நீரோட்டத்தையும், நெகிழ்ந்த மன வெளிப்பாடுகளின் உன்னத கணங்களையும், மென்மை தோய்ந்த அணுகுமுறையில் சிறந்த சிறுகதைகளாய் மாற்றும் திறமை சரசுராமின் பேனாவுக்கு உண்டு. மரங்கள் அடர்ந்த சாலையில் சன்னமாய் அடிக்கிற காற்றில் ஒரு சாயங்கால வேளை slow cycling மாதிரி எந்தப் பரபரப்பில்லாமல் மென்மையாய் கைபற்றி சீரான வேகத்தில் நம்மைக் கூட்டிச் செல்கிறது சரசுராமின் இத்தொகுப்பு.

இந்த புத்தகத்தின் முன்னுரையில் "என் கதைகள் பெரும்பாலும் பாசிட்டிவான விஷயங்களாக இருப்பதாகக் கேள்வி வந்ததுண்டு. இனிமேலும் வரலாம். அதற்கு என் பதில் - என் வாழ்வில் எனக்கு நடந்த சம்பவங்கள் பெரும்பாலும் நல்லவையே. நான் சந்தித்த மனிதர்கள் பெரும்பாலும் நல்லவர்களே. ஆக, இது என் அனுபவம். இவர்கள் என் மனிதர்கள். நான் ஆசைப்படும் மனிதர்கள் அல்லது நான் எதிர்பார்க்கும் மனிதர்கள். இவர்களைச் சொல்லவே ஆசைப்படுகிறேன். அப்படி எழுதுவதையே பெருமையாக நினைக்கிறேன்" என்கிறார் சரசுராம். முற்றிலும் உண்மை.

என்றைக்கோ வந்திருக்கவேண்டிய இத்தொகுப்பு மிக தாமதமாக வெளிவந்திருந்தாலும் நல்ல சிறுகதை வாசிப்பை விரும்பும் வாசகர்களை இத்தொகுப்பு திருப்தி செய்யும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

நானும் சிறுகதை எழுத ஆசைப்பட்டபோது அதன் வடிவம், உள்ளமைப்பு, உரைநடை உள்ளிட்ட இன்னபிற நுணுக்கங்களைக் கற்றுத்தந்து என்னை சிறுகதையாளனாக உருமாற்றிய பெருமைகூட சரசுராமையே சேரும்.

சரசுராம் இப்போது பணியாற்றிக் கொண்டிருப்பது திரைத்துறையில் இணை இயக்குநராக.

இன்னுமொரு மழைக்கு முன்பு
சிறுகதை தொகுப்பு - சரசுராம்
விலை - ரூ. 75
மித்ர ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ்
32/9, ஆற்காடு சாலை
கோடம்பாக்கம், சென்னை - 600024
போன் : +91 44 23723182, 24735314
mithra2001in@yahoo.co.in

No comments:

Post a Comment

இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்து?