காஞ்சிவரம்



தேன்மாவின் கொம்பத்து, மணிச்சித்ரதாழ், காலாபானி போன்ற அருமையான படங்களைத் தந்த பிரியதர்ஷனிடமிருந்து உலகத் தரத்திற்கு அருகாமையில் மற்றுமொரு படைப்பு காஞ்சிவரம். டொரன்டோ போன்ற உலகத் திரைப்படவிழாக்களில் அமர்க்களமில்லாமல் திரையிடப்பட்டுக் கொண்டாடப்பட்ட செய்திகளும், ”பிரியதர்ஷன் செதுக்கியிருக்கிறார்” என்ற வாய்வழிப் பரிந்துரைகளும் இந்தப் படத்தைக் காணும் ஆர்வத்தைத் தூண்டியது.

இந்தப் படத்திற்காக பிரியதர்ஷன் எடுத்துக் கொண்ட காலகட்டம் (1948 ) மற்றும் களம் நிச்சயம் வித்தியாசமானதுதான். பீரியட் பட முயற்சிகளில் தன் திறமையை காலாபானியில் ஏற்கனவே பிரம்பாண்டமாய் நிலைநாட்டிவிட்டதால் அதோடு ஒப்பிடும்போது இது ரொம்ப எளிமையாகவே உணரவைக்கிறது என்றாலும் எளிமையாய்ப் பண்ணுவதுதான் எப்போதும் கஷ்டமான விஷயம் என்பதையும் மறுப்பதற்கில்லை. அந்த வகையில் பிரியதர்ஷன் ஜெயித்திருக்கிறார்.

உலகத்தரத்தை நோக்கிய இந்திய சினிமாவின் பயணத்தில் பிரியதர்ஷனும் இணைந்துகொண்டிருக்கிறார். அதோடு சாபு சிரில், திரு போன்ற திரைக் கலைஞர்களும் தம்மாலான பங்களிப்பை இந்தப் படத்தின் மூலம் அருமையாய் அளித்திருக்கிறார்கள். பிரகாஷ் ராஜ் போன்ற நல்ல நடிகர்களைத் தேர்வு செய்ததும் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய பலம்தான்.

இந்தப் படத்தில் பிரியதர்ஷன் எடுத்துக் கொண்ட கதையின் “இழை”, பெரிய எட்டாத ஆசைகளை மனதில் சேமித்து வைத்துக் கொண்டு அதன் மூலம் நலிந்து போன கனவுகளை எப்படியாவது பின்ன முயற்சிக்கும் சாதாரண மனிதனைப் பற்றிச் சொல்கிறது. இதையொட்டி நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிற திரைக்கதை.

சிறையிலிருந்து கைவிலங்குடன் எதற்காகவோ பரோலில் வெளிவரும் பிரகாஷ்ராஜை, கொட்டும் மழையில் சொந்த ஊருக்கு காவலுடன் ஒரு பஸ்ஸில் அழைத்துச் செல்வதிலிருந்து துவங்குகிறது படம். இடையிடையே பஸ் அடிக்கடி ஏதாவது இடர்ப்பாடுகளில் சிக்கி நிற்க அந்த இடைவெளிகளினூடே ஃப்ளாஷ்பேக் பயணம் போகிறார் பிரகாஷ்ராஜ்.

ஒரு அவார்டு வாங்கின வங்காளப் படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வை ஆரம்பக் காட்சிகள் உணர வைக்கிறது. அப்புறம் இரண்டு மணி நேரம் போவதே தெரியவில்லை. காரணம் இந்தத் தலைமுறை இதுவரை பார்த்திராத அந்தக்கால வாழ்க்கைக் காட்சிகள். படம் பெரும்பாலும் மங்கிய வெளிச்சத்தில் நகர்கிறது. லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் நடிகர்களின் முகங்கள் பொன்னிறமாய் மின்னுகின்றன. கதாபாத்திரங்கள் பேசிக் கொள்ளும் ரஷ்யன், ஜெர்மன் மகாயுத்த விவரங்கள், பிரகாஷ்ராஜின் சைக்கிள் விளக்கு, கிராமத்துக்கு முதல் முதலாய் வரும் மோட்டார் வண்டியை ஒரு திருவிழா போலப் பார்க்கும் கூட்டம். பெரிய பொட்டு வைத்த ஸ்மிதா பட்டேல் சாயல் கொண்ட பெண்கள், கூரைவீடுகள், வெள்ளைக் காரனுக்கு ஜமீந்தாரின் (அல்லது அதிகாரியின்) உதவியாளனின் ஆங்கில மொழிபெயர்ப்பு, நான்கு பெண் குழந்தைகள் தோளில் கை போட்டுக் கொண்டு சேர்ந்து ஆடும் ஊஞ்சல், ஸ்லேட் எடுத்துக்கொண்டு கதை பேசியபடி பள்ளிக்குப் போகும் குழந்தைகள், யானையின் கால்களுக்கு இடையில் ஓடும் குழந்தைகள், பட்டாளத்துக்குப் போகும் பையன், காந்தி இறந்ததனால் ரேடியோவில் ஒலிபரப்பாகும் சோக இசை, தொழிலாளிகளை எப்போதும் சுரண்டிப் பிழைக்கிற பகட்டான முதலாளி, அடுப்பு ஊதி சமைத்துக் களைக்கிற, கணவன்பின் நடக்கிற அப்பாவி மனைவிகள், ஒரே ஒரு வாளித்தண்ணீரை ஒரு சீன் முழுக்க இறைகிற பெண் (தண்ணீர் அவ்வளவு ஆழத்தில்), மழைச் சகதியில் உருண்டு ஓடுகிற பஸ்ஸின் ஸ்டெப்னி டயர், நெசவாளர்கள் நடத்தும் கம்யூனிஸம் பூசிய முதலாளித்துவ எதிப்பு நாடகம் என சுவாரஸ்யமான விஷூவல் ட்ரீட்மெண்ட்கள் இறுதிவரை அழகாக எளிதாக படத்தை நகர்த்திவிடுகின்றன.

எளிய உழைப்பாளிகளின் வாழ்க்கையின் வலியை அழகாக நறுக்கென்று சொல்ல முயற்சித்திருக்கிறார் பிரியதர்ஷன். ஆனால் இது அவரின் “பெஞ்ச் மார்க்” படமா என்று யோசித்தால் இல்லையென்றுதான் தோன்றுகிறது. படத்தின் “prelude"-ல் கோடிகாட்டிச் சொல்லப்படும் விஷயங்களும், பிரகாஷ் ராஜின் நடவடிக்கைகளும் முடிவு இப்படித்தான் இருக்கவேண்டுமென்று ஊகிக்க வைத்துவிட்டது. மேலும் பிரகாஷ்ராஜுக்கு இது முக்கியமான படமாகக் கொண்டாலும், அவரின் உச்சபட்ச நடிப்புத்திறனை வெளிக் கொணர்ந்த படமென்றும் சொல்லிவிட முடியாது. இதைவிடச் சிறப்பாக எத்தனையோ செய்திருக்கிறார். எம்.ஜி. ஸ்ரீகுமாரின் இசையில் மலையாளச் சாயலுடனான ஒரு பாடலும், பின்னணி இசையும் மோசமில்லையென்று சொல்லலாம். ஸ்ரேயா ரெட்டி, ஷம்மு போன்றவர்களின் மிகையில்லாத இயல்பான நடிப்பும் படத்தின் காட்சிகளுக்கு ஒரு புதிய வண்ணத்தைச் சேர்க்கிறது.

மழையினூடான பஸ் பயணத்தில் காவலரின் தொப்பியில் பேட்ஜ் அறுந்துவிட அது இல்லாமல் அதிகாரியின் முன்னால் போய் நின்றால் வேலை போய்விடும் அபாயம். பிரகாஷ் ராஜின் ஃப்ளாஷ்பேக் பகுதிகள் ஒவ்வொன்றாய் நிறைவுபெறும் இடைவெளிகளில் காவலர் பேட்ஜை தைக்கிற முயற்சிகளை மேற்கொள்கிறார். இறுதியில் அவரது பிரயாசை தோல்வியில் முடிகிறது. பிரதான படத்தை விட்டு விலகியிருந்தாலும் ஒரு சிறுகதைக்கான அல்லது குறும்படத்துக்கான விஷயமாக அநாயாசமாக வந்துபோகிறது இது.

பார்த்து முடித்தபிறகு மனசுக்குள் நான் எதிர்பார்த்திருந்த ஏதோ ஒரு பெரிய “இம்பேக்ட்” இதில் மிஸ்ஸிங் போலத்தோன்றியது. (ஒரு வேளை இளையராஜாவாக இருக்குமோ?) முக்கியமாக சோகமான காட்சிகள் ஒரு பெரிய நெகிழ்வை ஏற்படுத்தத் தவறியது போலொரு உணர்வு.

உலக சினிமாக்களின் தரத்துக்கு இணையாக இப்போதைக்கு காஞ்சிவரத்தை உயர்த்திப் பேசமுடியாது என்றாலும் நம் ஆட்களின் அபார சிந்தனைகளும் இது போன்ற முயற்சிகளும், நம் இந்திய சினிமா ரசிகர்களை அபத்தமான குத்துப் பாட்டுகளிலிருந்தும், ஹீரோயிச பில்டப்களிலிருந்தும், காதல் காட்சிகளிலிருந்தும் மீட்டு, ரசனையின் தரத்தை நிச்சயம் உயர்த்தும்.

ஒரு நாள் நம் சினிமாவும் உலக சினிமா ஆகும் என்கிற நம்பிக்கையை மீண்டும் அளித்த பிரியதர்ஷனுக்கு என் பாராட்டுக்கள்.

இந்தப்படத்தைப் பார்த்து முடித்ததும் எப்போதோ படித்த கவிதை ஒன்று ஞாபகத்திலிருந்து குதித்தது. படத்திற்கும் இதற்கும் ஏதோ சம்பந்தமிருப்பதுபோலக் கூடத் தோன்றியது. எழுதியவர் பெயர் “மார்க்ஸ்” (Marx) என்று குறித்து வைத்திருக்கிறேன்.

”பட்டுப்பூச்சி பட்டிழை நூற்கிறது.
பட்டிழையை நெய்வது
அதன் இயல்பாகிவிட்டது.
நூற்காமல் அதனால் இருக்க முடியாது.
வாழ முடியாது.
நூற்பதனால் அதற்கு
சாவு விதிக்கப் பட்டிருக்கிறது.
வேண்டாம் என்றால் கேட்காது.
நூற்பதே வாழ்வு.
சாவு ஒரு பொருட்டல்ல என்பது
அதன் பதிலாக இருக்கக் கூடும்.
பட்டு அழகானது!! அற்புதமானது!!
அதற்காக உயிரைக் கொடுக்கலாம்.
தப்பில்லை.”

6 comments:

  1. கடைசியில் கொடுத்த கவிதை உலுக்குகிறது.

    ReplyDelete
  2. சொல்ல இன்னும் கூட இருக்கிறது என்றாலும்... சொன்னவை சரியாய் இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. இறுதியில் இணைத்திருந்த கவிதை அருமை...

    ReplyDelete
  4. விமர்சனமும் கவிதையும் அருமை.

    பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  5. your appreciation got National recognition also. Happy to know Prakash Raj got the award

    ReplyDelete

இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்து?