பாம்பாட்டம்

பாம்புகளைப் பற்றி இப்போது எழுதுவதன் அவசியம் சுமார் ஒண்ணரை மாதத்துக்கு முன் நிகழ்ந்தது. ஆரண்யம் இதழில் முன்பு சாரு நிவேதிதா எழுதிய "பாம்புக் கதைகளு'-க்கும்" இதற்கும் சம்பந்தமில்லையென்று முன்பே தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நாள் பட்டப்பகல் 1.00 மணிக்கு என் அம்மாவை பாம்பு கடித்துவிட்டதாக பதற்றமாய் கோவையிலிருந்து டெலிபோன் கால் வந்தது. கடித்தது (கொத்தியது?) நல்ல பாம்பு என்றும் அம்மா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், சினிமா டயலாக் மாதிரி 'எதையுமே 48 மணி நேரம் கழித்துத்தான் சொல்ல முடியும்' என்று டாக்டர் சொன்னதாகவும் தகவல்கள் கிடைத்தன. செல்போன் கண்டுபிடித்தவன் இருக்கிற திசைக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு கொட்டுவாயில் ரயிலேறி கோவை விரைந்தேன். வழியெல்லாம் காதிலிருந்து செல்போனை எடுக்காமல் நிலைமையை விசாரித்துக்கொண்டே சென்றேன். அன்றைக்கு நான் அடைந்த பதற்றமும் வேதனையும் இதற்குமுன் பட்டதில்லை. ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் போய்ப் பார்த்தபோது அம்மாவுக்கு ஆக்ஸிஜன் மாஸ்க், ECG மற்றும் இன்னபிற ஒயர்கள் இணைக்கப்பட்டு பார்க்கவே ரொம்ப பயமாய் இருந்தது. அது நல்லபாம்பில்லை. கெட்ட பாம்பு என்று நினைத்துக்கொண்டேன். பிறகு தெரிந்தது, அது கொஞ்சூண்டு நல்ல பாம்புதான் என்று. ஏனெனில் 4 நாட்கள் அவசர சிகிச்சைப் பிரிவின் கவனிப்பில் அம்மா நலம் என்று அறிக்கைகள் வந்தன. பாம்பு கடித்த (வலது கை நடுவிரல்) இடத்துக்கு மேலே மணிக்கட்டில் உடனடியாக அப்பா இறுக்கமாக கட்டுப் போட்டுவிட்டதும், கடித்த பாம்பை உடனே கொன்று கையோடு டாக்டரிடம் கொண்டுவந்து காட்டியதும், ரூபாய் 3500 மதிப்புள்ள Anti-Venom என்கிற 10 ml ஊசி உடனடியாக போடப்பட்டதும் + மற்ற சிகிச்சைகளும் அம்மாவை காப்பாற்றின.

பிறகு தனி ரூமில் அனுமதிக்கப்பட்டு உறவினர்கள், நண்பர்கள் வந்து பார்க்க அனுமதிக்கப்பட்டதும் நிறைய பாம்புக் கதைகளைக் கேள்விப்பட நேர்ந்தது. பக்கத்து ரூமில் சிறுநீரகக் கோளாறுக்கான ஆபரேஷனுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவரின் அம்மாவை 30 வருடங்களுக்குமுன் பைரானி என்கிற பாம்பு கடித்து தீவிர சிகிச்சைக்குப்பின் தப்பிப் பிழைத்தாராம். அந்தப் பாம்பு அவரது காலைக் கடித்தவாக்கிலேயே ஒரு புரண்டு புரண்டு பின் கடித்த இடத்தில் தன் வாலால் நச் நச் என்று நான்கு அடி அடித்ததாகச் சொன்னார். இதே மாதிரி என் நண்பனொருவன் தனது ஏழாவது வயதில் தன் இடுப்புயரமுள்ள ராஜ நாகம் காலில் ஒரு போடு போட்டதில் ரொம்ப அபாய நிலைக்குப் போய் ஏழு நாட்கள் கோமாவில் இருந்துவிட்டு டாக்டர்கள் முயற்சியில் இரண்டாம் ஜென்மம் எடுத்ததாகவும் தெரிவித்தான். இன்னும் அவனது வலது காலில் கொதித்த எண்ணையைக் கொட்டியது போன்ற தழும்பு விகாரமாய் உள்ளது. பாம்பு சீற்றமாய்க் கொத்தின கொத்தில் பாதம் அப்படியே ஒரு பந்துமாதிரி சுருண்டுபோய் விட்டதாகவும், பிறகு தொடையிலிருந்து சதையை எடுத்து பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணியிருப்பதாகவும் சொன்னான். கேட்கவே பயங்கரமாக இருந்தது.

அம்மாவுக்கான சிகிச்சையின்போது சில விஷயங்கள் தெரிந்துகொண்டேன். இரண்டு மணிக்கொருதரம் ப்ளீடிங் டைம், க்ளாட்டிங் டைம் என்று கடிபட்டவரின் ரத்தம் எடுத்துப் பரிசோதிக்கிறார்கள். ரத்தத்தின் உறைநிலையில் ஏதாவது மாற்றம் நேரிடின் கொஞ்சம் பிரச்சனைதான். இந்தமாதிரி கடிவாங்குபவர்களுக்கு இரண்டு விதமான விளைவுகள் ஏற்படுமாம். ஒன்று உடனடி விளைவு. இன்னொன்று பின் விளைவு. உடனடி விளைவானது விஷத்தால் நரம்பு மண்டலம், நுரையீரல்கள் போன்றவை பாதிக்கப்பட்டு மரணம் சம்பவித்தல். பின் விளைவு சில நாட்களுக்குப் பிறகு இதயம், சிறுநீரகம் போன்றவை பாதிப்புக்குள்ளாதல். எல்லாவற்றையும் நன்கு பரிசோதனை செய்த பிறகே வீட்டுக்கு அனுப்புகிறார்கள்.

பாம்புக்கடிக்கான சிகிச்சை அரசு மருத்துவமனைகளில்தான் சரியாக அளிக்கப்படுகிறது என்று ஒரு தரப்பு விவரம் சொல்லி பயமுறுத்தியது. சரியான விஷமுறிவு மருந்துகளை அவர்கள்தான் வைத்திருப்பார்களாம். தனியார் மருத்துவமனைகளில் சில சமயம் அவைகள் கிடைக்காது என்றும் சொன்னார்கள். அம்மா அனுமதிக்கப்பட்டிருந்து ஒரு தனியார் மருத்துவமனை என்பதால் லேசாய் கவலையாயிருந்தது. ஆனால் எதுவும் பிரச்சினைகளின்றி குறிப்பிட்ட மருந்துகள் சரியான சமயத்துக்கு கிடைத்தன என்றுதான் சொல்ல வேண்டும்.

சிறுவயதில் அம்மா வாழ்ந்து வளர்ந்த வீடு பாம்புகள் அதிகம் நடமாடும் ஒரு பெரிய தோட்டத்துக்கு நடுவேதான் இருந்தது. பள்ளி விடுமுறையின் போது அங்கே போகும்போது பெரிய முற்றத்தில் போட்டிருக்கிற மலர்க் கோலத்தைக் கலைத்தபடி சாரைப் பாம்புகள் ஊர்ந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன். மேலும் வீட்டின் உள்ளே மரப்படிகள் கொண்டு போய்ச் சேர்க்கும் மச்சின் மேல் ஏறி எட்டிப் பார்த்தால் இஸ்.. இஸ்.. என்று பாம்புகள் சீறுகிற சப்தம் கேட்கும். சாரைப் பாம்பில் ஆரம்பித்து கட்டுவிரியன், நாகப் பாம்பு, கூழைப்பாம்பு என்று அத்தனை வெரைட்டிகளும் மனிதர்களோடு சேர்ந்து புழங்குகிற இடம் அது. அங்கேயெல்லாம் தப்பித்து செடிகளும், மரங்களும் அருகிப்போன நகரத்தில் ஒரு கான்கிரீட் காலனியில் வந்து கடிவாங்க நேரிட்டதை என்ன சொல்ல?

கோவையில் ஒரு பெரிய மருத்துவமனை மருந்தகத்தில் பணிபுரியும் என் உறவினர் 'இதெல்லாம் சின்ன கேஸுங்க. உங்களுக்கு முப்பதாயிரம் ரூபாய் செலவுல ட்ரீட்மெண்ட் முடிஞ்சிருச்சு. எங்க ஆஸ்பத்திரில Anti-Venom எல்லாம் பெட்டி பெட்டியா வாங்கிட்டுப் போவாங்க" என்று அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். விஸிட்டராக வந்த இன்னொருவர் தந்த தகவல்: ஒரு 35 வயது இளைஞன் உடலில் எத்தனை புரோட்டின் இருக்குமோ அத்தனை புரோட்டினை பாம்பு கொத்தும்போது மனித உடலினுள் செலுத்துகிறது. இம்மாதிரி செலுத்தப்படும் கூடுதல் புரோட்டின்தான் அதன் பல்லில் இருக்கும் விஷமாக மனிதர்களை கொல்கிறது என்றார். உண்மையா தெரியவில்லை. அதே மாதிரி ஆளைக் கடித்த பாம்பு மயக்கமடைந்து கடித்த இடத்திலேயே கிடக்குமாம். ஏனென்றால் நமது ரத்தம் அதற்கு விஷமாம். இதையும் யாராவது தெளிவுபடுத்தவேண்டும். இதற்குமுன் நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு குறுக்கு வழியாக இருளடைந்த ஒரு சோளக்காடு, தென்னந்தோப்பைத் தாண்டிச் செல்லவேண்டும். ராத்திரி பதினொரு மணிக்கு பயமின்றி கையில் வைத்திருக்கிற ஒரு பென் டார்ச்சுடன் கீழே குனிந்தபடி ஒற்றையடிப் பாதையில் பளபளப்பாக நகரும் பாம்புகளைத் தவிர்த்து நடந்த அனுபவங்களை இப்போது அசைபோட்டால் உடல் குலுங்குகிறது.

கையில் கடிபட்ட இடத்தில் காயம் இன்னும் ஆறாத நிலையில் சிறிது ஓய்வெடுத்துக்கொள்ளலாம் என்று சென்னை வந்த அம்மாவை கிண்டி பாம்புப் பண்ணைக்கு அழைத்துச் சென்றேன். பாம்புகளைப் பற்றி நேஷனல் ஜியாகரஃபி, அனிமல் ப்ளானட், டிஸ்கவரி சேனல்கள் கற்றுக் கொடுத்ததுபோக மீதி விஷயங்களை அங்கே போனபோது தெரிந்துகொள்ள முடிந்தது. பாம்புகள் பற்றி நம்பப்படும் மூட நம்பிக்கைகளுக்கெல்லாம் விளக்கம் அளித்து போர்டு வைத்திருந்தார்கள். சில உதாரணங்கள்:

ஒரு பாம்பை அடித்தால் இன்னொரு பாம்பு பழிவாங்கும் - நிச்சயமாக இல்லை.
கொம்பேறி மூர்க்கன் ஆளைக் கடித்தபிறகு மரத்தின் மேலேறி பிணம் எரிகிறவரை பார்க்கும். - தவறு. கொ.மூர்க்கனுக்கு விஷம் கிடையாது.
பாம்பு விஷத்தை மந்திரம் ஜெபித்து இறக்கிவிடலாம். - நிச்சயமாய் முடியாது.
பறக்கும் பாம்பென்று ஒரு வெரைட்டி கிடையவே கிடையாது.

பாம்பு கடித்ததினால் ஏற்படும் மரணங்களில் 75 சதவீதம் அதிர்ச்சியால் ஏற்படுவதாம். தகுந்த முதலுதவி, பாதிக்கப்பட்டவர் நம்பிக்கையிழக்காமல் பார்த்துக்கொள்ளுதல், பதற்றமடையாமல் இருத்தல் போன்றவற்றின் மூலம் அதிகபட்சம் காப்பாற்றிவிடமுடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சில இடங்களில் கடிபட்டவரைப் படுக்க வைத்து மந்திரம் ஜெபிப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். என் நண்பரின் அண்ணனுடைய நண்பனின் அக்காவுக்கு வயலில் பாம்பு கடித்து ஒரு முழு இரவும் படுக்கவைத்து மந்திரம் சொல்லிக்கொண்டிருந்ததில் காலையில் அவர் இறந்துபோனது நினைவுக்கு வந்தது. அதுதவிர கோவை மாவட்டம் சோமனூர் அருகே இருக்கும் வாழைத்தோட்ட ஐயன் கோவிலுக்குப் போய் வருவதன் மூலம் பாம்பு தோஷங்களிலிருந்து விடுபட முடியும் என்றும் நம்பிக்கை நிலவுகிறது. அம்மாவை பாம்பு கடிப்பதற்கு ஒரு வாரம் முன்பு நானும் என் நான்கு வயது வாண்டும் இரவு பத்தரைக்கு பரமபதம் விளையாண்டு கொண்டிருந்ததுகூட காரணமாயிருக்கலாம் என்று என் மனைவிக்கு லேசான சந்தேகம்கூட இருக்கிறது.

அம்மா வந்திருந்தபோது போரடிக்கிறது என்று காலையில் டி.வி போட்டபோது முதலில் திரையில் தெரிந்தது சூர்யா டி.வியில் பாம்புகள் பற்றின ஒரு நிகழ்ச்சி. 'நம்மள் தம்மில்' என்று ஸ்ரீகண்டன் நாயர் என்பவர் நடத்துவது. அதில் 25 தடவைகள் அரணை (பாப்பராணி) கடித்த பெண்மணி, 32 தடவை பாம்புக்கடி வாங்கிய ஒரு நடுத்தர வயது பெண்மணி, ஒரு பாம்பு சாஸ்திர நிபுணர், பாம்புக்கடி மருத்துவ நிபுணர், 100க்கும் மேற்பட்ட விஷப் பாம்புகளைப் பிடித்து வளர்த்துகிற ஒரு வீரப்பன் மீசைக்காரர். கொஞ்சம் ஆடியன்ஸ் இவர்களை வைத்து ஒரு நிகழ்ச்சி. அந்தப் பெண்மணி சென்ற இடமெல்லாம் பாம்புகள் தேடிவந்து கடித்துவிட்டுப் போகிறதாம். அதற்கு விளக்கம் கேட்டதற்கு மருத்துவர் அந்தப் பெண்மணியின் உடலிலிருந்து வருகிற மணம் இப்படி பாம்புகளை ஈர்த்து அழைக்கிற தன்மையைப் பெற்றிருக்கலாம் என்று சந்தேகமாய் பதில் சொன்னார். தவிர கேள்வி கேட்டுவிட்டு யாராவது பதில் சொல்வதற்குள் அவர்களை ஓவர்லேப் அல்லது ஓவர்டேக் பண்ணி பேச ஆரம்பிக்கிற ஸ்ரீகண்டன் நாயரின் குணத்தால் - பாம்புக்கு காது கிடையாது, மகுடி இசை அதற்கு கேட்காது. மகுடியின் அசைவுக்கு ஏற்ப தலையசைப்பது அது இசைக்கு ஆடுவதுபோல் தோன்றுகிறது; நில அதிர்வுகளை வைத்தே ஆள் நெருங்குவதைக் தெரிந்துகொள்கிறது - என்கிற அடிப்படை விஷயங்களைத் தவிர எக்ஸ்பர்டுகள் தெரிவிக்க நினைத்த பாம்பு விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியாமல் போய்விட்டது.

பாம்புகள் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவதற்கு இணையம் சிறந்த இடமென்று தெரியும். இன்னும் உள்ளே போகவில்லை. என் பயோ டேட்டாவில் 'ஹாபி' என்பதற்கு நேராக பாம்பு ஆராய்ச்சி என்று போடாலாமா என்றும் யோசனை. மேற்படி நான் கேள்விப்பட நேர்ந்த விஷயங்களில் ஏதேனும் தவறிருப்பினும் கூடுதல் விவரம் தெரிந்து வைத்திருப்பவர்கள் சுட்டிக் காட்டவும்.

எப்படியோ நான் இப்போதெல்லாம் தரையில் ஒரு மண்புழு ஊர்ந்தால்கூட சந்தேகமாய்ப் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். பின்னே இருக்காதா?

7 comments:

  1. ராகவன்29/8/09 10:42 PM

    நல்ல ஆர்வமூட்டும் தகவல்கள்.

    உங்களின் கமெண்ட் பாக்ஸில் பேஸ்ட் பண்ண முடியல. பதிவிலிருந்து மேற்கோள்காட்ட இயலவில்லை, சரி செய்யவும்.

    வேர்ட் வெரிபிகேசன் நீக்கவும்.

    35 வயது இளைஞனுடைய எடை 75 கிலோ என்றால் அவனது உடலில் புரொட்டீன் 33 3/4 கிலோ இருக்கும். அதாவது மனித உடலின் 45% புரொட்டீனாலானது. பாம்பின் எடையே இதைவிட குறைவுதானே!!!

    ReplyDelete
  2. ராகவன் ஸார். மிக்க நன்றி! புரோட்டீன் விஷயத்தில் நீங்கள் சொல்வது லாஜிக் ஆகத்தான் இருக்கிறது. இதைப் பற்றி மேலதிகம் தெரிந்துகொள்ளவேண்டும்.

    கமெண்ட் பாக்ஸ் பிரச்சினை என்னவென்று பார்க்கிறேன்.

    ReplyDelete
  3. அம்மா என்றால் சும்மாவா? உங்கள் பதட்டம் நியாயமானதே. எங்கும் எப்போதும் உஷாராக இருப்பததற்கு இந்த மாதிரி நிகழ்வுகள் ஒரு பாடம்.

    ரேகா ராகவன்.

    ReplyDelete
  4. நன்றி ரேகா ராகவன்.

    ReplyDelete
  5. பாம்பு பற்றி இத்தனை சுவாரசியமாய் சொன்னது படிக்கவும் சுவாரசியம் ஆனால் நான் ஒரு நண்பன் வீட்டை தேடி போனபோது பக்கத்து காலிமனையிலிருந்து தரைக்கு ஒரு அடி உயரத்தில் எனக்கு முன் கிராஸ் செய்த பாம்பை 'பறக்கும் பாம்பு' லிஸ்ட்டில் சேர்க்கலாமா? கல்கி சமீபத்திய கதை படித்தேன் சந்தோஷமாய் இருந்தது மீண்டும் உங்களை பார்க்க - ரிஷபன்

    ReplyDelete
  6. நன்றி ரிஷபன். பறக்கும் பாம்பைப் பற்றிய வீடியோ ஒன்றை சமீபத்தில் பார்த்தேன். (அனிமல் ப்ளானட்டா, நேஷனல் ஜியாகரபியா என்று நினைவில்லை.) இந்தப் பாறையிலிருந்து தூரத்திலிருக்கும் அந்தப் பாறைக்கு நெளிந்து நெளிந்து பறந்து போகிறது. அதை நிச்சயம் பறக்கும் பாம்பென்று சொல்லலாம் என்றுதான் தோன்றுகிறது. இணையத்தில் இந்த வீடியோ நிச்சயம் இருக்கும். இந்தியாவில் பறக்கும் பாம்பு இருக்கிறதா என்று தெரியவில்லை.

    ReplyDelete
  7. நல்ல பதிவு சார். பறக்கும் பாம்பு என்று ஏதும் கிடையாது , காற்றில் சறுக்கும்(gliding ) பாம்பு உள்ளது .Chrysopelea என்று அழைப்பார்கள் .
    http://en.wikipedia.org/wiki/Chrysopelea

    ReplyDelete

இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்து?