Showing posts with label வடை. Show all posts
Showing posts with label வடை. Show all posts

வட போச்சே - 2

அந்தப் பிரபல எழுத்தாளர் பொள்ளாச்சியில் ஒரு லாட்ஜில் பிற திரைப்படக் கலைஞர்களுடன் தங்கியிருந்தார். அப்போது உலக நாயகன் நடித்துக்கொண்டிருந்த ஒரு திரைப்படத்தில் அவர் பணியாற்றுவதற்காக வந்திருந்தார். முன்பே கடிதத் தொடர்புகள் மூலம் நண்பர் சரசுராம் அவருக்குப் பழக்கமாயிருந்தார். நாங்கள் எழுத்தாளரின் செல்வாக்கில் படக்குழுவினருடனேயே மூன்று நாட்கள் சிங்காநல்லூர், சூலக்கல் போன்ற இடங்களில் சுற்றிக்கொண்டிருந்தோம்.

சரசுராம், மீன்ஸ், நான் - மூவரும் அவரை சந்திப்பதற்காகச் சென்றிருந்தோம். சுமாரான அந்த லாட்ஜில் எழுத்தாளருக்கு ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அபாரமான எழுத்தாளராகிய அவர் எங்களுடன் அவரது கதை / திரைப்பட / அனுவங்களைப் பற்றி உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தார். வந்து நின்ற லாட்ஜ் பையனிடம் வடையும், டீயும் ஆர்டர் செய்தார். ஒரு பத்து நிமிடம் கழித்து ஆர்டர் செய்த உளுந்து வடையையும், அதனுடன் தேங்காய்ச் சட்டினியையும் டேபிளில் பரப்பிவிட்டுப் போனான் லாட்ஜ் பையன்.

இலக்கியம், சிறுகதைகள், சினிமா என்று கலந்து கட்டி சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டிருந்தது எங்கள் பேச்சு. அப்போது மிக ஒல்லியாக ஒருவர் உள்ளே வந்தார். எழுத்தாளரைப் பார்த்துச் சிரித்தார். இருவரும் என்னவோ பேசிக்கொண்டார்கள். அப்போது எழுத்தாளர் எங்களிடம் இவர் யார் என்று தெரிகிறதா என்று கேட்டார். எனக்கு சுத்தமாகத் தெரியவில்லை. ஆனால் சரசுராமும், மீன்ஸூம் லேசாக அவரை அடையாளம் கண்டுகொண்டு, ஒரு படத்தின் பெயரைச் சொல்லி அதில் நடித்தவர்தானே என்று கேட்டார்கள். அவரும் தான் இவ்வளவு சீக்கிரம் அடையாளம் காணப்பட்டது குறித்து மகிழ்ந்து ‘ஆமாம்’ என்றார். பிறகு நண்பர்களிருவரும் வளரும் நடிகரான அவர் நடிப்பு பற்றி பாராட்டி வாழ்த்துகள் சொன்னார்கள். எளிமையான அந்த நடிகர் சுற்றுமுற்றும் பார்த்தார். பிறகு இயல்பாக டேபிளிலிருந்த வடையொன்றை படக்கென்று எடுத்து அதை சட்னியில் முக்கிவிட்டு டபக்கென்று வாய்க்குள் தள்ளினார். இந்த எதிர்பாராத செய்கையின் மூலம் வடைகளின் எண்ணிக்கையில் ஒன்று திடீரென குறைந்தது ஒரு திடுக்கிடல் சம்பவமாக இருந்தது. வடை சாப்பிட்டவுடன் நடிகர் ’வரட்டா’ என்று கிளம்பிப் போய்விட்டார். பிறகு மறுபடியும் வடையை ஆர்டர் பண்ணினோமா, இல்லை இருந்த வடைகளையே ஆளுக்குக் கொஞ்சம் பிய்த்துத் தின்றோமா என்றெல்லாம் இப்போது நினைவில்லை. ஆனால் தமிழ்கூறும் நல்லுலகிற்கு இப்படியொரு டைட்டில் கிடைத்ததே அந்த நடிகரால்தான். அந்த எழுத்தாளர்: ம.வே.சிவகுமார்.

வடைபோச்சே - 1:

வட போச்சே - 1

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் இந்த ஸ்டேட்டஸைப் படித்ததும் முன்னொருநாள் நடந்த சம்பவம் ஒன்று ஞாபகத்திற்கு வந்தது. https://www.facebook.com/appadurai.muttulingam/posts/563785150363657:0

நானும் எனது நண்பர் ஒருவரும் ஒரு க்ளையண்டைப் பார்க்கச் சென்றிருந்தோம். க்ளையண்ட் ஆகப்பட்டவர் வீட்டிலேயே ஒரு பெட்ரூமை அலுவலகமாக மாற்றியிருந்தார். அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது சமையலறையிருந்து வடை சுடுகிற வாசம் வந்தது. சிறிது நேரம் கழித்து அவரது மனைவியார் ஒரு தட்டில் ஒரு பத்துப் பதினைந்து சூடான மசால் வடைகளைக் கொண்டுவந்து நாங்கள் சாப்பிடுவதற்காக வைத்தார்.
கூடவே தேநீரும். க்ளையண்ட் ரொம்ப நேரமாக நிறுத்தாமல் பேசிக்கொண்டேயிருந்ததால் இடையில் குறுக்கிடவேண்டாம் என்று நாகரிகம் கருதி நானும் நண்பரும் தட்டில் கைவைக்கவில்லை. மசால்வடை என்பது எனக்கு மிகவும் பிடித்த ஐட்டம் என்பதால் ஒரு குறுகுறுப்பு இருந்துகொண்டே இருந்தது.

இப்படியே பல நிமிடங்கள் கழிந்தன. வடைகளிலிருந்து வெளியேறும் ஆவி நின்றுபோனதை வைத்து சூடு ஆறிவிட்டதென்பதை உணர்ந்தோம். திடீரென அவர் தேநீர் ஆறுகிறது குடியுங்கள் என்று சொல்லிவிட்டு வடைகள் இருந்த தட்டை மேஜைக்கு அந்தப்பக்கம் எங்கள் கைகளுக்கு எட்டாத இடத்திற்கு நகர்த்தி வைத்துவிட்டு லாப்டாப்பில் மும்முரமாக எதையோ காண்பிக்க ஆரம்பித்தார்.

இப்படியாக இருபது நிமிடங்கள். தேநீர் முடிந்தது. மீட்டிங்கும் முடிந்தது. சரி மீண்டும் சந்திப்போம் என்று க்ளையண்ட் எழுந்து நின்றுவிட்டதால் இப்படியும் உலகத்தில் அநியாயங்கள் நடக்குமா என்று நினைத்தபடி அப்படியே வடைத்தட்டை கடைசியாக ஒருமுறை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு வெளியேறினோம். கைக்கும் எட்டவில்லை. வாய்க்கும் எட்டவில்லை.

வடைபோச்சே - 2