நெருப்பில்லாமல் புகைகிறது

மதிய உணவு இடைவேளையில் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது சின்ன வயதில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொன்னார். நண்பர் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர். அவரது நண்பரொருவர் “இதை பாக்கெட்டில் வைத்திரு. அப்புறம் வாங்கிக் கொள்கிறேன்” என்று கொடுத்து வைத்திருந்த ஒற்றை சிகரெட்டை பாக்கெட்டில் போட்டு அப்புறம் மறந்துபோய் வீட்டுக்கு எடுத்துப் போய்விட்டாராம். சிகரெட் பிடிப்பதோடு அப்பாவின் சட்டையையும் அவ்வப்போது எடுத்துப் போட்டுக்கொண்டு போகும் பழக்கமுடையவர் இவர். வீட்டுக்கு வந்து ஹாங்கரில் மாட்டின சட்டையை அப்பா துவைக்கப் போடுவதற்காக எடுத்தபோது சொன்னாராம். “எலே.. சட்டப்பாக்கெட்ல ஒரு சிகரெட் இருக்குலே”.

கட்டிலில் ஒய்யாரமாய் படுத்து அரைத்தூக்கத்தில் இருந்த நண்பர். “அத வெளிய தூக்கிப் போடுங்கப்பா!”

அப்பாவும் வேறு கேள்விகள் ஏதும் கேட்காமல் தூக்கிப் போட்டுவிட்டுப் போய்விட்டாராம். இந்தச் சம்பவத்தை விவரித்த நண்பர் சொன்னது “அப்பா என்னை எதுவுமே கேக்கல. அது தவிர நான் சிகரெட் பிடிப்பனா இல்லையான்னு என்பது இன்னிக்கு வரைக்கும் அப்பாவுக்கு தெரியாது. தெரிஞ்சிருந்தாலும் இதுவரைக்கும் என்கிட்ட அதப் பத்திக் கேட்டதில்ல.”

இந்த மாதிரி தன் கட்டுப்பாடுகளிலிருந்து மகன்களுக்கு முழு சுதந்திரம் வழங்கியிருக்கிற அல்லது அவ்வப்போது கண்டுகொள்ளாத அப்பாக்கள் ஓரிரு பேரை நான் கண்டிருக்கிறேன். இத்தனைக்கும் அந்த அப்பாக்கள் சிகரெட் பழக்கம் இல்லாதவர்கள். சிகரெட் பிடித்தல் உடல்நலத்திற்குத் தீங்கானது என்கிற அரசாங்க வாசகத்தை அவர்கள் தெளிவாக அறிந்து வைத்திருப்பவர்கள்.

ஒரு முறை என்னுடைய (இன்னொரு) நண்பனின் வீட்டுக்குப் போனபோது வாசலில் ஈஸி சேரில் அவன் அப்பா சாய்ந்து படுத்திருந்தார். அவன் இல்லையா என்று அவரிடம் விசாரித்தபோது ஆள்காட்டி விரலால் உத்தரத்தை நோக்கிக் காட்டிவிட்டு, பிறகு இரண்டு விரல்களை “v" மாதிரி உதட்டில் வைத்து ஊதிக் காட்டினார். நான் ஒரு நிமிடம் தேமே என்று விழித்துவிட்டுப் பின்னர் அதன் பொருள் புரிந்து சைடு படிக்கட்டு வழியாக மொட்டை மாடிக்குச் சென்றேன். அங்கே சுற்றுச் சுவரில் உட்கார்ந்து வானத்தைப் பார்த்துக் கொண்டு புகைவிட்டுக் கொண்டிருந்தான் நண்பன். “என்னடா வீட்லயே தம்மா? அப்பா இருக்காரே!” என்றதற்கு மூக்கு வழியாக புகையை வெளியே விட்டுவிட்டு “கண்டுக்க மாட்டார்” என்றான். மீண்டும் ஒரு இழுப்பு இழுத்துவிட்டு.. “அம்மாவும்தான்” என்றான்.

இந்த இடத்தில் நீங்கள் எல்லாரும் “ரோஜா” படத்தில் அரவிந்தசாமி அம்மா முன்னிலையிலேயே சிகரெட் பற்ற வைத்துப் புகைப்பதை தவறாமல் நினைவுகூறுவீர்கள் என்று தெரியும். (நினைவு கூறாதவர்கள் இந்த வரியைப் படித்துவிட்டு ஒருமுறை நினைவு கூறுங்கள்.) இதைப்பார்த்து சிலபேர் அதிர்ச்சியும் சில பேர் ஆச்சரியமும், சில பேர் இரண்டையும் ஒருங்கே அடைந்தார்கள்.

என் அப்பா சிகரெட்டெல்லாம் பிடிக்கற பழக்கம் வெச்சுக்காதே என்று என்றைக்காவது எனக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறாரா என்று யோசித்துப் பார்த்தால் அப்படி எதுவும் நினைவில் புகையாடவில்லை. பையன் தம் எல்லாம் அடிக்கிறானா என்று யாரிடமாவது விசாரித்திருப்பாரா என்பது கூட நிச்சயமாகத் தெரியவில்லை.

எனக்கு சிகரெட் பிடிக்கிற நண்பர்கள் நிறைய பேர் உண்டு. என்னிடமே ரெண்டே முக்கால் ரூபாய் வாங்கி ‘கிங்ஸ்’ வாங்கியவர்கள் இருக்கிறார்கள். (இப்போ எவ்ளோ?) அவர்கள் சில நேரம் அளவுக்கு அதிகமாக புகைப்பதுபோல தோன்றும் சமயங்களில் “ஏம்ப்பா இந்தக் கருமத்த விட்டுற வேண்டியதுதான?” என்று கேட்டிருக்கிறேன். அதற்கு விதவிதமான பதில்கள் வந்திருக்கின்றன.

பதில் 1: பதினெட்டு வயசில காலேஜ்ல ஆரம்பிச்சதுடா.. உடம்புல ஊறிப்போச்சு. விடறது கஷ்டம்.
பதில் 2: எந்த ******க்கு விடணும்னு சொல்லு.
பதில் 3: புகை உடலுக்குப் பகைங்கறதுனாலதான் உள்ள வச்சுக்காம வெளிய விட்டுர்றேன். ஹிஹி!
பதில் 4: வுட்டுட்டா உளுந்துரும்ஜி!
பதில் 5: எனக்கு ஆக்ஸிஜனே இதுதான். எப்டி வுடறது?

இன்னபிற.

சிகரெட் பிடிக்கிற அப்பாக்கள் சிலபேரைப் பார்த்திருக்கிறேன். தன்னிடமிருந்து மகனோ மகளோ சிகரெட் பிடிப்பதைக் கற்றுக் கொண்டுவிடக்கூடாதென்கிற முன்னெச்சரிக்கையுடன் வீட்டுக்கு வெளியே சற்றுத் தள்ளி தெருமுனையில் அல்லது டீக்கடையில் என்று கமுக்கமாக முடித்துவிட்டு வந்துவிடுவார்கள். வாசம் தெரியாமலிருக்க ஹால்ஸ் அல்லது நிஜாம் பாக்கு.

பதில் 1-ஐ சொன்ன நண்பரிடம் முன்னெல்லாம் ஏதாவது ஒரு இடத்தைக் குறிப்பிட்டு அது எங்கேயிருக்கிறதென்று கேட்டால், இந்த பஸ்ஸில் ஏறி, அந்த ஸ்டாப்பிங்கில் இறங்கி அப்றம் ஒரு சிகரெட் பத்த வெச்சு நடக்க ஆரம்பிச்சீன்னா அது தீர்றதுக்குள்ள போயிரலாம் என்பான். இது எனக்கு ஒரு விதத்தில் இன்ஸ்பையர் ஆகி 96-ல் கல்கியில் வெளிவந்த ஒரு சிறுகதையில் இதை ஒரு வரியாக வைத்தேன். கதை நாயகி காயத்ரியின் கணவன் ராம்குமார் என்பவன் தினம் காலை ஒரு சிகரெட் பற்றவைத்துக்கொண்டு மனைவியை நடக்கிற தூரத்தில் இருக்கிற ஆபிஸ் வரை விட்டுவிட்டுத் திரும்புவான். ‘ஒரு சிகரெட் தூரம்’ என்று கூட தலைப்பு வைத்து பிறகு ‘நடக்கிற தூரம்’ என்று மாறிவிட்டது.

கோவையில் ஒரு அட்வர்டைஸிங் கம்பெனியில் பணிபுரிந்தபோது அங்கே வேலை செய்த ஒரு பத்துப் பன்னிரண்டு பேரில் பெண்கள் தவிர முக்கால்வாசிப் பேர் புகை மன்னர்களாக இருந்தார்கள். கம்பெனியின் வைஸ் பிரஸிடெண்ட் உட்பட. கிரியேட்டிவ் ஏரியாவில் ஆர்ட் டைரக்டர், உதவி ஆர்டிஸ்ட், க்ளையண்ட் சர்வீஸ் எக்ஸிக்யூட்டிவ், அக்கவுண்ட் ஹெட் என்று எல்லாருமே ஒரே அறையில் உட்கார்ந்து கொண்டு மாற்றி மாற்றி பற்றவைத்துக் கொண்டிருப்பார்கள். வத்திப் பெட்டி இருக்கா என்று என்னிடம் வேண்டுமென்றே கேட்பார்கள்.

புகைபிடித்தல் என்பது கிரியேட்டிவ்-ஆன ஆசாமிகளின் தலையாய லைஃப் ஸ்டைல் என்பதை ஸ்தாபிக்க முனைபவர்கள் அவர்கள். நான் திருவிளையாடல் படத்தில் கைலாயக் காட்சி மாதிரி புகை மண்டலத்துக்கு நடுவே மூச்சுத் திணறி உட்கார்ந்து கொண்டிருப்பேன். இதற்கல்லவா அறிஞர்கள் பாஸ்ஸிவ் ஸ்மோக்கிங் (Passive Smoking) என்று பெயர் வைத்திருக்கிறார்கள்!! இதில் என்ன வேடிக்கை என்றால் மாத ஆரம்பத்தில் டப்பா டப்பாவாக கைமாறுகிற சிகரெட், மாத இறுதியில் பட்ஜெட் காரணமாக மல்லிசேரி பீடியாகத் தேய்ந்து ஆளாளுக்குக் காட்டமாய் உதட்டில் வைத்து இழுத்துக் கொண்டிருப்பார்கள். வைஸ் பிரஸிடெண்ட் வந்து “யோவ், பீடி குடுய்யா” என்று ஆர்ட் டைரக்டரிடம் வந்து வாங்கிப் போவார். நான் எழுந்து வெளியே வந்துவிடுவேன். (அந்த சமயங்களில் அவர்களின் கிரியேட்டிவிட்டி இன்னும் அதிகமானதா என்பதை நான் கவனித்திருக்கவில்லை)

பொள்ளாச்சியில் தேவர் மகன் படப்பிடிப்புக்கு வந்திருந்த ஒரு பிரபல எழுத்தாளரை அவர் தங்கியிருந்த லாட்ஜ் அறையில் சந்திந்தபோது கையில் புகைகிற சிகரெட்டுடன் வரவேற்றார். ஒரு நான்கைந்து மணி நேரமிருக்கும். ஒரு சிகரெட் தீர்ந்து போகும் போது அதிலேயே இன்னொன்றை பற்றவைத்துக் கொண்டு இடைவெளி விடாமல் தொடர்ந்து அவர் புகைத்ததைப் பார்த்து அரண்டும் மிரண்டும் போயிருந்தேன். எனக்குத் தெரிந்து குறைந்தது 25 சிகரெட்டுகளாவது தீர்ந்திருக்கும். செயின் ஸ்மோக்கிங் என்றால் என்ன என்று டெமோ-வுடன் தெரிந்து கொண்டது அன்றுதான். என் வீட்டுக்குப் பக்கத்தில் கூட ஒருவர் காலர் தூக்கிவிடப்பட்ட டி-சர்ட் மற்றும் வேட்டியுடன் எப்போதும் சதா விரலிடுக்கில் புகைகிற சிகரெட்டுடன் காம்பவுண்டுக்கு வெளியே நின்றிருப்பார். எங்கேயாவது போகும்போதும் வரும்போதும் எந்நேரமும் அவரை அந்த இடத்தில் அந்த நிலையிலேயே பார்த்துக்கொண்டிருக்கிறேன். தம் அடிப்பதை ஒரு வேலையாகவே செய்ய முடியுமா என்று ஆச்சரியமாகவும் இருக்கிறது.

சிகரெட் பிடிக்கிற ஆண்கள் பெட்டிக்கடையில் “பிரதர்.. நெருப்பு குடுங்க” என்று பக்கத்தில் நிற்கிறவரிடம் இயல்பாகக் கேட்கும் கேள்வியில் முன்பின் பழக்கம் இல்லாதவர்கூட மனமுவந்து தன் கொள்ளியைத் தந்து உதவி பின் தோழமையுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கூட பார்த்திருக்கிறேன். நட்பு வளர்க்க உதவும் நெருப்பு.

வாழ்க்கையில் அவ்வப்போது தொட்டுக்கொள்ள சிகரெட், பான் பராக், சுவிங்கம் என்று ஏதாவது ஒரு ஐட்டம் ஏன் எப்போதும் சிலருக்குத் தேவைப்படுகிறதென்று சில நேரம் யோசித்துப் பார்த்திருக்கிறேன். இது ஒரு உளவியல் சம்பந்தப்பட்ட விஷயம் என்றுதான் தோன்றுகிறது. ஸீரியசாய் எப்போதும் யோசிப்பவர்கள் கையில் சிகரெட் புகைகிறது. அது அவர்கள் சிந்தனையைத் தூண்டுகிறதா என்று உலகமெங்கும் யாராவது கருத்துக் கணிப்பு நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். தொழிலாளிகள் தன் உழைப்பை, வியர்வையை, அலுப்பை மறக்க ஓரமாய் உட்கார்ந்து ஒரு பீடியை ஒரு இழுப்பு. சிலருக்கு பெண்களிடம் தான் ஒரு ஹீரோவாக நிரூபணம் செய்வதற்கு. சிலருக்கு தான் ஒரு வில்லன் என்று மற்றவர்களுக்குத் பிரகடனப்படுத்துவதற்கு. சிலருக்கு தான் ஒரு ஆண் என்று நிரூபணம் செய்வதற்கு. இந்த லிஸ்டை இன்னும் விரிக்கலாம்.

பிறரிடம் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவதற்கு. தன்னுடைய தாழ்வு மனப்பான்மையை மறைப்பதற்கு. அப்பாவை எதிர்ப்பதற்கு. தன்னிடமிருக்கிற இண்டெலெக்சுவல்தனத்தை வெளிப்படுத்துவதற்கு. கை நடுக்கத்தை மறைப்பதற்கு. மதுவருந்தும்போது சும்மா ஒரு உப கிக் ஏற்படுத்துவதற்கு. சிலருக்கு சும்மா ஸ்டைலுக்கு. சிகரெட் என்றால் என்ன என்று ஒரு முறை தெரிந்துகொள்வதற்கு. தன் படைப்பாற்றலை அதிகரித்துக் கொள்வதற்கு. சிலருக்கு சாப்பாட்டுக்கு பதிலாக. சிலர் தன் நண்பர்களுடன் சும்மா கம்பெனிக்கு. தன் கணவனையோ, காதலனையோவிட தானும் குறைந்து போய்விடவில்லை என்று தெரிவிப்பதற்கு. சிலருக்கு துக்கத்தைக் கரைக்க. சிலருக்கு தூக்கத்தை அழைக்க. சிலருக்கு குளிரைத் தடுக்க. சிலருக்கு மழையை ரசிக்க. இப்படியாக ஒவ்வொருவருக்கும் புகைபிடிப்பதற்கான தனிப்பட்ட காரணங்கள் நீண்டுகொண்டே போகும்.

உதடு வழி நுழைகிற புகை நெஞ்சாங்கூட்டில் இறங்கிப் பரவி மனதிலும் உடம்பிலும் என்னெல்லாம் மாயம் செய்கிறது என்பதை சிகரெட்டை நுனி முதல் அடிவரை அனுபவித்துப் பிறகு ஃபில்டரைக் கடாசுபவர்களுக்குத்தான் வெளிச்சம்.

சிலர் தொட நினைக்கிறார்கள். சிலர் விட நினைக்கிறார்கள். சிகரெட் பிடிப்பது என்பது தனிப்பட்ட நபரின் விருப்பமும், சுதந்திரமும், உரிமையும், கொள்கையும் ஆகவும் இருக்கிறது. சிலருக்கு அதுவே ஒரு மோனத்தவமும், தியானமும், வாழ்வியல் வழியும் ஆக பரிமாணம் கொண்டிருக்கிறது. டாக்டர் எக்ஸ்ரேவை சுட்டிக் காட்டி “உங்க நுரையீரல்ல... என்று ஏதோ சொல்ல ஆரம்பிக்கும்வரை.

12 comments:

  1. //அவரது நண்பரொருவர் “இதை பாக்கெட்டில் வைத்திரு. அப்புறம் வாங்கிக் கொள்கிறேன்” \\

    இதே அனுபவம் எனக்கும் உண்டு. நான் பள்ளியில் படிக்கும்போது தினமும் இடைவேளையில், அங்கமுத்து வாத்தியாருக்கு நாயர்கடையில் இரண்டு மசால் வடையும் இரண்டு சிசர்ஸ் சிகரட்டும் வாங்கி வருவது என்னுடைய வேலை. அன்று என்னுடைய கெட்ட நேரம் வாத்தியாரிடம் மறதியாக ஒரு சிகரட் மட்டும் கொடுத்து விட்டு வீடு சென்று விட்டேன்.

    அடுத்தநாள் பள்ளி விட்டு சென்றவுடன் என் அப்பா நான் விளையாடும் கில்லி குச்சியுடன் வாசலிலேயே நின்றிருந்தார்.

    அதற்கப்புறம் 40 வருடங்களாக நான் புகையாளி
    அன்புடன்
    சந்துரு

    ReplyDelete
  2. சிகரெட் பிடிப்பது பற்றிய விழிப்புணர்வுகள் எத்தனையோ வந்தாலும் அதை கூட ஒரு சிகரேட் நேரத்தில் படித்து முடித்து செல்லும் ரகத்தினரும் கூட உண்டு :( வீட்டில் இருப்பவர்களின் மீது ஏற்பட்ட பாசத்தினால் விட்டவர்களும் இருக்கிறார்கள் அதே போன்று வெறுத்து போய் புகை தொடர்பவர்களும் இருக்கிறார்கள்!

    டென்ஷன் என்றால் சிகரெட்டினை தொடும் நண்பனை என்னால் எந்த காரணத்தினை சொல்லியும் தடுக்க இயல முடியவில்லை என்பது நிதர்சனம் :(


    விரிவான + அருமையான பதிவு !

    ReplyDelete
  3. @தாமோதர் : நீங்கள் புகையாளியானதற்கு அப்பா கில்லிக் குச்சி தூக்கினது காரணமா அல்லது அங்கமுத்து வாத்தியாரா?

    @ஆயில்யன் : வீட்டிலிருப்பவர்கள் மொத்தமாய் வெறுத்துப் போவதைச் சொல்கிறீர்களா?

    ReplyDelete
  4. /சிலருக்கு அதுவே ஒரு மோனத்தவமும், தியானமும், வாழ்வியல் வழியும் ஆக பரிமாணம் கொண்டிருக்கிறது./

    இவ்வாறாக, இதை நியாயப்படுத்த முடியாது. மோனத் தவமும் தியானமும் வாழ்வியல் வழியும் எவ்வளவு உயர்ந்தவை என்பதைக் கூர்மையாகப் பார்த்தால், இந்தப் புகைப் பழக்கம் எவ்வளவு தீங்கானது என உணரலாம். சுருட்டும் சாராயமுமாகத் தோன்றும் 'நான் கடவுள்' படத்தின் சாமியார்கள் போன்ற சிலர், தவறான எடுத்துக்காட்டுகள். இப்பழக்கம், பலவீனத்தின் அடையாளமே. இண்டெலெக்சுவல்தனத்தை வெளிப்படுத்துவதாகக் கருதுவது, ஒரு கற்பிதம்.

    12 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய ஒரு வெண்பா:

    உதட்டின் இடுப்பில் உருளைப் புகைச்சல்
    சிதைத்தீ கணக்காய் சிரி்க்க - இதுதான்
    நவீன உடன்கட்டை! நாகரிகக் கொள்ளி!
    சுவீகாரச் சாத்தானின் சூடு!

    அன்புடன் என்றும்,
    அண்ணாகண்ணன்.

    ReplyDelete
  5. @அண்ணாக்கண்ணன் : வருகைக்கு நன்றி! உங்கள் வெண்பா நச்சென்றிருக்கிறது. மோனத்தவம், தியானம், வாழ்வியல் வழி என்பதையெல்லாம் நியாயப்படுத்துவதற்காக எழுதவில்லை. மாறாக அப்படி உருவகப்படுத்துபவர்களை லேசாய்க் கிண்டல் செய்யும் தொனியுடன்தான் எழுதினேன். எழுதின ஃப்ளோவில் அது சரியாக வெளிப்படவில்லையோ என்று இப்பொது தோன்றுகிறது.

    (சிகரெட் மெடிடேஷன் என்று ஒன்று உண்டு என்று யாரோ சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மைதானா?)

    ReplyDelete
  6. நல்ல பதிவு.

    ReplyDelete
  7. நன்றி வேலன்.

    ReplyDelete
  8. அருமையன பதிவு ஜி, வருடத்தில் இரண்டு தடவையோ மூன்றுதடவையோ ஆசைபட்டு புகைப்பது என் வருடாந்திர வழக்கம். நான் எண்ணூர் ஃபவுண்டரியில் அப்ரண்டிசாக பணியாற்றியபோது ஒரு வயதான செயின் ஸ்மோக்கரின் நட்பு கிடைத்தது, வேலை நேரத்திலும் அவருடைய கைகளின் உதவியை நாடாமல் அவருடைய உதடுகள் சிகரெட்டை உரிஞ்சி கொண்டும் புகையை ஊதிகொண்டும் இருக்கும். சிகரெட் முடிந்ததும் அடுத்த சிகரெட் பற்ற வைக்க மட்டும் விரல்கள் உதவும், குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு பத்து பாக்கெட்டுகள் வரை ஊதி தள்ளுவாராம். குடும்பஸ்தர்தானாம், பாவம் அவர் குடும்பம்.

    ReplyDelete
  9. மிக நல்ல பதிவுங்க... படிச்சி முடிக்கும்போது பயமாவும் இருக்கு....

    ReplyDelete
  10. நன்றி ஆரியவர்தன், பாலாசி.

    ReplyDelete
  11. ஓரு கருத்தை கண்டிப்பாக வரவேற்கிறேன்.... இந்த பழக்கம் மூலமாக உறவுகளை உருவாக்கலாம்.. அதற்கு நான் சாட்சி..

    ReplyDelete
  12. bad habbits like jackal(karadi)we cannot comeout of it.smokers and drunkers will create only reasons.not creativity.creativity is inborn.there is no relativity to these two things. onlly how u broght up? that is the answer for this.I am at 62.

    ReplyDelete

இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்து?