குறுநூல் - சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட்

 சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட்
2008-ல் எனக்கு வாய்த்த சிங்கப்பூர் பயணத்தின்போது நான் பார்த்த விஷயங்களை, அனுபவங்களை சிறு சிறு குறிப்புகளாக வலைத் தளத்தில் எழுதினேன். இது என் முதல் வெளிநாட்டுப் பயணம் என்பதால் பின்னொரு நாளில் அந்த இனிய அனுபவங்களை நினைவு கூற வழிவகை செய்யும் வகையில் சும்மா டயரிக் குறிப்புகள் போலத்தான் அவற்றை எழுதிவைத்தேன். ஆனால் பின்னாளில் வாசகர்களால் அதிகம் தடவைகள் பார்வையிடப்பட்ட  பதிவுகளாக இவை இருப்பதைக் கவனித்தேன்.

பின்னர் ’குறுநூல்’ ஐடிவாவை திரு. சொக்கன் சொன்னபோது பேசாமல் இதை குறுநூல் ஆக்கிவிடலாம் என்று தோன்றியது. அவருக்கு என் நன்றிகள். 

இது விலையில்லாப் புத்தகமாக இப்போது கூகுள் புக்ஸில் கிடைக்கும். இதை நீங்கள் டவுன்லோடு செய்தபிறகு மற்றவர்களுக்கும்கூட பகிரலாம்.

சிங்கப்பூர் என்னும் அழகிய நாட்டுக்கு முதல் முறை செல்ல நினைப்பவர்களுக்கு அதன் அதிசயங்களை, சுற்றுலாத் தலங்களை அறிமுகப்படுத்துகிற அளவில் மட்டுமே இந்த நூல் இருக்கும்.

கூகுள் புக்ஸில் இந்த மின்னூலைப் பெற இங்கே க்ளிக்கவும்.

ஆரோக்கியமான உரையாடல்

ஆட்டு தாடி வைத்திருந்த ஒரு நண்பரிடம் 'அப்படியே உங்க தாடி கார்ல் மார்க்ஸ் மாதிரியே இருக்கு' என்று சொல்லப்போக துவங்கியது ஒரு உரையாடல்.

”கார்ல் மார்க்ஸ்க்கு தாடி இப்படி இருக்காது” என்றார்.

“அப்படியா.. இருங்க.. நெட்ல பாத்துரலாம்.”

நான் கூகுளில் கார்ல் மார்க்ஸ் என்று தேட புசுபுசுவென வெண்தாடியுடன் அவர் வேறு மாதிரி இருந்தார். நான் சமாளித்து “அப்ப லெனின்னு நினைக்கிறேன்.”

நல்ல வேளையாக நண்பரின் தாடி லெனினோடு கச்சிதமாகப் பொருந்தியது.

“ஆங்.. மார்க்ஸூன்னு வாய் தவறி தப்பா சொல்லிட்டேன்..”

“கம்யூனிஸம் படிப்பீங்களோ..?”

“நோ.. கத்தி படத்துல இட்லி சமாச்சாரம் அளவுக்குத்தான் தெரியும்.. ”

”புக்ஸ் நிறைய படிப்பீங்களா?”

“நிறைய படிச்சிட்டிருந்தேன்.. இப்ப ரொம்ப கம்மியாயிருச்சு.. ரெண்டு வருஷத்துக்கு முன்னால புக் ஃபேர்ல வாங்கினதெல்லாம் படிக்காம அப்படியே கிடக்குது..”

“எந்த மாதிரி புக்ஸ்?”

“நிறைய தமிழ் நாவல்ஸ்..  சிறுகதைகள்... சுஜாதால ஆரம்பிச்சு, ஆதவன், வண்ணதாசன், அ.முத்துலிங்கம்..”

நான் முடிப்பதற்குள் நண்பர் குறுக்கிட்டு “எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோஹன்..” என்று தொடர்ந்தார்.

“ஆமா.. ஆமா..” நான் தொடந்து “சதத் ஹஸன் மாண்ட்டோ..” என்று பீலா விட ஆரம்பிப்பதற்குள்..

”நான்கூட படிப்பேன்”

“எந்த மாதிரி?”

“ஓஷோ, சாருலதா.. இந்த மாதிரி”

“சாருலதாவா அது யாரு.. பெங்காலி ரைட்டரா?”

“தமிழ்தாங்க... சாரு... சாரு”

“நிவேதிதாவா..”

முகத்தில் இருபது வாட்ஸ் சி.எல்.எஃப் பல்ப் எரிந்து “ஆங்.. அவர்தான்..”

“ஓஷோன்னவுடனே ஞாபகம் வருது.. அவரோட ’கிருஷ்ணா எனும் மனிதனும் அவன் தத்துவங்களும்’ படிச்சிருக்கீங்களா?”

“இல்லையே.. நல்லாருக்குமா?”

“தெரியலை.. நானும் படிச்சதில்லை.. கேள்விப்பட்டிருக்கேன்.”

“அவரை மாதிரியே இன்னொருத்தர் இருப்பாரே.. ஜகதீஸ் வாசுதேவன்னு. விகடன்ல எழுதுவார்..”

“ஓஹோ..”

“இந்த மூச்சுக்காத்தை இழுத்து விட்டு.. அதுக்கு என்ன பேரு? அதெல்லாம் சொல்லித்தருவாங்க அவர் சென்டரிலே.. பிரயாணம்-ங்கற மாதிரி வரும்”

“பிராணயாமம்..”

“அதேதான்.. நான் ஒரு வாரமா பண்ண ஆரம்பிச்சிருக்கேன்... எங்கப்பா வளச்சு வளச்சு பண்ணுவார் யோகாசனமெல்லாம்... என்னையும் பண்ணச்சொல்வார்.. ”

“ரொம்ப நல்லது.. என்ஜினீயரா இருந்த என் நண்பர்கூட வேலையை ரிசைன் பண்ணி பல வித யோக நிலைகளைக் கடந்து...”

“யோகியாயிட்டாரா..”

“இல்ல மறுபடி என்ஜினீயரே ஆயிட்டார்..”

நண்பர் பதினெட்டு மூலிகைகள் அடங்கிய மெடிமிக்ஸ் சோப்பால் குளித்தமாதிரி உணர்ந்து ”சரி.. வேலையைப் பாப்போம்..மார்க்ஸ்-ல ஆரம்பிச்சு.. எங்கெங்கேயோ போய் முடிஞ்சிருச்சு பேச்சு.. நல்ல ஹெல்த்தியான கான்வெர்ஷேசன். மேலும் நிறைய பேசுவோம்..” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

தருணம் - குறுநாவல் - இலவச மின்னூல்

தருணம் என்ற தலைப்பிலான எனது குறுநாவல் இப்போது இலவச மின்னூலாக இங்கே கிடைக்கிறது.
1998 – ல் கல்கி வார இதழில் நான்கு வாரத் தொடராக வெளியான கதை இது. ஒரு சில காரணங்களுக்காக இதன் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. 2004–ல் கிழக்கு பதிப்பகம் வெளியீடாக வெளிவந்த ’மனதில் உனது ஆதிக்கம்’ என்ற எனது சிறுகதைத் தொகுப்பில் இந்தக் கதையும் கடைசியாக இடம் பெற்றிருந்தது.
அலைபேசிகளும், இணையமும், மின்னஞ்சலும் பிரபலமடைந்திராத ஒரு காலகட்டத்தில் இதை எழுதினேன். இதில் உலவும் மனிதர்கள் கொஞ்சம் நடைமுறை நிஜங்களும், கொஞ்சம் கற்பனைகளும் சரிவிகிதமாகக் கலந்து படைக்கப்பட்டவர்கள். எந்த ஒரு புனைவையும் முற்றிலுமாக கற்பனையிலிருந்தே வடித்தெடுப்பதென்பதை எந்த எழுத்தாளனும் செய்ய முடியாதுதான். அமோகமாகவோ, அவலமாகவோ ஒவ்வொருவருக்கும் தனித்துவமாக, ப்ரத்யேகமாக அமைந்துவிடுகிற வாழ்க்கை எவ்வகைத் தருணங்களையெல்லாம் அவர்களுக்குக் கொண்டுவந்து தருகிறது? எதை அவர்களிடமிருந்து இரக்கமில்லாமல் சட்டென்று பிடுங்கிச் செல்கிறது? சூழ்நிலைகளின் கனத்தில், சட்டென்று ஒரு கணத்தில் எடுக்கப்படும் முடிவுகள் எப்படி வாழ்க்கையின் போக்கை திசை மாற்றுகின்றன? இவற்றையெல்லாம் இந்தப் புனைவு லேசாய்த் தொட முயற்சிக்கிறது. இதில் நிச்சயம் உண்மையின் துகள்கள் கலந்திருக்கின்றன. ஒரு சாதாரண புனைவுக்கு அசாதாரண உயிர்ப்பைத் தருவது அது மட்டும்தான்.
நான் கேள்விப்பட்ட, நடந்த சம்பவங்கள் கொடுத்த அதிர்வுகளின் ஆதார வரி என் மனதின் அடியுறைக்குள் ஒளிந்துகொண்டு எப்படியோ இதில் வெளிப்பட்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். அந்த அதிர்வுகளோடு சேர்ந்து, மனிதர்களின் அன்பும், காதலும், புரியாத உணர்வுகளும், நிஜ வலிகளும் இந்தக் கதையின் வரிகளுக்குள் புதைந்து கிடக்கின்றன. இதைப் படிக்கிறபோது அவைகளில் ஒரு பங்கையாவது லேசாக நீங்கள் உணர்கிறீர்கள் என்றால் இதை எழுதியதற்குக் கிட்டிய வெற்றியாக நான் நினைத்துக் கொள்வேன்.
இதை அன்று வெளியிட்ட கல்கி இதழுக்கும், இன்று மின் புத்தகமாக வெளியிடும் முன்னேர் பதிப்பகத்துக்கும், freetamilebooks.com ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும் நன்றிகள் பல.
இதை epub, Mobi, PDF ஆகிய வடிவங்களில் தரவிறக்கிப் படிக்க, பகிர: http://freetamilebooks.com/ebooks/tharunam/