Showing posts with label முன்னேர் பதிப்பகம். Show all posts
Showing posts with label முன்னேர் பதிப்பகம். Show all posts

தருணம் - குறுநாவல் - இலவச மின்னூல்

தருணம் என்ற தலைப்பிலான எனது குறுநாவல் இப்போது இலவச மின்னூலாக இங்கே கிடைக்கிறது.
1998 – ல் கல்கி வார இதழில் நான்கு வாரத் தொடராக வெளியான கதை இது. ஒரு சில காரணங்களுக்காக இதன் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. 2004–ல் கிழக்கு பதிப்பகம் வெளியீடாக வெளிவந்த ’மனதில் உனது ஆதிக்கம்’ என்ற எனது சிறுகதைத் தொகுப்பில் இந்தக் கதையும் கடைசியாக இடம் பெற்றிருந்தது.
அலைபேசிகளும், இணையமும், மின்னஞ்சலும் பிரபலமடைந்திராத ஒரு காலகட்டத்தில் இதை எழுதினேன். இதில் உலவும் மனிதர்கள் கொஞ்சம் நடைமுறை நிஜங்களும், கொஞ்சம் கற்பனைகளும் சரிவிகிதமாகக் கலந்து படைக்கப்பட்டவர்கள். எந்த ஒரு புனைவையும் முற்றிலுமாக கற்பனையிலிருந்தே வடித்தெடுப்பதென்பதை எந்த எழுத்தாளனும் செய்ய முடியாதுதான். அமோகமாகவோ, அவலமாகவோ ஒவ்வொருவருக்கும் தனித்துவமாக, ப்ரத்யேகமாக அமைந்துவிடுகிற வாழ்க்கை எவ்வகைத் தருணங்களையெல்லாம் அவர்களுக்குக் கொண்டுவந்து தருகிறது? எதை அவர்களிடமிருந்து இரக்கமில்லாமல் சட்டென்று பிடுங்கிச் செல்கிறது? சூழ்நிலைகளின் கனத்தில், சட்டென்று ஒரு கணத்தில் எடுக்கப்படும் முடிவுகள் எப்படி வாழ்க்கையின் போக்கை திசை மாற்றுகின்றன? இவற்றையெல்லாம் இந்தப் புனைவு லேசாய்த் தொட முயற்சிக்கிறது. இதில் நிச்சயம் உண்மையின் துகள்கள் கலந்திருக்கின்றன. ஒரு சாதாரண புனைவுக்கு அசாதாரண உயிர்ப்பைத் தருவது அது மட்டும்தான்.
நான் கேள்விப்பட்ட, நடந்த சம்பவங்கள் கொடுத்த அதிர்வுகளின் ஆதார வரி என் மனதின் அடியுறைக்குள் ஒளிந்துகொண்டு எப்படியோ இதில் வெளிப்பட்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். அந்த அதிர்வுகளோடு சேர்ந்து, மனிதர்களின் அன்பும், காதலும், புரியாத உணர்வுகளும், நிஜ வலிகளும் இந்தக் கதையின் வரிகளுக்குள் புதைந்து கிடக்கின்றன. இதைப் படிக்கிறபோது அவைகளில் ஒரு பங்கையாவது லேசாக நீங்கள் உணர்கிறீர்கள் என்றால் இதை எழுதியதற்குக் கிட்டிய வெற்றியாக நான் நினைத்துக் கொள்வேன்.
இதை அன்று வெளியிட்ட கல்கி இதழுக்கும், இன்று மின் புத்தகமாக வெளியிடும் முன்னேர் பதிப்பகத்துக்கும், freetamilebooks.com ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும் நன்றிகள் பல.
இதை epub, Mobi, PDF ஆகிய வடிவங்களில் தரவிறக்கிப் படிக்க, பகிர: http://freetamilebooks.com/ebooks/tharunam/