AI Art - செயற்கை நுண்ணறிவு ஓவியங்கள் - வரமா சாபமா?

2023 ஆரம்பித்ததிலிருந்து ChatGPT, AI Art போன்ற வார்த்தைகள் காதில் விழ ஆரம்பித்துவிட்டன. இதெல்லாம் ஏற்கெனவே பல வருடங்களாக ஆராய்ச்சியில் இருந்ததுதான் என்றாலும் மிகவும் பரவலாகப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இப்போதுதான் இறக்கிவிடப்பட்டிருக்கின்றன. ChatGPT போன்ற ஆப்களை மென்பொருள் துறையிலிருப்பவர்கள் இப்போது தமது அன்றாட வேலைகளுக்கு பயன்படுத்தத் துவங்கிவிட்டார்கள். மென்பொருள் நிரலெழுதுபவர்களுக்கு என்ன வேண்டுமென்று சொல்லிவிட்டால் அதுவே எழுதிக் கொடுத்துவிடுகிறது. மொபைல் ஆப்களுக்கான டிசைன்கள், வீடியோக்கள், இசைத் துணுக்குகள் என எதைக் கேட்டாலும் செய்துகொடுத்துவிடுகிறது. ஆனால் எல்லாமே ஆரம்ப நிலைகளில்தான். நான்கூட ChatGPT-ஐ மேலெழுந்தவாரியாக எனது சின்னச் சின்ன வேலைகளுக்கு உபயோகிக்க ஆரம்பித்துவிட்டேன். இந்தச் சமாச்சாரத்தை வைத்துப் பணம் சம்பாதிப்பது எப்படி என்றுகூட யூட்யூபில் வீடியோக்கள் குவிய ஆரம்பித்துவிட்டன.

இங்கே நாம் பார்க்கப் போவது குறிப்பாக AI Art எனப்படுகிற செயற்கை நுண்ணறிவு ஓவியங்கள் பற்றி. அதன் பிரச்சனைகள் பற்றி. இந்த மாதிரி மோஸ்தரில் ஒரு ஓவியம் வேண்டும் என்று டைப் அடித்து அதனிடம் சொல்லிவிட்டால் ஒரு சில விநாடிகளில் நாம் கேட்டதுபோல ஒரு அபாரமான ஓவியத்தை உருவாக்கி நம்மிடம் நீட்டுகிறது. அதுவும் பிரமிக்க வைக்கும் தரத்துடன், துல்லியத்துடன் (இணைப்புப் படங்களைப் பாருங்கள்). இது இப்போது உலகளாவிய ஓவியர்களின் வாழ்க்கையில் கிலி ஏற்படுத்தத் தொடங்கிவிட்டது.

செயற்கை நுண்ணறிவு என்பது அதற்கு நாம் அளிக்கும் விவரங்களையும், செய்திகளையும், கோப்புகளையும் அலசி, ஆராய்ந்து, கற்றுக்கொண்டு தொடர்ந்து அசுர வேகத்தில் தனது அறிவை விருத்தி செய்துகொண்டே போகிற சமாச்சாரம். இப்போது பரவலாயிருக்கும் AI Art என்கிற செயற்கை நுண்ணறிவுக் கலை 'Generative Art' என்றழைக்கப்படுகிறது. படங்கள், ஒலிகள் மற்றும் பிற ஊடகங்களை உருவாக்கும் அல்காரிதம்களால் நெய்யப்பட்ட இது கலைஞர்கள், ஓவியர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் மத்தியில் ஒரு வித ஆர்வத்தைக் கிளப்பியுள்ளது. செயற்கை நுண்ணறிவு இப்படியாக ஓவியங்களை உருவாக்க ஆரம்பித்துவிட்ட இந்தச் சூழல், கலையுலகின் கவனத்தைப் பெருமளவில் ஈர்த்துள்ளது. கொஞ்சம் வரவேற்பு. கொஞ்சம் எதிர்ப்பு. பாரம்பரிய ஓவியர்களின் படைப்புகளின் மேல் அது ஏற்படுத்தப் போகும் தாக்கத்தைப் பற்றிய கொஞ்சம் கேள்விகள் என்று இந்தச் சூழல் சூடுபிடித்துக்கொண்டிருக்கிறது.

இந்தச் செயற்கை நுண்ணறிவு ஓவியத் தளங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்று பார்ப்போம். இவைகள் எல்லையில்லா இணையத்திலிருந்து உருவப்பட்ட கோடிக்கணக்கான படங்களை அலசி ஆராய்ந்து, காயப்போட்டு, அதிலிருந்து தாமாகவே கற்றுக்கொள்ளும் பயிற்சிக்கு செயற்கை நுண்ணறிவு மாடல்கள் உட்படுத்தப்படுகின்றன. இதில் படைப்பாளிகளின் ஏற்கெனவே காப்புரிமை பெற்ற படங்களும் அடங்கும். அது பெற்ற ஓவிய அறிவின் தொகுப்பிலிருந்து நாம் கேட்பதற்கேற்ற விதத்தில், பதத்தில், கலவையில், சுவையில் மிக்ஸியில் போட்டு அடித்து பிரமாதமான ஒரு புது ஓவியமொன்றைச் சமைத்துக் கொடுக்கிறது. Stable Diffusion, Midjourney போன்ற எண்ணற்ற AI மாடல்கள் இதில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் சில சமயம் இதில் பிரபல ஓவியர்களின் பிரபல ஓவியங்கள் அடிப்படையாக (base) உபயோகப்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் இதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட ஓவியர்கள் வழங்கியிருக்கமாட்டார்கள். அவர்களுக்கு இதனால் எந்த லாபமும் இல்லை. ஆக இது ஒரு மாதிரியான அனுமதியற்ற திருட்டு மற்றும் அத்துமீறல் என்றே சொல்லலாம். இன்ஸ்பிரேஷன் என்றுகூட சொல்லித் தப்பித்துவிட முடியாது.

இம்ப்ரெசனிஸம், க்யூபிஸம், பாப் ஆர்ட் என் உங்களுக்கு எந்த ஸ்டைலில் ஓவியங்கள் வேண்டுமானலும் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் நீங்கள் கேட்டபடி உருவாக்கிக் கொடுத்துவிடுகிறது என்பது ஆச்சரியம்தான். செயற்கை ஓவியங்களை உருவாக்குவதற்கென்று நிறைய இணைய தளங்களும், செயலிகளும் புற்றீசல்கள் போல நாளுக்கு நாள் பெருக ஆரம்பித்துவிட்டன. அதில் சில fotor, playgroundai, inatantart.io, lexica, Dall-E இன்னபிற. இங்கே சென்று Prompt என்று கேட்கப்படும் இடத்தில் உங்களுக்குத் தேவையானவற்றை உள்ளிட்டு நீங்கள் விரும்பியபடி சில பல செட்டிங்ஸ்களை மாற்றி அமைத்தால் போதும். சுடச் சுட இன்ஸண்ட் ஆர்ட் தயார்.

தனித்துவமான AI Art ஓவியங்களைப் படைக்க கீழே கொடுத்திருப்பது போன்ற 'Prompt'-களைப் பயன்படுத்துகிறார்கள். (இப்போதைக்கு இதெல்லாம் நிபுணர்களுக்கு மட்டுமே புரியும்படி உள்ளது.)

Aztec Indian shot down,pain face, in a scenic dystopian environment, intricate, elegant, highly detailed, centered, digital painting, artstation, concept art, smooth, sharp focus, illustration, artgerm, tomasz alen kopera, peter mohrbacher, donato giancola, joseph christian leyendecker, wlop, boris vallejo, perfect composition, beautiful detailed intricate insanely detailed octane render trending on artstation, 8k artistic photography, photorealistic concept art, soft natural volumetric cinematic perfect light, chiaroscuro, award - winning photograph, masterpiece, oil on canvas, raphael, caravaggio, greg rutkowski, beeple, beksinski, giger.

சில பிரபல ஓவியர்கள் கூட இதைப் பயன்படுத்தி சவாலான, தனித்துவமான ஓவியங்களை உருவாக்க இயலுமா என்று முயன்று வருகிறார்கள். சில ஓவியர்கள் AI-உருவாக்கிய ஓவியங்களை அரை மனதாக ஏற்றுக்கொண்டாலும், மற்றவர்கள் இது பாரம்பரிய ஓவியக் கலை வடிவங்களை மதிப்பிழக்கச் செய்யக்கூடும் என்று கவலைப்படுகிறார்கள். ஒரு இயந்திரம் கலையை உருவாக்க முடியும் என்கிற விஷயம் மனிதர்களின் கலைப் படைப்புத்திறனின் மதிப்பு பற்றிய கேள்விகளை இங்கே முன்வைக்கிறது.

இணையத்திலிருந்து படைப்புகள் எடுக்கப்பட்டு, கலக்கிப் பிசையப்பட்டு உருவாக்கும் வகையில் பயிற்சியளிக்கப்படுகிறது என்கிற வகையில் தற்போதைய AI Art என்பது ஒரு நெறிமுறையற்ற விஷயம் என்பதில் உலகளாவிய படைப்பாளிகளுக்கு மாற்றுக் கருத்தில்லை. படைப்பாளிகளின் காப்புரிமை என்பதும் இங்கே காற்றில் பறக்கவிடப்படுகிறது. மேலும் இப்படி உருவாக்கப்படும் AI ஓவியங்கங்களின் காப்புரிமை யாருக்குச் சொந்தமானது என்பது குறித்தும் தெளிவின்மை நிலவுகிறது.

AI துணைகொண்டு உருவாக்கப்படும் ஓவியங்களுக்கு ஆழமில்லை என்றும், அது பாரம்பரிய ஓவியங்கள் ஏற்படுத்தும் உணர்வு அதிர்வலைகளையும், மனக் கிளர்ச்சிகளையும் இவை ஒருபோதும் ஏற்படுத்துவதில்லையென்றும் சில ஓவியக் கலைஞர்கள் வாதிடுகிறார்கள்.

ஓவியக்கலையில் நிபுணத்துவம் வாய்ந்த ஓவியர்கள் ஒரு நல்ல உன்னத படைப்பை உருவாக்க பல நாட்கள், ஏன் பல மாதங்கள்கூட எடுத்துக்கொள்ளும் அதே சமயத்தில் AI Art அதே போன்ற ஓவியங்களை வரைய எடுத்துக்கொள்ளும் நேரம் ஒரு சில நொடிகள் மட்டுமே. மேலும் செயற்கை நுண்ணறிவானது கற்றுக்கொள்ளுதலிலும், தன்னை மேம்படுத்திக்கொள்ளுதலிலும் காட்டும் மிதமிஞ்சிய வேகம் இன்னும் கொஞ்ச காலத்தில் ஓவியர்களுக்கு உலை வைத்து விடுமோ என்ற அச்சமும் லேசாக தலைதூக்கத் தொடங்கிவிட்டது.

ஆனாலும் இதிலுள்ள பெரிய சவால் இவ்வகை ஓவியங்களை அசலான, உண்மையான ஓவியப் படைப்புகளாகக் கருத முடியுமா என்பதுதான். செயற்கை நுண்ணறிவு அல்காரிதம்கள் என்பவை வெறும் கருவிகள்தான். அதன் படைப்புத் திறன் மனிதர்களின் படைப்புத் திறனை ஒரு போதும் நெருங்கமுடியாது என்பதும் சிலரின் நியாயமான வாதம்.

இருப்பினும், AI ஓவியங்களின் இந்த திடீர் எழுச்சியானது, ஓவியர்களுக்கு புதிய படைப்புச் சாத்தியங்களைக் குறித்து ஆராய்வதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கக்கூடும் என்றும் ஒரு சாரார் கருதுகின்றனர். இந்தச் செயற்கை நுண்ணறிவுக் கலையை பாரம்பரிய கலை நுட்பங்களுடன் இணைந்து பயன்படுத்தும்போது அது தற்கால ஓவியருர்களுக்கு வேறொரு தளத்தில் புதுமையான மற்றும் உணர்வுபூர்வமான கலப்பினப் படைப்புகளை (Hybrid creations) உருவாக்கும் வாய்ப்பைக் கொடுக்கக்கூடும் என்று கருதுபவர்களும் உண்டு.

ஆனால் செயற்கை நுண்ணறிவின் அல்காரிதங்கள் மனிதர்களைப் போல உணர்வுகளை அனுபவிக்க இயலாதவை. ஆக அவைகளால் உருவாக்கப்படும் படைப்புகள் உணர்வு ஆழம் இல்லாமல்தான் இருக்கும் என்று அநேகம் ஓவியர்கள் நம்புகிற அதே நேரம் இதன் சாத்தியங்கள் கற்பனைக்கெட்டாத வகையில் விஸ்வரூபமாக விரிந்துகொண்டே போகின்றன. எதிர்காலத்தில் ’எந்திரன் சிட்டி’ போல ஒரு ரோபோ கருத்தாழமிக்க, உணர்வு பூர்வ ஓவியமொன்றை AI Art Diffusion Model-களைக் கொண்டு வரைந்து கொடுத்தாலும் ஆச்சரியமில்லை.

புத்தக அட்டை வடிவமைப்பு, போஸ்டர்கள் போன்றவற்றிற்குத் தேவையான ஓவியங்களை அநேகம் பேர் இந்த முறையில் உருவாக்கிப் பயன்படுத்தத் துவங்கிவிட்டார்கள் என்று நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல்கள் கசிகின்றன. இப்போதைக்கு இவைகள் இலவசம் என்பதும் வசதி.

இந்த மாதிரி செயற்கை நுண்ணறிவு விஷயங்கள் இத்தோடு நிற்கப் போவதில்லை. ஒரு பக்கம் இது தொடர்ந்து வேகமாக பல்வேறு பரிமாணங்களை எடுத்துக்கொண்டேதான் இருக்கும். இன்னொரு பக்கம் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி வரமா, சாபமா என்கிற விவாதம் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும். பிரபஞ்சத்தின் நோக்கமே தன்னை எல்லா வகைகளிலும் விரிவுபடுத்திக்கொண்டே போவதும், படைத்துக்கொண்டே இருப்பதும்தான். அதன் திட்டங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். நடப்பதை பொருத்திருந்து கவனிப்போம்.



நீங்கள் எவ்வளவு ஸ்மார்ட் (SMART)?

புத்தாண்டுத் தீர்மானங்களைப் பற்றி ரகளையாய் பலவித மீம்ஸ்கள் உலாவரும் இக்காலகட்டத்தில் இதைச் சமூகத்துக்கு சொல்லலாம் என்று தோன்றியது. New year resolutions என்பது ஒரு கிளர்ச்சி மனநிலையில் தோன்றுவது என்பதால் நிச்சயம் ஒரு வாரத்திற்கு மேல் தாங்காது. உலகம் முழுவதும் மக்கள் திடீர் ஆரோக்கிய resolution எடுத்துவிட்டு ஜனவரி ஒண்ணாம் தேதி முதல் வாக்கிங் போக ஆரம்பிப்பார்கள். நடைபாதையெங்கும் கூட்டம் அம்மும். ஒரு வாரத்திற்கப்புறம் காற்று வாங்கும்.

Resolution எடுப்பதற்குப் பதிலாக 'SMART Goal Setting' - ஐ முயன்று பார்க்கலாம். நிறுவனங்களில் இது பிரபலம். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் இந்த வருடத்தில் இதைச் செய்யவேண்டும் என்று தீர்மானித்தால் அதை எப்படி அளப்பது (Measure) என்பதையும் வரையறுத்துவிடவேண்டும்.

உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு எழுத்தாளர் என்று வைத்துக்கொள்வோம். இந்த வருடம் சில சிறுகதைகள் எழுதவேண்டும் என்று தீர்மானிக்கிறீர்கள். இந்த 'சில' என்பதற்கு வரையறை கிடையாது என்பதால் இதன் மேலுள்ள கவனம் சிதறி கொஞ்ச நாட்கள் கழித்து இலக்கானது நீர்த்துப்போய்விடும். ஆகவே மார்ச் 30-க்குள் மூன்று சிறுகதைகள் என்று வரையறை செய்யவேண்டும். இந்த நம்பர்கள் மனதில் பதிந்து அதற்குத் தகுந்தார்ப்போல் நீங்கள் திட்டமிடத் துவங்குவீர்கள்.

உங்களுக்கு 'எடை குறைப்பது' என்பது இலக்கு எனில் 'ஜூன் மாத இறுதிக்குள் பத்து கிலோ குறைப்பு' என்பது அளக்கக் கூடிய வரையறை. அதை நோக்கி ஓடலாம். இப்படி எல்லாவற்றிற்கும் ஏதாவது எண்களை இணைத்துவிடுவது உங்கள் இலக்கை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு தொடர்சியாக அதை நோக்கி நகர முடியும். அதுவே ஒரு உத்வேகத்தையும் கொடுக்கும்.

நூறு நாட்கள், நூறு படம் வரைவது என்கிற சவாலை நான் சென்ற வருடம் ஏற்றபோது இதுதான் நிகழ்ந்தது. எதைச் செய்கிறோம், செய்துகொண்டிருக்கிறோம், இன்னும் அடைய வேண்டிய தூரம் என்ன என்கிற தெளிவை இது கொடுத்தது. 100% வெற்றியும் கிட்டியது.

இப்படி எல்லாவற்றிற்கும் எண்களை இணைத்துவிடமுடியாதுதான். உதாரணத்துக்கு 'குடும்பத்தினருடனான தனிப்பட்ட உறவை மேம்படுத்துவேன்" என்பதை நீங்கள் நோக்கமாகக் கொள்வீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இதை எப்படி அளக்கமுடியும்? இங்கே நம்பர்கள் உதவாது. குடும்பத்தினர் முகத்தில் கூடும் புன்னகைகளும், அதிகரிக்கும் இனிய பொழுதுகளும்தான் இதற்கான அளவை. இதைக் கவனித்துக்கொண்டே வரவேண்டும். இதுதான் கணக்கு!

SMART Goals பற்றித் தெரியாதவர்களுக்காக:
Specific, Measurable, Achievable, Relevant, and Time-Bound. என்பதன் சுருக்கமே SMART.
இலக்கானது குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாக, அளக்கக்கூடியதாக, அடையக்கூடியதாக, தொடர்புடையதாக, நேர வரையறைக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும்.

உதா: இந்த வருடம் சில சுற்றுலாத் தலங்களைப் பார்த்துவிடுவது என்பது என்பது உங்கள் இலக்கானால் அதை இப்படி எழுதி வையுங்கள்:

2023 டிசம்பர் 31-க்குள் மூன்று மாதத்திற்கு ஒரு இடம் என்கிற கணக்கில், தென்னிந்தியாவில், வாகேமான், கூர்க், பாண்டிச்சேரி, மைசூர் ஆகியவைகளை பார்த்துவிடவேண்டும். இதற்கான பட்ஜெட் இருக்கிறதா, உடல்நிலை, காலநிலை, குடும்ப சூழ்நிலை ஒத்து வருமா என்பதெல்லாம் Achievable வகையில் வரும். மற்றதெல்லாவற்றையும் உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

நான் இந்த வருடத்திற்கு இப்படித்தான் Goal போட்டு வைத்திருக்கிறேன். சுவாரஸ்யமாக இருக்கிறது. நீங்களும் இதை முயன்று பார்க்கலாம்.

நான் சாஃப்ட்வேர் ப்ரோக்ராமிங் கற்றுக்கொண்டது எப்படி?

ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால் சமூகத்திற்கு ‘சாஃப்ட்வேர் ப்ரோக்ராமிங்’ கற்றுக்கொடுக்க தமிழில் ஒரு புத்தகமெழுதினால் என்ன என்று எழுத்தாளர்கள் என்.சொக்கனும், சத்யராஜ்குமாரும் விவாதித்துக்கொண்டிருந்த கட்டத்தில் என்னையும், காஞ்சி ரகுராமையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ள முடிவு செய்தார்கள். காஞ்சி ரகுராமாவது 100% அக்மார்க் சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட் ஆசாமி. நான் எதற்கு சம்பந்தமில்லாமல் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். இதில் என்னுடைய பங்களிப்பை அறிந்துகொள்ள சொக்கன் எனக்கு ஒரு மின்னஞ்சல் எழுதினார். அதற்கு நான் எழுதிய பதில் இது.ஜிமெயில் எதையோ தேடிக்கொண்டிருக்கும்போது கண்ணில் பட்டதை இங்கே பதிகிறேன்.

*****************

அன்புள்ள சொக்கன்,

யாதும் நலம்.

உங்கள் ஐடியா கண்டிப்பாக சிரிக்கத் தகுந்த பொருளல்ல. மாறாக ப்ரோக்ராமிங் கற்றுக் கொள்ள ஆசைப்படுகிற ஆனால் அதை இங்கிலீஸில் படித்து மண்டை உடைத்துக் கொண்டவர்களுக்கு (கொள்பவர்களுக்கு) பயனுள்ள வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்கிற ஆசையின் உன்னத வெளிப்பாடுதான் என்று நினைக்கிறேன்.

நான் ப்ரோக்ராமிங் கற்றுக்கொள்ள முனைந்தபோது அதை எனக்குச் சொல்லித்தர லைஃப்டைம் ரிஸ்க் எடுத்து தன் (என் அல்ல) நேரத்தை வீணடித்தவர் சத்யராஜ்குமார். சில நேரங்களில் என் மக்கு மண்டையில் நறுக் என்று குட்டவேண்டும் என்கிற கோபத்தை அடக்கிக் கொண்டு எப்படி எனக்கு பொறுமையுடன் சொல்லித்தர முயற்சித்தார் என்று மிகுந்த ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஆனால் கடைசியில் விழலுக்கிறைக்கிற நீர் என்று ஒரு வழியாக புரிந்துகொண்டார் என்று நினைக்கிறேன். ஏன் ப்ரோக்ராமிங் என்பது எனக்கு அலர்ஜியாகவே இருந்தது, இருக்கிறது என்பதற்கு பலவாறான சாக்கு போக்குகள் வைத்திருக்கிறேன். எப்போதோ எனது வம்சாவளியில் யாரோ ஒருவர் கிரியேட்டிவ் ஆக இருந்து தொலைத்து அது வழி வழியாக ஜீன்களில் பதியப்பட்டு எக்குத்தப்பாக எனக்கு வந்து சேர்ந்துவிட்டது என்கிற தப்பான மிதப்பு. கிரியேட்டிவ் ஆன ஆட்களுக்கு வலது மூளையில் சோம்பேறி நியூரான்கள் ஜாஸ்தி. ப்ரோக்ராமிங் சமாச்சாரத்தையெல்லாம் அரைக்கண்ணைத் திறந்துகூடப் பார்க்காது என்பது அவ்வகையான சாக்குகளில் சில. (என் தொழில் கிராஃபிக் டிசைன் சம்பந்தப்பட்டது என்பது தங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்).

ஆனால் வேறு வழியில்லாமல் HTML மற்றும் CSS-ம் கற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. ஏரோப்ளேன் ஓட்டுவதைவிட மூன்று சக்கர சைக்கிள் ஓட்டுவது மிக எளிதல்லவா? ஆனால் ஜாவாஸ்கிரிப்ட் முயற்சி செய்து பார்த்து அது கோவக்காய் பொரியல் மாதிரி பிடிக்காமலேயே போய்விட்டது.

ஆனால் விதி வேறொரு உருவத்தில் வந்து விளையாடிப் பார்த்தது. கிராஃபிக் டிசைன் மென்பொருள்களில் ஒன்றான Adobe Flash-ல் அனிமேஷன் என்பது Action Script சம்பந்தபட்டது என்பதால் கொஞ்சமேனும் அதைக் கற்றுக் கொள்ளவேண்டிய நிர்பந்தம். Basic லெவலில் ஜிகினா வேலைகள் செய்து ஒப்பேற்றலாம். ஆனால் வேறு தளத்தில் அதை ஆழமாகப் படித்தே ஆகவேண்டியிருந்தது. அதற்கு basic programming அறிவு தேவையாயிருந்தது.

இங்குதான் அட்டாச்டு டாய்லட்-காரர் வந்தார். அவர் பெயர் ரகுராம். என் அலுவலகத்தில் டெக்னிகல் ஆர்க்கிடெக்டாக பணி புரிபவர். வாழ்க்கையில் software evangelist ஆக வேண்டுமென்ற லட்சியத்தோடு அலைகிற ஆசாமி. 10 நாளில் என்னை ப்ரோக்ராமிங் கற்றுக்கொள்ளவைக்கிறேன் பார் என்று கங்கணம் கட்டிக்கொண்ட வேகத்தில் தோல்வியைத் தழுவியவர். இதற்காக Action Scripting 2.0 என்ற புத்தகத்தை வாங்கின காசுக்கு சஞ்சீவனத்தில் நான்கு தடவை ராஜகீயச் சாப்பாடு சாப்பிட்டிருக்கலாம் என்று சொன்னேன். இப்போதும் என்னை விடாமல் ஒரு ப்ராஜக்டுக்காக Microsoft Expression Blend-ல் XAML Programming படி என்று ஆயாசத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ப்ரோக்ராமிங் என்பது நீங்கள் சொன்னமாதிரி என்னை நெளிய வைக்கிற அய்ட்டமாகவே இருக்கிறது. அடிப்படையிலேயே எங்கேயோ தப்பு நிகழ்ந்துவிட்டது. ஆனால் எப்போதும் ஒரு Tech Savvy ஆக இருக்கிற (அல்லது காட்டிக்கொள்கிற) ஆசை எனக்கு எப்போதும் இருக்கிறது. புதிய டெக்னாலஜிகள் பற்றி இணையத்தில் மேய்வதும், அறியாத பயல்களிடம் அவை பற்றி (அவர்களின் கொட்டாவியை பொருட்படுத்தாது) சிலாகித்து ஜல்லியடிப்பதும் எனக்கு பொழுது போக்கு.

நிறைய டெக்னிக்கல் சமாசாரங்களைச் சொல்லிக்கொடுத்து என்னுடைய ஞானக்கண்ணில் அரைவாசி திறந்துவைத்த பெருமை சத்யராஜ்குமாரையே சேரும். நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு மென்பொருள் இமயம். புதிதாய் ஒரு மொழி வந்தால் (லெட்ஸ் ஸே ஃபர் எக்ஸாம்பிள் : C# அல்லது dot Net) அதற்கான புத்தகத்தை சென்னை ஈஸ்வர் புக் ஸ்டோரிலோ லேண்ட் மார்க்கிலோ வாங்கிவந்து ராஜேஷ்குமார் புத்தகம் மாதிரி கடகடவென்று விடிவதற்குள் படித்து முடித்து தூக்கிப்போட்டுவிடுவார். மறுநாள் அவருக்கு டாட் நெட் தெரிந்திருக்கும்). இளம் தம்பதிகளுக்காக பிரத்யேகமாக Safe Period Indicator ப்ரோக்ராம் ஒன்றை அவர்.... சரி அதை பிறகு சொல்கிறேன்.

ஆக “என் மூளைக்கு எட்டலை” என்று உதறித்தள்ளியவர்களில் நானும் ஒருவன். கிராஃபிக் டிசைன் என்பதுடன் ப்ரோக்ராமிங் சரிவிகிதத்தில் கலக்கும்போது கிடைக்கிற அட்வாண்டேஜ் கேரியர் கிராஃபில் எங்கேயோ கொண்டுபோய் விட்டிருக்கும். நான்கூட லெக்ஸிங்டன் குதிரை ரேஸ் கம்பெனிக்காக ஃப்ளெக்ஸ் ப்ரோக்ராமில் விளையாடியிருக்கலாம். ஆக ப்ரோக்ராம் அடிப்படைகளை தோளில் கைபோட்டுக்கொண்டு நித்யரஞ்சிதமாகச் சொல்லிக்கொடுக்கிற ஒரு புத்தகம் இல்லை என்பது ஒரு குறைபாடுதான். கொஞ்சம் நாற்றமடித்தாலும் டாய்லெட் உதாரணத்தால் வேரியபிளுக்கு விளக்கம் நடுநிசியில் எழுப்பிக் கேட்டாலும் சொல்லமுடிகிறதல்லவா. இதை சரியான இடத்தில் சரியான சமயத்தில் நீங்கள் யோசித்திருப்பது புரிகிறது. சுஜாதாவின் தலைமைச் செயலகம், ஏன் எதற்கு எப்படியெல்லாம் ஒரு பாமரனுக்கும் கூட நிறைய விஷயங்களை எப்படி எளிதில் புரியும்படி விளக்கியதோ அப்படி. சம்சாரத்திலிருந்து மின்சாரம் எடுக்க முடியுமா என்கிற கேள்விக்கு “முடியாது. ஆனால் சினிமாவுக்குப் போய்வந்து நைலக்ஸ் புடவையைக் களையும் போது ஒரு மாதிரி சரசரவென்று சத்தம் வரும். அதுவேண்டுமானால் நிகழலாம்.” என்று Static current என்பதை ரகளையான உதாரணத்தோடு சொல்லிக்கொடுத்திருப்பார்.

மனப்பாடமாக டெக்ஸ்ட் புக் எழுதி விற்றுத் தாக்குகிற புத்தகங்களிலிருந்து விலகி வித்தியாசமாய் இந்தமாதிரி எழுதலாம்தான். நல்ல ஐடியா. என்னை மாதிரி ப்ரோக்ராமிங்கை வெறுத்தவர்களுக்கும் ஒரு புதிய சுவாரஸ்யத்தை உண்டு பண்ணும் என்றுதான் தோன்றுகிறது.

என்னுடைய இந்த மின்னஞ்சல் வேறு உத்திகள் உதாரணங்கள் எதுவுமில்லாமல் சுய எள்ளலுடன் கூடிய புராணமாக இருப்பதையும் உணர்கிறேன். சும்மா ஒரு ஆரம்பநிலை உரையாடல் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

சித்ரன்

பி.கு: இந்த முயற்சி ஒரு சில அடிகள் முன்னேறி பிறகு நின்றுபோய்விட்டது.

நார்மனின் கதவு

”சாராபாய் ஹால் எங்க இருக்கு?” சென்ற ஞாயிற்றுக்கிழமை IIT Madras Research Park வளாகத்திற்குள் குறைந்தபட்சம் ஐந்து செக்யூரிட்டி ஆசாமிகளிடமாவது இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பேன். கல்லூரி மாணவர்களுக்கு ஒரு வகுப்பெடுப்பதற்காக அங்கே சென்றிருந்தேன். மேற்படி கேள்விக்கான பதிலாக குணா படத்தில் ”பார்த்த விழி பார்த்தபடி” பாடல் துவங்கும்முன் கமலஹாசனுக்கு எல்லோரும் அபிராமி இருக்கும் திசையைக் கை காட்டுவார்களே, அந்த மாதிரி கை காட்டினார்கள். ஆனால் வெவ்வேறு திசைகளில்.

அவர்கள் கை நீட்டலைப் பின்பற்றி முதலில் ஒரு கட்டிடத்தை எட்டிப்பார்த்து அங்கே சாராபாய் இல்லை என்று தெரிந்து கொண்டு, பிறகு அடுத்த கட்டிடத்திற்குள் கண்ணாடிக் கதவைத் திறந்து பார்த்தால் அது ஃபுட் கோர்ட். பிறகு எதிர்பக்கமிருக்கும் கட்டிடத்திற்குச் சென்று அங்கு வாசலில் வீற்றிருக்கும் வட இந்தியக் காவலாளியிடம் கேட்டால், ”மெயின் எண்ட்ரன்ஸ் ஜாயியே” என்றான். எல்லா வாசல்களும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்க எது மெயின் எண்ட்ரன்ஸ் என்பதில் குழப்பமாயிருந்தது. ஒரு வழியாக கட்டிடத்தின் இன்னொரு பகுதியில் ’சாராபாய்’ என்று போர்டு போட்ட அந்தக் ஹாலை கண்டுபிடித்து விட்டேன். போர்டானாது ஒருவர் கண்ணுக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதில் சிரத்தையெடுத்திருந்தார்கள். ஒரு ஜாமெட்ரி பாக்ஸ் சைஸ்தான் இருக்கும். இந்த இடத்தை அடைய ஒரு இருபது நிமிடங்களாவது தேடி நடந்திருப்பேன். என்ன காரணம்? 1) வளாகத்தில் எந்த இடத்திலும் எது எங்கே இருக்கிறது என்ற அறிவிப்புப் பலகைகளோ அம்புக்குறிகளோ இல்லை. 2) அங்கே வேலை செய்யும் வட இந்திய செக்யூரிட்டிகளுக்கு சாராபாயைத் தெரிந்திருக்கவில்லை.

சாராபாய் ஹாலுக்குள் நுழைய இரண்டு கதவுகள் இருந்தன. முதலாவது ஒரு கண்ணாடிக் கதவு. இரு புறமும் திறக்கலாம். கைப்பிடியைப்பிடித்து முன்பக்கம் இழுக்கலாம். அல்லது எதிர்ப்பக்கமாகத் தள்ளலாம். அதைத் தள்ளித் திறந்து உள்ளே சென்றேன். மூன்றடிக்கு அப்புறம் இரண்டாவது கதவு. மரத்தால் செய்யப்பட்டது. அதன் கைப்பிடியைப் பிடித்து முதலாவது கதவைத் தள்ளின மாதிரியே தள்ளினேன். திறக்கவில்லை. என் பக்கமாக இழுத்தேன். திறக்கவில்லை. பிறகு கைப்பிடியை கீழே திருப்பி உள்பக்கமாகத் தள்ளினேன். திறக்கவில்லை. மீண்டும் என் பக்கமாக இழுத்ததும் திறந்தது. இந்த என் தடுமாற்றத்தை ஏற்கெனவே ஹாலுக்கு வந்தமர்ந்திருந்த முத்துக்குமார் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டிருந்தார். இருவரும் ஒருவரையொருவர் பார்த்ததும் “நார்மன்ஸ் டோர்” என்று சொல்லிக்கொண்டோம்.

அதன் பிறகு ஹாலுக்கு வந்து சேர்ந்த பிற மாணவர்களும் அந்தக் கதவைத் திறக்கத் தடுமாறுவதை நாங்களிருவரும் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தோம். நாங்கள் மாணவர்களுக்கு எடுக்கச் சென்ற வகுப்பு, பயனர் அனுபவ வடிவமைப்பு (User Experience Design) பற்றியது. அந்த வகுப்பிற்கான எங்கள் பவர் பாயிண்ட் ப்ரசண்டேஷனில் “நார்மன்ஸ் டோர்” என்று ஒரு தலைப்பும் இருந்தது. அதுவே எங்கள் புன்னகைக்குக் காரணம். இந்தக் கதவு அனுபவத்தைப் பற்றி மாணவர்களிடமே கேட்டு இந்தத் தலைப்பு சம்பந்தமான விஷயத்தை ஒரு அரை மணிநேரம் ஓட்டினோம். இது நாம் உபயோகிக்கிற ஒவ்வொரு பொருளிலும் அனுபவிக்கிற விஷயம்தான். நார்மன் ”The design of everyday things" என்ற புத்தகத்தின் ஆசிரியர். கதவுகளைப் பற்றி அவர் என்ன சொல்கிறார் கேளுங்கள்.


டபுள் டெக்கர் டீஸண்ட் ஃபேமிலீஸ்

"ஹவ் டேர் யு டாக் லைக் திஸ்?" என்ற ஒரு கர்ஜனைக் குரல் கேட்டு திடுக்கிட்டு காதிலிருந்த ஹெட்ஃபோனைக் கழற்றினேன். பெங்களூர்-சென்னை டபுள் டெக்கர் எக்ஸ்ப்ரஸ். குரல் வந்த திசையில் உயரமாய், அகலமாய் பவுன்ஸர் போன்ற தோற்றத்துடன் ஒரு இளைஞன். அந்தக் கேள்வி வீசப்பட்டது அவனது முன்சீட்டில் உட்கார்ந்திருந்த ஒரு 35 வயது மதிக்கத்தக்க பாப் தலை யுவதியிடம்.
குரல் தாக்குதல் தொடர்ந்தது. பங்காருப் பேட்டையிலிருந்து சென்னைக்கே கேட்கும் போல கத்தினான். "டு யு திங் வி ஆர் ஃப்ரம் அன் இல்லிட்ரேட் ஃபேமிலி? ஹவ் கேன் யு ஆஸ்க் திஸ் கொஸ்ஸன் டு மை ஃபாதர் யு @#₹%&? வாட் இஸ் யுவர் ஏஜ்? வாட் இஸ் மை ஃபாதர்ஸ் ஏஜ்? அறிவில்ல ஒனக்கு? அட்ச்சி பல்லெல்லாம் ஒட்சிர்வேன். ஹவ் கேன் யு டெல் லைக் திஸ் டு மை ஃபாதர் ஹூ இஸ் ஃப்ரம் அ வெரி டீசண்ட் ஃபேமிலி அண்ட் ஆல்ஸோ வித் அ ரெஸ்பெக்டபிள் ப்ரொஃபெஸ்ஸன். எச்ச நாயி!. யு லுக் லைக் அ பிட்ச் ஃப்ரம் அ லோக்கல் இன் சென்னை." - உச்சஸ்தாயியில் கத்தினான்.
அந்தப் பெண்மணி சக பயணிகளைப் பார்த்து, "என்னங்க இவ்ரு இப்டி பேஸரார்? ஐ ஜஸ்ட் ஆஸ்க்டு ஹிம் - கொஞ்சம் நேரா உக்காருங்க, மேல படுது-ன்னு! இது தப்பா? வாட்ஸ் ராங் இன் தட்?"
கடோத்கஜ இளைஞன் இம்முறை மும்பைக்கே கேட்கும்படி இரைந்தான். "வாட் த ஃப்.. நீ எப்டி கேக்கலாம்? அவருக்கு அம்பத்து மூணு வயசு." இந்த சண்டையில் மேலே இடித்ததாகச் சொல்லப்பட்ட அவன் தந்தை "என்னப் பாத்தா உனக்கு எப்டித் தெரியுது? நான் என்ன பொறுக்கியா? யு ஸூட் மைண்ட் யுவர் வேர்ட்ஸ்."
போனை எடுத்துக் காதில் வைத்தார். கடோத்கஜன் "கமிஷனர கூப்டுங்கப்பா.. இவள சும்மா விடக்கூடாது.." இதை மூன்றாம் உலகப்போராக மாற்றியே தீருவது என்கிற தீர்மானத்துடன் அவனும் ஃபோனை எடுத்துக் காதில் வைத்தான்.
அப்பனும் மகனும் உறுமிக்கொண்டே கோச்சுக்குள் வேறு பக்கம் நகர்ந்து போனார்கள். அவர்கள் அந்தப்பக்கம் போனதும் இந்த அம்மணி நியாயம் கேட்டுக் கத்த ஆரம்பித்தாள். உடனே அந்தப் பையனின் அம்மா அவளிடம் வந்து ஏதோ காதில் சொல்ல, பாப்தலைப் பெண்மணி "நீங்க எதுக்கூ என் கால்லே வுளறீங்க. உங்க பைய்னை ஒழுங்கா வளக்கப் பார்ங்க. எப்டி இண்டீஸண்டா கத்றான் பாருங்க.. அதுவும் இன் சச் அ பப்ளிக் ப்ளேஸ்.. ஸ்கவ்ண்ட்ரல்.."
பையனும் அப்பனும் காதில் ஃபோனோடு திரும்பவும் சம்பவ இடத்துக்கு பரபரப்பாக வந்தார்கள். இருவர் கண்களிலும் கனல் பறந்தது. அந்தப் பெண்மணியை நெருப்பாகப் பார்த்தார்கள். பிறகு மீண்டும் ஃபோனில் ரயில்வே போலீஸ், கமிஷனர், ஐஜி, ஹை கோர்ட் ஜட்ஜ், 108 ஆம்புலன்ஸ், ஃபயர் சர்வீஸ், கமாண்டோ படை, சீ.பி.ஆர்.எஃப், சி.பி.ஐ, ஆளுங்கட்சி, எதிர்கட்சி, இடைக்கால முதல்வர், பிரதம மந்திரி, ராணுவ அதிகாரிகள், குடியரசுத் தலைவர், எஃப்.பி.ஐ, யு.எஸ். நேவி ஸீல், இஸ்ரேல் உளவு அமைப்புகள், அவன் ஆஃபிஸ் வாட்ச்மேன் அனைத்தையும் முயற்சி செய்துவிட்டு லைன் கிடைக்காமல் 'டிடிஆரை கூப்டுப்பா..' என்றான் கடைசியாக. "ஐ வாண்ட் திஸ் ப்ளடி லேடி டு கெட் டவுன் இன் தி நெக்ஸ்ட் ஸ்டேஷன். ஸோ தட் எவ்ரிபடி இன் திஸ் ட்ரெய்ன் கேன் கண்டின்யூ திஸ் ஜர்னி இன் அ பீஸ்ஃபுல் மேன்னர். அதர்வைஸ், நான் இவளப் புடிச்சு வெளில தள்ளி கொன்னுட்டு ஜெயிலுக்குப் போய் பத்தே நாள்ள வெளில வந்துருவேன். பாக்றீங்களா.. பாக்றீங்களா? யாருகிட்ட? இவ அத்தினி பேரு முன்னாடியும் எங்கப்பாகிட்ட மன்னிப்புக் கேக்கணும். இல்லேன்னா நான் சும்மா விட மாட்டேன். யு ஆல் டோண்ட் நோ ஹூ ஐ ஏம். ஐ வில் ஷோ நவ்.. ரைட்ட்ட் நவ்.."
அர்னாப் கோசாமியிடம் ட்ரெய்னிங்க் எடுத்ததுபோல அவன் குரல் டெஸிபல் எக்கச்சக்கமாக உயர்ந்து ரயிலின் மேற்கூரை பிளக்கும் அபாயம் எழுந்தது. அவன் ஓங்கி அடித்தால் ரயில் தடம் புரண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
"தம்பி.. விடுப்பா.. கீப் கொயட் ஃபார் சம் டைம். தெரியாம ஏதோ சொல்லிட்டாங்க.. விடு விடு.. போய் உக்காரு" என்ற ஒருவரை.. "உங்கப்பாவ யாராச்சும் தப்பா பேசினா கேட்டுட்டு சும்மா இருப்பீங்களா?" என்று கேட்டான். கேட்டவர் காதில் நிச்சயம் ஓட்டை ஏற்பட்டிருக்கும். சத்தம் அப்படி!
பாப்தலை கோபம் தலைக்கேறி திடீரென்று "அ யம் காலிங் த போலீஸ் நவ்.."என்று அறிவித்தாள். போனை எடுத்தாள்.
" கூப்டுறீ.. பொறம்போக்கு.. வரச் சொல்லு.. நாங்க இங்கதான் இருப்போம். பெரியவங்ககிட்ட எப்டிப் பேசணும்னு தெரியாத எச்சக்கல.." துணைக்கு அப்பங்காரனும் சேர்ந்துகொண்டார்.
நான் பொறுமையிழந்து.."ப்ரதர்.. விடுங்க.. போய் உக்காருங்க. ஒரு சின்ன விஷயத்துக்கு ஏன் இப்டி கோபப்படறீங்க... அமைதியா இருங்க.." என்றேன். அவன் என்னைப் பார்த்த பார்வையில் 'உன்னையும் ரயிலிலிருந்து தள்ளி விடுவேன்" என்கிற பதில் இருந்தது.
தலையில் கைவைத்து உட்கார்ந்திருந்த அவன் அம்மா எழுந்து இருவரிடமும் "போதும் விடுங்க.. ப்ளீஸ்.." என்று கும்பிட்டுக் கெஞ்ச, பவுன்ஸர் பாய் கண்களை உருட்டி "அம்மா.. இது சும்மா வுட வேண்டிய பிரச்னயில்ல. நீ பேசாம உக்காரு.. அயம் டாக்கிங் டு அ தேர்ட் ரேட்டட் பன்னாட ஹூ ஹேஸ் டிஸ்ஹானர்ட் யுவர் ஹஸ்பண்ட் இன் அ பப்ளிக் ப்ளேஸ்.. மைண்ட் இட்... நீ இப்டி அவளுக்கு வக்காலத்து வாங்கினா மிதிச்சுட்டு போய்ட்டே இருப்பா..."
அவனை அடங்கி உட்காரச் சொல்லி ரயிலுக்குள் கண்டனக் குரல்கள் எழுந்தன. அவனோ 'அவள எங்கப்பாட்ட மன்னிப்புக் கேக்கச் சொல்லுங்க..' என்கிற ஒரே தீவிரவாதக் கோரிக்கையை திரும்பத் திரும்ப முன்வைத்துக் கொண்டிருந்தான்.' இந்தக் களேபரத்துக்கு நடுவில் "பஜ்ஜீ.. சூடான வடேய்ய்ய்ய்.." என்று இடைபுகுந்தவனுக்கு வழிவிட்டு .."நீங்க போங்கண்ணா.. போய் வ்யாபாரத்தப் பாருங்க.." என்றுவிட்டு ஆடியன்ஸிடம்.. "ஹவ் டேர் ஷீ.. " என்று மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பித்தான்.
ஒரு மிகப்பெரிய கோர சம்பவம் இந்த ரயிலில் நிகழப் போவதை அறியாமல் என் பக்கத்து இருக்கைக்காரர் மொபைலில் 'சங்கிலி புங்கிலி கதவத் தொற' பார்த்துக் கொண்டிருந்தார். எதிர் ஸீட்டு ஜடாமுடி இளைஞன் சரசர சத்தத்தோடு "லேஸ்' பாக்கெட்டைக் காலி செய்துகொண்டே என்னிடம் 'அயம் ப்ரெத்தி ஸ்ஸ்ஸ்யூர் தத் தீஸ் கைஸ் கான்னா எந்தத்தெய்ன்ன்ன் அஸ் ஃபார் நெக்ஸ்த் தூ அண்த் ஹாஃப் அவஸ்.." என்றான்.
"பட்டப் பகலில் ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிட்டு பெண்.." என்று நான் தினத்தந்தி தலைப்பு யோசித்துக் கொண்டிருக்கும்போது டிடிஆர் வந்தார். என்ன ப்ரச்ச்னை என்று குசுகுசுவென்று கேட்டார். அவனது கத்தலை அவர் லாகவமாகக் கையாண்டார். அந்தப் பெண்மணியைப் பார்த்து "நான் உங்களுக்கு வேற ஸீட் தர்ரேன்.. வாங்க" என்று பக்கத்து கம்பார்ட்மெண்டுக்குக் கூட்டிப் போனார். கடைசிவரை மன்னிப்பெல்லாம் கேட்காமல் "பாஸ்டர்ட்ஸ்.." என்று சன்னமாய் சொல்லிக்கொண்டே டிடிஆரின் பின்னால் போனாள். தடியன் தொடர்ந்து கத்திக்கொண்டேயிருந்தான்.
அவள் போன திசையைப் பார்த்து ஹிஸ்டீரியா வந்தவனைப் போல "ஐ வில் கில் யூ" என்று கத்தினான். கொஞ்ச நேரத்தில் குரல் தளர்ந்து இருக்கையில் விழுந்தான். பிறகு ரயிலின் சப்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. நான் எழுந்து பாத்ரூம் போகும் வழியில் அவனைப் பார்த்தேன். வாயைப் பிளந்து தூங்கிக் கொண்டிருந்தான். அந்நியனிலிருந்து அம்பியாக மாறியிருந்தான். ஒரு கருட புராண கபீம் குபாம் தவிர்க்கப்பட்ட நிம்மதியுடன் அனைவரும் தத்தம் மொபைல்களில் மீண்டும் அமிழத் தொடங்கினார்கள்.