லைவ்

இதய பலவீனமுள்ளவர்களும் குழந்தைகளும் பின்வரும் காட்சிகளைப் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு டி.வியில் அதைக் காட்டினார்கள். தீயின் நாக்குகள் தின்று உமிழ்ந்த உயிர்கள் கரித்துண்டுகளாய் குவிந்துகிடப்பதும், பிஞ்சு மலர்களின் சாம்பல் காற்றில் பறப்பதும், கும்பகோணம் துன்பகோணம் ஆன காட்சிகள். அது இதய பலமுள்ளவர்களையும் பலவீனமாக்கிவிட்டது என்பதில் சந்தேகமில்லை. 'நெஞ்சே வெடித்துவிடும் போல் இருந்தது' என்று சாதரணமாகக் கதைகளில் எழுதுவதை உண்மையாய் உணர்ந்தது அதைப் பார்த்தபோதுதான்.

இந்த மாதிரி உலகின் மகா துயரங்களையும் கோர சம்பவங்களையும் சதுரக் காட்சிகளாய் லைவ் ரிலே அல்லது ரெகார்ட் பண்ணப்பட்ட கோப்புக் காட்சிகள் என்று வரவேற்பரைக்கு முன் கொட்டத் துவங்கிவிட்டது டி.வி சானல்கள். அதை பார்த்துப் பார்த்து அன்றாட வாழ்க்கையின் பரபரப்பை இன்னும் கொஞ்சம் அதிகரித்துக் கொண்டு தவித்துக் கிடக்கிறோம்.

முன்பு ஒரு முறை தர்மபுரியில் ஒரு பஸ்ஸுக்குள் மூன்று மாணவிகள் மரண ஓலங்களுடன் எரிவது பல கோணங்களில் காட்டப்பட்டது. 'ஐயோ' என்று நெஞ்சு பதைக்கப் பார்த்ததைத் தவிர நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்தச் சூழ்நிலையில் படமெடுத்த காமிராக்காரருக்கு ஏன் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடத் தோன்றவில்லை என்று இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

இதேபோல் கேரளாவில் ஒரு மதம் பிடித்த யானை தன் பாகனை துதிக்கையால் தூக்கி வீசிப் பந்தாடி கீழே போட்டு உருட்டி காலால் நசுக்கிச் சாகடித்ததை நீங்கள் நிச்சயம் பார்த்து திடுக்கிட்டிருப்பீர்கள். அதையும் மறக்காமல் திரும்பத் திரும்ப எல்லா செய்தி நேரத்தின் போதும் மறுஒளிபரப்பு பண்ணி அடிவயிற்றைப் பிசைய வைத்தார்கள். பார்த்து இரண்டு வேளை சோறு தொண்டைக்குள் இறங்கவில்லை.

அதே மாதிரி ஒரு மனநோயாளி ஒரு கோயில் பணியாளரை தெப்பக்குளத்துக்குள் பார்ப்பவர்களின் கண் முன்னே மூழ்கடித்துக் கொன்ற கொடூரக் காட்சி. காமிரா சுழன்று அதை விலாவாரியாய் பதிவு பண்ணி நமக்குக் காட்டியது. இது மாதிரி இன்னும் நிறைய. 'ஐயோ கொல பண்றாங்க' என்ற ஓலத்துடன் கலைஞரை கைது செய்யும் காட்சியை ஐந்து நிமிடங்களுக்கொருமுறை ஒளிபரப்பி இயல்பு வாழ்க்கையை ஸ்தம்பிக்கச் செய்தது ஒரு சேனல். பார்லிமெண்டில் நுழைந்த தீவிரவாதிகள் தூண்களுக்குப் பின் மறைந்து சுடும் காட்சியும் இறுதியில் புல்லட் துளைக்கப்பட்ட அவர்களின் உடல்களையும் பார்த்தோம். மும்பை இண்டியா கேட் அருகே வெடிகுண்டு விபத்தில் சிதறினவர்கள். கோவை தொடர் வெடிகுண்டு விபத்துக்களின் நேரடி ஒளிபரப்பு. ராஜீவ் காந்தி கொலை, அஸ்ஸாம் புயல் சேதம், ஏர்வாடி தீ விபத்து, ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட குஜராத் நிலநடுக்கம், பாலங்களில் ரயில் பெட்டிகள் தடம்புரண்டு கவிழந்து தொங்குவது. மெரீனா காந்தி சிலையருகே நடந்த பேரணியில் நிகழ்ந்த கலவரத்தில் ஒருத்தனை ஓட ஓட விரட்டி நடுமுதுகில் வெட்டுகிற காட்சி. குஜராத் ரயில் பெட்டி எரிப்பும் அதைத் தொடர்ந்த கலவரங்கள். விமானங்கள் தகர்த்துப் பிளந்த WTC கட்டிடங்கள் சுமார் ஆறாயிரம் பேருடன் இடிந்து தரை தட்டல். லேசர் குண்டுகளால் ஈராக்கைத் துளைத்தெடுக்கிற போர் விமானங்கள். இந்திய விமானம் ஆப்கனுக்கு கடத்தப்பட்டபோது கொன்று வீசப்பட்ட புது மணமகனின் உடல். அப்புறம் இது போதாதென்று ஒரு பணயக் கைதியின் தலையை தனியே அறுத்தெடுக்கும் கோரக் காட்சி. போலீஸ் என்கெளண்டர்கள் என பதற வைக்கும் காட்சிகள் டி.வி என்கிற அபார சாதனத்தின் உபயத்தில் கண் முன்னே விரிகின்றன. இது போல் இன்ன பிற.

சம்பவ இடங்களில் உடனுக்குடன் பதிவுசெய்யப்படும் 'நேரடிக் காட்சிகள்' டி.வி சேனல்களின் வேகமான டெக்னாலஜி திறமையை பறைசாற்றாமலில்லை. இத்தனை காலம் ரேடியோவில் கேட்டுக் கொண்டிருந்த இந்த கோர துயர நிகழ்ச்சிகளை இப்போது சிவப்பு வண்ணம் பூசின கோப்புக் காட்சிகளாக அல்லது லைவ்வாக இயக்கமற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எத்தனை தவிர்த்தாலும் இறந்த உடல்களையும், ஓடுகிற ரத்த ஆறையும் குழந்தைகளும் கூட சர்வ சாதாரணமாய் பார்க்க ஆரம்பித்துவிட்டன. அவர்கள் வளர்கிற போது காணக்கிடைக்கிற நிஜம் அப்படியொன்றும் அவர்களிடம் அதிர்வுகளை ஏற்படுத்திவிடாது என்று தோன்றுகிறது. இந்தச் செய்திகள் எல்லாம் மக்களுக்கு உடனுக்குடன் யார் முந்தித் தருவது என்ற போட்டியில் மரணங்களையும், கலவரங்களையும், விபத்துக்களையும், ரத்தச் சிவப்பையும் தேடி காமிராக்கள் அலைகின்றன. எடுக்கப்பட்ட வீடியோக்கள், சேனல்களில் திரும்பத் திரும்ப ஓட்டப்பட்டு மெல்லிதயங்களைக் கலக்குகின்றன. உறைந்த மனங்களோடு இப்போது இவைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிற நமக்கு ஒரு நாள் மரத்துப் போய் விடும் என்றே தோன்றுகிறது.

பார்க்கவும் முடியவில்லை. தவிர்க்கவும் முடியவில்லை. இந்த லைவ் ரிலேக்களை என்ன செய்வதென்றும் புரியவில்லை.

சுட்டது யார்?

மேட்டுப் பாளையம் மெயின் ரோட்டிலிருந்து ராமசாமிக் கவுண்டர் தோட்டம் வழியாக நாங்கள் முன்பு குடியிருந்த திருமுருகன் நகருக்குக் குறுக்கு வழி இருந்தது. பொது வழி அல்ல என்று போர்டு போட்டிருந்தாலும் நடக்கிறவர்கள் நடந்துகொண்டுதான் இருந்தார்கள். முதலில் பரந்து விரிந்த ஒரு ரோஜாத் தோட்டம் இருக்கும். கோவை பூமார்க்கெட்டுக்கு அங்கிருந்து நிறைய சப்ளை உண்டு. அதைத் தாண்டி நடந்தால் அப்புறம் கவுண்டர் வீடும் அதையொட்டின வாழைத் தோட்டமும் இருக்கும், அங்கிருந்து ஒரு தென்னந்தோப்பின் நிழல் சூழ்ந்த மண்பாதை ஆரம்பமாகும். அதெல்லாம் நான் நிறைய ரசித்து ரசித்து நடந்த வழிகள். அதிகம் ஆட்கள் நடமாட்டமற்ற தனிமையில் இத்தனை தூரம் கடந்து வந்தால் பிறகு அந்தப்பக்கம் இருக்கிற காலனியை தன் அடர்த்தியால் மறைக்கிற ஆளுயர சோளக்காடு. அதற்குள் புகுந்து நடக்க வேண்டும். சோளம் நன்றாய் வளர்ந்திருந்தால் ஒரு ஆள் நடக்கிற வழி மட்டுமே இருக்கும். இரவானால் அந்த வழியே நடப்பதானால் கொஞ்சம் ரிஸ்க்தான். துளி வெளிச்சம்கூட இல்லாத இருளடடைந்த அந்தச் சோளக்காட்டின் நடுவேயான ஒற்றையடிப்பாதையில், காலடியில் ஊரும் பாம்புகளை பயத்துடன் தவிர்த்து நடக்கையில் எதற்காக அப்பா இப்படியொரு காலனியில் வீடு பார்த்தார் என்று கோபமாய் வரும். வழியில் நடுவில் ஒரு பெரிய ஒற்றை வேப்பமரமும், அதனடியில் ஒரு பாம்புப் புற்றும் உண்டு. இப்படி ஒரு பெரிய நகரத்துக்கு நடுவில் இந்த கிராமிய சூழ்நிலை தாண்டி திடீரென்று ஒரு காலனி விரிவது கொஞ்சம் வியப்பாய்தான் இருக்கும். தள்ளித் தள்ளி தனித்தனி வீடுகள் கொண்ட காலனி.

அது ஒரு நல்ல வீடு. அப்பாவின் ட்ரான்ஸ்ஃபர் பந்தாடல்களுக்கு நடுவில் நாங்கள் இருக்க நேரிட்ட இன்னொரு ஜாகை. எனக்கு மிகவும் பிடித்த வீடு அது. முன்னால் வட்டவடிவில் ஒரு சிட் அவுட், சின்ன தோட்டத்துடன் கொஞ்சம் அழகாகத்தான் இருக்கும். வீட்டின் பின்புறமும் உபரி ரம்மியமாய் கொஞ்சம் தென்னந்தோப்புகள், அதன் பின் புலத்தில் நீல நிறத்தில் ஒரு குட்டி மலைத்தொடர்.

அன்றைக்கு எதற்கோ வேலைக்கு லீவு போட்டு வீட்டில் இருந்தேன். ஒரு நல்ல வெயிலடிக்கிற பகல் பொழுது அது. எதேச்சையாக வீட்டு ஜன்னலின் வழியே பார்வை ஓட்டியபோது அவர்களைக் பார்த்தேன். இரண்டு பேர் என் வீட்டுக்கு எதிரில் நின்றிருந்தார்கள். அவர்கள் என் வீட்டைச் சுட்டிக்காட்டி என்னவோ பேசிக்கொண்டிருக்கிறார்கள். நான் வெகுநேரம் அவர்களைக் கவனித்துக்கொண்டிருந்தேன். யார் அவர்கள்? என்ன பேசுகிறார்கள்? என்று புதிராய் இருந்தது. அதில் ஒரு ஆள் லேசாய் வீட்டருகில் வந்து சுற்றுமுற்றும் பார்வையால் அளந்துவிட்டு பின் மறுபடி இன்னொரு ஆளிடம் போய் என்னவோ சொல்வதைப் பார்த்தேன். எனக்கு லேசாய் சந்தேகமாய் இருந்தது. பின்னர் இருவருமாக மேலும் நெருங்கி மறுபடி வீட்டை நோட்டம் பார்க்க ஆரம்பித்தார்கள். நான் இருக்கக் கொள்ளாமல் டக்கென்று கதவு திறந்து வெளியே வந்தேன்.

என்னைப் பார்த்ததும் அவர்கள் மையமாய் சிரித்தார்கள். நான் சிரிக்காமல், யார் நீங்க? என்ன வேணும்? என்றேன்.

"விஜய் டி.விக்காக ஒரு சீரியல் ஷூட்டிங் பக்கத்துல நடந்துட்டிருக்கு தம்பி. நாங்கதான் அதுக்கு ப்ரொடியூசர்ஸ். உங்க வீடு அமைப்பு நல்லா இருக்கு. இங்க ரெண்டு மூணு ஷாட்ஸ் எடுக்கலாமான்னு டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தோம்." என்றார் ஒருவர். ஓஹோ என்றேன் நான். அவர்கள் வீட்டுக்கு எதிரில் நின்று உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது சந்தேகம் வரவழைத்ததைச் சொன்னேன். சிரித்தார்கள்.

"சொல்லுங்க தம்பி ரெண்டு மூணு சீன் இங்க எடுத்துக்கலாமா?" என்றார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியாவிட்டாலும் கொஞ்சம் ஆர்வமாய்த்தான் இருந்தது. 'தேவர் மகன்' ஷூட்டிங் யூனிட்டுடன் பொள்ளாச்சி சூலக்கல், ஊத்துக்குளி வட்டார படப்பிடிப்பிலெல்லாம் மூன்று நாட்கள் அலைந்தது ஞாபகம் வந்தது. ஆஹா இப்போது என் வீடே படப்பிடிப்புத்தளமாகிவிட்ட பாக்கியம் கிடைத்துவிட்டது. இதோ நான் அனுமதித்தால் விஜய் டி.வி.யில் என் வீடு தெரியும். எனக்கு பயங்கர திரில்லாகிவிட்டது. அப்பா ஆபிஸ் போயிருக்கிறார். அம்மாவிடம் ஓடி விஷயத்தைச் சொன்னேன். அம்மாவுக்கு அது பற்றியெல்லாம் தெளிவான ஞானம் இருக்கவில்லை. என்னமோ நம்மளை தொந்தரவு பண்ணாம நடத்தினாங்கன்னா சரி என்றாள்.

நான் வெளியில் வந்து "ஷாட்ஸ் எடுத்துக்கோங்க ஆனா வீட்டுக்குள்ள எல்லாம் வேண்டாம்" என்றேன் அவர்களிடம். ஒத்துக்கொண்டார்கள். தோ வந்துர்றோம் என்று மறைந்தார்கள். திரும்பி வரும்போது கேமரா, ரிஃப்ளக்டர், லைட்டுகள் சகிதம் ஒரு படையே வந்தது. நடுவில் நடுநாயகமாய் ஆறேழு வீடுகள் தள்ளி குடியிருக்கிற பாலன் குட்டி பளபளவென்று நடந்து வருகிறார். அவர் முகத்தில் ரோஸ் பவுடர், உதட்டில் லேசாய் லிப்ஸ்டிக். ஜெல் போட்டு தலையை படிய வாரி, கோட்டெல்லாம் போட்டிருந்தார். என்னைப் பார்த்து மந்தாரமாய் மேக்கப் கலையாமல் சிரித்தார். விஜய் டி.வி. சீரியலில் அவர்தான் ஹீரோ என்றார். எனக்கு பகீரென்றது. அவருக்கு ஒரு ஐம்பது வயதிருக்கும். அவர் தமிழ் பேசினால் கேரளா பார்டரில் இருக்கிறமாதிரி ஃபீலிங் வந்துவிடும். ஆங்காங்கே மலையாள சமாஜ் ப்ரோக்ராம்களில் நன்றாய் கதகளி எல்லாம் ஆடுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சரிதான். அவர் கலை ஆர்வம் டி.வி. வரை வந்துவிட்டதுபோலிருக்கிறது என்று நினைத்தேன். நான் ஆவல் மேலிட என்ன கதைங்க? என்றேன்.

துப்பறியும் கதை தம்பி. கொஞ்சம் காமெடியா பண்றோம். சுட்டது யார்னு டைட்டில் என்றார் தயாரிப்பாளர். பின்னர் பரபரவென்று சுற்றுமுற்றும் ஆராய்ந்துவிட்டு. "தம்பி உங்க டேப்ரிக்கார்டரோட ஸ்பீக்கர் கொஞ்சம் கழட்டித் தாங்க வீட்டு வாசல்ல மாட்டணும். கதைப் பிரகாரம் இதுதான் துப்பறியும் நிபுணர் வீடு" என்றார். நான் என்னடா ப்ரொடியூஸர்தான் டைரக்ஷணும் பண்ணுகிறாரா என்று வியந்து கொண்டே கழற்றிக் கொடுத்தேன். அதை வீட்டு வாசலில் தொங்க விட்டார்கள். அதற்கு மேல் ஒரு புலியின் படத்தை ஒட்டினார்கள். பாலன் குட்டி தயாரானார். லைட்ஸ்! கேமரா! ஆக்ஷன். கேமரா ஓட ஆரம்பித்தது. என் வீட்டு ப்ளக் பாயிண்டில் ஒயர்கள் சொருகப்பட்டு பளிச்சென்று 2KVA விளக்கு எரிந்தது. இன்னொரு நடிகர் ஒருவர் எங்கிருந்தோ என் வீட்டு வாசலுக்கு வந்து நின்றார். மிஸ்டர் துளசிங்கம் என்று கூப்பிட்டார். உடனே ஸ்பீக்கரிலிருந்து குரல் வருவது மாதிரி யூனிட்டின் மினி டேப்பிலிருந்து ஒரு புலியின் உறுமல் கேட்டுவிட்டு 'எஸ்.. ஐ ஏம் கமிங்' என்று குரல் கேட்டது. பாலன் குட்டி என் வீட்டுக்குள்ளிருந்து வெளிப்பட்டார். அப்புறம் வந்த ஆளை நோக்கி ஒரு டயலாக் சொல்லவேண்டும்.. "நான்தான் உலகப் புகழ்பெற்ற துப்பறியும் டைகர் துளசிங்கம். நீங்க யாரு?" என்பதுதான் அந்த டயலாக். நான் டைகருக்கும் சிங்கத்துக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது பாலன் குட்டி டையை சரிபண்ணிக்கொண்டு சொன்னார். "நாந்தான் உழகப் புஹழ்பெற்ற துப்பறியும் டைகர் துழசிம்ஹம். நிங்ஙள் யாரு?"

எனக்கு குபீர் என்று சிரிப்பு வந்தது. நல்ல காமெடி சீரியல்தான் போலும். இதே டயலாக்கை திரும்பத்திரும்ப சொல்லி பத்து பன்னிரெண்டு தடவை டேக் எடுத்தார்கள். அவர் வாயில் கடிபட்டு சிங்கமும் புலியும் செத்தே போயிற்று. அப்புறம் எல்லாவற்றையும் கழற்றிவிட்டு, தென்னந்தோப்பில் வில்லனை துளசிங்கம் ஸ்கூட்டரில் துரத்துகிற சீன் எடுக்கப் போய்விட்டார்கள். சுற்றிலும் ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க கூடியிருந்த கும்பல் என் வீட்டை ஆச்சரியமாய் பார்ப்பதை கவனித்தேன். மானசீகமாய் நான் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டேன். ஷூட்டிங்கெல்லாம் நடந்த வீடு என்றால் சும்மாவா? நான் ஸ்பீக்கரை தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் போனேன்.

அப்பா வந்தார். விஷயம் கேள்விப்பட்டு என்னை முறைத்தார். பணம் ஏதாவது கொடுத்தார்களா என்றார். நான் இல்லை என்றேன். உடனே போய் E.B மீட்டரைப் பார்த்தார். 2000 வாட்ஸ் பல்புகள் அரை நாள் எரிந்ததில் மீட்டர் ரீடிங் எகிறியிருந்தது. அய்யய்யோ இதை நான் யோசிக்கவேயில்லை. அப்பா டென்்ஷனாய் திரும்பி என்னைத் திட்டுவதற்கு தேடும்போது நான் கவுண்டர் தோட்டமெல்லாம் தாண்டி மெயின் ரோட்டுக்குப் பறந்து வந்திருந்தேன்.

சுட்டது யார் என்ற அந்த காமெடி சீரியலை எப்போதாவது யாராவது விஜய் டி.வியில் பார்த்தீர்களா? எங்கள் வீடு தெரிந்ததா? சொல்லுங்க.

மனதில் உனது ஆதிக்கம்

'மனதில் உனது ஆதிக்கம்' என்ற எனது சிறுகதைத் தொகுப்பு இன்று வெளியாகியிருக்கிறது. இந்தப் புத்தகம் மூலம் நான் உங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மொத்தம் 11 சிறுகதைகளும் கல்கியில் வெளியான நான்கு வார குறுந்தொடர் ஒன்றும் அடங்கியது இத்தொகுப்பு. 95லிருந்து துவங்கி வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட சிறுகதைகள் இவை. இச்சிறுகதைகளில் அதிகபட்சம் கல்கியில் வெளியானவை. என் எழுத்தில் நம்பிக்கை கொண்டு, என்னை ஊக்குவித்து இதை வெளியிடுவதில் பெருமளவில் உதவிய பா.ராகவன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மனதில் உனது ஆதிக்கம்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம், சென்னை