Showing posts with label ஓவியம். Show all posts
Showing posts with label ஓவியம். Show all posts

AI Art - செயற்கை நுண்ணறிவு ஓவியங்கள் - வரமா சாபமா?

2023 ஆரம்பித்ததிலிருந்து ChatGPT, AI Art போன்ற வார்த்தைகள் காதில் விழ ஆரம்பித்துவிட்டன. இதெல்லாம் ஏற்கெனவே பல வருடங்களாக ஆராய்ச்சியில் இருந்ததுதான் என்றாலும் மிகவும் பரவலாகப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இப்போதுதான் இறக்கிவிடப்பட்டிருக்கின்றன. ChatGPT போன்ற ஆப்களை மென்பொருள் துறையிலிருப்பவர்கள் இப்போது தமது அன்றாட வேலைகளுக்கு பயன்படுத்தத் துவங்கிவிட்டார்கள். மென்பொருள் நிரலெழுதுபவர்களுக்கு என்ன வேண்டுமென்று சொல்லிவிட்டால் அதுவே எழுதிக் கொடுத்துவிடுகிறது. மொபைல் ஆப்களுக்கான டிசைன்கள், வீடியோக்கள், இசைத் துணுக்குகள் என எதைக் கேட்டாலும் செய்துகொடுத்துவிடுகிறது. ஆனால் எல்லாமே ஆரம்ப நிலைகளில்தான். நான்கூட ChatGPT-ஐ மேலெழுந்தவாரியாக எனது சின்னச் சின்ன வேலைகளுக்கு உபயோகிக்க ஆரம்பித்துவிட்டேன். இந்தச் சமாச்சாரத்தை வைத்துப் பணம் சம்பாதிப்பது எப்படி என்றுகூட யூட்யூபில் வீடியோக்கள் குவிய ஆரம்பித்துவிட்டன.

இங்கே நாம் பார்க்கப் போவது குறிப்பாக AI Art எனப்படுகிற செயற்கை நுண்ணறிவு ஓவியங்கள் பற்றி. அதன் பிரச்சனைகள் பற்றி. இந்த மாதிரி மோஸ்தரில் ஒரு ஓவியம் வேண்டும் என்று டைப் அடித்து அதனிடம் சொல்லிவிட்டால் ஒரு சில விநாடிகளில் நாம் கேட்டதுபோல ஒரு அபாரமான ஓவியத்தை உருவாக்கி நம்மிடம் நீட்டுகிறது. அதுவும் பிரமிக்க வைக்கும் தரத்துடன், துல்லியத்துடன் (இணைப்புப் படங்களைப் பாருங்கள்). இது இப்போது உலகளாவிய ஓவியர்களின் வாழ்க்கையில் கிலி ஏற்படுத்தத் தொடங்கிவிட்டது.

செயற்கை நுண்ணறிவு என்பது அதற்கு நாம் அளிக்கும் விவரங்களையும், செய்திகளையும், கோப்புகளையும் அலசி, ஆராய்ந்து, கற்றுக்கொண்டு தொடர்ந்து அசுர வேகத்தில் தனது அறிவை விருத்தி செய்துகொண்டே போகிற சமாச்சாரம். இப்போது பரவலாயிருக்கும் AI Art என்கிற செயற்கை நுண்ணறிவுக் கலை 'Generative Art' என்றழைக்கப்படுகிறது. படங்கள், ஒலிகள் மற்றும் பிற ஊடகங்களை உருவாக்கும் அல்காரிதம்களால் நெய்யப்பட்ட இது கலைஞர்கள், ஓவியர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் மத்தியில் ஒரு வித ஆர்வத்தைக் கிளப்பியுள்ளது. செயற்கை நுண்ணறிவு இப்படியாக ஓவியங்களை உருவாக்க ஆரம்பித்துவிட்ட இந்தச் சூழல், கலையுலகின் கவனத்தைப் பெருமளவில் ஈர்த்துள்ளது. கொஞ்சம் வரவேற்பு. கொஞ்சம் எதிர்ப்பு. பாரம்பரிய ஓவியர்களின் படைப்புகளின் மேல் அது ஏற்படுத்தப் போகும் தாக்கத்தைப் பற்றிய கொஞ்சம் கேள்விகள் என்று இந்தச் சூழல் சூடுபிடித்துக்கொண்டிருக்கிறது.

இந்தச் செயற்கை நுண்ணறிவு ஓவியத் தளங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்று பார்ப்போம். இவைகள் எல்லையில்லா இணையத்திலிருந்து உருவப்பட்ட கோடிக்கணக்கான படங்களை அலசி ஆராய்ந்து, காயப்போட்டு, அதிலிருந்து தாமாகவே கற்றுக்கொள்ளும் பயிற்சிக்கு செயற்கை நுண்ணறிவு மாடல்கள் உட்படுத்தப்படுகின்றன. இதில் படைப்பாளிகளின் ஏற்கெனவே காப்புரிமை பெற்ற படங்களும் அடங்கும். அது பெற்ற ஓவிய அறிவின் தொகுப்பிலிருந்து நாம் கேட்பதற்கேற்ற விதத்தில், பதத்தில், கலவையில், சுவையில் மிக்ஸியில் போட்டு அடித்து பிரமாதமான ஒரு புது ஓவியமொன்றைச் சமைத்துக் கொடுக்கிறது. Stable Diffusion, Midjourney போன்ற எண்ணற்ற AI மாடல்கள் இதில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் சில சமயம் இதில் பிரபல ஓவியர்களின் பிரபல ஓவியங்கள் அடிப்படையாக (base) உபயோகப்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் இதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட ஓவியர்கள் வழங்கியிருக்கமாட்டார்கள். அவர்களுக்கு இதனால் எந்த லாபமும் இல்லை. ஆக இது ஒரு மாதிரியான அனுமதியற்ற திருட்டு மற்றும் அத்துமீறல் என்றே சொல்லலாம். இன்ஸ்பிரேஷன் என்றுகூட சொல்லித் தப்பித்துவிட முடியாது.

இம்ப்ரெசனிஸம், க்யூபிஸம், பாப் ஆர்ட் என் உங்களுக்கு எந்த ஸ்டைலில் ஓவியங்கள் வேண்டுமானலும் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் நீங்கள் கேட்டபடி உருவாக்கிக் கொடுத்துவிடுகிறது என்பது ஆச்சரியம்தான். செயற்கை ஓவியங்களை உருவாக்குவதற்கென்று நிறைய இணைய தளங்களும், செயலிகளும் புற்றீசல்கள் போல நாளுக்கு நாள் பெருக ஆரம்பித்துவிட்டன. அதில் சில fotor, playgroundai, inatantart.io, lexica, Dall-E இன்னபிற. இங்கே சென்று Prompt என்று கேட்கப்படும் இடத்தில் உங்களுக்குத் தேவையானவற்றை உள்ளிட்டு நீங்கள் விரும்பியபடி சில பல செட்டிங்ஸ்களை மாற்றி அமைத்தால் போதும். சுடச் சுட இன்ஸண்ட் ஆர்ட் தயார்.

தனித்துவமான AI Art ஓவியங்களைப் படைக்க கீழே கொடுத்திருப்பது போன்ற 'Prompt'-களைப் பயன்படுத்துகிறார்கள். (இப்போதைக்கு இதெல்லாம் நிபுணர்களுக்கு மட்டுமே புரியும்படி உள்ளது.)

Aztec Indian shot down,pain face, in a scenic dystopian environment, intricate, elegant, highly detailed, centered, digital painting, artstation, concept art, smooth, sharp focus, illustration, artgerm, tomasz alen kopera, peter mohrbacher, donato giancola, joseph christian leyendecker, wlop, boris vallejo, perfect composition, beautiful detailed intricate insanely detailed octane render trending on artstation, 8k artistic photography, photorealistic concept art, soft natural volumetric cinematic perfect light, chiaroscuro, award - winning photograph, masterpiece, oil on canvas, raphael, caravaggio, greg rutkowski, beeple, beksinski, giger.

சில பிரபல ஓவியர்கள் கூட இதைப் பயன்படுத்தி சவாலான, தனித்துவமான ஓவியங்களை உருவாக்க இயலுமா என்று முயன்று வருகிறார்கள். சில ஓவியர்கள் AI-உருவாக்கிய ஓவியங்களை அரை மனதாக ஏற்றுக்கொண்டாலும், மற்றவர்கள் இது பாரம்பரிய ஓவியக் கலை வடிவங்களை மதிப்பிழக்கச் செய்யக்கூடும் என்று கவலைப்படுகிறார்கள். ஒரு இயந்திரம் கலையை உருவாக்க முடியும் என்கிற விஷயம் மனிதர்களின் கலைப் படைப்புத்திறனின் மதிப்பு பற்றிய கேள்விகளை இங்கே முன்வைக்கிறது.

இணையத்திலிருந்து படைப்புகள் எடுக்கப்பட்டு, கலக்கிப் பிசையப்பட்டு உருவாக்கும் வகையில் பயிற்சியளிக்கப்படுகிறது என்கிற வகையில் தற்போதைய AI Art என்பது ஒரு நெறிமுறையற்ற விஷயம் என்பதில் உலகளாவிய படைப்பாளிகளுக்கு மாற்றுக் கருத்தில்லை. படைப்பாளிகளின் காப்புரிமை என்பதும் இங்கே காற்றில் பறக்கவிடப்படுகிறது. மேலும் இப்படி உருவாக்கப்படும் AI ஓவியங்கங்களின் காப்புரிமை யாருக்குச் சொந்தமானது என்பது குறித்தும் தெளிவின்மை நிலவுகிறது.

AI துணைகொண்டு உருவாக்கப்படும் ஓவியங்களுக்கு ஆழமில்லை என்றும், அது பாரம்பரிய ஓவியங்கள் ஏற்படுத்தும் உணர்வு அதிர்வலைகளையும், மனக் கிளர்ச்சிகளையும் இவை ஒருபோதும் ஏற்படுத்துவதில்லையென்றும் சில ஓவியக் கலைஞர்கள் வாதிடுகிறார்கள்.

ஓவியக்கலையில் நிபுணத்துவம் வாய்ந்த ஓவியர்கள் ஒரு நல்ல உன்னத படைப்பை உருவாக்க பல நாட்கள், ஏன் பல மாதங்கள்கூட எடுத்துக்கொள்ளும் அதே சமயத்தில் AI Art அதே போன்ற ஓவியங்களை வரைய எடுத்துக்கொள்ளும் நேரம் ஒரு சில நொடிகள் மட்டுமே. மேலும் செயற்கை நுண்ணறிவானது கற்றுக்கொள்ளுதலிலும், தன்னை மேம்படுத்திக்கொள்ளுதலிலும் காட்டும் மிதமிஞ்சிய வேகம் இன்னும் கொஞ்ச காலத்தில் ஓவியர்களுக்கு உலை வைத்து விடுமோ என்ற அச்சமும் லேசாக தலைதூக்கத் தொடங்கிவிட்டது.

ஆனாலும் இதிலுள்ள பெரிய சவால் இவ்வகை ஓவியங்களை அசலான, உண்மையான ஓவியப் படைப்புகளாகக் கருத முடியுமா என்பதுதான். செயற்கை நுண்ணறிவு அல்காரிதம்கள் என்பவை வெறும் கருவிகள்தான். அதன் படைப்புத் திறன் மனிதர்களின் படைப்புத் திறனை ஒரு போதும் நெருங்கமுடியாது என்பதும் சிலரின் நியாயமான வாதம்.

இருப்பினும், AI ஓவியங்களின் இந்த திடீர் எழுச்சியானது, ஓவியர்களுக்கு புதிய படைப்புச் சாத்தியங்களைக் குறித்து ஆராய்வதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கக்கூடும் என்றும் ஒரு சாரார் கருதுகின்றனர். இந்தச் செயற்கை நுண்ணறிவுக் கலையை பாரம்பரிய கலை நுட்பங்களுடன் இணைந்து பயன்படுத்தும்போது அது தற்கால ஓவியருர்களுக்கு வேறொரு தளத்தில் புதுமையான மற்றும் உணர்வுபூர்வமான கலப்பினப் படைப்புகளை (Hybrid creations) உருவாக்கும் வாய்ப்பைக் கொடுக்கக்கூடும் என்று கருதுபவர்களும் உண்டு.

ஆனால் செயற்கை நுண்ணறிவின் அல்காரிதங்கள் மனிதர்களைப் போல உணர்வுகளை அனுபவிக்க இயலாதவை. ஆக அவைகளால் உருவாக்கப்படும் படைப்புகள் உணர்வு ஆழம் இல்லாமல்தான் இருக்கும் என்று அநேகம் ஓவியர்கள் நம்புகிற அதே நேரம் இதன் சாத்தியங்கள் கற்பனைக்கெட்டாத வகையில் விஸ்வரூபமாக விரிந்துகொண்டே போகின்றன. எதிர்காலத்தில் ’எந்திரன் சிட்டி’ போல ஒரு ரோபோ கருத்தாழமிக்க, உணர்வு பூர்வ ஓவியமொன்றை AI Art Diffusion Model-களைக் கொண்டு வரைந்து கொடுத்தாலும் ஆச்சரியமில்லை.

புத்தக அட்டை வடிவமைப்பு, போஸ்டர்கள் போன்றவற்றிற்குத் தேவையான ஓவியங்களை அநேகம் பேர் இந்த முறையில் உருவாக்கிப் பயன்படுத்தத் துவங்கிவிட்டார்கள் என்று நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல்கள் கசிகின்றன. இப்போதைக்கு இவைகள் இலவசம் என்பதும் வசதி.

இந்த மாதிரி செயற்கை நுண்ணறிவு விஷயங்கள் இத்தோடு நிற்கப் போவதில்லை. ஒரு பக்கம் இது தொடர்ந்து வேகமாக பல்வேறு பரிமாணங்களை எடுத்துக்கொண்டேதான் இருக்கும். இன்னொரு பக்கம் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி வரமா, சாபமா என்கிற விவாதம் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும். பிரபஞ்சத்தின் நோக்கமே தன்னை எல்லா வகைகளிலும் விரிவுபடுத்திக்கொண்டே போவதும், படைத்துக்கொண்டே இருப்பதும்தான். அதன் திட்டங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். நடப்பதை பொருத்திருந்து கவனிப்போம்.



வீட்டுக்காரர் பார்த்தால் என்ன நினைப்பார்?

சென்னையில் ஒரு வீட்டை நீங்கள் குடியிருக்க வாடகைக்குப் பிடிக்கிறீர்கள். அதுவும் நகரத்தின் இதயத்துக்கு நடுவே அல்லது அருகாமையில். உங்களுக்கு வாடகைக்கு விடுவதற்கென்று தன் வீட்டின் சுவர்களுக்கு பளபளவென டிஸ்டெம்பரோ பெயிண்ட்டோ அடித்து ஒரு புதிய வீட்டின் தோற்றத்தை அதற்கு கொடுத்து வைத்திருக்கிறார் வீட்டு உரிமையாளர்.

ஒரு நல்ல நாள் பார்த்து பால் காய்ச்சி பிறகு உங்கள் வாழ்நாள் உடைமைகளை அல்லது இப்பூவுலகில் வாழத் தேவையானதாகக் கருதும் குறைந்த பட்ச அத்தியாவசியச் சாமான்களை புதிய வீட்டிற்கு மாற்றிவிடுகிறீர்கள். எல்லாவற்றையும் அந்தந்த இடத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு, காலண்டர் மாட்டி, பால்கனியில் துணியுலர்த்த கொடிகட்டிவிட்டு, மின் அட்டையை சரிபார்த்து ரீடிங்கைக் குறித்து வைத்துவிட்டு, பாலுக்கும் பேப்பருக்கும் ஏற்பாடு பண்ணிவிட்டு, பக்கத்து வீட்டுக்காருக்கு எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு ஹலோவும் சொல்லி வைத்தாயிற்று.

ஒரு பெரிய ராக்கெட் ப்ராஜக்டை முடித்த அலுப்புடன் உங்கள் வரவேற்பறை சோபாவில் சாய்கிறீர்கள். எதிரில் சுவரில் புதிதாக வண்ணமடிக்கப்பட்ட சுவரில் ஒரு பெரிய கருப்புக் கீறல். என்ன அது என்று பதறி பக்கத்தில் போய்ப் பார்த்தால் அது ஒரு பென்சில் கிறுக்கல். மிகவும் கண்டிக்கத்தக்க இந்த அசட்டு வேலையைச் செய்தது உங்கள் குழந்தையாகத்தான் இருக்கும் என்று சந்தேகப்பட்டு அதைத் தேடினால் அது கையில் க்ரையான்களுடன் பெட்ரூம் சுவரில் தனது அடுத்த கட்ட வேலையை ஆரம்பித்திருக்கிறது.

உங்கள் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும்? சென்னை நகரில் நம்மை நம்பி வீடு தரும்போதே ஆயிரத்து நூற்றி இருபத்து நாலு நிபந்தனைகளும் கூடவே ஒரு பதினோரு மாத அக்ரிமெண்டும் போட்டிருக்கும் வீட்டுக்காரருக்கு அவரது வீட்டை சேதாரமில்லாமல் திருப்பிக் கொடுக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறபடியால் நிச்சயம் இப்போது உங்கள் ரத்த அழுத்தம் ஏறியிருக்க வாய்ப்புண்டு.

“கண்ணா இதுமாதிரியெல்லாம் சுவத்தில கிறுக்கக்கூடாது சரியா. ஹவுஸ் ஓனர் அப்பாவ திட்டுவாரு” என்று நயமாய்ச் சொல்லி பென்சில், பேனா க்ரையான்களை உடனடியாக குழந்தைக்கு எட்டாத உயரத்தில் வைத்துவிடவும் செய்வீர்கள். இப்படிச் செய்யவில்லையென்றால் வீட்டுக்காரரின் கடும் எரிச்சலுக்கு ஆளாவதுடன், வீட்டைக் காலி செய்யும்போது உங்கள் அட்வான்ஸ் தொகையிலிருந்து ஒரு பெரும் பங்கை வீட்டுச் சுவர்களை நாசப்படுத்தியதற்காக அவர் கழித்துக் கொள்ளக்கூடும்.

ஆனால் இவ்வாறான கவலைகள் எதுவுமற்று செந்தில் ஒரு நண்பர் இருந்தார். அபிராமபுரத்திலிருக்கும் அவர் வீட்டுக்கு ஒரு முறை போனேன். வாசலைத்தாண்டி உள்ளே நுழைந்ததும் ஹாலின் மொத்த சுவரையும் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு சுவர் கிறுக்கல்கள். அவரது ப்ரீ கேஜி குழந்தை ஹரிணியின் கைவண்ணம். பென்சில், கிரையான், இன்சுலேஸன் டேப், போஸ்டர் கலர் என்று என்ன கையில் என்ன கிடைக்கிறதோ அவைகளைக்கொண்டு தனக்கு எந்த உயரம் வரை எட்டுகிறதோ அது வரை விதவிதமான கிறுக்கல்கள். எட்டவில்லையென்றால் சோபாவின் மீது ஏறி நின்று.

ஹாலில் மட்டும் அல்ல படுக்கையறைகளில், சமையலறை சுவர்களில் என எங்கும் கிறுக்கல் மயம். ஆக அவரது வீடு ஒரு சிறிய ஆர்ட் கேலரி மாதிரி தோற்றமளித்தது.

நீங்கள் குழந்தையைக் கண்டிப்பதில்லையா என்று கேட்டதற்கு நண்பர் மெதுவாய்ச் சிரித்தார். அதோட கிரியேட்டிவிட்டியையும் சுதந்திரத்தையும் ஏன் கெடுக்கவேண்டும் என்றார். மீறிப் போனால் வீட்டுச் சொந்தக்காரர் வெள்ளையடிக்க ஒரு இருபதாயிரம் ரூபாய் கேட்பார். கொடுத்தால் போயிற்று என்றார். நான் ஆச்சரியமாகிப்போனேன்.

நான் குடியிருக்கிற வீட்டில் என் பையன் இப்படிக் கிறுக்கத் தலைப்பட்டபோது அவனை தடுத்தாட்கொண்டது ஞாபகம் வந்தது.  நான் முடிந்த அளவு வீட்டுக்காரர் குறை சொல்லாமல் நடந்துகொள்ளவேண்டும் என்று நினைக்கிற ஆசாமி. அதற்காக செய்கிற தியாகங்களில் அதுவும் ஒன்று.

குழந்தைகளுக்கு சுவரில் கிறுக்குதல் சந்தோஷம். ஆனால் ஒரு சில நிர்பந்தங்களின் பொருட்டு அவ்வாறு செய்யவிடாமல் அடக்கி ஆள்கிறோம். அதை என் நண்பர் செய்ய முயற்சிக்கவில்லை என்பது நல்ல பாராட்டத்தக்க விஷயமாகப்பட்டது. அவரது குழந்தை தனக்கு மனதில் தோன்றுவதை எல்லாம் எங்கே வேண்டுமானாலும் சுதந்திரமாகக் கிறுக்கிக் கொள்ள அனுமதியளித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக சுவர் முழுவதும் குறுக்கும் நெடுக்கும் பலவிதமான கோடுகளால் ஹரிணிக்கு தன் உலகத்தை விரியச் செய்ய முடிகிறது.

அவைகளை சாதாரணக் கண்களோடு பார்த்தால் வெறும் கிறுக்கல்களாக மட்டுமே தெரியும். ஹரிணியின் மாய உலகத்தில் அவள் கற்பனைகளில் மிதக்கும் உருவங்கள் கோடுகளாக வெளிப்பட்டிருக்கிறதென்று ஏன் சொல்லமுடியாது?. அந்த உலகத்திற்கு நீங்கள் பயணிக்க வேண்டுமென்றால் அந்தக் கிறுக்கல்களை புரிந்து கொள்ளவேண்டுமென்றால் உங்கள் வயதை மூன்றாக மாற்றினால் மட்டுமே முடியும்.

குழந்தைகள் பிற்காலத்தில் என்னவாக ஆவார்கள் என்று யாராலும் சரியாகக் கணிக்க முடியாது. பெரும்பாலானவர்களின் வாழ்க்கையிலும் அதுவே நிகழ்ந்திருக்கிறது. நான் என்னவாக ஆவேன் என்று எப்படி என் அப்பாவுக்குத் தெரியாமல் போனதோ அதே மாதிரி என் மகன் பிற்காலத்தில் எதுவாக மாறுவான் என்று என்னாலும் சொல்ல முடியாது. வேண்டுமென்றால் அவன் எதுவாக ஆகவேண்டுமென்று நினைக்கிறானோ அதற்கான அடித்தளத்தையும், உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கலாம்.

நியூயார்க்கில் குழந்தை மேதாவியான மார்லா ஆம்ஸ்டெட் (Marla Olmstead) என்கிற ஒரு சின்னக் குழந்தை உலகின் முன்னணி ஓவியர்கள் மூக்கில் விரலை வைக்குமளவுக்கு மாடர்ன் ஆர்ட் ஓவியங்களை வரைந்து பல லட்சம் டாலர்களுக்கு அவைகளை விற்றுக்கொண்டிருப்பதையும் டாக்குமெண்டரியாக டிவியில் ஒரு நிகழ்ச்சியில் பார்த்தேன். அது சின்ன வயதிலிருந்தே இப்படி சுவரில் கிறுக்கிய குழந்தையாகக்கூட இருக்கலாம்.

இன்றைய சும்மா சுவர்க் கிறுக்கல்கள் நாளைய கலைப்படைப்புகளாக மாற நிறையவே வாய்ப்பிருக்கிறது. குழந்தைகள் செய்வதையும் சொல்வதையும் முற்றும் சரியல்ல என்று புறந்தள்ளுவதும் நல்லதல்ல என்று தோன்றுகிறது. வளரும் வயதில் லேசான கண்டிப்புடன் கொஞ்சம் சுதந்தரத்தையும் வழங்கும் பட்சத்தில் குழந்தைகள் தங்களின் படைப்புத்திறனை நல்ல முறையில் கூராக்கிக் கொள்ள இயலும். நண்பர் அதை செவ்வனே செய்கிறார்.

நண்பர் வீட்டுக்குப் போன நேரம் கையில் டிஜிட்டல் கேமரா இருந்ததால் குழந்தை ஹரிணியின் சுவரோவியங்களைப் படமாக்கி பிறகு கம்ப்யூட்டரில் அவைகளுக்குப் ஃப்ரேம் எல்லாம் போட்டு மின்னஞ்சலில் அவருக்கு அனுப்பி வைத்தபோது நெகிழ்ந்து சந்தோஷப்பட்டார். பிறகு அவைகளையே கலந்துகட்டி எனது வலைத்தளமான சித்ரன்.காம்-மில் (http://chithran.com) தலைப்பு பேனரிலும் உபயோகப்படுத்திக்கொண்டேன்.ஹரிணியின் அந்த சுவரோவியங்களை இந்தப் பதிவில் ஆங்காங்கே கொடுத்திருக்கிறேன். எப்படியிருக்கிறதென்று சொல்லுங்களேன்!

கிழித்த கதை


ஷெல்ஃப்பில் எதையோ தேடிக்கொண்டிருந்தபோது ஒரு பழைய கிழிந்த லெதர் பை ஒன்றில் ஒரு கத்தையாக கொஞ்சம் சிறுகதைகள் கிடைத்தன. பதினைந்து வருடங்களுக்கு முன் குமுதம், விகடன், சாவி இதழ்களிலிருந்து கிழித்துத் சேர்த்துவைத்த சிறுகதைகள். கொத்துக் கொத்தாக ஸ்டேப்ளர் செய்யப்பட்டு ‘பைண்ட் செய்து வைக்கவேண்டும்’ என்கிற எண்ணம் வருடக்கணக்கில் புறக்கணிக்கப்பட்டு, தாள்கள் பழுப்பேறிச் சிதைந்து, திறந்ததும் குப்பென்று மூச்சுத் திணறவைக்கும் நெடியுடன் கிடந்தன.

குமுதத்திலும், விகடனிலும் சிறுகதைகள் அதிக அளவில் வெளியிடப்பட்டுக் கொண்டிருந்த பொற்காலம் அது. சுஜாதா, பாலகுமாரன், சுபா முதற்கொண்டு பிரபல எழுத்தாளர்கள் அனைவரும் மானாவாரியாக எழுதிக்கொண்டிருந்த நேரம். பொதுவாகவே சிறுகதைகள், தொடர்கதைகள் படிக்கிற ஆர்வத்துடன் ஒரு கூட்டமாக நாங்கள் (நான், சரசுராம், மீனாட்சி சுந்தரம், ஷாராஜ், கனகராஜன்) அலைந்துகொண்டிருந்தோம். கதைகளைப் படிப்பதும், படித்தபிறகு அவைகளைப் பற்றியும், கதாசிரியர்களைப் பற்றியும் பெருமளவில் விவாதித்துத் திரிந்த நாட்கள் ரம்மியமானவை.

சுமார் அறுபது கதைகள். சிறந்த சிறுகதைகள் என்று கிழித்து வைத்துக் கொண்டதா என்று கேட்டால் தெளிவாக நினைவில்லை. நல்லதாய் ஒரு சிறுகதையை எப்படி எழுதுவது என்கிற தேடலில் இந்த மாதிரி நிறைய கிழித்து வைக்கிற பழக்கம் எங்கள் எல்லோருக்கும் இருந்தது. இதில் சிறுகதை, குறுந்தொடர், நாவல் எல்லாம் அடங்கும். அரஸ்-ஸின் அட்டகாச ஓவியங்களுக்காகவே சுஜாதாவின் என் இனிய இயந்திராவையும், மீண்டும் ஜீனோவையும், அப்புறம் கோவி மணிசேகரன் நாவல் ஒன்றையும் கிழித்துச் சேர்த்திருந்தேன். கமலஹாசன் ஸ்டில்லுகளுக்காக விக்ரம் தொடர். இது மாதிரி நிறைய. என்னிடமிருக்கிற இந்த கதைக் கொத்தை கிழித்துத் தொகுத்தவர் சரசுராம். எப்படியோ கைமாறி என்னிடத்தில் வந்து கிடக்கிறது.

இந்த சேகர சாகரத்தில் என்னதான் இருக்கிறதென்று மூச்சை இறுக்குகிற நெடியை பொறுத்துக் கொண்டு திறந்து பார்த்தேன். பெரும்பாலும் சிறுகதைகள்தான் இருந்தன. “என் பெயர் அருண்குமார்” என்ற சாருப்ப்ரபா சுந்தரின் (நான் விரும்பிப் படித்த எழுத்தாளர் இவர்) தொடர்கதை. பாலகுமாரன், மாலனின் ஒரு சில கதைகள். அப்புறம் ராஜேஷ்குமார், சுபா, சுப்ரபாரதிமணியன், தனுஷ்கோடி ராமசாமி, சு. சமுத்திரம், பிரதிபா ராஜகோபாலன், அனுராதா ரமணன், பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகிய எல்லோரும் அடக்கம்.

நாகா என்றொரு எழுத்தாளரின் சில கதைகள். கே.சித்ராபொன்னி என்பவரின் கதைகள் நிறைய இருந்தன. (இப்போது எழுதுகிறாரா?) பா.ராகவனின் கதை ஒன்று. அதுதவிர பெரும்பாலான கதைகள் அதிகம் பிரபலமாகாத, பெயர் கேள்விப்படாத எழுத்தாளர்களால் எழுதப்பட்டிருந்தது. தமிழிணி, இள.அழகிரி, ஜெரா, தார்க்‌ஷியா இப்படியாக. பவதாரிணி என்பவர் எழுதிய ரூ.5000 பரிசு பெற்ற கதை ஒன்றும் இருந்தது.

வித்யா சுப்ரமணியம், எஸ்.பி. ஹோசிமின், சங்கர்பாபு, திருவாரூர் பாபு போன்ற அடிக்கடி கண்ணில் படுகிற எழுத்தாளர்களும் இந்தக் கலெக்‌ஷனில் ஒளிந்திருந்தார்கள். இதில் பரசுராம் பிஸ்வாஸ் என்றொரு எழுத்தாளரும் இருக்கிறார். இவர் குமுதத்தில் விகடனில் ‘புதிய ஆத்திச்சூடி கதைகள்’ என்று ஒரு தொடர் எழுதிக்கொண்டிருந்தார். குமுதத்தில் விகடனில் பணிபுரிகிற யாரோ ஒருவர்தான் (அல்லது பலர்) இந்த புனைபெயரில் எழுதிக்கொண்டிருந்தார்(கள்) என்றொரு அரசல் புரசல் இருந்தது. யாராக இருந்தாலும் அற்புதமாய் எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர் இவர்.

ஜெ, அரஸ், ம.செ, மாருதி, ராமு, கரோ போன்ற ஓவியர்கள் இந்தக் கதைகளுக்கு படம் வரைந்திருந்தார்கள். மருது, ஜி.கே.மூர்த்தி, ஸ்யாம் கூட இருந்தார்கள். அட்டகாசமாக வரைந்துகொண்டிருந்த அரஸ்-ஸூக்கு ஒரு கட்டத்தில் என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. திடீரென்று கானா மூனாவென்று வரைந்து தள்ள ஆரம்பித்தார். இந்த இடைவெளியில் கச்சிதமாக உள்ளே நுழைந்தவரான கரோவும் (கிட்டத்தட்ட அரஸ் சாயலிலேயே) சளைக்காமல் எண்ணற்ற கதைகளுக்கு அருமையாய் படம் வரைந்து தள்ளிக் கொண்டிருந்தார். இன்னும் சில வருடங்கள் வைத்திருந்தால் உடைந்து உதிர்ந்துவிடும் என்பதுபோல் வெடவெடவென்றிருக்கிற இந்த சாணிப் பேப்பர்களில் இந்த ஓவியர்களின் பழைய ஓவியங்களை மறுபடி பார்க்கக் கிடைப்பது அழகான விஷயம்.

ஆதவனின் ’புறாக்கள் பறந்து கொண்டிருக்கும்’ என்கிற கதை இரண்டு பாகங்களாய் இந்தத் தொகுப்பில் இருக்கிறது. ஆதவனின் சிறுகதைகள் அனைத்தையும் திரட்டி “ஆதவன் சிறுகதைகள்’ என்கிற புத்தகமாக கிழக்கு பதிப்பகம் வெளியிட்டபோது இந்தக் கதையும் இருக்கிறதா என்று பா.ராகவனிடம் ஒருமுறை கேட்டது நினைவுக்கு வந்தது. அதிகபட்சமாக எல்லாக் கதைகளையும் முடிந்தவரை திரட்டிப் போட்டுவிட்டதாக அவர் சொன்னார். அந்த தொகுப்பிலிருக்கும் “புறா” என்கிற கதைதான் இது என்று ரொம்ப நாளாய் நினைத்திருந்தேன். ஆனால் இப்போது எடுத்துப்பார்த்தபோது அதுவும் இதுவும் வேறு என்பது தெரிந்தது.

வியாபார மயமாகிப் போன பிரபல பத்திரிக்கைகளில் சிறுகதைகள் வெளியிடுவது அரிதாகிப் போன இந்தக் காலத்தில், நைந்து போன இந்தப் பேப்பர் கற்றையை எடுத்துப் பார்க்கும்போது தும்மல் கலந்த பெருமூச்சொன்று வருகிறது. முகத்தில் கர்ச்சீப் கட்டிக்கொண்டாவது இதில் உள்ள கதைகளை மறுபடி பொறுமையாய் உட்கார்ந்து முழுதாய் படித்துப் பார்க்கவேண்டும்.

கலையும் கலை சார்ந்த இடமும்

சென்னை கவின் கலைக் கல்லூரிக்கு (Madras Collage of Fine Arts) எதையாவது சாக்கிட்டு ஒரு முறையாவது போய்வர வேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசையாக இருந்தது. பின்னே ஓவியத்தின்பால் கொஞ்சம் ஆர்வம் வைத்திருக்கிற நான், அதுவும் சென்னையிலேயே இருந்துகொண்டு இதைப் பண்ணாமலிருந்தால் எப்படி?

போன வாரம் அந்த வாய்ப்புக் கிடைத்தது. ஆபிஸில் திடீரென கரெண்ட் கட்டாகி சும்மா உட்கார்ந்திருந்த நேரத்தில் போகலாமா என்று பாஸ் கூப்பிட்டார். ஆனால் சும்மா அல்ல. சந்தோஷ் என்கிற ஒரு நண்பன் கவின்கலைக் கல்லூரி வளாகத்திற்குள் வைத்திருந்த புகைப்படக் கண்காட்சியை பார்ப்பதற்கு.

நான் முன்பே எதிர்பார்த்திருந்த மாதிரி இல்லாமல் வேறு விதமான தோற்றத்தோடு இருந்தது கவின் கலைக் கல்லூரி. ஒரு குறுகலான கேட்டைத் தாண்டிப் போனால் அதற்கப்புறம் அதிகம் நடக்கிறதுக்கு வகையில்லாமல் உடனடியாக கட்டிடங்கள் வந்துவிடுகின்றன. சந்தோஷின் புகைப்படக் கண்காட்சி வாசலை ஒட்டின ஒரு ஹாலிலேயே இருந்தது. நல்ல கான்ட்ராஸ்ட்டுடன் கூடிய அழகிய புகைப்பட முயற்சிகள். இன்னும் உழைத்தால் பெரிய அளவில் வர வாய்ப்பு உண்டு.

கல்லூரி வளாகத்தினுள் நிறைய மரங்கள். மரங்கள் உதிர்த்த ஏராளமான சருகுகள். வளாகம் சுத்தம் செய்யப்பட்டு ஒரு மாமாங்கம் இருக்கும் என்றாலும் அதுவே அந்த சூழ்நிலைக்கு ஒரு இயற்கை அழகுபோல் பொருந்தியிருக்கிறது. மரங்களுக்கு நடுவில் ஆங்காங்கே முழுசாகவும், சிதைந்தும் நிறைந்து கிடக்கிற சிலைகள். எல்லாம் மாணவர்களாலோ அல்லது ஆசிரியர்களாலோ உருவாக்கப்பட்டவை. பல கோணங்களில் பல போஸ்களில் ஒரு முதியவர் சிலை ஆங்காங்கே கண்ணில் பட்டது. அந்தப் பெரியவர் அந்த கல்லூரிக்கு மாடலாக வேலை செய்கிறவராம். ரொம்பத் தள்ளாடி பலவீனமாக நடந்துவரும் அந்தப் பெரியவர் ஓய்வு நேரங்களில் எப்போதும் ஏதாவது குறுகிய இடத்திலேயே உடலைச் சுருக்கிக் கொண்டு உட்கார்ந்து டீ குடிப்பாராம். ஆனால் மாடலிங் க்ளாஸ் நடக்கும்போது ஆயிரம் வாட்ஸ் வெளிச்சத்தில் ஒரே கோணத்தில் அசையாமல் மூன்று நான்கு மணி நேரம்கூட உட்கார்ந்திருப்பாராம்.

மரத்தடியில் அரட்டையடித்தபடி மாணவர்களில் அதிகம்பேர் பெண்பிள்ளை மாதிரி நடுமுதுகு வரை தலைமுடி வளர்த்தியிருந்தார்கள். சிலபேர் குடுமி அல்லது கூந்தலை நன்றாகச் வாரி ரப்பர் பேண்ட் போட்டிருந்தார்கள். (போனி டெய்ல்?) அதிக பட்ச உடை ஜீன்ஸ் மற்றும் பனியனாக இருந்தது. தாங்கள் கலைஞர்கள் என்றோ மற்றவர்களிடமிருந்து ஏதோ ஒன்றில் வித்தியாசப்படுகிறோம் என்கிற செய்தி அறிவிப்பு அவர்களின் நடை, உடை, பாவனைகளில் இருக்கிறது. எனக்குத் தெரிந்த ஓவிய நண்பர்கள் ஓரிருவர்கூட அவ்வாறேதான் இருக்கின்றனர். நிறைய தலைமுடியும், மீசையும் தாடியும் எப்போதும் கலையின் அடையாளச் சின்னம் போலும்.

இன்றைக்கு க்ளாஸ் எதுவும் இல்லையா என்று சந்தோஷிடம் கேட்டபோது, இரண்டாம் வருடம் முதல் அப்படியொன்றும் கட்டாயமாய் மாணவர்களை உட்கார வைத்து வகுப்பெடுக்கிற வழக்கம் கிடையாது என்றும், கல்லூரி நேரங்களில் புற உலகிற்குப் போய் தாமாகவே பார்த்தும், கேட்டும் பயிற்சி செய்தும் கற்றுக்கொள்கிற சுதந்திரம் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறதென்றும் சொன்னான்.

அப்புறம் கொஞ்சமாய் அவர்கள் கவின்கலை உலகின் கூடங்களை ஒரு வலம் வந்தோம். முதலில் சிலைகள் உருவாகிற இடம். மான், மனிதன் என ஏகப்பட்ட ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மோல்டுகள். க்ளே மாடலிங் பண்ணுவதற்கு நிறைய களிமண் கொட்டப்பட்டிருந்தது. செய்கிற சிலைகளுக்கு சப்போர்ட்டாக வளைக்கப்பட்ட கம்பிகள் ஆங்காங்கே. குவிந்து கிடக்கிற மோல்டுகள். எல்லாக் கூடங்களும் இயற்கையாய் அதனதன் லட்சண சொரூபத்துடன் பழமை கவிந்து கிடக்கின்றன. நீங்கள் சினிமாவில் பார்த்து மகிழ்ந்திருக்கும் வில்லன்களின் அல்லது தீவிரவாதிகளின் கொட்டடி போன்ற தோற்றத்துடனேயே எல்லாக் கூடங்களும், அவற்றிற்குப் போகிற வழிகளும் இருந்தன என்றாலும் அப்படி இயல்பாய், இயற்கையாய் இருப்பதே அந்த கலை சார்ந்த இடத்தின் மதிப்பையும் சிருஷ்டிப்புத் தன்மையும் கூட்டுகிற விதமாய்த் தோன்றியது. எத்தனையெத்தனையோ பெரிய கலைஞர்களையும், ஓவியர்களையும் உருவாக்கிய இடமல்லவா அது.

திரும்பிய பக்கமெல்லாம் சுவர்களில் (ஒரு இடம் விடாமல்) ஓவியக் கிறுக்கல்கள். க்ளேஸ், களிமண், ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் இன்ன பிற பொருட்கள் உபயோகித்து ஆங்காங்கே கூடங்களின் மூலைகளில் சில மாணவர்கள் சின்னச் சின்னதாய் சிலை முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். ஒரு க்ளே மாடலிங் கூடத்திலிருந்து சாவதானமாய் வெளிவந்த நாயைப் பார்த்து நான் புருவம் உயர்த்தியபோது, அது நாய் அல்ல எங்களின் மாடல் என்று பதில் வந்தது. உள்ளே மாணவர் ஒருவர் விதவிதமாக ஒரே நாயை பல போஸில் களிமண்ணால் சின்னச் சின்னதாக சிலையாகப் பண்ணிக்கொண்டிருந்தார். படுத்திருக்கிற மாதிரி, தலையை சொறிவது மாதிரி, சோம்பல் முறிப்பது மாதிரி, நின்று முறைப்பது மாதிரி என நிறைய. அந்த நாயை ஐந்து மாதமாக ஸ்டடி செய்து பண்ணினதாம். Every dog has a day என்று இதைத்தான் சொல்கிறார்களா?

நேரமாகிவிட்டது என்பதால் ஓவியக் கூடங்களை இன்னொரு நாள் வந்து பார்க்கலாம் என்று ஆபிஸூக்குத் திரும்பி வந்துவிட்டோம். திரும்பும்போது வாழ்க்கையில் ஏதோ ஒரு பெரிய விஷயம் கிடைக்காமல் போனமாதிரி ஒரு இழப்பின் பரிதவிப்பு. இன்னும் அணையாமல் மனதின் ஏதோ ஒரு மூலையில் சுடராய் எரிந்துகொண்டிருக்கிற ஓவியத் தாகம்தான் அன்றைய தினம் என்னை அங்கே கொண்டு போயிற்று எனலாம். கதைகளும் நாவல்களும் படிக்க ஆரம்பித்தது மாதிரியே ஓவியம் வரைய ஆரம்பித்ததும் கூட ஆறாங்க்ளாஸில்தான் என்று சொல்லலாம். முதலில் ஒரு மான் வரைந்து கலரடித்தது ஞாபகம் இருக்கிறது. அப்படியே கிறுக்கிக்கொண்டிருந்ததில் சித்திரம் கைப்பழக்கம் ஆகியிருந்ததால் என்ஜினியரிங் படிக்கும்போது ட்ராயிங் க்ளாஸில் வரும் ஆர்தோக்ராஃபிக் ப்ரொஜக்ஷன், ஐஸோமெட்ரிக் ப்ரொஜக்ஷன் எல்லாம் என்னை அத்தனை பயமுறுத்தியிருக்கவில்லை. அரஸ், மணியம் செல்வம் போன்றோரின் ஓவியங்களையெல்லாம் பார்த்து அச்சு அசலாக வரைகிற என் கைத்திறனை மூக்கின் மேல் விரல்வைத்து வியக்கிறவர்களுக்கு அத்தனை ஓவிய ஞானம் இல்லாமலிருந்ததால் தப்பித்தேன். கிடைத்த இடத்திலெல்லாம் தவறாமல் பெண் படம் வரைகிற பழக்கத்தை அப்பாகூட எப்போதும் வன்மையாகக் கண்டித்தவண்ணம் இருந்தார். அப்புறம் எந்த வீட்டுக்குக் குடிபோனாலும் அடுப்புக் கரி கொண்டு சமையலறை சுவரில் தத்ரூபமாய் ஒரு கண் வரைந்து வைப்பேன். (பெண்ணின் கண்தான்). மனதில் இலக்கிய ஆர்வம் கவிந்தபிறகு நண்பர்கள் சேர்ந்து உருவாக்கிய கையெழுத்துப் பத்திரிக்கையில் நானே ஆஸ்தான ஓவியன்.

பின்னாளில் அட்வர்டைஸிங் துறைக்கு வந்ததும் அப்புறம் க்ராபிக்ஸ் மல்டிமீடியா என்று தாவினதுக்கும் என் ஓவியப் பயிற்சிகள்(!) நிச்சயம் துணை புரிந்தன எனலாம். இருந்தாலும் முறையாக ஓவியம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று மனதின் ஓரத்தில் லேசாய் ஒரு ஆசை இருந்தது. முடியவில்லை. இப்போதெல்லாம் என்றைக்காவது ஒரு நாள் பென்ஸிலையும் பேப்பரையும் எடுத்து வைத்துக்கொண்டு ஒரு அரைமணி நேரம் கிறுக்கினாலே ஜாஸ்தி. அத்தோடு என் ஓவிய தாகம் அணைந்துவிடுகிறது.

வாய்ப்பு அமைந்தால் எனக்கென்று ஒரு தனி அறை அமைத்துக்கொண்டு, அறை மத்தியில் (அல்லது மூலையில்) ஓவியம் வரைவதற்கான ஈஸல், பேலட்டுகள், தூரிகைகள், வாட்டர்கலர்கள், ஆயில் பெயிண்டிங் கலர்கள், கொஞ்சம் கேன்வாஸ், லின்ஸீட் ஆயில் இன்னபிறவற்றை கடைபரப்பிக் கொண்டு கொஞ்ச நாள் வாழவேண்டும் என்று என்னிடம் கனவொன்று இருக்கிறது. அங்கே நான் எதுவும் வரையாவிட்டாலும் பரவாயில்லை.