Showing posts with label கலை. Show all posts
Showing posts with label கலை. Show all posts

AI Art - செயற்கை நுண்ணறிவு ஓவியங்கள் - வரமா சாபமா?

2023 ஆரம்பித்ததிலிருந்து ChatGPT, AI Art போன்ற வார்த்தைகள் காதில் விழ ஆரம்பித்துவிட்டன. இதெல்லாம் ஏற்கெனவே பல வருடங்களாக ஆராய்ச்சியில் இருந்ததுதான் என்றாலும் மிகவும் பரவலாகப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இப்போதுதான் இறக்கிவிடப்பட்டிருக்கின்றன. ChatGPT போன்ற ஆப்களை மென்பொருள் துறையிலிருப்பவர்கள் இப்போது தமது அன்றாட வேலைகளுக்கு பயன்படுத்தத் துவங்கிவிட்டார்கள். மென்பொருள் நிரலெழுதுபவர்களுக்கு என்ன வேண்டுமென்று சொல்லிவிட்டால் அதுவே எழுதிக் கொடுத்துவிடுகிறது. மொபைல் ஆப்களுக்கான டிசைன்கள், வீடியோக்கள், இசைத் துணுக்குகள் என எதைக் கேட்டாலும் செய்துகொடுத்துவிடுகிறது. ஆனால் எல்லாமே ஆரம்ப நிலைகளில்தான். நான்கூட ChatGPT-ஐ மேலெழுந்தவாரியாக எனது சின்னச் சின்ன வேலைகளுக்கு உபயோகிக்க ஆரம்பித்துவிட்டேன். இந்தச் சமாச்சாரத்தை வைத்துப் பணம் சம்பாதிப்பது எப்படி என்றுகூட யூட்யூபில் வீடியோக்கள் குவிய ஆரம்பித்துவிட்டன.

இங்கே நாம் பார்க்கப் போவது குறிப்பாக AI Art எனப்படுகிற செயற்கை நுண்ணறிவு ஓவியங்கள் பற்றி. அதன் பிரச்சனைகள் பற்றி. இந்த மாதிரி மோஸ்தரில் ஒரு ஓவியம் வேண்டும் என்று டைப் அடித்து அதனிடம் சொல்லிவிட்டால் ஒரு சில விநாடிகளில் நாம் கேட்டதுபோல ஒரு அபாரமான ஓவியத்தை உருவாக்கி நம்மிடம் நீட்டுகிறது. அதுவும் பிரமிக்க வைக்கும் தரத்துடன், துல்லியத்துடன் (இணைப்புப் படங்களைப் பாருங்கள்). இது இப்போது உலகளாவிய ஓவியர்களின் வாழ்க்கையில் கிலி ஏற்படுத்தத் தொடங்கிவிட்டது.

செயற்கை நுண்ணறிவு என்பது அதற்கு நாம் அளிக்கும் விவரங்களையும், செய்திகளையும், கோப்புகளையும் அலசி, ஆராய்ந்து, கற்றுக்கொண்டு தொடர்ந்து அசுர வேகத்தில் தனது அறிவை விருத்தி செய்துகொண்டே போகிற சமாச்சாரம். இப்போது பரவலாயிருக்கும் AI Art என்கிற செயற்கை நுண்ணறிவுக் கலை 'Generative Art' என்றழைக்கப்படுகிறது. படங்கள், ஒலிகள் மற்றும் பிற ஊடகங்களை உருவாக்கும் அல்காரிதம்களால் நெய்யப்பட்ட இது கலைஞர்கள், ஓவியர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் மத்தியில் ஒரு வித ஆர்வத்தைக் கிளப்பியுள்ளது. செயற்கை நுண்ணறிவு இப்படியாக ஓவியங்களை உருவாக்க ஆரம்பித்துவிட்ட இந்தச் சூழல், கலையுலகின் கவனத்தைப் பெருமளவில் ஈர்த்துள்ளது. கொஞ்சம் வரவேற்பு. கொஞ்சம் எதிர்ப்பு. பாரம்பரிய ஓவியர்களின் படைப்புகளின் மேல் அது ஏற்படுத்தப் போகும் தாக்கத்தைப் பற்றிய கொஞ்சம் கேள்விகள் என்று இந்தச் சூழல் சூடுபிடித்துக்கொண்டிருக்கிறது.

இந்தச் செயற்கை நுண்ணறிவு ஓவியத் தளங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்று பார்ப்போம். இவைகள் எல்லையில்லா இணையத்திலிருந்து உருவப்பட்ட கோடிக்கணக்கான படங்களை அலசி ஆராய்ந்து, காயப்போட்டு, அதிலிருந்து தாமாகவே கற்றுக்கொள்ளும் பயிற்சிக்கு செயற்கை நுண்ணறிவு மாடல்கள் உட்படுத்தப்படுகின்றன. இதில் படைப்பாளிகளின் ஏற்கெனவே காப்புரிமை பெற்ற படங்களும் அடங்கும். அது பெற்ற ஓவிய அறிவின் தொகுப்பிலிருந்து நாம் கேட்பதற்கேற்ற விதத்தில், பதத்தில், கலவையில், சுவையில் மிக்ஸியில் போட்டு அடித்து பிரமாதமான ஒரு புது ஓவியமொன்றைச் சமைத்துக் கொடுக்கிறது. Stable Diffusion, Midjourney போன்ற எண்ணற்ற AI மாடல்கள் இதில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் சில சமயம் இதில் பிரபல ஓவியர்களின் பிரபல ஓவியங்கள் அடிப்படையாக (base) உபயோகப்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் இதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட ஓவியர்கள் வழங்கியிருக்கமாட்டார்கள். அவர்களுக்கு இதனால் எந்த லாபமும் இல்லை. ஆக இது ஒரு மாதிரியான அனுமதியற்ற திருட்டு மற்றும் அத்துமீறல் என்றே சொல்லலாம். இன்ஸ்பிரேஷன் என்றுகூட சொல்லித் தப்பித்துவிட முடியாது.

இம்ப்ரெசனிஸம், க்யூபிஸம், பாப் ஆர்ட் என் உங்களுக்கு எந்த ஸ்டைலில் ஓவியங்கள் வேண்டுமானலும் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் நீங்கள் கேட்டபடி உருவாக்கிக் கொடுத்துவிடுகிறது என்பது ஆச்சரியம்தான். செயற்கை ஓவியங்களை உருவாக்குவதற்கென்று நிறைய இணைய தளங்களும், செயலிகளும் புற்றீசல்கள் போல நாளுக்கு நாள் பெருக ஆரம்பித்துவிட்டன. அதில் சில fotor, playgroundai, inatantart.io, lexica, Dall-E இன்னபிற. இங்கே சென்று Prompt என்று கேட்கப்படும் இடத்தில் உங்களுக்குத் தேவையானவற்றை உள்ளிட்டு நீங்கள் விரும்பியபடி சில பல செட்டிங்ஸ்களை மாற்றி அமைத்தால் போதும். சுடச் சுட இன்ஸண்ட் ஆர்ட் தயார்.

தனித்துவமான AI Art ஓவியங்களைப் படைக்க கீழே கொடுத்திருப்பது போன்ற 'Prompt'-களைப் பயன்படுத்துகிறார்கள். (இப்போதைக்கு இதெல்லாம் நிபுணர்களுக்கு மட்டுமே புரியும்படி உள்ளது.)

Aztec Indian shot down,pain face, in a scenic dystopian environment, intricate, elegant, highly detailed, centered, digital painting, artstation, concept art, smooth, sharp focus, illustration, artgerm, tomasz alen kopera, peter mohrbacher, donato giancola, joseph christian leyendecker, wlop, boris vallejo, perfect composition, beautiful detailed intricate insanely detailed octane render trending on artstation, 8k artistic photography, photorealistic concept art, soft natural volumetric cinematic perfect light, chiaroscuro, award - winning photograph, masterpiece, oil on canvas, raphael, caravaggio, greg rutkowski, beeple, beksinski, giger.

சில பிரபல ஓவியர்கள் கூட இதைப் பயன்படுத்தி சவாலான, தனித்துவமான ஓவியங்களை உருவாக்க இயலுமா என்று முயன்று வருகிறார்கள். சில ஓவியர்கள் AI-உருவாக்கிய ஓவியங்களை அரை மனதாக ஏற்றுக்கொண்டாலும், மற்றவர்கள் இது பாரம்பரிய ஓவியக் கலை வடிவங்களை மதிப்பிழக்கச் செய்யக்கூடும் என்று கவலைப்படுகிறார்கள். ஒரு இயந்திரம் கலையை உருவாக்க முடியும் என்கிற விஷயம் மனிதர்களின் கலைப் படைப்புத்திறனின் மதிப்பு பற்றிய கேள்விகளை இங்கே முன்வைக்கிறது.

இணையத்திலிருந்து படைப்புகள் எடுக்கப்பட்டு, கலக்கிப் பிசையப்பட்டு உருவாக்கும் வகையில் பயிற்சியளிக்கப்படுகிறது என்கிற வகையில் தற்போதைய AI Art என்பது ஒரு நெறிமுறையற்ற விஷயம் என்பதில் உலகளாவிய படைப்பாளிகளுக்கு மாற்றுக் கருத்தில்லை. படைப்பாளிகளின் காப்புரிமை என்பதும் இங்கே காற்றில் பறக்கவிடப்படுகிறது. மேலும் இப்படி உருவாக்கப்படும் AI ஓவியங்கங்களின் காப்புரிமை யாருக்குச் சொந்தமானது என்பது குறித்தும் தெளிவின்மை நிலவுகிறது.

AI துணைகொண்டு உருவாக்கப்படும் ஓவியங்களுக்கு ஆழமில்லை என்றும், அது பாரம்பரிய ஓவியங்கள் ஏற்படுத்தும் உணர்வு அதிர்வலைகளையும், மனக் கிளர்ச்சிகளையும் இவை ஒருபோதும் ஏற்படுத்துவதில்லையென்றும் சில ஓவியக் கலைஞர்கள் வாதிடுகிறார்கள்.

ஓவியக்கலையில் நிபுணத்துவம் வாய்ந்த ஓவியர்கள் ஒரு நல்ல உன்னத படைப்பை உருவாக்க பல நாட்கள், ஏன் பல மாதங்கள்கூட எடுத்துக்கொள்ளும் அதே சமயத்தில் AI Art அதே போன்ற ஓவியங்களை வரைய எடுத்துக்கொள்ளும் நேரம் ஒரு சில நொடிகள் மட்டுமே. மேலும் செயற்கை நுண்ணறிவானது கற்றுக்கொள்ளுதலிலும், தன்னை மேம்படுத்திக்கொள்ளுதலிலும் காட்டும் மிதமிஞ்சிய வேகம் இன்னும் கொஞ்ச காலத்தில் ஓவியர்களுக்கு உலை வைத்து விடுமோ என்ற அச்சமும் லேசாக தலைதூக்கத் தொடங்கிவிட்டது.

ஆனாலும் இதிலுள்ள பெரிய சவால் இவ்வகை ஓவியங்களை அசலான, உண்மையான ஓவியப் படைப்புகளாகக் கருத முடியுமா என்பதுதான். செயற்கை நுண்ணறிவு அல்காரிதம்கள் என்பவை வெறும் கருவிகள்தான். அதன் படைப்புத் திறன் மனிதர்களின் படைப்புத் திறனை ஒரு போதும் நெருங்கமுடியாது என்பதும் சிலரின் நியாயமான வாதம்.

இருப்பினும், AI ஓவியங்களின் இந்த திடீர் எழுச்சியானது, ஓவியர்களுக்கு புதிய படைப்புச் சாத்தியங்களைக் குறித்து ஆராய்வதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கக்கூடும் என்றும் ஒரு சாரார் கருதுகின்றனர். இந்தச் செயற்கை நுண்ணறிவுக் கலையை பாரம்பரிய கலை நுட்பங்களுடன் இணைந்து பயன்படுத்தும்போது அது தற்கால ஓவியருர்களுக்கு வேறொரு தளத்தில் புதுமையான மற்றும் உணர்வுபூர்வமான கலப்பினப் படைப்புகளை (Hybrid creations) உருவாக்கும் வாய்ப்பைக் கொடுக்கக்கூடும் என்று கருதுபவர்களும் உண்டு.

ஆனால் செயற்கை நுண்ணறிவின் அல்காரிதங்கள் மனிதர்களைப் போல உணர்வுகளை அனுபவிக்க இயலாதவை. ஆக அவைகளால் உருவாக்கப்படும் படைப்புகள் உணர்வு ஆழம் இல்லாமல்தான் இருக்கும் என்று அநேகம் ஓவியர்கள் நம்புகிற அதே நேரம் இதன் சாத்தியங்கள் கற்பனைக்கெட்டாத வகையில் விஸ்வரூபமாக விரிந்துகொண்டே போகின்றன. எதிர்காலத்தில் ’எந்திரன் சிட்டி’ போல ஒரு ரோபோ கருத்தாழமிக்க, உணர்வு பூர்வ ஓவியமொன்றை AI Art Diffusion Model-களைக் கொண்டு வரைந்து கொடுத்தாலும் ஆச்சரியமில்லை.

புத்தக அட்டை வடிவமைப்பு, போஸ்டர்கள் போன்றவற்றிற்குத் தேவையான ஓவியங்களை அநேகம் பேர் இந்த முறையில் உருவாக்கிப் பயன்படுத்தத் துவங்கிவிட்டார்கள் என்று நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல்கள் கசிகின்றன. இப்போதைக்கு இவைகள் இலவசம் என்பதும் வசதி.

இந்த மாதிரி செயற்கை நுண்ணறிவு விஷயங்கள் இத்தோடு நிற்கப் போவதில்லை. ஒரு பக்கம் இது தொடர்ந்து வேகமாக பல்வேறு பரிமாணங்களை எடுத்துக்கொண்டேதான் இருக்கும். இன்னொரு பக்கம் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி வரமா, சாபமா என்கிற விவாதம் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும். பிரபஞ்சத்தின் நோக்கமே தன்னை எல்லா வகைகளிலும் விரிவுபடுத்திக்கொண்டே போவதும், படைத்துக்கொண்டே இருப்பதும்தான். அதன் திட்டங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். நடப்பதை பொருத்திருந்து கவனிப்போம்.



வீட்டுக்காரர் பார்த்தால் என்ன நினைப்பார்?

சென்னையில் ஒரு வீட்டை நீங்கள் குடியிருக்க வாடகைக்குப் பிடிக்கிறீர்கள். அதுவும் நகரத்தின் இதயத்துக்கு நடுவே அல்லது அருகாமையில். உங்களுக்கு வாடகைக்கு விடுவதற்கென்று தன் வீட்டின் சுவர்களுக்கு பளபளவென டிஸ்டெம்பரோ பெயிண்ட்டோ அடித்து ஒரு புதிய வீட்டின் தோற்றத்தை அதற்கு கொடுத்து வைத்திருக்கிறார் வீட்டு உரிமையாளர்.

ஒரு நல்ல நாள் பார்த்து பால் காய்ச்சி பிறகு உங்கள் வாழ்நாள் உடைமைகளை அல்லது இப்பூவுலகில் வாழத் தேவையானதாகக் கருதும் குறைந்த பட்ச அத்தியாவசியச் சாமான்களை புதிய வீட்டிற்கு மாற்றிவிடுகிறீர்கள். எல்லாவற்றையும் அந்தந்த இடத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு, காலண்டர் மாட்டி, பால்கனியில் துணியுலர்த்த கொடிகட்டிவிட்டு, மின் அட்டையை சரிபார்த்து ரீடிங்கைக் குறித்து வைத்துவிட்டு, பாலுக்கும் பேப்பருக்கும் ஏற்பாடு பண்ணிவிட்டு, பக்கத்து வீட்டுக்காருக்கு எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு ஹலோவும் சொல்லி வைத்தாயிற்று.

ஒரு பெரிய ராக்கெட் ப்ராஜக்டை முடித்த அலுப்புடன் உங்கள் வரவேற்பறை சோபாவில் சாய்கிறீர்கள். எதிரில் சுவரில் புதிதாக வண்ணமடிக்கப்பட்ட சுவரில் ஒரு பெரிய கருப்புக் கீறல். என்ன அது என்று பதறி பக்கத்தில் போய்ப் பார்த்தால் அது ஒரு பென்சில் கிறுக்கல். மிகவும் கண்டிக்கத்தக்க இந்த அசட்டு வேலையைச் செய்தது உங்கள் குழந்தையாகத்தான் இருக்கும் என்று சந்தேகப்பட்டு அதைத் தேடினால் அது கையில் க்ரையான்களுடன் பெட்ரூம் சுவரில் தனது அடுத்த கட்ட வேலையை ஆரம்பித்திருக்கிறது.

உங்கள் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும்? சென்னை நகரில் நம்மை நம்பி வீடு தரும்போதே ஆயிரத்து நூற்றி இருபத்து நாலு நிபந்தனைகளும் கூடவே ஒரு பதினோரு மாத அக்ரிமெண்டும் போட்டிருக்கும் வீட்டுக்காரருக்கு அவரது வீட்டை சேதாரமில்லாமல் திருப்பிக் கொடுக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறபடியால் நிச்சயம் இப்போது உங்கள் ரத்த அழுத்தம் ஏறியிருக்க வாய்ப்புண்டு.

“கண்ணா இதுமாதிரியெல்லாம் சுவத்தில கிறுக்கக்கூடாது சரியா. ஹவுஸ் ஓனர் அப்பாவ திட்டுவாரு” என்று நயமாய்ச் சொல்லி பென்சில், பேனா க்ரையான்களை உடனடியாக குழந்தைக்கு எட்டாத உயரத்தில் வைத்துவிடவும் செய்வீர்கள். இப்படிச் செய்யவில்லையென்றால் வீட்டுக்காரரின் கடும் எரிச்சலுக்கு ஆளாவதுடன், வீட்டைக் காலி செய்யும்போது உங்கள் அட்வான்ஸ் தொகையிலிருந்து ஒரு பெரும் பங்கை வீட்டுச் சுவர்களை நாசப்படுத்தியதற்காக அவர் கழித்துக் கொள்ளக்கூடும்.

ஆனால் இவ்வாறான கவலைகள் எதுவுமற்று செந்தில் ஒரு நண்பர் இருந்தார். அபிராமபுரத்திலிருக்கும் அவர் வீட்டுக்கு ஒரு முறை போனேன். வாசலைத்தாண்டி உள்ளே நுழைந்ததும் ஹாலின் மொத்த சுவரையும் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு சுவர் கிறுக்கல்கள். அவரது ப்ரீ கேஜி குழந்தை ஹரிணியின் கைவண்ணம். பென்சில், கிரையான், இன்சுலேஸன் டேப், போஸ்டர் கலர் என்று என்ன கையில் என்ன கிடைக்கிறதோ அவைகளைக்கொண்டு தனக்கு எந்த உயரம் வரை எட்டுகிறதோ அது வரை விதவிதமான கிறுக்கல்கள். எட்டவில்லையென்றால் சோபாவின் மீது ஏறி நின்று.

ஹாலில் மட்டும் அல்ல படுக்கையறைகளில், சமையலறை சுவர்களில் என எங்கும் கிறுக்கல் மயம். ஆக அவரது வீடு ஒரு சிறிய ஆர்ட் கேலரி மாதிரி தோற்றமளித்தது.

நீங்கள் குழந்தையைக் கண்டிப்பதில்லையா என்று கேட்டதற்கு நண்பர் மெதுவாய்ச் சிரித்தார். அதோட கிரியேட்டிவிட்டியையும் சுதந்திரத்தையும் ஏன் கெடுக்கவேண்டும் என்றார். மீறிப் போனால் வீட்டுச் சொந்தக்காரர் வெள்ளையடிக்க ஒரு இருபதாயிரம் ரூபாய் கேட்பார். கொடுத்தால் போயிற்று என்றார். நான் ஆச்சரியமாகிப்போனேன்.

நான் குடியிருக்கிற வீட்டில் என் பையன் இப்படிக் கிறுக்கத் தலைப்பட்டபோது அவனை தடுத்தாட்கொண்டது ஞாபகம் வந்தது.  நான் முடிந்த அளவு வீட்டுக்காரர் குறை சொல்லாமல் நடந்துகொள்ளவேண்டும் என்று நினைக்கிற ஆசாமி. அதற்காக செய்கிற தியாகங்களில் அதுவும் ஒன்று.

குழந்தைகளுக்கு சுவரில் கிறுக்குதல் சந்தோஷம். ஆனால் ஒரு சில நிர்பந்தங்களின் பொருட்டு அவ்வாறு செய்யவிடாமல் அடக்கி ஆள்கிறோம். அதை என் நண்பர் செய்ய முயற்சிக்கவில்லை என்பது நல்ல பாராட்டத்தக்க விஷயமாகப்பட்டது. அவரது குழந்தை தனக்கு மனதில் தோன்றுவதை எல்லாம் எங்கே வேண்டுமானாலும் சுதந்திரமாகக் கிறுக்கிக் கொள்ள அனுமதியளித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக சுவர் முழுவதும் குறுக்கும் நெடுக்கும் பலவிதமான கோடுகளால் ஹரிணிக்கு தன் உலகத்தை விரியச் செய்ய முடிகிறது.

அவைகளை சாதாரணக் கண்களோடு பார்த்தால் வெறும் கிறுக்கல்களாக மட்டுமே தெரியும். ஹரிணியின் மாய உலகத்தில் அவள் கற்பனைகளில் மிதக்கும் உருவங்கள் கோடுகளாக வெளிப்பட்டிருக்கிறதென்று ஏன் சொல்லமுடியாது?. அந்த உலகத்திற்கு நீங்கள் பயணிக்க வேண்டுமென்றால் அந்தக் கிறுக்கல்களை புரிந்து கொள்ளவேண்டுமென்றால் உங்கள் வயதை மூன்றாக மாற்றினால் மட்டுமே முடியும்.

குழந்தைகள் பிற்காலத்தில் என்னவாக ஆவார்கள் என்று யாராலும் சரியாகக் கணிக்க முடியாது. பெரும்பாலானவர்களின் வாழ்க்கையிலும் அதுவே நிகழ்ந்திருக்கிறது. நான் என்னவாக ஆவேன் என்று எப்படி என் அப்பாவுக்குத் தெரியாமல் போனதோ அதே மாதிரி என் மகன் பிற்காலத்தில் எதுவாக மாறுவான் என்று என்னாலும் சொல்ல முடியாது. வேண்டுமென்றால் அவன் எதுவாக ஆகவேண்டுமென்று நினைக்கிறானோ அதற்கான அடித்தளத்தையும், உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கலாம்.

நியூயார்க்கில் குழந்தை மேதாவியான மார்லா ஆம்ஸ்டெட் (Marla Olmstead) என்கிற ஒரு சின்னக் குழந்தை உலகின் முன்னணி ஓவியர்கள் மூக்கில் விரலை வைக்குமளவுக்கு மாடர்ன் ஆர்ட் ஓவியங்களை வரைந்து பல லட்சம் டாலர்களுக்கு அவைகளை விற்றுக்கொண்டிருப்பதையும் டாக்குமெண்டரியாக டிவியில் ஒரு நிகழ்ச்சியில் பார்த்தேன். அது சின்ன வயதிலிருந்தே இப்படி சுவரில் கிறுக்கிய குழந்தையாகக்கூட இருக்கலாம்.

இன்றைய சும்மா சுவர்க் கிறுக்கல்கள் நாளைய கலைப்படைப்புகளாக மாற நிறையவே வாய்ப்பிருக்கிறது. குழந்தைகள் செய்வதையும் சொல்வதையும் முற்றும் சரியல்ல என்று புறந்தள்ளுவதும் நல்லதல்ல என்று தோன்றுகிறது. வளரும் வயதில் லேசான கண்டிப்புடன் கொஞ்சம் சுதந்தரத்தையும் வழங்கும் பட்சத்தில் குழந்தைகள் தங்களின் படைப்புத்திறனை நல்ல முறையில் கூராக்கிக் கொள்ள இயலும். நண்பர் அதை செவ்வனே செய்கிறார்.

நண்பர் வீட்டுக்குப் போன நேரம் கையில் டிஜிட்டல் கேமரா இருந்ததால் குழந்தை ஹரிணியின் சுவரோவியங்களைப் படமாக்கி பிறகு கம்ப்யூட்டரில் அவைகளுக்குப் ஃப்ரேம் எல்லாம் போட்டு மின்னஞ்சலில் அவருக்கு அனுப்பி வைத்தபோது நெகிழ்ந்து சந்தோஷப்பட்டார். பிறகு அவைகளையே கலந்துகட்டி எனது வலைத்தளமான சித்ரன்.காம்-மில் (http://chithran.com) தலைப்பு பேனரிலும் உபயோகப்படுத்திக்கொண்டேன்.ஹரிணியின் அந்த சுவரோவியங்களை இந்தப் பதிவில் ஆங்காங்கே கொடுத்திருக்கிறேன். எப்படியிருக்கிறதென்று சொல்லுங்களேன்!

பையனும் டார்வினும் பின்னே ஞானும்


சென்ற வெள்ளி - சனியில் பன்றிக் காய்ச்சல் எச்சரிக்கைகளையும் மீறி என் பையன் படிக்கும் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. அவன் படிக்கிற ’நாலாப்பு’ சார்பாக கையில் ஒரு ரிமோட் கண்ட்ரோல் எஸ்கவேட்டர் கொடுத்து ஒரு அறையில் நிற்க வைத்துவிட்டார்கள். கண்காட்சிக்கு வருகை புரிபவர்கள் அவனிருக்கிற குறிப்பிட்ட பகுதிக்கு வந்ததும் "This is called excavator. This is used for digging the trenches, holes... " என்று டீச்சர் சொல்லிக்கொடுத்த ப்ளா ப்ளா-க்களை மள மளவென ஒப்பிக்க வேண்டும். (நானே நான்கு தடவை அவனருகில் போய் நின்று “can you please explain this?" என்று கேட்க சின்ன தயக்கச் சிரிப்புடன் சளைக்காமல் விளக்கினான்)

சரி ஸயின்ஸ் எக்ஸ்போவில் அப்படி என்னதான் இருக்கிறதென்று பார்க்கலாமே என்று போனவனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. சும்மா சொல்லக் கூடாது. டீச்சர்களும், மாணவ மாணவிகளும், பள்ளி நிர்வாகமும் ஒன்று சேர்ந்து அற்புதமாகக் கலக்கிவிட்டார்கள். க்ரவுண்ட் ஃப்ளோரில் சிவப்புக் கம்பளம் விரித்து எல்.சி.டி. டிவியில் நிகழ்ச்சிகளின் வீடியோ விரிய, ஸ்பீக்கரில் இசை முழுங்குகிறது. இதை வந்து பாருங்கள் அதை வந்து பாருங்கள் என்று மாடிப் படிகள் முழுக்க மாணவர்கள் தயாரித்து ஒட்டிய விளம்பர நோட்டீஸ்கள். அலங்கார வளைவுகள். கலை நயம். ஜிகினா.

மெட்ரோ ரயில் சிஸ்டம், ஹைட்ரோ பவர் சிஸ்டம், டெலி கம்யூனிகேஷன் நெட்வொர்க், ரோபோட்டிக்ஸ், ஓரிகமி, டேன்கிராம்ஸ், குளோபல் வார்மிங் என்று ஒரு சப்ஜெக்டையும் விட்டு வைக்காமல் பள்ளிக் கட்டிடத்தின் மூன்று தளங்களிலும் கலக்கலான செட்டப்புகள். முக்கால்வாசி சாதனங்களை தெர்மோகோல், ஃபெவிகால், வாட்டர்கலர் கொண்டே தயாரித்து விட்டார்கள். சின்னச் சின்ன பொடிசுகள் லேப்டாப், ப்ரொஜக்டர்கள் எல்லாம் வைத்துக் கொண்டு விண்டோஸ் மூவி மேக்கரில் தயாரித்த வீடியோ படங்களை இயக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தபோது ’ஆச்சரியத்தால் கண்கள் விரிந்தன’ என்று அடிக்கடி இந்த எழுத்தாளர்கள் எல்லாம் எழுதுகிறார்களே அது என்ன என்று புரிந்தது.

ஒவ்வொரு பிரிவிலும் நிற்க வைக்கப்பட்டிருந்த குழந்தைகள் நாம் உள்ளே நுழைந்ததும் போட்டி போட்டுக் கொண்டு “அங்கிள்! (அல்லது ஆண்ட்டி) can I explain this?" என்று கேட்டுவிட்டு ஜெட் வேகத்தில் ஆங்கிலத்தில் குறைந்தது ஐம்பது விநாடிகள் பட்டையைக் கிளப்பிவிட்டு கடைசியில் “தேங்ங்ங்ங்க்க்க்க்க்யூ” என்று ராகம் பாடி முடித்தன. மனப்பாடம் செய்து கொண்டு ஒப்பிக்கிறதுகள் என்றாலும் ஒவ்வொரு டேபிளிலும் பொறுமையாய் அந்த மழலைக் குரல்களை ஓரிரு நிமிடங்கள் கேட்டுக் கொண்டிருப்பது மிகப் பெரிய சுகம். அநியாயத்துக்கு இத்தனை பேர் ’படிப்ஸ்’ஆக இருக்கிறார்களே என்று ஆச்சரியமாக இருந்தது. அதுவும் க்ளோபல் வார்மிங் பற்றி விளக்கின பையனிடம் நான் ஏதோ சந்தேகம் கேட்க. “இட் இஸ் தேர் இன் த இண்டெர்நெட் அங்கிள். யு கேன் டவுன்லோட் இட் ஃப்ரம் தேர்.” என்று முத்தாய்ப்பு வைத்தான். சொல்லி முடித்தபிறகு அவர்கள் நீட்டுகிற Feedback நோட்டுப் புத்தகத்தில் உங்கள் பெயரெழுதி உங்கள் கருத்தை அல்லது பாராட்டை எழுதிக் கொடுத்தீர்களானால் குழந்தைகள் முகத்தில் பொங்குகிற சந்தோஷம் இருக்கிறதே. அப்பப்பா! (சொக்கன் கவனிக்க). நான் நீட்டப்பட்ட நோட்டுகளில் எல்லாம் “excellent presentation" என்று தாராளமாக எழுதிக் கொடுத்தேன். (ஆனால் பாராட்டி கை கொடுத்தால் மட்டும் பன்றிக் காய்ச்சல் பயத்துடன் கையை பின்னுக்கு இழுத்துக் கொள்கிறார்கள். அப்புறம் என்னை நானே திட்டிக்கொண்டு அதை தவிர்க்க ஆரம்பித்தேன்.)

ஆறாங்கிளாஸ் படிக்கிற மூன்று சிறுமிகள் அவர்களின் கிளாஸ்மேட்டுகளான சில வாண்டுப் பையன்களைக் காட்டி “அங்கிள்! கன் வி எக்ஸ்ப்ளெய்ன் அபெளட் தெம்” என்று குசும்புச் சிரிப்புடன் கேட்க, நானும் என்னவென்று புரியாமல் தலையாட்ட, “தெ ஆர் ஆல் மங்கீஸ். தெ ஹவ் எஸ்கேப்ப்டு ஃப்ரம் வண்டலூர் ஜூ. தெ நார்மலி ஈட் பனானாஸ்” என்று கலாய்த்து வெடிச்சிரிப்பு சிரித்தார்கள்.

இதைக் கேட்டதும் ஒரு தடவை என் பையனுக்கும் எனக்கும் இரவு தூக்கம் வருவதற்கு முந்தைய பொழுதில் நடந்த சம்பாஷணை ஞாபகத்திற்கு வந்தது.

நான்: குரங்கிலிருந்து மனுஷன் வந்தான்னு யார் கண்டுபுடிச்சா தெரியுமா?

பையன்: ஆங்... தெரியும். லெஸன்ல இருக்கு. அது வந்து...

நான்: சார்லஸ் டார்வின்

பையன்: ஆ! ஆமா.. டார்வின் தியரி..

நான்: கரெக்ட்டு.. மில்லியன் மில்லியன் வருஷத்துக்கு முன்னால குரங்கா இருந்து அதிலேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா மனுஷன் வந்தான். அப்போ அவனுக்கு உடம்பு பூரா நிறைய முடி இருந்துச்சு. வால் இருந்துச்சு. கை காலெல்லாம் பெருசு பெருசா இருக்கும். மரத்துக்கு மரம் தாவிகிட்டு இருந்தான். அப்றம் அதெல்லாம் போய் இப்போ பாத்தியா இப்ப என்னை மாதிரி ஆயிட்டான்.

பையன்: (மெளனமாய் சில விநாடிகள் யோசித்துவிட்டு) “அப்ப இதுக்கு முன்னாடி நீ கொரங்கா இருந்தியா?”.

அடுத்த ஜெனரேஷன் பசங்களிடம் கொஞ்சம் அல்ல நிறையவே ஜாக்கிரதையாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

புகைப்படக் கலைஞர்கள் மன்னிக்கவும்

Sony Ericsson K750i என்ற கைப்பேசியை இரண்டு வருடங்களுக்குமுன் நான் வாங்கும்போது அதில் 2 mega pixel-களையுடைய ஒரு கேமரா இருக்கிறது என்கிற அம்சம் என்னை வெகுவாக கவரவில்லைதான். இருந்தாலும் அதை வாங்கினபிறகு போகிற வருகிற இடமெல்லாம் கேமரா ஃபோனை வைத்துக் கொண்டு கிளிக்கிக் கொண்டிருப்பவர்கள் வரிசையில் நானும் அப்போது என்னையறியாமலேயே இணைந்துவிட்டிருந்தேன். எடுத்தவைகளை கம்ப்யூட்டரில் போட்டுப் பார்த்தால் ஒரு படம் சுமாராக இருந்தது. ஒரு படம் சுத்த வேஸ்ட் என்று கலவையாய் அதன் ரிஸல்ட் இருந்தது. ரெண்டு மெகா பிக்ஷலுக்கு இவ்ளோதாண்டா என்றுவிட்டு கிடைத்ததையெல்லாம் படம் எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தேன்.

SE-K750i-ல் மேக்ரோ (Macro) என்றொரு அம்சம் இருந்ததும், அதன் அபாரமான பயன்பாடும் மிக தாமதமாக தெரியவந்தது. அதே நேரத்தில் எனக்குள் பாய் போட்டுத் தூங்கிக் கொண்டிருந்த ஒரு புகைப்படக்காரன் கண்ணைக் கசக்கி விழித்துக்கொண்டதும் வந்தது வினை. மேக்ரோ தவிர அதில் பனோரமா (panaroma), எக்ஸ்போஷர் வேல்யூ (EV) அட்ஜஸ்ட்மெண்ட், ஒயிட் பேலன்ஸ் (White balance) என்று என்னவெல்லாமோ இருக்கிறது என்றும் கண்டுகொண்டேன். சர்ரென்று ஆர்வம் உயர புகைப்படக் கலை பற்றி மேலதிக விஷயங்கள் கற்றுக்கொள்ள இணையம் உதவியது. கற்றதை பற்பல காம்பினேஷன்களில் முயற்சித்துப் பார்த்ததில் மொபைலிலேயே சில அபார புகைப்படங்கள் தேறியது எனக்கே ஆச்சரியம்.

அப்புறம் அடுத்த முயற்சியாய் சிங்கப்பூரில் வாங்கிய Sony Cybershot - 7Mega Pixel கேமரா என் ஆர்வத்தீயை மேலும் கிளறிவிட்டது. கேமரா என்பது வெறும் ஒருகருவிதான். அதில் எடுக்கப்படும் ஒரு படம் அசத்தலாக அனைவரும் பாரட்டும்படி அமைவது என்பது கேமராவிலுள்ள செட்டிங்குகளை நாம் எவ்வாறு கையாள்கிறோம் என்பதையும், நமது கிரியேட்டிவிட்டியையும் பொறுத்தே அமைகிறது என்பது புரிந்தது. இந்த விஷயத்தை எனக்குக் கற்றுக் கொடுத்தவர் நண்பர் கெளதம். அவரைப் பற்றி இங்கே லேசாகவாவது சொல்லவேண்டும். அவர் ஒரு Oceanographer. அடிப்படையில் பொறியாளரான கெளதம், அவரது தொழில் தவிர இன்னபிற ஏனைய விஷயங்களில் அவர் காட்டும் ஆர்வத்தைப் பார்த்து நான் வியந்து போயிருக்கிறேன். சதா சர்வ நேரமும் எதையாவது ஒரு விஷயத்தைக் கற்றுக் கொண்டேயிருப்பவர். அதில் மிகத் தீவிரமான ஹாபியாக அவர் மேற்கொள்வது 1. ஃபோட்டோகிராபி. 2. பறவைகள் / பூச்சிகள் பற்றிய விஷயங்கள்(Birds/insects watching).

உதாணத்துக்கு ஒன்று சொல்கிறேன். ஒரு தும்பியை (Dragon Fly) எடுத்துக்கொள்ளுங்கள். அதன் வகைகள், அது எங்கேயெல்லாம் காணப்படும், எங்கே உட்காரும், என்ன சாப்பிடும், அதன் உடல் அமைப்பு என்ன, அது வாலைத்தூக்கிக்கொண்டு கிளையில் உட்கார்ந்து கொண்டிருந்தால் என்ன அர்த்தம் என்று புட்டுப் புட்டு வைப்பார். அதை நேக்காக எப்படி மேக்ரோ லென்ஸ் உபயோகித்து மிகத்துல்லியமாக புகைப்படம் எடுப்பதென்பதெல்லாம் அவருக்குத் தண்ணி பட்ட பாடு. Canon 40D என்றொரு டிஜிட்டல் எஸ்.எல்.ஆர் கேமராவோடு மேக்ரோலென்ஸுகள், ஜூம் லென்ஸுகள், ட்ரைபாட் (Tripod) என்று ஒரு பை நிறைய அவர் வைத்திருக்கிற விஷயங்கள் ஒரு லகரத்தைத் தாண்டும். மொத்தத்தில் மிக சுவாரஸ்யமான மனிதர்.

கொஞ்ச நாள் முன்பு ஃபோட்டோகிராபி பற்றி எதையாவது சொல்லிக் கொடுங்கள் என்று அவரிடம் நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க, நானும் அவரும் இன்னொரு நண்பருமாக கிண்டி சிறுவர் பூங்காவுக்கு ஒரு ஃபோட்டோ செஷனுக்காக போயிருந்தோம். என்னுடைய சின்ன டிஜிட்டல் கேமராவை வைத்துக்கொண்டே செய்யக் கூடிய வித்தைகள் என்னென்ன என்று தெளிவாக துல்லியமாக சொல்லிக் கொடுத்தார். Focus, Aperture, Metering Mode, ISO, Histogram என்று அதில் இன்னும் எவ்வளவு விஷயங்கள் இருக்கிறது பாருங்கள். இவைகளை வைத்துக்கொண்டே ஒரு நல்ல புகைப்படம் எடுப்பது எப்படி? EV, ISO-க்களை அட்ஜஸ்ட்செய்யும் போது கிடைக்கக் கூடிய விளைவுகள் யாவை, கேமராவுக்குள் என்னென்ன செட்டிங்குகளில் என்னென்ன நடக்கிறது? DOF என்பது யாது? எடுக்கிற புகைப்படம் மசமசவென்று வராமல் தெளிவாக நச்சென்றிருக்க என்ன செய்யவேண்டும்? எந்தெந்த வெளிச்ச நிலைகளில் எப்படிக் கையாளவேண்டும் என்று நிறையக் கற்றுக் கொடுத்தார்.

பொறுமையாய் கற்றுக் கொண்டேன். என்றாலும் அவர் கழுத்தில் தொங்குகிற DSLR கேமராவையே நாள் முழுவதும் பொறாமையுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். அடுத்தது அதுதான் என்று முடிவு செய்துவிட்டேன். வீட்டிற்குள் கிடைத்ததை வைத்துக் கொண்டு நான் செய்கிற புகைப்பட சோதனை முயற்சிகளை மகனும் மனைவியும் வேதனையுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். தொடர்ந்த ஆராய்ச்சியின் பயனாக கொஞ்சம் வித்தியாசமாய் முயற்சித்ததில் சிலதெல்லாம் நன்றாகவே வந்துவிட்டது. ஃபோட்டோஷாப் என்கிற "image editing" மென்பொருளைத் தெரிந்து வைத்திருப்பது இன்னும் கூடுதல் செளகரியம். கேமராவில் சொதப்பியதை அதில் "post processing" என்று சரி செய்துகொள்ளலாம்.

புகைப்படக்கலையில் நான் ஒரு கற்றுக்குட்டிதான் என்றாலும், உங்கள் ஹாபி என்ன என்று யாராவது கேட்டால் இதையும் சொல்லுமளவுக்குத் தேறியிருக்கிறேன். அந்தப் புகைப்படங்களை என் ஃப்ளிக்கரில் பக்கத்தில் (Flickr) காணலாம். கேமரா ஃபோனும், டிஜிட்டல் கேமராக்களும் மலிந்து போன இந்தக் காலகட்டத்தில் எல்லாருமே எப்படி புகைப்படக்காரர்களாகிப் போனார்கள் என்று ஏற்கெனவே ஒரு சின்ன பதிவு எழுதியிருக்கிறேன். ஆகவே இப்போதெல்லாம் சும்மா அப்படி இப்படி விரயமாய் மனைவி, மகன், நாய், பூனைஎன்று கிளிக்கிக் கொண்டிருக்காமல் கொஞ்சம் வித்தியாசமாய் கோணங்கள் அமைத்து நான் இந்தப் பதிவில் ஜல்லியடித்திருக்கிற விஷயங்களுடன் கொஞ்சம் முயற்சித்துப் பார்த்ததில் புகைப்படமெடுப்பதில் எப்படியாவது அமெச்சூரிலிருந்து நிபுணர் ஆகிவிடுவேன் என்றுதான் தோன்றுகிறது.

ஆக, கையில் கேமராவை வைத்துக்கொண்டு எங்கேயாவது எப்போதாவது ஒரு புகைப்படக்காரர் தீவிரமாக எதையாவது ‘Focus' செய்துகொண்டிருந்தால் தயவுசெய்து தொந்தரவு செய்யாதீர்கள். ஹி.ஹி! அது நானாகக் கூட இருக்கலாம்.

கலையும் கலை சார்ந்த இடமும்

சென்னை கவின் கலைக் கல்லூரிக்கு (Madras Collage of Fine Arts) எதையாவது சாக்கிட்டு ஒரு முறையாவது போய்வர வேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசையாக இருந்தது. பின்னே ஓவியத்தின்பால் கொஞ்சம் ஆர்வம் வைத்திருக்கிற நான், அதுவும் சென்னையிலேயே இருந்துகொண்டு இதைப் பண்ணாமலிருந்தால் எப்படி?

போன வாரம் அந்த வாய்ப்புக் கிடைத்தது. ஆபிஸில் திடீரென கரெண்ட் கட்டாகி சும்மா உட்கார்ந்திருந்த நேரத்தில் போகலாமா என்று பாஸ் கூப்பிட்டார். ஆனால் சும்மா அல்ல. சந்தோஷ் என்கிற ஒரு நண்பன் கவின்கலைக் கல்லூரி வளாகத்திற்குள் வைத்திருந்த புகைப்படக் கண்காட்சியை பார்ப்பதற்கு.

நான் முன்பே எதிர்பார்த்திருந்த மாதிரி இல்லாமல் வேறு விதமான தோற்றத்தோடு இருந்தது கவின் கலைக் கல்லூரி. ஒரு குறுகலான கேட்டைத் தாண்டிப் போனால் அதற்கப்புறம் அதிகம் நடக்கிறதுக்கு வகையில்லாமல் உடனடியாக கட்டிடங்கள் வந்துவிடுகின்றன. சந்தோஷின் புகைப்படக் கண்காட்சி வாசலை ஒட்டின ஒரு ஹாலிலேயே இருந்தது. நல்ல கான்ட்ராஸ்ட்டுடன் கூடிய அழகிய புகைப்பட முயற்சிகள். இன்னும் உழைத்தால் பெரிய அளவில் வர வாய்ப்பு உண்டு.

கல்லூரி வளாகத்தினுள் நிறைய மரங்கள். மரங்கள் உதிர்த்த ஏராளமான சருகுகள். வளாகம் சுத்தம் செய்யப்பட்டு ஒரு மாமாங்கம் இருக்கும் என்றாலும் அதுவே அந்த சூழ்நிலைக்கு ஒரு இயற்கை அழகுபோல் பொருந்தியிருக்கிறது. மரங்களுக்கு நடுவில் ஆங்காங்கே முழுசாகவும், சிதைந்தும் நிறைந்து கிடக்கிற சிலைகள். எல்லாம் மாணவர்களாலோ அல்லது ஆசிரியர்களாலோ உருவாக்கப்பட்டவை. பல கோணங்களில் பல போஸ்களில் ஒரு முதியவர் சிலை ஆங்காங்கே கண்ணில் பட்டது. அந்தப் பெரியவர் அந்த கல்லூரிக்கு மாடலாக வேலை செய்கிறவராம். ரொம்பத் தள்ளாடி பலவீனமாக நடந்துவரும் அந்தப் பெரியவர் ஓய்வு நேரங்களில் எப்போதும் ஏதாவது குறுகிய இடத்திலேயே உடலைச் சுருக்கிக் கொண்டு உட்கார்ந்து டீ குடிப்பாராம். ஆனால் மாடலிங் க்ளாஸ் நடக்கும்போது ஆயிரம் வாட்ஸ் வெளிச்சத்தில் ஒரே கோணத்தில் அசையாமல் மூன்று நான்கு மணி நேரம்கூட உட்கார்ந்திருப்பாராம்.

மரத்தடியில் அரட்டையடித்தபடி மாணவர்களில் அதிகம்பேர் பெண்பிள்ளை மாதிரி நடுமுதுகு வரை தலைமுடி வளர்த்தியிருந்தார்கள். சிலபேர் குடுமி அல்லது கூந்தலை நன்றாகச் வாரி ரப்பர் பேண்ட் போட்டிருந்தார்கள். (போனி டெய்ல்?) அதிக பட்ச உடை ஜீன்ஸ் மற்றும் பனியனாக இருந்தது. தாங்கள் கலைஞர்கள் என்றோ மற்றவர்களிடமிருந்து ஏதோ ஒன்றில் வித்தியாசப்படுகிறோம் என்கிற செய்தி அறிவிப்பு அவர்களின் நடை, உடை, பாவனைகளில் இருக்கிறது. எனக்குத் தெரிந்த ஓவிய நண்பர்கள் ஓரிருவர்கூட அவ்வாறேதான் இருக்கின்றனர். நிறைய தலைமுடியும், மீசையும் தாடியும் எப்போதும் கலையின் அடையாளச் சின்னம் போலும்.

இன்றைக்கு க்ளாஸ் எதுவும் இல்லையா என்று சந்தோஷிடம் கேட்டபோது, இரண்டாம் வருடம் முதல் அப்படியொன்றும் கட்டாயமாய் மாணவர்களை உட்கார வைத்து வகுப்பெடுக்கிற வழக்கம் கிடையாது என்றும், கல்லூரி நேரங்களில் புற உலகிற்குப் போய் தாமாகவே பார்த்தும், கேட்டும் பயிற்சி செய்தும் கற்றுக்கொள்கிற சுதந்திரம் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறதென்றும் சொன்னான்.

அப்புறம் கொஞ்சமாய் அவர்கள் கவின்கலை உலகின் கூடங்களை ஒரு வலம் வந்தோம். முதலில் சிலைகள் உருவாகிற இடம். மான், மனிதன் என ஏகப்பட்ட ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மோல்டுகள். க்ளே மாடலிங் பண்ணுவதற்கு நிறைய களிமண் கொட்டப்பட்டிருந்தது. செய்கிற சிலைகளுக்கு சப்போர்ட்டாக வளைக்கப்பட்ட கம்பிகள் ஆங்காங்கே. குவிந்து கிடக்கிற மோல்டுகள். எல்லாக் கூடங்களும் இயற்கையாய் அதனதன் லட்சண சொரூபத்துடன் பழமை கவிந்து கிடக்கின்றன. நீங்கள் சினிமாவில் பார்த்து மகிழ்ந்திருக்கும் வில்லன்களின் அல்லது தீவிரவாதிகளின் கொட்டடி போன்ற தோற்றத்துடனேயே எல்லாக் கூடங்களும், அவற்றிற்குப் போகிற வழிகளும் இருந்தன என்றாலும் அப்படி இயல்பாய், இயற்கையாய் இருப்பதே அந்த கலை சார்ந்த இடத்தின் மதிப்பையும் சிருஷ்டிப்புத் தன்மையும் கூட்டுகிற விதமாய்த் தோன்றியது. எத்தனையெத்தனையோ பெரிய கலைஞர்களையும், ஓவியர்களையும் உருவாக்கிய இடமல்லவா அது.

திரும்பிய பக்கமெல்லாம் சுவர்களில் (ஒரு இடம் விடாமல்) ஓவியக் கிறுக்கல்கள். க்ளேஸ், களிமண், ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் இன்ன பிற பொருட்கள் உபயோகித்து ஆங்காங்கே கூடங்களின் மூலைகளில் சில மாணவர்கள் சின்னச் சின்னதாய் சிலை முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். ஒரு க்ளே மாடலிங் கூடத்திலிருந்து சாவதானமாய் வெளிவந்த நாயைப் பார்த்து நான் புருவம் உயர்த்தியபோது, அது நாய் அல்ல எங்களின் மாடல் என்று பதில் வந்தது. உள்ளே மாணவர் ஒருவர் விதவிதமாக ஒரே நாயை பல போஸில் களிமண்ணால் சின்னச் சின்னதாக சிலையாகப் பண்ணிக்கொண்டிருந்தார். படுத்திருக்கிற மாதிரி, தலையை சொறிவது மாதிரி, சோம்பல் முறிப்பது மாதிரி, நின்று முறைப்பது மாதிரி என நிறைய. அந்த நாயை ஐந்து மாதமாக ஸ்டடி செய்து பண்ணினதாம். Every dog has a day என்று இதைத்தான் சொல்கிறார்களா?

நேரமாகிவிட்டது என்பதால் ஓவியக் கூடங்களை இன்னொரு நாள் வந்து பார்க்கலாம் என்று ஆபிஸூக்குத் திரும்பி வந்துவிட்டோம். திரும்பும்போது வாழ்க்கையில் ஏதோ ஒரு பெரிய விஷயம் கிடைக்காமல் போனமாதிரி ஒரு இழப்பின் பரிதவிப்பு. இன்னும் அணையாமல் மனதின் ஏதோ ஒரு மூலையில் சுடராய் எரிந்துகொண்டிருக்கிற ஓவியத் தாகம்தான் அன்றைய தினம் என்னை அங்கே கொண்டு போயிற்று எனலாம். கதைகளும் நாவல்களும் படிக்க ஆரம்பித்தது மாதிரியே ஓவியம் வரைய ஆரம்பித்ததும் கூட ஆறாங்க்ளாஸில்தான் என்று சொல்லலாம். முதலில் ஒரு மான் வரைந்து கலரடித்தது ஞாபகம் இருக்கிறது. அப்படியே கிறுக்கிக்கொண்டிருந்ததில் சித்திரம் கைப்பழக்கம் ஆகியிருந்ததால் என்ஜினியரிங் படிக்கும்போது ட்ராயிங் க்ளாஸில் வரும் ஆர்தோக்ராஃபிக் ப்ரொஜக்ஷன், ஐஸோமெட்ரிக் ப்ரொஜக்ஷன் எல்லாம் என்னை அத்தனை பயமுறுத்தியிருக்கவில்லை. அரஸ், மணியம் செல்வம் போன்றோரின் ஓவியங்களையெல்லாம் பார்த்து அச்சு அசலாக வரைகிற என் கைத்திறனை மூக்கின் மேல் விரல்வைத்து வியக்கிறவர்களுக்கு அத்தனை ஓவிய ஞானம் இல்லாமலிருந்ததால் தப்பித்தேன். கிடைத்த இடத்திலெல்லாம் தவறாமல் பெண் படம் வரைகிற பழக்கத்தை அப்பாகூட எப்போதும் வன்மையாகக் கண்டித்தவண்ணம் இருந்தார். அப்புறம் எந்த வீட்டுக்குக் குடிபோனாலும் அடுப்புக் கரி கொண்டு சமையலறை சுவரில் தத்ரூபமாய் ஒரு கண் வரைந்து வைப்பேன். (பெண்ணின் கண்தான்). மனதில் இலக்கிய ஆர்வம் கவிந்தபிறகு நண்பர்கள் சேர்ந்து உருவாக்கிய கையெழுத்துப் பத்திரிக்கையில் நானே ஆஸ்தான ஓவியன்.

பின்னாளில் அட்வர்டைஸிங் துறைக்கு வந்ததும் அப்புறம் க்ராபிக்ஸ் மல்டிமீடியா என்று தாவினதுக்கும் என் ஓவியப் பயிற்சிகள்(!) நிச்சயம் துணை புரிந்தன எனலாம். இருந்தாலும் முறையாக ஓவியம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று மனதின் ஓரத்தில் லேசாய் ஒரு ஆசை இருந்தது. முடியவில்லை. இப்போதெல்லாம் என்றைக்காவது ஒரு நாள் பென்ஸிலையும் பேப்பரையும் எடுத்து வைத்துக்கொண்டு ஒரு அரைமணி நேரம் கிறுக்கினாலே ஜாஸ்தி. அத்தோடு என் ஓவிய தாகம் அணைந்துவிடுகிறது.

வாய்ப்பு அமைந்தால் எனக்கென்று ஒரு தனி அறை அமைத்துக்கொண்டு, அறை மத்தியில் (அல்லது மூலையில்) ஓவியம் வரைவதற்கான ஈஸல், பேலட்டுகள், தூரிகைகள், வாட்டர்கலர்கள், ஆயில் பெயிண்டிங் கலர்கள், கொஞ்சம் கேன்வாஸ், லின்ஸீட் ஆயில் இன்னபிறவற்றை கடைபரப்பிக் கொண்டு கொஞ்ச நாள் வாழவேண்டும் என்று என்னிடம் கனவொன்று இருக்கிறது. அங்கே நான் எதுவும் வரையாவிட்டாலும் பரவாயில்லை.

மாயாஜாலம்

எங்களுக்கு வில்சன் என்றொரு நண்பர் இருந்தார். கவனிக்கவும். 'எங்களுக்கு' என்று குறிப்பிட்டிருக்கிறேன். காரணம் எனக்கு மட்டுமே அவர் நண்பரல்ல என்பதுதான். எங்கள் செட்டான ஒரு ஐந்தாறு பேருக்கும் பொதுவான நண்பர் அவர். சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன் நாங்கள் வசித்துக் கொண்டிருந்த காலனிக்கு சற்றுத் தள்ளி நெடுஞ்சாலையில் அவர் வீடிருந்தது. வில்சன் எங்களையெல்லாம் விட பல வயது மூத்தவர் என்பதால் நாங்கள் எல்லோரும் அவரை அண்ணா என்றுதான் அழைப்போம். அவரும் ஒரு அளவிடற்கரிய ஸ்நேகத்துடன் 'தம்பிகளா..' என்று எங்களை அழைப்பது நன்றாய் இருக்கும். அடர்த்தியாய் தாடிவிட்டுக்கொண்டு, சற்றே உயரமாய் கொஞ்சம் மீடியம் உடம்புடன் இருப்பார். சற்றே பிசிறடித்த ஆனால் கம்பீரமான குரல் அவருடையது.

வில்சன் ஒரு மேஜிக் நிபுணர். கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட சுற்றுவட்டாரத்தில் அப்போதே 250-க்கும் மேற்பட்ட மேடைகளில் அவர் மேஜிக் நிகழ்ச்சி பண்ணியிருந்தார். நீங்கள் வழக்கமாய் மேஜிக் ஷோ-க்களில் கண்டு ரசித்திருக்கும் தொப்பிக்குள்ளிருந்து புறா எடுப்பது. சீட்டுக் கட்டுகளைக் கொண்டு வித்தை காண்பிப்பது, வாய்க்குள்ளிருந்து கோழி முட்டைகளை எடுத்துக்கொண்டேயிருப்பது, நியூஸ்பேப்பரை விரித்துக் காண்பித்துப் பின் அதை மடக்கி அதனுள்ளிருந்து தண்ணீர் கொட்டவைப்பது போன்ற வழக்கமான ஐட்டங்களோடு பெட்டிக்குள் ஆளை நிற்கவைத்து ரம்பம் வைத்து அறுத்து நாலைந்து துண்டாக்கிவிட்டுப் பின் ஆளை மறுபடி உயிரோடு(!) கொண்டு வருதல் போன்ற மெகா மாயாஜாலங்களையும் மேடைகளில் செய்வார். நிகழ்ச்சிகளின்போது கோட்டு சூட்டெல்லாம் போட்டு தலையில் நீளத் தொப்பி, கையில் மந்திரக்கோல் என்று ஃப்ரொப்ஷனலாகத்தான் தோன்றுவார். என்னதான் எங்கள் நண்பர் என்றாலும் எவ்வளவோ மன்றாடியும் அவர் பண்ணுகிற மேஜிக் ரகசியங்களைப் பற்றி மூச்சுவிட மாட்டார். போனால் போகிறதென்று ஒரு நாலணா காசை முழங்கையில் தேய்த்துத் தேய்த்து எப்படி மறைய வைப்பது என்கிற ட்ரிக்கை மட்டும் சொல்லிக் கொடுத்தார். வெகு சுலபமாக நான் கற்றுக் கொண்ட அந்த வித்தை குழந்தைகளிடம்தான் செல்லுபடியாகும். பெரியவர்கள் புத்திசாலிகளாக இருந்தால் கண்டுபிடித்துவிடுவார்கள். காலனி முக்கில் நாங்கள் கூடிப் பேசிக்கொண்டிருக்கிற இடத்துக்கு அவர் வந்து நின்றால் சடக்கென்று ஏதாவது எளிய வித்தை செய்து காட்டி அசத்துவார். உதாரணம் : என் சட்டைப் பாக்கெட்டில் கைவிட்டு பத்து ரூபாய்த்தாள் எடுத்து அதை நான்காக மடித்து வலது கை ஆள் காட்டி விரலுக்கும், நடு விரலுக்கும் இடையே வைத்து விஸ்ஸ்க் என்று இடதுகை உள்ளங்கையில் தட்டினார். மறுநொடி ரூபாய் நோட்டு அவரது இரண்டு கைகளிலும் இருக்காது. பத்து ரூபாயைத் திருப்பித் தரவேண்டுமானால் என் அப்பாவிடம் சொல்லி அவரிடம் டி.வி கேபிள் கனெக்ஷன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். ஆம். அவர் அந்த ஏரியாவுக்கு கேபிள் கனெக்ஷன் கொடுக்கிற வேலையையும் பார்த்து வந்தார்.

கேபிள் கனெக்ஷன் என்றால் அப்போதெல்லாம் தூர்தர்ஷன் தவிர எதுவும் கிடையாது. ஆனால் அதில் வெள்ளிக் கிழமை எட்டு மணிக்குப் போடுகிற ஒலியும் ஒளியும் பார்ப்பதற்கே எல்லார் வீட்டிலும் அப்படியொரு முன்னேற்பாடு நடக்கும். வில்சன் ஒவ்வொரு மதியமும் சினிமா வீடியோ கேசட்டுகளை வைத்து அவர் வீட்டிலிருந்தே ஒளிபரப்ப அது காலனி முழுக்க எல்லோருடைய டி.வியிலும் தெரிகிற டெக்னலாஜியை வியந்துகொண்டிருந்தோம். ஒரு தடவை கார்த்திக் படமான இரட்டைக் குழல் துப்பாக்கி என்கிற படத்தை கேபிளில் ஒளிபரப்பி காலனி தாய்மார்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட சம்பவமும் உண்டு. அப்போது சன் டிவியெல்லாம் கிடையாது. ஆனால் வில்சன் சன் டி.வி-யின் (ராஜ்?) முதல் முயற்சியான 'பூமாலை' என்கிற கேசட்டை போட்டு அவ்வப்போது ஒளிபரப்புவார். நாட்டு நடப்புகள், இசை நிகழ்ச்சிகள், காமெடி ஷோ, சினிமா பாட்டு என்று கலவையாய் மாதமொருமுறை தொகுத்து கேசட் வடிவில் வெளியிடப்பட்டுக் கொண்டிருந்ததுதான் பூமாலை என்று பெயரிடப்பட்ட அந்த கேசட். அதுதவிர வில்சன் புண்ணியத்தில் தூர்தர்ஷனில் ஞாயிறு மதியம் 1.00 மணிக்கு NFDC படங்களான எல்லா ஆர்ட் ஃபிலிம்களையும் உட்கார்ந்து பார்ப்போம். ஒன்றும் புரியாவிட்டாலும்.

வில்சன் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் விழா மேடைகளில் தோன்றி மைக் பிடித்து கம்பீரமாய்ப் பேசுவார். பேசுகிற விஷயங்களில் நிச்சயம் சமூக அக்கறை தொனிக்கும். அவர் பொள்ளாச்சியில் 'மனிதம் சேவை மையம்' என்கிற சமுக அமைப்புக்குத் தலைவராக இருந்தார். அவ்வப்போது நகரில் ரத்ததான முகாம், இலவச கண் பரிசோதனை முகாம் நடத்துவது, ஆதிவாசிகள் மற்றும் மலைவாழ் மக்களுக்கு உடைகள் சேகரித்துக் கொடுப்பது போன்ற காரியங்களில் தீவிரமாய் ஈடுபட்டிருந்தார். நாங்களெல்லோரும்கூட மனிதத்தில் உறுப்பினராகி அவருடன் சேர்ந்து சுற்றி சமுக சேவை செய்துகொண்டிருந்தோம். அவ்வப்போது ஆட்டோவில் மைக் வைத்து அறிவித்துக்கொண்டு சுற்றியிருக்கிற காலனிகளில் வீடுவீடாகப் போய் உடைகள் சேகரித்து ஆதிவாசிகளுக்கு கொண்டுபோய் வழங்குவோம். தவிர மனிதம் வெளியிட்டுக்கொண்டிருந்த "மனிதம் செய்திகள்" என்கிற சிற்றிதழில்(?) சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சமுக ஆக்கப்பணிகள் பற்றிய விவரங்கள் போக மீதி இருந்த இடத்தில் நாங்கள் கதை, கட்டுரை, கவிதைகள், படித்ததில் பிடித்தது, ஜோக்ஸ் என்று எதையாவது எழுதுவோம். சரசுராம் இதற்கு ஆசிரியராய் இருந்தார். ராஜீவ் காந்தி இறந்த சமயத்தில் அவர் எழுதின உருக்கமான கட்டுரையை முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் D.R. கார்த்திகேயன்கூட படித்துப் பாராட்டினார்.

ஒரு தடவை சாயங்காலம் ஐந்து மணிக்கு வில்சன் வேகமாய் வந்து நெகமம் அருகில் சேரிபாளையம் என்கிற ஊரில் நடக்கிற நவராத்திரி கலை விழாவில் அன்றைக்கு அவரின் மேஜிக் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதன்கூடவே நீங்களெல்லாம் சேர்ந்து சைடில் கலை நிகழ்ச்சி செய்கிறீர்களா என்று கேட்டார். ஏழு மணிக்கு ப்ரோக்ராம் என்றார். இரண்டு மணி நேரத்திக்குள் என்னத்தைத் தயார் பண்ணுவதென்று எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் அரை மனதாய் சரி என்று தலையாட்டிவிட்டு பரபரவென்று இரண்டு மணி நேரத்துக்குள் டாக்டர் கடீஸ்குமார் என்கிற காமெடி நாடகத்தை நான் மற்றும் நண்பர்களான ராம் (சரசுராம்), மீனாட்சி சுந்தரம் உட்கார்ந்து எழுதி முடித்துவிட்டோம். ஒரு சில நண்பர்களை வைத்து கடகடவென்று ஏழு மணிக்குள் ரிகர்சலும் பார்த்து வில்சனுடன் வேனில் கிளம்பிவிட்டோம். நான் அதில் ஒரு நோயாளி கேரக்டர். கூடவே நரம் தினசரி கேட்கிற ரேடியோ செய்திகளை நகைச்சுவையாய்த் திரித்து நான் அதை வாசிப்பது என்றும் முடிவு செய்து, வண்டி சேரிபாளையம் போய் சேர்வதற்குள் ராம் ஒரு முழு வெள்ளைத்தாளில் அதை இரண்டு பக்கத்துக்கு எழுதியும் கொடுத்துவிட்டார். அதோடு 'டிஸ்கோ டான்ஸ் ஆடிக் கலக்குகிறேன்' என்று தானாக முன்வந்த மஞ்சு என்ற பொடியனும் வேனில் ஜிகினா உடை சகிதம் தொற்றிக் கொண்டான்.

மின்நகர் கீதம் குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் இன்னும் சில நொடிகளில் ஆரம்பம் என்று மைக்கில் அமர்க்களமாய் அறிவித்துவிட்டு ஆரம்பித்தோம். அன்றைக்கு சேரி பாளையத்தை ஒரு வழி பண்ணிவிட்டோம் என்றுதான் சொல்லவேண்டும். மஞ்சு என்கிற அந்தப் பையன் அப்போது சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்த ஹாசன் ஜகாங்கீரின் "ஹவா ஹவா" பாட்டுக்கு அட்டகாசமாய் டான்ஸ் ஆடி பின்னி எடுத்துவிட்டான். அவசரகதியில் பண்ணின இந்த ஏற்பாடுக்கு அத்தனை வரவேற்பா என்று சத்தியமாய் நம்பமுடியவில்லை எங்களால். கொஞ்சம் கற்றுக்குட்டித்தனமாகவே இருந்தாலும் எங்கள் நாடகத்தையும், நியூஸையும் ரசித்துப் பார்த்த / கேட்ட சேரிபாளையப் பொதுமக்கள் சிரித்த சிரிப்பு இன்னும் மனதுக்குள் பத்திரமாய் இருக்கிறது. வில்சனுக்கோ ரொம்ப சந்தோஷம். இதற்கு நடுவே இப்போது நினைத்தாலும் நாங்கள் விழுந்து விழுந்து சிரிக்க நேரிட்ட சில வெளியே சொல்ல முடியாத சம்பவங்களும் நடந்தன.

அதற்கப்புறம் வில்சன் மேஜிக் ஷோ போகிற இடத்துக்கெல்லாம் எங்களைக் கூப்பிட ஆரம்பித்தார். நாங்கள் பிறகு நான்கைந்து மேடைகளில் வில்சன் தயவால் இன்னும் சில அயிட்டங்கள் சேர்த்து எங்கள் கலைத்திறமையைக் காட்டினோம். பிறகு பொள்ளாச்சி காந்தி மண்டபத்தில் நடைபெற்ற புத்தாண்டுக் கலைநிகழ்ச்சியில் நண்பனொருவன் டயலாக்கை முழுங்கிவிட்டு பேந்தப் பேந்த முழிக்க, ஆடியன்ஸிடமிருந்து விசிலும் கூக்குரலும் வர அத்தோடு எங்கள் கலைப் பயணம் முடிவுற்றது. இந்தக் கூத்துக்கெல்லாம் இப்போது இணையத்தில் எழுதும் எழுத்தாளர் ஒருவரும் சாட்சியாக இருந்தார்.

சுகமான நினைவுகளை ஞாபகப்படுத்தும் பழைய உருப்படிகளை எப்போதும் பத்திரப்படுத்தி வைக்க நினைக்கும் என்னிடம் 'மனிதம் செய்திகளின்' ஒரு சில பிரதிகளும், ஏழெட்டு மேடைகளில் நான் வாசித்த நகைச்சுவை செய்திகளின் பிரதியும் இருக்கின்றன. இரண்டு வருடங்களுக்குமுன் நான் பணியாற்றிய கம்பெனியின் "கெட்-டுகதர்" ஹோட்டல் ப்ரீஸில் நடந்தபோது செய்தி வாசித்ததில் கொஞ்சமாய் சிரித்துவைத்தார்கள். விரும்பிக் கேட்கிற நேயர்களுக்கு Footer-ல் காப்பிரைட் சித்ரன் என்று போட்டு அந்த செய்திகள் ரகசிய ஈமெயிலில் அனுப்பிவைக்கப்படும். செய்திகள் வாசிப்பது ரகுநாதவர்ம விஜயபுர சேதுபதி கணேச சுந்தரபாண்டிய குலோத்துங்க வீர வெங்கடேஷ்வர யோகி ஜகந்நாத சூர்யகாந்திப் பிரகாசராவ்....

நண்பர்கள் வேலை நிமித்தம் ஆளுக்கொரு திசைக்குப் பிரிந்தபிறகு வில்சனைப் சந்திக்கமுடியவில்லை. விசாரித்தபோது அவர் சொல்லாமல் கொள்ளாமல் வேறு ஏதோ ஊருக்கு குடும்பத்துடன் காலிபண்ணிவிட்டுப் போய்விட்டதாகப் பின் தகவல் கிடைத்தது. அவரிருக்கிற இடம் யாருக்கும் தெரியவில்லை. மனிதம் சேவை மையம் இப்போது இல்லை. வில்சனிடமிருந்து கற்றுக்கொண்ட ஒரே ஒரு நாலணா மேஜிக்கை இப்போது சமயம் கிடைக்கும் போதெல்லாம் என் பையனுக்கு செய்து காண்பித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த மாதிரி நட்புகள் என்னிடமிருந்து காணாமல் போகிறதா அல்லது நான்தான் அவர்களிடமிருந்து காணாமல் போய்விடுகிறேனா என்று எப்போதுமே எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. ஏதாவது மேஜிக் பண்ணி அவர்களை என் முன்னால் வரவழைத்துவிட முடியாதென்பது தெரியும். தேடினால் நிச்சயம் கிடைப்பார்கள்.