Showing posts with label Norman's Door. Show all posts
Showing posts with label Norman's Door. Show all posts

நார்மனின் கதவு

”சாராபாய் ஹால் எங்க இருக்கு?” சென்ற ஞாயிற்றுக்கிழமை IIT Madras Research Park வளாகத்திற்குள் குறைந்தபட்சம் ஐந்து செக்யூரிட்டி ஆசாமிகளிடமாவது இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பேன். கல்லூரி மாணவர்களுக்கு ஒரு வகுப்பெடுப்பதற்காக அங்கே சென்றிருந்தேன். மேற்படி கேள்விக்கான பதிலாக குணா படத்தில் ”பார்த்த விழி பார்த்தபடி” பாடல் துவங்கும்முன் கமலஹாசனுக்கு எல்லோரும் அபிராமி இருக்கும் திசையைக் கை காட்டுவார்களே, அந்த மாதிரி கை காட்டினார்கள். ஆனால் வெவ்வேறு திசைகளில்.

அவர்கள் கை நீட்டலைப் பின்பற்றி முதலில் ஒரு கட்டிடத்தை எட்டிப்பார்த்து அங்கே சாராபாய் இல்லை என்று தெரிந்து கொண்டு, பிறகு அடுத்த கட்டிடத்திற்குள் கண்ணாடிக் கதவைத் திறந்து பார்த்தால் அது ஃபுட் கோர்ட். பிறகு எதிர்பக்கமிருக்கும் கட்டிடத்திற்குச் சென்று அங்கு வாசலில் வீற்றிருக்கும் வட இந்தியக் காவலாளியிடம் கேட்டால், ”மெயின் எண்ட்ரன்ஸ் ஜாயியே” என்றான். எல்லா வாசல்களும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்க எது மெயின் எண்ட்ரன்ஸ் என்பதில் குழப்பமாயிருந்தது. ஒரு வழியாக கட்டிடத்தின் இன்னொரு பகுதியில் ’சாராபாய்’ என்று போர்டு போட்ட அந்தக் ஹாலை கண்டுபிடித்து விட்டேன். போர்டானாது ஒருவர் கண்ணுக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதில் சிரத்தையெடுத்திருந்தார்கள். ஒரு ஜாமெட்ரி பாக்ஸ் சைஸ்தான் இருக்கும். இந்த இடத்தை அடைய ஒரு இருபது நிமிடங்களாவது தேடி நடந்திருப்பேன். என்ன காரணம்? 1) வளாகத்தில் எந்த இடத்திலும் எது எங்கே இருக்கிறது என்ற அறிவிப்புப் பலகைகளோ அம்புக்குறிகளோ இல்லை. 2) அங்கே வேலை செய்யும் வட இந்திய செக்யூரிட்டிகளுக்கு சாராபாயைத் தெரிந்திருக்கவில்லை.

சாராபாய் ஹாலுக்குள் நுழைய இரண்டு கதவுகள் இருந்தன. முதலாவது ஒரு கண்ணாடிக் கதவு. இரு புறமும் திறக்கலாம். கைப்பிடியைப்பிடித்து முன்பக்கம் இழுக்கலாம். அல்லது எதிர்ப்பக்கமாகத் தள்ளலாம். அதைத் தள்ளித் திறந்து உள்ளே சென்றேன். மூன்றடிக்கு அப்புறம் இரண்டாவது கதவு. மரத்தால் செய்யப்பட்டது. அதன் கைப்பிடியைப் பிடித்து முதலாவது கதவைத் தள்ளின மாதிரியே தள்ளினேன். திறக்கவில்லை. என் பக்கமாக இழுத்தேன். திறக்கவில்லை. பிறகு கைப்பிடியை கீழே திருப்பி உள்பக்கமாகத் தள்ளினேன். திறக்கவில்லை. மீண்டும் என் பக்கமாக இழுத்ததும் திறந்தது. இந்த என் தடுமாற்றத்தை ஏற்கெனவே ஹாலுக்கு வந்தமர்ந்திருந்த முத்துக்குமார் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டிருந்தார். இருவரும் ஒருவரையொருவர் பார்த்ததும் “நார்மன்ஸ் டோர்” என்று சொல்லிக்கொண்டோம்.

அதன் பிறகு ஹாலுக்கு வந்து சேர்ந்த பிற மாணவர்களும் அந்தக் கதவைத் திறக்கத் தடுமாறுவதை நாங்களிருவரும் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தோம். நாங்கள் மாணவர்களுக்கு எடுக்கச் சென்ற வகுப்பு, பயனர் அனுபவ வடிவமைப்பு (User Experience Design) பற்றியது. அந்த வகுப்பிற்கான எங்கள் பவர் பாயிண்ட் ப்ரசண்டேஷனில் “நார்மன்ஸ் டோர்” என்று ஒரு தலைப்பும் இருந்தது. அதுவே எங்கள் புன்னகைக்குக் காரணம். இந்தக் கதவு அனுபவத்தைப் பற்றி மாணவர்களிடமே கேட்டு இந்தத் தலைப்பு சம்பந்தமான விஷயத்தை ஒரு அரை மணிநேரம் ஓட்டினோம். இது நாம் உபயோகிக்கிற ஒவ்வொரு பொருளிலும் அனுபவிக்கிற விஷயம்தான். நார்மன் ”The design of everyday things" என்ற புத்தகத்தின் ஆசிரியர். கதவுகளைப் பற்றி அவர் என்ன சொல்கிறார் கேளுங்கள்.