Showing posts with label நட்பு. Show all posts
Showing posts with label நட்பு. Show all posts

யார் என்று தெரிகிறதா?

ஒரு விஷேச மொபைல் அழைப்பு வந்தது. அன்னோன் நம்பர் என்பதால் எடுக்கத் தயங்கினேன். என் மொபைலில் ஒரு போதும் சரியாக வேலை செய்திராத ட்ரூ காலர் ஆப்பானது வழக்கம்போல இந்த எண்ணையும் யாரென்று கண்டுபிடித்துக் கொடுக்கவில்லை. (பேசி முடித்தபிறகு இன்னார், அண்ணார் என்று சொல்வது அதன் வழக்கமாயிருந்தது).

விஸ்வரூபத்தில் கமல் கேட்டமாதிரி மறுமுனை புதிர் போட்டது. "யாரென்று தெரிகிறதா?"

குரல்களை வைத்து நபர்களை அடையாளம் காணும் திறமை எனக்கு இல்லை என்றும் நீங்களே சொல்லிவிடுங்கள் என்றும் சொன்னேன். ஆண் குரல் என்று மட்டும் கணிக்க முடிந்தது.

குரல் விடுவதாயில்லை. "நான் பாலு பேசறேன். உடுமலைபேட்டை. உங்கூட 6F, 7B, 8E, 9E, 10D -ல ஒண்ணாப் படிச்சேன்."

புருவங்களை நெரித்து, மூளையை அலசி, கன்னத்தில் கைவைத்து, தலை முடியைப் பிசைந்து என எப்படி யோசித்தும் இந்த அபாயகர ஞாபகக்காரனை நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. ஒரே ஒரு கேள்வியில் 'பாலு' வை அவன் கோர்ட்டுக்குத் தட்டிவிட்டேன்.

"தெரியலையே.. எந்த பாலு?"

மூளையில் ஒரே ஒரு நியூரான் உதவிக்கு வந்தது. லேசாய் பொறி தட்டி, "N. N. பாலனா?" என்றேன். சில பேர்களை இப்படி இனிஸியலோடு மட்டுமே நினைவறைகளில் சேமித்துவைத்ததால் வந்த சிக்கல்.

சரியாகத்தான் கண்டுபிடித்தேன் போலும்.

"நானேதான். பரவால்லயே.. ஞாபகம் வெச்சிருக்க."

பிறகு குசல விசாரிப்புகள். மலரும், கிளறும் நினைவுகள். "இரு.. உங்கூடப் பேச இன்னொரு ஃப்ரெண்டு வெய்ட் பண்றான். ஃபோனை அவன்ட்ட தர்ரேன்.."

மறுபடியும் ஒரு ஹலோ. மறுபடியும் ‘நான் யார் என்று தெரிகிறதா?.’ இந்தக் குரல் கொடுத்த ஒரே க்ளூ "நானு, பாலு, அய்யர் ரமேஷ் எல்லாரும் ஒண்ணாவே சுத்துவோம்.."

இந்த முறை வித்தியாசமாக இருக்கட்டுமே என்று கண்களை உருட்டி யோசித்துப் பார்த்ததில் ஒரே நாளில் இரண்டாம் முறையாகப் பொறி தட்டியது.

"மோகன்ராஜா?"

"யெஸ்"

அடடே என்று ஆச்சரிய அதிர்ச்சி ஒன்று என்னைக் கவ்வியது. மனத்திரையில் ஸ்பைரல் சுற்ற ஆரம்பித்து ஃப்ளாஷ்பேக் ஓட ஆரம்பித்தது.



இந்த மோகன்ராஜ் மேற்சொன்ன எல்லா வகுப்புகளிலும் என்னோடு படித்தவன்தான் (என்று நினைக்கிறேன்). இரண்டு பேரும் ஆரம்பத்தில் நல்ல நண்பர்களாக இருந்தோம். அவன் நன்றாக வரையக்கூட செய்வான். ஆனால் எட்டாம் வகுப்பு வந்தபோது எதற்கென்றே தெரியாமல் எங்களுக்குள் போர் மூண்டது. அடிக்கடி மோதல் நிகழ ஆரம்பித்தது. என்ன காரணத்துக்காக என்று பின்னாளில் எல்லா ரூமிலும் உட்கார்ந்து யோசித்திருக்கிறேன். பிடிபடவில்லை.

மோகன்ராஜ் அப்போதே கராத்தேவில் ப்ளாக்பெல்ட் வாங்கியிருந்தான் என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக வெறும் வாய்ச்சண்டையுடன் நிறுத்திக்கொள்வேன். கபடி விளையாடும்போது தாட்டியான பையன்களைக் கூட மணலில் வீழ்த்தும் லாகவத்தை அறிந்திருந்தேன் என்றாலும் அவனின் அப்பர் கிக், லோயர் பஞ்ச்-சுக்கெல்லாம் அப்போதைய எனது நோஞ்சான் உடம்பு தாங்கியிராது என்பதால் ரிஸ்க் எடுக்கவில்லை. அவனோ பேஸ்கட் பால் போஸ்ட்டில் தொற்றி ஒரே மூச்சில் தொடர்ந்து ஐம்பது அறுபது புல்-அப்ஸ் எடுப்பவன்.

பெரியகடைவீதிக்கு இணையாகச் செல்லும் சந்து ஒன்றிற்குள் எங்களுக்குள் இறுதிக்கட்ட யுத்தம் நடந்தது. கெட்ட வார்த்தை ஏவுகணைகளால் (நாயே.. பன்னி போன்ற..) தாக்கிக்கொண்டோம். அதற்கப்புறம் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. ஏன் நிமிர்ந்து பார்த்துக்கொள்ளக்கூட இல்லை. பத்தாவது படிக்கும்போது ஒரு முறை கபடி விளையாட்டின்போது அவன் எனது எதிர் டீமில் இருந்தான். கபட் கபட் என்று சொல்லிக்கொண்டே வந்து நான் அசந்த நேரத்தில் இடது காலை நூற்றென்பது டிகிரி கோணத்தில் உயர்த்தி எனது தாடையைப் பதம் பார்த்தான். நிலைகுலைந்து நின்றேன். நான் அவுட். 0.09% மீதமிருந்த எங்கள் நட்பும் அன்றோடு மொத்தமாய் அவுட்.

பிறகு +2 முடித்தபிறகு அவன் சட்டம் படிக்கப் போனான் என்று யாரோ சொல்லிக் கேள்விப்பட்டது மட்டும் ஞாபகத்திலிருந்தது.

முப்பது வருடங்கள் கழித்து அந்த மோகன்ராஜின் குரல்.

'நம் சண்டை ஞாபகமிருக்கிறதா' என்றேன். சிரித்தான். விவரங்கள் புரியாத வயதில் எதற்கென்றே தெரியாமல் நிகழ்ந்த நிகழ்வுகள். எதற்கும் அர்த்தங்கள் கிடையாது.

பிறகு ஒரு சில கதைகள் பேசினோம். நாங்கள் படித்த பள்ளிக்கு அவன் சமீபத்தில் சென்றபோது தலைமையாசிரியர் அறைக்கு முன்னால் பலகையில் என் பெயர் இருந்ததைப் பார்த்ததாகச் சொன்னான்.

"ரொம்ப சந்தோஷம் நண்பா" என்றான்.

"விரைவில் சந்திப்போம்" என்றேன்.

உடனே ஃபேஸ்புக்கில் நட்பு அழைப்பை விடுத்தான். அவனது ஃப்ரொபல் பட முகம் என் நினைவிலிருந்த முகத்தோடு பச்சக் என்று பொருந்திப் போனது. காலம் தந்த வழுக்கையைத் தவிர.

போனை வைத்தபிறகு நீண்ட நேரம் யோசித்துக்கொண்டிருந்தேன்.
நான் படித்த வகுப்புகளில் 9E, 10D தவிர எனக்கு வேறு செக்‌ஷன்கள் நினைவுக்கு வரவில்லை என்பது உறுத்தலாக இருந்தது. ஒரு சில வகுப்புத் தோழர்கள் தவிர வேறு யாரும் ஞாபகத்திலில்லை என்பது ஒரு குற்ற உணர்வாகத் தொக்கி நிற்கிறது.

நீண்ட நெடிய நகர வாழ்க்கை பால்ய நினைவுகளை மொன்னையாக்குகிறதா என்கிற கேள்வியுடன் தூங்கப்போனேன்.

நான் ஏரிக்கரை மேலிருந்து..

சென்னையில் மடிப்பாக்கம் என்னும் ஊர் உண்டு. அதில் ஓர் ஏரி உண்டு. சுமார் முக்கால் கிலோமீட்டர் நீளம். இந்த ஏரிக்கரையில், ஒரு காலத்தில் அந்தப் பகுதியில் குடியிருப்பவர்களைத் தவிர வேறு ஆள் நடமாட்டமில்லாமல் இருக்கும்.  இப்போது அதே ஏரிக்கரை வேறு மாதிரி உருக்கொண்டுவிட்டது.

மக்கள் மேல் அக்கறை கொண்ட இந்தப் பகுதியின் கவுன்சிலரோ யாரோ ஏரிக்கரையோரமாக இருந்த சாலையை சரி செய்து, மின் கம்பங்கள் அமைத்து, பெஞ்சுகள் போட்டு மெருகூட்டியதில் அதிகாலையில் வாக்கிங், ஜாக்கிங் என களைகட்ட ஆரம்பித்தது. மாலையில் ஏகப்பட்ட குடும்பங்கள் காற்று வாங்க அங்கே வர ஆரம்பிக்க ஒரு மினி கடற்கரை போல் மாறிவிட்டது இந்த ஏரிக்கரை.

கூட்டம் சேர்ந்ததும் சூப், காளான் ஃப்ரை, பேல் பூரி, பானிப்பூரி கடைகள் முளைக்கத் தொடங்கின. நடைபாதையில் நடக்க முடியாத அளவுக்குக் கூட்டம்.

இன்று குடும்பத்துடன் ஒரு நடை போய்வந்தேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை மக்கள் தலைகள். வரிசையாக டூவீலர்கள், கார்கள். நிறைய கல்லூரி மாணவர்களுக்கு ‘ஹாங்க் அவுட்’ இடமாகவும் இது மாறிக்கொண்டிருப்பதைக் காணமுடிந்தது. ஆனால் அவர்களெல்லோரும் தத்தம் நண்பர்களுடன் வந்திருந்தாலும் ஆளுக்கொரு மொபைலில் ஆழ்ந்திருந்தார்கள்.

ஏரியானது டிசம்பரில் பெய்த பெருமழையின் மிச்சத்தை இன்னும் தன் மடியில் தேக்கிவைத்து மின்விளக்குகளை அழகாய் பிரதிபலித்துக்கொண்டிருந்தது. ஜிலுஜிலுவென்று காற்று வீசியது. ஏரிக்குள் இருட்டில் அசை போட்டபடி எருமைகள் மிதந்தன. நிறைய குப்பைத் தொட்டிகள் இருக்க, காகித, ப்ளாஸ்டிக் குப்பைகள் ஏரிக்கரை சரிவில் பெருமளவில் வீசப்பட்டிருந்ததையும் காண முடிந்தது. அலங்கோலமாக இருக்கும் ஒரு இடத்தை அழகாக்கி மறுபடி அதை வேறுவிதத்தில் அலங்கோலமாக்குவதில் நம் மக்களுக்கு ஈடு இணை கிடையாது.

நடைபாதையில் ஓரிடத்தில் வரிசையாக ஆறு இளைஞர்கள்  உட்கார்ந்திருந்தார்கள். அவர்களை முதுகுப் பக்கமாக நாங்கள் கடக்கும்போது, ஆறு பேர் கையிலும் ஒவ்வொரு மொபைல் இருப்பது கண்ணில் பட்டது. ஆறையும் “லாண்ட்ஸ்கேப்” பொசிஷனில் வைத்திருந்தார்கள். ஆறிலும் ஒரே வீடியோ, ஒரே காட்சி ஓடிக்கொண்டிருந்தது. ஆறுபேரும் அதை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

நான் என் மகனிடம் “ஒரே வீடியோவை தனித்தனியா ஒரே நேரத்துல ஓடவிட்டுப் பாக்கறாங்க. அதுக்கு எல்லோரும் ஒரே மொபைல்ல பாத்தா பேட்டரியாவது மிச்சமாகும்.” என்றேன்.

அதற்கு அவன் “அது வீடியோ இல்ல. மினி மிலிஷியான்னு ஒரு கேம். ஒரே நேரத்துல எல்லாரும் விளையாடறது. குண்டு போட்டுக்கிட்டே சுட்டுக்கிட்டே இருக்கணும். கடைசி வரை யார் தாக்குப் பிடிக்கறாங்களோ அவங்கதான் வின்னு.”

“அதுக்கு அவங்கவங்க வீட்லயே ஒக்காந்து விளையாடலாமில்ல..” என்றேன்.

பிறகு “நாங்கெல்லாம் அந்தக் காலத்துல..” என்று ஆரம்பிக்க வாய் துடித்ததை அடக்கிக்கொண்டேன். அப்புறம் அடுத்த தடவை ஏரிக்கரைக்குக் கூப்பிட்டால் வர யோசிப்பான்.

புதிய முகங்கள். புதிய கதைகள்.

இருபத்தைந்து வருடங்களுக்குமுன் நான் படித்த கல்லூரியின் வகுப்பு தோழர்களுடன் சுத்தமாக தொடர்பு அற்றுப்போயிருந்த நிலையில் திடீரென்று இந்த இரண்டு நாட்களாக ஏகப்பட்ட தொலைபேசி அழைப்புகள். எப்படியெப்படியோ என்னைத் தேடிக் கண்டுபிடித்து ஒவ்வொருவராக பேசிக்கொண்டிருந்தார்கள். நான் எப்படி அவர்களைத் தேடிக்கொண்டிருந்தேனோ, அதே மாதிரி சில பேர் என்னையும் வெகுநாட்களாகத் தேடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். கூடப் படித்தவர்களில் ஒருவர் கூட தொடர்பிலில்லை என்ற நிலை மாறி இப்போது கிட்டத்தட்ட எழுபது பேரின் தொலைபேசி எண்கள் கிடைத்திருக்கின்றன.

நானும் சிலரை தொடர்புகொண்டு பேசினேன். பேச்சில் நிறைய பழைய, புதிய சுவாரஸ்யமான கதைகள் வலம் வந்தன. அதே உற்சாகம், அதே நட்பு, சில பேர் உழைப்பால் உயர்ந்த நிலைக்குப் போயிருக்கிறார்கள். சிலருக்கு வாழ்க்கை வேறுவிதமான அனுபவங்களைக் கொடுத்திருக்கிறது. காலம் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு சூழ்நிலைகளில் ஒவ்வொரு மாதிரி வைத்திருக்கிறது என்பதை உணரமுடிந்தது.

’ரங்கராஜ் எங்கடா இருக்கான். அவனுக்கு நான் ரெண்டாயிரம் ரூபா கடன் தரணும்..” என்று எண்பதுகளின் இறுதியில் வாங்கின கடனை இப்போது திருப்பிச் செலுத்தத் துடிக்கிற ஒருவன். நான்கடி உயரத்தில் ஒல்லியாக, குள்ளமாக, ’ஷை’ டைப்பாக இருந்த, “குட்டி மணி” என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட, ஆனால் இப்போது உயரமாய், வளர்த்தியாய் தமிழ்ப்பட ஆந்திரா வில்லன் போல சுமோவில் வந்திறங்கும் ஒருவன் என பலப்பல கதாபாத்திரங்கள். தோற்றங்களை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை மீசை தாடியில்தான் ஆரம்பிக்கிறது இயற்கை. பின்னர் முன்வழுக்கையாக, தொந்தியாக தொடர்கிறது. அவர்களின் ஃபேஸ்புக் புகைப்படங்களிலிருந்து இன்னார் என்று அடையாளப்படுத்திக்கொள்வதே சிரமமாக உள்ளது. சிலபேர் அப்படியே இருக்கிறார்கள். அல்லது அது பழைய புகைப்படங்களாக இருக்கவேண்டும். ஓரிரு நண்பர்கள் இறந்துவிட்டார்கள்.

தொலைபேசியில் நண்பர்கள் “ஆனந்த் தெரியும்ல, செந்தில்குமார் நினைவிருக்கா.. அப்புறம் நம்ம மாணிக்கவாசகம் இருக்கான்ல..” என்றெல்லாம் கேட்கும்போது அவர்களின் முகங்கள் சட்டென்று ஞாபகத்தில் அகப்படாமல் மனதில் அலைக்கழிப்பு நிகழ்வது தர்மசங்கடம்தான். செந்தில்குமார் போன்ற பொதுவான பெயர்கள் தரும் குழப்பம் ஒரு புறம் இருக்க, நினைவில் பதிந்து போன முகங்கள் ஞாபகமறதியால் தேய்ந்துபோய்விட்டன. நண்பர்களுக்கும் அப்படித்தான். இருபத்தைந்து வருடங்கள் நிறைவதை முன்னிட்டு 2014-ல் ஒரு அலும்னி சந்திப்புக்கு ஏற்பாடுகள் நடக்கின்றன. பழைய நட்பின் புதிய முகங்களைக் காணவும், இன்னும் புதிய கதைகளைக் கேட்கவும் காத்துக்கொண்டிருக்கிறேன்.

ஒங்களுக்கு நெறைய பணம் சம்பாதிக்க ஆசையா?

திடீரென எனக்கு ஒரு ஃபோன் வருகிறது. மறுமுனையில் ரொம்ப நாளாக என்னுடன் தொடர்பில்லாமலிருந்த நண்பர். எனக்கோ ஒரே ஆச்சரியம். வெளியே மேகமூட்டமாயிருக்கிறதாவென்று பார்த்தேன். இன்று மழை வந்தாலும் வரும். குரலில் உற்சாகம் மிதக்க குடும்ப செளக்கியம், வேலை, பையன் ஸ்கூல் எல்லாவற்றைப்பற்றியும் விசாரிக்கிறார். எனக்கு மிக மகிழ்ச்சியாயிருக்கிறது. பரவாயில்லை. நண்பர்களாகப்பட்டவர்கள் என்னை ஞாபகம் வைத்திருப்பது எத்தனை கொடுப்பினை!?. அவரைப் பற்றி, அவர் குடும்ப குசலங்களையெல்லாம் நானும் விசாரித்து வைக்கிறேன். வீட்டுக்கு வாங்களேன் ஒருநாள் என்கிறேன். மறுமுனையில் அவர் முகத்தில் பல்ப் ஒளிர்ந்ததை போன் வழியாகவே உணர முடிகிறது. என் முகத்திலும் பல்ப்.

"அடடா... புதன்கிழமை நானே ஒங்களை வந்து பாக்கறதுதான் ப்ளானே.." என்கிறார். தொடர்ந்து "ஒரு சின்ன விஷயம் இருக்கு."

விஷயத்தை அறிந்து கொள்கிற ஆவல் என் குரலில் விரிகிறது. சொல்லுங்க என்கிறேன். அவர் ஆரம்பிக்கிறார். "ஒண்ணுமில்ல... ஒரு சின்ன பிஸினஸ். அத நான் உங்கள நேர்ல பாத்து சொன்னாதான் செளரியமாருக்கும். ஒரு சின்ன டெமோ காட்டணும். புதன் கெழம வர்றேன்."

சட்டென்று எனக்கு புரிந்துவிட்டது. உடனே என்னுடைய பல்ப் ஆஃப் ஆகிவிட்டது. இன்றைக்கு மழை வந்தாலும் நான் சந்தோஷப்படமாட்டேன்.

"மல்டிலெவல் மார்க்கெட்டிங்கா?"

"நான் நேர்ல சொல்றனே.."

என்னிடமிருந்து ஒரு பலத்த பெருமூச்சு! வாழ்க்கையில் பதினெட்டாவது தடவையாக மாட்டிக்கொண்டேன். எனக்கு இந்த மாதிரி பிஸினஸ்களில் துளியும் ஆர்வமில்லையென்றும், நான் ஏற்கெனவே இதையெல்லாம் (வேறு சில நண்பர்களின் வற்புறுத்தலின் பொருட்டு) முயற்சித்துப் பார்த்தாயிற்று என்றும் சொல்லி எப்போதும்போல் நான் நழுவப்பார்க்கிறேன்.

அத்தனை லேசில் விடுபவர்களா மல்டிலெவல் மார்க்கெட்டிங்தாரர்கள்? நான் நினைத்துக்கொண்டிருக்கிற மாதிரி மிக மோசமான பிஸினஸ் அதுவல்லவென்றும், இதனால் ஏகப்பட்ட பேர் குறுகிய காலத்தில் பணக்காரர்களாயிருக்கிறார்களென்றும், தனக்குக்கூட மாசா மாசம் அறுபதாயிரம் இதன் மூலம் வந்துகொண்டிருக்கிறதென்றும், நான் தலையை மட்டும் அசைத்தால் போதும் மற்றதையெல்லாம் தான் பார்த்துக்கொள்வதாகவும், தனலட்சுமியானவள் இப்போது என் வீட்டுக் காலிங்பெல்லில் கை வைத்திருப்பதாகவும் மூச்சுவிடாமல் பேசினார். ஜஸ்ட் நீங்க ஒரு ஹாஃபனவர் ஸ்பென் பண்ணுங்க போதும் என்றார். ஒரு பதினைந்து நிமிடத்திற்கு அவர் மட்டுமே பேசிக்கொண்டிருந்தார். எல்லாம் கேட்டுவிட்டு 'நன்றி, எனக்கு இதில் ஆர்வமில்லை' என்று மறுபடி சொன்னேன்.

இப்போது அவர் முகத்தில் பல்ப் ஃப்யூஸ் போயிருக்கவேண்டும். சடுதியில் பணம் சம்பாதிக்கக்கூடிய ஒரு அரிய பெரிய வாய்ப்பை நீங்கள் இழக்கிறீர்கள் என்று கூறி போனை வைத்தார்.

இது போல் பல. முதலில் கொஞ்சம் பட்டுப் பின் தெரிந்துகொண்ட அனுபவங்களிலிருந்து The art of saying No வை கொஞ்சம் கொஞ்சமாக பயின்றதிலும் இப்போது இம்மாதிரி நண்பர்களுக்கு சிரித்து மழுப்பி எனக்கு ஆர்வமில்லை என்று எப்படியாவது சொல்லித் தப்பித்துக்கொள்கிறேன்.
அவர்கள் சொல்கிற மாதிரி 'எதுவுமே செய்யாமல்' காசானது கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டுமா என்றெல்லாம் நான் ஆராயவும் இல்லை. ஆனால் இந்த மாதிரி மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் உழல்பவர்கள் அதிகபட்சம் மற்றவர்களை வற்புறுத்தி இதில் இணைக்கிறார்கள் என்கிற விஷயம் எனக்கு உடன்பாடாக இல்லை. பின்னே மார்க்கெட்டிங் என்றாலே அதுதானே? ஆரிஃப்ளேம் வகை பிஸினஸ்காரர்கள் "யூஸ் பண்ணிப் பாத்தீங்கன்னா அப்புறம் நீங்களும் இந்த லைனுக்கு வந்துருவீங்க" என்று சில விலை அதிகமுள்ள நமக்கு வேண்டாத பொருட்களை தலையில் கட்டிவிட்டுப் போய்விடுகிறார்கள். சில சமயம் டெமோ என்கிற பேரில் நமது நேரம் நமது அனுமதியில்லாமல் சாப்பிடப்படுகிறது.

ரொம்ப காலத்துக்கு முன் என் நண்பர்களிருவர் இது மாதிரி எதையோ ஆரம்பித்து ஒரே மாதத்தில் ஆளுக்கொரு யமஹா வாங்கி ஆக்ஸிலேட்டரை முறுக்கித் திரிந்ததைப் பார்த்து என் புருவங்கள் உயர்ந்ததை நினைவுகூர்கிறேன். இன்னொரு நண்பன் இரண்டு வருடம் இதில் உழன்றுவிட்டு கடைசியில் இரண்டேகால் லட்சம் கடனாளியாக நின்றது ஏன் என்றும் புரியவில்லை. இதன் சூட்சுமம் என்னவென்று கண்டுபிடிப்பதற்கு நான் முயற்சிக்கவில்லை. எது எப்படியோ இருக்கட்டும்! இந்த ஆம்வேவோ இல்லை ஆரிஃப்ளேமோ நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு, இல்லை தெரிந்த நபர்களுக்கு மத்தியில் வரும்போது ஒரு ஆரோக்கியமாக இருக்கும் நட்புக்கு கொஞ்சம் காய்ச்சலோ இருமலோ வரத்தான் செய்கிறது. மனத்தில் கொஞ்சம் டென்ஷன் உருவாகிறது.

என் நண்பன் ஒருவன் இந்த விஷயத்தைச் சமாளிப்பதில் பரவாயில்லை. கீழ்கண்ட உரையாடல் அவனுக்கும் மல்டிலெவல் மார்க்கெட்டிங்தாரருக்கும் இடையே நடந்தது.

- ஒங்களுக்கு நிறைய பணம் சம்பாதிக்க ஆசையா?

- இல்லையே...

- என்ன இப்படி சொல்றீங்க. பணம் லைஃப்ல ரொம்ப அவசியமில்லையா?

- தேவைதான்.

- ஸோ யு நீட் மணி.

- நோ!

- இப்பதானே சொன்னீங்க பணம் முக்கியம்னு!

- முக்கியம். ஆனா எனக்கு வேணும்னு சொல்லலையே!

- அப்ப நீங்க பணம் சம்பாதிக்க வேண்டாமா?

- எதுக்கு சம்பாதிக்கணும்?

- பணம் இல்லாம எப்படி சார் வாழ முடியும்?

- தோ.. நான் வாழ்ந்துட்டுதானே இருக்கேன்?

- நிறைய பணமிருந்தா உங்களுக்கு எவரிடே ப்ராப்ளம்ஸ் எல்லாம் ஈஸியா சால்வ் பண்ணலாம் இல்லையா???

- எனக்குதான் எந்த ப்ராப்ளமும் இல்லையே சார்.

- உங்க ஃப்யூச்சருக்கு?

- ஹாஹா. Great Joke.

அவன் மசியமாட்டான் என்று தெரிந்து லேசாய் என்பக்கம் திரும்பினார். "நீங்க சொல்லுங்க... உங்களுக்கு வாழ்க்கைல பணம் வேணுமா வேண்டாமா?"

சும்மா பேசிக்கொண்டிருப்பானேன். நான் திருவிளையாடல் சிவபெருமான் மாதிரி "டங்" என்று நின்ற போஸில் மண்டபத்திலிருந்து மறைந்துவிட்டேன்.

உலகத் தொலைகாட்சி

நான் முதன் முதலில் டி.வி பார்த்தது என் ஒன்பதாம் வகுப்புத் தோழன் நாகராஜ் வீட்டில்தான். என் வீடிருந்த தெருவுக்கு அடுத்த சந்தில், படுத்திருக்கும் ஒரு சில நாய்களைக் கடிவாங்காமல் தாண்டிப் போனால் அவன் வீடு வரும். தரையில் தாருக்குப் பதில் சிமெண்ட் ஸ்லாப்களாகப் பதித்திருக்கும் சந்திலிருந்து செங்குத்தாக ஐந்து படிகள் ஏறினால் அவன் வீட்டின் முன்னறை. அதற்கு நேராய்த் தெரியும் அதற்கு அடுத்த அறையில் அதை வைத்திருந்தார்கள். நீலச்சாம்பல் கலரில், வீட்டுக் கூரையின் ஆண்டென்னா உபயத்தில் அப்போதெல்லாம் தூர்தர்ஷன் மட்டுமே. நிகழ்ச்சிகளைவிட "தடங்கலுக்கு வருந்துகிறோம்"-ஐ அதிகம் ஒலிபரப்பின தொலைக்காட்சி. ஒரு நிகழ்ச்சி முடிந்ததும் கிடைக்கிற இடைவெளியில் ஒரு ரோஜாப்பூ ஸ்லைடு போட்டு லொட் லொட் என்று பட்டறையில் தட்டுகிற சப்தம் மாதிரி ஒரு ம்யூசிக் போடுவார்கள்.

நான் புதன் கிழமையானால் எட்டுமணிக்குத் தவறாமல் போய் அவன் வீட்டு முன்னறைப்படியில் உட்கார்ந்துவிடுவேன். (உள்ளே போகமுடியாதபடிக்கு எக்கச்சக்கமான கூட்டம் இருக்கும்) அங்கிருந்து பார்த்தாலே ஓரளவுக்கு ரிஷிகபூர், ஹேமமாலினி எல்லாம் தெளிவாகத் தெரிவார்கள். சித்ரஹாரைத்தான் சொல்கிறேன். சாட்டிலைட்டிலிருந்து புரியாத ஹிந்திப் பாடல் காட்சிகளை டெக்னாலஜித் தூண்டில் போட்டு இழுத்து திரையில் காண்பிக்கும் அந்தப் பெட்டியை எல்லோரும் வியந்து வியந்து பார்த்துக்கொண்டிருந்த காலம் அது. அதிலும் நீலம் என்று ஒரு நடிகை அடிக்கடி ஏதாவதொரு பாட்டில் வருவது பிடித்துப் போய் வாராவாரம் தவறாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். சித்ரஹார் போட்டாலே நாகராஜ் வீடு நிரம்பிவிடும். அவன் வீட்டை விட்டால் வேறு டி.வி அந்தத் தெருவில் எங்கும் இல்லாதிருந்தது.

டி.வி ஓடும்போது தவறாமல் விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிடுவார்கள். இருட்டுக்குள் நீலத்திரை மட்டும் ஒளிரும். சித்ரஹாரைத்தவிர அடுத்ததாய் அதிக மவுசு உள்ள நிகழ்ச்சியாய் கிரிக்கெட் மேட்ச்தான் இருந்தது. கிரிக்கெட் என்றால் ஒரு கஜம் என்ன விலையாகிறதென்று கேட்பவனாகிய நான், ஹிர்வானி என்ற பட்டையாய் கண்ணாடி போட்ட ப்ளேயர் ஓடி ஓடி வந்து பவுலிங் போடுவதை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். நடுநடுவில் வருகிற "வா்ஷிங் பெளடர் நிர்மா" அப்புறம் கபில்தேவ் வருகிற "பூஸ்ட் - ஸீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி" எல்லாம் எத்தனை தடவை போட்டாலும் பார்ப்பேன். அப்புறம் கணேஷ் வீட்டில் அதைவிட பெரிய டி.வி வாங்கினதும் பெரிய செளகரியமாய் போய்விட்டது. 1. அவன் வீடு நாகராஜ் வீட்டைவிட இன்னும் கிட்டத்தில் இருந்தது. 2. தாண்டவேண்டிய கடிநாய்களின் எண்ணிக்கை குறைவு 3. கணேஷ் வீட்டு உள்ளறையிலேயே சேர் போட்டு உட்கார்ந்து பார்க்கலாம். 4. டி.வி நிகழ்ச்சிகளின் நடுவே அவன் அம்மாவின் அன்பான டீ கிடைக்கும். ஆனால், அதுவும் கருப்பு வெள்ளைதான். தவறாமல் அதற்கும் முகத்தில் ஒரு நீலக் கண்ணாடி அணிவித்திருந்தார்கள். அந்த கணேஷாகப்பட்டவன் பல சமயம் டி.வியை ட்யூன் பண்ணுகிறேன் பேர்வழி என்று புஸ் என்று சப்தத்துடன் எப்போதும் புள்ளி புள்ளியாய் ஓடவிடுவான். அது ஓரளவு அட்ஜஸ்ட் ஆகி திரையில் காட்சி தெரிவதற்கு ஒரு அரைமணி ஆகிவிடும். அவன் வீட்டு டிவியில் புள்ளிகளைத்தவிர என்னெல்லாம் பார்த்தேன் என்று தெள்ளத் தெளிவாக ஞாபகமில்லை. அசுவாரஸ்யமாகப் பாரத்த ஓரிரு கிரிக்கெட் மேட்ச்கள் மட்டும் ஞாபக நிழலில் துண்டு போட்டு உட்கார்ந்திருக்கின்றன.

கொஞ்சநாள் கழித்து ஜாகை மாறி வேறு ஊருக்குப் போனபோது டி.வி என்கிற வஸ்துவின் உள்ளடக்கம் பொருளடக்கம் எல்லாம் மாறியிருந்தது. தூர்தர்ஷனில் ஒளியும் ஒலியும் என்று ஸ்லைடுபோட்டு வெள்ளிக்கிழமை அமர்களப்பட ஆரம்பித்தது. பெண்கள் அன்றைக்கு எட்டு மணிக்குள் அவசரமாய் கோவிலுக்குப் போய்விட்டு பறந்தோடி வீட்டுக்கு வர ஆரம்பித்தார்கள். டி.வி வைத்திருந்த பக்கத்துவீட்டுப் புண்ணியவான்கள் தயவில் கமலும் ரஜினியும் வீட்டுக்கு வந்துவிட்டுப்போனார்கள். நிகழ்ச்சிக்கு இடையிடையே ஸ்டேஷனில் ஒளி, ஒலி இரண்டும் கட்டாகும். முன்பு சொன்னதுபோல், தடங்கலுக்கு வருந்துவதாக தகரத்தட்டல் பிண்ணனி இசையோடு ஸ்லைடு போட்டுவிட்டு விட்ட இடத்திலிருந்து தொடர்வார்கள். டி.வியில் ஒலியும் ஒளியும் மட்டுமல்லாது ஞாயிறு மதியம் 1 மணிக்கு NFDC படங்கள் ஒலிபரப்பாகின்றன என்று தெரிந்தபிறகு எங்கள் ரசனை நரம்புகள் உசுப்பப்பட்டு அதையெல்லாம் நண்பர்கள் குழாமுடன் விழுந்து விழுந்து பார்க்க ஆரம்பித்தோம். இதில் பெரும்பாலும் மலையாள நடிகர் கோபி நடித்த கலைப்படங்கள். வாழ்க்கையில் நிறைய பொறுமையை கற்றுக்கொண்டது இந்த காலகட்டத்தில்தான் என்று சொல்லலாம். (ஒரு படத்தில் கோபி ஒரு பூங்காவின் இந்த கேட்டிலிருந்து அந்த கேட் வரை பதினைந்து நிமிடம் நடந்து கடந்ததை உதாரணத்துக்குச் சொல்லலாம்.) கலைப்படங்கள் பார்ப்பதற்கான வயது அது அல்ல என்பதனால் அவைகளை ரசிக்க முடியாமல் மனதில் ஒட்டாமல் போய்விட்டன.

எல்லோர் வீட்டிலும் டி.வி வந்துவிட்டதே என்று குமார் எலெக்ட்ரானிக்ஸ்க்கு போய் ஃபிலிப்ஸ் போர்ட்டபிள் கருப்பு வெள்ளை ஒன்றை பூஸ்டருடன் சேர்ந்து என் அப்பாவும் வாங்கிவந்துவிட்டார். அன்றைக்கு மொட்டை மாடியில் ஒரு மிக நீளமான இரும்பு பைப்பின் உச்சியில் ஆன்டென்னாவை மாட்டுவதற்குப் பட்ட பாடு நன்றாய் ஞாபகமிருக்கிறது. பைப்பின் தலையில் ஆன்டென்னாவை மாட்டிவிட்டு அப்படியே புவியீர்ப்பு விசைக்கு எதிராய் அதை தூக்க வேண்டும். ஒரு கழைக்கூத்தாடியின் லாவகத்துடன் பாலன்ஸ் செய்து அது சரிந்து மண்டையில் விழுவதற்கு முன்பாக மொட்டைமாடிக் கைப்பிடிச்சுவரில் அடிக்கப்பட்டிருக்கும் க்ளாம்ப்-ல் சட்டென்று மாட்டிவிட வேண்டும். இப்படியாக எங்கள் வீட்டிலும் டி.வி.

அதற்கப்புறம் உலகம் படுவேகமாக சுருங்க ஆரம்பித்தது. ஆன்டென்னாவை கேரளத்தின் திசை நோக்கித் திருப்பினால் ஒளியும் ஒலியும் மற்றும் சித்ரஹாருக்கு கொஞ்சமும் குறைவில்லாத "சித்ர கீதம்" தெரிகிறது என்பதை என் அப்பா R&D பண்ணிக் கண்டுபிடித்தார். திருவனந்தபுரம் சேனல். வியாழக்கிழமை எட்டு மணிக்கு! ஆக கொஞ்சம் கொஞ்சமாய் எல்லோருடைய நேரத்தையும் சாப்பிட ஆரம்பித்தது டி.வி. நடுநடுவே Turning Point, The world this week போன்ற உருப்படியான நிகழ்ச்சிகள். ரேணுகா சஹானே மற்றும்... ம்ம்.. இன்னொருவர் பெயர் மறந்துவிட்டது... அவர்களிருவரும் சேர்ந்து நடத்திய "சுரபி" நான் வெகுவாக விரும்பிப் பார்த்த ஒன்று. அப்புறம் ்ஷாருக் கான் நடித்த ஃபாஜி மற்றும் சர்க்கஸ் என்ற ஸீரியல்கள். பங்கஜ் கபூர் நடித்த ஒரு சோக ஸீரியல். R.K. நாராயணின் மால்குடி டேஸ். மோகன் கோகலே நடித்த "மிஸ்டர் யோகி", திலிப்குமார் என்கிற ஒரிஜினல் பெயரில் ஏ. ஆர். ரஹ்மான் டைட்டில் மியூசிக் போட்ட உகாதி புரஸ்கார், அடிக்கடி ஒலிபரப்பின பூபேந்தர் சிங், மிடாலி கச்சேரி (பின்னாளில் இளையராஜா இந்த மிடாலியை "தளபதி" படத்தில் பாடவைத்ததற்கு நான் உளமாற பூரிப்படைந்தேன்), இடையிடையே ரெமோ ஃபெர்னாண்டஸ் பாப், ஜாவத் ஜாஃப்ரி நடனம் என்று கலவையாய் ஒரு மாதிரி பார்த்த வரைக்கும் நிறைவாகவே இருந்தது. டி.வியை மிக விரும்பிய காலகட்டம் அது. அருகில் போனால் அந்தக்கால ப்ளாக் அண்ட் ஒயிட் டி.விக்கு ஒரு வாசனைகூட இருந்ததாக ஒரு உணர்வு. பிரமையா என்று தெரியவில்லை. அதன் சேனல் செலக்டரை கடக் கடக் என்று திருப்பிப் பார்ப்பதில்கூட ஒரு சுகம் இருந்தது.

ராமாயணம், மகாபாரதம் என்று மெகா சீரியல்கள் ஆரம்பித்தபிறகுதான் டி.வி தன் உண்மையான சொரூபத்தைக் காட்ட ஆரம்பித்தது. அப்புறம் சந்திரகாந்தா வந்தவுடன் வில்லனின் யக்க்கூ யக்க்கூ என்ற கூவல் கேட்டது. ஜூனூன் வந்து ரசிகப் பெருமக்களைப் புரட்டிப்போட்டதில். தமிழகத்திற்கு புதிய தமிழ் கிடைத்தது. அப்புறம் சேனல்கள் ஒன்றாகி இரண்டாகி பல்கிப் பெருகத் தொடங்கின. அபாயமான உடைகளில் M டிவியில் 11 மணிக்குமேல் மாவு அரைக்க ஆரம்பித்தார்கள். ஆங்கில எழுத்துக்களின் அத்தனை எழுத்துகளிலும், அத்தனை கோள்களின் பெயரிலும் சேனல்கள் வர ஆரம்பித்தன. டெலிபோனில் கால்போட்டு பிடித்தபாட்டு கேட்க ஆரம்பித்தார்கள் மக்கள். கால்மேல் கால்போட்டு திரைப்பட விமர்சனம். நன்கு சூடான தோசைக்கல்லில் ஒரு டம்ளர் தண்ணீரை விசிறி அடிக்கும்போது எழும் சப்தம் மாதிரி துவக்க ம்யூசிக் போட்டு பயமுறுத்துகிற குரலில் தலைப்புச் செய்தி சொன்னார்கள். விளம்பர இடைவேளைகள் அதிகமாயின. டி.வியை தூரத்திலிருந்தே இயக்கிக்கொள்கிற வசதி வந்ததற்கப்புறம் மனிதன் இன்னும் அலைபாய ஆரம்பித்தான். 100 சேனல்கள் அவனுக்குப் போதவில்லை. இப்போது திரும்பின பக்கமெல்லாம் ஒளியும், ஒலியும்தான். தோசைமாவு, முறுக்குக் கம்பி, பேரீட்சம்பழத் தயாரிப்பாளர்கள் நிகழ்ச்சிகளுக்கு உபயதாரர்களாக ஆனார்கள். இடுப்பு வெட்டுகிற குத்துப்பாட்டுகளும், உதட்டு முத்தமும், நீர்வீழ்ச்சியில் உடல்கள் நனைந்த டூயட்டும், மேலாடை துறந்த ஃபேஷன் சேனல்களும் நம் அருமைக் குழந்தைகளுக்கு காணக்கிடைத்தன. வீடுதோறும் சீரியல்களின் ஒப்பாரி. காமெடி ஷோக்களில் நாம் சிரிப்பதற்கு வேலை வைக்காமல் அவர்களே ரெகார்டட் சிரிப்பலையை கூடவே ஒலிபரப்பிவிடுகிறார்கள். உலகத்தொலைகாட்சிகளில் முதன்முறையாக திரைக்கு வந்து சில தினங்களே ஆன படத்தை போட்டு ஐந்தே மணிநேரத்தில் முடித்துவிடுகிறார்கள். பெண்களை கும்பலாய் ஆடவிட்டு ஜவுளிக் கடல் விளம்பரங்கள் எடுக்கிற யுக்தி நமக்கு பழகிவிட்டது. நவரத்தினக்கல், வாஸ்து, எண்கணிதம் என்று திரையின் ஒவ்வொரு சதுர செ.மீ பரப்பையும் வாடகைக்கு விட்டுவிட்டார்கள். சினிமாவை, சினிமா உலகத்தைப் பொடிபண்ணி திரைக்கு வெளியே தூவுகிறது சேனல்கள். ரசிகப்பெருமக்கள் விழுந்துகிடக்கிறார்கள்.

நான் விளம்பரத் துறையில் இருந்தபோது அங்கு "Black Box" என்று வீடியோ கேஸட்டுகள் இருக்கும். இந்திய, அகில உலக நாடுகளில் எடுக்கப்பட்ட அருமையான விளம்பரப்படங்கள் அடங்கின கேஸட் அது. அது ஓட ஆரம்பிக்குமுன் டைட்டிலில் "Advertisements without the interruption of stupid programs" என்று போடுவார்கள். நான் அந்த ஹாஸ்யத்தை ரசித்திருக்கிறேன்.

இப்போது என்னிடம் ஒரு நல்ல கலர் டி.வி இருக்கிறது. ரங்கநாதன் தெரு முக்கில் வாங்கின ப்ளாஸ்டிக் கவர் அணிவித்த ரிமோட் இருக்கிறது. எப்போதாவது நேரம் கிடைத்தால் நல்லதும் கெட்டதுமாய் வண்டி வண்டியாய் கொட்டிக்கிடக்கிற அத்தனை சேனல்களினிடையே சிலவற்றைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கிறேன். அதில் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது. எது எப்படியிருந்தாலும் நான் முதன்முதலில் தரிசித்த மற்றும் ஸ்பரிசித்த அந்த முதல் டி.வியின் வாசனையை இப்போது உணரமுடியவில்லை.

மாயாஜாலம்

எங்களுக்கு வில்சன் என்றொரு நண்பர் இருந்தார். கவனிக்கவும். 'எங்களுக்கு' என்று குறிப்பிட்டிருக்கிறேன். காரணம் எனக்கு மட்டுமே அவர் நண்பரல்ல என்பதுதான். எங்கள் செட்டான ஒரு ஐந்தாறு பேருக்கும் பொதுவான நண்பர் அவர். சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன் நாங்கள் வசித்துக் கொண்டிருந்த காலனிக்கு சற்றுத் தள்ளி நெடுஞ்சாலையில் அவர் வீடிருந்தது. வில்சன் எங்களையெல்லாம் விட பல வயது மூத்தவர் என்பதால் நாங்கள் எல்லோரும் அவரை அண்ணா என்றுதான் அழைப்போம். அவரும் ஒரு அளவிடற்கரிய ஸ்நேகத்துடன் 'தம்பிகளா..' என்று எங்களை அழைப்பது நன்றாய் இருக்கும். அடர்த்தியாய் தாடிவிட்டுக்கொண்டு, சற்றே உயரமாய் கொஞ்சம் மீடியம் உடம்புடன் இருப்பார். சற்றே பிசிறடித்த ஆனால் கம்பீரமான குரல் அவருடையது.

வில்சன் ஒரு மேஜிக் நிபுணர். கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட சுற்றுவட்டாரத்தில் அப்போதே 250-க்கும் மேற்பட்ட மேடைகளில் அவர் மேஜிக் நிகழ்ச்சி பண்ணியிருந்தார். நீங்கள் வழக்கமாய் மேஜிக் ஷோ-க்களில் கண்டு ரசித்திருக்கும் தொப்பிக்குள்ளிருந்து புறா எடுப்பது. சீட்டுக் கட்டுகளைக் கொண்டு வித்தை காண்பிப்பது, வாய்க்குள்ளிருந்து கோழி முட்டைகளை எடுத்துக்கொண்டேயிருப்பது, நியூஸ்பேப்பரை விரித்துக் காண்பித்துப் பின் அதை மடக்கி அதனுள்ளிருந்து தண்ணீர் கொட்டவைப்பது போன்ற வழக்கமான ஐட்டங்களோடு பெட்டிக்குள் ஆளை நிற்கவைத்து ரம்பம் வைத்து அறுத்து நாலைந்து துண்டாக்கிவிட்டுப் பின் ஆளை மறுபடி உயிரோடு(!) கொண்டு வருதல் போன்ற மெகா மாயாஜாலங்களையும் மேடைகளில் செய்வார். நிகழ்ச்சிகளின்போது கோட்டு சூட்டெல்லாம் போட்டு தலையில் நீளத் தொப்பி, கையில் மந்திரக்கோல் என்று ஃப்ரொப்ஷனலாகத்தான் தோன்றுவார். என்னதான் எங்கள் நண்பர் என்றாலும் எவ்வளவோ மன்றாடியும் அவர் பண்ணுகிற மேஜிக் ரகசியங்களைப் பற்றி மூச்சுவிட மாட்டார். போனால் போகிறதென்று ஒரு நாலணா காசை முழங்கையில் தேய்த்துத் தேய்த்து எப்படி மறைய வைப்பது என்கிற ட்ரிக்கை மட்டும் சொல்லிக் கொடுத்தார். வெகு சுலபமாக நான் கற்றுக் கொண்ட அந்த வித்தை குழந்தைகளிடம்தான் செல்லுபடியாகும். பெரியவர்கள் புத்திசாலிகளாக இருந்தால் கண்டுபிடித்துவிடுவார்கள். காலனி முக்கில் நாங்கள் கூடிப் பேசிக்கொண்டிருக்கிற இடத்துக்கு அவர் வந்து நின்றால் சடக்கென்று ஏதாவது எளிய வித்தை செய்து காட்டி அசத்துவார். உதாரணம் : என் சட்டைப் பாக்கெட்டில் கைவிட்டு பத்து ரூபாய்த்தாள் எடுத்து அதை நான்காக மடித்து வலது கை ஆள் காட்டி விரலுக்கும், நடு விரலுக்கும் இடையே வைத்து விஸ்ஸ்க் என்று இடதுகை உள்ளங்கையில் தட்டினார். மறுநொடி ரூபாய் நோட்டு அவரது இரண்டு கைகளிலும் இருக்காது. பத்து ரூபாயைத் திருப்பித் தரவேண்டுமானால் என் அப்பாவிடம் சொல்லி அவரிடம் டி.வி கேபிள் கனெக்ஷன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். ஆம். அவர் அந்த ஏரியாவுக்கு கேபிள் கனெக்ஷன் கொடுக்கிற வேலையையும் பார்த்து வந்தார்.

கேபிள் கனெக்ஷன் என்றால் அப்போதெல்லாம் தூர்தர்ஷன் தவிர எதுவும் கிடையாது. ஆனால் அதில் வெள்ளிக் கிழமை எட்டு மணிக்குப் போடுகிற ஒலியும் ஒளியும் பார்ப்பதற்கே எல்லார் வீட்டிலும் அப்படியொரு முன்னேற்பாடு நடக்கும். வில்சன் ஒவ்வொரு மதியமும் சினிமா வீடியோ கேசட்டுகளை வைத்து அவர் வீட்டிலிருந்தே ஒளிபரப்ப அது காலனி முழுக்க எல்லோருடைய டி.வியிலும் தெரிகிற டெக்னலாஜியை வியந்துகொண்டிருந்தோம். ஒரு தடவை கார்த்திக் படமான இரட்டைக் குழல் துப்பாக்கி என்கிற படத்தை கேபிளில் ஒளிபரப்பி காலனி தாய்மார்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட சம்பவமும் உண்டு. அப்போது சன் டிவியெல்லாம் கிடையாது. ஆனால் வில்சன் சன் டி.வி-யின் (ராஜ்?) முதல் முயற்சியான 'பூமாலை' என்கிற கேசட்டை போட்டு அவ்வப்போது ஒளிபரப்புவார். நாட்டு நடப்புகள், இசை நிகழ்ச்சிகள், காமெடி ஷோ, சினிமா பாட்டு என்று கலவையாய் மாதமொருமுறை தொகுத்து கேசட் வடிவில் வெளியிடப்பட்டுக் கொண்டிருந்ததுதான் பூமாலை என்று பெயரிடப்பட்ட அந்த கேசட். அதுதவிர வில்சன் புண்ணியத்தில் தூர்தர்ஷனில் ஞாயிறு மதியம் 1.00 மணிக்கு NFDC படங்களான எல்லா ஆர்ட் ஃபிலிம்களையும் உட்கார்ந்து பார்ப்போம். ஒன்றும் புரியாவிட்டாலும்.

வில்சன் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் விழா மேடைகளில் தோன்றி மைக் பிடித்து கம்பீரமாய்ப் பேசுவார். பேசுகிற விஷயங்களில் நிச்சயம் சமூக அக்கறை தொனிக்கும். அவர் பொள்ளாச்சியில் 'மனிதம் சேவை மையம்' என்கிற சமுக அமைப்புக்குத் தலைவராக இருந்தார். அவ்வப்போது நகரில் ரத்ததான முகாம், இலவச கண் பரிசோதனை முகாம் நடத்துவது, ஆதிவாசிகள் மற்றும் மலைவாழ் மக்களுக்கு உடைகள் சேகரித்துக் கொடுப்பது போன்ற காரியங்களில் தீவிரமாய் ஈடுபட்டிருந்தார். நாங்களெல்லோரும்கூட மனிதத்தில் உறுப்பினராகி அவருடன் சேர்ந்து சுற்றி சமுக சேவை செய்துகொண்டிருந்தோம். அவ்வப்போது ஆட்டோவில் மைக் வைத்து அறிவித்துக்கொண்டு சுற்றியிருக்கிற காலனிகளில் வீடுவீடாகப் போய் உடைகள் சேகரித்து ஆதிவாசிகளுக்கு கொண்டுபோய் வழங்குவோம். தவிர மனிதம் வெளியிட்டுக்கொண்டிருந்த "மனிதம் செய்திகள்" என்கிற சிற்றிதழில்(?) சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சமுக ஆக்கப்பணிகள் பற்றிய விவரங்கள் போக மீதி இருந்த இடத்தில் நாங்கள் கதை, கட்டுரை, கவிதைகள், படித்ததில் பிடித்தது, ஜோக்ஸ் என்று எதையாவது எழுதுவோம். சரசுராம் இதற்கு ஆசிரியராய் இருந்தார். ராஜீவ் காந்தி இறந்த சமயத்தில் அவர் எழுதின உருக்கமான கட்டுரையை முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் D.R. கார்த்திகேயன்கூட படித்துப் பாராட்டினார்.

ஒரு தடவை சாயங்காலம் ஐந்து மணிக்கு வில்சன் வேகமாய் வந்து நெகமம் அருகில் சேரிபாளையம் என்கிற ஊரில் நடக்கிற நவராத்திரி கலை விழாவில் அன்றைக்கு அவரின் மேஜிக் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதன்கூடவே நீங்களெல்லாம் சேர்ந்து சைடில் கலை நிகழ்ச்சி செய்கிறீர்களா என்று கேட்டார். ஏழு மணிக்கு ப்ரோக்ராம் என்றார். இரண்டு மணி நேரத்திக்குள் என்னத்தைத் தயார் பண்ணுவதென்று எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் அரை மனதாய் சரி என்று தலையாட்டிவிட்டு பரபரவென்று இரண்டு மணி நேரத்துக்குள் டாக்டர் கடீஸ்குமார் என்கிற காமெடி நாடகத்தை நான் மற்றும் நண்பர்களான ராம் (சரசுராம்), மீனாட்சி சுந்தரம் உட்கார்ந்து எழுதி முடித்துவிட்டோம். ஒரு சில நண்பர்களை வைத்து கடகடவென்று ஏழு மணிக்குள் ரிகர்சலும் பார்த்து வில்சனுடன் வேனில் கிளம்பிவிட்டோம். நான் அதில் ஒரு நோயாளி கேரக்டர். கூடவே நரம் தினசரி கேட்கிற ரேடியோ செய்திகளை நகைச்சுவையாய்த் திரித்து நான் அதை வாசிப்பது என்றும் முடிவு செய்து, வண்டி சேரிபாளையம் போய் சேர்வதற்குள் ராம் ஒரு முழு வெள்ளைத்தாளில் அதை இரண்டு பக்கத்துக்கு எழுதியும் கொடுத்துவிட்டார். அதோடு 'டிஸ்கோ டான்ஸ் ஆடிக் கலக்குகிறேன்' என்று தானாக முன்வந்த மஞ்சு என்ற பொடியனும் வேனில் ஜிகினா உடை சகிதம் தொற்றிக் கொண்டான்.

மின்நகர் கீதம் குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் இன்னும் சில நொடிகளில் ஆரம்பம் என்று மைக்கில் அமர்க்களமாய் அறிவித்துவிட்டு ஆரம்பித்தோம். அன்றைக்கு சேரி பாளையத்தை ஒரு வழி பண்ணிவிட்டோம் என்றுதான் சொல்லவேண்டும். மஞ்சு என்கிற அந்தப் பையன் அப்போது சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்த ஹாசன் ஜகாங்கீரின் "ஹவா ஹவா" பாட்டுக்கு அட்டகாசமாய் டான்ஸ் ஆடி பின்னி எடுத்துவிட்டான். அவசரகதியில் பண்ணின இந்த ஏற்பாடுக்கு அத்தனை வரவேற்பா என்று சத்தியமாய் நம்பமுடியவில்லை எங்களால். கொஞ்சம் கற்றுக்குட்டித்தனமாகவே இருந்தாலும் எங்கள் நாடகத்தையும், நியூஸையும் ரசித்துப் பார்த்த / கேட்ட சேரிபாளையப் பொதுமக்கள் சிரித்த சிரிப்பு இன்னும் மனதுக்குள் பத்திரமாய் இருக்கிறது. வில்சனுக்கோ ரொம்ப சந்தோஷம். இதற்கு நடுவே இப்போது நினைத்தாலும் நாங்கள் விழுந்து விழுந்து சிரிக்க நேரிட்ட சில வெளியே சொல்ல முடியாத சம்பவங்களும் நடந்தன.

அதற்கப்புறம் வில்சன் மேஜிக் ஷோ போகிற இடத்துக்கெல்லாம் எங்களைக் கூப்பிட ஆரம்பித்தார். நாங்கள் பிறகு நான்கைந்து மேடைகளில் வில்சன் தயவால் இன்னும் சில அயிட்டங்கள் சேர்த்து எங்கள் கலைத்திறமையைக் காட்டினோம். பிறகு பொள்ளாச்சி காந்தி மண்டபத்தில் நடைபெற்ற புத்தாண்டுக் கலைநிகழ்ச்சியில் நண்பனொருவன் டயலாக்கை முழுங்கிவிட்டு பேந்தப் பேந்த முழிக்க, ஆடியன்ஸிடமிருந்து விசிலும் கூக்குரலும் வர அத்தோடு எங்கள் கலைப் பயணம் முடிவுற்றது. இந்தக் கூத்துக்கெல்லாம் இப்போது இணையத்தில் எழுதும் எழுத்தாளர் ஒருவரும் சாட்சியாக இருந்தார்.

சுகமான நினைவுகளை ஞாபகப்படுத்தும் பழைய உருப்படிகளை எப்போதும் பத்திரப்படுத்தி வைக்க நினைக்கும் என்னிடம் 'மனிதம் செய்திகளின்' ஒரு சில பிரதிகளும், ஏழெட்டு மேடைகளில் நான் வாசித்த நகைச்சுவை செய்திகளின் பிரதியும் இருக்கின்றன. இரண்டு வருடங்களுக்குமுன் நான் பணியாற்றிய கம்பெனியின் "கெட்-டுகதர்" ஹோட்டல் ப்ரீஸில் நடந்தபோது செய்தி வாசித்ததில் கொஞ்சமாய் சிரித்துவைத்தார்கள். விரும்பிக் கேட்கிற நேயர்களுக்கு Footer-ல் காப்பிரைட் சித்ரன் என்று போட்டு அந்த செய்திகள் ரகசிய ஈமெயிலில் அனுப்பிவைக்கப்படும். செய்திகள் வாசிப்பது ரகுநாதவர்ம விஜயபுர சேதுபதி கணேச சுந்தரபாண்டிய குலோத்துங்க வீர வெங்கடேஷ்வர யோகி ஜகந்நாத சூர்யகாந்திப் பிரகாசராவ்....

நண்பர்கள் வேலை நிமித்தம் ஆளுக்கொரு திசைக்குப் பிரிந்தபிறகு வில்சனைப் சந்திக்கமுடியவில்லை. விசாரித்தபோது அவர் சொல்லாமல் கொள்ளாமல் வேறு ஏதோ ஊருக்கு குடும்பத்துடன் காலிபண்ணிவிட்டுப் போய்விட்டதாகப் பின் தகவல் கிடைத்தது. அவரிருக்கிற இடம் யாருக்கும் தெரியவில்லை. மனிதம் சேவை மையம் இப்போது இல்லை. வில்சனிடமிருந்து கற்றுக்கொண்ட ஒரே ஒரு நாலணா மேஜிக்கை இப்போது சமயம் கிடைக்கும் போதெல்லாம் என் பையனுக்கு செய்து காண்பித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த மாதிரி நட்புகள் என்னிடமிருந்து காணாமல் போகிறதா அல்லது நான்தான் அவர்களிடமிருந்து காணாமல் போய்விடுகிறேனா என்று எப்போதுமே எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. ஏதாவது மேஜிக் பண்ணி அவர்களை என் முன்னால் வரவழைத்துவிட முடியாதென்பது தெரியும். தேடினால் நிச்சயம் கிடைப்பார்கள்.

மறுபடியும் கணேஷ்

இதற்கு முந்தைய வலைப்பதிவில் என் நண்பனுக்குக் கொடுத்தனுப்பிய துண்டுச்சீட்டுக் கடிதம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாய் ஒரு நிகழ்வு என் வாழ்க்கையில் சம்பவித்ததையும் இங்கே சொல்லிவிடலாம் என்று நினைக்கிறேன். அவன் பெயர் கணேஷ். இடம் உடுமலைப்பேட்டை. கவனிக்க! ஊர், பெயர் மாற்றப்படவில்லை. நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம். என் வீட்டுக்கு நாலுவீடு தள்ளி அவன் வீடு இருந்ததாலும், நான் படித்த டியூசன் வாத்தியாரிடமே அவனும் படித்தான் என்பதும் நானும் அவனும் உற்ற நண்பர்களாயிருப்பதற்கு ஒரு சில காரணங்களாயிருந்தன. அப்பொழுதெல்லாம் வீட்டில் எதையாவது சொல்லிவிட்டு, கல்பனா தியேட்டரில் வாராவாரம் மாற்றும் "மிடில் ஷோ" ஆங்கிலப்படங்களை ரெண்டுபேரும் எப்படியாவது பார்த்துவிடுவோம். (அதாவது ஃபர்ஸ்ட் ஷோவிற்கும், செகண்ட் ஷோவிற்கும் நடுவில் ஒரு இடைச்சொருகலாய் ஒரு காட்சி ஓட்டுவார்கள்.) மிக முக்கியமாய் ஜாக்கிசான், ஜேம்ஸ்பாண்ட். இன்னபிற இங்கிலீஷ் ஆக்்ஷன் படங்கள்.

இன்ன தியேட்டர் என்று குறிப்பிட்டு சினிமா போலாமா என்று கேட்டு என் தம்பியிடம் மேற்படி துண்டுச்சீட்டைக் கொடுத்தனுப்புவேன். தம்பிக்காரனும் ஒரு தபால்காரரின் சிரத்தையுடன் அதை கணேஷிடம் ஒப்படைத்துவிட்டு வருவான். கணேஷ் அவன் பெற்றோர்களுடன் அது குறித்து விவாதித்து முடிவெடுத்து அதை அவன் தம்பிக்காரனிடம் எழுதிக்கொடுத்தனுப்பிவிடுவான். இப்படியாக தகவல் பரிமாற்றத்துக்கு தம்பிகளையும், துண்டுப் பேப்பர்களையும் வெகுவாக உபயோகித்து அபிமான குங்ஃபூ படங்களை தவறவிடாமல் பார்த்துக்கொண்டிருந்தோம். எந்த உலகக் கவலைகளின் சுவடையும் மிதிக்காமல், மதிக்காமல் மிக சந்தோஷமான காலகட்டம் அது.

நிற்க!. மேற்படி துண்டுச்சீட்டுகளில் ஒன்றை நான் ஞாபகமாய் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். (இது போல் நிறைய உண்டு). ஓரிரு கரப்பான் பூச்சிகள் உள்நுழைந்திருந்த என் பெட்டிக்குள் அது பல வருடம் பாதுகாப்பாய் இருந்தது. கணேஷ் என்கிற என் நண்பன் அதற்கப்புறம் காலம் எட்டி உதைத்ததில் டெல்லிப்பக்கம் போய் விழுந்திருந்தான். பிறகு ஓரிரு வருடங்கள் அப்படியும் இப்படியுமாக கடிதப்போக்குவரத்தில் நட்பு ஓடிக்கொண்டிருந்தது. பிறகு என்ன ஆயிற்றோ தெரியவில்லை. அதுவும் திடீரென்று நின்றுபோய்.. 700 கோடி பேர்களுள் ஒருவனாய் அவன் காணாமல் போய்விட்டான். பெரிய படிப்பு, பெரிய வேலை என்று அவன் எல்லைகளை விஸ்தரித்துக்கொண்டு போனான். கடிகாரத்தை பார்க்கக்கூட சமயமில்லாமல் உழைத்ததில் ஒரு சில உயரங்களை அடைந்திருந்தான் என்று வேறு சில நண்பர்கள் மூலம் தெரிந்துகொண்டேன். நான்தான் அவன் வட்டத்திலிருந்து தொலைந்துவிட்டேன் போல. பிறகு அவன் எங்கேயிருக்கிறான், என்ன பண்ணிக்கொண்டிருக்கிறான் என்று தெரியாமல் ஒரு சில தேடல் முயற்சிகளுடன் நிறுத்திக்கொண்டேன். வருடங்கள் உருண்டன.

அப்புறம் திடீரென்று ஒருநாள் திடுதிப்பென்று என் வாழ்வில் டெக்னலாஜிக்கல் மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. வலது கையில் மெளசும் இடது கையில் கீபோர்டுமாக கம்ப்யூட்டர் திரையை வெறித்துப்பார்க்கும் வேலையொன்று எனக்கு அமைந்துவிட்டது. அந்தப்பக்கம் இந்தப்பக்கம் அசையவிடாமல் என் இருக்கையைச்சுற்றி இன்டெர்நெட்டும் வலை பின்னத்தொடங்கியிருந்தது அதன் மகா ஆச்சரியப்பக்கங்களை விலக்கி விலக்கி தேடிக்கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது ஒரு வலைத்தளம். அலும்னி டாட் நெட்! வாழ்க்கையில் தொலைந்து போன உங்கள் மனதிற்கினிய க்ளாஸ்மேட்டுகளை இந்த வலைத்தளத்தின் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்று பறைசாற்றுகிற அதை முதன் முதலில் பார்த்தபோது கணேஷ் ஞாபகம்தான் வந்தது. உடனே விரல்கள் பரபரப்பாகி அந்த வலைத்தள கடலுக்குள் டைவ் அடித்துவிட்டேன். ஆனால் ஒன்று நினைவு வந்தது. அவன் என் க்ளாஸ்மேட்டும் அல்ல. அப்புறம் எப்படி கண்டுபிடிப்பது? இருந்தாலும் விடாமுயற்சியுடன் தேடியதில் கணேஷ் என்கிற பெயர் ஒரு விவரப்பக்கத்தில் அகப்பட்டது. ஆயிரம் கணேஷ்களில் அவன்தானா அது? தெரியாது. 50-50. இருந்தாலும் என்ன கெட்டுப்போயிற்று என்று அங்கே கிடைத்த மின்னஞ்சல் முகவரிக்கு கீழ்க்கண்டவாறு எழுதினேன். "நீ நெல்லுக்கடை வீதி முக்கு வீட்டுல குடியிருந்த கணேஷ் எனில் பதில் எழுதவும். இல்லையேல் சிரமத்திற்கு மன்னிக்கவும்."

இண்டர்நெட் என்கிற வேதாளம் எப்படி பாதாளம்வரை பாய்கிறது என்பதை கண்கள் விரிய, மயிர்கால்கள் சிலிர்க்க கண்ணுற்ற சம்பவம் மறுநாள் நிகழ்ந்தேவிட்டது. "நான் அதே கணேஷ்தான். நீ எங்கடா இருக்கே?" என்று பதில் வந்திருந்தது. துண்டுச்சீட்டு, மிடில் ஷோ ஜாக்கிசான் இன்னபிற விஷயங்களை லேசாய் கேட்டு அவன்தான் என்று உறுதிப்படுத்திக்கொண்டேன். உட்கார்ந்த இடத்திலிருந்து அவனைக் கண்டுபிடித்துவிட்ட ஆச்சரியம் ஒரு இரண்டு மூன்று நாட்களுக்கு இருந்தது. என்னிடம் அவன் பிடிபட்டபோது பக்ரைனில் இருந்தான். கல்யாணமாகி ரெண்டு குழந்தைகள் என்றான். உடனே அவன் குடும்பப் புகைப்படங்களை JPG -களாக ஆன்லைனில் பகிர்ந்துகொண்டான். என் புகைப்படங்களையும் கேட்டிருந்தான். அனுப்பிவைத்தேன். கூடவே பல வருடங்களுக்கு முந்தைய அந்தத் துண்டுச்சீட்டை ஸ்கேன் பண்ணி அவனுக்கு அவனுக்கு மின்னஞ்சலில் அனுப்பிவைத்தேன். அதில் லேசாய் கசங்கியிருந்த இங்க் பேனாவால் எழுதப்பட்ட அவன் கையெழுத்து. "ஞாபகமிருக்கிறதா?" என்று ஒற்றை வரியில் கேட்டிருந்தேன். மறுநாள் பதில் வந்தது. "எப்படி மறக்கமுடியும்? கல்பனா தியேட்டர்ல மிடில் ஷோ போன கதைகளை அடிக்கடி ஒய்ஃப் கிட்ட சொல்வேண்டா!"

அது சரி!!

இப்போது ஜப்பானில் இருக்கிறானாம். ஜாக்கிசானை அப்ப நேர்ல பாத்தா கேட்டதா சொல்லு என்றேன். சிரித்தான். கணேஷ் இப்போது எப்போதும் ஆன்லைனில்தான் இருக்கிறான். எப்போதும் அவன் ஸ்டேட்டஸ்ஸில் பிஸி என்று இருப்பதை காணமுடிகிறது. நல்லது. அதனால் என்ன? இப்போது அவன் என் பக்கத்திலேயே அல்லது பக்கத்து வீட்டிலேயே உட்கார்ந்துகொண்டிருப்பதுபோன்ற உணர்வு. எப்போதாவது ஹாய் சொன்னால் நிச்சயம் வந்து பேசுகிறான். அதுபோதும். இதைக்கூட இப்போது அவன் படித்துச் சிரித்துக்கொண்டிருக்கலாம்.

அவன் மறுபடி என்னிடமிருந்து தொலைந்து போகாமலிருக்க எல்லாம் வல்ல அருள்மிகு இண்டர்நெட்டேஸ்வரன் திருக்கோயிலுக்கு நேர்ந்திருக்கிறேன்.

ஒரு கடிதம்

நான் என் முதல் கடிதத்தை எப்போது யாருக்கு எழுதினேன் என்பது நினைவில்லை. பத்தாம் வகுப்பு பரீட்சை முடிந்ததும் "தாஜ் தியேட்டரில் சினிமாவுக்குப் போகலாமா?" என்று நாலுவீடு தள்ளி இருக்கிற கணேஷூக்கு என் தம்பியிடம் கொடுத்தனுப்பிய துண்டுச் சீட்டுகூட என் முதல் கடிதமாக இருந்திருக்கலாம். எங்கேயோ எப்படியோ தொடங்கிவிட்டது அது. அடிக்கடி படிப்பு வேலையென எல்லோரும் இடம் மாற நேர்ந்த சூழ்நிலைதான் யாருக்காவது கடிதமெழுதுவதன் அவசியத்தைத் ஏற்படுத்தியது என்றாலும்.. சில முக்கியமான தகவல்களைத் தெரிவிப்பதற்கென என்று இல்லாமல்.. அது பின்னாளில் ஒரு சுவாரஸ்யமான விஷயமாகிவிட்டது. அப்போது கடிதமெழுதுவதென்பது ஒரு போதை மாதிரி. அந்த அனுவங்களையெல்லாம் சொல்ல இங்கே இடம் போதாது. கடிதமெழுதுவதில் என்னென்ன புதுமைகள் செய்ய முடியுமோ அத்தனையும் பண்ணி தபால்காரரிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட சம்பவங்களும் உண்டு. உதாரணத்துக்கு போஸ்ட் கார்டில் படம் ஒட்டி லே-அவுட் செய்து அனுப்புவதும், அட்ரஸை தலைகீழாய் பின்கோடிலிருந்து ஆரம்பித்து எழுதுவது.. இன்னபிற! இன்றைய தேதிக்கு நான் எழுத்துலகுக்கு நல்லமுறையில் அறிமுகமாயிருப்பதற்கு கடிதப் பயிற்சி முதல் மூலகாரணம். நானும் இலக்கியம் சார்ந்த என் நண்பர்களும் எழுத்துநடையைப் பக்குவப்படுத்திக்கொண்டதற்கு கடிதம் எழுதுவதை ஒரு கருவியாய் உபயோகித்துக்கொண்டோம் என்று நிச்சயம் சொல்லலாம்.

போஸ்ட் கார்டு, இன்லேண்ட் லெட்டர், என்வலப் என்று மாய்ந்து மாய்ந்து என் நண்பர்கள் எழுதிய கடிதங்களைக் கிழிக்க மனமில்லாமல் எடுத்துவைத்ததில் ஒரு சூட்கேஸ் நிறைய குவிந்து கிடக்கிறது. அதில் நிறைய கடிதங்கள் இப்போது நிறம் மங்கி பழுப்பேறத்துவங்கிவிட்டது, கொஞ்சமல்ல - ரொம்பவே வருத்தமாயிருக்கிறது. சந்தோஷப்பட வைத்தது, வேதனைகளைக் கொண்டுவந்தது.. தளர்ந்தபோது உத்வேகமும், உற்சாகமும் அளித்தது, எரிச்சலடைய வைத்தது, நெகிழ்வாய் கண்கலங்க வைத்தது.. துள்ளிக் குதிக்க வைத்தது... வாய்விட்டுச் சிரிக்க வைத்தது, தர்மசங்கடத்தில் நெளிய வைத்தது.. யாருக்கும் சொல்லாதே என்று ரகசியங்களைத் தாங்கி வந்தது.... இப்படி எண்ணற்ற கடிதங்கள். என்றோ, யாரோ எழுதிய கடிதத்தை இப்போது எடுத்துப்படித்துப் பார்ப்பது சுகமான விஷயம். ஆனால் ஒரு சில சமயம் என்றோ நடந்த ஒரு நிகழ்வுக்கு இன்று படிக்கும்போது மனசை கனக்கச் செய்யும்விதமான கடிதங்களும் அதில் உண்டு.

நேற்று அதுமாதிரி பழையவைகளை லேசாய் கிளறியபோது கண்ணில்பட்டது ஒரு கடிதம். 75 பைசா இன்லண்ட் லெட்டர். பதினைந்து வருடம் முன்னால் என் நண்பர் சரசுராம் எனக்கெழுதியது. படிக்கும்போது அந்தக் கடிதத்தில் புதைந்திருந்த, அது எழுதப்பட்ட காலத்தின் வேதனையை இப்போதுகூட உணரமுடிந்தது. அந்தக் கடிதம் அத்தனை பர்சனலாக இல்லாமல் பொதுவாய் ஒரு சிறுகதைத்தனத்துடன் இருந்ததால், இங்கே அதை பகிர்ந்துகொள்கிற விருப்பத்தை எனக்குக் கொடுத்தது. ஆக, சரசுராமின் அனுமதியுடன் அதை இதோ இங்கே...

-----------------------------------------------------------------------------------------------------
பொள்ளாச்சி
4-4-91

"வாழ்க்கை என்பது துவந்த யுத்தமா? விரிந்த கனவா? ஆச்சரிய நிமிடங்கள் அடங்கிய கதையா? தீக்குள் விரலை வைத்துத் தீண்டும் இன்பத்தைக் காணும் தவமா? எனக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை." - மாலன்.

*****

ப்ரிய ரகுவிற்கு....ராம்

இந்தக் கடிதம் முழுவதும் பாட்டியைப் பற்றியே எழுதும் எண்ணம் நான் முன்பே யோசித்ததல்ல. ஆனால் அது தவிர, தற்போதைய என் நினைப்பில் அல்லது ஏதோவொரு நியாயத்தில் இடமில்லை. போன வாரத்தின் ஒரு தினத்தில், புழு மாதிரி சுருண்டு கிடந்த பாட்டியை பார்த்துவிட்டு மாமா அழுதாரே பார்க்கணும். எல்லோரும் நிறுத்தச்சொல்ல.. முடியவே முடியாமல் அழுதார். எனக்கு சமாதானப்படுத்த விருப்பமேயில்லை. அழட்டும்! நிறைய அழட்டும் என்றுதான் இருந்தது. ஒரு துக்க நேரத்தில் சமாதானம் சொல்வதைவிட வேறென்ன அசிங்கம் இருந்துவிடமுடியும்? அழுகை நிஜமாய் மனதின் கவிதை. அது தரும் ஒத்தடம் வார்த்தைகளில் இல்லை. நம்மால் பிரியப்பட்டவர்களின் உயிர் நாட்கள் எண்ணப்படுவது எவ்வளவு கொடுமை? ஏழு வருட தண்டனைக்குப்பின், சாவின்போதுகூட ஒரு சின்ன சுகத்துடன் போக முடியாத அவர்களின் நிலைமை எதிரிக்குக்கூட ஏற்படக்கூடாது. ஒரு மனித உயிர் இவ்வளவு தூரம் சித்திரவதைக்கப்படுவதைக் நான் பார்ப்பது இதுவே முதன் முறை.

கடவுள் மீதான எண்ணத்தில் மேலும் விரிசல் விழுந்துகொண்டிருப்பதெல்லாம் இத்தகைய நிகழ்ச்சியின்போதுதான். பாட்டி கும்பிடாத சாமியா? அவர்கள் செய்யாத பூஜையா? அவர்களிடம் இல்லாத சுத்தமா? செய்யாத நல்லவைகளா? பிறகும் இவர்களுக்கு இப்படியொரு நிலைமை என்றால்...? தீர்க்கமுடியாத பிரச்சனைக்கு விதி என்று பெயரிட்டு... - எல்லாம் விதியெனில் கடவுள் எதற்கு?

தினம் தினம் எல்லோரும் சுற்றிலும் நின்று பாட்டியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பாட்டிக்கு வந்தவர்களில் எத்தனைபேரை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது என்பது தெரியாது. ஆனால் வந்தவர்களைப் பார்க்கும் அந்த ஸ்நேகமான பார்வை கொஞ்சமும் இன்னும் குறையவேயில்லை. வந்தவர்கள் நீ பிழைக்கவே மாட்டாய் என்கிற மாதிரிதான் ஆறுதல் சொல்கிறார்கள். தலையசைத்தால்... தண்ணி வேணுமா? என்கிறார்கள். கண் உருண்டால் காபியா வேணும்? என்கிறார்கள்.

பாட்டி எல்லோருக்கும் ஒரு குழந்தை. அவரின் ஒவ்வொரு அசைவுக்கும் காரணங்கள் திணிக்கப்படுகிறது. பாட்டி உயிருள்ள ஒரு ஜடம். பாட்டியை எண்ணுகிறபோதெல்லாம், அவர்கள் பற்றி நினைவுகள் தோன்றாமல் இருப்பதில்லை. ஒவ்வொருவரைப்பற்றியும் நினைக்க ஏதாவதொரு நினைவு நிச்சயம் இருக்கும். அது பெரியவர்களானாலும்.. ஒருவயது குழந்தையானாலும் கூட!

உள்ளே நுழைந்ததும் தனக்கு தெரிந்த முறையில் வரவேற்கும் பாங்கும், சாப்பிடச்சொல்லி, டீ குடிக்கச் சொல்லி.. திக்கிக் திக்கித் துண்டு துண்டாய் வந்து விழும் வார்த்தைகளும், அதை மறுக்கிறபோது.. அந்த முகச்சுருக்கம் மீறி தெரிகிற அசைவுகளும், (நான் கோபமென நினைத்துக்கொள்வதுண்டு!). இதற்கிடையில், சில சந்தோஷ நிமிடங்களில், அந்தக் கோணிப்போன வாயிலிருந்து வரும், இன்னும் மறந்துபோகாத சில பாடல்களும்... இன்னமும் சின்னச் சின்னதாய் என்னென்னவோ... மறக்க நாளாகும். எப்படி அழகு ததும்பின உருவம் அது! இப்போது முழுவதும் உருகிப்போய்.. வெறும் எலும்புக்கூடும், அதற்குப் பாதுகாப்பென மிக லேசாய் தொங்கும் தோலும்.. ச்சே.. வாழ்க்கை வெறுப்பாகிப் போகிறது.

திங்கட்கிழமை, நானும் மாமாவும், கோயிலுக்குப் போய் குங்குமத்துடன் வீடு திரும்ப, வீட்டில் கூட்டம். பாட்டி மூச்சுத்திணறிக் கொண்டிருந்தார்கள். வாயில் ஒரு வித சப்தம். கையிலிருந்த குங்குமம் வைக்கச்சொன்னார்கள். வைத்து ஐந்து நிமிடத்தில் உயிர் பிரிந்தது. அந்த உயிர் பிரிந்த நிகழ்வு, எல்லோருக்கும் அழுகையை வெளிப்படுத்த, எனக்கு மட்டும் சந்தோஷமாயிருந்தது.

அன்புடன்
-ராம்.