Showing posts with label மடிப்பாக்கம். Show all posts
Showing posts with label மடிப்பாக்கம். Show all posts

நான் ஏரிக்கரை மேலிருந்து..

சென்னையில் மடிப்பாக்கம் என்னும் ஊர் உண்டு. அதில் ஓர் ஏரி உண்டு. சுமார் முக்கால் கிலோமீட்டர் நீளம். இந்த ஏரிக்கரையில், ஒரு காலத்தில் அந்தப் பகுதியில் குடியிருப்பவர்களைத் தவிர வேறு ஆள் நடமாட்டமில்லாமல் இருக்கும்.  இப்போது அதே ஏரிக்கரை வேறு மாதிரி உருக்கொண்டுவிட்டது.

மக்கள் மேல் அக்கறை கொண்ட இந்தப் பகுதியின் கவுன்சிலரோ யாரோ ஏரிக்கரையோரமாக இருந்த சாலையை சரி செய்து, மின் கம்பங்கள் அமைத்து, பெஞ்சுகள் போட்டு மெருகூட்டியதில் அதிகாலையில் வாக்கிங், ஜாக்கிங் என களைகட்ட ஆரம்பித்தது. மாலையில் ஏகப்பட்ட குடும்பங்கள் காற்று வாங்க அங்கே வர ஆரம்பிக்க ஒரு மினி கடற்கரை போல் மாறிவிட்டது இந்த ஏரிக்கரை.

கூட்டம் சேர்ந்ததும் சூப், காளான் ஃப்ரை, பேல் பூரி, பானிப்பூரி கடைகள் முளைக்கத் தொடங்கின. நடைபாதையில் நடக்க முடியாத அளவுக்குக் கூட்டம்.

இன்று குடும்பத்துடன் ஒரு நடை போய்வந்தேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை மக்கள் தலைகள். வரிசையாக டூவீலர்கள், கார்கள். நிறைய கல்லூரி மாணவர்களுக்கு ‘ஹாங்க் அவுட்’ இடமாகவும் இது மாறிக்கொண்டிருப்பதைக் காணமுடிந்தது. ஆனால் அவர்களெல்லோரும் தத்தம் நண்பர்களுடன் வந்திருந்தாலும் ஆளுக்கொரு மொபைலில் ஆழ்ந்திருந்தார்கள்.

ஏரியானது டிசம்பரில் பெய்த பெருமழையின் மிச்சத்தை இன்னும் தன் மடியில் தேக்கிவைத்து மின்விளக்குகளை அழகாய் பிரதிபலித்துக்கொண்டிருந்தது. ஜிலுஜிலுவென்று காற்று வீசியது. ஏரிக்குள் இருட்டில் அசை போட்டபடி எருமைகள் மிதந்தன. நிறைய குப்பைத் தொட்டிகள் இருக்க, காகித, ப்ளாஸ்டிக் குப்பைகள் ஏரிக்கரை சரிவில் பெருமளவில் வீசப்பட்டிருந்ததையும் காண முடிந்தது. அலங்கோலமாக இருக்கும் ஒரு இடத்தை அழகாக்கி மறுபடி அதை வேறுவிதத்தில் அலங்கோலமாக்குவதில் நம் மக்களுக்கு ஈடு இணை கிடையாது.

நடைபாதையில் ஓரிடத்தில் வரிசையாக ஆறு இளைஞர்கள்  உட்கார்ந்திருந்தார்கள். அவர்களை முதுகுப் பக்கமாக நாங்கள் கடக்கும்போது, ஆறு பேர் கையிலும் ஒவ்வொரு மொபைல் இருப்பது கண்ணில் பட்டது. ஆறையும் “லாண்ட்ஸ்கேப்” பொசிஷனில் வைத்திருந்தார்கள். ஆறிலும் ஒரே வீடியோ, ஒரே காட்சி ஓடிக்கொண்டிருந்தது. ஆறுபேரும் அதை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

நான் என் மகனிடம் “ஒரே வீடியோவை தனித்தனியா ஒரே நேரத்துல ஓடவிட்டுப் பாக்கறாங்க. அதுக்கு எல்லோரும் ஒரே மொபைல்ல பாத்தா பேட்டரியாவது மிச்சமாகும்.” என்றேன்.

அதற்கு அவன் “அது வீடியோ இல்ல. மினி மிலிஷியான்னு ஒரு கேம். ஒரே நேரத்துல எல்லாரும் விளையாடறது. குண்டு போட்டுக்கிட்டே சுட்டுக்கிட்டே இருக்கணும். கடைசி வரை யார் தாக்குப் பிடிக்கறாங்களோ அவங்கதான் வின்னு.”

“அதுக்கு அவங்கவங்க வீட்லயே ஒக்காந்து விளையாடலாமில்ல..” என்றேன்.

பிறகு “நாங்கெல்லாம் அந்தக் காலத்துல..” என்று ஆரம்பிக்க வாய் துடித்ததை அடக்கிக்கொண்டேன். அப்புறம் அடுத்த தடவை ஏரிக்கரைக்குக் கூப்பிட்டால் வர யோசிப்பான்.