இதனால் அறியப்படும் நீதி

அது சினிமாவில் வரும் ஒரு ஸ்டண்ட் காட்சியை ஒத்திருந்தது. இன்று பல்லாவரம் - துரைப்பாக்கம் நெடுஞ்சாலையில் எனக்கு முன்னால் பைக்கில் போய்க்கொண்டிருந்த ஆள் திடீரென சறுக்கி, பைக் சாலையில் பல அடி தூரங்கள் சறுக்க்க்க்க்க்க்கிக்கொண்டே போக, அந்த ஆளும் வண்டியுடனேயே சர்ரென்று சாலையில் தேய்த்தவாறே இழுத்துச் செல்லப்பட்டு பிறகு ஒரு ஏழெட்டுத் தடவை கட கடவென உருண்டார்.
நல்லவேளையாக முன்னாலோ, பின்னாலோ கார்களோ, கனரக வாகனங்களோ எதுவும் இல்லை. நானும் இன்னும் ஓரிருவரும் வண்டியை நிறுத்தி அவரையும், அவர் பைக்கையும் ஓரம் கட்டினோம். அது ஒரு கல்லூரி மாணவன். முழங்கையிலும், முழங்காலும் சிராய்த்து சிவப்பாய் ரத்தத் திட்டுகள். அவனால் இடது கையைத் தூக்க முடியவில்லை. வலி முகத்தில் தெரிந்தது. ப்ராக்சர் ஆகியிருக்கலாம் என்று நினைத்தேன். தலை சுற்றுகிறது என்றான். நான் என் பையனின் கிரிக்கெட் கிட் பேகிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடிக்கக் கொடுத்தேன். பாதி மயக்கத்தில் சரிந்தவனை ஒரு லோடு அடிக்கும் மினி டெம்போவில் உட்காரவைத்தோம்.
தெளிந்தபின் ”எதுக்குப்பா இவ்ளோ வேகமா போற?” என்று கேட்டதற்கு, ”ரோட்டில் பள்ளம் இருந்ததை கவனிக்கவில்லை” என்றான். திரும்பிப் பார்த்தபோது பள்ளம் எதுவும் என் கண்ணில் படவில்லை.
உதவி செய்ய வந்த டெம்போ ட்ரைவரும், இன்னொருவரும் அவனை பக்கத்திலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்னார்கள். ’நீங்க கிளம்புங்க சார். நாங்க பாத்துக்கறோம்’ என்றார்கள். அவனிடம் ஃபோன் நம்பர் வாங்கிக்கொண்டு கிளம்பும்போது, ’தலைல ஏதாவது அடி பட்டுச்சாப்பா?” என்றேன். “இல்லை” என்றான்.
ஹெல்மெட் அணிந்திருந்தான்.

தொடர்பு எல்லைக்கு வெளியே - சிறுகதைகள் - மின்னூல்


http://freetamilebooks.com/ebooks/thodarbu-ellaikku-veliye/
கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ’மனதில் உனது ஆதிக்கம்’ என்கிற எனது முதல் சிறுகதைத் தொகுப்பு தந்த உற்சாகம் மேலும் தொடர்ந்து சிறுகதைகள் எழுதுவதில் கவனம் கொள்ள வைத்தது. நிறைய இல்லாவிட்டாலும் எப்பொழுதெல்லாம் எழுத வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது மட்டுமே பத்திரிக்கைகளிலும், இணையத்திலுமாக எழுதிக்கொண்டிருந்தேன். அப்படி வெளியான சில சிறுகதைகளின் தொகுப்பு இது. இதில் இருபது கதைகள் உள்ளன.
இந்தச் சிறுகதைகளின் கருக்கள் பெரும்பாலும் அகண்ட வாழ்வின் சின்னத் துணுக்குகளால் கோர்க்கப்பட்டவை. எதிர்ப்படுகிற ஏதாவது சம்பவங்களில் கிளர்ந்த சிறு பொறிகள் சிறுகதைகளாய் வடிவம் பெற்றிருக்கின்றன. இந்தச் சிறுகதைகள் கடந்த ஏழெட்டு வருட கால கட்டங்களில் எழுதப்பட்டவை. இந்தத் தொகுப்பை மின்னூலாக வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
இவைகளை வெளியிட்ட கல்கி, குமுதம், ஃபெமினா தமிழ், நம் தோழி ஆகிய பத்திரிக்கைகளுக்கும், தமிழோவியம்.காம், பதாகை.காம், செந்தமிழ்.காம் ஆகிய இணைய இதழ்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
தொடர்பு எல்லைக்கு வெளியே - சிறுகதைத் தொகுப்பை இலவச மின்னூலாக தரவிறக்கிப் படிக்க இங்கே சொடுக்கவும்.
மின்னூல் வெளியீடு :http://FreeTamilEbooks.com
உரிமை – கிரியேட்டிவ் காமன்சு. எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

குறுநூல் - சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட்

 சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட்
2008-ல் எனக்கு வாய்த்த சிங்கப்பூர் பயணத்தின்போது நான் பார்த்த விஷயங்களை, அனுபவங்களை சிறு சிறு குறிப்புகளாக வலைத் தளத்தில் எழுதினேன். இது என் முதல் வெளிநாட்டுப் பயணம் என்பதால் பின்னொரு நாளில் அந்த இனிய அனுபவங்களை நினைவு கூற வழிவகை செய்யும் வகையில் சும்மா டயரிக் குறிப்புகள் போலத்தான் அவற்றை எழுதிவைத்தேன். ஆனால் பின்னாளில் வாசகர்களால் அதிகம் தடவைகள் பார்வையிடப்பட்ட  பதிவுகளாக இவை இருப்பதைக் கவனித்தேன்.

பின்னர் ’குறுநூல்’ ஐடிவாவை திரு. சொக்கன் சொன்னபோது பேசாமல் இதை குறுநூல் ஆக்கிவிடலாம் என்று தோன்றியது. அவருக்கு என் நன்றிகள். 

இது விலையில்லாப் புத்தகமாக இப்போது கூகுள் புக்ஸில் கிடைக்கும். இதை நீங்கள் டவுன்லோடு செய்தபிறகு மற்றவர்களுக்கும்கூட பகிரலாம்.

சிங்கப்பூர் என்னும் அழகிய நாட்டுக்கு முதல் முறை செல்ல நினைப்பவர்களுக்கு அதன் அதிசயங்களை, சுற்றுலாத் தலங்களை அறிமுகப்படுத்துகிற அளவில் மட்டுமே இந்த நூல் இருக்கும்.

கூகுள் புக்ஸில் இந்த மின்னூலைப் பெற இங்கே க்ளிக்கவும்.

ஆரோக்கியமான உரையாடல்

ஆட்டு தாடி வைத்திருந்த ஒரு நண்பரிடம் 'அப்படியே உங்க தாடி கார்ல் மார்க்ஸ் மாதிரியே இருக்கு' என்று சொல்லப்போக துவங்கியது ஒரு உரையாடல்.

”கார்ல் மார்க்ஸ்க்கு தாடி இப்படி இருக்காது” என்றார்.

“அப்படியா.. இருங்க.. நெட்ல பாத்துரலாம்.”

நான் கூகுளில் கார்ல் மார்க்ஸ் என்று தேட புசுபுசுவென வெண்தாடியுடன் அவர் வேறு மாதிரி இருந்தார். நான் சமாளித்து “அப்ப லெனின்னு நினைக்கிறேன்.”

நல்ல வேளையாக நண்பரின் தாடி லெனினோடு கச்சிதமாகப் பொருந்தியது.

“ஆங்.. மார்க்ஸூன்னு வாய் தவறி தப்பா சொல்லிட்டேன்..”

“கம்யூனிஸம் படிப்பீங்களோ..?”

“நோ.. கத்தி படத்துல இட்லி சமாச்சாரம் அளவுக்குத்தான் தெரியும்.. ”

”புக்ஸ் நிறைய படிப்பீங்களா?”

“நிறைய படிச்சிட்டிருந்தேன்.. இப்ப ரொம்ப கம்மியாயிருச்சு.. ரெண்டு வருஷத்துக்கு முன்னால புக் ஃபேர்ல வாங்கினதெல்லாம் படிக்காம அப்படியே கிடக்குது..”

“எந்த மாதிரி புக்ஸ்?”

“நிறைய தமிழ் நாவல்ஸ்..  சிறுகதைகள்... சுஜாதால ஆரம்பிச்சு, ஆதவன், வண்ணதாசன், அ.முத்துலிங்கம்..”

நான் முடிப்பதற்குள் நண்பர் குறுக்கிட்டு “எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோஹன்..” என்று தொடர்ந்தார்.

“ஆமா.. ஆமா..” நான் தொடந்து “சதத் ஹஸன் மாண்ட்டோ..” என்று பீலா விட ஆரம்பிப்பதற்குள்..

”நான்கூட படிப்பேன்”

“எந்த மாதிரி?”

“ஓஷோ, சாருலதா.. இந்த மாதிரி”

“சாருலதாவா அது யாரு.. பெங்காலி ரைட்டரா?”

“தமிழ்தாங்க... சாரு... சாரு”

“நிவேதிதாவா..”

முகத்தில் இருபது வாட்ஸ் சி.எல்.எஃப் பல்ப் எரிந்து “ஆங்.. அவர்தான்..”

“ஓஷோன்னவுடனே ஞாபகம் வருது.. அவரோட ’கிருஷ்ணா எனும் மனிதனும் அவன் தத்துவங்களும்’ படிச்சிருக்கீங்களா?”

“இல்லையே.. நல்லாருக்குமா?”

“தெரியலை.. நானும் படிச்சதில்லை.. கேள்விப்பட்டிருக்கேன்.”

“அவரை மாதிரியே இன்னொருத்தர் இருப்பாரே.. ஜகதீஸ் வாசுதேவன்னு. விகடன்ல எழுதுவார்..”

“ஓஹோ..”

“இந்த மூச்சுக்காத்தை இழுத்து விட்டு.. அதுக்கு என்ன பேரு? அதெல்லாம் சொல்லித்தருவாங்க அவர் சென்டரிலே.. பிரயாணம்-ங்கற மாதிரி வரும்”

“பிராணயாமம்..”

“அதேதான்.. நான் ஒரு வாரமா பண்ண ஆரம்பிச்சிருக்கேன்... எங்கப்பா வளச்சு வளச்சு பண்ணுவார் யோகாசனமெல்லாம்... என்னையும் பண்ணச்சொல்வார்.. ”

“ரொம்ப நல்லது.. என்ஜினீயரா இருந்த என் நண்பர்கூட வேலையை ரிசைன் பண்ணி பல வித யோக நிலைகளைக் கடந்து...”

“யோகியாயிட்டாரா..”

“இல்ல மறுபடி என்ஜினீயரே ஆயிட்டார்..”

நண்பர் பதினெட்டு மூலிகைகள் அடங்கிய மெடிமிக்ஸ் சோப்பால் குளித்தமாதிரி உணர்ந்து ”சரி.. வேலையைப் பாப்போம்..மார்க்ஸ்-ல ஆரம்பிச்சு.. எங்கெங்கேயோ போய் முடிஞ்சிருச்சு பேச்சு.. நல்ல ஹெல்த்தியான கான்வெர்ஷேசன். மேலும் நிறைய பேசுவோம்..” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

தருணம் - குறுநாவல் - இலவச மின்னூல்

தருணம் என்ற தலைப்பிலான எனது குறுநாவல் இப்போது இலவச மின்னூலாக இங்கே கிடைக்கிறது.
1998 – ல் கல்கி வார இதழில் நான்கு வாரத் தொடராக வெளியான கதை இது. ஒரு சில காரணங்களுக்காக இதன் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. 2004–ல் கிழக்கு பதிப்பகம் வெளியீடாக வெளிவந்த ’மனதில் உனது ஆதிக்கம்’ என்ற எனது சிறுகதைத் தொகுப்பில் இந்தக் கதையும் கடைசியாக இடம் பெற்றிருந்தது.
அலைபேசிகளும், இணையமும், மின்னஞ்சலும் பிரபலமடைந்திராத ஒரு காலகட்டத்தில் இதை எழுதினேன். இதில் உலவும் மனிதர்கள் கொஞ்சம் நடைமுறை நிஜங்களும், கொஞ்சம் கற்பனைகளும் சரிவிகிதமாகக் கலந்து படைக்கப்பட்டவர்கள். எந்த ஒரு புனைவையும் முற்றிலுமாக கற்பனையிலிருந்தே வடித்தெடுப்பதென்பதை எந்த எழுத்தாளனும் செய்ய முடியாதுதான். அமோகமாகவோ, அவலமாகவோ ஒவ்வொருவருக்கும் தனித்துவமாக, ப்ரத்யேகமாக அமைந்துவிடுகிற வாழ்க்கை எவ்வகைத் தருணங்களையெல்லாம் அவர்களுக்குக் கொண்டுவந்து தருகிறது? எதை அவர்களிடமிருந்து இரக்கமில்லாமல் சட்டென்று பிடுங்கிச் செல்கிறது? சூழ்நிலைகளின் கனத்தில், சட்டென்று ஒரு கணத்தில் எடுக்கப்படும் முடிவுகள் எப்படி வாழ்க்கையின் போக்கை திசை மாற்றுகின்றன? இவற்றையெல்லாம் இந்தப் புனைவு லேசாய்த் தொட முயற்சிக்கிறது. இதில் நிச்சயம் உண்மையின் துகள்கள் கலந்திருக்கின்றன. ஒரு சாதாரண புனைவுக்கு அசாதாரண உயிர்ப்பைத் தருவது அது மட்டும்தான்.
நான் கேள்விப்பட்ட, நடந்த சம்பவங்கள் கொடுத்த அதிர்வுகளின் ஆதார வரி என் மனதின் அடியுறைக்குள் ஒளிந்துகொண்டு எப்படியோ இதில் வெளிப்பட்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். அந்த அதிர்வுகளோடு சேர்ந்து, மனிதர்களின் அன்பும், காதலும், புரியாத உணர்வுகளும், நிஜ வலிகளும் இந்தக் கதையின் வரிகளுக்குள் புதைந்து கிடக்கின்றன. இதைப் படிக்கிறபோது அவைகளில் ஒரு பங்கையாவது லேசாக நீங்கள் உணர்கிறீர்கள் என்றால் இதை எழுதியதற்குக் கிட்டிய வெற்றியாக நான் நினைத்துக் கொள்வேன்.
இதை அன்று வெளியிட்ட கல்கி இதழுக்கும், இன்று மின் புத்தகமாக வெளியிடும் முன்னேர் பதிப்பகத்துக்கும், freetamilebooks.com ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும் நன்றிகள் பல.
இதை epub, Mobi, PDF ஆகிய வடிவங்களில் தரவிறக்கிப் படிக்க, பகிர: http://freetamilebooks.com/ebooks/tharunam/