இறந்தவன் - சிறுகதை


ஃபெமினா தமிழ் – ஜூன் 1, 2012
ஆறு மாதத்திற்கு முன்பு நிகழ்ந்த பைக் விபத்தொன்றில் வசந்தன் இறந்துவிட்டானாம். இதைச் சொல்வதற்காகவே நேரங்கெட்ட நேரத்தில் சிங்கப்பூரிலிருந்து போன் பண்ணியிருந்தான் நடராஜ்.

மிகத் தாமதமாக வந்த அதிர்ச்சி செய்தி. கேட்டுவிட்டு இந்த முனையில் அஷோக் உறைந்துபோய் சில விநாடிகள் பேச்சற்று நின்றான்.
ஆறு மாசத்துக்கு முன்னாலா? எப்படி இது இத்தனை நாள் தனக்குத் தெரியாமல் போனது?

எனக்கே இப்பதாண்டா தெரியும். ரொம்ப கஷ்டமாயிருச்சு. பாவம்டா அவன். அல்பாயுசு! எப்பவும்போல பைக்-ல கண்ணு மண்ணு தெரியாமப் பறந்திருப்பான். வினையாயிருக்கும். எத்தனை தடவை படிச்சுப் படிச்சு சொல்லிருப்போம். கேட்டானா?” என்றான் நடராஜ்.

மழைக்காதல் - சிறுகதை

காதலர் தினத்தை முன்னிட்டு எங்கு பார்த்தாலும் காதல் காய்ச்சல் தொற்றிக்கொண்டிருந்த பிப்ரவரி மாதத்தில் ‘நம் தோழி’ இதழில் வெளியானது எனது சிறுகதை ஒன்று. இதுவும் ஒரு காதல் கதைதான் என்று தலைப்பே சொல்கிறதே. வேறென்ன? அதேதான்.

கதையைப் படிக்க இங்கே கிளிக்கவும் >>: மழைக்காதல்

முதல் பாடல்

‘ஆத்தாடி... ஒரு பறவ பறக்குதா...’

நான் எழுதிய முதல் திரைப்பாடல் இது. 2012 ஆம் வருடம் பிறந்த கையோடு ஒரு சுப தினத்தில் மதிப்பிற்குரிய முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. அப்துல் கலாம்  வெளியிட இதோ இந்தப் பாடல் இப்போது ஆங்காங்கே ஒலிக்கவும் ஆரம்பித்துவிட்டது. படம்: கிருஷ்ணவேணி பஞ்சாலை.

கல்கி இதழில் முதல் சிறுகதை வெளியானபோது மனம் எவ்விதமான குதூகலத்தில் மிதந்ததோ அதற்கு இணையாக இப்போதும் உணர்கிறேன். மனதுக்குள் ஒரு பறவை பறக்கிறது.

பரவசமும் பயமும் கலந்த ஓர் உணர்ச்சி வந்து சேர்ந்திருக்கிறது. நீண்ட வரலாறு கொண்ட தமிழ்த் திரையுலகில் எத்தனையோ கவி ஜாம்பவான்களுக்கு நடுவே ஒரு ஓரமாய் ஒரு துணுக்காக நானும் அறிமுகப்படுத்தப்படுகிறேன் என்பது பரவசம். அவர்கள் சாதித்ததில் ஒரு சில துளிகளாவது நானும் சாதிக்கவேண்டுமே என்பது பயம்.



இதன் மூலகாரணமாக இருந்த நண்பரும் இயக்குநரும் ஆன தனபால் பத்மநாபனுக்கும், இசையமைப்பாளர் என். ஆர். ரகுநந்தன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

குழந்தையாக இருந்தது முதற்கொண்டு இன்று வரை வாழ்வின் பின்னணியில் சதா ஒலித்துக்கொண்டிருந்த பல்லாயிரம் தமிழ்த் திரைப்பாடல்களை ரசித்துத் திளைத்திருந்த எனக்கு முதன் முதலாக நான் எழுதிய வரிகள் திரை இசையால் உயிர்பெற்று அதை நானே கேட்பதை உன்னதமான தருணமாக உணர்கிறேன்.

இந்தப் பாடல் ஒரு ரொமான்ஸ் டூயட்-டாக அமைந்தது நல்ல விஷயம். ஒரு பஞ்சாலையை பின்னணிக் களமாகக் கொண்டது. முதலில் திருகலான வரிகளுடன் கொஞ்சம் கவித்துவமாகத்தான் எழுதிக்கொடுத்தேன். இசையமைப்பாளரும் இயக்குநரும் எல்லோருக்கும் புரியும்படி எளிமையாக இருக்கட்டுமே என்று கேட்டுக்கொண்டதிற்கிணங்க முயற்சித்ததில் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் ஒரு பாடலை எழுத முடிந்திருக்கிறது என்று நம்புகிறேன். இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு நண்பர்களிடமிருந்து வந்த பெரும்பாலான கருத்துக்களின் சாரம் இவ்வாறு இருக்கிறது. “தெளிவான, எளிமையான, சுகமான இசையுடன் என்பதுகளின் திரைப்பாடல் கேட்பதுபோன்ற இதமான அனுபவம்”. இந்தப் பாடல் பரவலாக எல்லோராலும் ரசிக்கப்படும் என்கிற நம்பிக்கையைத் தருகிறது இது.

பயணங்கள் முடிவதில்லை, நான் பாடும் பாடல் போன்ற படங்களில் மட்டுமே பார்த்திருந்த ரெக்கார்டிங் ஸ்டுடியோக்களில் விஜய் பிரகாஷ், சித்தாரா போன்ற முன்னணிப் பாடகர்கள் பாட அருகிலிருந்து பார்த்த பாடல் பதிவுகள் கூடுதல் அனுபவம்.

தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளரான என். ஆர். ரகுநந்தன் மிகத் துடிப்பான ஒரு மனிதர். தமிழ் திரையிசையின் நுணுக்கங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர். தெ.மே.பருவக்காற்றுக்கு அப்புறம் வரிசையாய் நிறைய படங்கள் கைவசம் சேர ஆரம்பித்தாலும், நல்ல ப்ராஜெக்ட்டுகளை மட்டும் தேர்ந்தெடுத்து கவனமாக இசையமைத்துக்கொண்டிருக்கிறார். கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தின் பாடல்கள் தவிர இவர் அதற்கு அமைத்திருக்கும் பின்னணி இசையும் ரசிகர்களிடையே தனித்த கவனம் பெறும் என்பதிலும், ஒரு முன்னணி இசையமைப்பாளராக இவர் உருவாகிக் கொண்டிருக்கிறார் என்பதிலும் சந்தேகமே இல்லை.

தனபால் பத்மநாபன் வித்தியாசமான பின்னணியுடன் அமைந்த இத்திரைப்படத்தினை மிகுந்த சிரத்தையுடன் உருவாக்கியிருக்கிறார். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதல் முதலாக காஸ்டிங் டைரக்டர் என்ற ஒரு பதவியில் நடிகர் திரு சண்முகராஜாவை இப்படத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். பாடல்களுக்கான காட்சிகளும் அதிசயராஜ் மற்றும் சுரேஷ் பார்கவ்-வின் ஒளிப்பதிவில் அருமையாக வந்துள்ளது. பிப்ரவரியில் வெளிவந்துவிடும் என்று தெரிகிறது.

பாடலைக் கேட்க:. http://soundcloud.com/info4u-chennai/aathaadi-oru

மாயாஜால மழை

பல வருடங்களாக சென்னையில்தான் இருக்கிறேன். ஆனால் பார்க்கவேண்டும் என்கிற லிஸ்டில் இன்னும் காத்திருப்பிலேயே இருக்கிற மூன்று இடங்கள் : 1) பாண்டிச்சேரி 2) கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள சோழமண்டலம் ஃபைன் ஆர்ட்ஸ் வில்லேஜ் 3) மாயாஜால்.

இந்த மாயாஜாலைப் பற்றி அநேகம் பேர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். எங்கேயோ போகும்போது வழியில் பார்த்திருக்கிறேன். ஒரு சில சினிமாக்களில் நாயக நாயகிகள் சந்திக்கும் இடமாகக் கண்டிருக்கிறேன். மற்றபடி பயணிக்கிற தூரத்திலிருந்தும் போவதற்கான வாய்ப்பு அமையவில்லை. 

போனவாரம் ஒரு நண்பர் இந்த மாயாஜால் என்னுமிடத்தில் நடந்த ஒரு சம்பவத்தை என்னிடம் விவரித்தார். மாயாஜாலில் இரவு காட்சியோ ஏதோ ஒன்றிற்கு மனைவியுடன் போயிருக்கிறார். இருவரும் வேலை நேரம் முடிந்து நேராக அங்கே சென்று திரைப்படம் ஆரம்பிக்குமுன் அங்கேயே இரவு உணவை முடித்து விடலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் போன நேரம் அங்கேயிருக்கிற எல்லா உணவகங்களும் மூடப்பட்டிருக்கின்றன.

நண்பர் அங்கே அரை குறையாய் மூடப்பட்டிருந்த ஒரு உணவகத்தின் முன் நின்றிருந்த இளைஞரை அணுகி சாப்பிடுவதற்கு ஏதாவது எங்கேயாவது கிடைக்குமா என்று கேட்டிருக்கிறார். அவர் அந்த உணவகத்தில் வேலை செய்பவர் போலும். ‘எல்லாமே க்ளோஸ் பண்ணியிருப்பாங்களே சார்’ என்று சொன்ன இளைஞர் சில விநாடிகள் யோசித்துவிட்டு, ’சார் நீங்க தப்பா நினைக்கலேன்னா, நான் சாப்பிடறதுக்காக கொஞ்சம் எடுத்து வெச்சிருக்கேன். அதை சாப்பிடறீங்களா?’ என்று கேட்டிருக்கிறார். நண்பரோ சங்கோஜமாய் “அய்யய்யோ.. அதெல்லாம் வேணாம்.. ஒண்ணும் ப்ராப்ளமில்ல ப்ரதர்.. நாங்க மேனேஜ் பண்ணிக்கிறோம். கேட்டதுக்கு ரொம்ப தாங்க்ஸ்” என்றிருக்கிறார்.

ஆனால் இளைஞர் விடாமல், “சார்.. இந்நேரத்துக்கு நீங்க எங்க போய் சாப்பிடுவீங்க.. வாங்க சார்.. உக்காருங்க.. நான் எடுத்துட்டு வர்ரேன்.”

“இல்லைங்க.. பரவாயில்லை.. உங்களோடதை எங்களுக்குக் குடுத்துட்டு நீங்க சாப்பிடறதுக்கு என்ன பண்ணுவீங்க?”

”நான் வெளில போய்க்கூட சாப்டுக்குவேன் சார். நீங்க வாங்க!!” 

நண்பர் எவ்வளவு மறுத்தும் வலுக்கட்டாயமாக அவர்களை அழைத்து உட்காரச் சொல்லிவிட்டு உள்ளே போயிருக்கிறார் இளைஞர். 

இதென்னடா வம்பாகப் போயிற்று என்று நண்பரும் அவர் மனைவியும் தர்மசங்கடமாகக் காத்திருந்திருக்க, உள்ளூர ஒரு சந்தேகம் ஓடிக்கொண்டுதான் இருந்திருக்கிறது. என்னடா வலுக்கட்டாயமாக இழுத்து வைத்து உபசரிக்கிறானே.. இதற்குப் பின்னால் ஏதாவது சதி வேலை இருக்குமோ? காலம் வேறு போன வாரம் வாங்கின வாழைப்பழம் கணக்காக கெட்டுக் கிடக்கிறது. 

ஒரு சில நிமிடங்களில் அந்த இளைஞர் உணவோடு வருகிறார். அவர்கள் நினைத்ததோ அவர் சாப்பிடுவதற்காக வைத்திருந்த, ஆறிபோன எதையோ கொண்டுவரப்போகிறார் என்று. ஆனால் நடந்ததோ வேறு மாதிரி. 

பீங்கான் தட்டுக்களின் மேல் அலுமினியம் ஃபாயில்களில் அழகாக வைக்கப்பட்ட சூடான சப்பாத்தி, அதற்கு சைட் டிஷ்ஷாக இரண்டு பௌல்களில் அருமையான குருமா, இன்னும் இருவகை சட்டினிகள், கண்ணாடி தம்ளர்களில் குடிநீர், கை துடைக்க டிஷ்யூ பேப்பர் என அருமையாக கவனித்திருக்கிறார்.

எதிர்பாராத விருந்தோம்பல்தான் என்றாலும் தயக்கத்துடனும் குறுகுறுப்பான பயத்துடனும் சாப்பிட்டு முடித்திருக்கிறார்கள். சப்பாத்தியும் குருமாவும் சட்னியும் ரொம்ப சுவையாக வேறு இருந்திருக்கிறது. 

சாப்பிட்டு முடித்தபிறகு இளைஞரிடம் “இங்க பாருங்க.. இதுக்கு நாங்க பணம் குடுத்துடறோம். பாவம் நீங்க வேற வெளியே போய் சாப்பிடணுமில்ல..” என்று பர்ஸை எடுத்திருக்கிறார்.

அதற்கு இளைஞரோ பணம் எதுவும் வாங்க மறுத்து சிரித்தபடி “ச்சேச்சே... பணமெல்லாம் எதுக்கு சார்.. இது ஒரு நட்பா இருந்துட்டுப் போகட்டுமே...” என்றாராம்.

இந்த இடத்தில் “இந்த உலகத்துல இப்படியும் சில ஆத்மாக்கள் இருக்காங்க பாருங்க” என்று கதையை முடித்தார் நண்பர் என்னிடம்,

நேற்றைக்குப் பெய்த மழை அந்த இளைஞர் பொருட்டுதான் எல்லோருக்கும் பெய்ததோ என்னமோ!!

டீலக்ஸ் பஸ்


என் வீட்டிலிருந்து மகா தொலைவிலிருக்கும் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிற்கு இன்று காலை போக வேண்டியிருந்தது. நான் எப்பவும் தேர்ந்தெடுக்கிற பிரயாண உபாயம் முதலில் ஒரு பேருந்து பிடித்து பரங்கி மலை ரயிலடி வரை சென்று பிறகு எலெக்ட்ரிக் ட்ரெய்ன் பிடித்து ‘பார்க்’ -ல் இறங்கிக் கொள்வது.

இன்று அதேபோல் செய்ய நினைத்து வந்து நின்ற ஒரு பேருந்தில் ஏறி கண்டக்டரிடம் பத்து ரூபாயை நீட்டியபோது “இன்னும் ஒர்ருவா குடுங்க” என்றார். அதாவது ஏழு ரூபாய் டிக்கெட் இப்போது ரூபாய் பதினொன்று. வெறும் நாலேகால் கிலோமீட்டர் தூரத்திற்கு. ‘அட அநியாயமே..’ என்றார் பொது ஜனம் ஒருவர்.

பழக்க தோஷத்தில் கம்மியாக காசை நீட்டியவர்களிடமெல்லாம் ”பதினோரு ரூபா குடுங்க” என்று கட்டண உயர்வை நினைவு படுத்திக்கொண்டிருந்தார் கண்டக்டர். ஒரு மூதாட்டி “எப்பவும் ஏழு ரூவா தான? இன்னாத்துக்கு பதினோர்ரூவா கேக்குற?” என்று நியாயம் கேட்டதற்கு “இது டீலக்ஸ் பஸ்” என்றார் கண்டக்டர்.

இதைக் கேட்டதும் நான் பேருந்துக்குள் சுற்றுமுற்றும் பார்த்து ஏதாவது டீலக்ஸ்தனமான விஷயம் அகப்படுகிறதா என்று தேடினேன். சொல்லிக்கொள்கிறார்ப்போல் பெரிதாக ஒன்றும் இல்லை. சும்மா கைப்பிடிக் கம்பிகளுக்கு மஞ்சள் பெயிண்ட் அடித்து கல் மாதிரியிருக்கிற ரெக்ஸின் இருக்கைகள். அவ்வளவுதான். மற்றபடிக்கு சாதா பேருந்திற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்று புரியவில்லை. மாறாக, மெதுவாக ஓட்டினாலே அந்த பேருந்தை உருவாக்கப் பயன்படுத்தியிருந்த மொத்த தகரமும், ஃபைபர் சமாச்சாரங்களும், இன்னபிற முக்கிய உதிரி பாகங்களும் அநியாயத்துக்குத் தடதடத்தன. ட்ரைவர் ஒவ்வொரு தடவை கியர் மாற்றும் போதும் பிருஷ்டத்தில் “நங்”-கென்று ஒரு அதிர்வு ஓடியது. தவிர ஒவ்வொரு ஸ்டாப்பில் நின்று கிளம்பும் போதும் ”தடங்” என்று நடு ரோட்டில் எஞ்ஜின் தற்காலிக மரணமடைந்து கொண்டிருந்தது. “இன்னாப்பா ட்ரைவர்.. உன் டீலக்ஸ் வண்டிய எறங்கி தள்ளணுமா?” என்று பின்னாலிருந்து யாரோ குரல் கொடுத்தார்கள்.

கட்டணம் உயர்த்தப்பட்டு மூன்று நாட்களாகியும் மக்கள் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லையென்பது பேருந்தினுள்ளே கேட்ட சில சம்பாஷணைகளிலிருந்து தெரிந்தது. ஒரு சில பொதுஜனக் குமுறல்கள் நிஜமாகவே வருத்தத்தை வரவழைத்தன. விலைவாசி உயர்வு என்கிற ஏவுகணை நேரடியாக வந்து தாக்குமிடம் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் வயிறுதான் என்பது அவர்களின் பேச்சின் ஒவ்வொரு வரியிலும் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. அங்கலாய்ப்புகளுக்குப் பிறகு அரசாங்கத்தைச் சபிக்கும் வார்த்தைகளும் வந்து விழுந்தன. நாலேகால் கிலோமீட்டரைக் கடப்பதற்குள் பேருந்துக் கட்டண உயர்வு பற்றி அநேகம் பேர் தங்களின் ஏகோபித்த எதிர்ப்பை காற்றில் பதிவு செய்திருந்தார்கள்.

பரங்கிமலை ரயிலடியில் இறங்கி மீதமுள்ள பதினேழேமுக்கால் கிலோமீட்டரை எலெக்ட்ரிக் ட்ரெய்னில் வெறும் ஐந்தே ரூபாய் மட்டும் கொடுத்து சென்றடைந்தேன். கூடிய விரைவில் இதையும் இரண்டுமடங்காக உயர்த்திவிட்டால் உலக அரங்கில் தமிழ்நாடு வல்லரசாக மாற பிரகாசமான வாய்ப்புள்ளது.

மக்களின் இந்தக் கட்டண உயர்வுக் கவலைகளை மறக்க நவீன எலைட் மதுபான பார்களைத் திறக்கவும் அரசு முடிவு செய்திருக்கிறதாகச் செய்திகள் கூறுகின்றன.

‘குடி’யுயர கோல் உயரும்தான்.