உங்களுக்கு நாடகங்கள் பிடிக்குமா?

‘பேய்க்காமனாக’ திரு. சண்முகராஜா
நேற்று மதியம் நடிகர் திரு. சண்முகராஜா அவர்களை சந்தித்து உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. தனது இயல்பான, மிகையில்லாத நடிப்பின் மூலம் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்திருப்பவர். விருமாண்டியில் ’பேய்க்காமன்’ எனும் பாத்திரத்தில் வந்து தன் நடிப்பாற்றலை மக்கள் மனதில் நிலை நிறுத்தியவர். தில்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளியில் பயின்றவர். எளிமையான பேச்சுடன் இனிமையாகப் பழகும் சுபாவத்துக்குச் சொந்தக்காரர்.

நிகழ் நாடக மய்யம்
சினிமா மட்டுமின்றி நாடகக் கலையையும் தன் சுவாசமாக எண்ணி அதற்கென பல வேலைகள் பின்னணியில் செய்துகொண்டிருப்பவர். 2002-ல் மதுரையில் ‘நிகழ் நாடக மையம்’ என்ற ஒன்றைத் தொடங்கி அதன் மூலம் நாடகங்கள், பயிலரங்குகள், கருத்தரங்குகள். கலை விழாக்கள், நூல் வெளியீடுகள் ஆகியவற்றை நடத்தி நாடகக்கலையை பரவலாக்கிக்கொண்டிருப்பவர். இவரது தயாரிப்பிலும் இயக்கத்திலும் எண்ணற்ற நாடகங்களை அரங்கேற்றியிருக்கிறார். சண்முகராஜா தமிழ் இலக்கியத்தில் எம்.ஃபில் பட்டம் பெற்றவர்.

பேச்சினிடையே திரு. சண்முகராஜா, அவரது ஒருங்கிணைப்பில் ஜனவரி 11 முதல் 20 வரை பத்து நாட்களுக்கு தேசிய அளவிலும் உலக அளவிலுமான பல நாடகக் குழுக்களின் நாடகங்கள் சென்னையில் அரங்கேற்றப்படவுள்ளன என்பதைக் குறிப்பிட்டார். ஆர்வமேற்பட்டு மேற்கொண்டு அவரிடம் தகவல் சேகரித்ததில் கிடைத்த விவரங்கள் நாடகக் கலைப் பிரியர்களுக்கு நிச்சயம் உபயோகமாகும் என்கிற வகையில் கீழே கொடுத்துள்ளேன்.

டெல்லியிலுள்ள தேசிய நாடகப் பள்ளி (National School of Drama) “பாரத் ரங்மஹோத்சவ்” என்னும் அகில உலக நாடக விழாவை கடந்த பன்னிரண்டு வருடங்களாக நடத்தி வருகிறது. தேசிய அளவிலும் உலக அளவிலுமான நாடகக்குழுக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடகங்கள் இந்த விழாவில் அரங்கேற்றப்படுவது வழக்கம். ஆசியாவிலேயே குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய நாடக விழா இது.

இந்த வருடம் தேசிய நாடகப் பள்ளியானது தமிழ்நாடு கலை மற்றும் பண்பாட்டுத் துறையுடன் இணைந்து பாரத் ரங்மஹோத்சவ்-13- இணை நாடக விழாவை (Parallel Theatre Festival) முதன் முறையாக சென்னையில் நடத்தவுள்ளது.

பாரத் ரங்மஹோத்சவ்

இந்த விழாவில் ஃப்ரான்ஸ், ஈரான், சீனா, கொரியா, அர்ஜென்டினா, இங்கிலாந்து, போலந்து, நேபாளம் என எட்டு அகில உலக நாடகங்களும் பதினொரு இந்திய நாடகங்களும் பங்குபெறுகின்றன. இதைத் தவிர நாடகங்கள் மற்றும் நாடகக்குழு சம்பந்தப்பட்ட கண்காட்சியும் இடம்பெறுகிறது.

குறிப்பிட்ட நாடகம் முடிந்த அடுத்தநாள் காலை 10.30 மணிக்கு நாடகத்தில் பங்கு பெற்றவர்கள் மற்றும் இயக்குநருடன் பார்வையாளர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

அரங்கேற்ற நாட்கள் : ஜனவரி 11 முதல் 20 வரை.

நடைபெறும் இடங்கள்: சென்னை ம்யூசியம் தியேட்டர் மற்றும் சர் முத்தாவெங்கட சுப்பாராவ் அரங்கம் (லேடி ஆண்டாள்).

நேரம்: தினம் மாலை 6.00 மணி மற்றும் 7.45 மணி அளவில் (ஒவ்வொரு மாலையும் இரண்டு இடங்களில் இரண்டு நாடகங்கள் என்கிற விகிதத்தில் 19 நாடகங்கள் அரங்கேறுகின்றன.).

நாடகங்களின் மேலும் நாடகக்கலையின் மேலும் ஈடுபாடு கொண்டவர்கள் நிச்சயம் தவறவிடக்கூடாத நிகழ்வு இது என்று கருதுகிறேன்.

அரங்கேற்றப்படும் நாடகங்கள் பற்றிய விவரங்களுக்கு கீழேயுள்ள சுட்டியைக் கிளிக்கவும். நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.

நிகழ்ச்சி நிரல்

தேசிய நாடகப்பள்ளியின் இணையதளம்

பின்னே ஞானும்

'வாஸந்தியும் லக்ஷ்மியும் பின்னே ஞானும்' என்றொரு மலையாளப்படம் கொஞ்ச வருடத்துக்கு முன் வந்தது. ரொம்ப அருமையான தலைப்பு என்றெல்லாம் சொல்லமுடியாது. படம் வெற்றியடைந்து பிரபலமானதோ இல்லையோ இந்தத் தலைப்பு மெகா ஹிட் ஆகிவிட்டது. அதற்குப் பின் எழுத்தாளர்களுக்கு தன் படைப்புகளுக்குத் தலைப்பு வைப்பதில் உள்ள நீண்டகால சிக்கல் எளிதில் நீங்கிவிட்டது போலும். எப்படி? ரொம்ப சுலபம். படைப்போ உடைப்போ எழுதி முடித்தவுடன் அதற்கு ஒரு தலைப்பும் கிடைக்கவில்லையெனில் உடனே எழுதியவற்றில் உள்ள ஏதாவது இரண்டு விஷயங்கள் அல்லது வார்த்தை களை தேர்ந்தெடுத்து அத்தோடு 'பின்னே ஞானும்' என்று சேர்த்துக்கொண்டால் தீர்ந்தது பிரச்சனை. இன்ஸ்டண்ட் தலைப்பு. பொருத்தமாகவும் இருக்கும்.

இவ்வாறாக நான் ஒப்பேற்றிய ஒரு பதிவின் தலைப்பு 'பையனும் டார்வினும் பின்னே ஞானும்.' அதற்கப்புறம் இதே மாதிரியான நிறைய தலைப்புகள் அவ்வப்போது கண்ணில் பட்டுக்கொண்டிருந்தன. இன்றைக்கு நண்பர் ரவி ஆதித்யாவின் வலைப்பதிவை எதேச்சையாய் மேய்ந்துகொண்டிருந்தபோது இதே பாணியில் 'ஹரியுடன் நானும் பின்னே டிவி சமையலும்' என்று தலைப்பு வைத்திருந்ததைப் பார்த்தேன். திடீரென்று இப்போது உற்றுக் கவனித்ததில் அநேகம் பேர் இந்த 'பின்னே ஞானும்' டைட்டில் வைப்பதை தொடர்ந்து வழக்கத்தில் வைத்திருப்பதாகப்பட்டது. இப்போதைக்கு இது ஒரு ட்ரெண்ட்-ஆகவே மாறிவிட்டும் இருக்கிறது என்று நினைக்கிறேன். உலகின் மிக ஜாலியான தலைப்பு என்கிற அந்தஸ்தை இது பெற்றுவிட்டது போலும். தன் தலைப்பு இப்படி பிரபலமாகிவிட்டது ஒரிஜினல் 'பின்னே ஞானும்' இயக்குநருக்கே தெரியுமா என்று தெரியவில்லை.

சற்று சுவாரஸ்யம் கொண்டு கூகிளில் கொஞ்சம் ஆராய்ந்ததில் மேலும் சுவாரஸ்யமான டைட்டில்கள் பல கிடைத்தன. கொஞ்சம் பெரிய லிஸ்ட் என்றாலும் சும்மா படித்து வையுங்களேன்.

டெல்லி கணேஷும் பின்னே ஞானும்
தோப்பும் புங்கை மரமும் பின்னே ஞானும்.
சுஜாதாவும் ஜெயமோகனும் பின்னே ஞானும்.
Torrent-உம் Badminton உம் பின்னே ஞானும்.
நேசமித்ரனும் நண்பர்களும் பின்னே ஞானும்.
ஞானும் சயன்ஸூம் பின்னே கொறச்சு காமெடியும் .
அண்ணாகண்ணனும் மீராஜாஸ்மினும் பின்னே ஞானும்.
பரிசலும் கோவியும் பின்னே ஞானும்.
போப்பும் ஷோவும் முனியும் பின்னே ஞானும்.
நானும் ஜாக்கி சேகரும் பின்னே அனானியின் வாந்தியும்.
வால்பையனும் வாசிப்பும் பின்னே ஞானும்.
ஞானும் பின்னே ஞானும் நடுவே ஞானமும்.
ஒரு செல்போனும் கிப்ட் கவரும் பின்னே ஞானும்.
Black Label ம் noodles ம் பின்னே ஞானும்.
ராஜாவும் சாருவும் பின்னே ஞானும்.
மஹாராஷ்டிராவும் பொங்கலும் பின்னே ஞானும்.
ஆனந்த விகடனும் அட்டைப்பட அழகியும் பின்னே ஞானும்.
ஈரோடும் லேடீஸ் ஹாஸ்டலும் பின்னே ஞானும்.
ஃப்ராய்டும் ஃபிரான்சிஸ் சேவியரும் பின்னே ஞானும்.
அத்னான் சாமியும் ஆசாத் அண்ணனும் அய்யனாரும் பின்னே ஞானும்.
பார்வதி ஓமனக்குட்டனும் பின்னே ஞானும்.
டேனியும் ஞானும் பின்னே என்டெ ஹஸ்பென்டும்.
பாட்டும் கதக்கும் குச்சுப்புடியும் பின்னே ஞானும்.
ஜகன் மோகினியும் அதிஷாவும் பின்னே ஞானும்.
சுந்தராம்பாளும் கருணாநிதியும் கமல்ஹாசனும் பின்னே ஞானும்.
சுனாமியும் பல்வலியும் பின்னே ஞானும்.
மலையாளபூமியில் நிங்களும் கள்ளும் பின்னே ஞானும்.
ஞானும் தற்கொலையும் பின்னே கொலையும்.
வண்டிக்காரத் தெரு மாரியம்மனும் ஆயில்யனும் பின்னே ஞானும்.

குதிரைகள் நடக்கின்றன

நேற்று சென்னை கோட்டூர்புரத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குச் சென்றிருந்தோம். நான், தங்கமணி, பையன். நான் வாழ்நாளில் பார்த்த மிகப் பெரிய நூலகம் இதுதான். ஒரு ஐ.டி பார்க் கட்டிடம் போன்ற அமைப்பு. மோஸ்தர். மெட்டல் டிடெக்டருடன் செக்யூரிட்டி. மிகப்பெரிய லாபி. ஒளி விளக்குகள். லிஃப்ட். கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் எஸ்கலேட்டர்கள். வெளிச்சத்தை பிரதிபலிக்கும் பளபளவென்ற தரை. கண்ணாடிக் கதவுகள், ஜன்னல்கள். சொகுசு இருக்கைகள். ஜம்மென்று சோபாக்கள்.

முதல் மாடியில் குழந்தைகளுக்கென்று மிகப் பெரிய பிரிவு. ஒரு பிக்னிக் போன்று பெற்றோர்களுடன் மகிழ்ச்சியாக வாண்டுகள் வந்து செல்கிறார்கள். ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கான புத்தகங்கள். மல்டிமீடியா சிடிக்களுடன் கம்ப்யூட்டர்கள். சுவர்களில் கார்ட்டூன் படங்கள்.

இரண்டாம் மாடியில் இரண்டு பிரிவுகளாக தமிழ் புத்தகங்கள். இலக்கியம், புதினம், சிறுகதைகள் என்று ரக வாரியாக பிரிக்கப்பட்டு அழகாக அடுக்கப்பட்டிருக்கின்றன. மூன்றாவது, நான்காவது, ஐந்தாவதிலெல்லாம் என்ன இருக்கிறதென்று பார்க்கவில்லை. இன்னும் திறக்கப்படாததால் அனுமதியில்லை.

லைப்ரரி என்று இப்படி ஒரு விஷயம் உலகில் இருப்பதை முதன் முறையாகப் பார்த்து பையன் மலைத்து நின்றுவிட்டான். தங்கமணிக்கோ அத்தனை புத்தகங்களைப் பார்த்து கண்ணில் நீர் துளிர்த்துவிட்டது. காரணம் தங்கமணி ஒரு ஓயாத புத்தகப் புழு. என்னைவிட அதிக புத்தகம் படித்த/படிக்கிற ஆள் என்ற வகையில் எனக்கு தங்கமணிமேல் லேசான பொறாமைகூட உண்டு.

புத்தகங்கள் தவிர கூட்டங்கள் நடத்துவதற்கென கூடங்களும், குறும்படங்கள் திரையிடுவதற்கான தியேட்டர் வசதிகளும் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அது தவிர இன்னும் எத்தனையோ வசதிகள். கூடிய விரைவில் அவைகளும் பயன்பாட்டுக்கு வரும்.

தின/வார/மாத பத்திரிகைகள் பிரிவில் கணிசமான பேர் புத்தகங்கள் மேய்ந்துகொண்டிருந்தார்கள். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளிவரும் அத்தனை வாராந்திர, மாதாந்திரங்களும் அலமாரிகளில் பெயரிடப்பட்டு ஒழுங்காக வைக்கப்பட்டிருக்கின்றன. அங்கே இருக்கிற ஒரே பிரச்சனை காலடிச் சத்தம். ஹைஹீல்ஸ் அல்லது கட்டையான செருப்புப் போட்ட பெண்களும், ஷூ அணிந்த ஆண்களும் புத்தகம் தேடி அலமாரிகளிடையே நடக்கும்போது ஃப்ளைவுட் தரையில் டடக் டடக் என்று குதிரைக் குளம்படிகள் போன்ற சப்தம் அகாலமாய்க் கேட்கிறது. படிப்பவர் கவனம் சிதறுகிறது. அதுவே நிறைய பேர் நடக்கும்போது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிகள் குதிரைப்படையுடன் மறுபடி ஊருக்குள் உலவுகிற எஃபெக்ட் ஏற்படுகிறது. மற்ற தளங்களைப் போல இங்கேயும் தரையில் கார்ப்பெட் போட்டால் இந்தக் குதிரைகள் பூனைகள் ஆகும்.

மற்றபடி இது பிரம்மாண்டமான ஒரு ஹை-டெக் லைப்ரரி. உறுப்பினராகச் சேர விண்ணப்பங்கள் கொடுக்கப்படுகின்றன. ஜனவரி முதல் புத்தகங்கள் எடுத்துக்கொள்ளலாமாம்.

இந்த நூலகம் பற்றி நிறைய தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இந்த வலைப்பதிவை அணுகலாம். இந்த நூலகம் பற்றி எக்கச்சக்கமான விவரங்கள் தரப்பட்டிருக்கிறது.

புலம் - தீபாவளி மலர் சிறுகதை

தமிழோவியம்.காம் இணைய இதழின் தீபாவளி மலரில் எனது சிறுகதை..

ணி செண்ட்ரலில் ரயில் இறங்கி ஆட்டோ பிடித்து அபிராமபுரத்திலுள்ள கேசவனின் வீட்டுக்கு போய் இறங்கினபோது லேசாய் ஆச்சரியப்பட்டான். கேசவனின் வீடு காலி செய்யப்படுகிற முகாந்திரமாய் வீடு நிறைய மூட்டை முடிச்சுகள். அட்டைப் பெட்டிகள். அடுக்கத் தயாராயிருந்த சாமான்கள். குறுக்கும் நெடுக்குமாய் ஒழுங்கில்லாமல் சோஃபா, கவிழ்ந்த சேர்கள், நியூஸ் பேப்பர் குப்பைகள். கயிறுகள். பேக்கிங் டேப் சுருள்கள்.

மணி பொருட்குவியல்களுக்கு ஓரமாய் ட்ராவல் பேகை வைத்துவிட்டு வியப்புடன் புரியாமல் கேசவனைப் பார்த்தான். "வீடு காலி பண்றீங்களா?" என்றான்.

...

...

மேலும் படிக்க..

படித்ததும் பிடித்ததும்

எப்பவோ ஒரு காலத்தில் நமக்குப் பிடித்தது இப்போது பிடிக்காமல் போவதும், அப்போது பிடிக்காமல் இருந்தது இப்போது பிடித்துவிடுவதும் நிகழத்தான் செய்கிறது. இதைத்தான் வேறு விதமாக “இப்பப் பாத்த புதுசு பாக்கப் பாக்கப் பழசாகி எப்பவுமே பாக்காத பழசு பாத்தவுடனே புதுசாத் தெரியும்” என்று மீனாட்சி சுந்தரனார் கூற முயற்சித்தார். ஆனால் இது முதல் வரிக்கு சம்பந்தமில்லாமல் இருப்பதால் அதிகம் யோசிக்காமல் அடுத்த பாராவுக்குப் போய்விடலாம்.

பொள்ளாச்சி சேரன் போக்குவரத்துக் கழகத்திலிருந்து யாரோ கொடுத்த 1988- ஆம் ஆண்டு டயரி, எதையோ தேடும்போது கண்ணில் பட்டது. புரட்டிப் பார்த்தபோது அதில் மணி மணியான கையெழுத்தில் அப்போது படித்தவைகளிலிருந்து பிடித்த பேராக்கள் அல்லது வரிகளை ’படித்ததில் பிடித்தது’ என்று போட்டு எழுதி வைத்திருந்தேன். என் அப்போதைய வாசிப்பானுபவ ரசனை ரொம்ப தத்துப் பித்தென்றெல்லாம் இல்லாமல் கொஞ்சம் பரவாயில்லையாக இருந்ததாக நிழலடிக்கிறது. இப்போது அவைகளைத் திரும்பப் படித்துப் பார்க்கும்போது எனக்குப் பிடித்ததை எழுதியவர்களின் பெயர்கள் எல்லாம் ஒரு கலவையாக அவியல் போல இருக்கிறது.

கார்த்திகா ராஜ்குமார், காண்டேகர், பாப்ரியா, அனுராதா ரமணன், இந்திரன், காப்ரியேல் ஒகாரா, சுந்தர ராமசாமி, லே ஹண்ட், மு.மேத்தா, மாலன், கார்ல் மார்க்ஸ், வண்ண நிலவன், சி.சு. செல்லப்பா, க.நா.சு, அப்புறம் ஜப்பானிய பழமொழிகள், பெயரில்லாத தத்துவங்கள் ஒன்றிரண்டு. யாரோ என்று போட்டு சில. இந்த யாரோ என்பது யாராக இருக்கும் என்று ரொம்ப நாட்களாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். இதில் லே ஹண்ட், ஒகாரா, மார்க்ஸ், காண்டேகர் போன்றவர்களின் பெயர்களைப் பார்த்து யாரும் பயப்படவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அது சும்மாவாச்சும் அவர்களுடைய ஏதாவது ஒரு பேரா எங்கேயாவது தட்டுப்பட்டதை டயரியில் எழுதி வைத்திருப்பேன். மற்றபடி ரொம்ப தடிமனான புத்தகங்கள் படிக்கிற கெட்ட பழக்கம் எதுவும் அப்போது எனக்கு இருந்ததில்லை. பொன்னியின் செல்வன் கூட ரிடையர்மெண்டுக்கு அப்புறம் படிக்கலாம் என்று எடுத்துவைத்திருக்கிறேன்.

ஆனால் கிடைத்ததையெல்லாம் வாசிக்கிற வெறி ஒரு மானாவாரித்தனத்தைக் (பார்த்தீர்களா! தமிழில் புதிய சொல்லாடல்) கொடுத்திருந்தது. பாலகுமாரனை விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருந்த அதே நேரம் சைடுவாக்கில் க.நா.சு வருகிறார். கி.ராஜநாராயணன், தி.ஜா என்று வாசிப்பு அனுபவத்தை அடுத்த தளத்திற்குக் கொண்டு போகவேண்டுமென்று பிரயத்தனம் மேற்கொண்ட காலகட்டம் அது. பிடித்த எழுத்தாளர்கள் என்று ஒரு இறுதிப் பட்டியல் உருவாகுவதற்கு முன் வரை எல்லோருமே இதுபோல சகட்டுமேனிக்குப படித்து வைத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருப்பார்கள்.

பொள்ளாச்சி லைப்ரரியில் மேற்படி இலக்கிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் இருக்கும். ஆனால் எல்லா புத்தகங்களிலும் வாசகர்கள் தனக்குப் பிடித்த வரிகளை பென்சிலாலோ பேனாவாலோ அடிக்கோடிட்டு அடிக்கோடிட்டு புத்தகம் முழுவதும் கோடு கோடாக இருக்கும். போதாதற்கு கடைசி பக்கத்தில் ‘அருமையான புத்தகம்” என்றோ, “மரணக் கடி. படிக்காதே” (இதை முதல் பக்கத்திலல்லவா எழுதியிருக்கவேண்டும்) என்றோ தங்களது உண்மையான விமர்சனத்தை பதிந்தும் வைத்திருப்பார்கள். ஆக அடிக்கோடு போடுகிற வேலையை நான் செய்யவேண்டாம் என்று படித்ததில் பிடித்ததை தனியாக சேரன் போக்குவரத்துக் கழக டயரிக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன்.

இந்த மாதிரி படித்ததில் பிடித்ததை தொகுத்து பொள்ளாச்சியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘மனிதம் செய்திகள்’ என்கிற சிற்றிதழில்(!) போட்டுக் கொண்டிருந்தோம். கோபால் பில்டிங் பக்கத்தில் கடை வைத்திருந்தவர்கள் எல்லாருக்கும் ஒரு காப்பி போகும்.

ப.பி-இல் ஒரு சில இப்போது படித்தாலும் பிடிக்கத்தான் செய்கிறது. அவைகளில் சில தத்துவார்த்தமாக இருப்பதே காரணம் என நினைக்கிறேன். ஒரு சிலது மரண மொக்கை.

படித்ததில் பிடித்ததில் சில இங்கே..

****
குழந்தைகள் உலக சத்தியங்கள். கையுயர்த்தித் தந்ததெல்லாம் கடைசிவரை காப்பாற்றுவேன் என்னும் நியாயப் பிரமாணங்கள். வாழ்க்கையையே விளையாட்டாய் கழித்ததுபோல் குதிபோடும் பையன் நாட்கள். இலக்குகள் பதுங்கியிருக்க அவற்றைக் கண் கட்டித் தேடக் கிளம்பும் வாழ்க்கை. ஜரூராய் இருந்து இடமாறிப் பிழைக்கும் கிளித்தட்டு. ஏமாந்தவனை எழுப்பிவிட்டுத் தான் உட்கார்ந்து கொள்ளும் கொக்கோ. மூச்சுப் பிடித்து மூலைவரை சென்று எதிரியை கால் தாக்கி எற்றித் திரும்பும் சடுகுடு. வளைத்து வளைத்து இரண்டு சக்கரத்தையும் பாலன்ஸ் செய்து ஓட்டிச் செல்லும் வாடகை சைக்கிள். வாழ்க்கை விளையாட்டாய்த்தான் ஆரம்பிக்கிறது.

- மாலன், நந்தலாலா நாவலில்

*****

எனது பூப்பு நாளில்
நான் கட்டிய பச்சைப் பட்டு
இன்னனும் நெஞ்சுக்குள் பசுமையாய்
நினைவிருக்க..
காலையில் சாப்பிட்டது நினைவில்லை.
மறதி.. பனித்துளி போல மறதி.
காலம் கரையுது. காலம் கரையுது.
காதுக்குள் பேரொலி.
என்னுள் என்னை நான் இழந்திருக்கையிலே..
உலகம் என்னை இழந்து கொண்டிருக்கிறது.

- அனுராதா ரமணன்

***

கொஞ்சமாக தெரிந்து வைத்துக் கொண்டிருக்கும்போது தெரிந்து கொண்டுவிட்டோம் என்றும், அதிகமாகத் தெரிந்துகொண்டிருக்கும்போது தெரிந்து கொள்ளவில்லை என்ற எண்ணமும் ஏற்படுகிறது. ஒரு கதவு திறக்கும்போது திறக்காத பல கதவுகள் தெரியும் விசித்திரக் கோட்டை இது. அவற்றையும் திறக்கும்போது, மேலும் பல கதவுகள் மூடிக்கிடப்பதைப் பார்க்கிறோம். அப்படியானால் இதற்கு முடிவு என்ன? திறப்பதே திறக்காத கதவுகளைப் பார்க்கத்தானா? பெரிய சவால்தான் இது.

- சுந்தர ராமசாமி, ‘ஜே.ஜே சில குறிப்புகள்’ நாவலில்.

***

கடைசிக் கதவும் திறக்கப் போகிறது. நான் ஒரு சுதந்திர மனிதன் ஆகிவிடுவேன். அந்தக் கதவு நிலையிலிருந்து ஒரு எட்டு வெளியே எட்டிப் போட்டதும் என் இருதயம் நிரம்பி இருந்தது. நிம்மதியா அல்லது கனமா? இரண்டும் அல்ல. அது ஓர் அபிமான இருதயத்தின் அடியிலிருந்து எழும் அனுதாபக் குரலின் தொனி போல எனக்குப் பட்டது. அந்தத் தொனியோடு கடைசிக் கதவும் திறந்து கொண்டது. எதையும் நான் சொல்லிவிடக்கூடும். அந்த க்ஷணத்து உணர்ச்சியை மட்டும் சொல்ல முடியாது. அது இருதயத்தின் தனிச் சொத்து. அதற்கு பாஷையே இல்லை.

-சி.சு. செல்லப்பா

***

மூன்றாம் முறை முகத்தில் அறைந்தால் புத்தருக்கும் கோபம் வரும்.

-யாரோ