இந்தியா சுடர் – கல்விக்காக ஏற்றப்பட்ட தீபம்

ஒரு மழைநாளில் ஒரு இனிய மெல்லிசை கேட்பதைவிடவும், சரவணபவனில் சாம்பார் வடையை ரசித்து ருசித்துச் சாப்பிடுவதைவிடவும், கவிழ்ந்து படுத்து ஒரு புதினம் படிப்பதைவிடவும், ஒரு சிறுகதையோ வலைப்பதிவோ எழுதுவதைவிடவும் ஒரு மகிழ்ச்சியும் நிறைவும் திருப்தியும் நேற்று கிடைத்தது.

ராயபுரத்திலும், தண்டையார்ப்பேட்டையிலும் ஆக இரு அரசினர் குழந்தைகள் காப்பக மாணவர்களுக்கு எங்கள் அலுவலக நண்பர்கள் நோட்டுப்புத்தகங்கள், பென்சில், பேனா போன்றவைகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இதை ஏற்பாடு செய்திருந்தது இந்தியா சுடர் எனும் NGO. நண்பர்களும் நானும் ஆக ஒரு சுபயோக சுபதினத்தில் இந்தியா சுடரில் உறுப்பினரான கையோடு உருப்படியாய் ஏதாவது செய்ய வேண்டுமென்று யோசித்ததின் விளைவாக மேற்கண்ட நிகழ்ச்சி.

இந்தியா சுடர் - ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனம். இந்தியா முழுவதும் உள்ள வசதியற்ற மாணவர்களுக்கு கல்விக்கான உதவிகளைச் செய்வதற்காக இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம். இதன் நிறுவனர்கள் உதய் மற்றும் சற்குணன் மற்றும் சில எனெர்ஜிடிக் இளைஞர்கள் தன்னலமற்ற நோக்கோடு தனது நேரத்தையும் பணத்தையும் செலவு செய்யும் இவர்களை ஒரு வரியில் பாராட்டுவதென்பதெல்லாம் இயலாத காரியம். அவ்வளவு செய்கிறார்கள்.

இந்தியா சுடரின் உறுப்பினர்கள் அனைவருமே ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே அவ்வப்போது ஓய்வு நாட்களில் தங்களால் இயன்ற அளவு உதவிகளைச் செய்து வருபவர்கள்தான். அது சிறு துரும்பாயினும் இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் வசதியற்ற ஏதோ ஒரு சிறுவனோ அல்லது ஒரு சிறுமியோ கல்வி கிடைக்கப்பெற்று அவர்கள் அதன் மூலம் தன் வாழ்க்கையை புதுப்பித்துக் கொள்ளமுடிகிறதென்பது அருமையான விஷயம். மீனைத் தருவதற்கு பதில் மீன் பிடிக்கக் கற்றுத் தருதல்.

நலிந்த நிலையிலிருக்கும் அரசு பள்ளிகளை, குழந்தைகள் இல்லங்களைத் தேடியறிந்து அங்கே உள்ள மாணவர்களுக்குத் கல்விக்குத் தேவையானதை இந்தியா சுடர் செய்கிறது. ஆசிரியர் இல்லாத பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமித்துக் கொடுக்கிறது. கஷ்டப்படும் குடும்பங்களில் வாழும் மேற்படிப்புக்கு வசதியில்லாத மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்கிறது. இதன் பணிகள் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் இந்தியா முழுக்க விரவி நிற்கிறது. இதுவரை என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்தியா சுடரின் தளத்திற்குச் சென்று அறிந்து கொள்ளலாம்.

சென்னையில் ராயபுரம் மற்றும் தண்டையார்ப்பேட்டை பகுதியில் உள்ள இல்லங்களில் சிறார்களைச் சந்தித்தது ஒரு வித்தியாசமான அனுபவம். இவர்களில் சிலர் பெற்றோர்களை இழந்தவர்கள். சில பேர் வீட்டை விட்டு எதற்காகவோ ஓடிவந்து பின் பெற்றோருடன் சேரமுடியாதவர்கள். சில பேருக்குப் பெற்றோர் இருந்தும் வறுமை காரணமாக தங்களால் பார்த்துக்கொள்ள முடியவில்லையென இந்த இல்லங்களில் விடப்பட்டவர்கள்.

ஒரு ஐநூறு குழந்தைகளுக்காவது இந்த வருடப் படிப்பிற்காக நோட்டுப்புத்தகங்கள் வழங்கவேண்டும் என்பது எங்கள் திட்டமாக இருந்தது. ஆளுக்கு ஐம்பது அல்லது நூறு ரூபாய் கொடுத்தால் போதும் என்று ஆரம்பித்து நாங்கள் நினைத்ததை விடவும் அதிக தொகை சேர்ந்தது. அலுவலக நண்பர்கள் தாராளமாக நன்கொடை தந்து உதவினார்கள். இதில் ஒவ்வொரு துளியும் சரியாகத் திட்டமிடப்பட்டு சென்னையிலுள்ள ஆறு அரசினர் மாணவர் இல்லங்களுக்கு நோட்டுப் புத்தகங்களாக சரியான முறையில் பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது. இதை உற்சாகமாக முன்னின்று செயல்படுத்தியதில் நண்பர்கள் ஜான், தீனதயாளன், கார்த்திக், இங்கர்சால், பாலசரஸ்வதி, ப்ரேம், செந்தில், இந்தியா சுடர் தளபதிகள் உதய் மற்றும் சற்குணன் மற்றும் அனைத்து அலுவலக நண்பர்களும் இந்த நிகழ்வை சாத்தியமாக்குவதற்குக் காரணமாக இருந்தார்கள்.

மாணவர்களில் ஒரு சில பேர், தாங்கள் நன்றாகப் படித்து நிறைய மதிப்பெண்கள் வாங்கும் பட்சத்தில் மேற்படிப்புக்கு உதவுவீர்களா என்று கேட்டது நல்ல விஷயமாகப் பட்டது. படிப்பார்வம் கொண்ட இவர்களுக்கு நிச்சயம் உதவி செய்யலாம். எந்த வசதியுமில்லாமல் படித்து பத்தாம் வகுப்பில் 84% எடுத்த பையனொருவனைப் சந்தித்தோம். இன்னொரு சிறுவன் இந்த இல்லத்தில் தங்கி படித்துக்கொண்டே, வெளியில் வேலைக்குப் போய் அதில் கிடைத்த சொற்பப் பணத்தில் ஆயிரம் ரூபாயை வீட்டுக்கும், ஆயிரம் ரூபாயை அந்த இல்லத்திற்கு நன்கொடையாகவும் அளித்திருக்கிறான். சின்ன உருவம். பெரிய மனது.

இந்தியா சுடருக்கு வந்து சேரும் நன்கொடைத் தொகைகளின் ஒவ்வொரு பைசாவும் வழங்கியவர் பெயரோடு அதன் இணைய தளத்தில் கணக்கு வழக்குகளோடு வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, அஸ்ஸாம் என்று வகை பிரித்து இதுவரை செய்து முடித்த ப்ராஜக்டுகளின் விவரங்களும் இருக்கின்றன. தன்னை இன்னும் விரிவாக்கும் பொருட்டு இணைய சாத்தியங்களான ட்விட்டர், ஃபேஸ்புக், பிகாஸா வெப், ஆர்குட் என்று சகலத்திலும் இணைந்துள்ளதுடன், உறுப்பினர்களுக்கு இதன் அனைத்து செயல்பாடுகளும், தகவல்களும் யாஹூ குழுமம் மூலமாக உடனடியாகத் தெரிவிக்கப்படுகின்றன.

நம் பாக்கெட்டிலிருந்து வெளிப்படும் வெறும் ஒரு நூறு ரூபாயானது மற்றவர் வாழ்வில் எவ்வளவு பெரிய வித்தியாசத்தை அளிக்கிறதென்று நேற்று மனப்பூர்வமாய் உணர்ந்துகொண்டேன்.

மேலும் விவரங்களை இந்தியா சுடரின் தளத்திலிருந்து அறியலாம் :
http://www.indiasudar.org
http://picasaweb.google.com/indiasudar

ரோம் - பயணக் கட்டுரை

'இத்தாலியிலுள்ள ரோம் ஒரு அழகிய நகரம். அனைவரும் வாழ்க்கையில் ஒருமுறையேனும் நிச்சயம் பார்க்கவேண்டிய இடம்' என்று ட்விட்டரில் எழுதிவிட்டுப் போய்விடலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். அப்படியே எழுதிப் போட்டாலும் ட்விட்டரில் இன்னும் 39 எழுத்துக்கள் மிச்சமிருக்கும் என்பதாலும், மிகத் தொன்மையான நகரமான ரோமின் உலகளாவிய பேரழகை இப்படி ஓரிரு வரிகளில் சொல்லிவிட்டுப் போனால் 16-ஆம் நூற்றாண்டு ரோமாபுரி பேரரசர்களின் ஆவிகள் என்னை மன்னிக்காது என்பதாலும் ஒரு சிறிய பதிவாகப் போட்டுவிடுகிறேன்.

நான் முதலில் சென்று இறங்கிய இடம் லியனார்டோ டாவின்ஸி ஃபியுமிசீனோ விமானநிலையம் என்றெல்லாம் எழுதி உங்களுக்கு ஆயாசத்தை உண்டு பண்ணப் போவதில்லை. இறங்கின இடமும் திரும்பிய இடமுமா முக்கியம்? எப்போதும் மெயின் பிக்சர்தானே நமக்கு முக்கியம். ஆகவே நேராக தெருவில் இறங்குகிறேன். ஒரு நகரம் என்பது தெருக்களின் தொகுப்புதானே?

இத்தாலிய மொழியில் ரோமா என்றும் செம்மொழியாம் தமிழ் மொழியில் உரோமை நகரம் என்றழைக்கப்படும் இந்நகரமானது கி.மு.753-ல் அமைக்கப்பட்டு அப்போதிருந்தே மக்கள் வசிக்க ஆரம்பித்த வரலாற்று விவரங்கள் எல்லாம் நேரமும் வாய்ப்பும் இருந்தால் இன்னொரு பதிவில் விவரமாய் எழுதி விடுகிறேன். ஏனென்றால் இது ஒரு மிகச் சிறிய பயணக்கட்டுரை மட்டுமே.

"All roads lead to Rome" என்று எதற்காகச் சொன்னார்கள் என்பது இப்போது தெள்ளத் தெளிவாகப் புரிந்துவிட்டது. உலகம் முழுவதுமுள்ள, பயணங்களை விரும்புகிற மக்கள் அனைவருக்குமான வாழ்நாள் டூரிஸ்ட் டெஸ்டினேஷன் இது. பின்னே உலகின் மொத்த அழகும் இங்கேயே கொட்டிக்கிடந்தால் மக்கள் வேறு என்னதான் செய்வார்கள்?

ரோமுக்குள் நுழைந்தவுடனேயே வாட்டிகன் மியூசியம், போர்கீஷ் காலரி மற்றும் ம்யூசி கேப்பிடோலினி, கலோசியம் ஆகிய நான்கையும் முதலில் பார்த்துவிடவேண்டுமென்று ஒரே துடிப்பாய் துடித்தது மனது. (இந்த மாதிரி இடங்களின், தெருக்களின் பெயர்களை நான் சரியாக உச்சரிக்கவில்லை எனில் இத்தாலிய மக்கள் கோபித்துக் கொள்வார்களோ என்ற பயமும் இருந்தது). ரோம் பற்றியெரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக்கொண்டிருந்த இடம் எங்கேயிருக்கிறதென்று யாரிடமாவது கேட்டால் அடிக்க வருவார்களோ என்ற யோசனையுடன் ஊர் சுற்றக் கிளம்பினேன்.

ரோமர்கள் அவர்களது ஆட்சிக்காலத்தில் ரொம்ப போரடித்தால் உயர உயரமாய் தூண்கள் வைத்து வானளாவிய கட்டிடங்களை எழுப்புவார்கள் என்று கருதத்தக்க வகையில் பிரம்மாண்டங்கள், சிதிலங்கள், வரலாற்று மிச்சங்கள், புராதனம், வெள்ளையும் கருப்புமாய் மிகப் பெரிய சிலைகள். நம்மூரின் கட்டிடங்களுக்கும் ரோமாபுரியின் கட்டிடங்களுக்கும்தான் எத்தனை வித்தியாசங்கள்!! ரோமர்களின் ஆர்க்கிடெக்ச்சர் நுட்பங்கள் அப்படி வியப்பளிப்பதாக இருக்கிறது. அதுவும் கட்டிடங்களில் இந்தத் தூண்கள் இருக்கிறதே! அப்படி ஒரு ஆகிருதி. ஒவ்வொரு தூணும் பத்து பேர் சேர்ந்து கட்டிப்பிடிக்கவேண்டும் என்பது போல் இருக்கின்றன. ஆனால் எட்டிப் பிடிக்க வேண்டும் என்றால் அது நடக்காது. அவ்வளவு உயரம். ஆக ரோம்-ஐ தூண்களின் நகரம் என்று சொன்னால் அது மிகையாகாது.

ரோமன் ஹாலிடேஸ் என்னும் கருப்பு வெள்ளைத் திரைப்படத்தில் நான் கண்ணுற்ற ரோம் இப்படி வண்ணமயமாய் காணக் கிடைக்குமென்று கனவிலும் நினைக்கவில்லை. இதை நினைக்கும் இதே நேரம் அந்தப் படத்தில் நடித்த அந்நாள் அழகுப் பதுமை ஆட்ரே ஹெப்பர்ன் (Audrey Hepburn) பற்றியும் ஒரிரு விநாடிகள் மறைந்த எழுத்தாளர் ஆதவன் உபயத்தால் நினைவு கூர முடிந்தது.

Piazza Venezia (நகரத்தின் இதயம் என்று பொருள்படும்) என்கிற இடத்தில் Altare Della Patria என்ற புராதன வரலாற்று கட்டிடம்... ச்சே!! அதை கட்டிடம் என்று சொல்லுவது ரோமாபுரிவாழ் மக்களைக் கேவலப்படுத்துவது போலாகும் - ஆகவே அரண்மனை? சரி.. ஏதோ ஒன்று. இங்கும் மறுபடி பிரம்மாண்ட தூண்கள். இதற்குமுன் இருக்கும் ஒரு மிகப் பெரிய சிலையருகே என்னைப் போலவே உலகமெங்குமிருந்தும் வருகை புரிந்திருக்கும் சுற்றுலாப் பயணிகளை பெருமளவில் காணமுடிந்தது. இதுபோல எண்ணற்ற கட்டமைப்புகள். எண்ணற்ற பழங்காலச் சின்னங்கள். எண்ணற்ற.. எண்ணற்ற.. ம்ம்.. சரி விடுங்கள்.

ரோமிலுள்ள ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் கட்டிடத்துக்குள்ளும் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு வரவேண்டும் (விடுவார்களா தெரியவில்லை) என்கிற அளவுக்கு எல்லாமே அழகழகாய் இருக்கின்றன. நம்புங்கள்!! ரோம்-ல் உள்ள எல்லா இடங்களையும் ரசித்து அனுபவித்துப் பார்க்க வேண்டுமென்றால் நம் ஆயுள் போதாது என்று தோன்றிவிட்டது. ஏனென்றால் அவைகளையெல்லாம் கட்டி முடிப்பதற்கே அவர்கள் ஆயுள் போதவில்லை பாருங்கள். எனக்குக் கூட எதை சொல்வது எதை விடுவது என்று தெரியாமல் தடுமாறுகிறது. அத்தனை அத்தனை..

அதே மாதிரி சர்ச்சுகளை எடுத்துக்கொண்டால் ஒரு பெரிய லிஸ்ட்டே போடுமளவுக்கு இருக்கிறது என்றார்கள். யாராவது ஏற்கனவே அந்த லிஸ்ட்டைப் போட்டிருப்பார்கள் என்பதால் நான் அதை செய்யவேண்டாமென்று தீர்மானித்தேன். ஆனால் நான் பார்த்தவரையில் எனக்கு எந்தச் சர்ச்சும் கண்ணில் படவில்லை. அல்லது பார்த்தது எல்லாமே சர்ச்தானா?

சிங்கப்பூர் மாதிரியே சாலைகள் படு சுத்தம். எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கும்போது வானத்திலிருந்து யாரோ கூட்டமாய் இறங்கிவந்து இரவோடு இரவாக குப்பைகளை அள்ளித் துடைத்துவிட்டுப் போய்விடுவார்கள் என்று நினைக்கும்படிக்கு அபார சுத்தம். ஆனால் பார்த்த சில இடங்களில் உறுத்தின ஒரே விஷயம் கார்களும் ஸ்கூட்டர்களும் (டூ வீலரில் அதிகம் ஸ்கூட்டர்கள் போன்ற வாகனங்களைத்தான் பயன்படுத்துகிறார்கள்) பல இடங்களில் ஒழுங்கு இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதுதான். நேனோ மாதிரி குறுங்கார்கள் நிறைய கண்ணில் பட்டன. சர்வசாதாரணமாக ஏழு எட்டு சாலைகள் ஒருங்கே சந்திக்கும் வீதி முக்குகள் இருக்கின்றன. இந்த மாதிரி முக்குகள் நம்மூரில் இருந்து வீதி முனையில் ட்ராஃபிக் போலீசை நிற்கவைத்தால் முழி பிதுங்கிவிடுவார் என்று நினைக்கும் போது பாவமாக இருந்தது. ரோமில் மக்கள் தொகை குறைவு என்பதால் ’பாரத் பந்த்’ தினம் மாதிரி நிறைய சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

எங்கேயும் போக்குவரத்து நெரிசலே இல்லை. Iron Man, Saw IV போன்ற ஆங்கிலப் படங்கள் ஓடிக்கொண்டிருந்த தியேட்டர் வாசலில் நான்கே நான்கு இருசக்கர வாகனங்கள் மட்டுமே இருக்க மொத்தமாய் காற்று வாங்கிக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது. நம்மூர் தாழ்தள சொகுசுப் பேருந்தின் பத்தாவது வெர்ஷன் மாதிரியான பஸ்கள் நல்ல சிவப்பு நிறங்களில் சாலையெங்கும் ஓடுகின்றன. மக்கள் நவீனமாக வண்ணமயமாக உடையணிகிறார்கள். பெரிய கொட்டை எழுத்துக்களில் பார்கள் நம்மை இழுத்து வரவேற்கின்றன.

ரோமில் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்கள் யாவை என்று குத்துமதிப்பாக ஆராய்ந்ததில் கீழ்கண்ட லிஸ்ட் கிடைத்தது. மேற்சொன்ன வாட்டிகன் ம்யூசியம் இன்னபிற இடங்கள் தவிர Colosseum, Trevi Fountain, Spanish Steps, Villa Borghese, Galleria Doria Pamphilj, Castel Sant'Angelo, Via Condotti, Piazza del Popolo, Imperial Forum, St. Peter's Basilica, Piazza Navona என்று பட்டியல் நீண்டுகொண்டே போனது. வாயிலும் பிறகு ஞாபகத்திலும் நுழையாத பெயர்கள் என்றாலும் எல்லாவற்றையும் எப்போது பார்த்து முடிப்பது என்று மலைப்பாக இருந்தது. ஷாப்பிங் போகவேண்டும் என்றால் Piazza Spagna என்ற இடத்திற்கருகிலுள்ள (ஸ்பானிஷ் ஸ்டெப்ஸ்-க்கும் கூட இது பக்கந்தான்) ஷாப்பிங் ஏரியா மிகப் பிரபலமாம். சிங்கப்பூர் முஸ்தபா சென்டர் மாதிரி ஏதேனும் சல்லிசாகக் கிடைக்குமா என்று விசாரிக்கவேண்டும்.

Piazza Spagna என்றதும் பீட்சா ஞாபகம் வந்து திடீரென பசிக்கிற மாதிரி இருந்தது. எங்கேயாவது நல்ல பீட்சா கார்னர் தென்படுகிறதா என்று Via Cola di Rienzo பக்கத்தில் தேடிக் கொண்டிருந்தபோது தோளில் ஒரு கை விழுந்தது. திரும்பிப் பார்த்தால் என் மனைவி. கண்கள் விரிய ஆச்சரியப்பட்டு “ஏய்.. நீ எப்படி இங்க.. ரோமாபுரி-ல?” என்று கேட்பதற்குள் மனைவி முறைத்தபடி.. “ஒக்காந்த எடத்துலயே ஒலகம் சுத்தினது போதும்.. தோசை ஆறுது. வந்து சாப்டுங்க”.

எனக்கும் கூட கூகுள் மேப்ஸ் Street View-இல் உரோமிய வீதிகளைச் சுற்றிச் சுற்றி வலது கை ஆள்காட்டி விரல் ரொம்ப வலியெடுக்க ஆரம்பிக்க (மவுசை கிளிக்கி கிளிக்கி) கம்ப்யூட்டரை ஆஃப் செய்துவிட்டு தோசை சாப்பிடக் கிளம்பினேன். நாளைக்கும் இதே மாதிரி ஒரு நடை ஸ்விட்சர்லாந்து போய்வரவேண்டும்.

அவர்

எதிர் ஃப்ளாட் பெரியவர் இறந்துவிட்டார். மற்ற ஃப்ளாட்வாசிகள் அறியாதவண்ணம் இன்று பல்ஸ் குறைந்து கடைசி கணத்தை மவுனமாகவோ சிரமமாகவோ வாழ்ந்து முடித்துச் சென்றுவிட்டார்.

நான் இதுவரை அவரைப் பார்த்ததில்லை.

எதிர்க்கதவாக இருப்பதனால், சென்று துக்கம் விசாரித்து வருதல் நாகரிகம் என்பதால் சென்றேன். பெரியவர் 10 சதவிகிதம் கண்கள் திறந்த நிலையில் அமைதியாய் கண்ணாடிப் பெட்டிக்குள் படுத்திருந்தார். நல்ல உயரம். நார்மலான உடம்பு. ரொம்ப நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் கஷ்டப்பட்டுவந்தது போன்ற தோற்றம் எதுவும் இல்லாமல் முகத்தில் மிஞ்சியிருந்த சிறு தேஜஸ்.

அவரது மகனிடம் ‘ஐயம் சாரி.. எத்தனை மணிக்கு இறந்தார்?” என்றேன். சம்பிரதாயமான கேள்வி.

‘டூ. தர்ட்டிக்கு! ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப் போனோம். ஐ டவுட்.. வீட்லயே மூச்சு நின்னிருக்கும்னு..”

சம்பிரதாயமான பதில்.

”என்ன வயசு அவருக்கு?”

”எய்ட்டி ஒன்!”

மேலும் ஓரிரு சம்பிரதாயமான கேள்விகளைக் கேட்டுவிட்டு ”ஏதாவது உதவி தேவைன்னா தயங்காம சொல்லுங்க சார்..” என்று சொல்லிவிட்டு, கண்ணாடிப் பெட்டியருகே நின்று மனசுக்குள் மரியாதை செலுத்திவிட்டு வந்துவிட்டேன்.

மொத்தமாய் ஐந்து நிமிடங்களுக்குள் எனது கடமை முடிந்துவிட்டது.

ஒருவர் காலமாகிவிட்டார் என்கிற ஆர்ப்பாட்டங்கள் ஏதுமில்லாமல் அமைதி காத்து நிற்கிறது அப்பார்ட்மெண்ட். ஷாமியானா இல்லை. சங்கு இல்லை. தென்னை ஓலைகள் கிடையாது. மடக்கு நாற்காலிகள் இல்லை. ஒப்பாரி அழுகை இல்லை. அதிகமாய் யாருக்கும் அவர் இருந்ததும் தெரியாது. இறந்ததும் தெரியாது.

உறவினர்களின் வருகையைத் தெரிவிக்கும் ஏழெட்டு ஜோடி செருப்புகள் மட்டும் கதவின் முன்னால். ’சாப்பிடாம இருக்காதீங்கோ. ரெண்டு இட்லியாவது சாப்பிடுங்கோ. பையன்ட்ட வாங்கிட்டு வரச் சொல்றேன்’ என்று யாரோ யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

இந்த மரணத்தினால் இம்மி அளவு கூட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் மற்ற ஃப்ளாட்டுகளில் டி.வி. சீரியல் சப்தங்கள், தாளிக்கும் வாசனை, சின்னப்பையன்கள் விளையாடும் உற்சாகக் குரல்கள், லிஃப்ட்டின் கிராதி கேட்டை அறைந்து மூடும் சப்தம். எஃப். எம் ரேடியோ.

நாளைக் காலை ஃப்யூனரல் சர்விஸ் மாருதி ஆம்னி வந்து அமைதியாய் எடுத்துப் போய் எலெக்ட்ரிக் க்ரிமடோரியத்தில் இறுதி அஞ்சலி முடிந்துவிடும்.

அபார்ட்மெண்ட் சுவர்களுக்குள் அடைபட்ட நகரமயமாக்கப்பட்ட வாழ்வு உறுத்தல்களற்றுத் தொடரும்.

ஜவ்வரிசி வடாம், உள் பனியன் மற்றும் ஒரு ரேடியோ விளம்பரம்

நான் அட்வர்டைசிங் துறைக்குள் நுழையலாம் என முடிவெடுத்த காலம். உடம்பும் மூளையும் பரபரவென்று ஆகிவிட்டது. என்னவொரு திடமான முடிவு. இதுதான் நீ வேலை செய்ய லாயக்கான துறை என்று மனசுக்குள் ஓரமாய் உறுதியாக ஒரு மணி அடித்து பல்பு தோரணமெல்லாம் எரிய ஆரம்பித்திருந்தது. உடனே நான் ஹாலோ ப்ளாக் கற்கள் அடுக்கிவைத்து மனக் கோட்டை கட்ட ஆரம்பித்துவிட்டதுடன் ஒரு புதிய அனுபவத்திற்கு வாழ்க்கையை தயார் பண்ணவும் துவங்கியிருந்தேன்.

அதற்கு முன் அட்வர்டைசிங் கம்பெனிகள் எப்படியிருக்கும் என்று நேரில் பார்த்ததில்லை. ஆனால் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். முற்றிலும் கிரியேட்டிவ்வான விஷூவலைசர் ஆர்ட் டைரக்டர்கள் எல்லாம் உலவுகிற இடம். குளிரூட்டப்பட்ட கண்ணாடி அறைகளுக்குள் க்ரியேட்டிவ் ஸ்டுடியோ. கிராஃபிக் டிசைன் மென்பொருள்கள் நிரம்பி வழிகிற கம்ப்யூட்டர்கள். ஷெல்ஃப்களில் வழியும் விளம்பர டிசைன் பத்திரிக்கைகள், புத்தகங்கள். ஸ்டைலாக நுனி நாக்கு ஆங்கிலம் பேசுகிற யுவதிகள். மீடியாவுடன் நெருங்கின சம்பந்தம் உள்ள வேலை. எட்செட்ரா.

நண்பர் ஒருவர் ஏதோ ஒரு கம்பெனியில் க்ராஃபிக் டிசைனர் வேலை காலியாயிருக்கிறதென்று கேள்விப்பட்டதாய் சொன்னார். உடனே நான் ஆர்வமாய் அட்ரஸ் ஃபோன் நம்பர் போன்ற தகவல் சேகரித்துக் கொண்டு அதை முயற்சித்துப் பார்த்துவிடவேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டேன்.

விசாரிக்க ஃபோன் செய்தபோது குயில் போன்ற இனிமையான குரலில் ஒரு இளம்பெண் எடுத்துப் பேசுவதற்குப் பதில் ஒரு வயசான கட்டைக்குரல் “சொல்லுங்க.. ஆமாங்க.. ஒரு ஆள் வேணும். காலைல பத்து மணிக்கு வந்து மேடம்-ஐ பாருங்க” என்று தமிழில் பேசியது ஏமாற்றத்தைத் தந்தாலும்.. மேடம் என்பது மேனேஜரா, எம்.டி யா என்று யோசித்துக்கொண்டே அடுத்தநாள் காலை சரியாக 9.45-க்கு அந்த அட்வர்டைஸிங் கம்பெனியிருக்கிற தெருவுக்குள் நுழைந்தேன்.

அது இரண்டாவது ஏமாற்றம். நான் ஏதோவொரு சின்னக் கண்ணாடிக் கட்டிடம் ஒரு அகலமான மெயின்ரோட்டில் இருக்கும் என்று கணக்குப் போட்டு வைத்திருந்தேன். இது என்னவென்றால் ஒரு சின்ன சந்துமாதிரி எதிரில் எருமை மாடு வந்தால் அதற்கு வழிவிட திரும்பி தெரு முனைவரை போய் அப்புறம் அது போன பிறகு மறுபடி சந்துக்குள் வருகிற அளவு மிகக் குறுகலாக இருந்தது.

அந்த அட்ரஸை ஒரு வழியாகக் கண்டுபிடித்து அதன் முன் போய் நின்றபோது மலைத்துப் போனேன். கசகசவென்று வீடுகளும் கடைகளுமாய் இருந்த அந்தச் சந்தில் நெரிசலில் சிக்கியதுபோல ஒரு மாடிவீடு விழி பிதுங்கி நின்று என்னை வரவேற்றது. வாசலில் கொடியில் உள்பாவாடை, வேட்டி எல்லாம் காய்ந்துகொண்டிருக்க ஓரமாய் ஜவ்வரிசி வடாம் காயப்போட்டிருந்தது. பக்கத்து மண்டியிலிருந்து மளிகைப்பொருட்களால் ஆன கதம்ப வாசனை. வீட்டின் முன்னால் அங்கே ஒரு கம்பெனி இருப்பதற்கான அடையாளமோ போர்டோ எதுவும் இல்லை. விசாரித்தபோது வீட்டை ஒட்டியிருந்த இருட்டுச் சந்துக்குள் போய் மரப்படிக்கட்டு வழியாக மேலே போகச் சொன்னார்கள். போனேன். படி முடிகிற இடத்தில் மேலே ஓட்டுக் கூரையுடன் கூடிய ஒரு தளத்தில் ஒரு பெரியவர் நெற்றியில் பட்டை போட்டுக் கொண்டு ஒரு மர டேபிளின் முன் ஒரே ஒரு ஃபைலை வைத்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தார்.

இண்டர்வ்யூக்கு வந்திருப்பதாய் அவரிடம் தகவல் தெரிவித்தவுடன் ஒரு கால் லேசாய் ஆடுகிற ஸ்டூலை நகர்த்திப் போட்டு காத்திருக்கச் சொல்லிவிட்டு அந்த ஒரே ஒரு ஃபைலை மறுபடி பார்க்க ஆரம்பித்தார். இன்னொரு இருட்டறையிலிருந்து பாதமிரண்டில் பொன்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட என்று பாட்டு வந்தது. நான் உட்கார்ந்திருந்த அறையை மலங்க மலங்கப் பார்த்தேன். அந்த அறையின் குறுக்கே ஒரு கயிறு கட்டப் பட்டிருக்க அதில் சின்ன சைசில் சில உள் பனியன்களைப் பார்த்து புருவம் உயர்ந்தது. நான் பெரியவரைப் பார்க்க அவர் கருமமே கண்ணாக ஃபைலில் நெருக்கி நெருக்கி என்னவோ எழுதிக் கொண்டிருந்தார். அவர் நிச்சயமாக ஒரு ஆர்ட் டைரக்டராக இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது. அட்ரஸ் மாறி வந்துவிட்டேனோ என்று சந்தேகமும் வந்தது.

போய்விடலாமா என்று யோசிப்பதற்குள் திடீரென்று உள்ளறையிலிருந்து ஒரு நாற்பத்தி ஐந்து வயது அம்மாள் காட்டன் புடவையில் தோன்றினார். ’வாங்க தம்பி’ என்றார். நான் ஸ்டூலிலிருந்து எழுந்து நிற்க.. ”உங்க சாம்பிள் ஒர்க் எல்லாம் கொண்டுவந்தீங்களா” என்றார். நான் கையோடு கொண்டு போயிருந்த ஒரு சின்ன ஃபோல்டரை நீட்டினேன். நின்றபடியே ஒவ்வொரு பக்கமாகப் பார்க்க ஆரம்பித்தார்.

“எக்ஸ்பீரியன்ஸ் இருக்கா?”

“அவ்வளவா இல்ல”

“நல்லா வரையறீங்க”

”தேங்க்ஸ் மேடம்”

சட்டென்று உடம்பில் ஒரு டவுசர் தவிர வேறு எதுவும் அணியாத ஒரு பையன் ஓடிவந்து கொடியிலிருந்த உள்பனியனை உருவி அதை தலைவழியே இறக்கி அணிந்தான். அந்த அம்மாள் அவனிடம் புளகாங்கிதமாய்த் திரும்பி “அங்கிள் ட்ராயிங் எல்லாம் சூப்பரா இருக்கு பாரு.. நீ அங்கிள் கிட்ட கத்துக்கோ.. சரியா” என்றார்.

நான் கலவரமடைந்து.. “ஆஃபிஸ் எங்க இருக்கு?” என்றேன்.

“இதான் ஆஃபிஸ்.. அவரு அக்கவுண்டண்ட்.. ரேடியோக்கு ஜிங்கிள்ஸ் நிறைய பண்ணிருக்கோம். நிறைய துணிக்கடை எங்க கிளையண்டு. ரேடியோல திருமணப் பண்டிகை மங்கலப் பட்டு-ன்னு ஒரு விளம்பரப் பாட்டு கேட்டிருப்பீங்களே. அது நானே ட்யூன் போட்டுப் பாடினது என்றுவிட்டு தொண்டையை செறுமி அதை பாடிக்காட்ட ஆரம்பித்தார்.

“மேடம்.. கம்ப்யூட்டர்...?”

”கம்ப்யூட்டர் எதும் இல்லை. வேணும்னா வாங்கிடலாம். என்ன விலை வரும்?”

திடீரென்று வீட்டுக்குள் சாம்பார் கொதிக்கிற வாசம் பலமாய் வந்தது. என்னை சந்தேகமாய்ப் பார்த்துக்கொண்டே ஒரு சாம்பல் நிறப் பூனை மியாவ் என்று கடந்தது. அந்த அம்மாள் ஃபோல்டரை திருப்பிக் கொடுத்தார். அக்கவுண்டண்டட் ஃபைலில் முற்றிலுமாய் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருந்தார்.

ரொம்ப நம்பிக்கையுடன் ”நீங்க மண்டேவே ஜாயின் பண்ணிக்கலாம். மண்டே வரும்போது அவர்ட்ட அப்பாயிண்ட் லெட்டர் தரச்சொல்றேன்” என்றார் மர டேபிள் மனிதரைக் காட்டி.

அந்த அம்மணியிடம் வெகு அவசரமாய் விடைபெற்றுக் கொண்டு மரப்படி இருட்டில் தடுமாறாமல் கவனமாய் இறங்கி வெளியே வந்து எருமைச் சாணியை மிதிக்காமல் வீட்டுக்குத் திரும்பும் வழியில் திருமணப் பண்டிகை மங்கலப் பட்டு என்று வாய் தன்னிச்சையாகப் பாடிக்கொண்டிருந்ததை உணர்ந்தேன்.

உதவி தேவை

முத்துராமன். அறியப்பட்ட எழுத்தாளர். நல்ல சிறுகதையாளர். வயது 33. கிழக்கு பதிப்பகத்திலும், ‘தமிழக அரசியல்’ இதழிலும் பணியாற்றியவர். ’சதுரங்கச் சிப்பாய்கள்’ என்கிற அருமையான சிறுகதைத் தொகுப்புக்கு சொந்தக்காரர்.

தற்போது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளார். போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் டாக்டர். சௌந்தரராஜனிடம் ஆலோசனை பெற்று வருகிறார். கடந்த நான்கு மாதங்களாக நண்பர்கள் உதவியினால் டயாலிஸிஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.

முத்துராமனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரது தாயார் ஜெகதீஸ்வரி தனது சிறுநீரகத்தை அளிக்க இருக்கிறார். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பணம் கிடைக்கும் பட்சத்தில், ஏப்ரல் 2010லேயே அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட முடியும்.

அறுவை சிகிச்சைக்கும், அதற்குப் பிறகான மருத்துவச் செலவுகளுக்கும் சேர்த்து சுமார் நான்கு லட்சம் ரூபாய் வரை ஆகும் என்று தெரிய வருகிறது. உதவ விரும்பும் நண்பர்கள் முத்துராமன் குறித்து மேலும் விவரங்கள் அறிய :

ஜெ. ராம்கி – ramkij@gmail.com
பாலபாரதி – kuilbala@gmail.com
முகில் – mugil.siva@gmail.com – 99400 84450

முத்துராமனுடைய வங்கிக் கணக்கு எண் :

SBI Mogappair Branch – A/c No: 30963258849
Branch Code : 5090
MICR No: 600002118
IFS Code : SBIN0005090

MUTHURAMAN என்ற பெயரில் காசோலை / டிராஃப்ட்கள் கொடுக்கலாம்.

முகவரி :

முத்துராமன்,
22, எச்.ஐ.ஜி. ப்ளாட்,
7வது தெரு, ஏரித்திட்டம்,
முகப்பேர் மேற்கு,
சென்னை – 600037.
muthuraman@gmail.com

அல்லது கிழக்கு பதிப்பக முகவரிக்கும் அனுப்பலாம்.

முகில்
கிழக்கு பதிப்பகம்
33/15, எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை,
சென்னை – 600 018.
044 – 4200 9601 / 03/ 04.

முத்துராமனுக்கு அறுவை சிகிச்சை வெற்றியடைந்து வெகுவிரைவில் பூரண குணமடைய மனமார்ந்த பிரார்த்தனைகள்.