வீட்டுக்காரர் பார்த்தால் என்ன நினைப்பார்?

சென்னையில் ஒரு வீட்டை நீங்கள் குடியிருக்க வாடகைக்குப் பிடிக்கிறீர்கள். அதுவும் நகரத்தின் இதயத்துக்கு நடுவே அல்லது அருகாமையில். உங்களுக்கு வாடகைக்கு விடுவதற்கென்று தன் வீட்டின் சுவர்களுக்கு பளபளவென டிஸ்டெம்பரோ பெயிண்ட்டோ அடித்து ஒரு புதிய வீட்டின் தோற்றத்தை அதற்கு கொடுத்து வைத்திருக்கிறார் வீட்டு உரிமையாளர்.

ஒரு நல்ல நாள் பார்த்து பால் காய்ச்சி பிறகு உங்கள் வாழ்நாள் உடைமைகளை அல்லது இப்பூவுலகில் வாழத் தேவையானதாகக் கருதும் குறைந்த பட்ச அத்தியாவசியச் சாமான்களை புதிய வீட்டிற்கு மாற்றிவிடுகிறீர்கள். எல்லாவற்றையும் அந்தந்த இடத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு, காலண்டர் மாட்டி, பால்கனியில் துணியுலர்த்த கொடிகட்டிவிட்டு, மின் அட்டையை சரிபார்த்து ரீடிங்கைக் குறித்து வைத்துவிட்டு, பாலுக்கும் பேப்பருக்கும் ஏற்பாடு பண்ணிவிட்டு, பக்கத்து வீட்டுக்காருக்கு எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு ஹலோவும் சொல்லி வைத்தாயிற்று.

ஒரு பெரிய ராக்கெட் ப்ராஜக்டை முடித்த அலுப்புடன் உங்கள் வரவேற்பறை சோபாவில் சாய்கிறீர்கள். எதிரில் சுவரில் புதிதாக வண்ணமடிக்கப்பட்ட சுவரில் ஒரு பெரிய கருப்புக் கீறல். என்ன அது என்று பதறி பக்கத்தில் போய்ப் பார்த்தால் அது ஒரு பென்சில் கிறுக்கல். மிகவும் கண்டிக்கத்தக்க இந்த அசட்டு வேலையைச் செய்தது உங்கள் குழந்தையாகத்தான் இருக்கும் என்று சந்தேகப்பட்டு அதைத் தேடினால் அது கையில் க்ரையான்களுடன் பெட்ரூம் சுவரில் தனது அடுத்த கட்ட வேலையை ஆரம்பித்திருக்கிறது.

உங்கள் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும்? சென்னை நகரில் நம்மை நம்பி வீடு தரும்போதே ஆயிரத்து நூற்றி இருபத்து நாலு நிபந்தனைகளும் கூடவே ஒரு பதினோரு மாத அக்ரிமெண்டும் போட்டிருக்கும் வீட்டுக்காரருக்கு அவரது வீட்டை சேதாரமில்லாமல் திருப்பிக் கொடுக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறபடியால் நிச்சயம் இப்போது உங்கள் ரத்த அழுத்தம் ஏறியிருக்க வாய்ப்புண்டு.

“கண்ணா இதுமாதிரியெல்லாம் சுவத்தில கிறுக்கக்கூடாது சரியா. ஹவுஸ் ஓனர் அப்பாவ திட்டுவாரு” என்று நயமாய்ச் சொல்லி பென்சில், பேனா க்ரையான்களை உடனடியாக குழந்தைக்கு எட்டாத உயரத்தில் வைத்துவிடவும் செய்வீர்கள். இப்படிச் செய்யவில்லையென்றால் வீட்டுக்காரரின் கடும் எரிச்சலுக்கு ஆளாவதுடன், வீட்டைக் காலி செய்யும்போது உங்கள் அட்வான்ஸ் தொகையிலிருந்து ஒரு பெரும் பங்கை வீட்டுச் சுவர்களை நாசப்படுத்தியதற்காக அவர் கழித்துக் கொள்ளக்கூடும்.

ஆனால் இவ்வாறான கவலைகள் எதுவுமற்று செந்தில் ஒரு நண்பர் இருந்தார். அபிராமபுரத்திலிருக்கும் அவர் வீட்டுக்கு ஒரு முறை போனேன். வாசலைத்தாண்டி உள்ளே நுழைந்ததும் ஹாலின் மொத்த சுவரையும் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு சுவர் கிறுக்கல்கள். அவரது ப்ரீ கேஜி குழந்தை ஹரிணியின் கைவண்ணம். பென்சில், கிரையான், இன்சுலேஸன் டேப், போஸ்டர் கலர் என்று என்ன கையில் என்ன கிடைக்கிறதோ அவைகளைக்கொண்டு தனக்கு எந்த உயரம் வரை எட்டுகிறதோ அது வரை விதவிதமான கிறுக்கல்கள். எட்டவில்லையென்றால் சோபாவின் மீது ஏறி நின்று.

ஹாலில் மட்டும் அல்ல படுக்கையறைகளில், சமையலறை சுவர்களில் என எங்கும் கிறுக்கல் மயம். ஆக அவரது வீடு ஒரு சிறிய ஆர்ட் கேலரி மாதிரி தோற்றமளித்தது.

நீங்கள் குழந்தையைக் கண்டிப்பதில்லையா என்று கேட்டதற்கு நண்பர் மெதுவாய்ச் சிரித்தார். அதோட கிரியேட்டிவிட்டியையும் சுதந்திரத்தையும் ஏன் கெடுக்கவேண்டும் என்றார். மீறிப் போனால் வீட்டுச் சொந்தக்காரர் வெள்ளையடிக்க ஒரு இருபதாயிரம் ரூபாய் கேட்பார். கொடுத்தால் போயிற்று என்றார். நான் ஆச்சரியமாகிப்போனேன்.

நான் குடியிருக்கிற வீட்டில் என் பையன் இப்படிக் கிறுக்கத் தலைப்பட்டபோது அவனை தடுத்தாட்கொண்டது ஞாபகம் வந்தது.  நான் முடிந்த அளவு வீட்டுக்காரர் குறை சொல்லாமல் நடந்துகொள்ளவேண்டும் என்று நினைக்கிற ஆசாமி. அதற்காக செய்கிற தியாகங்களில் அதுவும் ஒன்று.

குழந்தைகளுக்கு சுவரில் கிறுக்குதல் சந்தோஷம். ஆனால் ஒரு சில நிர்பந்தங்களின் பொருட்டு அவ்வாறு செய்யவிடாமல் அடக்கி ஆள்கிறோம். அதை என் நண்பர் செய்ய முயற்சிக்கவில்லை என்பது நல்ல பாராட்டத்தக்க விஷயமாகப்பட்டது. அவரது குழந்தை தனக்கு மனதில் தோன்றுவதை எல்லாம் எங்கே வேண்டுமானாலும் சுதந்திரமாகக் கிறுக்கிக் கொள்ள அனுமதியளித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக சுவர் முழுவதும் குறுக்கும் நெடுக்கும் பலவிதமான கோடுகளால் ஹரிணிக்கு தன் உலகத்தை விரியச் செய்ய முடிகிறது.

அவைகளை சாதாரணக் கண்களோடு பார்த்தால் வெறும் கிறுக்கல்களாக மட்டுமே தெரியும். ஹரிணியின் மாய உலகத்தில் அவள் கற்பனைகளில் மிதக்கும் உருவங்கள் கோடுகளாக வெளிப்பட்டிருக்கிறதென்று ஏன் சொல்லமுடியாது?. அந்த உலகத்திற்கு நீங்கள் பயணிக்க வேண்டுமென்றால் அந்தக் கிறுக்கல்களை புரிந்து கொள்ளவேண்டுமென்றால் உங்கள் வயதை மூன்றாக மாற்றினால் மட்டுமே முடியும்.

குழந்தைகள் பிற்காலத்தில் என்னவாக ஆவார்கள் என்று யாராலும் சரியாகக் கணிக்க முடியாது. பெரும்பாலானவர்களின் வாழ்க்கையிலும் அதுவே நிகழ்ந்திருக்கிறது. நான் என்னவாக ஆவேன் என்று எப்படி என் அப்பாவுக்குத் தெரியாமல் போனதோ அதே மாதிரி என் மகன் பிற்காலத்தில் எதுவாக மாறுவான் என்று என்னாலும் சொல்ல முடியாது. வேண்டுமென்றால் அவன் எதுவாக ஆகவேண்டுமென்று நினைக்கிறானோ அதற்கான அடித்தளத்தையும், உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கலாம்.

நியூயார்க்கில் குழந்தை மேதாவியான மார்லா ஆம்ஸ்டெட் (Marla Olmstead) என்கிற ஒரு சின்னக் குழந்தை உலகின் முன்னணி ஓவியர்கள் மூக்கில் விரலை வைக்குமளவுக்கு மாடர்ன் ஆர்ட் ஓவியங்களை வரைந்து பல லட்சம் டாலர்களுக்கு அவைகளை விற்றுக்கொண்டிருப்பதையும் டாக்குமெண்டரியாக டிவியில் ஒரு நிகழ்ச்சியில் பார்த்தேன். அது சின்ன வயதிலிருந்தே இப்படி சுவரில் கிறுக்கிய குழந்தையாகக்கூட இருக்கலாம்.

இன்றைய சும்மா சுவர்க் கிறுக்கல்கள் நாளைய கலைப்படைப்புகளாக மாற நிறையவே வாய்ப்பிருக்கிறது. குழந்தைகள் செய்வதையும் சொல்வதையும் முற்றும் சரியல்ல என்று புறந்தள்ளுவதும் நல்லதல்ல என்று தோன்றுகிறது. வளரும் வயதில் லேசான கண்டிப்புடன் கொஞ்சம் சுதந்தரத்தையும் வழங்கும் பட்சத்தில் குழந்தைகள் தங்களின் படைப்புத்திறனை நல்ல முறையில் கூராக்கிக் கொள்ள இயலும். நண்பர் அதை செவ்வனே செய்கிறார்.

நண்பர் வீட்டுக்குப் போன நேரம் கையில் டிஜிட்டல் கேமரா இருந்ததால் குழந்தை ஹரிணியின் சுவரோவியங்களைப் படமாக்கி பிறகு கம்ப்யூட்டரில் அவைகளுக்குப் ஃப்ரேம் எல்லாம் போட்டு மின்னஞ்சலில் அவருக்கு அனுப்பி வைத்தபோது நெகிழ்ந்து சந்தோஷப்பட்டார். பிறகு அவைகளையே கலந்துகட்டி எனது வலைத்தளமான சித்ரன்.காம்-மில் (http://chithran.com) தலைப்பு பேனரிலும் உபயோகப்படுத்திக்கொண்டேன்.ஹரிணியின் அந்த சுவரோவியங்களை இந்தப் பதிவில் ஆங்காங்கே கொடுத்திருக்கிறேன். எப்படியிருக்கிறதென்று சொல்லுங்களேன்!

நெருப்பில்லாமல் புகைகிறது

மதிய உணவு இடைவேளையில் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது சின்ன வயதில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொன்னார். நண்பர் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர். அவரது நண்பரொருவர் “இதை பாக்கெட்டில் வைத்திரு. அப்புறம் வாங்கிக் கொள்கிறேன்” என்று கொடுத்து வைத்திருந்த ஒற்றை சிகரெட்டை பாக்கெட்டில் போட்டு அப்புறம் மறந்துபோய் வீட்டுக்கு எடுத்துப் போய்விட்டாராம். சிகரெட் பிடிப்பதோடு அப்பாவின் சட்டையையும் அவ்வப்போது எடுத்துப் போட்டுக்கொண்டு போகும் பழக்கமுடையவர் இவர். வீட்டுக்கு வந்து ஹாங்கரில் மாட்டின சட்டையை அப்பா துவைக்கப் போடுவதற்காக எடுத்தபோது சொன்னாராம். “எலே.. சட்டப்பாக்கெட்ல ஒரு சிகரெட் இருக்குலே”.

கட்டிலில் ஒய்யாரமாய் படுத்து அரைத்தூக்கத்தில் இருந்த நண்பர். “அத வெளிய தூக்கிப் போடுங்கப்பா!”

அப்பாவும் வேறு கேள்விகள் ஏதும் கேட்காமல் தூக்கிப் போட்டுவிட்டுப் போய்விட்டாராம். இந்தச் சம்பவத்தை விவரித்த நண்பர் சொன்னது “அப்பா என்னை எதுவுமே கேக்கல. அது தவிர நான் சிகரெட் பிடிப்பனா இல்லையான்னு என்பது இன்னிக்கு வரைக்கும் அப்பாவுக்கு தெரியாது. தெரிஞ்சிருந்தாலும் இதுவரைக்கும் என்கிட்ட அதப் பத்திக் கேட்டதில்ல.”

இந்த மாதிரி தன் கட்டுப்பாடுகளிலிருந்து மகன்களுக்கு முழு சுதந்திரம் வழங்கியிருக்கிற அல்லது அவ்வப்போது கண்டுகொள்ளாத அப்பாக்கள் ஓரிரு பேரை நான் கண்டிருக்கிறேன். இத்தனைக்கும் அந்த அப்பாக்கள் சிகரெட் பழக்கம் இல்லாதவர்கள். சிகரெட் பிடித்தல் உடல்நலத்திற்குத் தீங்கானது என்கிற அரசாங்க வாசகத்தை அவர்கள் தெளிவாக அறிந்து வைத்திருப்பவர்கள்.

ஒரு முறை என்னுடைய (இன்னொரு) நண்பனின் வீட்டுக்குப் போனபோது வாசலில் ஈஸி சேரில் அவன் அப்பா சாய்ந்து படுத்திருந்தார். அவன் இல்லையா என்று அவரிடம் விசாரித்தபோது ஆள்காட்டி விரலால் உத்தரத்தை நோக்கிக் காட்டிவிட்டு, பிறகு இரண்டு விரல்களை “v" மாதிரி உதட்டில் வைத்து ஊதிக் காட்டினார். நான் ஒரு நிமிடம் தேமே என்று விழித்துவிட்டுப் பின்னர் அதன் பொருள் புரிந்து சைடு படிக்கட்டு வழியாக மொட்டை மாடிக்குச் சென்றேன். அங்கே சுற்றுச் சுவரில் உட்கார்ந்து வானத்தைப் பார்த்துக் கொண்டு புகைவிட்டுக் கொண்டிருந்தான் நண்பன். “என்னடா வீட்லயே தம்மா? அப்பா இருக்காரே!” என்றதற்கு மூக்கு வழியாக புகையை வெளியே விட்டுவிட்டு “கண்டுக்க மாட்டார்” என்றான். மீண்டும் ஒரு இழுப்பு இழுத்துவிட்டு.. “அம்மாவும்தான்” என்றான்.

இந்த இடத்தில் நீங்கள் எல்லாரும் “ரோஜா” படத்தில் அரவிந்தசாமி அம்மா முன்னிலையிலேயே சிகரெட் பற்ற வைத்துப் புகைப்பதை தவறாமல் நினைவுகூறுவீர்கள் என்று தெரியும். (நினைவு கூறாதவர்கள் இந்த வரியைப் படித்துவிட்டு ஒருமுறை நினைவு கூறுங்கள்.) இதைப்பார்த்து சிலபேர் அதிர்ச்சியும் சில பேர் ஆச்சரியமும், சில பேர் இரண்டையும் ஒருங்கே அடைந்தார்கள்.

என் அப்பா சிகரெட்டெல்லாம் பிடிக்கற பழக்கம் வெச்சுக்காதே என்று என்றைக்காவது எனக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறாரா என்று யோசித்துப் பார்த்தால் அப்படி எதுவும் நினைவில் புகையாடவில்லை. பையன் தம் எல்லாம் அடிக்கிறானா என்று யாரிடமாவது விசாரித்திருப்பாரா என்பது கூட நிச்சயமாகத் தெரியவில்லை.

எனக்கு சிகரெட் பிடிக்கிற நண்பர்கள் நிறைய பேர் உண்டு. என்னிடமே ரெண்டே முக்கால் ரூபாய் வாங்கி ‘கிங்ஸ்’ வாங்கியவர்கள் இருக்கிறார்கள். (இப்போ எவ்ளோ?) அவர்கள் சில நேரம் அளவுக்கு அதிகமாக புகைப்பதுபோல தோன்றும் சமயங்களில் “ஏம்ப்பா இந்தக் கருமத்த விட்டுற வேண்டியதுதான?” என்று கேட்டிருக்கிறேன். அதற்கு விதவிதமான பதில்கள் வந்திருக்கின்றன.

பதில் 1: பதினெட்டு வயசில காலேஜ்ல ஆரம்பிச்சதுடா.. உடம்புல ஊறிப்போச்சு. விடறது கஷ்டம்.
பதில் 2: எந்த ******க்கு விடணும்னு சொல்லு.
பதில் 3: புகை உடலுக்குப் பகைங்கறதுனாலதான் உள்ள வச்சுக்காம வெளிய விட்டுர்றேன். ஹிஹி!
பதில் 4: வுட்டுட்டா உளுந்துரும்ஜி!
பதில் 5: எனக்கு ஆக்ஸிஜனே இதுதான். எப்டி வுடறது?

இன்னபிற.

சிகரெட் பிடிக்கிற அப்பாக்கள் சிலபேரைப் பார்த்திருக்கிறேன். தன்னிடமிருந்து மகனோ மகளோ சிகரெட் பிடிப்பதைக் கற்றுக் கொண்டுவிடக்கூடாதென்கிற முன்னெச்சரிக்கையுடன் வீட்டுக்கு வெளியே சற்றுத் தள்ளி தெருமுனையில் அல்லது டீக்கடையில் என்று கமுக்கமாக முடித்துவிட்டு வந்துவிடுவார்கள். வாசம் தெரியாமலிருக்க ஹால்ஸ் அல்லது நிஜாம் பாக்கு.

பதில் 1-ஐ சொன்ன நண்பரிடம் முன்னெல்லாம் ஏதாவது ஒரு இடத்தைக் குறிப்பிட்டு அது எங்கேயிருக்கிறதென்று கேட்டால், இந்த பஸ்ஸில் ஏறி, அந்த ஸ்டாப்பிங்கில் இறங்கி அப்றம் ஒரு சிகரெட் பத்த வெச்சு நடக்க ஆரம்பிச்சீன்னா அது தீர்றதுக்குள்ள போயிரலாம் என்பான். இது எனக்கு ஒரு விதத்தில் இன்ஸ்பையர் ஆகி 96-ல் கல்கியில் வெளிவந்த ஒரு சிறுகதையில் இதை ஒரு வரியாக வைத்தேன். கதை நாயகி காயத்ரியின் கணவன் ராம்குமார் என்பவன் தினம் காலை ஒரு சிகரெட் பற்றவைத்துக்கொண்டு மனைவியை நடக்கிற தூரத்தில் இருக்கிற ஆபிஸ் வரை விட்டுவிட்டுத் திரும்புவான். ‘ஒரு சிகரெட் தூரம்’ என்று கூட தலைப்பு வைத்து பிறகு ‘நடக்கிற தூரம்’ என்று மாறிவிட்டது.

கோவையில் ஒரு அட்வர்டைஸிங் கம்பெனியில் பணிபுரிந்தபோது அங்கே வேலை செய்த ஒரு பத்துப் பன்னிரண்டு பேரில் பெண்கள் தவிர முக்கால்வாசிப் பேர் புகை மன்னர்களாக இருந்தார்கள். கம்பெனியின் வைஸ் பிரஸிடெண்ட் உட்பட. கிரியேட்டிவ் ஏரியாவில் ஆர்ட் டைரக்டர், உதவி ஆர்டிஸ்ட், க்ளையண்ட் சர்வீஸ் எக்ஸிக்யூட்டிவ், அக்கவுண்ட் ஹெட் என்று எல்லாருமே ஒரே அறையில் உட்கார்ந்து கொண்டு மாற்றி மாற்றி பற்றவைத்துக் கொண்டிருப்பார்கள். வத்திப் பெட்டி இருக்கா என்று என்னிடம் வேண்டுமென்றே கேட்பார்கள்.

புகைபிடித்தல் என்பது கிரியேட்டிவ்-ஆன ஆசாமிகளின் தலையாய லைஃப் ஸ்டைல் என்பதை ஸ்தாபிக்க முனைபவர்கள் அவர்கள். நான் திருவிளையாடல் படத்தில் கைலாயக் காட்சி மாதிரி புகை மண்டலத்துக்கு நடுவே மூச்சுத் திணறி உட்கார்ந்து கொண்டிருப்பேன். இதற்கல்லவா அறிஞர்கள் பாஸ்ஸிவ் ஸ்மோக்கிங் (Passive Smoking) என்று பெயர் வைத்திருக்கிறார்கள்!! இதில் என்ன வேடிக்கை என்றால் மாத ஆரம்பத்தில் டப்பா டப்பாவாக கைமாறுகிற சிகரெட், மாத இறுதியில் பட்ஜெட் காரணமாக மல்லிசேரி பீடியாகத் தேய்ந்து ஆளாளுக்குக் காட்டமாய் உதட்டில் வைத்து இழுத்துக் கொண்டிருப்பார்கள். வைஸ் பிரஸிடெண்ட் வந்து “யோவ், பீடி குடுய்யா” என்று ஆர்ட் டைரக்டரிடம் வந்து வாங்கிப் போவார். நான் எழுந்து வெளியே வந்துவிடுவேன். (அந்த சமயங்களில் அவர்களின் கிரியேட்டிவிட்டி இன்னும் அதிகமானதா என்பதை நான் கவனித்திருக்கவில்லை)

பொள்ளாச்சியில் தேவர் மகன் படப்பிடிப்புக்கு வந்திருந்த ஒரு பிரபல எழுத்தாளரை அவர் தங்கியிருந்த லாட்ஜ் அறையில் சந்திந்தபோது கையில் புகைகிற சிகரெட்டுடன் வரவேற்றார். ஒரு நான்கைந்து மணி நேரமிருக்கும். ஒரு சிகரெட் தீர்ந்து போகும் போது அதிலேயே இன்னொன்றை பற்றவைத்துக் கொண்டு இடைவெளி விடாமல் தொடர்ந்து அவர் புகைத்ததைப் பார்த்து அரண்டும் மிரண்டும் போயிருந்தேன். எனக்குத் தெரிந்து குறைந்தது 25 சிகரெட்டுகளாவது தீர்ந்திருக்கும். செயின் ஸ்மோக்கிங் என்றால் என்ன என்று டெமோ-வுடன் தெரிந்து கொண்டது அன்றுதான். என் வீட்டுக்குப் பக்கத்தில் கூட ஒருவர் காலர் தூக்கிவிடப்பட்ட டி-சர்ட் மற்றும் வேட்டியுடன் எப்போதும் சதா விரலிடுக்கில் புகைகிற சிகரெட்டுடன் காம்பவுண்டுக்கு வெளியே நின்றிருப்பார். எங்கேயாவது போகும்போதும் வரும்போதும் எந்நேரமும் அவரை அந்த இடத்தில் அந்த நிலையிலேயே பார்த்துக்கொண்டிருக்கிறேன். தம் அடிப்பதை ஒரு வேலையாகவே செய்ய முடியுமா என்று ஆச்சரியமாகவும் இருக்கிறது.

சிகரெட் பிடிக்கிற ஆண்கள் பெட்டிக்கடையில் “பிரதர்.. நெருப்பு குடுங்க” என்று பக்கத்தில் நிற்கிறவரிடம் இயல்பாகக் கேட்கும் கேள்வியில் முன்பின் பழக்கம் இல்லாதவர்கூட மனமுவந்து தன் கொள்ளியைத் தந்து உதவி பின் தோழமையுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கூட பார்த்திருக்கிறேன். நட்பு வளர்க்க உதவும் நெருப்பு.

வாழ்க்கையில் அவ்வப்போது தொட்டுக்கொள்ள சிகரெட், பான் பராக், சுவிங்கம் என்று ஏதாவது ஒரு ஐட்டம் ஏன் எப்போதும் சிலருக்குத் தேவைப்படுகிறதென்று சில நேரம் யோசித்துப் பார்த்திருக்கிறேன். இது ஒரு உளவியல் சம்பந்தப்பட்ட விஷயம் என்றுதான் தோன்றுகிறது. ஸீரியசாய் எப்போதும் யோசிப்பவர்கள் கையில் சிகரெட் புகைகிறது. அது அவர்கள் சிந்தனையைத் தூண்டுகிறதா என்று உலகமெங்கும் யாராவது கருத்துக் கணிப்பு நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். தொழிலாளிகள் தன் உழைப்பை, வியர்வையை, அலுப்பை மறக்க ஓரமாய் உட்கார்ந்து ஒரு பீடியை ஒரு இழுப்பு. சிலருக்கு பெண்களிடம் தான் ஒரு ஹீரோவாக நிரூபணம் செய்வதற்கு. சிலருக்கு தான் ஒரு வில்லன் என்று மற்றவர்களுக்குத் பிரகடனப்படுத்துவதற்கு. சிலருக்கு தான் ஒரு ஆண் என்று நிரூபணம் செய்வதற்கு. இந்த லிஸ்டை இன்னும் விரிக்கலாம்.

பிறரிடம் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவதற்கு. தன்னுடைய தாழ்வு மனப்பான்மையை மறைப்பதற்கு. அப்பாவை எதிர்ப்பதற்கு. தன்னிடமிருக்கிற இண்டெலெக்சுவல்தனத்தை வெளிப்படுத்துவதற்கு. கை நடுக்கத்தை மறைப்பதற்கு. மதுவருந்தும்போது சும்மா ஒரு உப கிக் ஏற்படுத்துவதற்கு. சிலருக்கு சும்மா ஸ்டைலுக்கு. சிகரெட் என்றால் என்ன என்று ஒரு முறை தெரிந்துகொள்வதற்கு. தன் படைப்பாற்றலை அதிகரித்துக் கொள்வதற்கு. சிலருக்கு சாப்பாட்டுக்கு பதிலாக. சிலர் தன் நண்பர்களுடன் சும்மா கம்பெனிக்கு. தன் கணவனையோ, காதலனையோவிட தானும் குறைந்து போய்விடவில்லை என்று தெரிவிப்பதற்கு. சிலருக்கு துக்கத்தைக் கரைக்க. சிலருக்கு தூக்கத்தை அழைக்க. சிலருக்கு குளிரைத் தடுக்க. சிலருக்கு மழையை ரசிக்க. இப்படியாக ஒவ்வொருவருக்கும் புகைபிடிப்பதற்கான தனிப்பட்ட காரணங்கள் நீண்டுகொண்டே போகும்.

உதடு வழி நுழைகிற புகை நெஞ்சாங்கூட்டில் இறங்கிப் பரவி மனதிலும் உடம்பிலும் என்னெல்லாம் மாயம் செய்கிறது என்பதை சிகரெட்டை நுனி முதல் அடிவரை அனுபவித்துப் பிறகு ஃபில்டரைக் கடாசுபவர்களுக்குத்தான் வெளிச்சம்.

சிலர் தொட நினைக்கிறார்கள். சிலர் விட நினைக்கிறார்கள். சிகரெட் பிடிப்பது என்பது தனிப்பட்ட நபரின் விருப்பமும், சுதந்திரமும், உரிமையும், கொள்கையும் ஆகவும் இருக்கிறது. சிலருக்கு அதுவே ஒரு மோனத்தவமும், தியானமும், வாழ்வியல் வழியும் ஆக பரிமாணம் கொண்டிருக்கிறது. டாக்டர் எக்ஸ்ரேவை சுட்டிக் காட்டி “உங்க நுரையீரல்ல... என்று ஏதோ சொல்ல ஆரம்பிக்கும்வரை.

கீட்ஸ் படிச்சிருக்கியா?

கதைகளோ, நாவல்களோ படிப்பது என்பது சும்மா பொழுதுபோக்கிற்காகவா? அல்லது குறிப்பிட்ட எழுத்தாளர்களின் எழுத்து நடைக்கான ஆராதனை அல்லது ஆர்வமா? இலக்கிய (அல்லது கமர்ஷியல்) தாகமா? கதையில் வரும் சம்பவங்களோடு தன் வாழ்வில் எதையாவது பொருத்திப் பார்த்து மகிழ்ச்சி அல்லது துக்கப்படுவதற்கா? அல்லது தன் வாழ்வுக்கெட்டாத, கற்பனை செய்து பார்க்க இயலாத நிகழ்வுகளை கதைகளில் படித்துக் களிக்கிற திருப்தியா? பொது அறிவு வளர்ப்பதற்கா?

இது எல்லாமும் ஆக இருக்கலாம் அல்லது இவற்றில் ஏதாவது ஒன்று. ஆனால் கடைசியில் சொல்கிற பாயிண்டை கவனியுங்கள். பொது அறிவு வளர்ப்பது.

கதைகள், நாவல்கள் படிப்பதால் நம் பொது அறிவு வளருமா என்றால் நிச்சயம் ஓரளவுக்கு வளரும் என்பதற்கான பதிவு இது. எனக்கு கொஞ்சமாய் வளர்ந்திருக்கிறது. குறிப்பாக சின்ன வயசிலிருந்து படித்த வணிக எழுத்தாளர்களின் கதைகள், நாவல்கள் மூலம். பல்வேறு விஷயங்கள் பற்றிய ஞானத்தைப் பெற அவைகள் வெகுவாக துணை புரிந்திருக்கின்றன.

அப்போது பெருமளவில் வந்துகொண்டிருந்த பாக்கெட், மாத நாவல்களை எடுத்துக்கொள்ளுங்கள். (உடனே எடுக்கப் போய்விடாதீர்கள்). ராஜேஷ்குமாரிலிருந்து ஆரம்பித்தால் சுஜாதாவரை ஒரு பெரிய ரவுண்டு வரலாம். இந்த மாதிரி எழுத்தாளர்கள் தாராளமான ஆங்கிலக் கலப்போடு எழுதினார்கள் என்பது வாசகர்களின் வொக்காபுலரி அல்லது ஒக்கபிலேரியை முன்னேற்றப் பயன்பட்டன. நான் சொல்வது அதிகமாய் விஷய ஞானமற்ற வயதில் இவைகளைப் படிப்பவர்களுக்கு (அல்லது படித்தவர்களுக்கு). நான் ஆறாங்கிளாஸ் படிக்கும்போதே அம்புலிமாமா ரத்னபாலாவிலிருந்து ப்ரொமோஷன் ஆகி மாத நாவல்களுக்கு வந்துவிட்டேனாக்கும். அப்போது ராஜேஷ்குமார் “அவன் காரிடாரில் நடந்து வெளியே வந்தான்” என்று எழுதினால் எனக்கு காரிடார் என்ற புதிய வார்த்தை கிடைக்கிறது. அப்போது இவையெல்லாம் நான் கேள்விப்படாத வார்த்தைகளாகியிருந்தது. இப்போதுகூட எங்கேயாவது நீண்ட காரிடாரில் நடக்கும்போது ராஜேஷ்குமார் சிலசமயம் சட்டென்று நினைவுக்கு வருவதுண்டு. இதே போல் சில உதாரணங்களைச் சொல்லவேண்டுமென்றால். (சும்மா படித்த ஞாபகத்திலிருந்து உதாரணத்துக்கு மட்டுமே. சரியான வரிகள் அல்ல)

  • அவன் போர்டிகோவில் காரை செருகி நிறுத்தினான்.
  • அவள் லவுஞ்சில் காத்திருந்த மாதவனை நோக்கிக் கையசைத்தாள்.
  • அந்த விமானம் ஒரு அலுமினியப் பறவை போல மிதந்துவந்தது.
  • ஸ்க்வாட்ரன் லீடர் குமார் கீழே விழுந்தபோது ஒரு பந்துபோல தன்னைச் சுருட்டிக்கொண்டான்.
  • அவன் அவளை நரிமன் பாயிண்டிற்கு வரச் சொல்லியிருந்தான்.
  • வஸந்த் ஒருவித ரிஃப்ளெக்‌ஷ் இயக்கத்தில் செயல்பட்டு உடனே குனிந்துகொண்டான்.
  • அவன் யமஹாவை உதைத்துக் கிளப்பிச் சீறினான்.
  • சோடியம் வேப்பர் விளக்கு வெளிச்சத்தில் அவள் முகம் இன்னும் அழகாக இருந்தது.

மேலுள்ளவற்றில் காணப்படும் வரிகளில் போர்டிகோ, லவுஞ்ச், அலுமினியத்தால் செய்யப்படும் விமானம், ராணுவத்தில் இருக்கிற ஸ்க்வாட்ரன் லீடர் என்ற பதவி, மும்பையின் நரிமன் பாயிண்ட், ரிப்ளெக்ஸ், இந்த மாதிரி புதிய வார்த்தைகள் எல்லாம் ஆறாங்கிளாஸ் தமிழ் மீடியம் படிக்கிற பையனுக்கு எதேஷ்டமான பொது அறிவா இல்லையா? நிச்சயம் நான் யமஹாவையோ, சோடியம் வேப்பர் விளக்கையோ அப்போது பார்த்ததில்லை. அப்புறம்.. மார்ச்சுவரி, போஸ்ட்மார்ட்டம், ஃபாரன்ஸிக், அப்ஜெக்‌ஷன் யுவர் ஆனர், வென்ட்டிலேட்டர், பாயிண்ட் 33 பிஸ்டல், ஸிர்ரஸ் மேகத்தீற்றல்கள், ஜானவாசக் கார், காக்டெயில், ப்ரீஃப்கேஸ், ஃபேக்ஸ், ரிகர்மாட்டிஸ், ரிஸீவர், மவுத் பீஸ், ஹேபியஸ் கார்பஸ், காஸனோவா, சாண்ட்லியர் விளக்குகள், வாய்ஸ் ரெகக்னிஷன், பீத்தோவனின் ஸிம்பனி, ஹாலோகிராம், அப்பெர்ச்சர், வியூஃபைண்டர், ஸாட்டின் பாவாடை இன்னபிற.

இது மட்டுமல்லாமல் மனிதர்களைப் பற்றி, சில பிரபலங்களைப் பற்றித் தெரிந்துகொள்வதும். சுஜாதா ஒரு கதையில் ‘அவன் ஒரு நவீன மெஸ்ஸையா போல தோற்றமளித்தான்’ என்று எழுதியிருப்பார். யாருடா இது மெஸ்ஸையா (
messiah) என்று ரொம்ப நாள் மண்டைக் குடைச்சலாக இருந்தது. கணேஷ் வஸந்திடம் “கீட்ஸ் படிச்சிருக்கியா” என்று கேட்கும்போது ஒரு பிரபல உலகக் கவிஞரைத் தெரிந்துகொள்ள முடிந்தது. (ஆனால் படித்ததில்லை). இந்த வரிசையில் ஷெல்லி, பைரன் எல்லோரும் அடிக்கடி வருவார்கள்.

நான் சென்னைக்கு வரும் முன்பே இந்த நகரம் எனக்குப் பரிச்சயமான இடமாகத் தோற்றமளித்ததற்குக்கூட மேற்கூறிய எழுத்தாளர்களுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. பொதுவாக அநேக கதைகள், மாத நாவல்கள் சென்னையைக் களமாக வைத்து எழுதப்பட்டன என்கிற வகையில் மிகக் கொஞ்சமாக அதன் பேட்டைகளைப்பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது. ‘அவன் தேனாம்பேட்டை சிக்னலைக் கடந்து...’ அல்லது ‘மெரீனாவில் கண்ணகி சிலையருகே காத்திருந்தான்’ ‘மவுண்ட் ரோட்டில் ஜெமினி மேம்பாலத்துக்கு அருகே அவன் அலுவலகம் இருந்தது’ அல்லது ‘எலியட்ஸ் பீச்சின் மணலில் இருவரும் நடந்தார்கள்’ அல்லது ‘தம்புச் செட்டி தெருவில் உள்ள அவன் அலுவலகத்துக்குப் போனபோது...’ அல்லது ‘ஹிக்கின் பாதம்ஸின் அருகே காரை நிறுத்தினான்’ ‘கொத்தவால் சாவடிக்கு இடது பக்கமாக பைக்கை வளைத்துத் திருப்பினான்’ - இவை போதாதா சென்னையைப் பற்றி சும்மா போகிற போக்கில் தெரிந்து கொள்வதற்கு? (சென்னை கொத்தவால் சாவடி மார்க்கெட்டை கோயம்பேட்டுக்கு மாற்றின விஷயத்தை மக்களுக்கு அறிவிக்கும் விதமாக “கொத்தால் சாவடி லேடி நீ கோயம்பேடு வாடீ..” என்ற பொது அறிவுப்பாடலை கேட்டிருக்கிறீர்களா?).

மேலும் ராஜேந்திரகுமார், புஷ்பா தங்கதுரை, சாண்டில்யன் கதைகளின் மூலம் கொஞ்சமாய் ‘அந்த’ அறிவு வளர்ந்ததையும், பட்டுக்கோட்டை பிரபாகரின் ஹீரோயின் சுசீலாவின் பனியன் வாசகங்கள் (I like Tennis, because they play with two balls) மூலம் டென்னிஸ்-ஸில் இரண்டு பந்துகளை வைத்து விளையாடுவார்கள் என்கிற மகா அறிவு கிடைத்ததையும் சொல்லியாக வேண்டும்.

வணிக எழுத்துக்களில் மட்டும்தான் என்றில்லை. இன்றைக்கும் ஆதவன் எழுத்துக்களைப் படித்தால் ஒரு அலுவலகத்தின் இயக்கம், அன்றைய ஹாலிவுட் ஹீரோக்கள், ஹீரோயினிகள் (ஆட்ரே ஹெப்பர்ன்), டெல்லியின் இடங்கள் என்று எத்தனையோ விஷயங்கள் தெரிந்துகொள்ள முடிகிறது. எவ்வகை எழுத்தாளராக இருந்தாலும் அவர்கள் கதையினூடாக லேசாகத் தெளித்துவிடும் விவரங்கள் இது மாதிரி நிறைய இருக்கும்தான்.

இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் நான் என்ன சொல்ல வந்தேன் என்று புரிவதற்கு இத்தனை போதும் என்று நினைக்கிறேன். படிப்பது என்பது நிச்சயம் அறிவை வளர்க்க உதவும் செயல். நிறைய ஆங்கில புத்தகங்களாகப் படித்துத் தள்ளியிருந்தால் இதைவிட மேம்பட்ட விஷயங்கள், விவரங்கள் எத்தனையோ கிடைத்திருக்கலாம்தான். நான் அதிகம் படித்தது தமிழ் புத்தகங்கள்தான். எனக்கு இப்போதிருக்கிற அறிவின் ஒரு பகுதி நிச்சயம் சின்ன வயசில் படித்த தமிழ் கதைகள், நாவல்களால் வந்ததுதான் என்று நிச்சயம் சொல்லமுடியும். நீங்களும் கூட இதை உணர்ந்திருப்பீர்கள். இல்லையா?

கிழித்த கதை


ஷெல்ஃப்பில் எதையோ தேடிக்கொண்டிருந்தபோது ஒரு பழைய கிழிந்த லெதர் பை ஒன்றில் ஒரு கத்தையாக கொஞ்சம் சிறுகதைகள் கிடைத்தன. பதினைந்து வருடங்களுக்கு முன் குமுதம், விகடன், சாவி இதழ்களிலிருந்து கிழித்துத் சேர்த்துவைத்த சிறுகதைகள். கொத்துக் கொத்தாக ஸ்டேப்ளர் செய்யப்பட்டு ‘பைண்ட் செய்து வைக்கவேண்டும்’ என்கிற எண்ணம் வருடக்கணக்கில் புறக்கணிக்கப்பட்டு, தாள்கள் பழுப்பேறிச் சிதைந்து, திறந்ததும் குப்பென்று மூச்சுத் திணறவைக்கும் நெடியுடன் கிடந்தன.

குமுதத்திலும், விகடனிலும் சிறுகதைகள் அதிக அளவில் வெளியிடப்பட்டுக் கொண்டிருந்த பொற்காலம் அது. சுஜாதா, பாலகுமாரன், சுபா முதற்கொண்டு பிரபல எழுத்தாளர்கள் அனைவரும் மானாவாரியாக எழுதிக்கொண்டிருந்த நேரம். பொதுவாகவே சிறுகதைகள், தொடர்கதைகள் படிக்கிற ஆர்வத்துடன் ஒரு கூட்டமாக நாங்கள் (நான், சரசுராம், மீனாட்சி சுந்தரம், ஷாராஜ், கனகராஜன்) அலைந்துகொண்டிருந்தோம். கதைகளைப் படிப்பதும், படித்தபிறகு அவைகளைப் பற்றியும், கதாசிரியர்களைப் பற்றியும் பெருமளவில் விவாதித்துத் திரிந்த நாட்கள் ரம்மியமானவை.

சுமார் அறுபது கதைகள். சிறந்த சிறுகதைகள் என்று கிழித்து வைத்துக் கொண்டதா என்று கேட்டால் தெளிவாக நினைவில்லை. நல்லதாய் ஒரு சிறுகதையை எப்படி எழுதுவது என்கிற தேடலில் இந்த மாதிரி நிறைய கிழித்து வைக்கிற பழக்கம் எங்கள் எல்லோருக்கும் இருந்தது. இதில் சிறுகதை, குறுந்தொடர், நாவல் எல்லாம் அடங்கும். அரஸ்-ஸின் அட்டகாச ஓவியங்களுக்காகவே சுஜாதாவின் என் இனிய இயந்திராவையும், மீண்டும் ஜீனோவையும், அப்புறம் கோவி மணிசேகரன் நாவல் ஒன்றையும் கிழித்துச் சேர்த்திருந்தேன். கமலஹாசன் ஸ்டில்லுகளுக்காக விக்ரம் தொடர். இது மாதிரி நிறைய. என்னிடமிருக்கிற இந்த கதைக் கொத்தை கிழித்துத் தொகுத்தவர் சரசுராம். எப்படியோ கைமாறி என்னிடத்தில் வந்து கிடக்கிறது.

இந்த சேகர சாகரத்தில் என்னதான் இருக்கிறதென்று மூச்சை இறுக்குகிற நெடியை பொறுத்துக் கொண்டு திறந்து பார்த்தேன். பெரும்பாலும் சிறுகதைகள்தான் இருந்தன. “என் பெயர் அருண்குமார்” என்ற சாருப்ப்ரபா சுந்தரின் (நான் விரும்பிப் படித்த எழுத்தாளர் இவர்) தொடர்கதை. பாலகுமாரன், மாலனின் ஒரு சில கதைகள். அப்புறம் ராஜேஷ்குமார், சுபா, சுப்ரபாரதிமணியன், தனுஷ்கோடி ராமசாமி, சு. சமுத்திரம், பிரதிபா ராஜகோபாலன், அனுராதா ரமணன், பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகிய எல்லோரும் அடக்கம்.

நாகா என்றொரு எழுத்தாளரின் சில கதைகள். கே.சித்ராபொன்னி என்பவரின் கதைகள் நிறைய இருந்தன. (இப்போது எழுதுகிறாரா?) பா.ராகவனின் கதை ஒன்று. அதுதவிர பெரும்பாலான கதைகள் அதிகம் பிரபலமாகாத, பெயர் கேள்விப்படாத எழுத்தாளர்களால் எழுதப்பட்டிருந்தது. தமிழிணி, இள.அழகிரி, ஜெரா, தார்க்‌ஷியா இப்படியாக. பவதாரிணி என்பவர் எழுதிய ரூ.5000 பரிசு பெற்ற கதை ஒன்றும் இருந்தது.

வித்யா சுப்ரமணியம், எஸ்.பி. ஹோசிமின், சங்கர்பாபு, திருவாரூர் பாபு போன்ற அடிக்கடி கண்ணில் படுகிற எழுத்தாளர்களும் இந்தக் கலெக்‌ஷனில் ஒளிந்திருந்தார்கள். இதில் பரசுராம் பிஸ்வாஸ் என்றொரு எழுத்தாளரும் இருக்கிறார். இவர் குமுதத்தில் விகடனில் ‘புதிய ஆத்திச்சூடி கதைகள்’ என்று ஒரு தொடர் எழுதிக்கொண்டிருந்தார். குமுதத்தில் விகடனில் பணிபுரிகிற யாரோ ஒருவர்தான் (அல்லது பலர்) இந்த புனைபெயரில் எழுதிக்கொண்டிருந்தார்(கள்) என்றொரு அரசல் புரசல் இருந்தது. யாராக இருந்தாலும் அற்புதமாய் எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர் இவர்.

ஜெ, அரஸ், ம.செ, மாருதி, ராமு, கரோ போன்ற ஓவியர்கள் இந்தக் கதைகளுக்கு படம் வரைந்திருந்தார்கள். மருது, ஜி.கே.மூர்த்தி, ஸ்யாம் கூட இருந்தார்கள். அட்டகாசமாக வரைந்துகொண்டிருந்த அரஸ்-ஸூக்கு ஒரு கட்டத்தில் என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. திடீரென்று கானா மூனாவென்று வரைந்து தள்ள ஆரம்பித்தார். இந்த இடைவெளியில் கச்சிதமாக உள்ளே நுழைந்தவரான கரோவும் (கிட்டத்தட்ட அரஸ் சாயலிலேயே) சளைக்காமல் எண்ணற்ற கதைகளுக்கு அருமையாய் படம் வரைந்து தள்ளிக் கொண்டிருந்தார். இன்னும் சில வருடங்கள் வைத்திருந்தால் உடைந்து உதிர்ந்துவிடும் என்பதுபோல் வெடவெடவென்றிருக்கிற இந்த சாணிப் பேப்பர்களில் இந்த ஓவியர்களின் பழைய ஓவியங்களை மறுபடி பார்க்கக் கிடைப்பது அழகான விஷயம்.

ஆதவனின் ’புறாக்கள் பறந்து கொண்டிருக்கும்’ என்கிற கதை இரண்டு பாகங்களாய் இந்தத் தொகுப்பில் இருக்கிறது. ஆதவனின் சிறுகதைகள் அனைத்தையும் திரட்டி “ஆதவன் சிறுகதைகள்’ என்கிற புத்தகமாக கிழக்கு பதிப்பகம் வெளியிட்டபோது இந்தக் கதையும் இருக்கிறதா என்று பா.ராகவனிடம் ஒருமுறை கேட்டது நினைவுக்கு வந்தது. அதிகபட்சமாக எல்லாக் கதைகளையும் முடிந்தவரை திரட்டிப் போட்டுவிட்டதாக அவர் சொன்னார். அந்த தொகுப்பிலிருக்கும் “புறா” என்கிற கதைதான் இது என்று ரொம்ப நாளாய் நினைத்திருந்தேன். ஆனால் இப்போது எடுத்துப்பார்த்தபோது அதுவும் இதுவும் வேறு என்பது தெரிந்தது.

வியாபார மயமாகிப் போன பிரபல பத்திரிக்கைகளில் சிறுகதைகள் வெளியிடுவது அரிதாகிப் போன இந்தக் காலத்தில், நைந்து போன இந்தப் பேப்பர் கற்றையை எடுத்துப் பார்க்கும்போது தும்மல் கலந்த பெருமூச்சொன்று வருகிறது. முகத்தில் கர்ச்சீப் கட்டிக்கொண்டாவது இதில் உள்ள கதைகளை மறுபடி பொறுமையாய் உட்கார்ந்து முழுதாய் படித்துப் பார்க்கவேண்டும்.

பையனும் டார்வினும் பின்னே ஞானும்


சென்ற வெள்ளி - சனியில் பன்றிக் காய்ச்சல் எச்சரிக்கைகளையும் மீறி என் பையன் படிக்கும் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. அவன் படிக்கிற ’நாலாப்பு’ சார்பாக கையில் ஒரு ரிமோட் கண்ட்ரோல் எஸ்கவேட்டர் கொடுத்து ஒரு அறையில் நிற்க வைத்துவிட்டார்கள். கண்காட்சிக்கு வருகை புரிபவர்கள் அவனிருக்கிற குறிப்பிட்ட பகுதிக்கு வந்ததும் "This is called excavator. This is used for digging the trenches, holes... " என்று டீச்சர் சொல்லிக்கொடுத்த ப்ளா ப்ளா-க்களை மள மளவென ஒப்பிக்க வேண்டும். (நானே நான்கு தடவை அவனருகில் போய் நின்று “can you please explain this?" என்று கேட்க சின்ன தயக்கச் சிரிப்புடன் சளைக்காமல் விளக்கினான்)

சரி ஸயின்ஸ் எக்ஸ்போவில் அப்படி என்னதான் இருக்கிறதென்று பார்க்கலாமே என்று போனவனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. சும்மா சொல்லக் கூடாது. டீச்சர்களும், மாணவ மாணவிகளும், பள்ளி நிர்வாகமும் ஒன்று சேர்ந்து அற்புதமாகக் கலக்கிவிட்டார்கள். க்ரவுண்ட் ஃப்ளோரில் சிவப்புக் கம்பளம் விரித்து எல்.சி.டி. டிவியில் நிகழ்ச்சிகளின் வீடியோ விரிய, ஸ்பீக்கரில் இசை முழுங்குகிறது. இதை வந்து பாருங்கள் அதை வந்து பாருங்கள் என்று மாடிப் படிகள் முழுக்க மாணவர்கள் தயாரித்து ஒட்டிய விளம்பர நோட்டீஸ்கள். அலங்கார வளைவுகள். கலை நயம். ஜிகினா.

மெட்ரோ ரயில் சிஸ்டம், ஹைட்ரோ பவர் சிஸ்டம், டெலி கம்யூனிகேஷன் நெட்வொர்க், ரோபோட்டிக்ஸ், ஓரிகமி, டேன்கிராம்ஸ், குளோபல் வார்மிங் என்று ஒரு சப்ஜெக்டையும் விட்டு வைக்காமல் பள்ளிக் கட்டிடத்தின் மூன்று தளங்களிலும் கலக்கலான செட்டப்புகள். முக்கால்வாசி சாதனங்களை தெர்மோகோல், ஃபெவிகால், வாட்டர்கலர் கொண்டே தயாரித்து விட்டார்கள். சின்னச் சின்ன பொடிசுகள் லேப்டாப், ப்ரொஜக்டர்கள் எல்லாம் வைத்துக் கொண்டு விண்டோஸ் மூவி மேக்கரில் தயாரித்த வீடியோ படங்களை இயக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தபோது ’ஆச்சரியத்தால் கண்கள் விரிந்தன’ என்று அடிக்கடி இந்த எழுத்தாளர்கள் எல்லாம் எழுதுகிறார்களே அது என்ன என்று புரிந்தது.

ஒவ்வொரு பிரிவிலும் நிற்க வைக்கப்பட்டிருந்த குழந்தைகள் நாம் உள்ளே நுழைந்ததும் போட்டி போட்டுக் கொண்டு “அங்கிள்! (அல்லது ஆண்ட்டி) can I explain this?" என்று கேட்டுவிட்டு ஜெட் வேகத்தில் ஆங்கிலத்தில் குறைந்தது ஐம்பது விநாடிகள் பட்டையைக் கிளப்பிவிட்டு கடைசியில் “தேங்ங்ங்ங்க்க்க்க்க்யூ” என்று ராகம் பாடி முடித்தன. மனப்பாடம் செய்து கொண்டு ஒப்பிக்கிறதுகள் என்றாலும் ஒவ்வொரு டேபிளிலும் பொறுமையாய் அந்த மழலைக் குரல்களை ஓரிரு நிமிடங்கள் கேட்டுக் கொண்டிருப்பது மிகப் பெரிய சுகம். அநியாயத்துக்கு இத்தனை பேர் ’படிப்ஸ்’ஆக இருக்கிறார்களே என்று ஆச்சரியமாக இருந்தது. அதுவும் க்ளோபல் வார்மிங் பற்றி விளக்கின பையனிடம் நான் ஏதோ சந்தேகம் கேட்க. “இட் இஸ் தேர் இன் த இண்டெர்நெட் அங்கிள். யு கேன் டவுன்லோட் இட் ஃப்ரம் தேர்.” என்று முத்தாய்ப்பு வைத்தான். சொல்லி முடித்தபிறகு அவர்கள் நீட்டுகிற Feedback நோட்டுப் புத்தகத்தில் உங்கள் பெயரெழுதி உங்கள் கருத்தை அல்லது பாராட்டை எழுதிக் கொடுத்தீர்களானால் குழந்தைகள் முகத்தில் பொங்குகிற சந்தோஷம் இருக்கிறதே. அப்பப்பா! (சொக்கன் கவனிக்க). நான் நீட்டப்பட்ட நோட்டுகளில் எல்லாம் “excellent presentation" என்று தாராளமாக எழுதிக் கொடுத்தேன். (ஆனால் பாராட்டி கை கொடுத்தால் மட்டும் பன்றிக் காய்ச்சல் பயத்துடன் கையை பின்னுக்கு இழுத்துக் கொள்கிறார்கள். அப்புறம் என்னை நானே திட்டிக்கொண்டு அதை தவிர்க்க ஆரம்பித்தேன்.)

ஆறாங்கிளாஸ் படிக்கிற மூன்று சிறுமிகள் அவர்களின் கிளாஸ்மேட்டுகளான சில வாண்டுப் பையன்களைக் காட்டி “அங்கிள்! கன் வி எக்ஸ்ப்ளெய்ன் அபெளட் தெம்” என்று குசும்புச் சிரிப்புடன் கேட்க, நானும் என்னவென்று புரியாமல் தலையாட்ட, “தெ ஆர் ஆல் மங்கீஸ். தெ ஹவ் எஸ்கேப்ப்டு ஃப்ரம் வண்டலூர் ஜூ. தெ நார்மலி ஈட் பனானாஸ்” என்று கலாய்த்து வெடிச்சிரிப்பு சிரித்தார்கள்.

இதைக் கேட்டதும் ஒரு தடவை என் பையனுக்கும் எனக்கும் இரவு தூக்கம் வருவதற்கு முந்தைய பொழுதில் நடந்த சம்பாஷணை ஞாபகத்திற்கு வந்தது.

நான்: குரங்கிலிருந்து மனுஷன் வந்தான்னு யார் கண்டுபுடிச்சா தெரியுமா?

பையன்: ஆங்... தெரியும். லெஸன்ல இருக்கு. அது வந்து...

நான்: சார்லஸ் டார்வின்

பையன்: ஆ! ஆமா.. டார்வின் தியரி..

நான்: கரெக்ட்டு.. மில்லியன் மில்லியன் வருஷத்துக்கு முன்னால குரங்கா இருந்து அதிலேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா மனுஷன் வந்தான். அப்போ அவனுக்கு உடம்பு பூரா நிறைய முடி இருந்துச்சு. வால் இருந்துச்சு. கை காலெல்லாம் பெருசு பெருசா இருக்கும். மரத்துக்கு மரம் தாவிகிட்டு இருந்தான். அப்றம் அதெல்லாம் போய் இப்போ பாத்தியா இப்ப என்னை மாதிரி ஆயிட்டான்.

பையன்: (மெளனமாய் சில விநாடிகள் யோசித்துவிட்டு) “அப்ப இதுக்கு முன்னாடி நீ கொரங்கா இருந்தியா?”.

அடுத்த ஜெனரேஷன் பசங்களிடம் கொஞ்சம் அல்ல நிறையவே ஜாக்கிரதையாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.