கதை படிக்கிற குரல்

ஒரு லோக்கல் வாராந்தர நியூஸ் பேப்பரில் இந்த சின்ன வரி விளம்பரத்தைக் கண்டேன்.

"Wanted a lady to read novels in Tamil to an elderly gentleman. Clarity and good voice essential. Hours required 10 am to 11.30 or 3.30 to 5.00, 6 times a week. Kindly ring ......"

லேசான ஆச்சரியமும் நிறைய கேள்விகளும் எழுந்தன.

இதை ஒரு ஓய்வு பெற்ற கனவானின் பொழுது போக்கு அம்சமாய் மட்டுமே எடுத்துக் கொள்ளமுடியுமா என்று தெரியவில்லை. தமிழில் கதை, நாவல் படிக்க விரும்புகிறார். அதுவும் வாரத்துக்கு 6 நாட்கள், குறைந்த பட்சம் ஒன்றரை மணி நேரம். ஓய்வு நாட்களில் தன்னை எந்த வகையிலாவது பிஸியாக வைத்துக் கொள்ள அந்த முதியவரே செய்து கொள்கிற ஏற்பாடா? இல்லை மகன், மகள், மனைவி என்று வேறு யாராவது அவருக்காக எடுத்துக் கொண்ட முயற்சியா? அவருக்குத் தமிழ் தெரியாதா? அல்லது தெரிந்தும் படிக்க சோம்பேறித்தனமா? அல்லது வேறு காரணங்களா? ஏன் அவருக்கு ஆண் குரல் வேண்டாம்? எந்த மாதிரி தமிழ் நாவல்கள்? ராஜேஷ்குமாரா, பட்டுக்கோட்டை பிரபாகரா, சுஜாதாவா? அல்லது ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போல இலக்கிய நாவல்களா? சாண்டில்யன், கல்கி? எதுவானாலும் படிப்பதோ படிக்கச்சொல்லிக் கேட்பதோ நல்ல விஷயம்தான்.

ஈஸிச் சேரில் கண்ணை மூடிச் சாய்ந்து கொண்டு ஒரு பெண்மணி பக்கத்தில் உட்கார்ந்து கணீர் என்ற குரலில் கதை படிக்க, அந்த கதா பாத்திரங்களை உள்வாங்கிக் கொண்டு அவர் ஒரு புது உலகிற்கு சஞ்சரிக்கிற காட்சி ஓடுகிறது.

“அந்த பாராவை மறுபடி படி(ங்க)”
“சுத்த இழுவையா இருக்கே. இந்த நாவல் போதும். அடுத்ததைப் படிக்கலாம்”.
“மணி பதினொன்னரை ஆயிருச்சா? சரி ’தொடரும்’ போட்ரலாம். நாளைக்கு வாங்க.”
“என்ன இன்னிக்கு குரல் கரகரங்குது? த்ரோட் இன்ஃபெக்‌ஷனா?”

என்னுடைய ரிடையர்மென்ட் காலத்தை எப்படி பிஸியாக வைத்துக் கொள்ளப் போகிறேன் என்கிற யோசிப்பை கிளறிவிட்டது இது.

காஞ்சிவரம்



தேன்மாவின் கொம்பத்து, மணிச்சித்ரதாழ், காலாபானி போன்ற அருமையான படங்களைத் தந்த பிரியதர்ஷனிடமிருந்து உலகத் தரத்திற்கு அருகாமையில் மற்றுமொரு படைப்பு காஞ்சிவரம். டொரன்டோ போன்ற உலகத் திரைப்படவிழாக்களில் அமர்க்களமில்லாமல் திரையிடப்பட்டுக் கொண்டாடப்பட்ட செய்திகளும், ”பிரியதர்ஷன் செதுக்கியிருக்கிறார்” என்ற வாய்வழிப் பரிந்துரைகளும் இந்தப் படத்தைக் காணும் ஆர்வத்தைத் தூண்டியது.

இந்தப் படத்திற்காக பிரியதர்ஷன் எடுத்துக் கொண்ட காலகட்டம் (1948 ) மற்றும் களம் நிச்சயம் வித்தியாசமானதுதான். பீரியட் பட முயற்சிகளில் தன் திறமையை காலாபானியில் ஏற்கனவே பிரம்பாண்டமாய் நிலைநாட்டிவிட்டதால் அதோடு ஒப்பிடும்போது இது ரொம்ப எளிமையாகவே உணரவைக்கிறது என்றாலும் எளிமையாய்ப் பண்ணுவதுதான் எப்போதும் கஷ்டமான விஷயம் என்பதையும் மறுப்பதற்கில்லை. அந்த வகையில் பிரியதர்ஷன் ஜெயித்திருக்கிறார்.

உலகத்தரத்தை நோக்கிய இந்திய சினிமாவின் பயணத்தில் பிரியதர்ஷனும் இணைந்துகொண்டிருக்கிறார். அதோடு சாபு சிரில், திரு போன்ற திரைக் கலைஞர்களும் தம்மாலான பங்களிப்பை இந்தப் படத்தின் மூலம் அருமையாய் அளித்திருக்கிறார்கள். பிரகாஷ் ராஜ் போன்ற நல்ல நடிகர்களைத் தேர்வு செய்ததும் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய பலம்தான்.

இந்தப் படத்தில் பிரியதர்ஷன் எடுத்துக் கொண்ட கதையின் “இழை”, பெரிய எட்டாத ஆசைகளை மனதில் சேமித்து வைத்துக் கொண்டு அதன் மூலம் நலிந்து போன கனவுகளை எப்படியாவது பின்ன முயற்சிக்கும் சாதாரண மனிதனைப் பற்றிச் சொல்கிறது. இதையொட்டி நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிற திரைக்கதை.

சிறையிலிருந்து கைவிலங்குடன் எதற்காகவோ பரோலில் வெளிவரும் பிரகாஷ்ராஜை, கொட்டும் மழையில் சொந்த ஊருக்கு காவலுடன் ஒரு பஸ்ஸில் அழைத்துச் செல்வதிலிருந்து துவங்குகிறது படம். இடையிடையே பஸ் அடிக்கடி ஏதாவது இடர்ப்பாடுகளில் சிக்கி நிற்க அந்த இடைவெளிகளினூடே ஃப்ளாஷ்பேக் பயணம் போகிறார் பிரகாஷ்ராஜ்.

ஒரு அவார்டு வாங்கின வங்காளப் படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வை ஆரம்பக் காட்சிகள் உணர வைக்கிறது. அப்புறம் இரண்டு மணி நேரம் போவதே தெரியவில்லை. காரணம் இந்தத் தலைமுறை இதுவரை பார்த்திராத அந்தக்கால வாழ்க்கைக் காட்சிகள். படம் பெரும்பாலும் மங்கிய வெளிச்சத்தில் நகர்கிறது. லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் நடிகர்களின் முகங்கள் பொன்னிறமாய் மின்னுகின்றன. கதாபாத்திரங்கள் பேசிக் கொள்ளும் ரஷ்யன், ஜெர்மன் மகாயுத்த விவரங்கள், பிரகாஷ்ராஜின் சைக்கிள் விளக்கு, கிராமத்துக்கு முதல் முதலாய் வரும் மோட்டார் வண்டியை ஒரு திருவிழா போலப் பார்க்கும் கூட்டம். பெரிய பொட்டு வைத்த ஸ்மிதா பட்டேல் சாயல் கொண்ட பெண்கள், கூரைவீடுகள், வெள்ளைக் காரனுக்கு ஜமீந்தாரின் (அல்லது அதிகாரியின்) உதவியாளனின் ஆங்கில மொழிபெயர்ப்பு, நான்கு பெண் குழந்தைகள் தோளில் கை போட்டுக் கொண்டு சேர்ந்து ஆடும் ஊஞ்சல், ஸ்லேட் எடுத்துக்கொண்டு கதை பேசியபடி பள்ளிக்குப் போகும் குழந்தைகள், யானையின் கால்களுக்கு இடையில் ஓடும் குழந்தைகள், பட்டாளத்துக்குப் போகும் பையன், காந்தி இறந்ததனால் ரேடியோவில் ஒலிபரப்பாகும் சோக இசை, தொழிலாளிகளை எப்போதும் சுரண்டிப் பிழைக்கிற பகட்டான முதலாளி, அடுப்பு ஊதி சமைத்துக் களைக்கிற, கணவன்பின் நடக்கிற அப்பாவி மனைவிகள், ஒரே ஒரு வாளித்தண்ணீரை ஒரு சீன் முழுக்க இறைகிற பெண் (தண்ணீர் அவ்வளவு ஆழத்தில்), மழைச் சகதியில் உருண்டு ஓடுகிற பஸ்ஸின் ஸ்டெப்னி டயர், நெசவாளர்கள் நடத்தும் கம்யூனிஸம் பூசிய முதலாளித்துவ எதிப்பு நாடகம் என சுவாரஸ்யமான விஷூவல் ட்ரீட்மெண்ட்கள் இறுதிவரை அழகாக எளிதாக படத்தை நகர்த்திவிடுகின்றன.

எளிய உழைப்பாளிகளின் வாழ்க்கையின் வலியை அழகாக நறுக்கென்று சொல்ல முயற்சித்திருக்கிறார் பிரியதர்ஷன். ஆனால் இது அவரின் “பெஞ்ச் மார்க்” படமா என்று யோசித்தால் இல்லையென்றுதான் தோன்றுகிறது. படத்தின் “prelude"-ல் கோடிகாட்டிச் சொல்லப்படும் விஷயங்களும், பிரகாஷ் ராஜின் நடவடிக்கைகளும் முடிவு இப்படித்தான் இருக்கவேண்டுமென்று ஊகிக்க வைத்துவிட்டது. மேலும் பிரகாஷ்ராஜுக்கு இது முக்கியமான படமாகக் கொண்டாலும், அவரின் உச்சபட்ச நடிப்புத்திறனை வெளிக் கொணர்ந்த படமென்றும் சொல்லிவிட முடியாது. இதைவிடச் சிறப்பாக எத்தனையோ செய்திருக்கிறார். எம்.ஜி. ஸ்ரீகுமாரின் இசையில் மலையாளச் சாயலுடனான ஒரு பாடலும், பின்னணி இசையும் மோசமில்லையென்று சொல்லலாம். ஸ்ரேயா ரெட்டி, ஷம்மு போன்றவர்களின் மிகையில்லாத இயல்பான நடிப்பும் படத்தின் காட்சிகளுக்கு ஒரு புதிய வண்ணத்தைச் சேர்க்கிறது.

மழையினூடான பஸ் பயணத்தில் காவலரின் தொப்பியில் பேட்ஜ் அறுந்துவிட அது இல்லாமல் அதிகாரியின் முன்னால் போய் நின்றால் வேலை போய்விடும் அபாயம். பிரகாஷ் ராஜின் ஃப்ளாஷ்பேக் பகுதிகள் ஒவ்வொன்றாய் நிறைவுபெறும் இடைவெளிகளில் காவலர் பேட்ஜை தைக்கிற முயற்சிகளை மேற்கொள்கிறார். இறுதியில் அவரது பிரயாசை தோல்வியில் முடிகிறது. பிரதான படத்தை விட்டு விலகியிருந்தாலும் ஒரு சிறுகதைக்கான அல்லது குறும்படத்துக்கான விஷயமாக அநாயாசமாக வந்துபோகிறது இது.

பார்த்து முடித்தபிறகு மனசுக்குள் நான் எதிர்பார்த்திருந்த ஏதோ ஒரு பெரிய “இம்பேக்ட்” இதில் மிஸ்ஸிங் போலத்தோன்றியது. (ஒரு வேளை இளையராஜாவாக இருக்குமோ?) முக்கியமாக சோகமான காட்சிகள் ஒரு பெரிய நெகிழ்வை ஏற்படுத்தத் தவறியது போலொரு உணர்வு.

உலக சினிமாக்களின் தரத்துக்கு இணையாக இப்போதைக்கு காஞ்சிவரத்தை உயர்த்திப் பேசமுடியாது என்றாலும் நம் ஆட்களின் அபார சிந்தனைகளும் இது போன்ற முயற்சிகளும், நம் இந்திய சினிமா ரசிகர்களை அபத்தமான குத்துப் பாட்டுகளிலிருந்தும், ஹீரோயிச பில்டப்களிலிருந்தும், காதல் காட்சிகளிலிருந்தும் மீட்டு, ரசனையின் தரத்தை நிச்சயம் உயர்த்தும்.

ஒரு நாள் நம் சினிமாவும் உலக சினிமா ஆகும் என்கிற நம்பிக்கையை மீண்டும் அளித்த பிரியதர்ஷனுக்கு என் பாராட்டுக்கள்.

இந்தப்படத்தைப் பார்த்து முடித்ததும் எப்போதோ படித்த கவிதை ஒன்று ஞாபகத்திலிருந்து குதித்தது. படத்திற்கும் இதற்கும் ஏதோ சம்பந்தமிருப்பதுபோலக் கூடத் தோன்றியது. எழுதியவர் பெயர் “மார்க்ஸ்” (Marx) என்று குறித்து வைத்திருக்கிறேன்.

”பட்டுப்பூச்சி பட்டிழை நூற்கிறது.
பட்டிழையை நெய்வது
அதன் இயல்பாகிவிட்டது.
நூற்காமல் அதனால் இருக்க முடியாது.
வாழ முடியாது.
நூற்பதனால் அதற்கு
சாவு விதிக்கப் பட்டிருக்கிறது.
வேண்டாம் என்றால் கேட்காது.
நூற்பதே வாழ்வு.
சாவு ஒரு பொருட்டல்ல என்பது
அதன் பதிலாக இருக்கக் கூடும்.
பட்டு அழகானது!! அற்புதமானது!!
அதற்காக உயிரைக் கொடுக்கலாம்.
தப்பில்லை.”

குழலினிது

ஆடியோ ஸிஸ்டத்தில் கொஞ்சம் புல்லாங்குழலிசையை வழியவிட்ட பிறகே இந்தப் பதிவை எழுதுகிற மூடு வந்தது. அதுவும் புல்லாங்குழலிசை பற்றிய அல்லது அதற்கும் எனக்கும் உள்ள சொற்பமான தொடர்பு பற்றிய விஷயம் என்பதால் அது தேவைப்படுகிறது. எங்கேயோ காட்டில் விளைகிற மூங்கில் துண்டொன்றில் ஏழோ எட்டோ துளை போட்டு அதற்குள் கொஞ்சம் மூச்சுக் காற்றை அனுப்பி விரல்களால் வருடினால் மனதையும் உயிரையும் சுருட்டிப் போட்டுவிடுகிற மாயத்தை அது நிகழ்த்தி விடுகிறதெப்படி என்பது எனக்கு இன்னும் யோசித்துத் தீராத ஆச்சரியமாயிருக்கிறது.

சின்ன வயசிலிருந்தே இந்தக் காற்றுக்கருவி மீது அமோக மோகம். ஆல் இண்டியா ரேடியோவில் பாடல்கள் கேட்டு வளர்ந்த பருவத்திலிருந்தே பாடல்களை விட “கேப் ம்யூஸிக்” (Gap Music) என்று நானாகவே பெயர் வைத்துக் கொண்ட சரணங்களுக்கு நடுவே வருகிற இசையை உற்றுக் கேட்பது பழக்கம். அதிலும் முக்கியமாய் ஏதாவது குழலிசைத் துண்டு வந்தால் இன்னும் உன்னிப்பாக. எம்.எஸ். விஸ்வநாதனின் பாடல்களிலிருந்து இந்தத் தேடல் தொடர்ந்து வந்தது. இதன் விளைவாக என்றாவது ஒருநாள் நானும் என் விருப்ப இசைக்கருவியான புல்லாங்குழலை கற்றுக் கொண்டே தீருவேன் என்றொரு ஆசையோ வைராக்கியமோ ஏதோ ஒன்று மனதில் கூடு கட்டியிருந்தது. எம்.எஸ்.வி-யிலிருந்து இளையராஜாவுக்குத் தாவி அப்புறம் திரைப்படப் பாடல்களும் வாழ்க்கையும் பிரிக்க இயலாத ஜோடிகளான பிறகு பு.குழலின்மேல் அதை இசைப்பவர்களின் மேல் தனி மரியாதை தொடர்ந்தது.

இளையராஜா புல்லாங்குழலை பாடல்களில் பொருத்தமான இடங்களில் மிக்ஸ் பண்ணுவதில் கைதேர்ந்தவர் என்பதற்குச் சாட்சியாக பல பாடல்களைச் சொல்லலாம். இவருடைய ஃப்ளுட்டிஸ்ட் அருண்மொழி என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அதிகாலை நிலவே, நானென்பது நீயல்லவோ, ஆதாமும் ஏவாளும் போன்ற பாடல்களை இளையராஜாவின் இசையில் பாடியவர். இவர் புல்லாங்குழல் விளையாடின திரைப்படப் பாடல்கள் ஏராளம். அதென்னமோ இளையராஜாவின் புல்லாங்குழல் கேட்கிறபோது எங்கேயோ ஒரு கிராமத்தின் தென்னந்தோப்புக்குள் ஸ்லோமோஷனில் ஓடிக்கொண்டிருப்பது மாதிரி ஒரு எஃபெக்ட்தான் எப்போதும் கிடைக்கிறது. அவர் ’போவோமா ஊர்கோலம், இந்தமான் எந்தன் சொந்தமான் ’ மாதிரியான கிராமப் பின்னணியில் அமைந்த படங்களுக்கே இந்தக் கருவியை பிற்காலத்தில் நிறைய உபயோகப்படுத்தினார் என்பதனாலோ என்னவோ.

ஹரிப்பிரசாத் செளராஸியாவின் குழலிசையை இளையராஜா “Nothing but wind" மூலம் நம் காதுகளில் ஒலிக்கவிட்ட போது சோறு தண்ணியில்லாமல் திரும்பத் திரும்ப அதையே கேட்டுக் கொண்டு கிடந்தேன். அவர் புல்லாங்குழலை இன்னும் எந்தெந்தப் பாடல்களில் எப்படியெல்லாம் உபயோகப்படுத்தினார் என்றெல்லாம் இந்த ஒரே ஒரு பாராவுக்குள் சொல்லமுடிகிற காரியமில்லை என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

ரஹ்மான் வந்த பிறகு இந்த புல்லாங்குழலிசையில் ஏதோ ஒரு மாற்றம் வந்து சேர்ந்துவிட்ட மாதிரி தெரிந்தது. அது இளையராஜாவினுடைது போலல்லாமல் வேறுமாதிரி இன்னும் கொஞ்சம் ஆழமாக, இன்னும் கொஞ்சம் உருக்கமாய் உயிரை நிரடியது. என்னவளே, மார்கழிப் பூவே, அஞ்சலி அஞ்சலி, பம்பாய் தீம் ம்யூசிக், வெள்ளி நிலவே, என் மேல் விழுந்த மழைத்துளியே, ஜாக்கி ஷ்ராஃப் ஊர்மிளாவைத் துரத்தும் ஹேராமா ஏ க்யாகுவா எல்லாவற்றிலும் ஏதோ கொஞ்சம் புதுசாய் இதுவரை கேட்காத ஒரு தவிப்பு துடிப்பு அழுத்தம் எல்லாம் சேர்ந்த கலவையாய் இருந்தது. எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை. அப்புறம் யாரோ சொன்னார்கள் நவீன் என்று ஒருத்தர்தான் ரஹ்மானின் புல்லாங்குழலார் என்று. மனதை லயிக்க வைக்கிற விதமாய் இப்படி அனுபவித்து வாசிக்கற ஆளைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம் என்று தேடியபோது விவரங்கள் சிக்கின. ஆசாமி கோலிவுட்டில் அநேகம் இசையமைப்பாளர்களால் தேடப் படுகிற படு பிஸியான ஃப்ளூட்டிஸ்டாம். ரஹ்மானுக்கு பாம்பே ட்ரீம்ஸ் வரை வாசித்திருக்கிறார். "Fluid" என்று ஒரு ஆல்பம் வெளியிட்டிருக்கிறார். இவர் சமீபத்தில் ஆனந்தத் தாண்டவம் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாருக்காக வாசித்த தீம் ம்யூசிக் கிறங்கடிக்கிறது. (காற்றலை சுழற்சியிலே என்ற பாடலின் இசை வடிவம்.) . நவீன் வாசித்ததனால் என்றில்லாமல் புல்லாங்குழலைப் பொறுத்தவரையில் ராஜாவைவிட ரஹ்மான்தான் என்னை அதிகம் உருக்கினதும் உலுக்கினதும். (ஆனால் நான் ஒரு தீவிர ராஜா ரசிகனும்கூட என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.)

எம்.எஸ்.வி, ராஜா, ரஹ்மான் பாடல்களில் புல்லாங்குழலின் பயன்பாடு பற்றி யாரவது எழுதினாலோ சொன்னாலோ (அல்லது வாசித்துக் காட்டினாலோ நான் கேட்கத் தயாராக இருக்கிறேன்.)

நான் வேலை செய்த ஒரு கம்பெனியின் மானேஜிங் டைரக்டர் கோவை பி.எஸ்.ஜி காலேஜின் இசைக்குழுவுக்குத் தலைமை வகித்தார் என்கிற வகையில் புல்லாங்குழல் நன்றாக வாசிப்பார். அவர் மேசையில் 3, 4 1/2 என்றெல்லாம் நம்பர் போட்டு நிறைய புல்லாங்குழல் வைத்திருப்பார். அலுவலகத்தில் என்றாவது ஒருநாள் திடீரென்று மின்சாரம் நின்று விட்டால் அப்புறம் கச்சேரிதான். அதாவது நான் அவரை வாசிக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருப்பேன். ”அஞ்சலி அஞ்சலி” அவருடைய ஃபேவரிட். அப்புறம் அவரது இசை நண்பர் பாலு ஒருநாள் அங்கே வர திடீரென ஆர்வம் வந்து அவரிடம் புல்லாங்குழல் கற்றுக்கொள்ளச் சேர்ந்துவிட்டேன். சேர்வதற்குமுன் என்னிடம் குழலைக் கொடுத்து ஊதச் சொல்லி சப்தம் வருகிறதா என்று பரிசோதித்தார். பிரமாதமாக வந்தது. வெஸ்டெர்ன் கற்றுக் கொள்ளத்தான் நான் சேர்ந்தது என்றாலும் ஒரிஜினல் கர்நாடக புல்லாங்குழலை (இதில் எட்டு துளை இருக்கும். வெஸ்டெர்னில் ஏழுதானாம்.) எனக்குக் கொடுத்து வாசிக்கச் சொன்னார். எட்டாவது துளைக்கு என் சுண்டுவிரல் எட்டாமல் போனதாலோ, காலை ஆறரைக்கு தி.நகரிலிருந்து கோடம்பாக்கம் வரை போக சோம்பேறித்தனப் பட்டதாலோ இரண்டே மாதங்களோடு என் இசைப் பயணத்தை முடித்துக் கொண்டேன். அப்புறம்தான் தெரிந்தது எனக்கு இருந்தது கற்றுக் கொள்கிற ஆசை மட்டுமே தவிர வைராக்கியம் அல்ல என்று. ஆக உலக இசை ரசிகர்கள் ஒரு பெரிய ஆபத்திலிருந்து தப்பித்துக் கொண்டார்கள்.

அப்போது வீட்டுக்கு வருகிற விருந்தாளிகள் பார்வையில் படுகிறமாதிரி அந்த கர்நாடக புல்லாங்குழலை வரவேற்பறையில் தொங்கவிட்டிருப்பேன். அப்புறம் அதைப் பார்க்கிறவர்கள் என்னை ஒரு பெரிய சங்கீத சிரோன்மணி என்கிற தோரணையில் பார்க்கத் தொடங்கியபோது எடுத்து உள்ளே வைத்துக் கொண்டேன். பின் எவ்வளவு நாள்தான் எனக்குத் தெரிந்த ஒரே ட்யூன் ஆன “mary had a little lamb" -ஐ மட்டுமே அவர்கள் கேட்கிறபோது வாசித்துக் காட்டிக்கொண்டிருக்க முடியும்?.

அவரிடம் கற்றுக் கொண்ட வெஸ்டெர்ன் நோட்ஸ் அறிவை வைத்துக் கொண்டு பின்னாளில் கீபோர்டில் ”மலரே மலரே உல்லாசம்” (பல்லவியை மட்டும்) வாசிக்க முடிந்தபோது யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் என்னை நானே வியந்து பாராட்டிக்கொண்டேன்.

மாலி, சஷாங், சவுராஸியா போன்ற அருமையான புல்லாங்குழல் கலைஞர்கள் பற்றி இங்கே பேசவேண்டுமானால் அவர்களைப் பற்றியும், அவர்களது இசையைப் பற்றியும் நான் நிறைய தெரிந்து வைத்திருக்க வேண்டியிருக்கிறதென்று தோன்றுவதால் விட்டுவிடுகிறேன்.

ராகம் தாளம் என்று இசையை பகுத்துணர்ந்து கேட்கத் தெரியாது. சாஸ்திரிய சங்கீதத்தின் அடிப்படைகள் புரியாது. ஸ்ருதி லயம், ஆரோகணம் அவரோகணம், அபஸ்வரம் இன்னபிற சங்கீத சங்கதிகள் பற்றிய ஞானமில்லை. ஆனால் இசை என்பது அநேக சமயங்களில் காதுகளுக்குள் இறங்கி வட்ட வட்டமாய் அலைகள் பரவுகிற ஒரு குளத்தின் மேற்பரப்பு மாதிரி மனசுக்குள் அலையெழுப்பும்போது உணர்ந்து ரசிக்கத் தெரிந்தால் போதாதா? கேட்கத் தெரியும். ரசிக்கத் தெரியும். சொல்லப்போனால் பீச்சில், ரயிலில் புல்லாங்குழல் விற்பவர்கள் அத்தனை பேரும் சொல்லிவைத்த மாதிரி வாசிக்கிற “பர்தேஸி பர்தேஸி ஜானா நஹி” என்கிற ஒரே ட்யூனைக்கூட இன்னும் ஆச்சரியமாய் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த வகையில் இந்த அளவிலான இசை ரசனையே எனக்குப் மிகப் பெரும் வாழ்வியல் திருப்தியைத் தருகின்றது. குழலைப் பொறுத்தவரையிலும் கூட அதுவேதான்.

உதாரணத்திற்கு கலோனியல் கசின் ஆல்பத்தின் கிருஷ்ணா நீ பேகனே -வின் நடுவில் வருமே ஒரு flute interlude!! அதை பன்னிரண்டு வருடமாய் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். அதேபோல் ரன் படத்தின் பனிக்காற்றே தீம், போறாளே பொன்னுத்தாயி ஓபனிங்..

வேண்டாம்! பெரிய லிஸ்ட் அது!

வர்ணமயமான வாழ்க்கை

என் எழுத்தாள நண்பர்கள் எழுதின புத்தகங்களை சும்மா எடுத்துப் புரட்டிக்கொண்டிருந்தபோது அதில் ஐந்தாறு புத்தகங்களின் அட்டையை நான் வடிவமைத்திருந்ததைப் பார்த்தேன். ரொம்ப மோசம் என்று சொல்லமுடியாமல் சுமார் ரகத்தில் இருந்தன அவை. கோவை ஞானியின் ’தமிழன் - வாழ்வும் வரலாறும்’ என்கிற சின்ன புத்தகத்திற்கான அட்டைப்படம்தான் முதல் முயற்சி. அதில் நான் வரைந்து கொடுத்த ஒரு ஓவியம் அட்டையாய் வந்தது.


ஃபோட்டோஷாப் என்கிற வஸ்து என் வாழ்வில் வந்ததற்கப்புறம் கிரியேட்டிவிட்டியை கையாள்கிற விஷயம் சுலபமாய்ப் போய்விட்டது. அதை நான் முதன் முதலில் உபயோகித்து உருவாக்கினது பாலைநிலவனின் “கடல்முகம்” கவிதைத் தொகுப்பின் முகப்பு. அதற்கப்புறம் சில பல அட்டைகள். ஒரு நல்ல கிராஃபிக் டிசைனராக நண்பர்கள் வட்டாரத்தில் அறியப்பட்டிருந்தேன் என்பது இந்த மாதிரி வடிவமைப்பு வாய்ப்புகளுக்கு ஆதாரமாய் இருந்தது.

சின்ன வயதில் கையில் கிடைத்த பேப்பரிலெல்லாம் எதையாவது கிறுக்கிக் கொண்டிருப்பேன். அப்பாவிடம் லோடு லோடாக திட்டுவாங்க அதுவே போதுமானதாக இருந்தது. ஒரு பதினைந்து வயதிற்கப்புறம் திடீரென பெண்களின் முகங்களை வரைவதின்பால் ஒரு நாட்டம் ஏற்பட்டது. பென்சில், கரி, பேனா, சாக்பீஸ் என்று எது கிடைத்தாலும் குறைந்தபட்சம் ஒரு பெண்ணின் கண்களையாவது வரைந்துவிடுவது என்பது ஒரு பழக்கமாகவே ஆகியிருந்தது. பொம்பளைப் படம் வரைவதைத் தவிர வேறு எதுவும் இவனுக்கு உருப்படியாகத் தெரியாது என்பது அப்பாவும் தன் தினசரி கண்டனக் கடமையை தவறாமல் செய்து கொண்டிருந்தார். நாங்கள் குடிபோகிற வீடுகளிலெல்லாம் சமையலறை சுவற்றில் ஒரு பெண்ணின் முகத்தை பென்சிலால் தீட்டி வைத்திருப்பேன். (அப்பா அதிகம் நுழையாத இடம் அது ஒன்றுதான் என்பதால்). இப்போதுகூட என் வீட்டு வரவேற்பறை ஹால் சுவற்றில் அதுபோல ஒன்றை நீங்கள் பார்க்கலாம். இப்போது பையன் “என்னை wall-ல scribble பண்ணக்கூடாதுன்னு சொல்லிட்டு நீ மட்டும் ஏன் பண்றே?” என்று திட்டுகிறான். ஆக இரண்டு தலைமுறைகளாக எதிர்ப்பு தொடர்கிறது.

நண்பர்கள் நடத்தின கீதம் என்கிற கையெழுத்துப் பிரதிகள் என் கிராஃபிக் டிசைன் திறமையை பட்டை தீட்டிய முதல் கல். வெள்ளைத்தாள்களில் கதைகளுக்கும் கவிதைகளுக்கும் ஓவியம் வரைந்து பள பளா பத்திரிக்கைகளிலிருந்து படங்கள் கத்தரித்து ஒட்டி, பார்டர் போட்டு லே-அவுட் எல்லாம் செய்து வெளியிட்ட காலத்திலிருந்து இந்த டிசைனிங் ஆர்வம் படிப்படியாக வளர்ந்து ஒரு நாள் இன்ஜினியரிங் துறையிலிருந்து என்னைக் கழற்றி விளம்பரக் கம்பெனியின் வாசலில் வீசிவிட்டது.

விளம்பரக் கம்பெனிகளுக்கு வருவதற்கு முன்னால், ஒரு எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனியில் மெக்கானிக்கல் இன்ஜினியராக (!) முதன் முதலாக கணினியில் நான் கற்றுக்கொண்டது ஆட்டோ கேட் (AutoCad) என்கிற மென்பொருள். அதில் பிள்ளையார் சுழிக்குப் பதில் முதன் முதலில் ஒரு பெண்ணின் முகத்தை வரைந்து முதலாளியிலிருந்து ஆஃபீஸ் பையன் வரை பாராட்டு வாங்கி காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டேன். ஆனால் அதையே செய்து கொண்டிருந்தால் சம்பளம் கிடைக்காதென்பது புரிந்து வேறு வழியில்லாமல் இன்ஜினியரிங் ட்ராயிங்கும் போட்டுத் தொலைக்க வேண்டியிருந்தது.

இந்த கிராஃபிக் டிசைன் மற்றும் மல்டிமீடியா என்கிற இந்த கிரியேட்டிவ் துறைக்குள் நான் எப்படி அடியெடுத்து வைத்தேன் என்று ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் ஓட்டிப் பார்த்தேன். நிறைய விஷயங்கள் அலையடித்தன. கோயமுத்தூரில் True illusions Graphics & Animations Private Limited என்ற பெரிய பெயர் கொண்ட ஒரு விளம்பர நிறுவனம்தான் முதன் முதலில் என்னை சுவீகரித்து இந்தத் திசையில் என் பயணத்திற்கு உதவியது எனலாம். “உங்களுக்கு கோரல்ட்ரா (CorelDraw) தெரியுமா?” என்று இன்டர்வ்யூவில் என்னைப் பார்த்து கேட்ட அந்த நிறுவன நிர்வாக மேலாளரிடம் “ஓ! நன்றாய்த் தெரியும்” என்று நான் அப்பட்டமாய் சொன்ன பொய்யினால்தான் இந்த திருப்பம் நிகழ்ந்தது. (இந்த ரகசியத்தை அப்புறம் அவரிடம் சொல்லிவிட்டேன்).

கிட்டத்தட்ட பதிமூன்று வருடங்களாக இந்தக் குதிரை ஓடிக்கொண்டிருக்கிறது. அல்லது ஓட்டிக்கொண்டிருக்கிறேன். WANTED என்று 5 செ.மீ x 2 காலத்திற்கு கட்டம் கட்டின தினத்தந்தி விளம்பரங்களிலிருந்து ஆரம்பித்து பின்னர் Brand Identity, Print Design, மல்டிமீடியா, இணையதள வடிவமைப்பு (web designing), eLearning, Deskop GUI என இந்த ஏரியாவின் அநேக இடங்களிலும் கால் பதித்தாயிற்று. அடுத்த கட்டத்துக்கான நகர்தலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

நேற்று http://www.thefwa.com என்ற வலைத்தளத்தை மறுபடி மேய்ந்துகொண்டிருந்தபோது எல்லாவற்றையும் ஆரம்பத்திலிருந்து ஒழுங்காய் கற்றுக்கொண்டு வரவேண்டும் என்று தோன்றியது.

பதினோராயிரத்தில் ஒருவன்

கிரிக்கெட் என்கிற வார்த்தை முதல் முதலில் என் காதில் விழுந்தபோது எனக்கு எட்டோ ஒன்பதோ வயதிருக்கும் என்று நினைக்கிறேன். Made in Japan என்று எழுதியிருந்த அப்பாவின் சிவப்புக் கலர் Sanyo - ரேடியோவிலிருந்து ஒலிபரப்பான கமெண்ட்ரியிலிருந்துதான் அந்த வார்த்தையை முதலில் கேட்க நேரிட்டது. எங்கேயோ விளையாட்டு மைதானத்தின் விண்ணைப் பிளக்கிற கரகோஷத்துக்கு நடுவே நடக்கிற விளையாட்டை ஒருத்தர் மூச்சு விடாமல் வர்ணிக்கிறார்.

"...வருகிறார், வீசுகிறார், அருமையான பந்து. அந்தப் பந்தானது சுழன்று இறங்கி... இதோ கவாஸ்கர் மட்டையை வீசுகிறார். சரியான வீச்சு. பந்து பார்வையாளர் திசை நோக்கி பறக்கிறது. இதோ ஸிக்ஸர். இன்னும் அதிக டெசிபலில் கரகோஷம். 6 ரன்கள். இப்போது ஸ்கோர்: 152-2. கரகோஷமோ, வர்ணனையாளரின் உச்சஸ்தாயி குரலோ, ஸ்கோரோ எதுவும் பாதிக்காமல் அப்பா சலனமற்று கேட்டுக் கொண்டிருந்தார். எதுவும் புரியாமல் நான் உட்கார்ந்து கொண்டிருந்தேன். இது என்ன விளையாட்டு என்று கேட்டபோது Eleven fools are playing. Eleven thousand fools are watching என்றார். அன்றைய வயதுக்கு அது என்னமோ மண்டைக்குள் பச்சக் என்று ஒட்டிக் கொண்டது.

அதனால் கிரிக்கெட் என்கிற அந்த வார்த்தையானது, என் வயதையொத்த சக நண்பர்களுக்கு ஏற்படுத்தின பரவசத்தை எனக்குள் ஏனோ ஏற்படுத்தவில்லை. ஆனால் பரமபதத்திலிருந்து பம்பரம்வரை வகை தொகை பாராமல் விளையாண்டு கொண்டிருந்த என் நண்பர்கள் சட்டென்று மட்டையும் கையுமாய் அலைய ஆரம்பித்தது மட்டும் எனக்கு ஏனோ ஏமாற்றமாயிருந்தது.

இது இப்படி இருக்கிறதென்றால் பக்கத்து வீட்டில் சுப்ரமணியபுரம் சசிகுமார் மாதிரியாகத் தோற்றமளிக்கிற ஒரு அண்ணன் ஒரு சின்ன ட்ரான்ஸிஸ்டரை காதோடு அணைத்து புஸ் என்ற சப்தத்துடன் வாசலில் அமர்ந்து கிரிக்கெட் காமெண்ட்ரி கேட்டுக் கொண்டிருப்பார். அவரிடத்தில் கிரிக்கெட் பற்றிய குறைந்த பட்ச விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று போனேன். வெங்சர்க்கார் எனப்படுகிற கிரிக்கெட் வீரர் அவர் காதுக்குள் பந்து வீசி முடித்தவுடன் ரேடியோவை அகற்றி என்ன என்றார். சொன்னேன். அவர் நான் சொன்னதை சட்டை செய்யாமல் "அது இருக்கட்டும், உன் பேரை இனிமே யார் கேட்டாலும் ரகுநாத வர்ம சேதுபதி கணேஷ சுந்தர பாண்டிய குலோத்துங்க வீர வெங்கடேஷ்வர யோகி ஜகந்நாத சூர்ய காந்திப் ப்ரகாஷ ராவ்-ன்னு சொல்லணும். எங்கே சொல்லு பாக்கலாம். சொல்லேன்னா டைகரை அவுத்து விடுவேன்" என்றார் சம்பந்தமில்லாமல். தன் பெயர் உச்சரிக்கப்பட்ட மாத்திரத்தில் டைகர் என்றழைக்கப்படுகிற அல்சேஷன் நாய் கழுத்துச் சங்கிலியை இழுத்து "வ்வ்வவ்" என்று குறைத்துப் பரபரத்தது. ஒருவேளை வீரமாய் நகராமல் நான் அங்கேயே நின்றிருந்தால் என் மனத் துணிவை பாராட்டி குறைந்த பட்சம் "ஃபோர்" என்பதும் "பவுண்டரி" என்பதும் ஒன்றுதான் என்பதையாவது அவர் எனக்குச் சொல்லிகொடுத்திருக்கக் கூடும்.

அதன் பிறகு கிரிக்கெட்டின் மேல் எனக்கு எந்த ஒரு சுவாரஸ்யமும் ஏற்படாமல் அது எனக்கு ஒரு அந்நிய விளையாட்டாக மாறிப் போனது. பதினொரு முட்டாள்கள் விளையாடுகிறார்கள். பதினோராயிரம் முட்டாள்கள் பார்க்கிறார்கள். இந்தச் சொற்றொடரின் கவர்ச்சி பிடித்துப் போக, எனக்கு இந்த விளையாட்டு பிடிக்காமல் போனதற்கான சாக்காக இதை எல்லோரிடமும் சொல்ல ஆரம்பித்தேன். அது என்ன ஒரு பந்தை சுழற்றிச் சுழற்றி வீசுவதும் அதை ஒருவன் அடிப்பதும் ஒருவன் பிடிப்பதும். இதெல்லாம் ஒரு விளையாட்டா? சுத்த போர்.

ஆனால் இதனை மனதுக்குள் வர விடாமல் எத்தனை வேலி போட்டுத் தடுத்தாலும் டி.வி திரையில் கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் மட்டையுடன் தோன்றி பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி என்றார். (இதைப்பற்றி முன்னொரு பதிவின் நடுவில் எழுதியிருந்தேன். அது இங்கே) கபில்தேவின் தட்டையான மட்டையைவிட கட்டையான மீசை எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. நான் பெரிதானால் இப்படித்தான் மீசை வைத்திருக்கவேண்டும் என்பதற்கு என் ரோல் மாடல்கள் லிஸ்டில் 1) வாழ்வே மாயம் கமல் 2) கபில்தேவ் 3) சிசர்ஸ் விளம்பரத்தில் வருகிற ஒருவர்.

மீசை என்பதெல்லாம் நாய்க்குட்டி மாதிரி நம் இஷ்டத்துக்கு தேர்ந்தெடுத்து வளர்க்கிற ஒன்றல்ல என்று புரிகிற பருவம் வந்தபோது ரேடியோவுக்கு மவுசு குறைந்து டி.வி வந்திருந்தது. அப்போதுதான் ரேடியோவில் மட்டையும் பந்தும் வீசின நிபுணர்களை யார் யார் என்று அடையாளம் தெரிந்தது. அம்பயர் என்று ஒரு கேரக்டர் நடுவில் நின்று கொண்டிருப்பார் என்பதும். அப்புறம் என் நண்பர்கள் குழாம் கிரிக்கெட் மேட்ச் பார்க்கிறோம் என்று என்னை தனிமைப் படுத்தி வெறுப்பேற்ற ஆரம்பித்தார்கள். காலனிக்கு வெளியே காலி மனைகளில் மூன்று குச்சிகள் நட்டி டீம் பிரித்து விளையாட ஆரம்பித்தார்கள்.எனக்கு இது எதுவும் பிடிக்காவிட்டாலும், டி.வி- மேட்சில் விளையாடுபவர்களைப் போலவே பந்தை தொடையில் தேய்த்து தேய்த்து பசங்கள் பவுலிங் போடுவதை அசுவாரஸ்யமாய் மரத்தடி நிழலில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் பக்கத்தில் இருக்கிற தண்ணீரற்ற பொட்டல் கிணற்றில் அடிக்கடி விழுந்து விடுகிற பந்தை எப்படி எடுப்பது என்று தெரியாமல் நண்பர்கள் முழித்துக் கொண்டிருக்கும்போது நான் கயிறு கட்டி இறங்கி அட்வென்ஞ்சர் எல்லாம் செய்து எடுத்துக் கொடுப்பேன்.

அனில் கும்ளே, வினோத் காம்ப்ளி, ஸ்ரீகாந்த், கிரண்மோர், ரன் ரேட், ஓ.டி.ஐ, உலகக் கோப்பை, எல்.பி.டபிள்யூ, வைடு, நோ பால் என்று என்னென்னவோ பெயர்களும் வார்த்தைகளும் என் அனுமதியில்லாமலே அவ்வப்போது என் காதில் விழுந்து கொண்டிருந்தது. கல்கியில் வெளியான என் முதல் கதைக்கு "25 வயது சித்ரனின் முதன் இன்னிங்ஸ் இச்சிறுகதை" என்று அறிமுகம் கொடுத்து போட்டபோதுகூட கிரிக்கெட்டில் இன்னிங்ஸ் என்றால் என்ன என்று தெரியாமல்தான் இருந்தது. ஒரு ஓவருக்கு 6 பந்துகள் என்கிறதே எனக்கு ரொம்ப நாள் கழித்துதான் அறிவூட்டப்பட்டது.

அப்படியாக கிரிக்கெட்டை என் வாழ்க்கையின் கூண்டுக்குள் வர விடாமல் நான் பட்ட எத்தனங்கள் எல்லாவற்றையும் திடீரென இப்போது ஒதுக்கி வைக்க வேண்டியதாய் போயிற்று. காரணம் என் 8 வயது வாண்டு. அவன் ஒண்ணரை வயதாய் இருக்கும்போது சும்மா ஒரு ப்ளாஸ்டிக் கிரிக்கெட் பேட் ஒன்றை ஃபோட்டோ எடுப்பதற்காக கையில் கொடுத்தது தப்பாகப் போய்விட்டது. இன்று வரை அவனிடமிருந்து அதைப் பிடுங்க முடியவில்லை. டொக் டொக் என்று சதா வீட்டுக்குள் ப்ளாஸ்டிக் பேட்டின், பந்தின் சப்தம் கேட்க ஆரம்பித்தது. அவனது கிரிக்கெட் ஆர்வம் நாளடைவில் அதிகமாகி தீவிரமாகியது. ஒரு தடவை மொட்டை மாடியில் அவன் சகாப் பொடியன்களுடன் ஆடிய வேர்ல்டு கப் மேட்சில் சிக்ஸருக்குப் போன ஒரு பந்தைப் பிடிக்கப் போய் இடது கையில் Green Stick Fracture உடன் அழுதுகொண்டே திரும்பி வந்தான். மூன்று மாதம் மாவுக்கட்டு. அப்படியும் அடங்காமல் மாவுக் கட்டுத் தொட்டிலுடனேயே இல்லாத பேட்டால் இல்லாத பந்தை பவுண்டரிக்கோ, அரங்கத்துக்கு வெளியேயோ இடைவிடாமல் அனுப்பிக் கொண்டிருந்தான். வீட்டுக்கு வருகிற விருந்தினர்களிடமும் பந்தைக் கொடுத்து அவனுக்கு பவுலிங் போடச் சொல்லி ஆட்டத்துக்கு இழுத்துவிடுவான்.

என் அலுவலக நண்பர்கள் அடையாறு காந்தி நகர் மைதானத்துக்கு கிரிக்கெட் விளையாடக் கூப்பிட்டபோது என் மகனுக்காக ஞாயிற்றுக் கிழமை தூக்கத்தைக் தியாகம் செய்து அதிகாலை ஐந்தரை மணிக்குப் போனோம். நான் முதன் முதலாக பேட்டிங் செய்த நிகழ்வு அங்கே அரங்கேறியது. எனக்கு விளையாடத் தெரியாது என்று சொல்லியும் எக்ஸ்ப்ரஸ் வேகத்தில் பவுலிங் போட்டு முதல் பந்திலேயே அவுட் ஆக்கிவிட்டதை நான் ஒப்புக்கொள்ளவில்லை. நீ சுத்த வேஸ்ட்டு என்கிற மாதிரி பார்த்த மகனின் பார்வையைத் தவிர்த்து அந்தப் பக்கம் பார்த்தேன். அவன் இது நாள்வரை என்னை இன்னொரு சச்சின் என்றே நினைத்துக் கொண்டிருந்தான். பையனின் உயரத்துக்கும் உருவத்துக்கும் வயது வந்தவர்களின் மட்டையும் அதன் எடையும் ஒத்து வரவில்லையென்றாலும் சளைக்காமல் அதையும் முயற்சித்துப் பார்த்தான்.

இது தவிர பொடியன் இப்போது டி.வியில் பழைய மேட்செல்லாம் பார்க்க ஆரம்பித்துவிட்டான். எல்லா நாட்டினுடைய எல்லா அணி மெம்பர்களையும் உருப்போட்டு வைத்திருக்கிறான். எந்த மேட்சில் யார் எத்தனை ரன் எடுத்த்தார்கள், எப்படி அவுட் ஆனார்கள் என்று அவன் ரேன்ஞ்சுக்கு ஒரு மினி கிரிக்கெட் என்சைக்ளோப்பீடியாவாக உலா வந்து கொண்டிருக்கிறான். Puma Ballistic என்று எழுதியிருக்கிற மட்டைதான் வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்று வாங்கிக் கொண்டான். இதுவரை 128 பந்துகளைத் மொட்டை மாடியில் ஸிக்ஸர் அடித்துத் தொலைத்திருக்கிறான். ஒருமுறை அவன் இன்னும் சின்னக் குழந்தைதானே என்று என் மனைவி அவனுக்கு சோறு ஊட்டும்போது 'கிரீஸ்'-க்கு வெளில நின்னு ஊட்டினா எனக்கு எப்படி எட்டும். இன்னும் பக்கத்துல வா! என்றான். முழங்காலில் கட்டுகிற பட்டை, கையுறை, ஸ்டம்ப்ஸ் எல்லாம் வைத்திருக்கிறான். அஜந்தா மெந்திஸ்-ன் ஸ்பின் இப்படித்தான் இருக்கும் என்று சுழற்றி வீசி என் நெற்றியைப் பதம் பார்க்கிறான். கம்ப்யூட்டரில் ஆன்லைன் கிரிக்கெட் கேம் விளையாடுகிறான். இவையெல்லாற்றையும் மையப்படுத்தி, "அவனுக்கு கிரிக்கெட்-ல பயங்கர இண்டரெஸ்ட் இருக்கு, கோச்சிங் போட்டிருங்க." என்று ஒருத்தர் தவறாமல் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். வரவேற்பறையில் அவன் கிரிக்கெட் விளையாடி இரண்டு ட்யூப் லைட், ஒரு சுவர் கடிகாரம், இரண்டு மூன்று ஃபோட்டோ ஃப்ரேம் அப்புறம் பக்கத்து வீட்டு அகல் விளக்கு, காலிங் பெல் ஸ்விட்ச் என்று ஏகத்துக்கு உடைத்திருந்தாலும், கோச்சிங் பற்றி யோசித்துக் கொண்டுதானிருக்கிறேன்.

கிரிக்கெட் பேட்டை எப்படி கையில் சரியாகப் பிடித்து நிற்பது என்பதை முதன் முதலாக மகனிடமிருந்து சென்ற வாரம் கற்றுக் கொண்டேன்.