இன்னொரு மழைக்கு முன்பு

என் நண்பரும் எழுத்தாளருமான சரசுராமின் முதல் சிறுகதைத் தொகுப்பான 'இன்னொரு மழைக்கு முன்பு' மித்ர ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ் வெளியீடாக வந்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

17 சிறுகதைகளால் ஆன இந்த தொகுப்பில் உள்ளடங்கிய கதைகள் அனைத்தும் ஆனந்த விகடன், சாவி, கல்கி, புதிய பார்வை, தினமணி கதிர் போன்ற பத்திரிக்கைகளில் வெளியானவை. 136 பக்கங்கள்.

மனித உறவுப் பின்னல்களின் நுண்ணிய சிக்கல்களையும், யதார்த்த உணர்வுகளின் நீரோட்டத்தையும், நெகிழ்ந்த மன வெளிப்பாடுகளின் உன்னத கணங்களையும், மென்மை தோய்ந்த அணுகுமுறையில் சிறந்த சிறுகதைகளாய் மாற்றும் திறமை சரசுராமின் பேனாவுக்கு உண்டு. மரங்கள் அடர்ந்த சாலையில் சன்னமாய் அடிக்கிற காற்றில் ஒரு சாயங்கால வேளை slow cycling மாதிரி எந்தப் பரபரப்பில்லாமல் மென்மையாய் கைபற்றி சீரான வேகத்தில் நம்மைக் கூட்டிச் செல்கிறது சரசுராமின் இத்தொகுப்பு.

இந்த புத்தகத்தின் முன்னுரையில் "என் கதைகள் பெரும்பாலும் பாசிட்டிவான விஷயங்களாக இருப்பதாகக் கேள்வி வந்ததுண்டு. இனிமேலும் வரலாம். அதற்கு என் பதில் - என் வாழ்வில் எனக்கு நடந்த சம்பவங்கள் பெரும்பாலும் நல்லவையே. நான் சந்தித்த மனிதர்கள் பெரும்பாலும் நல்லவர்களே. ஆக, இது என் அனுபவம். இவர்கள் என் மனிதர்கள். நான் ஆசைப்படும் மனிதர்கள் அல்லது நான் எதிர்பார்க்கும் மனிதர்கள். இவர்களைச் சொல்லவே ஆசைப்படுகிறேன். அப்படி எழுதுவதையே பெருமையாக நினைக்கிறேன்" என்கிறார் சரசுராம். முற்றிலும் உண்மை.

என்றைக்கோ வந்திருக்கவேண்டிய இத்தொகுப்பு மிக தாமதமாக வெளிவந்திருந்தாலும் நல்ல சிறுகதை வாசிப்பை விரும்பும் வாசகர்களை இத்தொகுப்பு திருப்தி செய்யும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

நானும் சிறுகதை எழுத ஆசைப்பட்டபோது அதன் வடிவம், உள்ளமைப்பு, உரைநடை உள்ளிட்ட இன்னபிற நுணுக்கங்களைக் கற்றுத்தந்து என்னை சிறுகதையாளனாக உருமாற்றிய பெருமைகூட சரசுராமையே சேரும்.

சரசுராம் இப்போது பணியாற்றிக் கொண்டிருப்பது திரைத்துறையில் இணை இயக்குநராக.

இன்னுமொரு மழைக்கு முன்பு
சிறுகதை தொகுப்பு - சரசுராம்
விலை - ரூ. 75
மித்ர ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ்
32/9, ஆற்காடு சாலை
கோடம்பாக்கம், சென்னை - 600024
போன் : +91 44 23723182, 24735314
mithra2001in@yahoo.co.in

விரல்கள்

சிறுகதை
தமிழோவியம் டாட் காம் - 28-03-06


அந்தப் பெண் என்னைச் சைகை காட்டிக் கூப்பிட்டமாதிரி இருந்தது. என்னைத்தானா? நான் திரும்பி தோட்டத்தில் ஷாமியானாவுக்குக் கீழே பாலிவினைல் சேர்களில் தனித் தனிக் குழுக்களாய் அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருப்பவர்களைப் பார்த்தேன். என்னைத் தாண்டி அவர்களில் யாரையாவதைத்தான் அவள் கூப்பிட்டாளா? அவள் சைகையை அவர்கள் யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. அவள் என்னைத்தான் கூப்பிடுகிறாள் என்று தோன்றியது. நானும் ஒரு முறை அவளிடம் சைகையிலேயே என்னைத்தானா என்று கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டபின் அவளை நோக்கி நகர்ந்தேன்.

இத்தனை பேர் இருக்கிற, கல்யாணக் களைகட்டியிருக்கிற இந்த வீட்டில் எனக்கு இதற்குமுன் அறிமுகமாயிராத அந்தப் பெண் என்னை எதற்கோ கூப்பிடுகிறாள். நான் யோசனையோடு அவளை நெருங்கினேன். சுற்றிலும் ஒரு பெரிய தோட்டத்துக்கு நடுவே இருந்த அந்த வீட்டின் இடதுபுறத்தில் தோட்டத்துக்கு இறங்க இன்னொரு வாசல் இருந்தது. அந்த வாசல் படிக்கட்டில் அவள் நின்றிருந்தாள். என்னைப் பார்த்து முறுவலித்தாள். ஸ்நேகம் பூசின புன்னகை. வெகு சுமாரான ஒரு நூல் புடவையில் இருந்தாள். அவள் கையில் ஒரு பித்தளை சொம்பு இருந்தது. அவள் கைகள் ஈரமாயிருந்தன. ஏதோ வீட்டு வேலையாயிருந்தாள் போலும். ரொம்பத் திருத்தமாய் இருந்தாள்.

"நிங்ஙளுடே ச்சங்ஙாதி.. அவிடெ ஸர்திக்குந்நு.." என்று காம்பெளண்டு ஓரமாய் கை காண்பித்தாள். நான் கேரளாவின் ஒரு கிராமத்தில் வந்திறங்கியிருப்பதை மறுபடி ஒரு முறை அவள் பாஷை ஞாபகப்படுத்தினதுபோல் இருந்தது.

அவள் கை நீட்டின இடத்தில் ஒருவன் எனக்கு முதுகைக் காட்டிக்கொண்டு நின்றிருந்தான். உவ்வாக் என்று அவனிடமிருந்து சப்தம் வந்தது. அவன் மார்புவரை உயரமாயிருந்த காம்பெளண்ட்டைப் பிடித்தபடி அதற்கு அந்தப் பக்கமுள்ள காலி நிலத்தில் வாந்தியெடுத்துக்கொண்டிருந்தான். இந்த வீட்டைச் சுற்றி நாளைய கல்யாணத்தின் பொருட்டு கூடியிருக்கிற இத்தனை ஜனத்தில் யாரும் அவனைக் கவனிக்கவில்லை போல. இவள் கவனித்தது அவனுடைய அதிர்ஷ்டம்தான். அவனருகில் சென்றபோது அவன் வாந்தியால் போதம் கெட்ட அந்த நிலையிலும் அரவம் கேட்டுத் திரும்பி என்னைப் பார்த்து லேசாய்ச் சிரிக்க முற்பட்டான். அவனை எனக்கு அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. பாலாவின் கல்யாணத்துக்காக என்னுடன் ட்ரெயினில் வந்த இருபத்தியெட்டு பேர்களில் அவனும் ஒருவன். அவனுடன் அவன் மனைவி மற்றும் பையனையும் பார்த்ததாக ஞாபகம்.

நான் அவனை நெருங்கி "என்ன பாஸ்... உடம்பு சரியில்லையா?" என்று கேட்கும்போதே மறுபடி ஒரு உவ்வாக். நான் அவன் தலையைப் பிடித்துக்கொண்டு பின் அவன் முதுகை லேசாய்த் தடவிக் கொடுத்தேன். முன்பொரு தடவை நான் எதனாலோ வாந்தியெடுத்தபோது என் நண்பனொருவன் எனக்கு இதே மாதிரி முதுகில் தடவிக்கொடுத்ததும், அது எனக்கு மிகப்பெரிய ஆசுவாசத்தை அளித்ததும் நினைவுக்கு வந்தது. இவனுக்கும் அது மாதிரித்தான் இருந்திருக்கவேண்டும். அவன் தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் தன் நெஞ்சில் கைவைத்திருந்தான். சாப்பிட்டது அத்தனையையும் பிரயத்தனப்பட்டு வெளிக்கொண்டுவரப்பட்டதில் அவன் கண்கள் சிகப்பாய் கலங்கியிருந்தன. உடல் பலவீனப்பட்டு கைகள் லேசாய் நடுங்கிக்கொண்டிருந்தன.

நான் திரும்பிப் பார்த்தேன். அந்தப் பெண் இன்னும் கையில் சொம்புடன் நடையிலேயே நின்றிருந்தாள். வைத்தகண் எடுக்காமல் எங்களையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். நான் அவளிடம் 'நீ சொன்னமாதிரி இவன் என் ச்சங்ஙாதியில்லை' என்று சொல்ல விரும்பினேன். அது ஒன்றும் முக்கியமான விஷயமில்லை. நேற்று வேனில் வந்திறங்கிய கும்பலில் என்னுடன் அவனிருந்ததைப் பார்த்து இவன் என் நண்பன் என்று முடிவு பண்ணியிருப்பாள். இருக்கட்டும். இப்போது இந்த நிலையில் அவனுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டுமென்ற எண்ணத்தில் அவள் போகாமல் அங்கே நின்றுகொண்டிருக்கிறாள். எனக்கும் அவ்வாறான எண்ணமே இருந்ததால் மேற்கொண்டு யோசிக்காமல் காம்பெளண்டு ஓரமாய் அடுக்கப்பட்டிருந்த மீதமிருந்த பாலிவினைல் சேர்களில் ஒன்றை எடுத்துப் போட்டு 'உட்காருங்க ப்ரதர்' என்று அவனைச் சாய்த்து உட்கார வைத்தேன். அவன் ரொம்பத் தளர்ந்திருந்தான்.

"கட்டஞ்சாயா போட்டுத் தரட்டே. கொறச்சு பேதமாகும்." தமிழ் பேசுகிற ஆட்கள் என்பதையுணர்ந்து தன் பாஷையை அவள் லேசாய் மாற்ற முற்பட்டது வித்தியாசமாயிருந்தது. பேச இயலாத ஒரு நிலையில் அவள் கேட்டதற்கு அவன் வெறுமனே தலையசைத்து வைத்தான். அவள் சொம்பை படியில் வைத்துவிட்டு புடவைத் தலைப்பால் கைகளைத் துடைத்தபடி உள்ளே விரைவதைப் பார்த்தேன்.

"நேத்து பார்ட்டில கொஞ்சம் ஓவராயிருச்சு! அதான்" என்றான் அவன் நான் கேட்காமலே! அவன் சொல்லாமலே எனக்கு அது புரிந்துதான் இருந்தது. நேற்று இரவு பார்ட்டியில் அவன் நிறையக் குடித்ததால் கீழே பாயில் தூங்கிக் கொண்டிருக்கிற நிலையிலேயே வாந்தி எடுத்ததும் பிறகு மாப்பிள்ளைப் பையன் பாலாவும், சந்தோஷும் சேர்ந்து அவனை நகர்த்திக் கிடத்திவிட்டு அவ்விடத்தை சுத்தம் செய்தார்கள் என்றும் இவன் அதற்காக தென்னந்தோப்புக்குள் பாலாவை தனியாய் கூட்டிக்கொண்டு போய் மன்னிப்புக் கேட்டான் என்றும் காலையில் கேள்விப்பட்டிருந்தேன். இரவு மயக்கம் இன்னும் தெளிந்தபாடில்லை போலும். இதோ கட்டஞ்சாயாவுக்குக்காக காத்துக் கிடக்கிறான். உள்ளே போய்விட்டிருந்தாலும் எனக்கு அந்தப் பெண் இன்னும் நிலைப்படியில் நின்றுகொண்டு என்னை சைகையால் அழைப்பதுபோல் பிரமை தொடர்ந்து கொண்டிருந்தது. அந்தப் பெண்ணிடம் என்னவோ இழுக்கிற அம்சம் இருந்தது. ஒரு வேளை பொட்டு வைக்காத அவள் நெற்றியா அல்லது லேசான சோகம் விரவின கண்களா? என்னமோ ஒன்று. அவள் சாயாவுடன் வருகிறாளா என்று நான் கதவுக்குள் பார்த்துக்கொண்டிருந்தபோது அவன் சொன்னான்.

"இந்த விஷயத்தை என் ஒய்ஃப்கிட்ட சொல்ல வேணாம் பிரதர்."

நான் திரும்பிச் சிரித்தேன். அவனிடம் பயப்படவேண்டாம் என்று சொன்னேன். அவன் மனைவிக்குப் பிடிக்காத விஷயத்தை அவன் செய்திருக்கிறான். அவள் இதைக் கேள்விப்பட நேர்ந்தால் கிடைக்கும் அர்ச்சனைக்கு அவன் பயப்படுகிறான். அவனுடனேயே எனக்கு அதிகமான பரிச்சயமில்லாத போது அவன் மனைவியிடம் நான் பேச நேரிடும் என்று எப்படி நினைத்தான் என்று தெரியவில்லை.

அவள் வாசற்படியில் மீண்டும் தென்பட்டாள். படிகள் தாண்டி முற்றம் வரை சாயா டம்ளருடன் நடந்து எங்களை அணுகினாள். இப்போது பரவாயில்லையா என்று விசாரித்தபடி சாயாவை நீட்டினாள். நான் அதை அவளிடமிருந்து வாங்கும்போது பட்ட விரல்களை அவள் இயல்பாக எடுத்துக்கொண்டிருக்கக் கூடும் என்று தோன்றியது. ஆனால் எனக்கு ஏன் இன்னும் குறுகுறுப்பாக இருக்கிறது? தன் வேலை முடிந்தது என்பது மாதிரியும், தன் எல்லைக் கோட்டை கொஞ்சம் தாண்டி வந்துவிட்ட மாதிரியும் அவள் இரண்டடி பின்னால் நகர்ந்து நின்று கொண்டாள். என்னைப் பார்த்து முன்பு மாதிரியே முறுவலித்தாள். நான் அந்தக் கணத்திலிருந்துதான் அவளைக் கவனிக்க ஆரம்பித்திருக்கவேண்டும். அல்லது அவளைக் கவனிக்க வேண்டும் என்கிற ஒரு சின்ன உந்துதல் அந்தக் கணத்திலிருந்துதான் என்னுள்ளிருந்து புறப்பட்டிருக்கவேண்டும். என்னவோ ஒரு எளிமையும், சாந்தமும் கலந்த கலவையாய் அவள் அப்படி நின்றுகொண்டிருந்தது என்னை லேசாய் ஈர்த்தது. நான் அவளை அத்தனை உற்றுப் பார்த்திருக்கக்கூடாதோ என்று பிறகுதான் தோன்றியது. அவள் சட்டென்று என் பார்வையைச் சுதாரித்துக்கொண்டு "கொறச்சு பணியுண்டு" என்று சரசரவென்று இரண்டு தாவலில் படிகளைக் கடந்து உள்மறைந்தாள்.

என்னிடமிருந்து வெளிப்பட்டு மறைந்துபோன பெருமூச்சின் நதிமூலம் எனக்குப் பிடிபடவில்லை. நான் மெல்லத் திரும்பி அவனைப் பார்த்தேன். பதிநான்கு மணிநேரப் பிரயாணம் செய்து இங்கே வந்ததே இந்தக் கட்டஞ்சாயாவைக் குடிக்கத்தான் என்கிற மாதிரி துளித்துளியாய் நிதானமாய் அவன் அதை உறிஞ்சிக் கொண்டிருந்தான். இப்போது அவன் உடல் படபடப்பும், முக வாட்டமும் கொஞ்சம் மறைந்து கொஞ்சம் தெம்பு பிறந்திருந்தது.

அவன் குடித்து முடித்துத் தந்த டம்ளரை நிலைப்படியில் அந்த சொம்புக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு கதவினுள் லேசாய் பார்வையைச் செலுத்தினேன். அந்தக் கதவை ஒட்டியிருந்தது சமையலறை என்று பிறகுதான் புரிந்தது. உள்ளே நாலைந்து பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களில் அவளைத் தேடுகிற அளவு அவகாசம் இருப்பதாய்த் தோன்றவில்லை. யாரேனும் கவனித்தால் அவன் அங்கே நின்றுகொண்டிருப்பதன் காரணம் பற்றி அநாவசியமாய் கேள்வி எழுப்பக்கூடும். நான் திரும்பி வந்தபோது அவன் எழுந்திருந்தான். 'ரொம்ப நன்றி தலைவா!' என்றான். நான் புன்னகைத்து அவன் தோளில் தட்டிக் கொடுத்தேன். என்னை மாதிரியே அவனும் வாசற்கதவைத் அடிக்கடி பார்க்கிறானோ என்று தோன்றியது. அவனைக் கூட்டிக் கோண்டு தோட்டத்தில் ஷாமியானாவுக்கு வந்தேன். அவன் மனைவி, பையனைப் பற்றி விசாரித்தபோது அவர்கள் அந்த வீட்டுக்குள் பெண்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் இருப்பதாகச் சொன்னான். முகூர்த்தத்துக்கு நேரமாகிவிட்டபடியால் அநேகமாக அவர்கள் உடைமாற்றி புறப்படத் தயாராகிக்கொண்டிருக்கலாம் என்றும் உபரியாய் தெரிவித்தான்.

இங்கிருந்து ஒரு கூட்டம் எட்டு மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பஸ்ஸில் கிளம்பி பெண் வீட்டிலேயே நடக்கவிருக்கும் கல்யாணத்துக்குப் போவதாக ஏற்பாடு. தோட்டத்திலேயே வரிசையாய் சேர் டேபிள் போட்டு வந்திருந்தவர்களுக்கு காலை டிபன் முடிந்துவிட்டது. நிறைய சந்தனப்பொட்டு யுவதிகளும், முண்டு உடுத்திய சேட்டன்மார்களும் பரபரப்பாய் அலைந்து கொண்டிருந்த அந்த வீட்டுக்குள் பாலா எங்கேயிருக்கிறான் என்று தெரியவில்லை. நேற்று சாயங்காலம் முதற்கொண்டே அவன் ரொம்ப பிஸியாய்த்தான் இருந்தான். அவன் வீட்டிலிருந்து கொஞ்ச தூரம் தள்ளியிருந்த, காலியாயிருந்த அவன் மாமா வீட்டில்தான் மற்ற பேருடன் நான் தங்கியிருந்தேன். அங்கே பசங்களுக்கு 2T ஆயில் கேனில் கள்ளும், அப்புறம் மற்ற சரக்கு பாட்டில்களும் கொண்டுவந்து கொடுத்துவிட்டு "என்ஜாய்" என்று பாலா சொல்லிவிட்டு கிளம்பும்போதுதான் அவனை கடைசியாய் பார்த்தது.

பஸ் வந்துவிட்டதாகவும் புறப்பட்டுத் தயாராயிருப்பவர்கள் போய் ஏறிக்கொள்ளலாம் என்றும் ஒரு வெற்றிலை வாயர் அறிவித்துவிட்டுப் போனார். கிட்டத்தட்ட எல்லாருமே தயாராகத்தான் இருந்தார்கள் போல. பளபளவென்று குளித்து உடைமாற்றிக்கொண்டு என்னுடன் ரயிலில் வந்திருந்தவர்கள் எல்லோரும்கூட இவ்விடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். திடீரென்று பாலாகூட வீட்டுக்குள்ளிருந்து கல்யாணக்கோலத்தில் வெளிப்பட்டு அரசியல்வாதிபோல நண்பர்களுக்கு கையாட்டிவிட்டு அவனது சேச்சி குடும்பத்துடன் ரோஜாப்பூக்கள் ஒட்டியிருந்த ஒரு டாடா சுமோவுக்குள் ஏறிக்கொண்டான். நான் பஸ் எங்கே என்று விசாரித்தேன். ரோடு குறுகலாக இருப்பதால் ரொம்ப தூரத்துக்கு முன்னமே திருப்பி நிறுத்தப்பட்டிருப்பதாய் சொன்னார்கள். வீட்டிலிருந்து கிளம்பி ஒரு சின்ன ஊர்வலம் போல மெதுவாய் எல்லோரும் பஸ் இருக்கிற திசை பார்த்து நடக்க ஆரம்பித்தார்கள். எல்லோரையும் மிக அலங்காரமாய் சுறுசுறுப்பாய், புத்துணர்ச்சியுடன் ஒரு கல்யாண வீட்டில்தான் பார்க்க முடியும் என்று தோன்றியது. நடக்கிற பெண்கள் கூட்டத்துக்குள் நான் அவளைத் தேடினேன். எங்கேயும் தென்படவில்லை. அவள் இன்னும் கிளம்பவில்லையா?

பஸ்ஸை அடைந்தபோது ஏற்கெனவே ஒரு கூட்டம் இருக்கைகளை நிரப்பியிருந்தது. அதுதவிர இன்னும் இத்தனை பேர். கல்யாணம் நடக்கிற இடத்துக்கு இரண்டு மணி நேரம் நின்று கொண்டுதான் போகவேண்டும்போல. நான் அந்த மெயின் ரோட்டில் நின்றுகொண்டு பஸ் கிளம்பும்போது தொற்றிக்கொள்ளலாம் என்று காத்திருந்தேன். கிளம்ப இன்னும் ஒரு பத்து நிமிடம் ஆகுமென்று யாரோ சொன்னார்கள். பின் இருக்கையில் அவன் சாய்ந்திருப்பதைப் பார்த்தேன். அவனெப்படியோ ஒரு இருக்கையைப் பிடித்துவிட்டான். பக்கத்தில் அவன் மனைவியும், அவன் பையனும். எனக்கு மறுபடி அவன் வாந்தியும், அந்த புறவாசற்கதவும், படிகளும் ஞாபகத்துக்கு வந்தன. அவளை மறுபடி பார்க்கவேண்டும் என்கிற ஆவல் திடீரென்று தோன்றியது.

நான் மெல்ல பாலாவின் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அங்கே யாரெல்லாம் இன்னும் கிளம்பாமல் இருப்பார்கள்? நடக்கும்போதே ஏதோ ஒரு விவகாரமான யோசனையில் வாட்சை கழற்றிப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன். பாலாவின் வீட்டையடைந்தபோது அதிகம் அரவமில்லாமலிருந்தது. கிட்டத்தட்ட எல்லோரும் கிளம்பி விட்டார்கள் போல. தோட்டத்தில் ஷாமியானாவையும், டேபிள்களையும் பிரித்துக் கொண்டிருந்த ஒரு சில வேலையாட்களைத் தவிர வேறு யாரையும் காணோம். நான் எதற்கு இத்தனை தூரம் மெனக்கெட்டு வந்தேன் என்று எனக்கே புரியாமல் இருந்தது. கேட்டைத் தாண்டி பக்கவாட்டிலிருந்த வாசலை அடைந்தபோது அவள் படிகளில் ஓய்வாய் உட்கார்ந்திருந்தாள். என்னைப் பார்த்து லேசாய் அவள் கண்களில் ஆச்சரியம் விரிந்து மெதுவாய் எழுந்தாள். நான் எதுவும் பேசத் துவங்கும் முன்பாக அவள் கேட்டாள். "இப்போ நல்லா இருக்காரா நிங்ஙளுடெ ச்சங்ஙாதி?"

அவன் என் ச்சங்ஙாதியில்லை என்று மீண்டும் அவளிடம் சொல்ல விரும்பினேன். பதிலாக 'அவனுக்கு இப்போது ஒன்றும் பிரச்சனையில்லை' என்றேன். கூடவே அவள் கல்யாணத்துக்குக் கிளம்பாமல் இப்படி நடையில் உட்கார்ந்திருப்பது எனக்கு ஆச்சரியத்தை அளிப்பதாகத் தெரிவித்தேன். அவள் ஒரு மெல்லிய புன்முறுவலை உதடுகளில் படரவிட்டாள்.

"ஞான் அதிகம் இம்மாதிரி எடத்துக்கு போறதில்ல.." என்றாள். கொஞ்சம் இடைவெளிவிட்டுப் பின்னர் தயக்கத்துடன்.. "சொல்றதுக்கென்ன? பர்த்தாவு மரிச்சதினு சேஷம்தான்" என்று சேர்த்துக்கொண்டாள். அவள் மறைக்க விரும்பின வருத்தம் லேசாய் அவள் முகத்தில் கோடிட்டுக் காட்டிவிட்டது. எனக்கு ஏதேதோ உணர்ச்சிகளைப் பூசிக்கொண்டு ஒரு இனம்புரியாத அதிர்வொன்று மனதிற்குள் ஓடியது. ஓரிரு விநாடிகள் செய்வதறியாது நின்றிருந்தேன்.

"ஆனா என்டெ மோள் கல்யாணத்தினு போய்ட்டுண்டு.." என்றாள் முகம் மலர்ந்து. பின்னர் ஓரிரு விநாடிகள் அவள் மெளனமாய் எதையோ யோசித்துவிட்டு சட்டென்று "எந்தா நிங்ஙள் புறப்பட்டில்லே?!!" என்றாள்.

நான் யோசித்து "போகணும். என் வாட்சைக் காணோம். இங்க எங்காவது கழண்டு விழுந்ததான்னு பாக்க வந்தேன். நீங்க ஏதாவது பாத்தீங்களா?" என்றேன். எதற்காக என் வாயிலிருந்து பொய் இத்தனை சரளமாக வருகிறது? அவள் ஒரு நிமிடம் என்னை உற்றுப் பார்த்தது எனக்கு என்னவோ போல் இருந்தது. என் முகத்திலிருந்து ஏதாவது கள்ளத்தனத்தை கண்டுபிடித்துவிட்டாளா என்று லேசாய் சந்தேகம் எழுந்தது.

அவள் சட்டென்று அவளின் மூடிய வலது கை விரல்களை என் முன் நீட்டினாள்.

"'இதுவா பாருங்க"

எனக்குள் ஒரு சின்ன திடுக்கிடல் நிகழ்ந்து குழப்பமாய் அவளை நோக்கிக் கைநீட்டினேன். என் நீட்டிய என் விரல்களின் மேலாக வைத்து அவள் விரல்களைப் பிரித்தாள். வெறும் விரல்கள். நான் ஏமாந்ததைப் பார்த்து வரிசைப் பற்கள் தெரிய ரொம்ப அழகாய்ச் சிரித்தாள்.

"இதுதான்" என்றேன் திடீரென்று.

நான் அவளிடமிருந்து பெற்றுக்கொண்டதை என் விரல்களுக்குள் இறுக்கமாக மூடிக்கொள்வதைப் பார்த்து அவள் சிரிப்பின் வீரியம் குறைந்து வேறு ஏதேதோ உணர்ச்சிகள் அவளது முகத்தை நிறைத்தன. இறுக்கின கையைப் பிரிக்காமல் அவளை நோக்கி ஒரு அர்த்தப் புன்னகை பூத்துவிட்டு மனசில்லாமல் வாசலை நோக்கி நடந்தேன். நான் மறையும்வரை என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள் என்பது நான் திரும்பிப் பார்த்தபோதெல்லாம் தெரிந்தது.

கல்யாணம் முடிந்து அன்று மத்தியானமே ட்ரெயின் ஏறிவேண்டியிருந்தது. இங்கிருந்து சென்னைக்கு பதினாலு மணி நேரம் ஆகும். இப்போது என் எதிர்சீட்டிலேயே அவன் சிரித்தவாறு உட்கார்ந்து கொண்டிருந்தான். அவன் முகம் இப்போது ரொம்பத் தெளிவாய் இருந்தது. பக்கத்தில் அவன் மனைவியும் பையனும். வெளியே கேரளத்தின் தென்னந்தோப்புகள் பின்னோக்கி விரைந்து கொண்டிருந்தன. அந்தப் பையன் என்னையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். என்னிடம் கேட்பதற்கு அவனுக்கு என்னவோ இருப்பதுபோலொரு பாவனை அந்தப் பையன் முகத்தில் தெரிந்தது.

"என்னடா கண்ணா?" என்றேன்.

அவன் இறுக்கமாய் மூடியிருந்த என் வலது கை விரல்களை உற்றுப் பார்த்துவிட்டுக் கேட்டான்.

"கைல என்ன வெச்சிருக்கீங்க அங்கிள்?"

நான் சுதாரித்து சட்டென்று அவனிடம் விரல்களைப் பிரித்துக் காண்பித்து "ஒண்ணுமில்லடா.."என்றேன்.
(முற்றும்)

ஒங்களுக்கு நெறைய பணம் சம்பாதிக்க ஆசையா?

திடீரென எனக்கு ஒரு ஃபோன் வருகிறது. மறுமுனையில் ரொம்ப நாளாக என்னுடன் தொடர்பில்லாமலிருந்த நண்பர். எனக்கோ ஒரே ஆச்சரியம். வெளியே மேகமூட்டமாயிருக்கிறதாவென்று பார்த்தேன். இன்று மழை வந்தாலும் வரும். குரலில் உற்சாகம் மிதக்க குடும்ப செளக்கியம், வேலை, பையன் ஸ்கூல் எல்லாவற்றைப்பற்றியும் விசாரிக்கிறார். எனக்கு மிக மகிழ்ச்சியாயிருக்கிறது. பரவாயில்லை. நண்பர்களாகப்பட்டவர்கள் என்னை ஞாபகம் வைத்திருப்பது எத்தனை கொடுப்பினை!?. அவரைப் பற்றி, அவர் குடும்ப குசலங்களையெல்லாம் நானும் விசாரித்து வைக்கிறேன். வீட்டுக்கு வாங்களேன் ஒருநாள் என்கிறேன். மறுமுனையில் அவர் முகத்தில் பல்ப் ஒளிர்ந்ததை போன் வழியாகவே உணர முடிகிறது. என் முகத்திலும் பல்ப்.

"அடடா... புதன்கிழமை நானே ஒங்களை வந்து பாக்கறதுதான் ப்ளானே.." என்கிறார். தொடர்ந்து "ஒரு சின்ன விஷயம் இருக்கு."

விஷயத்தை அறிந்து கொள்கிற ஆவல் என் குரலில் விரிகிறது. சொல்லுங்க என்கிறேன். அவர் ஆரம்பிக்கிறார். "ஒண்ணுமில்ல... ஒரு சின்ன பிஸினஸ். அத நான் உங்கள நேர்ல பாத்து சொன்னாதான் செளரியமாருக்கும். ஒரு சின்ன டெமோ காட்டணும். புதன் கெழம வர்றேன்."

சட்டென்று எனக்கு புரிந்துவிட்டது. உடனே என்னுடைய பல்ப் ஆஃப் ஆகிவிட்டது. இன்றைக்கு மழை வந்தாலும் நான் சந்தோஷப்படமாட்டேன்.

"மல்டிலெவல் மார்க்கெட்டிங்கா?"

"நான் நேர்ல சொல்றனே.."

என்னிடமிருந்து ஒரு பலத்த பெருமூச்சு! வாழ்க்கையில் பதினெட்டாவது தடவையாக மாட்டிக்கொண்டேன். எனக்கு இந்த மாதிரி பிஸினஸ்களில் துளியும் ஆர்வமில்லையென்றும், நான் ஏற்கெனவே இதையெல்லாம் (வேறு சில நண்பர்களின் வற்புறுத்தலின் பொருட்டு) முயற்சித்துப் பார்த்தாயிற்று என்றும் சொல்லி எப்போதும்போல் நான் நழுவப்பார்க்கிறேன்.

அத்தனை லேசில் விடுபவர்களா மல்டிலெவல் மார்க்கெட்டிங்தாரர்கள்? நான் நினைத்துக்கொண்டிருக்கிற மாதிரி மிக மோசமான பிஸினஸ் அதுவல்லவென்றும், இதனால் ஏகப்பட்ட பேர் குறுகிய காலத்தில் பணக்காரர்களாயிருக்கிறார்களென்றும், தனக்குக்கூட மாசா மாசம் அறுபதாயிரம் இதன் மூலம் வந்துகொண்டிருக்கிறதென்றும், நான் தலையை மட்டும் அசைத்தால் போதும் மற்றதையெல்லாம் தான் பார்த்துக்கொள்வதாகவும், தனலட்சுமியானவள் இப்போது என் வீட்டுக் காலிங்பெல்லில் கை வைத்திருப்பதாகவும் மூச்சுவிடாமல் பேசினார். ஜஸ்ட் நீங்க ஒரு ஹாஃபனவர் ஸ்பென் பண்ணுங்க போதும் என்றார். ஒரு பதினைந்து நிமிடத்திற்கு அவர் மட்டுமே பேசிக்கொண்டிருந்தார். எல்லாம் கேட்டுவிட்டு 'நன்றி, எனக்கு இதில் ஆர்வமில்லை' என்று மறுபடி சொன்னேன்.

இப்போது அவர் முகத்தில் பல்ப் ஃப்யூஸ் போயிருக்கவேண்டும். சடுதியில் பணம் சம்பாதிக்கக்கூடிய ஒரு அரிய பெரிய வாய்ப்பை நீங்கள் இழக்கிறீர்கள் என்று கூறி போனை வைத்தார்.

இது போல் பல. முதலில் கொஞ்சம் பட்டுப் பின் தெரிந்துகொண்ட அனுபவங்களிலிருந்து The art of saying No வை கொஞ்சம் கொஞ்சமாக பயின்றதிலும் இப்போது இம்மாதிரி நண்பர்களுக்கு சிரித்து மழுப்பி எனக்கு ஆர்வமில்லை என்று எப்படியாவது சொல்லித் தப்பித்துக்கொள்கிறேன்.
அவர்கள் சொல்கிற மாதிரி 'எதுவுமே செய்யாமல்' காசானது கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டுமா என்றெல்லாம் நான் ஆராயவும் இல்லை. ஆனால் இந்த மாதிரி மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் உழல்பவர்கள் அதிகபட்சம் மற்றவர்களை வற்புறுத்தி இதில் இணைக்கிறார்கள் என்கிற விஷயம் எனக்கு உடன்பாடாக இல்லை. பின்னே மார்க்கெட்டிங் என்றாலே அதுதானே? ஆரிஃப்ளேம் வகை பிஸினஸ்காரர்கள் "யூஸ் பண்ணிப் பாத்தீங்கன்னா அப்புறம் நீங்களும் இந்த லைனுக்கு வந்துருவீங்க" என்று சில விலை அதிகமுள்ள நமக்கு வேண்டாத பொருட்களை தலையில் கட்டிவிட்டுப் போய்விடுகிறார்கள். சில சமயம் டெமோ என்கிற பேரில் நமது நேரம் நமது அனுமதியில்லாமல் சாப்பிடப்படுகிறது.

ரொம்ப காலத்துக்கு முன் என் நண்பர்களிருவர் இது மாதிரி எதையோ ஆரம்பித்து ஒரே மாதத்தில் ஆளுக்கொரு யமஹா வாங்கி ஆக்ஸிலேட்டரை முறுக்கித் திரிந்ததைப் பார்த்து என் புருவங்கள் உயர்ந்ததை நினைவுகூர்கிறேன். இன்னொரு நண்பன் இரண்டு வருடம் இதில் உழன்றுவிட்டு கடைசியில் இரண்டேகால் லட்சம் கடனாளியாக நின்றது ஏன் என்றும் புரியவில்லை. இதன் சூட்சுமம் என்னவென்று கண்டுபிடிப்பதற்கு நான் முயற்சிக்கவில்லை. எது எப்படியோ இருக்கட்டும்! இந்த ஆம்வேவோ இல்லை ஆரிஃப்ளேமோ நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு, இல்லை தெரிந்த நபர்களுக்கு மத்தியில் வரும்போது ஒரு ஆரோக்கியமாக இருக்கும் நட்புக்கு கொஞ்சம் காய்ச்சலோ இருமலோ வரத்தான் செய்கிறது. மனத்தில் கொஞ்சம் டென்ஷன் உருவாகிறது.

என் நண்பன் ஒருவன் இந்த விஷயத்தைச் சமாளிப்பதில் பரவாயில்லை. கீழ்கண்ட உரையாடல் அவனுக்கும் மல்டிலெவல் மார்க்கெட்டிங்தாரருக்கும் இடையே நடந்தது.

- ஒங்களுக்கு நிறைய பணம் சம்பாதிக்க ஆசையா?

- இல்லையே...

- என்ன இப்படி சொல்றீங்க. பணம் லைஃப்ல ரொம்ப அவசியமில்லையா?

- தேவைதான்.

- ஸோ யு நீட் மணி.

- நோ!

- இப்பதானே சொன்னீங்க பணம் முக்கியம்னு!

- முக்கியம். ஆனா எனக்கு வேணும்னு சொல்லலையே!

- அப்ப நீங்க பணம் சம்பாதிக்க வேண்டாமா?

- எதுக்கு சம்பாதிக்கணும்?

- பணம் இல்லாம எப்படி சார் வாழ முடியும்?

- தோ.. நான் வாழ்ந்துட்டுதானே இருக்கேன்?

- நிறைய பணமிருந்தா உங்களுக்கு எவரிடே ப்ராப்ளம்ஸ் எல்லாம் ஈஸியா சால்வ் பண்ணலாம் இல்லையா???

- எனக்குதான் எந்த ப்ராப்ளமும் இல்லையே சார்.

- உங்க ஃப்யூச்சருக்கு?

- ஹாஹா. Great Joke.

அவன் மசியமாட்டான் என்று தெரிந்து லேசாய் என்பக்கம் திரும்பினார். "நீங்க சொல்லுங்க... உங்களுக்கு வாழ்க்கைல பணம் வேணுமா வேண்டாமா?"

சும்மா பேசிக்கொண்டிருப்பானேன். நான் திருவிளையாடல் சிவபெருமான் மாதிரி "டங்" என்று நின்ற போஸில் மண்டபத்திலிருந்து மறைந்துவிட்டேன்.

உலகத் தொலைகாட்சி

நான் முதன் முதலில் டி.வி பார்த்தது என் ஒன்பதாம் வகுப்புத் தோழன் நாகராஜ் வீட்டில்தான். என் வீடிருந்த தெருவுக்கு அடுத்த சந்தில், படுத்திருக்கும் ஒரு சில நாய்களைக் கடிவாங்காமல் தாண்டிப் போனால் அவன் வீடு வரும். தரையில் தாருக்குப் பதில் சிமெண்ட் ஸ்லாப்களாகப் பதித்திருக்கும் சந்திலிருந்து செங்குத்தாக ஐந்து படிகள் ஏறினால் அவன் வீட்டின் முன்னறை. அதற்கு நேராய்த் தெரியும் அதற்கு அடுத்த அறையில் அதை வைத்திருந்தார்கள். நீலச்சாம்பல் கலரில், வீட்டுக் கூரையின் ஆண்டென்னா உபயத்தில் அப்போதெல்லாம் தூர்தர்ஷன் மட்டுமே. நிகழ்ச்சிகளைவிட "தடங்கலுக்கு வருந்துகிறோம்"-ஐ அதிகம் ஒலிபரப்பின தொலைக்காட்சி. ஒரு நிகழ்ச்சி முடிந்ததும் கிடைக்கிற இடைவெளியில் ஒரு ரோஜாப்பூ ஸ்லைடு போட்டு லொட் லொட் என்று பட்டறையில் தட்டுகிற சப்தம் மாதிரி ஒரு ம்யூசிக் போடுவார்கள்.

நான் புதன் கிழமையானால் எட்டுமணிக்குத் தவறாமல் போய் அவன் வீட்டு முன்னறைப்படியில் உட்கார்ந்துவிடுவேன். (உள்ளே போகமுடியாதபடிக்கு எக்கச்சக்கமான கூட்டம் இருக்கும்) அங்கிருந்து பார்த்தாலே ஓரளவுக்கு ரிஷிகபூர், ஹேமமாலினி எல்லாம் தெளிவாகத் தெரிவார்கள். சித்ரஹாரைத்தான் சொல்கிறேன். சாட்டிலைட்டிலிருந்து புரியாத ஹிந்திப் பாடல் காட்சிகளை டெக்னாலஜித் தூண்டில் போட்டு இழுத்து திரையில் காண்பிக்கும் அந்தப் பெட்டியை எல்லோரும் வியந்து வியந்து பார்த்துக்கொண்டிருந்த காலம் அது. அதிலும் நீலம் என்று ஒரு நடிகை அடிக்கடி ஏதாவதொரு பாட்டில் வருவது பிடித்துப் போய் வாராவாரம் தவறாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். சித்ரஹார் போட்டாலே நாகராஜ் வீடு நிரம்பிவிடும். அவன் வீட்டை விட்டால் வேறு டி.வி அந்தத் தெருவில் எங்கும் இல்லாதிருந்தது.

டி.வி ஓடும்போது தவறாமல் விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிடுவார்கள். இருட்டுக்குள் நீலத்திரை மட்டும் ஒளிரும். சித்ரஹாரைத்தவிர அடுத்ததாய் அதிக மவுசு உள்ள நிகழ்ச்சியாய் கிரிக்கெட் மேட்ச்தான் இருந்தது. கிரிக்கெட் என்றால் ஒரு கஜம் என்ன விலையாகிறதென்று கேட்பவனாகிய நான், ஹிர்வானி என்ற பட்டையாய் கண்ணாடி போட்ட ப்ளேயர் ஓடி ஓடி வந்து பவுலிங் போடுவதை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். நடுநடுவில் வருகிற "வா்ஷிங் பெளடர் நிர்மா" அப்புறம் கபில்தேவ் வருகிற "பூஸ்ட் - ஸீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி" எல்லாம் எத்தனை தடவை போட்டாலும் பார்ப்பேன். அப்புறம் கணேஷ் வீட்டில் அதைவிட பெரிய டி.வி வாங்கினதும் பெரிய செளகரியமாய் போய்விட்டது. 1. அவன் வீடு நாகராஜ் வீட்டைவிட இன்னும் கிட்டத்தில் இருந்தது. 2. தாண்டவேண்டிய கடிநாய்களின் எண்ணிக்கை குறைவு 3. கணேஷ் வீட்டு உள்ளறையிலேயே சேர் போட்டு உட்கார்ந்து பார்க்கலாம். 4. டி.வி நிகழ்ச்சிகளின் நடுவே அவன் அம்மாவின் அன்பான டீ கிடைக்கும். ஆனால், அதுவும் கருப்பு வெள்ளைதான். தவறாமல் அதற்கும் முகத்தில் ஒரு நீலக் கண்ணாடி அணிவித்திருந்தார்கள். அந்த கணேஷாகப்பட்டவன் பல சமயம் டி.வியை ட்யூன் பண்ணுகிறேன் பேர்வழி என்று புஸ் என்று சப்தத்துடன் எப்போதும் புள்ளி புள்ளியாய் ஓடவிடுவான். அது ஓரளவு அட்ஜஸ்ட் ஆகி திரையில் காட்சி தெரிவதற்கு ஒரு அரைமணி ஆகிவிடும். அவன் வீட்டு டிவியில் புள்ளிகளைத்தவிர என்னெல்லாம் பார்த்தேன் என்று தெள்ளத் தெளிவாக ஞாபகமில்லை. அசுவாரஸ்யமாகப் பாரத்த ஓரிரு கிரிக்கெட் மேட்ச்கள் மட்டும் ஞாபக நிழலில் துண்டு போட்டு உட்கார்ந்திருக்கின்றன.

கொஞ்சநாள் கழித்து ஜாகை மாறி வேறு ஊருக்குப் போனபோது டி.வி என்கிற வஸ்துவின் உள்ளடக்கம் பொருளடக்கம் எல்லாம் மாறியிருந்தது. தூர்தர்ஷனில் ஒளியும் ஒலியும் என்று ஸ்லைடுபோட்டு வெள்ளிக்கிழமை அமர்களப்பட ஆரம்பித்தது. பெண்கள் அன்றைக்கு எட்டு மணிக்குள் அவசரமாய் கோவிலுக்குப் போய்விட்டு பறந்தோடி வீட்டுக்கு வர ஆரம்பித்தார்கள். டி.வி வைத்திருந்த பக்கத்துவீட்டுப் புண்ணியவான்கள் தயவில் கமலும் ரஜினியும் வீட்டுக்கு வந்துவிட்டுப்போனார்கள். நிகழ்ச்சிக்கு இடையிடையே ஸ்டேஷனில் ஒளி, ஒலி இரண்டும் கட்டாகும். முன்பு சொன்னதுபோல், தடங்கலுக்கு வருந்துவதாக தகரத்தட்டல் பிண்ணனி இசையோடு ஸ்லைடு போட்டுவிட்டு விட்ட இடத்திலிருந்து தொடர்வார்கள். டி.வியில் ஒலியும் ஒளியும் மட்டுமல்லாது ஞாயிறு மதியம் 1 மணிக்கு NFDC படங்கள் ஒலிபரப்பாகின்றன என்று தெரிந்தபிறகு எங்கள் ரசனை நரம்புகள் உசுப்பப்பட்டு அதையெல்லாம் நண்பர்கள் குழாமுடன் விழுந்து விழுந்து பார்க்க ஆரம்பித்தோம். இதில் பெரும்பாலும் மலையாள நடிகர் கோபி நடித்த கலைப்படங்கள். வாழ்க்கையில் நிறைய பொறுமையை கற்றுக்கொண்டது இந்த காலகட்டத்தில்தான் என்று சொல்லலாம். (ஒரு படத்தில் கோபி ஒரு பூங்காவின் இந்த கேட்டிலிருந்து அந்த கேட் வரை பதினைந்து நிமிடம் நடந்து கடந்ததை உதாரணத்துக்குச் சொல்லலாம்.) கலைப்படங்கள் பார்ப்பதற்கான வயது அது அல்ல என்பதனால் அவைகளை ரசிக்க முடியாமல் மனதில் ஒட்டாமல் போய்விட்டன.

எல்லோர் வீட்டிலும் டி.வி வந்துவிட்டதே என்று குமார் எலெக்ட்ரானிக்ஸ்க்கு போய் ஃபிலிப்ஸ் போர்ட்டபிள் கருப்பு வெள்ளை ஒன்றை பூஸ்டருடன் சேர்ந்து என் அப்பாவும் வாங்கிவந்துவிட்டார். அன்றைக்கு மொட்டை மாடியில் ஒரு மிக நீளமான இரும்பு பைப்பின் உச்சியில் ஆன்டென்னாவை மாட்டுவதற்குப் பட்ட பாடு நன்றாய் ஞாபகமிருக்கிறது. பைப்பின் தலையில் ஆன்டென்னாவை மாட்டிவிட்டு அப்படியே புவியீர்ப்பு விசைக்கு எதிராய் அதை தூக்க வேண்டும். ஒரு கழைக்கூத்தாடியின் லாவகத்துடன் பாலன்ஸ் செய்து அது சரிந்து மண்டையில் விழுவதற்கு முன்பாக மொட்டைமாடிக் கைப்பிடிச்சுவரில் அடிக்கப்பட்டிருக்கும் க்ளாம்ப்-ல் சட்டென்று மாட்டிவிட வேண்டும். இப்படியாக எங்கள் வீட்டிலும் டி.வி.

அதற்கப்புறம் உலகம் படுவேகமாக சுருங்க ஆரம்பித்தது. ஆன்டென்னாவை கேரளத்தின் திசை நோக்கித் திருப்பினால் ஒளியும் ஒலியும் மற்றும் சித்ரஹாருக்கு கொஞ்சமும் குறைவில்லாத "சித்ர கீதம்" தெரிகிறது என்பதை என் அப்பா R&D பண்ணிக் கண்டுபிடித்தார். திருவனந்தபுரம் சேனல். வியாழக்கிழமை எட்டு மணிக்கு! ஆக கொஞ்சம் கொஞ்சமாய் எல்லோருடைய நேரத்தையும் சாப்பிட ஆரம்பித்தது டி.வி. நடுநடுவே Turning Point, The world this week போன்ற உருப்படியான நிகழ்ச்சிகள். ரேணுகா சஹானே மற்றும்... ம்ம்.. இன்னொருவர் பெயர் மறந்துவிட்டது... அவர்களிருவரும் சேர்ந்து நடத்திய "சுரபி" நான் வெகுவாக விரும்பிப் பார்த்த ஒன்று. அப்புறம் ்ஷாருக் கான் நடித்த ஃபாஜி மற்றும் சர்க்கஸ் என்ற ஸீரியல்கள். பங்கஜ் கபூர் நடித்த ஒரு சோக ஸீரியல். R.K. நாராயணின் மால்குடி டேஸ். மோகன் கோகலே நடித்த "மிஸ்டர் யோகி", திலிப்குமார் என்கிற ஒரிஜினல் பெயரில் ஏ. ஆர். ரஹ்மான் டைட்டில் மியூசிக் போட்ட உகாதி புரஸ்கார், அடிக்கடி ஒலிபரப்பின பூபேந்தர் சிங், மிடாலி கச்சேரி (பின்னாளில் இளையராஜா இந்த மிடாலியை "தளபதி" படத்தில் பாடவைத்ததற்கு நான் உளமாற பூரிப்படைந்தேன்), இடையிடையே ரெமோ ஃபெர்னாண்டஸ் பாப், ஜாவத் ஜாஃப்ரி நடனம் என்று கலவையாய் ஒரு மாதிரி பார்த்த வரைக்கும் நிறைவாகவே இருந்தது. டி.வியை மிக விரும்பிய காலகட்டம் அது. அருகில் போனால் அந்தக்கால ப்ளாக் அண்ட் ஒயிட் டி.விக்கு ஒரு வாசனைகூட இருந்ததாக ஒரு உணர்வு. பிரமையா என்று தெரியவில்லை. அதன் சேனல் செலக்டரை கடக் கடக் என்று திருப்பிப் பார்ப்பதில்கூட ஒரு சுகம் இருந்தது.

ராமாயணம், மகாபாரதம் என்று மெகா சீரியல்கள் ஆரம்பித்தபிறகுதான் டி.வி தன் உண்மையான சொரூபத்தைக் காட்ட ஆரம்பித்தது. அப்புறம் சந்திரகாந்தா வந்தவுடன் வில்லனின் யக்க்கூ யக்க்கூ என்ற கூவல் கேட்டது. ஜூனூன் வந்து ரசிகப் பெருமக்களைப் புரட்டிப்போட்டதில். தமிழகத்திற்கு புதிய தமிழ் கிடைத்தது. அப்புறம் சேனல்கள் ஒன்றாகி இரண்டாகி பல்கிப் பெருகத் தொடங்கின. அபாயமான உடைகளில் M டிவியில் 11 மணிக்குமேல் மாவு அரைக்க ஆரம்பித்தார்கள். ஆங்கில எழுத்துக்களின் அத்தனை எழுத்துகளிலும், அத்தனை கோள்களின் பெயரிலும் சேனல்கள் வர ஆரம்பித்தன. டெலிபோனில் கால்போட்டு பிடித்தபாட்டு கேட்க ஆரம்பித்தார்கள் மக்கள். கால்மேல் கால்போட்டு திரைப்பட விமர்சனம். நன்கு சூடான தோசைக்கல்லில் ஒரு டம்ளர் தண்ணீரை விசிறி அடிக்கும்போது எழும் சப்தம் மாதிரி துவக்க ம்யூசிக் போட்டு பயமுறுத்துகிற குரலில் தலைப்புச் செய்தி சொன்னார்கள். விளம்பர இடைவேளைகள் அதிகமாயின. டி.வியை தூரத்திலிருந்தே இயக்கிக்கொள்கிற வசதி வந்ததற்கப்புறம் மனிதன் இன்னும் அலைபாய ஆரம்பித்தான். 100 சேனல்கள் அவனுக்குப் போதவில்லை. இப்போது திரும்பின பக்கமெல்லாம் ஒளியும், ஒலியும்தான். தோசைமாவு, முறுக்குக் கம்பி, பேரீட்சம்பழத் தயாரிப்பாளர்கள் நிகழ்ச்சிகளுக்கு உபயதாரர்களாக ஆனார்கள். இடுப்பு வெட்டுகிற குத்துப்பாட்டுகளும், உதட்டு முத்தமும், நீர்வீழ்ச்சியில் உடல்கள் நனைந்த டூயட்டும், மேலாடை துறந்த ஃபேஷன் சேனல்களும் நம் அருமைக் குழந்தைகளுக்கு காணக்கிடைத்தன. வீடுதோறும் சீரியல்களின் ஒப்பாரி. காமெடி ஷோக்களில் நாம் சிரிப்பதற்கு வேலை வைக்காமல் அவர்களே ரெகார்டட் சிரிப்பலையை கூடவே ஒலிபரப்பிவிடுகிறார்கள். உலகத்தொலைகாட்சிகளில் முதன்முறையாக திரைக்கு வந்து சில தினங்களே ஆன படத்தை போட்டு ஐந்தே மணிநேரத்தில் முடித்துவிடுகிறார்கள். பெண்களை கும்பலாய் ஆடவிட்டு ஜவுளிக் கடல் விளம்பரங்கள் எடுக்கிற யுக்தி நமக்கு பழகிவிட்டது. நவரத்தினக்கல், வாஸ்து, எண்கணிதம் என்று திரையின் ஒவ்வொரு சதுர செ.மீ பரப்பையும் வாடகைக்கு விட்டுவிட்டார்கள். சினிமாவை, சினிமா உலகத்தைப் பொடிபண்ணி திரைக்கு வெளியே தூவுகிறது சேனல்கள். ரசிகப்பெருமக்கள் விழுந்துகிடக்கிறார்கள்.

நான் விளம்பரத் துறையில் இருந்தபோது அங்கு "Black Box" என்று வீடியோ கேஸட்டுகள் இருக்கும். இந்திய, அகில உலக நாடுகளில் எடுக்கப்பட்ட அருமையான விளம்பரப்படங்கள் அடங்கின கேஸட் அது. அது ஓட ஆரம்பிக்குமுன் டைட்டிலில் "Advertisements without the interruption of stupid programs" என்று போடுவார்கள். நான் அந்த ஹாஸ்யத்தை ரசித்திருக்கிறேன்.

இப்போது என்னிடம் ஒரு நல்ல கலர் டி.வி இருக்கிறது. ரங்கநாதன் தெரு முக்கில் வாங்கின ப்ளாஸ்டிக் கவர் அணிவித்த ரிமோட் இருக்கிறது. எப்போதாவது நேரம் கிடைத்தால் நல்லதும் கெட்டதுமாய் வண்டி வண்டியாய் கொட்டிக்கிடக்கிற அத்தனை சேனல்களினிடையே சிலவற்றைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கிறேன். அதில் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது. எது எப்படியிருந்தாலும் நான் முதன்முதலில் தரிசித்த மற்றும் ஸ்பரிசித்த அந்த முதல் டி.வியின் வாசனையை இப்போது உணரமுடியவில்லை.

பேறு

சிறுகதை
தமிழோவியம் டாட் காம் 17-04-05
அம்புஜம் வேலைக்கு வந்தால் தன்னை வந்து பார்க்குமாறு பரமேஷ் வீட்டில் சொல்லிவிட்டு வந்தான் ப்ரசன்னா. அவள் வந்தால் இரண்டில் ஒன்று கேட்டுவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். அவள் மறுபடி வேலைக்கு வரமுடியுமா முடியாதா?. மஞ்சு இருக்கிற நிலைமைக்கு இனியும் அவளால் எந்த வேலை¨யும் இழுத்துப்போட்டுக் கொண்டு செய்தால் பிற்பாடு ப்ரச்சனையாகிவிடும். வீட்டு வேலைக்கு யாரையாவது வைத்தே தீரவேண்டும். சமத்தாய் அம்புஜம் நாளையிலிருந்து வந்துவிட்டால் தேவலை.

இரண்டு நாள் முன்பு டாக்டர் சொன்னதை நினைத்து அவனுக்குள்ளே கனன்று கொண்டிருந்த சந்தோஷம் ஒரு கவலைச் சுழலுடன் கலந்து பொங்கிக் கொண்டிருந்தது. மஞ்சுவுக்கும் அப்படித்தானிருந்திருக்க வேண்டும். அவள் எதையும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல்தான் வீட்டுக்குள் உலவிக்கொண்டிருக்கிறாள். முதலில் சந்தோஷப்படுவதும் பிறகு அது தங்காமல் கலைந்துவிடுவதும் என நிறைய ஆகிவிட்டது. பத்தாம் மாசம் ஒரு பிள்ளையைக் கண்ணில் பார்த்தால்தான் இனி சிரிப்பெல்லாம் என்று முடிவு பண்ணிவிட்டவள்போல் இருந்தாள் மஞ்சு. அவளும் பத்து வருடமாக கோவில் குளம் பூஜை என்று அலைந்து வேண்டுதலில் உருகி நின்றதற்குப் பலனாய் டாக்டரின் வாயிலிருந்து இதோ நல்ல சேதி கிடைத்துவிட்டது.

இந்தத் தடவை மஞ்சுவுக்கு நாள் தள்ளிப்போனபோது எல்லா எதிர்காலக் கற்பனைகளையும் தற்காலிகமாய்த் தள்ளி வைத்துவிட்டு நேரே டாக்டரிடம் போனார்கள். நல்ல செய்திதான் என்று உறுதிப்பட்டுவிட்டபோதுகூட ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அர்த்தமாய் புன்னகைக்க கூட பயமாயிருந்தது. டெலிவரி வரைக்கும் ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று டாக்டர் சொல்லிவிட்டார். கடினமாய் எந்த வேலையையும் செய்வது பிரச்சனையை உண்டுபண்ணும் என்று கையுறைகளைக் கழற்றி வைத்துவிட்டு எச்சரித்தார் டாக்டர். மேலும் மஞ்சுவுக்கு உடம்பு பலவீனமாக இருக்கிறது. கவனமாக இருக்கவில்லையென்றால் அப்புறம் இதுவும் இல்லையென்று ஆகிவிடுமென்றார். மஞ்சுவுக்கு முப்பத்தைந்து வயதாகிவிட்டதும் ஒரு காரணம். இதற்கு முன்னால் இரண்டு தடவை அபார்ஷன் வேறு.

"ஸோ.. பாத்துக்குங்க. ஆறாவது மாசத்திலேயே உங்க ஒயிஃப்-ஐ அட்மிட் பண்ணி அப்ஸர்வேஷன்ல வெக்க அவசியம் வந்தாலும் வரலாம். பார்ப்போம்! ஆல் த பெஸ்ட்.."

லேசாய் மிதக்கிற குழந்தைக் கனவுகளுடனும், கொஞ்சம் டானிக் மாத்திரைகளுடனும் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது மஞ்சுவை அப்படியே தூக்கி கரகரவென்று சுற்றவேண்டுமென்கிற ஆவலை அடக்கி மென்மையான முத்தத்துடன் நிறுத்திக்கொண்டான். ரொம்ப சந்தோ்ஷம் வேண்டாம். எதற்கும் உத்தரவாதமில்லை. போன தடவை மாதிரியே நடுவில் சிக்கலானால் அப்புறம் எல்லாக் கனவுகளும் சரிந்துவிடும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இயல்பாய் இருப்பதே நலம்.

இனி மஞ்சுவை அதிகம் வேலை செய்யவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் இரண்டுபேர் மட்டும் இருக்கிற அந்த வீட்டில் அவளைப் பார்த்துக்கொள்ள ப்ரசன்னாவை விட்டால் ஆள் கிடையாது. பார்த்துக்கொள்ள ஆளில்லாவிட்டாலும் பரவாயில்லை. வேலை செய்ய யாராவது ஆள் இருந்தால் தேவலை. அம்புஜம் வரவேண்டும். பரமேஷ் வீட்டில் சொல்லிவைத்திருப்பதால் அம்புஜம் அங்கே வேலைக்கு வரும்போது தகவல் சொல்லிவிடுவார்கள். ஆனால் பழைய கோபத்தை வைத்துக்கொண்டு அவள் வராமல் இருந்துவிடுவாளா என்று யோசனையாய் இருந்தது. இருந்தாலும் கேட்டு வைத்தால் என்ன கெட்டுப்போய்விடும்? ஐம்பது ரூபாய் ஜாஸ்தியாய் தருகிறேன் என்றால் வராமலா இருப்பாள்?

அந்தப் பெண் செல்வி அத்தனை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கொண்டு போகாமல் இருந்திருந்தால் அவளாவது இன்னும் வேலையில் இருந்திருப்பாள். இத்தனை பெரிய நகரத்தில் வீட்டு வேலைக்கு ஒரு நல்ல ஆள் கிடைப்பது எத்தனை கஷ்டமாயிருக்கிறது!

அன்றைக்கு டாக்டரிடமிருந்து திரும்பியதிலிருந்து ப்ரசன்னாவும், மஞ்சுவும் அதிகம் பேசவில்லை. அதுவும் நல்லதுதான். எதற்காகவும் மஞ்சு அதிகம் உணர்ச்சிவசப்படுவதேகூட நல்லதல்ல என்று தோன்றியது ப்ரசன்னாவுக்கு. அன்றிரவு படுக்கப் போகுமுன் அவளை மடியில் சாய்த்துக்கொண்டு லேசாய் அவளது அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தான். அவனால் நம்பமுடியவில்லை. பத்து வருடத்திற்குப் பின் அத்தனை நம்பிக்கைகளும் நசித்துப் போனபின் மறுபடி உதித்திருக்கிற தளிர். மஞ்சு அவனது உள்ளங்கையில் முகத்தைப் பதித்துக்கொண்டு லேசாய் சப்தமின்றி அழுதாள். இருவருக்குமிடையே ஏற்பட்ட நெகிழ்வில் அவளை மெதுவாய் இறுக்கிக் கொண்டான். "நீ எதுக்கும் கவலப்படாதடி. நான் பாத்துக்கறேன். நாளைக்கு அம்புஜம் வேலைக்கு வந்துட்டா.. அப்றம் உனக்கு கம்ப்ளீட் ரெஸ்ட்தான்" என்று காதோரம் கிசுகிசுத்தான். அவ்வளவு நெருக்கத்தில் காதோரக் கிசுகிசுப்பாய் சொல்ல அம்புஜம் மேட்டர்தானா கிடைத்தது என்று உடனே அசந்தர்ப்பமாக உணர்ந்தான்.

மறுநாள் காலை எட்டு மணிக்கு அழைப்பு மணி அடித்தபோது அம்புஜமாகத்தான் இருக்கும் என்று ஏனோ நினைத்துக் கொண்டு கதவைத் திறந்தான் ப்ரசன்னா. அங்கே செல்வி நின்று கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் தயக்கத்துடன் கொஞ்சம் பின்வாங்கி நின்று கொண்டு "நல்லாருக்கீங்களாண்ணே!!" என்றாள்.

முகத்தில் திகைப்பை விடுவித்துவிட்டு "என்ன செல்வி! ஏது இவ்ளோ தூரம்?" என்றான்.

அவளை திடீரென மறுபடி பார்த்ததில் ஆச்சரியமாயிருந்தது அவனுக்கு. அவன் கதவைத் திறக்குமுன்னரே பழைய பழக்கத்தில் அவள் செருப்பை ஓரமாய்க் கழற்றி வைத்துவிட்டு நின்றிருந்ததைப் பார்த்தான்.

"அண்ணே! வேலைக்கு ஆள் வேணும்னு சொன்னீங்களாமே..." என்றாள் மேலும் தயங்கியபடி.

"உனக்கு யார் சொன்னாங்க? உள்ள வா!" என்று வழிவிட்டான்.

செல்வி உள்ளே வந்து சுவரோரமாய் ஒடுங்கி நின்றாள். ஒண்ணரை வருஷமிருக்குமா இவள் வேலையைவிட்டுப் போய்? ரொம்பவே மாறியிருந்தாள். முதலில் தாவணியோ சுரிதாரோ போட்டுக்கொண்டுதான் வேலைக்கு வருவாள். இப்போது சேலை. முகத்தில் லேசாய் பவுடர் பூச்சு. வகிட்டில் தீற்றிய குங்குமம். பழைய குழந்தைத்தனம் போய் லேசாய் பெரிய மனுஷித்தனம் தெரிந்தது இப்போது.

குரல்கள் கேட்டு மஞ்சு வெளியே வந்து செல்வியைப் பார்த்து சிரித்தாள்.

"உம் புருஷன் எப்படியிருக்காம்மா?" என்றான் ப்ரசன்னா.

"இருக்குது" என்றாள் சுரத்தில்லாமல். சொன்ன மறுமணம் அவள் முகம் மிகவும் சோர்ந்து போய்விட்டது.

"எங்க வேலைக்கு போறாரு?"

"இப்ப வேல இல்லக்கா! மின்ன போயிட்டிருந்த ஆபிசுல மொதலாளி அவரை வேலையிலிருந்து நிப்பாட்டிருச்சு. இப்ப சும்மா கெடக்குது வூட்ல. வேறெங்கியும் வேல தேடக் காணம். அதுக்கொரு வேல கெடைக்கற வரைக்கும் நான் வேலைக்கு போலாம்னு.." என்றாள்.

"கொழந்த?"

"ஒரு பொண்ணுக்கா! கொளந்தைய அவரு பாத்துக்குவாரு. ஒண்ணும் பிரச்சினையில்ல"

ப்ரசன்னாவும் மஞ்சுவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். திடீரென்று அவள் இப்படி வந்து நின்றதில் இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. பரமேஷ் வீட்டிலிருந்து இவளுக்கு விஷயம் தெரிந்திருக்கவேண்டும். அவள் நிலைமையை யோசித்தால் பரிதாபமாக இருக்கிறது. மேலும் செல்வி மேல் ப்ரசன்னாவுக்கு எப்போதுமே ஒரு அனுதாபம் உண்டு.

"எப்படியும் ஒரு ஆள் வேணும் செல்வி. அம்புஜத்தை கேட்டிருந்தோம். ஒனக்கு முடியும்னா வா! என்ன சொல்ற?!" என்றாள் மஞ்சு.

செல்வி உடனே அகமகிழ்ந்துவிட்டு 'வூட்ல சொல்லிட்டு இப்பவே வந்துடறேன்' என்று நகர்ந்தாள். ப்ரசன்னாவுக்கு லேசாய் நிம்மதிப் பெருமூச்சு வந்து போனது. மஞ்சுவுக்கும்கூட!

செல்வி திரும்பவும் வந்து அன்றைக்கே வேலையை ஆரம்பித்துவிட்டாள். உடனே அடுக்களைக்குப் போய் பழைய துணி ஒன்றை சேகரித்துக்கொண்டு வந்து டி.வி ஸ்டேண்ட் மேலுள்ள புத்தர் சிலையை எடுத்துத் துடைக்க ஆரம்பித்தாள். ப்ரசன்னாவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அவள் முன்பு வேலைக்கு வந்துகொண்டிருந்த போதுகூட இதே மாதிரிதான் பண்ணுவாள். அப்போதெல்லாம் வாரத்துக்கொருமுறை வீடு முழுக்கத் தூசி தட்டி சுத்தம் பண்ணுகிற சமயங்களில் அவள் தவறாமல் இந்த புத்தர் சிலையிலிருந்துதான் வேலையை ஆரம்பிப்பாள். நேராய் வந்து முதலில் டி.வி ஸ்டாண்டின் மேலிருந்து புத்தரை எடுத்து பளபளவென்று துடைத்து வைத்துவிட்டுப் பிறகு ஓரிரு விநாடிகள் அதன் மெட்டாலிக் பளபளப்பைப் பார்த்துக்கொண்டிருப்பாள். பிறகுதான் மற்ற பொருளெல்லாம். இதை ப்ரசன்னா எத்தனையோ தடவைகள் கவனித்திருக்கிறான். புத்தர் சிலையிலிருந்து ஆரம்பிப்பது என்ன கணக்கென்று புரியவில்லை. இல்லை அவளுக்கு அது ரொம்பப் பிடித்திருக்கிறதோ என்னமோ. ஒரு நாள் கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.

****************

செல்வியைப் பற்றி யோசித்துக்கொண்டே கிளம்பி ஒரு சின்ன வேலையாய் ஆடிட்டரைப் பார்க்கப் போனான். அவர் வருவதற்கு கொஞ்சம் காத்திருக்க வேண்டியிருந்தது. இடைப்பட்ட நேரத்தில் ஒரு வேலைக்காரி துடைப்பத்துடன் வந்து 'கொஞ்சம் எந்திரிச்சீங்கன்னா.. ரூம க்ளீன் பண்ணிர்ரேன்.' என்றபோது அவனுக்கு மறுபடி செல்வி ஞாபகம் வந்துவிட்டது. பாவம் எத்தனை சின்னப்பெண். படிப்பும் விளையாட்டுமாய் இருக்கவேண்டிய இந்த சின்ன வயசில் கல்யாணம் பண்ணிக்கொண்டு.. ச்சே! நினைக்கவே கோபமாய் வருகிறது. மனசளவில் எந்த முதிர்ச்சியும் இல்லாத அவள் கையில் இப்போது ஒரு குழந்தை. அந்தப் பெண்ணுக்கு மீறிப் போனால் இப்போது ஒரு பதினெட்டு வயது இருக்குமா? அவள் புரு்ஷன் அவளை விட ஒரு வயசோ ரெண்டு வயசோ பெரியவன். அவ்வளவுதான்.

செல்வி வேலைக்கு வருவதற்கு முன் அவளது அம்மாதான் ப்ரசன்னா வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தாள். கொஞ்சம் சுறுசுறுப்பான ஆள்தான். 'கெட்டிக்காரி பொம்பளை' என்று மஞ்சு அடிக்கடி சொல்லுவாள். துவைப்பது, பெருக்குவது, பாத்திரம் கழுவுவது என்று எந்த வேலையானாலும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் முடித்துவிட்டு அடுத்த வீட்டுக்குப் போய்விடுவாள். அப்படியே பிஸியாகி தன் நெட்வொர்க்கை விஸ்தரித்துவிட்டாள். முதலில் ஒன்றிரண்டு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தவள் குறுகிய காலத்திலேயே வளர்ந்து பதிமூன்று வீட்டுக்கு வேலை செய்ய ஆரம்பித்தாள். ஒருநாள் திடீரென்று 'இனிமே உங்க வூட்டுக்கு எம்பொண்ணுதான் வேலைக்கு வரும்' என்று அறிவித்த கையோடு செல்வியை அனுப்பி வைத்தாள். வந்து நின்ற செல்விப் பெண்ணுக்கு அப்போது பதினைந்து வயதுதான் இருக்கும். பத்தாம் கிளாஸ் பாஸ் செய்த கையோடு வேலைக்கு வந்திருந்தது. அம்மாவுக்கு எந்த விதத்திலும் சளைக்காமல் பம்பரமாய் சுழன்று வேலை செய்ய ஆரம்பித்தாள். செல்வியோ அவள் அம்மாவோ யாராவது ஒருவர்! ஒழுங்காய் வேலை நடந்தால் சரி என்று ப்ரசன்னாவும் மஞ்சுவும் அந்த திடீர் ஆள் மாற்றலைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை.

செல்வியிடம் "ஏன் மேல படிக்கல" என்று கேட்டபோது. 'வசதியில்லீங்க' என்று பதில் வந்தது. இத்தனைக்கும் அவள் எஸ்.எஸ்.எல்.ஸி பாஸ் செய்திருக்கிறாள் எனும்போது அவள் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டாள் என்கிற செய்தி அத்தனை ரசிக்கவில்லை ப்ரசன்னாவுக்கு. அவள் அம்மாவை ஒருநாள் வரச்சொல்லிப் பேசினான்.

"இங்க பாரும்மா.. பத்தாங்கிளாஸோட படிப்ப நிறுத்திட்டு பாத்திரம் கழுவி முந்நூறு ரூபா சம்பாதிக்கறதுக்கு பதிலா.. செல்வி அட்லீஸ்ட் ப்ளஸ் டூ முடிச்சான்னா ஏதாவது கடையில சேல்ஸ் கேர்ள் மாதிரி வேலைக்கு போலாமில்ல. கொறஞ்சது ஆயிரம் ரூபாயாச்சும் சம்பாதிக்கலாம். வசதியில்லன்னா சொல்லு. நான் என் செலவுல படிக்க வெக்கறேன். ஸ்கூல் படிப்பு நேரம் போக மீதி நேரம் இங்க வந்து வேல செய்யட்டும். பொண்ணு படிச்ச மாதிரியுமாச்சு. வேல செஞ்சமாதிரியும் ஆச்சு!!

நிறைய வாக்குவாதத்துக்கப்புறம்தான் செல்வியின் அம்மா ஒத்துக்கொண்டாள். ப்ரசன்னா மற்றும் மஞ்சுவின் தாராள மனத்தை நினைத்து கண்களைத் துடைத்தவாறே அரை மனதாய் தலையாட்டினாள். உடனே அவன் மள மளவென்று எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிட்டான். செல்விக்கு புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தான். செல்வி ஸ்கூலில் ப்ளஸ் ஒன் சேர்ந்த முதள் நாள் அதிகாலையில் வந்து இருவரையும் தூக்கத்திலிருந்து எழுப்பி திடீரென்று காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிப் போனாள். அதற்கடுத்த கால் பரீட்சையில் நல்ல மார்க் எல்லாம்கூட எடுத்து ரிப்போர்ட்டை இருவரிடமும் காட்டினபோது உருப்படியான காரியம்தான் பண்ணியிருக்கிறோம் என்று திருப்தியாயிருந்தது ப்ரசன்னாவுக்கு.

ஆனால் அரைப்பரீட்சை வருவதற்குள் நிலைமை மாறிவிட்டது. ஒரு நாள் திடீரென்று செல்வியுடன் அவள் அம்மா வந்தாள். செல்விக்கு சொந்தத்தில் மாப்பிள்ளை பார்த்துவிட்டதாகவும் அடுத்த மாசம் கல்யாணம் எனவும் சொல்லிவிட்டு "எம்பொண்ணு படிப்புக்கு எத்தனயோ செஞ்சிருக்கீங்க சாமி. இனி அவ வேலைக்கு வர மாட்டா. மன்னிச்சுக்குங்க!!" என்றாள்.

"என்னம்மா இது? அவளுக்கு இன்னும் வயசு பதினாறுகூட முடியல. அதுக்குள்ள கல்யாணமா?"

"தப்பா நெனச்சுக்காதீங்க. நெலம அப்படித்தான். இத தாட்டிவுட்டாதான் அடுத்து இருக்கற ரெண்டு பொட்டப் புள்ளைங்களை கரயேத்த முடியும். ஏதோ இவளுக்கு அதிஸ்டமா தானா வந்து அமைஞ்சுருக்கு. சட்டுப் புட்டுன்னு முடிச்சுர்றதுதான நல்லது." என்றாள்.

ஒரு சுபமுகூர்த்தச் சுப தினத்தில் செல்வி கல்யாணம் பண்ணிக்கொண்டு போய்விட்டாள்.

*********

இப்போது மீண்டும் செல்வியின் வரவு. ஒரு வேலைக்காரியின் மிக அவசியத் தேவையின் சமயத்தில் நிகழ்ந்திருக்கிற அவள் பிரவேசம் கொஞ்சம் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. குறைந்த பட்சம் ஒரு வருஷத்திற்காவது இவள் இங்கே தங்கினால் நல்லது. இல்லையேல் வேறு யாரையாவது தேடி மறுபடி அலைய வேண்டியிருக்கும். பழைய சம்பளத்துடன் கூட நூறு ரூபாய் வேண்டுமானால் ஜாஸ்தியாகப் போட்டுக்கொடுத்துவிடலாம் என்று தோன்றியது. பாவம்! இப்போது அவள் சின்னப் பெண் இல்லை. குடும்பஸ்தி! அப்புறம் அவன் புருஷன் வேலையில்லாமலிருக்கிறதாகச் சொன்னாளே! அவனையும் வரச்சொல்லி ரெண்டு அதட்டு அதட்டி உருப்பட வைக்கமுடியுமா என்று பார்க்கவேண்டும். மஞ்சுவின் டெலிவரி வரை செல்வி ஒத்தாசையாய் இருந்து அவளை அலுங்காமல் பார்த்துக்கொள்வாளேயாயின் அவள் குடும்பத்துக்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இந்த மாதிரி ஒரு உணர்ச்சி வேகத்தில் ப்ரசன்னாவுக்கு என்னென்னவோ சிந்தனைகள் வந்து விழுந்தன.

சாயங்காலம் வீட்டுக்குப் போனபோது மஞ்சு கதவைத் திறந்துவிட்டு விட்டு அடுக்களைக்குப் போய், விட்ட இடத்திலிருந்து மறுபடி பாத்திரம் கழுவ ஆரம்பித்தாள். ப்ரசன்னாவுக்கு ஒன்றும் புரியவில்லை.

உள்ளே வந்து "மஞ்சு இதெல்லாம் நீ எதுக்கு பண்ற? எதுக்கு இப்படி ரிஸ்க் எடுத்து உடம்பை அலட்டிக்கிற? நாளைக்கு செல்வி வந்து இதெல்லாம் பண்ணுவால்ல!" என்றான் அவன் லேசான கோபத்துடன்.

"செல்வியை நாளையிலேர்ந்து வர வேண்டான்னு சொல்லிட்டேன்" என்றாள் மஞ்சு.

ப்ரசன்னா புரியாமல் நின்றான். முகத்தில் குழப்பம் சூழ ஏனென்று கேட்க வாய் திறக்குமுன் மஞ்சுவே சொன்னாள்.

"ஏன் தெரியுமா? செல்வியும் முழுகாம இருக்கா!"

ப்ரசன்னா லேசான பெருமூச்சுடன் திரும்பி டி.வி ஸ்டாண்ட் மேலிருக்கிற புத்தர் சிலையை அமைதியாய் வெறிக்கத் தொடங்கினான்.