என். சொக்கனின் 'ஏ.ஆர் ரஹ்மான்'

’ஹைவே’ படத்திலிருந்து ஏ.ஆர். ரஹ்மானின் Implosive silence என்கிற இசையைக் கேட்டுக்கொண்டிருந்தபோது நண்பர் என். சொக்கன் எழுதிய ஏ.ஆர்.ரஹ்மான் புத்தகம் எனது ஃபோல்டருக்குள் (மின்புத்தகமாக) வெகுகாலமாகப் படிக்கப்படாமல் தூங்கிக்கொண்டிருப்பது ஞாபகம் வந்தது. இனியும் தாமதிக்கலாகாது என எடுத்தேன். ஒரே மூச்சில் படித்து முடித்தேன். இப்படிச் சொல்வதிலிருந்தே அது எவ்வளவு விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்டிருந்தது என்பதை சொல்லத்தேவையில்லை என்று நினைக்கிறேன். மிக அருமையாக, எளிமையாக, அரிய தகவல்களுடன்.

பொள்ளாச்சியில் நண்பர்கள் குழுவுடன் இளையராஜா, மற்றும் இன்னபிற இசையமைப்பாளர்களின் பாடல்களை சிலாகித்தும், கேட்டுப் புளகாங்கிதம் அடைந்தும் திரிந்துகொண்டிருந்த காலகட்டம். பொள்ளாச்சியின் கிராமங்களில் சுற்றித் திரியும்போது பின்னணியில் எங்கேயாவது எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் இளையராஜாவின் கிராமம் சார்ந்த படப்பாடல்கள் (கிழக்கு வாசல், சின்னத் தம்பி, மற்றும் பல ராமராஜன் படத்துப் பாடல்கள்) அந்தச் சூழ்நிலைக்குப் பொருத்தமானதாக, மனதுக்கு மிக நெருக்கமானதாக இருந்தன. 'மொட்டை.. சான்ஸே இல்ல..’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டு வெளியாகும் ராஜாவின் பாடல்களை ஒன்று விடாமல் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டு கிடந்த சமயத்தில் இனிய அதிர்ச்சியாக, அழகான ஆச்சரியமாக வந்து விழுந்தது “சின்னச் சின்ன ஆசை..”. ’யாருய்யா இது?’ என்று நிமிர்ந்து உட்கார்ந்தோம். முற்றிலும் புதிதாக, வித்தியாசமாக அதே சமயம் அட்டகாசமான பாடல்கள்.

சின்னச் சின்ன ஆசை வருவதற்கு முன்னரே DD-யில் வரும் உகாதி புரஸ்கார் என்னும் நிகழ்ச்சியில் ஏ.எஸ்.திலீப்குமார் இசைத்த அருமையான டைட்டில் இசைக்கு ரசிகனாக இருந்தேன். வாராவாரம் அதைக் கேட்பதற்காகவே அந்நிகழ்ச்சியைப் பார்ப்பேன். அந்த திலீப்குமார்தான் இந்த ரஹ்மான் என்றறிந்ததில் மேலும் ஆச்சரியமாகிப் போனது.

அடுத்தடுத்து வந்த ரஹ்மான் பாடல்கள் திரையிசையில் ஒரு புதிய துவக்கம் நிகழ்ந்திருப்பதை அறிவித்தவண்ணம் இருந்தன. அன்றைக்கு ஆரம்பித்து இன்றுவரை ரஹ்மானின் மகா ரசிகனாக ஆனவன் நான்.

ராஜாவைப் போலவே ரஹ்மானும் ஒரு மகா இசை ஆளுமை. ராஜாவை எவ்வளவு பிடிக்குமோ ரஹ்மானையும் அதே அளவு பிடிக்கும். ஒரு அபாரமான பர்சனாலிட்டியாகவும் ரஹ்மானை எனக்கு மிகவும் பிடிக்கும். ரஹ்மான் பிரபலமடையத் தொடங்கியிருந்த ஒரு காலகட்டத்தில் சென்னை ஸ்பென்ஸர் ப்ளாசா லாண்ட்மார்க் புத்தகக் கடைக்கு ஒரு முறை சென்றிருந்தேன். என் அருகில் நின்று ஷெல்ஃப்பிலிருந்து ஏதோ புத்தகத்தை மேய்ந்து கொண்டிருந்தவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. பிறகு சட்டென்று புரிந்துகொண்டேன். அவர் பாடகர் ஸ்ரீநிவாஸ். அவரோ புத்தகத்தில் ஒரு கண்ணை வைத்துக்கொண்டு திரும்பித் திரும்பி யாரையோ பார்த்துக்கொண்டிருந்ததை கவனித்தேன். ஆர்வமேற்பட்டு நானும் திரும்பிப் பார்த்தால் ஒரு பத்து பேருக்கு மத்தியில் நடுநாயமாக நின்றுகொண்டு ஏதோ இசை ஆல்பத்தை வெளியிட்டுக்கொண்டிருந்தார் ரஹ்மான். அப்போது இந்த மனிதர் இவ்வளவு உயரம் போவார் என்று தெரிந்திருக்கவில்லை.

இந்தப் புத்தகத்தில் சின்னச் சின்னச் சுவாரஸ்யமான தகவல்களுடன் ரஹ்மானின் இசைப் பயணத்தை, வாழ்க்கையை, அவரது உழைப்பை, இசையில் இந்த உயரத்தை எட்ட ரஹ்மான் அனுபவித்த கஷ்டங்களை ஒரு சாதாரணனுக்குக் கதை சொல்வது போலச் சொல்கிறார் சொக்கன். இந்தப் புத்தகம் ஒரு சின்ன மன எழுச்சியைக்கூட தந்தது எனலாம். கடின உழைப்பு + வித்தியாசமான சிந்தனைகள் + தொடர்ந்து கற்றுக்கொண்டே இருத்தல் + செய்வதை புதிதாக, நேர்த்தியாகச் செய்தல் + எப்போதும் அமைதியாக, தளும்பாமல் ’என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்றிருத்தல் - இவைதான் மாபெரும் வெற்றிக்கான சூத்திரம். இதையும் இந்தப் புத்தகத்தில் ரஹ்மானின் வாழ்க்கையை படிப்பதினூடே உணர்ந்துகொள்ளவும் முடிவதே அந்த மன எழுச்சிக்குக் காரணம்.

இப்புத்தகத்தை இலவசமாக அளித்த என்.சொக்கனுக்கு நன்றிகள் பல.

இந்த இலவச மின்புத்தகத்தை PDF ஆக டவுன்லோடு செய்து படிப்பதற்கான சுட்டி கீழே:

http://600024.com/store/a-r-rahman-biography-free-tamil-e-book

புதிய முகங்கள். புதிய கதைகள்.

இருபத்தைந்து வருடங்களுக்குமுன் நான் படித்த கல்லூரியின் வகுப்பு தோழர்களுடன் சுத்தமாக தொடர்பு அற்றுப்போயிருந்த நிலையில் திடீரென்று இந்த இரண்டு நாட்களாக ஏகப்பட்ட தொலைபேசி அழைப்புகள். எப்படியெப்படியோ என்னைத் தேடிக் கண்டுபிடித்து ஒவ்வொருவராக பேசிக்கொண்டிருந்தார்கள். நான் எப்படி அவர்களைத் தேடிக்கொண்டிருந்தேனோ, அதே மாதிரி சில பேர் என்னையும் வெகுநாட்களாகத் தேடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். கூடப் படித்தவர்களில் ஒருவர் கூட தொடர்பிலில்லை என்ற நிலை மாறி இப்போது கிட்டத்தட்ட எழுபது பேரின் தொலைபேசி எண்கள் கிடைத்திருக்கின்றன.

நானும் சிலரை தொடர்புகொண்டு பேசினேன். பேச்சில் நிறைய பழைய, புதிய சுவாரஸ்யமான கதைகள் வலம் வந்தன. அதே உற்சாகம், அதே நட்பு, சில பேர் உழைப்பால் உயர்ந்த நிலைக்குப் போயிருக்கிறார்கள். சிலருக்கு வாழ்க்கை வேறுவிதமான அனுபவங்களைக் கொடுத்திருக்கிறது. காலம் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு சூழ்நிலைகளில் ஒவ்வொரு மாதிரி வைத்திருக்கிறது என்பதை உணரமுடிந்தது.

’ரங்கராஜ் எங்கடா இருக்கான். அவனுக்கு நான் ரெண்டாயிரம் ரூபா கடன் தரணும்..” என்று எண்பதுகளின் இறுதியில் வாங்கின கடனை இப்போது திருப்பிச் செலுத்தத் துடிக்கிற ஒருவன். நான்கடி உயரத்தில் ஒல்லியாக, குள்ளமாக, ’ஷை’ டைப்பாக இருந்த, “குட்டி மணி” என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட, ஆனால் இப்போது உயரமாய், வளர்த்தியாய் தமிழ்ப்பட ஆந்திரா வில்லன் போல சுமோவில் வந்திறங்கும் ஒருவன் என பலப்பல கதாபாத்திரங்கள். தோற்றங்களை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை மீசை தாடியில்தான் ஆரம்பிக்கிறது இயற்கை. பின்னர் முன்வழுக்கையாக, தொந்தியாக தொடர்கிறது. அவர்களின் ஃபேஸ்புக் புகைப்படங்களிலிருந்து இன்னார் என்று அடையாளப்படுத்திக்கொள்வதே சிரமமாக உள்ளது. சிலபேர் அப்படியே இருக்கிறார்கள். அல்லது அது பழைய புகைப்படங்களாக இருக்கவேண்டும். ஓரிரு நண்பர்கள் இறந்துவிட்டார்கள்.

தொலைபேசியில் நண்பர்கள் “ஆனந்த் தெரியும்ல, செந்தில்குமார் நினைவிருக்கா.. அப்புறம் நம்ம மாணிக்கவாசகம் இருக்கான்ல..” என்றெல்லாம் கேட்கும்போது அவர்களின் முகங்கள் சட்டென்று ஞாபகத்தில் அகப்படாமல் மனதில் அலைக்கழிப்பு நிகழ்வது தர்மசங்கடம்தான். செந்தில்குமார் போன்ற பொதுவான பெயர்கள் தரும் குழப்பம் ஒரு புறம் இருக்க, நினைவில் பதிந்து போன முகங்கள் ஞாபகமறதியால் தேய்ந்துபோய்விட்டன. நண்பர்களுக்கும் அப்படித்தான். இருபத்தைந்து வருடங்கள் நிறைவதை முன்னிட்டு 2014-ல் ஒரு அலும்னி சந்திப்புக்கு ஏற்பாடுகள் நடக்கின்றன. பழைய நட்பின் புதிய முகங்களைக் காணவும், இன்னும் புதிய கதைகளைக் கேட்கவும் காத்துக்கொண்டிருக்கிறேன்.

வட போச்சே - 2

அந்தப் பிரபல எழுத்தாளர் பொள்ளாச்சியில் ஒரு லாட்ஜில் பிற திரைப்படக் கலைஞர்களுடன் தங்கியிருந்தார். அப்போது உலக நாயகன் நடித்துக்கொண்டிருந்த ஒரு திரைப்படத்தில் அவர் பணியாற்றுவதற்காக வந்திருந்தார். முன்பே கடிதத் தொடர்புகள் மூலம் நண்பர் சரசுராம் அவருக்குப் பழக்கமாயிருந்தார். நாங்கள் எழுத்தாளரின் செல்வாக்கில் படக்குழுவினருடனேயே மூன்று நாட்கள் சிங்காநல்லூர், சூலக்கல் போன்ற இடங்களில் சுற்றிக்கொண்டிருந்தோம்.

சரசுராம், மீன்ஸ், நான் - மூவரும் அவரை சந்திப்பதற்காகச் சென்றிருந்தோம். சுமாரான அந்த லாட்ஜில் எழுத்தாளருக்கு ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அபாரமான எழுத்தாளராகிய அவர் எங்களுடன் அவரது கதை / திரைப்பட / அனுவங்களைப் பற்றி உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தார். வந்து நின்ற லாட்ஜ் பையனிடம் வடையும், டீயும் ஆர்டர் செய்தார். ஒரு பத்து நிமிடம் கழித்து ஆர்டர் செய்த உளுந்து வடையையும், அதனுடன் தேங்காய்ச் சட்டினியையும் டேபிளில் பரப்பிவிட்டுப் போனான் லாட்ஜ் பையன்.

இலக்கியம், சிறுகதைகள், சினிமா என்று கலந்து கட்டி சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டிருந்தது எங்கள் பேச்சு. அப்போது மிக ஒல்லியாக ஒருவர் உள்ளே வந்தார். எழுத்தாளரைப் பார்த்துச் சிரித்தார். இருவரும் என்னவோ பேசிக்கொண்டார்கள். அப்போது எழுத்தாளர் எங்களிடம் இவர் யார் என்று தெரிகிறதா என்று கேட்டார். எனக்கு சுத்தமாகத் தெரியவில்லை. ஆனால் சரசுராமும், மீன்ஸூம் லேசாக அவரை அடையாளம் கண்டுகொண்டு, ஒரு படத்தின் பெயரைச் சொல்லி அதில் நடித்தவர்தானே என்று கேட்டார்கள். அவரும் தான் இவ்வளவு சீக்கிரம் அடையாளம் காணப்பட்டது குறித்து மகிழ்ந்து ‘ஆமாம்’ என்றார். பிறகு நண்பர்களிருவரும் வளரும் நடிகரான அவர் நடிப்பு பற்றி பாராட்டி வாழ்த்துகள் சொன்னார்கள். எளிமையான அந்த நடிகர் சுற்றுமுற்றும் பார்த்தார். பிறகு இயல்பாக டேபிளிலிருந்த வடையொன்றை படக்கென்று எடுத்து அதை சட்னியில் முக்கிவிட்டு டபக்கென்று வாய்க்குள் தள்ளினார். இந்த எதிர்பாராத செய்கையின் மூலம் வடைகளின் எண்ணிக்கையில் ஒன்று திடீரென குறைந்தது ஒரு திடுக்கிடல் சம்பவமாக இருந்தது. வடை சாப்பிட்டவுடன் நடிகர் ’வரட்டா’ என்று கிளம்பிப் போய்விட்டார். பிறகு மறுபடியும் வடையை ஆர்டர் பண்ணினோமா, இல்லை இருந்த வடைகளையே ஆளுக்குக் கொஞ்சம் பிய்த்துத் தின்றோமா என்றெல்லாம் இப்போது நினைவில்லை. ஆனால் தமிழ்கூறும் நல்லுலகிற்கு இப்படியொரு டைட்டில் கிடைத்ததே அந்த நடிகரால்தான். அந்த எழுத்தாளர்: ம.வே.சிவகுமார்.

வடைபோச்சே - 1:

வட போச்சே - 1

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் இந்த ஸ்டேட்டஸைப் படித்ததும் முன்னொருநாள் நடந்த சம்பவம் ஒன்று ஞாபகத்திற்கு வந்தது. https://www.facebook.com/appadurai.muttulingam/posts/563785150363657:0

நானும் எனது நண்பர் ஒருவரும் ஒரு க்ளையண்டைப் பார்க்கச் சென்றிருந்தோம். க்ளையண்ட் ஆகப்பட்டவர் வீட்டிலேயே ஒரு பெட்ரூமை அலுவலகமாக மாற்றியிருந்தார். அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது சமையலறையிருந்து வடை சுடுகிற வாசம் வந்தது. சிறிது நேரம் கழித்து அவரது மனைவியார் ஒரு தட்டில் ஒரு பத்துப் பதினைந்து சூடான மசால் வடைகளைக் கொண்டுவந்து நாங்கள் சாப்பிடுவதற்காக வைத்தார்.
கூடவே தேநீரும். க்ளையண்ட் ரொம்ப நேரமாக நிறுத்தாமல் பேசிக்கொண்டேயிருந்ததால் இடையில் குறுக்கிடவேண்டாம் என்று நாகரிகம் கருதி நானும் நண்பரும் தட்டில் கைவைக்கவில்லை. மசால்வடை என்பது எனக்கு மிகவும் பிடித்த ஐட்டம் என்பதால் ஒரு குறுகுறுப்பு இருந்துகொண்டே இருந்தது.

இப்படியே பல நிமிடங்கள் கழிந்தன. வடைகளிலிருந்து வெளியேறும் ஆவி நின்றுபோனதை வைத்து சூடு ஆறிவிட்டதென்பதை உணர்ந்தோம். திடீரென அவர் தேநீர் ஆறுகிறது குடியுங்கள் என்று சொல்லிவிட்டு வடைகள் இருந்த தட்டை மேஜைக்கு அந்தப்பக்கம் எங்கள் கைகளுக்கு எட்டாத இடத்திற்கு நகர்த்தி வைத்துவிட்டு லாப்டாப்பில் மும்முரமாக எதையோ காண்பிக்க ஆரம்பித்தார்.

இப்படியாக இருபது நிமிடங்கள். தேநீர் முடிந்தது. மீட்டிங்கும் முடிந்தது. சரி மீண்டும் சந்திப்போம் என்று க்ளையண்ட் எழுந்து நின்றுவிட்டதால் இப்படியும் உலகத்தில் அநியாயங்கள் நடக்குமா என்று நினைத்தபடி அப்படியே வடைத்தட்டை கடைசியாக ஒருமுறை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு வெளியேறினோம். கைக்கும் எட்டவில்லை. வாய்க்கும் எட்டவில்லை.

வடைபோச்சே - 2

ஜீவகாருண்யம்


எங்கள் தெருவில் நிறைய நாய்கள் இருக்கின்றன. தெருவில் என்று சொன்னதாலேயே அவைகள் தெருநாய்கள்தான் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒரு பதினைந்து இருபது இருக்கலாம். ஒரே பிரசவத்தில் 15 குட்டிகளை ஈன்றுதல் போன்ற நிகழ்வுகளால் அவைகளின் வம்சம் அனுதினம் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. கடிப்பது, ஆளைப்பார்த்தால் உறுமுவது போன்ற உபத்திரவங்கள் தராத சாது நாய்கள்தான். இரவில் ஊர் அடங்கியபின் அவைகளின் இன்னிசைக் கச்சேரி ஆரம்பமாகிவிடும். அவைகளுக்கிருக்கிற டெர்ரிடரி மற்றும் இன்னபிற பிரச்சனைகள் காரணமாக கர்ணகடூரமான குறைப்புகள், ஊளையிடுதல் என்று விதம் விதமாக சப்தங்கள் கோரஸாகத் தொடரும். இந்த வீட்டுக்குக் குடிவந்த துவக்கத்தில் இது மிக மிக எரிச்சலைத் தருவதாக இருந்தது. பல தினங்களில் இரவு சரியாக 11.45க்கு நாய்களின் ஊளைச் சத்தம் ஆரம்பிக்கும். இந்த அமானுஷ்யமும் புரிபடாமலேயே இருக்கிறது. ஒரு நாள் இரவு வெகுநேரம் மொட்டைமாடிக்கு மேல் இருக்கும் தண்ணீர்த் தொட்டியின் மேலமர்ந்து நானும் என் மச்சினரும் பேசிக்கொண்டிருக்கும்போது இதேபோல் நாய்கள் ஊளையிட ஆரம்பித்தன. உடனே நான். ’சரி வாங்க கீழே போவோம். மணி பதினொன்னே முக்கால் ஆயிருச்சு’ என்று சொல்ல அவர் உடனே மொபைலில் மணி பார்த்து, ‘எப்படி இவ்வளவு சரியா சொல்ற?’ என்று கேட்டார். நாய் ஊளைச் சத்தத்தை வைத்துச் சொன்னேன். டெய்லி இதே நேரத்துக்கு சரியா ஆரம்பிக்கும்’ என்று சொன்னதும் பயந்துபோய் ’வா.. போகலாம்.’ என்று வேகமாக படியிறங்க ஆரம்பித்தார்.

விஷயம் இதுவல்ல. எதிர் அபார்ட்மெண்டில் ஒருவர் இருக்கிறார். ரிடையர்டு ஆசாமி. அவரிடம் ஒரு பேஷ்ஹௌண்ட் வகை நாய் இருக்கிறது. அதை மேய்ப்பதற்காக தினமும் ரோட்டுக்கு வரும்போது கூடவே தெருநாய்களும் அவருடன் ஊர்வலமாகப் போகும். அவரது மனைவி, வீட்டுக்குப் பக்கத்திலேயே இருக்கும் கடைக்குச் சென்று (தெரு நாய்களும் கூடவே போகும்) ரொட்டி வாங்கி அதைத் துண்டுகளாக்கி நாய்களுக்குப் போடுவார். அவரது மகள் காலேஜூக்கோ, வேலைக்கோ போய்விட்டு ஸ்கூட்டியில் திரும்பியவுடன் நேராகக் கடைக்குச் சென்று பிஸ்கட் பாக்கெட் வாங்கி அந்த நாய்களுக்கு விநியோகம் செய்துவிட்டு பிறகுதான் வீட்டுக்கே செல்வார். காலேஜ் படிப்பது போலிருக்கிற அவரது மகன் அவ்வப்போது ஒரு ஸ்ப்ரேயர் போன்ற டப்பாவுடன் வீட்டிலிருந்து வெளிப்பட்டு ஏதாவது ஒரு தெரு நாயைப் பிடித்து வைத்துக்கொண்டு, ரோட்டிலேயே குத்தவைத்து உட்கார்ந்து அதைத் தடவிக்கொடுத்து அதற்கு ஏதோ ஸ்ப்ரே எல்லாம் அடித்து, புண்களுக்கு மருந்து போட்டு, பஞ்சால் ஒற்றி வைத்தியம் செய்வதைப் பார்த்திருக்கிறேன். பராமரிப்பு முடியும்வரை நாய்களும் சொகுசாக இணங்கி நிற்கும். அவர்களுடைய காம்பவுண்ட்டுக்கு வெளியே இரண்டு சின்னத் தொட்டிகளில் தெரு நாய்கள் குடிப்பதற்கு தண்ணீர் இருக்கும். அதில் Blue Cross என்று பெயிண்டில் எழுதப்பட்டிருக்கிறது. இந்தத் தெருநாய்கள் கூட்டாகத் தூங்குவது அதிகபட்சம் அவர்களுடைய அபார்ட்மெண்ட் வாசலில்தான்.

இவையெல்லாம் தினசரி என் வீட்டு ஜன்னல்வழிக் காட்சிகள். ’உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்’ என்பதற்கு உதாரணமாக, ஒரு குடும்பமே இந்த தெருநாய்கள் விஷயத்தில் மிக ஈடுபாட்டுடன் இருப்பதும், அன்பு செலுத்துவதும், அவைகளுக்கு உணவளித்து, உடல்நலம் பேணுவதும் மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது. அது அவர்களுடைய தினசரி கடமைகளில் ஒன்றாகவே மாறிவிட்டதைப் பார்க்கிறேன்.

இப்போதெல்லாம் இரவில் தெருநாய்கள் குறைத்தாலோ ஊளையிட்டாலோ நான் எரிச்சலடைவதில்லை. ஏதோ என்னால் முடிந்தது.

இறந்தவன் - சிறுகதை


ஃபெமினா தமிழ் – ஜூன் 1, 2012
ஆறு மாதத்திற்கு முன்பு நிகழ்ந்த பைக் விபத்தொன்றில் வசந்தன் இறந்துவிட்டானாம். இதைச் சொல்வதற்காகவே நேரங்கெட்ட நேரத்தில் சிங்கப்பூரிலிருந்து போன் பண்ணியிருந்தான் நடராஜ்.

மிகத் தாமதமாக வந்த அதிர்ச்சி செய்தி. கேட்டுவிட்டு இந்த முனையில் அஷோக் உறைந்துபோய் சில விநாடிகள் பேச்சற்று நின்றான்.
ஆறு மாசத்துக்கு முன்னாலா? எப்படி இது இத்தனை நாள் தனக்குத் தெரியாமல் போனது?

எனக்கே இப்பதாண்டா தெரியும். ரொம்ப கஷ்டமாயிருச்சு. பாவம்டா அவன். அல்பாயுசு! எப்பவும்போல பைக்-ல கண்ணு மண்ணு தெரியாமப் பறந்திருப்பான். வினையாயிருக்கும். எத்தனை தடவை படிச்சுப் படிச்சு சொல்லிருப்போம். கேட்டானா?” என்றான் நடராஜ்.

மழைக்காதல் - சிறுகதை

காதலர் தினத்தை முன்னிட்டு எங்கு பார்த்தாலும் காதல் காய்ச்சல் தொற்றிக்கொண்டிருந்த பிப்ரவரி மாதத்தில் ‘நம் தோழி’ இதழில் வெளியானது எனது சிறுகதை ஒன்று. இதுவும் ஒரு காதல் கதைதான் என்று தலைப்பே சொல்கிறதே. வேறென்ன? அதேதான்.

கதையைப் படிக்க இங்கே கிளிக்கவும் >>: மழைக்காதல்

முதல் பாடல்

‘ஆத்தாடி... ஒரு பறவ பறக்குதா...’

நான் எழுதிய முதல் திரைப்பாடல் இது. 2012 ஆம் வருடம் பிறந்த கையோடு ஒரு சுப தினத்தில் மதிப்பிற்குரிய முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. அப்துல் கலாம்  வெளியிட இதோ இந்தப் பாடல் இப்போது ஆங்காங்கே ஒலிக்கவும் ஆரம்பித்துவிட்டது. படம்: கிருஷ்ணவேணி பஞ்சாலை.

கல்கி இதழில் முதல் சிறுகதை வெளியானபோது மனம் எவ்விதமான குதூகலத்தில் மிதந்ததோ அதற்கு இணையாக இப்போதும் உணர்கிறேன். மனதுக்குள் ஒரு பறவை பறக்கிறது.

பரவசமும் பயமும் கலந்த ஓர் உணர்ச்சி வந்து சேர்ந்திருக்கிறது. நீண்ட வரலாறு கொண்ட தமிழ்த் திரையுலகில் எத்தனையோ கவி ஜாம்பவான்களுக்கு நடுவே ஒரு ஓரமாய் ஒரு துணுக்காக நானும் அறிமுகப்படுத்தப்படுகிறேன் என்பது பரவசம். அவர்கள் சாதித்ததில் ஒரு சில துளிகளாவது நானும் சாதிக்கவேண்டுமே என்பது பயம்.



இதன் மூலகாரணமாக இருந்த நண்பரும் இயக்குநரும் ஆன தனபால் பத்மநாபனுக்கும், இசையமைப்பாளர் என். ஆர். ரகுநந்தன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

குழந்தையாக இருந்தது முதற்கொண்டு இன்று வரை வாழ்வின் பின்னணியில் சதா ஒலித்துக்கொண்டிருந்த பல்லாயிரம் தமிழ்த் திரைப்பாடல்களை ரசித்துத் திளைத்திருந்த எனக்கு முதன் முதலாக நான் எழுதிய வரிகள் திரை இசையால் உயிர்பெற்று அதை நானே கேட்பதை உன்னதமான தருணமாக உணர்கிறேன்.

இந்தப் பாடல் ஒரு ரொமான்ஸ் டூயட்-டாக அமைந்தது நல்ல விஷயம். ஒரு பஞ்சாலையை பின்னணிக் களமாகக் கொண்டது. முதலில் திருகலான வரிகளுடன் கொஞ்சம் கவித்துவமாகத்தான் எழுதிக்கொடுத்தேன். இசையமைப்பாளரும் இயக்குநரும் எல்லோருக்கும் புரியும்படி எளிமையாக இருக்கட்டுமே என்று கேட்டுக்கொண்டதிற்கிணங்க முயற்சித்ததில் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் ஒரு பாடலை எழுத முடிந்திருக்கிறது என்று நம்புகிறேன். இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு நண்பர்களிடமிருந்து வந்த பெரும்பாலான கருத்துக்களின் சாரம் இவ்வாறு இருக்கிறது. “தெளிவான, எளிமையான, சுகமான இசையுடன் என்பதுகளின் திரைப்பாடல் கேட்பதுபோன்ற இதமான அனுபவம்”. இந்தப் பாடல் பரவலாக எல்லோராலும் ரசிக்கப்படும் என்கிற நம்பிக்கையைத் தருகிறது இது.

பயணங்கள் முடிவதில்லை, நான் பாடும் பாடல் போன்ற படங்களில் மட்டுமே பார்த்திருந்த ரெக்கார்டிங் ஸ்டுடியோக்களில் விஜய் பிரகாஷ், சித்தாரா போன்ற முன்னணிப் பாடகர்கள் பாட அருகிலிருந்து பார்த்த பாடல் பதிவுகள் கூடுதல் அனுபவம்.

தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளரான என். ஆர். ரகுநந்தன் மிகத் துடிப்பான ஒரு மனிதர். தமிழ் திரையிசையின் நுணுக்கங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர். தெ.மே.பருவக்காற்றுக்கு அப்புறம் வரிசையாய் நிறைய படங்கள் கைவசம் சேர ஆரம்பித்தாலும், நல்ல ப்ராஜெக்ட்டுகளை மட்டும் தேர்ந்தெடுத்து கவனமாக இசையமைத்துக்கொண்டிருக்கிறார். கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தின் பாடல்கள் தவிர இவர் அதற்கு அமைத்திருக்கும் பின்னணி இசையும் ரசிகர்களிடையே தனித்த கவனம் பெறும் என்பதிலும், ஒரு முன்னணி இசையமைப்பாளராக இவர் உருவாகிக் கொண்டிருக்கிறார் என்பதிலும் சந்தேகமே இல்லை.

தனபால் பத்மநாபன் வித்தியாசமான பின்னணியுடன் அமைந்த இத்திரைப்படத்தினை மிகுந்த சிரத்தையுடன் உருவாக்கியிருக்கிறார். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதல் முதலாக காஸ்டிங் டைரக்டர் என்ற ஒரு பதவியில் நடிகர் திரு சண்முகராஜாவை இப்படத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். பாடல்களுக்கான காட்சிகளும் அதிசயராஜ் மற்றும் சுரேஷ் பார்கவ்-வின் ஒளிப்பதிவில் அருமையாக வந்துள்ளது. பிப்ரவரியில் வெளிவந்துவிடும் என்று தெரிகிறது.

பாடலைக் கேட்க:. http://soundcloud.com/info4u-chennai/aathaadi-oru

மாயாஜால மழை

பல வருடங்களாக சென்னையில்தான் இருக்கிறேன். ஆனால் பார்க்கவேண்டும் என்கிற லிஸ்டில் இன்னும் காத்திருப்பிலேயே இருக்கிற மூன்று இடங்கள் : 1) பாண்டிச்சேரி 2) கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள சோழமண்டலம் ஃபைன் ஆர்ட்ஸ் வில்லேஜ் 3) மாயாஜால்.

இந்த மாயாஜாலைப் பற்றி அநேகம் பேர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். எங்கேயோ போகும்போது வழியில் பார்த்திருக்கிறேன். ஒரு சில சினிமாக்களில் நாயக நாயகிகள் சந்திக்கும் இடமாகக் கண்டிருக்கிறேன். மற்றபடி பயணிக்கிற தூரத்திலிருந்தும் போவதற்கான வாய்ப்பு அமையவில்லை. 

போனவாரம் ஒரு நண்பர் இந்த மாயாஜால் என்னுமிடத்தில் நடந்த ஒரு சம்பவத்தை என்னிடம் விவரித்தார். மாயாஜாலில் இரவு காட்சியோ ஏதோ ஒன்றிற்கு மனைவியுடன் போயிருக்கிறார். இருவரும் வேலை நேரம் முடிந்து நேராக அங்கே சென்று திரைப்படம் ஆரம்பிக்குமுன் அங்கேயே இரவு உணவை முடித்து விடலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் போன நேரம் அங்கேயிருக்கிற எல்லா உணவகங்களும் மூடப்பட்டிருக்கின்றன.

நண்பர் அங்கே அரை குறையாய் மூடப்பட்டிருந்த ஒரு உணவகத்தின் முன் நின்றிருந்த இளைஞரை அணுகி சாப்பிடுவதற்கு ஏதாவது எங்கேயாவது கிடைக்குமா என்று கேட்டிருக்கிறார். அவர் அந்த உணவகத்தில் வேலை செய்பவர் போலும். ‘எல்லாமே க்ளோஸ் பண்ணியிருப்பாங்களே சார்’ என்று சொன்ன இளைஞர் சில விநாடிகள் யோசித்துவிட்டு, ’சார் நீங்க தப்பா நினைக்கலேன்னா, நான் சாப்பிடறதுக்காக கொஞ்சம் எடுத்து வெச்சிருக்கேன். அதை சாப்பிடறீங்களா?’ என்று கேட்டிருக்கிறார். நண்பரோ சங்கோஜமாய் “அய்யய்யோ.. அதெல்லாம் வேணாம்.. ஒண்ணும் ப்ராப்ளமில்ல ப்ரதர்.. நாங்க மேனேஜ் பண்ணிக்கிறோம். கேட்டதுக்கு ரொம்ப தாங்க்ஸ்” என்றிருக்கிறார்.

ஆனால் இளைஞர் விடாமல், “சார்.. இந்நேரத்துக்கு நீங்க எங்க போய் சாப்பிடுவீங்க.. வாங்க சார்.. உக்காருங்க.. நான் எடுத்துட்டு வர்ரேன்.”

“இல்லைங்க.. பரவாயில்லை.. உங்களோடதை எங்களுக்குக் குடுத்துட்டு நீங்க சாப்பிடறதுக்கு என்ன பண்ணுவீங்க?”

”நான் வெளில போய்க்கூட சாப்டுக்குவேன் சார். நீங்க வாங்க!!” 

நண்பர் எவ்வளவு மறுத்தும் வலுக்கட்டாயமாக அவர்களை அழைத்து உட்காரச் சொல்லிவிட்டு உள்ளே போயிருக்கிறார் இளைஞர். 

இதென்னடா வம்பாகப் போயிற்று என்று நண்பரும் அவர் மனைவியும் தர்மசங்கடமாகக் காத்திருந்திருக்க, உள்ளூர ஒரு சந்தேகம் ஓடிக்கொண்டுதான் இருந்திருக்கிறது. என்னடா வலுக்கட்டாயமாக இழுத்து வைத்து உபசரிக்கிறானே.. இதற்குப் பின்னால் ஏதாவது சதி வேலை இருக்குமோ? காலம் வேறு போன வாரம் வாங்கின வாழைப்பழம் கணக்காக கெட்டுக் கிடக்கிறது. 

ஒரு சில நிமிடங்களில் அந்த இளைஞர் உணவோடு வருகிறார். அவர்கள் நினைத்ததோ அவர் சாப்பிடுவதற்காக வைத்திருந்த, ஆறிபோன எதையோ கொண்டுவரப்போகிறார் என்று. ஆனால் நடந்ததோ வேறு மாதிரி. 

பீங்கான் தட்டுக்களின் மேல் அலுமினியம் ஃபாயில்களில் அழகாக வைக்கப்பட்ட சூடான சப்பாத்தி, அதற்கு சைட் டிஷ்ஷாக இரண்டு பௌல்களில் அருமையான குருமா, இன்னும் இருவகை சட்டினிகள், கண்ணாடி தம்ளர்களில் குடிநீர், கை துடைக்க டிஷ்யூ பேப்பர் என அருமையாக கவனித்திருக்கிறார்.

எதிர்பாராத விருந்தோம்பல்தான் என்றாலும் தயக்கத்துடனும் குறுகுறுப்பான பயத்துடனும் சாப்பிட்டு முடித்திருக்கிறார்கள். சப்பாத்தியும் குருமாவும் சட்னியும் ரொம்ப சுவையாக வேறு இருந்திருக்கிறது. 

சாப்பிட்டு முடித்தபிறகு இளைஞரிடம் “இங்க பாருங்க.. இதுக்கு நாங்க பணம் குடுத்துடறோம். பாவம் நீங்க வேற வெளியே போய் சாப்பிடணுமில்ல..” என்று பர்ஸை எடுத்திருக்கிறார்.

அதற்கு இளைஞரோ பணம் எதுவும் வாங்க மறுத்து சிரித்தபடி “ச்சேச்சே... பணமெல்லாம் எதுக்கு சார்.. இது ஒரு நட்பா இருந்துட்டுப் போகட்டுமே...” என்றாராம்.

இந்த இடத்தில் “இந்த உலகத்துல இப்படியும் சில ஆத்மாக்கள் இருக்காங்க பாருங்க” என்று கதையை முடித்தார் நண்பர் என்னிடம்,

நேற்றைக்குப் பெய்த மழை அந்த இளைஞர் பொருட்டுதான் எல்லோருக்கும் பெய்ததோ என்னமோ!!

டீலக்ஸ் பஸ்


என் வீட்டிலிருந்து மகா தொலைவிலிருக்கும் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிற்கு இன்று காலை போக வேண்டியிருந்தது. நான் எப்பவும் தேர்ந்தெடுக்கிற பிரயாண உபாயம் முதலில் ஒரு பேருந்து பிடித்து பரங்கி மலை ரயிலடி வரை சென்று பிறகு எலெக்ட்ரிக் ட்ரெய்ன் பிடித்து ‘பார்க்’ -ல் இறங்கிக் கொள்வது.

இன்று அதேபோல் செய்ய நினைத்து வந்து நின்ற ஒரு பேருந்தில் ஏறி கண்டக்டரிடம் பத்து ரூபாயை நீட்டியபோது “இன்னும் ஒர்ருவா குடுங்க” என்றார். அதாவது ஏழு ரூபாய் டிக்கெட் இப்போது ரூபாய் பதினொன்று. வெறும் நாலேகால் கிலோமீட்டர் தூரத்திற்கு. ‘அட அநியாயமே..’ என்றார் பொது ஜனம் ஒருவர்.

பழக்க தோஷத்தில் கம்மியாக காசை நீட்டியவர்களிடமெல்லாம் ”பதினோரு ரூபா குடுங்க” என்று கட்டண உயர்வை நினைவு படுத்திக்கொண்டிருந்தார் கண்டக்டர். ஒரு மூதாட்டி “எப்பவும் ஏழு ரூவா தான? இன்னாத்துக்கு பதினோர்ரூவா கேக்குற?” என்று நியாயம் கேட்டதற்கு “இது டீலக்ஸ் பஸ்” என்றார் கண்டக்டர்.

இதைக் கேட்டதும் நான் பேருந்துக்குள் சுற்றுமுற்றும் பார்த்து ஏதாவது டீலக்ஸ்தனமான விஷயம் அகப்படுகிறதா என்று தேடினேன். சொல்லிக்கொள்கிறார்ப்போல் பெரிதாக ஒன்றும் இல்லை. சும்மா கைப்பிடிக் கம்பிகளுக்கு மஞ்சள் பெயிண்ட் அடித்து கல் மாதிரியிருக்கிற ரெக்ஸின் இருக்கைகள். அவ்வளவுதான். மற்றபடிக்கு சாதா பேருந்திற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்று புரியவில்லை. மாறாக, மெதுவாக ஓட்டினாலே அந்த பேருந்தை உருவாக்கப் பயன்படுத்தியிருந்த மொத்த தகரமும், ஃபைபர் சமாச்சாரங்களும், இன்னபிற முக்கிய உதிரி பாகங்களும் அநியாயத்துக்குத் தடதடத்தன. ட்ரைவர் ஒவ்வொரு தடவை கியர் மாற்றும் போதும் பிருஷ்டத்தில் “நங்”-கென்று ஒரு அதிர்வு ஓடியது. தவிர ஒவ்வொரு ஸ்டாப்பில் நின்று கிளம்பும் போதும் ”தடங்” என்று நடு ரோட்டில் எஞ்ஜின் தற்காலிக மரணமடைந்து கொண்டிருந்தது. “இன்னாப்பா ட்ரைவர்.. உன் டீலக்ஸ் வண்டிய எறங்கி தள்ளணுமா?” என்று பின்னாலிருந்து யாரோ குரல் கொடுத்தார்கள்.

கட்டணம் உயர்த்தப்பட்டு மூன்று நாட்களாகியும் மக்கள் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லையென்பது பேருந்தினுள்ளே கேட்ட சில சம்பாஷணைகளிலிருந்து தெரிந்தது. ஒரு சில பொதுஜனக் குமுறல்கள் நிஜமாகவே வருத்தத்தை வரவழைத்தன. விலைவாசி உயர்வு என்கிற ஏவுகணை நேரடியாக வந்து தாக்குமிடம் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் வயிறுதான் என்பது அவர்களின் பேச்சின் ஒவ்வொரு வரியிலும் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. அங்கலாய்ப்புகளுக்குப் பிறகு அரசாங்கத்தைச் சபிக்கும் வார்த்தைகளும் வந்து விழுந்தன. நாலேகால் கிலோமீட்டரைக் கடப்பதற்குள் பேருந்துக் கட்டண உயர்வு பற்றி அநேகம் பேர் தங்களின் ஏகோபித்த எதிர்ப்பை காற்றில் பதிவு செய்திருந்தார்கள்.

பரங்கிமலை ரயிலடியில் இறங்கி மீதமுள்ள பதினேழேமுக்கால் கிலோமீட்டரை எலெக்ட்ரிக் ட்ரெய்னில் வெறும் ஐந்தே ரூபாய் மட்டும் கொடுத்து சென்றடைந்தேன். கூடிய விரைவில் இதையும் இரண்டுமடங்காக உயர்த்திவிட்டால் உலக அரங்கில் தமிழ்நாடு வல்லரசாக மாற பிரகாசமான வாய்ப்புள்ளது.

மக்களின் இந்தக் கட்டண உயர்வுக் கவலைகளை மறக்க நவீன எலைட் மதுபான பார்களைத் திறக்கவும் அரசு முடிவு செய்திருக்கிறதாகச் செய்திகள் கூறுகின்றன.

‘குடி’யுயர கோல் உயரும்தான்.

காலிக்கட்

ஒரு சில தினங்கள் முன்பு மாமா பெண்ணிற்குத் திருமணம் என்ற வகையில் நீண்ட காலத்திற்குப் பிறகு கடவுளின் சொந்த நாடான கேரளாவுக்குள் பிரவேசிக்க வாய்ப்புக் கிடைத்தது.  நடந்த இடம்: காலிக்கட் என்று பிரிட்டீஷாரால் திரிக்கப்பட்ட கோழிக்கோடு.

தென்னக ரயில்வேயின் இரண்டாம் வகுப்புப் பயணப் பெட்டியில் சென்னையிலிருந்து பன்னிரண்டு மணி நேர பயணம். இடையிடையே ஏதேதோ ஸ்டேஷன்களில் ஏறி ரிசர்வேஷன் ஸீட்டுக்களை அனுமதியில்லாமல் ஆக்கிரமிக்கிற பிரயாணிகள், கழிப்பறை நாற்றம், குடும்ப சமேதம் இருக்கைகள் முழுக்க ஊர்கிற கரப்பான் பூச்சிகள், நடு இரவில் மற்றவர் தூக்கத்தைப் பொருட்படுத்தாமல் இரைந்து பேசுகிற ஹிந்திக்காரர்கள், மொபைலில் FM பாட்டு போன்ற எல்லா உபாதைகளும் காலையில் கேரளத்தின் கோடானு கோடி தென்னை மரங்களைப் பார்த்ததும் மறந்துவிட்டது. பசுமை, மரங்கள், நீர் நிலைகள், பரந்து விரிந்து கிடந்த கல்லாயி ஆறு, வயல்கள், வரப்புகள், தோப்புகளுக்கு நடுவே தரவாட்டு மச்சுவீடுகள் என குளுமையாய் விரிகிற காட்சிகளில் மனம் மயங்கிவிட்டது.

Vasco da Gama
கோழிக்கோடு ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம். போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடா காமா 1498-ல் மூன்று கப்பல், 170 ஆட்கள் சகிதம் கடல்வழிப் பயணமாக இங்குதான் வந்திறங்கினார். முன்னாளில் மலபாரின் பகுதியாக இருந்த ஒரு நகரம்.

வசிப்பிடங்கள் பற்றிய ஒரு ஆய்வில் கோழிக்கோடு என்பது இந்தியாவில் வசிப்பதற்கேற்ற இரண்டாவது சிறந்த நகரம் என்று சொல்கிறார்கள். அது உண்மைதான் என்று நினைக்கும் வகையில் ஓரிரு விஷயங்கள் தென்பட்டன. சுத்தமாக இருக்கும் சாலைகள். மீட்டர் போடும் ஆட்டோக்கள். ரொம்ப இரைச்சல்கள் இல்லாமல் லேசாகத் தெரியும் சிறு சதவிகித சிங்கப்பூர்த்தனம்.

எங்கு பார்த்தாலும் ”ஊதும் அத்தரும்” என்று மலையாளத்தில் எழுதப்பட்ட ஏராளமான செண்ட் கடைகள் இருக்கின்றன. பக்கத்தில் போனால் கமகமவென்று மணக்கிறது. சவுதியிலிருந்து இறக்குமதியாகிற பொருட்கள் போலும். அடுத்த நாள் பக்ரீத் அன்று கோழிக்கோட்டின் பெரும்பாலான கடைகள் விடுமுறையாக இருந்தன. எங்கேயும் எப்போதும், 7ஆம் அறிவு, வேலாயுதம் என தமிழ்ப்பட போஸ்டர்களைக் காண முடிந்தது.

Calicut Beach
இரண்டு நாள் பயணம் என்பதால் திருமண மண்டபத்தைவிட்டு அதிகம் வெளியே செல்ல முடியாத சூழல் இருந்தது. கிடைத்த அவகாசத்தில் ஆட்டோவுக்கு ரூ 22.50 கொடுத்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த தென்னைமரங்களுடன் கூடிய ஒரு கடற்கரைக்கு மட்டுமே செல்ல முடிந்தது. அதிகம் அலைகளில்லாமல் அமைதியான அரபிக்கடல். மேலே வட்டமிடும் ஏகப்பட்ட பருந்துகள் மற்றும் காக்கைகள். என்னடாவென்று உற்றுப் பார்த்தால், ரோமங்களுடன் கூடிய இரைச்சித் துண்டங்கள், குடல்கள், எலும்புகள் என்று எக்கச்சக்கமாய் கரை ஒதுங்க ஆரம்பித்தன. ஏதோ ஒரு பெரிய விலங்கினை துண்டு துண்டாய் வெட்டி கடலில் தூக்கி எறிந்த மாதிரி. அவைகளைக் கொத்திக் கொண்டு பறக்கும் காக்கைகளும் பருந்துகளும்.

ஒரு பரவசமான மனநிலைக்கு திருஷ்டியாய் அமைந்தது இந்தக் காட்சி மட்டுமே.

என் கண்ணில் உன்னைக் கண்டேன்

தலைப்பைப் பார்த்தால் ஏதோ பருவ விடலை எழுதிய காதல் கவிதையின் தலைப்பு மாதிரிதான் இருக்கும். ஆனால் தலைப்புக்கான விஷயம் கொஞ்சம் பேஜாரானது.

உங்களிடம் ஒரு பைக் இருக்கிறது. அதை தினமும் அலுவலகம் போகும் பொருட்டு குறைந்தது ஒரு பத்து கிலோமீட்டராவது ஓட்டவேண்டியிருக்கிறது. எதிர்பாராத குழிகள், பள்ளங்கள், சாலையெங்கும் பறக்கிற புழுதி, சடாரென முன்னறிவிப்பின்றி உங்கள் வழியில் குறுக்கிடுகிற வாகனங்கள். எல்லாவற்றிலும் புரண்டெழுந்து அரசாங்க இயந்திரம் சரியாக செயல்படவில்லையே என்ற மன உளைச்சல்களோடு, இடுப்பொடிய மேற்கொள்கிற பயணத்தில் சடாரென்று உங்கள் கண்ணுக்குள் என்னவோ விழுந்து விடுகிறது.

ஏதாவது சின்ன புழுதித் துகள் விழுந்திருக்கும், வீட்டுக்குப் போய் முகம் கழுவினால் வெளியே போய்விடும் என்று நினைத்து இன்னும் வேகமாய் ஆக்ஸிலேட்டரை முறுக்குகிறீர்கள். கண்ணில் உறுத்தல் தொடர்கிறது.

இப்படித்தான் இன்று நிகழ்ந்தது. வீட்டுக்கு வந்து பல தடவை முகம் கழுவியும் உறுத்தல் தொடர, உருவங்களை ஓரிரு மடங்கு பெரிதாக்கிக் காட்டுகிற முகம் பார்க்கும் கண்ணாடி, சோனி எரிக்ஸ்ஸன் கே எழுநூற்று ஐம்பது என்கிற செல்பேசியில் அடங்கியிருக்கிற குட்டி லைட் சகிதமாய் இடது கண்ணை ஆராய்ந்தபோது கருவிழியின் நடுவே ஏதோ ஒட்டிக்கொண்டிருப்பதைக் கண்டேன். ஒட்டியிருக்கிறதா, குத்தியிருக்கிறதா? கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும். ஒவ்வொரு முறை இமைக்கும்போதும் உறுத்தலாக இருந்தது.

இதற்கு முன் இதே மாதிரி ஏற்பட்ட ஓரிரு அனுபவங்கள் ஞாபகம் வர உடனே கண் மருத்துவமனையொன்றைச் சரணடைவது உசிதம் என்று தோன்றியது. இரவு மணி ஒன்பது. உடனே கிளம்பினேன்.

ஒரு ஃப்ளாஷ்பேக்:

நான்: டாக்டர், இடது கண்ணுல என்னவோ உறுத்துது. ப்ளிங்ங் பண்ணும்போது வலிக்குது.

டாக்டர் கண்ணில் ஒரு பூதக் கண்ணாடியை மாட்டிக்கொண்டு கண்ணுக்குள் டார்ச் அடித்துப்பார்த்து. “ஆமா. ஃபாரின் பாடி இருக்கு. எடுத்துரலாம்.”

ஒரு குப்பியை எடுத்து என் இடது கண்ணில் இரண்டு துளிகள் கவிழ்க்கிறார். “அனஸ்தீஸியா ட்ராப்ஸ்.. வலிக்காது. அங்க உக்காருங்க..”

ஒரு மைக்ரோஸ்கோபிக் சாதனத்தின் முன் அமரவைத்து என் மோவாக்கட்டையை அதில் நிலை நிறுத்துகிறார். கண்ணுக்குள் அதிபிரகாசமான ஒரு லைட்டைப் பாய்ச்சிவிட்டு ஒரு ஊசியை எடுக்கிறார். நான் மிரள்கிறேன்.

“இமைக்காம நேரா என்னையே பாருங்க..”


மெல்ல கண்ணுக்கு அருகில் கொண்டுவந்து, கண்ணில் மாட்டியிருக்கும் துகளை நிரடுகிறார். ஊசி நிரடுகிற உணர்வு தெரிந்து செய்தியாய் மூளைக்கு அனுப்பப்பட நான் விருட்டென்று பின் வாங்குகிறேன். டாக்டர் துணுக்குற்று “ஊசி ஃபீலிங் தெரியுதா?”

“ஆமா”

”அனஸ்தீஸியா போட்டுமா?” ஆச்சரியத்துடன் மறுபடி அந்த குப்பியை எடுத்து இன்னும் கொஞ்சம் கண்ணுக்குள் கவிழ்க்கிறார். மீண்டும் நிரடல். இந்த முறை குத்துகிற இடத்தில் எந்த உணர்வும் இல்லை. ஊசியால் நோண்டி எடுத்த சின்ன கருப்புத் துகளை எனக்கு காண்பிக்கிறார். “மெட்டல் பீஸ்தான். எடுத்துட்டேன். மறுபடி பிரச்சனைன்னா வாங்க. இப்போ போய் டி.வி, கம்ப்யூட்டர் எல்லாம் பாக்காம ரெஸ்ட் எடுங்க” கண்ணில் பஞ்சு வைத்து பெரிதாக கட்டுப்போட்டு அனுப்புகிறார். ஒற்றைக் கண்ணால் பைக் ஓட்டியபடி வீடு வந்து சேர்கிறேன்.

இன்று நிகழ்காலத்தில் பேஷண்டுகள் காத்திருக்க, இரவு டின்னரை முடித்துவிட்டு சாவகாசமாக வந்த லேடி கண் டாக்டரிடம் “மேடம், கண்ல என்னவோ குத்தியிருக்கு. ரெட்டினா-க்கு நடுவுல..டார்ச் அடிச்சுப் பாத்தேன்.. எனக்கே தெரிஞ்சுது.”

“ஓ.. நீங்களே பாத்துட்டீங்களா? நல்லது..” டார்ச் அடித்துப் பார்த்து.. “ஆமா.. இருக்கு.. ஒயிட் பார்ட்டிக்கிள்.. ஆனா அது குத்தியிருக்கறது ரெட்டினா இல்ல. கார்னியா..” என்று சிரிக்கிறார்.

பழைய ப்ளாஷ்பேக்கில் கண்ட அதே மாதிரி ட்ராப்ஸ். அதே மைக்ரோஸ்கோப், ஊசி. ஓரிரு விநாடிகளில் வேலை முடிந்தது. குத்திய இடம் செப்டிக் ஆகாமல் இருக்க ஒரு சில கண் மருந்துகளைப் பரிந்துரைத்து ஃபீஸ் வாங்கிக் கொண்டார். ஆனால் நல்லவேளை இந்த முறை கண்ணை மறைக்கும் பெரிய கட்டு இல்லை.

வீட்டுக்கு வந்து சோனி எரிக்ஸனின் டார்ச் அடித்துப் பார்த்தேன். போயே போச்சு, போயல்லோ, போயிந்தே, இட்ஸ் கான்ன்ன்ன்ன்ன்.

இதனால் அறியப்படும் நீதி?

நீதியெல்லாம் பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. அரசாங்க ரோடுகள் அப்படி இப்படித்தான் இருக்கும். நீங்கள்தான் உங்கள் கண்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளவேண்டும். 

என்னைச் சுற்றி இத்தனை பறவைகளா?

Common Myna
இதை சென்ற பதிவின் தொடர்ச்சியாகக்கூடக் கொள்ளலாம். நண்பரும், பறவை ஆராய்ச்சியாளரும், புகைப்படக்கலைஞரும் ஆன கௌதம் இன்று வீட்டுக்கு வருகை புரிந்திருந்தார். அவர் கையோடு கொண்டுவந்திருந்த பையில் ஒரு நல்ல பைனாக்குலர் இருந்தது.

மொட்டைமாடியிலும் அருகிலுள்ள ஏரிக்கரையிலும் கொஞ்சநேரம் திரிந்ததில் இன்றைக்குக் கண்ணுற்ற பறவைகள் (நண்பர் உதவியோடு):

1. சிறிய நீர்க்காகம் (Little Cormorant)
2. மாடப்புறா (Blue Rock Pigeon)
3. சிறிய கரும்பருந்து (Black Shouldered Kite)
4. கூழைக்கடா (Spot Billed Pelican)
5. அரிவாள் மூக்கன் (Ibis)
6. இராக்கொக்கு (Night Heron)
7. கருங்கரிச்சான் (Black Drongo)
8. சிறு மீன்கொத்தி (Little Kingfisher)
9. வெண்மார்பு மீன்கொத்தி (White Breasted Kingfisher)
10. தையல் சிட்டு (Tailorbird)
11. ஊதாப்பிட்டத் தேன்சிட்டு (Purple Rumped Sunbird)
12. உண்ணிக்கொக்கு (Cattle Egret)
13. மைனா (Common Myna)

இதுவரை வாழ்நாளில் பார்த்திருந்த பறவைகளின் பெயர்கள் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. பெயர் மட்டுமே கேள்விப்பட்டிருந்த பறவைகளை இதுவரை பார்த்திருந்ததில்லை. பரபரப்பான இந்த நகர வாழ்க்கையில் என்னைச் சுற்றிப் பறக்கின்ற பறவைகளை பொறுமையாய் கவனிக்கவும் அவைகளைப் பற்றி விவரமாகத் தெரிந்துகொள்ளவும் வழிவகுத்த நண்பர் கௌதமுக்கு நன்றிகள்.

தொடர்புடைய பதிவுகள்: 1 | 2

திருட்டு மாங்காய்த் தோப்பு

நான் வசிக்கிற அபார்ட்மெண்ட்டை ஒட்டி சின்னதாய் ஒரு தோப்பு உள்ளது. ரியல் எஸ்டேட்காரர்களின் கண்களில் இன்னும் தென்படாத அல்லது தென்பட்ட பின்னரும் விற்பனை மறுக்கப்பட்டு நகரமயமாக்கலின் கரங்களில் தப்பிப் பிழைத்திருக்கும் தோப்பு. தென்னை, மா, வேம்பு, வில்வம் என பலவகையான மரங்கள் நிரம்பியது. தண்ணென்று நிழல். குளுகுளு காற்றில் சரசரவென தென்னை ஓலைகள் உரசும் ஒலி. பெயர் தெரியாத பறவைகள் கீச்சிக்கொண்டிருக்கும். நகர வாகன இரைச்சல்களிலிருந்து ஒதுங்கி, ஒரு சொல்லவொண்ணாத அமைதியுடன் இருக்கும்.

சில நேரங்களில் மரங்களுக்கு நடுவே தோப்புச் சொந்தக்காரர்களின் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அல்லது மரங்களினிடையே கட்டிய கயிற்றில் யாராவது துணி உலர்த்திக்கொண்டிருப்பார்கள். அல்லது ஆயுள் முடிந்து வீழ்ந்துகிடக்கும் ஒரு தென்னை மரத்தின் மேல் உட்கார்ந்து ஒரு பாட்டி வேலை எதுவுமின்றி சாவகாசமாகக் காற்று வாங்கிக்கொண்டிருக்கும். மாமரங்களில் நிறைய (திருட்டு) மாங்காய்கள் தொங்கும்.

மிகப்பெரிய விவசாய விளைநிலங்களாக இருந்த இடங்கள் ஆக்கிரமிக்கப் பட்டு வீட்டுமனைகளாக மாறிய இடம் இது. சுற்றிலும் உள்ள ஏரிகள் கரை சுருங்கி சுருங்கி சின்ன தண்ணீர் தேக்கங்களாய் மாறிக்கொண்டிருக்கின்றன.  அவற்றிலும் கழிவுநீர் கலக்க ஆரம்பித்துவிட்டதால் ஏரிகளில் உலாவரும் வெண் நாரைகளும் பெலிக்கான்களும் வேறு இடம் தேடிப் பறக்க ஆரம்பித்துவிட்டன. இன்னும் கொஞ்சநாட்களில் கூகிள் மேப்பில் இந்த ஏரிகளும் மறைந்து ஏரியல் வ்யூ-வில் கட்டிடங்கள் மட்டுமே தெரியும்.

பக்கத்து மினி தோப்புக்கு நிறைய பறவைகள் வருகின்றன. கிளிகள், மைனாக்கள், புறாக்கள். தோப்பில் நிரந்தர குடியிரிமை பெற்ற பறவைகள் காலை ஐந்து மணியளவில் மெதுவாய் தங்களது கதா காலட்சேபத்தைத் துவங்கிவிடுகின்றன. மனதைவருடும் இசைக் கச்சேரி அது. மொபைலில் அலாரம் வைக்கத் தேவையேயில்லாமல் ஜன்னலில் வந்தமர்ந்து தினமும் சப்தமாய் கீச்சிடுகிறது ஏதோ ஒரு பறவை. கொஞ்சம் குண்டாக ப்ரவுன் கலந்த கருப்பில் கண்களைச் சுற்றிலும் சின்ன மஞ்சள் வட்டத்துடன் அழகாய் இருக்கிறது. ஜன்னலோரம் பதுங்கி நின்று பார்த்தாலும் ஒரு சின்ன உள்ளுணர்வில் வேகமாய் இடம்பெயர்ந்து விடுகின்றது.

சாயங்காலங்களில் பால்கனியிலிருந்து பார்த்தால் ஒரு புறாக்கூட்டம் வீட்டைச் சுற்றிச் சுற்றிப் பறந்து வரும். அவைகளின் சுற்றுப்பாதையில் ஒரு பெரிய செல்ஃபோன் டவர் உள்ளது. அதை லாவகமாக ஒரு U-turn அடித்துவிட்டு மீண்டும் எங்கள் அபார்ட்மெண்டுக்கு மேல் பறக்கும். சொல்லிவைத்தாற்போல் எல்லாப் புறாவும் படபடவென இறக்கைகளை அடித்து வேகமாய்ப் பறப்பதும் பிறகு எல்லாமே ஒரே நேரத்தில் சிறகடிப்பை நிறுத்திவிட்டு ஜிவ்வெனப் மிதந்து பறப்பதுமாக ஒரு அரைமணிநேரம் உற்சாக விளையாட்டு. அவைகளுக்குள்ளாக ஏதோ ஒரு பாஷையில் இந்த டேக் ஆஃப், லாண்டிங், ஃப்ளைட் ரூட் தகவல்களை பரிமாறியபடி பறக்கின்றன. அசாத்தியமான புரிந்துணர்வு. தினசரி அதே சுற்றுப் பாதை. அதே நேரம். அதேபோல் விளையாட்டு. ஆச்சரியம்!! ’புறாக்கள் பறந்துகொண்டிருக்கும்” என்ற ஆதவனின் சற்றே பெரிய சிறுகதையொன்றின் தலைப்பு ஞாபகம் வருகிறது.

நகரத்தின் மத்தியில் பரபரப்புக்கு மத்தியில் அதிக காற்றும் வெளிச்சமும் இல்லாத ஒரு இடத்தில் ஏழெட்டு வருடங்கள் வசித்துவிட்டு வந்தவனுக்கு சென்னைப் புறநகர்ப் பகுதியில் இந்த சூழ்நிலை மிகப் பெரிய ஆசுவாசத்தைத் தந்திருக்கிறது. பசுமை என்பதை ப்ளாஸ்டிக் செடிகளில் மட்டுமே காணக் கிடைக்கிற நகரவாழ்க்கையில் இது ஒரு தற்காலிக அதிர்ஷ்டம்.

பக்கத்துத் தோப்பின் மாமரங்களுக்கு அடியில் கயிற்றுக் கட்டில் போட்டு கொஞ்சநேரம் உலகம் மறந்து உறங்கவேண்டுமென்று தோன்றுகிறது. சுற்றிலும் காம்பவுண்டும் அத்துமீறி நுழைபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்கிற எழுதப்படாத மானசீக அறிவிப்புப்பலகையும் தடுக்கின்றன.

உங்களுக்கு நாடகங்கள் பிடிக்குமா?

‘பேய்க்காமனாக’ திரு. சண்முகராஜா
நேற்று மதியம் நடிகர் திரு. சண்முகராஜா அவர்களை சந்தித்து உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. தனது இயல்பான, மிகையில்லாத நடிப்பின் மூலம் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்திருப்பவர். விருமாண்டியில் ’பேய்க்காமன்’ எனும் பாத்திரத்தில் வந்து தன் நடிப்பாற்றலை மக்கள் மனதில் நிலை நிறுத்தியவர். தில்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளியில் பயின்றவர். எளிமையான பேச்சுடன் இனிமையாகப் பழகும் சுபாவத்துக்குச் சொந்தக்காரர்.

நிகழ் நாடக மய்யம்
சினிமா மட்டுமின்றி நாடகக் கலையையும் தன் சுவாசமாக எண்ணி அதற்கென பல வேலைகள் பின்னணியில் செய்துகொண்டிருப்பவர். 2002-ல் மதுரையில் ‘நிகழ் நாடக மையம்’ என்ற ஒன்றைத் தொடங்கி அதன் மூலம் நாடகங்கள், பயிலரங்குகள், கருத்தரங்குகள். கலை விழாக்கள், நூல் வெளியீடுகள் ஆகியவற்றை நடத்தி நாடகக்கலையை பரவலாக்கிக்கொண்டிருப்பவர். இவரது தயாரிப்பிலும் இயக்கத்திலும் எண்ணற்ற நாடகங்களை அரங்கேற்றியிருக்கிறார். சண்முகராஜா தமிழ் இலக்கியத்தில் எம்.ஃபில் பட்டம் பெற்றவர்.

பேச்சினிடையே திரு. சண்முகராஜா, அவரது ஒருங்கிணைப்பில் ஜனவரி 11 முதல் 20 வரை பத்து நாட்களுக்கு தேசிய அளவிலும் உலக அளவிலுமான பல நாடகக் குழுக்களின் நாடகங்கள் சென்னையில் அரங்கேற்றப்படவுள்ளன என்பதைக் குறிப்பிட்டார். ஆர்வமேற்பட்டு மேற்கொண்டு அவரிடம் தகவல் சேகரித்ததில் கிடைத்த விவரங்கள் நாடகக் கலைப் பிரியர்களுக்கு நிச்சயம் உபயோகமாகும் என்கிற வகையில் கீழே கொடுத்துள்ளேன்.

டெல்லியிலுள்ள தேசிய நாடகப் பள்ளி (National School of Drama) “பாரத் ரங்மஹோத்சவ்” என்னும் அகில உலக நாடக விழாவை கடந்த பன்னிரண்டு வருடங்களாக நடத்தி வருகிறது. தேசிய அளவிலும் உலக அளவிலுமான நாடகக்குழுக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடகங்கள் இந்த விழாவில் அரங்கேற்றப்படுவது வழக்கம். ஆசியாவிலேயே குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய நாடக விழா இது.

இந்த வருடம் தேசிய நாடகப் பள்ளியானது தமிழ்நாடு கலை மற்றும் பண்பாட்டுத் துறையுடன் இணைந்து பாரத் ரங்மஹோத்சவ்-13- இணை நாடக விழாவை (Parallel Theatre Festival) முதன் முறையாக சென்னையில் நடத்தவுள்ளது.

பாரத் ரங்மஹோத்சவ்

இந்த விழாவில் ஃப்ரான்ஸ், ஈரான், சீனா, கொரியா, அர்ஜென்டினா, இங்கிலாந்து, போலந்து, நேபாளம் என எட்டு அகில உலக நாடகங்களும் பதினொரு இந்திய நாடகங்களும் பங்குபெறுகின்றன. இதைத் தவிர நாடகங்கள் மற்றும் நாடகக்குழு சம்பந்தப்பட்ட கண்காட்சியும் இடம்பெறுகிறது.

குறிப்பிட்ட நாடகம் முடிந்த அடுத்தநாள் காலை 10.30 மணிக்கு நாடகத்தில் பங்கு பெற்றவர்கள் மற்றும் இயக்குநருடன் பார்வையாளர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

அரங்கேற்ற நாட்கள் : ஜனவரி 11 முதல் 20 வரை.

நடைபெறும் இடங்கள்: சென்னை ம்யூசியம் தியேட்டர் மற்றும் சர் முத்தாவெங்கட சுப்பாராவ் அரங்கம் (லேடி ஆண்டாள்).

நேரம்: தினம் மாலை 6.00 மணி மற்றும் 7.45 மணி அளவில் (ஒவ்வொரு மாலையும் இரண்டு இடங்களில் இரண்டு நாடகங்கள் என்கிற விகிதத்தில் 19 நாடகங்கள் அரங்கேறுகின்றன.).

நாடகங்களின் மேலும் நாடகக்கலையின் மேலும் ஈடுபாடு கொண்டவர்கள் நிச்சயம் தவறவிடக்கூடாத நிகழ்வு இது என்று கருதுகிறேன்.

அரங்கேற்றப்படும் நாடகங்கள் பற்றிய விவரங்களுக்கு கீழேயுள்ள சுட்டியைக் கிளிக்கவும். நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.

நிகழ்ச்சி நிரல்

தேசிய நாடகப்பள்ளியின் இணையதளம்

பின்னே ஞானும்

'வாஸந்தியும் லக்ஷ்மியும் பின்னே ஞானும்' என்றொரு மலையாளப்படம் கொஞ்ச வருடத்துக்கு முன் வந்தது. ரொம்ப அருமையான தலைப்பு என்றெல்லாம் சொல்லமுடியாது. படம் வெற்றியடைந்து பிரபலமானதோ இல்லையோ இந்தத் தலைப்பு மெகா ஹிட் ஆகிவிட்டது. அதற்குப் பின் எழுத்தாளர்களுக்கு தன் படைப்புகளுக்குத் தலைப்பு வைப்பதில் உள்ள நீண்டகால சிக்கல் எளிதில் நீங்கிவிட்டது போலும். எப்படி? ரொம்ப சுலபம். படைப்போ உடைப்போ எழுதி முடித்தவுடன் அதற்கு ஒரு தலைப்பும் கிடைக்கவில்லையெனில் உடனே எழுதியவற்றில் உள்ள ஏதாவது இரண்டு விஷயங்கள் அல்லது வார்த்தை களை தேர்ந்தெடுத்து அத்தோடு 'பின்னே ஞானும்' என்று சேர்த்துக்கொண்டால் தீர்ந்தது பிரச்சனை. இன்ஸ்டண்ட் தலைப்பு. பொருத்தமாகவும் இருக்கும்.

இவ்வாறாக நான் ஒப்பேற்றிய ஒரு பதிவின் தலைப்பு 'பையனும் டார்வினும் பின்னே ஞானும்.' அதற்கப்புறம் இதே மாதிரியான நிறைய தலைப்புகள் அவ்வப்போது கண்ணில் பட்டுக்கொண்டிருந்தன. இன்றைக்கு நண்பர் ரவி ஆதித்யாவின் வலைப்பதிவை எதேச்சையாய் மேய்ந்துகொண்டிருந்தபோது இதே பாணியில் 'ஹரியுடன் நானும் பின்னே டிவி சமையலும்' என்று தலைப்பு வைத்திருந்ததைப் பார்த்தேன். திடீரென்று இப்போது உற்றுக் கவனித்ததில் அநேகம் பேர் இந்த 'பின்னே ஞானும்' டைட்டில் வைப்பதை தொடர்ந்து வழக்கத்தில் வைத்திருப்பதாகப்பட்டது. இப்போதைக்கு இது ஒரு ட்ரெண்ட்-ஆகவே மாறிவிட்டும் இருக்கிறது என்று நினைக்கிறேன். உலகின் மிக ஜாலியான தலைப்பு என்கிற அந்தஸ்தை இது பெற்றுவிட்டது போலும். தன் தலைப்பு இப்படி பிரபலமாகிவிட்டது ஒரிஜினல் 'பின்னே ஞானும்' இயக்குநருக்கே தெரியுமா என்று தெரியவில்லை.

சற்று சுவாரஸ்யம் கொண்டு கூகிளில் கொஞ்சம் ஆராய்ந்ததில் மேலும் சுவாரஸ்யமான டைட்டில்கள் பல கிடைத்தன. கொஞ்சம் பெரிய லிஸ்ட் என்றாலும் சும்மா படித்து வையுங்களேன்.

டெல்லி கணேஷும் பின்னே ஞானும்
தோப்பும் புங்கை மரமும் பின்னே ஞானும்.
சுஜாதாவும் ஜெயமோகனும் பின்னே ஞானும்.
Torrent-உம் Badminton உம் பின்னே ஞானும்.
நேசமித்ரனும் நண்பர்களும் பின்னே ஞானும்.
ஞானும் சயன்ஸூம் பின்னே கொறச்சு காமெடியும் .
அண்ணாகண்ணனும் மீராஜாஸ்மினும் பின்னே ஞானும்.
பரிசலும் கோவியும் பின்னே ஞானும்.
போப்பும் ஷோவும் முனியும் பின்னே ஞானும்.
நானும் ஜாக்கி சேகரும் பின்னே அனானியின் வாந்தியும்.
வால்பையனும் வாசிப்பும் பின்னே ஞானும்.
ஞானும் பின்னே ஞானும் நடுவே ஞானமும்.
ஒரு செல்போனும் கிப்ட் கவரும் பின்னே ஞானும்.
Black Label ம் noodles ம் பின்னே ஞானும்.
ராஜாவும் சாருவும் பின்னே ஞானும்.
மஹாராஷ்டிராவும் பொங்கலும் பின்னே ஞானும்.
ஆனந்த விகடனும் அட்டைப்பட அழகியும் பின்னே ஞானும்.
ஈரோடும் லேடீஸ் ஹாஸ்டலும் பின்னே ஞானும்.
ஃப்ராய்டும் ஃபிரான்சிஸ் சேவியரும் பின்னே ஞானும்.
அத்னான் சாமியும் ஆசாத் அண்ணனும் அய்யனாரும் பின்னே ஞானும்.
பார்வதி ஓமனக்குட்டனும் பின்னே ஞானும்.
டேனியும் ஞானும் பின்னே என்டெ ஹஸ்பென்டும்.
பாட்டும் கதக்கும் குச்சுப்புடியும் பின்னே ஞானும்.
ஜகன் மோகினியும் அதிஷாவும் பின்னே ஞானும்.
சுந்தராம்பாளும் கருணாநிதியும் கமல்ஹாசனும் பின்னே ஞானும்.
சுனாமியும் பல்வலியும் பின்னே ஞானும்.
மலையாளபூமியில் நிங்களும் கள்ளும் பின்னே ஞானும்.
ஞானும் தற்கொலையும் பின்னே கொலையும்.
வண்டிக்காரத் தெரு மாரியம்மனும் ஆயில்யனும் பின்னே ஞானும்.

குதிரைகள் நடக்கின்றன

நேற்று சென்னை கோட்டூர்புரத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குச் சென்றிருந்தோம். நான், தங்கமணி, பையன். நான் வாழ்நாளில் பார்த்த மிகப் பெரிய நூலகம் இதுதான். ஒரு ஐ.டி பார்க் கட்டிடம் போன்ற அமைப்பு. மோஸ்தர். மெட்டல் டிடெக்டருடன் செக்யூரிட்டி. மிகப்பெரிய லாபி. ஒளி விளக்குகள். லிஃப்ட். கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் எஸ்கலேட்டர்கள். வெளிச்சத்தை பிரதிபலிக்கும் பளபளவென்ற தரை. கண்ணாடிக் கதவுகள், ஜன்னல்கள். சொகுசு இருக்கைகள். ஜம்மென்று சோபாக்கள்.

முதல் மாடியில் குழந்தைகளுக்கென்று மிகப் பெரிய பிரிவு. ஒரு பிக்னிக் போன்று பெற்றோர்களுடன் மகிழ்ச்சியாக வாண்டுகள் வந்து செல்கிறார்கள். ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கான புத்தகங்கள். மல்டிமீடியா சிடிக்களுடன் கம்ப்யூட்டர்கள். சுவர்களில் கார்ட்டூன் படங்கள்.

இரண்டாம் மாடியில் இரண்டு பிரிவுகளாக தமிழ் புத்தகங்கள். இலக்கியம், புதினம், சிறுகதைகள் என்று ரக வாரியாக பிரிக்கப்பட்டு அழகாக அடுக்கப்பட்டிருக்கின்றன. மூன்றாவது, நான்காவது, ஐந்தாவதிலெல்லாம் என்ன இருக்கிறதென்று பார்க்கவில்லை. இன்னும் திறக்கப்படாததால் அனுமதியில்லை.

லைப்ரரி என்று இப்படி ஒரு விஷயம் உலகில் இருப்பதை முதன் முறையாகப் பார்த்து பையன் மலைத்து நின்றுவிட்டான். தங்கமணிக்கோ அத்தனை புத்தகங்களைப் பார்த்து கண்ணில் நீர் துளிர்த்துவிட்டது. காரணம் தங்கமணி ஒரு ஓயாத புத்தகப் புழு. என்னைவிட அதிக புத்தகம் படித்த/படிக்கிற ஆள் என்ற வகையில் எனக்கு தங்கமணிமேல் லேசான பொறாமைகூட உண்டு.

புத்தகங்கள் தவிர கூட்டங்கள் நடத்துவதற்கென கூடங்களும், குறும்படங்கள் திரையிடுவதற்கான தியேட்டர் வசதிகளும் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அது தவிர இன்னும் எத்தனையோ வசதிகள். கூடிய விரைவில் அவைகளும் பயன்பாட்டுக்கு வரும்.

தின/வார/மாத பத்திரிகைகள் பிரிவில் கணிசமான பேர் புத்தகங்கள் மேய்ந்துகொண்டிருந்தார்கள். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளிவரும் அத்தனை வாராந்திர, மாதாந்திரங்களும் அலமாரிகளில் பெயரிடப்பட்டு ஒழுங்காக வைக்கப்பட்டிருக்கின்றன. அங்கே இருக்கிற ஒரே பிரச்சனை காலடிச் சத்தம். ஹைஹீல்ஸ் அல்லது கட்டையான செருப்புப் போட்ட பெண்களும், ஷூ அணிந்த ஆண்களும் புத்தகம் தேடி அலமாரிகளிடையே நடக்கும்போது ஃப்ளைவுட் தரையில் டடக் டடக் என்று குதிரைக் குளம்படிகள் போன்ற சப்தம் அகாலமாய்க் கேட்கிறது. படிப்பவர் கவனம் சிதறுகிறது. அதுவே நிறைய பேர் நடக்கும்போது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிகள் குதிரைப்படையுடன் மறுபடி ஊருக்குள் உலவுகிற எஃபெக்ட் ஏற்படுகிறது. மற்ற தளங்களைப் போல இங்கேயும் தரையில் கார்ப்பெட் போட்டால் இந்தக் குதிரைகள் பூனைகள் ஆகும்.

மற்றபடி இது பிரம்மாண்டமான ஒரு ஹை-டெக் லைப்ரரி. உறுப்பினராகச் சேர விண்ணப்பங்கள் கொடுக்கப்படுகின்றன. ஜனவரி முதல் புத்தகங்கள் எடுத்துக்கொள்ளலாமாம்.

இந்த நூலகம் பற்றி நிறைய தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இந்த வலைப்பதிவை அணுகலாம். இந்த நூலகம் பற்றி எக்கச்சக்கமான விவரங்கள் தரப்பட்டிருக்கிறது.

புலம் - தீபாவளி மலர் சிறுகதை

தமிழோவியம்.காம் இணைய இதழின் தீபாவளி மலரில் எனது சிறுகதை..

ணி செண்ட்ரலில் ரயில் இறங்கி ஆட்டோ பிடித்து அபிராமபுரத்திலுள்ள கேசவனின் வீட்டுக்கு போய் இறங்கினபோது லேசாய் ஆச்சரியப்பட்டான். கேசவனின் வீடு காலி செய்யப்படுகிற முகாந்திரமாய் வீடு நிறைய மூட்டை முடிச்சுகள். அட்டைப் பெட்டிகள். அடுக்கத் தயாராயிருந்த சாமான்கள். குறுக்கும் நெடுக்குமாய் ஒழுங்கில்லாமல் சோஃபா, கவிழ்ந்த சேர்கள், நியூஸ் பேப்பர் குப்பைகள். கயிறுகள். பேக்கிங் டேப் சுருள்கள்.

மணி பொருட்குவியல்களுக்கு ஓரமாய் ட்ராவல் பேகை வைத்துவிட்டு வியப்புடன் புரியாமல் கேசவனைப் பார்த்தான். "வீடு காலி பண்றீங்களா?" என்றான்.

...

...

மேலும் படிக்க..

படித்ததும் பிடித்ததும்

எப்பவோ ஒரு காலத்தில் நமக்குப் பிடித்தது இப்போது பிடிக்காமல் போவதும், அப்போது பிடிக்காமல் இருந்தது இப்போது பிடித்துவிடுவதும் நிகழத்தான் செய்கிறது. இதைத்தான் வேறு விதமாக “இப்பப் பாத்த புதுசு பாக்கப் பாக்கப் பழசாகி எப்பவுமே பாக்காத பழசு பாத்தவுடனே புதுசாத் தெரியும்” என்று மீனாட்சி சுந்தரனார் கூற முயற்சித்தார். ஆனால் இது முதல் வரிக்கு சம்பந்தமில்லாமல் இருப்பதால் அதிகம் யோசிக்காமல் அடுத்த பாராவுக்குப் போய்விடலாம்.

பொள்ளாச்சி சேரன் போக்குவரத்துக் கழகத்திலிருந்து யாரோ கொடுத்த 1988- ஆம் ஆண்டு டயரி, எதையோ தேடும்போது கண்ணில் பட்டது. புரட்டிப் பார்த்தபோது அதில் மணி மணியான கையெழுத்தில் அப்போது படித்தவைகளிலிருந்து பிடித்த பேராக்கள் அல்லது வரிகளை ’படித்ததில் பிடித்தது’ என்று போட்டு எழுதி வைத்திருந்தேன். என் அப்போதைய வாசிப்பானுபவ ரசனை ரொம்ப தத்துப் பித்தென்றெல்லாம் இல்லாமல் கொஞ்சம் பரவாயில்லையாக இருந்ததாக நிழலடிக்கிறது. இப்போது அவைகளைத் திரும்பப் படித்துப் பார்க்கும்போது எனக்குப் பிடித்ததை எழுதியவர்களின் பெயர்கள் எல்லாம் ஒரு கலவையாக அவியல் போல இருக்கிறது.

கார்த்திகா ராஜ்குமார், காண்டேகர், பாப்ரியா, அனுராதா ரமணன், இந்திரன், காப்ரியேல் ஒகாரா, சுந்தர ராமசாமி, லே ஹண்ட், மு.மேத்தா, மாலன், கார்ல் மார்க்ஸ், வண்ண நிலவன், சி.சு. செல்லப்பா, க.நா.சு, அப்புறம் ஜப்பானிய பழமொழிகள், பெயரில்லாத தத்துவங்கள் ஒன்றிரண்டு. யாரோ என்று போட்டு சில. இந்த யாரோ என்பது யாராக இருக்கும் என்று ரொம்ப நாட்களாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். இதில் லே ஹண்ட், ஒகாரா, மார்க்ஸ், காண்டேகர் போன்றவர்களின் பெயர்களைப் பார்த்து யாரும் பயப்படவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அது சும்மாவாச்சும் அவர்களுடைய ஏதாவது ஒரு பேரா எங்கேயாவது தட்டுப்பட்டதை டயரியில் எழுதி வைத்திருப்பேன். மற்றபடி ரொம்ப தடிமனான புத்தகங்கள் படிக்கிற கெட்ட பழக்கம் எதுவும் அப்போது எனக்கு இருந்ததில்லை. பொன்னியின் செல்வன் கூட ரிடையர்மெண்டுக்கு அப்புறம் படிக்கலாம் என்று எடுத்துவைத்திருக்கிறேன்.

ஆனால் கிடைத்ததையெல்லாம் வாசிக்கிற வெறி ஒரு மானாவாரித்தனத்தைக் (பார்த்தீர்களா! தமிழில் புதிய சொல்லாடல்) கொடுத்திருந்தது. பாலகுமாரனை விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருந்த அதே நேரம் சைடுவாக்கில் க.நா.சு வருகிறார். கி.ராஜநாராயணன், தி.ஜா என்று வாசிப்பு அனுபவத்தை அடுத்த தளத்திற்குக் கொண்டு போகவேண்டுமென்று பிரயத்தனம் மேற்கொண்ட காலகட்டம் அது. பிடித்த எழுத்தாளர்கள் என்று ஒரு இறுதிப் பட்டியல் உருவாகுவதற்கு முன் வரை எல்லோருமே இதுபோல சகட்டுமேனிக்குப படித்து வைத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருப்பார்கள்.

பொள்ளாச்சி லைப்ரரியில் மேற்படி இலக்கிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் இருக்கும். ஆனால் எல்லா புத்தகங்களிலும் வாசகர்கள் தனக்குப் பிடித்த வரிகளை பென்சிலாலோ பேனாவாலோ அடிக்கோடிட்டு அடிக்கோடிட்டு புத்தகம் முழுவதும் கோடு கோடாக இருக்கும். போதாதற்கு கடைசி பக்கத்தில் ‘அருமையான புத்தகம்” என்றோ, “மரணக் கடி. படிக்காதே” (இதை முதல் பக்கத்திலல்லவா எழுதியிருக்கவேண்டும்) என்றோ தங்களது உண்மையான விமர்சனத்தை பதிந்தும் வைத்திருப்பார்கள். ஆக அடிக்கோடு போடுகிற வேலையை நான் செய்யவேண்டாம் என்று படித்ததில் பிடித்ததை தனியாக சேரன் போக்குவரத்துக் கழக டயரிக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன்.

இந்த மாதிரி படித்ததில் பிடித்ததை தொகுத்து பொள்ளாச்சியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘மனிதம் செய்திகள்’ என்கிற சிற்றிதழில்(!) போட்டுக் கொண்டிருந்தோம். கோபால் பில்டிங் பக்கத்தில் கடை வைத்திருந்தவர்கள் எல்லாருக்கும் ஒரு காப்பி போகும்.

ப.பி-இல் ஒரு சில இப்போது படித்தாலும் பிடிக்கத்தான் செய்கிறது. அவைகளில் சில தத்துவார்த்தமாக இருப்பதே காரணம் என நினைக்கிறேன். ஒரு சிலது மரண மொக்கை.

படித்ததில் பிடித்ததில் சில இங்கே..

****
குழந்தைகள் உலக சத்தியங்கள். கையுயர்த்தித் தந்ததெல்லாம் கடைசிவரை காப்பாற்றுவேன் என்னும் நியாயப் பிரமாணங்கள். வாழ்க்கையையே விளையாட்டாய் கழித்ததுபோல் குதிபோடும் பையன் நாட்கள். இலக்குகள் பதுங்கியிருக்க அவற்றைக் கண் கட்டித் தேடக் கிளம்பும் வாழ்க்கை. ஜரூராய் இருந்து இடமாறிப் பிழைக்கும் கிளித்தட்டு. ஏமாந்தவனை எழுப்பிவிட்டுத் தான் உட்கார்ந்து கொள்ளும் கொக்கோ. மூச்சுப் பிடித்து மூலைவரை சென்று எதிரியை கால் தாக்கி எற்றித் திரும்பும் சடுகுடு. வளைத்து வளைத்து இரண்டு சக்கரத்தையும் பாலன்ஸ் செய்து ஓட்டிச் செல்லும் வாடகை சைக்கிள். வாழ்க்கை விளையாட்டாய்த்தான் ஆரம்பிக்கிறது.

- மாலன், நந்தலாலா நாவலில்

*****

எனது பூப்பு நாளில்
நான் கட்டிய பச்சைப் பட்டு
இன்னனும் நெஞ்சுக்குள் பசுமையாய்
நினைவிருக்க..
காலையில் சாப்பிட்டது நினைவில்லை.
மறதி.. பனித்துளி போல மறதி.
காலம் கரையுது. காலம் கரையுது.
காதுக்குள் பேரொலி.
என்னுள் என்னை நான் இழந்திருக்கையிலே..
உலகம் என்னை இழந்து கொண்டிருக்கிறது.

- அனுராதா ரமணன்

***

கொஞ்சமாக தெரிந்து வைத்துக் கொண்டிருக்கும்போது தெரிந்து கொண்டுவிட்டோம் என்றும், அதிகமாகத் தெரிந்துகொண்டிருக்கும்போது தெரிந்து கொள்ளவில்லை என்ற எண்ணமும் ஏற்படுகிறது. ஒரு கதவு திறக்கும்போது திறக்காத பல கதவுகள் தெரியும் விசித்திரக் கோட்டை இது. அவற்றையும் திறக்கும்போது, மேலும் பல கதவுகள் மூடிக்கிடப்பதைப் பார்க்கிறோம். அப்படியானால் இதற்கு முடிவு என்ன? திறப்பதே திறக்காத கதவுகளைப் பார்க்கத்தானா? பெரிய சவால்தான் இது.

- சுந்தர ராமசாமி, ‘ஜே.ஜே சில குறிப்புகள்’ நாவலில்.

***

கடைசிக் கதவும் திறக்கப் போகிறது. நான் ஒரு சுதந்திர மனிதன் ஆகிவிடுவேன். அந்தக் கதவு நிலையிலிருந்து ஒரு எட்டு வெளியே எட்டிப் போட்டதும் என் இருதயம் நிரம்பி இருந்தது. நிம்மதியா அல்லது கனமா? இரண்டும் அல்ல. அது ஓர் அபிமான இருதயத்தின் அடியிலிருந்து எழும் அனுதாபக் குரலின் தொனி போல எனக்குப் பட்டது. அந்தத் தொனியோடு கடைசிக் கதவும் திறந்து கொண்டது. எதையும் நான் சொல்லிவிடக்கூடும். அந்த க்ஷணத்து உணர்ச்சியை மட்டும் சொல்ல முடியாது. அது இருதயத்தின் தனிச் சொத்து. அதற்கு பாஷையே இல்லை.

-சி.சு. செல்லப்பா

***

மூன்றாம் முறை முகத்தில் அறைந்தால் புத்தருக்கும் கோபம் வரும்.

-யாரோ

குரங்கு பெடல் என்றால் என்ன?

ஒரு வழியாக மகனுக்கு பாலன்ஸ் கிடைத்துவிட்டது. இது இரண்டாவது பாலன்ஸ். முதல் பாலன்ஸ் தவழ்கிற குழந்தை என்கிற நிலைப்பாட்டிலிருந்து ‘நடக்கிற குழந்தை’ என்கிற நிலையை அடைந்தது. அப்போது எல்லாக் குழந்தைகள் போலவும் ‘பொதக் பொதக்’ என்று நிறைய தடவை விழ வேண்டி வந்தாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் எப்படியோ நடக்கவும் பிறகும் ஓடவும் பழகிக் கொண்டான்.

ஓடப் பழகின பிறகு ஓட்டப் பழகவேண்டாமா? முதலில் வாங்கின மூன்று சக்கர சைக்கிள் மோகம் முடிந்து (நான் கூட அவ்வப்போது ஓட்டுவதுண்டு) ஹாண்டில் பாரில் அவனது முழங்கால் இடிக்க ஆரம்பித்தவுடன் மாநாடு கூட்டி அவனுக்கு பெரிய சைக்கிள் வாங்கலாம் என முடிவானது. பி.எஸ்.ஏ ராக்கெட் என்று போட்ட ஒரு சின்ன இரண்டு சக்கர சைக்கிள் (சைடு வீலையும் சேர்த்தால் நான்கு) வாங்கிவந்தோம். பேர்தான் ராக்கெட் என்று போட்டிருந்தார்களே தவிர தரையில் தான் ஓடியது.

ஆனால் அந்த சைக்கிளில் ஒரு பிரச்சனை. அது மகனைவிடப் பெரியதாக இருந்தது. அதாவது அவன் இன்னும் நான்கைந்து வருடங்கள் கழித்து ஓட்டவேண்டியதை அப்பொழுதே வாங்கிவிட்டேன். இருந்தாலும் சீட்டையும், ஹாண்டில் பாரையும் கொஞ்சம் தணித்து இறக்கித் தந்ததில் அதில் எப்படியோ ஏறப் பழகி மூன்றாவது மாடி வராந்தாவிலும், மொட்டை மாடியிலுமாக ஓட்ட முயற்சித்துக் கொண்டிருந்தான். கீழே விழாமலிருக்க சைடு வீல்கள் துணை புரிந்தாலும் அபார்ட்மெண்ட் வாசிகளுக்கு ஓட்டும்போது டர்ர்ர்ர் என்ற அதன் நாராசமான சத்தம் அத்தனை ரசிக்கவில்லை. அதற்காக அவனை ரோட்டில் போய் ஓட்ட வைக்கிற மயிர்க்கூச்செரியும் அட்வென்ஞ்சரை நான் எடுக்கத் தயாரில்லை.

சில நாட்கள் வேறு வழியில்லாமல் ஹாலுக்கும் பெட்ரூமுக்கும் கிடைத்த இடைவெளிகளில் கூட ஓட்டுவான். சில நாட்கள் இரவு உணவு முடித்துவிட்டு நடு ஜாமத்தில் ட்ராஃபிக் அடங்கின எங்கள் தெருவில் அவன் பின்னாலேயே ஓடி ஓடி உண்ட உணவு செரித்துக்கொண்டிருந்தது. அதிலும் முக்கியம் அங்கேயிருக்கிற மற்ற அபார்ட்மெண்டுகளில் பார்க்கிங் இல்லாமல் ரோட்டிலேயே நிறுத்திவைத்திருக்கும் கார்களின் மேல் அவன் சைக்கிள் மோதி கீறல் போடாமல் இருக்கவேண்டுமே என்கிற கவலை மூச்சிரைப்போடு சேர்ந்து பொங்கிவரும்.

“ப்ராண்ட் நியூ கார் ஸார் இது.. டெலிவரி எடுத்து ஒரு வாரம்கூட ஆகலை. பாருங்க எவ்ளோ பெரிய கீறல். உங்க மகனுக்கு சமூகப் பொறுப்புன்னா என்னன்னு நீங்க கத்துக் குடுத்திருக்க வேணாமா? திஸ் இஸ் ரிடிகுலஸ்.  எனக்கு மிகப் பெரிய மன உளைச்சலாயிருச்சு. கீறலுக்கான நஷ்ட ஈடா  பதினைந்தாயிரத்தை...”

என்று யாராவது கனவான் கேட்டில் நின்றுகொண்டு கத்துவதை கற்பனை செய்துகொண்டு அந்த பயத்துடனேயே மகனுக்கும் கார்களுக்குமிடையே இடைவெளி ஏற்படுத்துகிற முனைப்பிலேயே ஓட்டம் கழியும். சைக்கிள் அவன் உயரத்திற்குப் பொருந்தாமல் உயரமாக இருந்ததாலும், அவ்வப்போது சீறி வருகிற ஆட்டோ, பைக்வாலாக்களுக்கு பயந்து தடுமாறியதாலும் மற்றும் சென்னை சாலைகளின் பிரத்யேக அடையாளமான திடீர்க் குழிகளினாலும் அவ்வப்போது தடுமாறி விழவும் செய்தான். பாலன்ஸூம் கிடைக்காமல் சாய்ந்த நிலையிலேயே ஓட்டி ஓட்டி பக்கவாட்டுச் சக்கரங்களும் தேயத் தொடங்கியிருந்தது. நொடிகளும், நிமிடங்களும், நாட்களும், வருடங்களுமாக உருண்டோடியது. இந்த பெரு நகரத்துக்குள் வாழ்வின் அத்தியாவசிய தேவையான சைக்கிள் ஓட்டுதலைக் கற்றுக் கொடுப்பதற்குள் வுதா (இது ஒரு கெட்டவார்த்தை என யாரோ சொன்னதால் தலைகீழாக எழுதியிருக்கிறேன்) தீர்ந்து போய்விடும் என்று தான் தோன்றியது.

ஆனால் இந்தக் கோடை விடுமுறையின் போது ஊருக்குப் போய் அங்கே மரங்கள் சூழ்ந்த, சுத்தமாய் போக்குவரத்து இல்லாத, அகலமான ரோடுகள் கொண்ட மின்சார வாரிய குவார்டர்ஸூக்குள் அக்கா பசங்களின் (சைடு சக்கரங்கள் இல்லாத) சைக்கிள்களை ஓட்டி ஒரே நாளில் அட்சர சுத்தமாக நன்றாய் சைக்கிள் பழகிவிட்டான். ஆக வாழ்க்கைக்குத் தேவையான இரண்டாவது பாலன்ஸூம் ஒரு வழியாய்க் கிடைத்துவிட்டதில் அக மகிழ்வு ஏற்பட்டுவிட்டது.

இன்றைக்கு அவன் சைக்கிளை விட கொஞ்சம் உயரமாய் வளர்ந்துவிட்டான்.  சைடு வீல்களையும் நீக்கியாயிற்று. சீறுகிற ஆட்டோக்களை லாவகமாய்த் தவிர்க்கவும் பழகிவிட்டான். ரொம்ப குள்ளமாய் இருக்கிறதென்று ஸீட்டை கொஞ்சம் இன்னும் ஏற்றித்தரமுடியுமா என்று கேட்கிறான். இல்லையென்றால் கியர் எல்லாம் வைத்து மவுண்டன் பைக் டைப்பில் வேறு பெரிய சைக்கிள் வேண்டுமாம்.

நான் எண்பதுகளின் ப்ளாஷ்பேக் காட்சியொன்றை நினைவுகூர்ந்து அவனிடம் சொன்னேன். “நாங்கெல்லாம் எங்களை விட பெரிய சைக்கிள்ள குரங்கு பெடல் போட்டு ஓட்டிப் பழகினோம். இனி அந்த அனுபவமெல்லாம் உங்கள மாதிரி சிட்டிப் பசங்களுக்குக் கிடைக்காதுடா..”

“குரங்குப் பெடல்னா என்ன” என்றான்.

இந்த பதிவை போஸ்ட் பண்ணி முடித்தபிறகு விளக்குகிறேன் என்று சொல்லியிருக்கிறேன்.

இந்தியா சுடர் – கல்விக்காக ஏற்றப்பட்ட தீபம்

ஒரு மழைநாளில் ஒரு இனிய மெல்லிசை கேட்பதைவிடவும், சரவணபவனில் சாம்பார் வடையை ரசித்து ருசித்துச் சாப்பிடுவதைவிடவும், கவிழ்ந்து படுத்து ஒரு புதினம் படிப்பதைவிடவும், ஒரு சிறுகதையோ வலைப்பதிவோ எழுதுவதைவிடவும் ஒரு மகிழ்ச்சியும் நிறைவும் திருப்தியும் நேற்று கிடைத்தது.

ராயபுரத்திலும், தண்டையார்ப்பேட்டையிலும் ஆக இரு அரசினர் குழந்தைகள் காப்பக மாணவர்களுக்கு எங்கள் அலுவலக நண்பர்கள் நோட்டுப்புத்தகங்கள், பென்சில், பேனா போன்றவைகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இதை ஏற்பாடு செய்திருந்தது இந்தியா சுடர் எனும் NGO. நண்பர்களும் நானும் ஆக ஒரு சுபயோக சுபதினத்தில் இந்தியா சுடரில் உறுப்பினரான கையோடு உருப்படியாய் ஏதாவது செய்ய வேண்டுமென்று யோசித்ததின் விளைவாக மேற்கண்ட நிகழ்ச்சி.

இந்தியா சுடர் - ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனம். இந்தியா முழுவதும் உள்ள வசதியற்ற மாணவர்களுக்கு கல்விக்கான உதவிகளைச் செய்வதற்காக இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம். இதன் நிறுவனர்கள் உதய் மற்றும் சற்குணன் மற்றும் சில எனெர்ஜிடிக் இளைஞர்கள் தன்னலமற்ற நோக்கோடு தனது நேரத்தையும் பணத்தையும் செலவு செய்யும் இவர்களை ஒரு வரியில் பாராட்டுவதென்பதெல்லாம் இயலாத காரியம். அவ்வளவு செய்கிறார்கள்.

இந்தியா சுடரின் உறுப்பினர்கள் அனைவருமே ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே அவ்வப்போது ஓய்வு நாட்களில் தங்களால் இயன்ற அளவு உதவிகளைச் செய்து வருபவர்கள்தான். அது சிறு துரும்பாயினும் இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் வசதியற்ற ஏதோ ஒரு சிறுவனோ அல்லது ஒரு சிறுமியோ கல்வி கிடைக்கப்பெற்று அவர்கள் அதன் மூலம் தன் வாழ்க்கையை புதுப்பித்துக் கொள்ளமுடிகிறதென்பது அருமையான விஷயம். மீனைத் தருவதற்கு பதில் மீன் பிடிக்கக் கற்றுத் தருதல்.

நலிந்த நிலையிலிருக்கும் அரசு பள்ளிகளை, குழந்தைகள் இல்லங்களைத் தேடியறிந்து அங்கே உள்ள மாணவர்களுக்குத் கல்விக்குத் தேவையானதை இந்தியா சுடர் செய்கிறது. ஆசிரியர் இல்லாத பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமித்துக் கொடுக்கிறது. கஷ்டப்படும் குடும்பங்களில் வாழும் மேற்படிப்புக்கு வசதியில்லாத மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்கிறது. இதன் பணிகள் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் இந்தியா முழுக்க விரவி நிற்கிறது. இதுவரை என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்தியா சுடரின் தளத்திற்குச் சென்று அறிந்து கொள்ளலாம்.

சென்னையில் ராயபுரம் மற்றும் தண்டையார்ப்பேட்டை பகுதியில் உள்ள இல்லங்களில் சிறார்களைச் சந்தித்தது ஒரு வித்தியாசமான அனுபவம். இவர்களில் சிலர் பெற்றோர்களை இழந்தவர்கள். சில பேர் வீட்டை விட்டு எதற்காகவோ ஓடிவந்து பின் பெற்றோருடன் சேரமுடியாதவர்கள். சில பேருக்குப் பெற்றோர் இருந்தும் வறுமை காரணமாக தங்களால் பார்த்துக்கொள்ள முடியவில்லையென இந்த இல்லங்களில் விடப்பட்டவர்கள்.

ஒரு ஐநூறு குழந்தைகளுக்காவது இந்த வருடப் படிப்பிற்காக நோட்டுப்புத்தகங்கள் வழங்கவேண்டும் என்பது எங்கள் திட்டமாக இருந்தது. ஆளுக்கு ஐம்பது அல்லது நூறு ரூபாய் கொடுத்தால் போதும் என்று ஆரம்பித்து நாங்கள் நினைத்ததை விடவும் அதிக தொகை சேர்ந்தது. அலுவலக நண்பர்கள் தாராளமாக நன்கொடை தந்து உதவினார்கள். இதில் ஒவ்வொரு துளியும் சரியாகத் திட்டமிடப்பட்டு சென்னையிலுள்ள ஆறு அரசினர் மாணவர் இல்லங்களுக்கு நோட்டுப் புத்தகங்களாக சரியான முறையில் பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது. இதை உற்சாகமாக முன்னின்று செயல்படுத்தியதில் நண்பர்கள் ஜான், தீனதயாளன், கார்த்திக், இங்கர்சால், பாலசரஸ்வதி, ப்ரேம், செந்தில், இந்தியா சுடர் தளபதிகள் உதய் மற்றும் சற்குணன் மற்றும் அனைத்து அலுவலக நண்பர்களும் இந்த நிகழ்வை சாத்தியமாக்குவதற்குக் காரணமாக இருந்தார்கள்.

மாணவர்களில் ஒரு சில பேர், தாங்கள் நன்றாகப் படித்து நிறைய மதிப்பெண்கள் வாங்கும் பட்சத்தில் மேற்படிப்புக்கு உதவுவீர்களா என்று கேட்டது நல்ல விஷயமாகப் பட்டது. படிப்பார்வம் கொண்ட இவர்களுக்கு நிச்சயம் உதவி செய்யலாம். எந்த வசதியுமில்லாமல் படித்து பத்தாம் வகுப்பில் 84% எடுத்த பையனொருவனைப் சந்தித்தோம். இன்னொரு சிறுவன் இந்த இல்லத்தில் தங்கி படித்துக்கொண்டே, வெளியில் வேலைக்குப் போய் அதில் கிடைத்த சொற்பப் பணத்தில் ஆயிரம் ரூபாயை வீட்டுக்கும், ஆயிரம் ரூபாயை அந்த இல்லத்திற்கு நன்கொடையாகவும் அளித்திருக்கிறான். சின்ன உருவம். பெரிய மனது.

இந்தியா சுடருக்கு வந்து சேரும் நன்கொடைத் தொகைகளின் ஒவ்வொரு பைசாவும் வழங்கியவர் பெயரோடு அதன் இணைய தளத்தில் கணக்கு வழக்குகளோடு வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, அஸ்ஸாம் என்று வகை பிரித்து இதுவரை செய்து முடித்த ப்ராஜக்டுகளின் விவரங்களும் இருக்கின்றன. தன்னை இன்னும் விரிவாக்கும் பொருட்டு இணைய சாத்தியங்களான ட்விட்டர், ஃபேஸ்புக், பிகாஸா வெப், ஆர்குட் என்று சகலத்திலும் இணைந்துள்ளதுடன், உறுப்பினர்களுக்கு இதன் அனைத்து செயல்பாடுகளும், தகவல்களும் யாஹூ குழுமம் மூலமாக உடனடியாகத் தெரிவிக்கப்படுகின்றன.

நம் பாக்கெட்டிலிருந்து வெளிப்படும் வெறும் ஒரு நூறு ரூபாயானது மற்றவர் வாழ்வில் எவ்வளவு பெரிய வித்தியாசத்தை அளிக்கிறதென்று நேற்று மனப்பூர்வமாய் உணர்ந்துகொண்டேன்.

மேலும் விவரங்களை இந்தியா சுடரின் தளத்திலிருந்து அறியலாம் :
http://www.indiasudar.org
http://picasaweb.google.com/indiasudar