ரோம் - பயணக் கட்டுரை

'இத்தாலியிலுள்ள ரோம் ஒரு அழகிய நகரம். அனைவரும் வாழ்க்கையில் ஒருமுறையேனும் நிச்சயம் பார்க்கவேண்டிய இடம்' என்று ட்விட்டரில் எழுதிவிட்டுப் போய்விடலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். அப்படியே எழுதிப் போட்டாலும் ட்விட்டரில் இன்னும் 39 எழுத்துக்கள் மிச்சமிருக்கும் என்பதாலும், மிகத் தொன்மையான நகரமான ரோமின் உலகளாவிய பேரழகை இப்படி ஓரிரு வரிகளில் சொல்லிவிட்டுப் போனால் 16-ஆம் நூற்றாண்டு ரோமாபுரி பேரரசர்களின் ஆவிகள் என்னை மன்னிக்காது என்பதாலும் ஒரு சிறிய பதிவாகப் போட்டுவிடுகிறேன்.

நான் முதலில் சென்று இறங்கிய இடம் லியனார்டோ டாவின்ஸி ஃபியுமிசீனோ விமானநிலையம் என்றெல்லாம் எழுதி உங்களுக்கு ஆயாசத்தை உண்டு பண்ணப் போவதில்லை. இறங்கின இடமும் திரும்பிய இடமுமா முக்கியம்? எப்போதும் மெயின் பிக்சர்தானே நமக்கு முக்கியம். ஆகவே நேராக தெருவில் இறங்குகிறேன். ஒரு நகரம் என்பது தெருக்களின் தொகுப்புதானே?

இத்தாலிய மொழியில் ரோமா என்றும் செம்மொழியாம் தமிழ் மொழியில் உரோமை நகரம் என்றழைக்கப்படும் இந்நகரமானது கி.மு.753-ல் அமைக்கப்பட்டு அப்போதிருந்தே மக்கள் வசிக்க ஆரம்பித்த வரலாற்று விவரங்கள் எல்லாம் நேரமும் வாய்ப்பும் இருந்தால் இன்னொரு பதிவில் விவரமாய் எழுதி விடுகிறேன். ஏனென்றால் இது ஒரு மிகச் சிறிய பயணக்கட்டுரை மட்டுமே.

"All roads lead to Rome" என்று எதற்காகச் சொன்னார்கள் என்பது இப்போது தெள்ளத் தெளிவாகப் புரிந்துவிட்டது. உலகம் முழுவதுமுள்ள, பயணங்களை விரும்புகிற மக்கள் அனைவருக்குமான வாழ்நாள் டூரிஸ்ட் டெஸ்டினேஷன் இது. பின்னே உலகின் மொத்த அழகும் இங்கேயே கொட்டிக்கிடந்தால் மக்கள் வேறு என்னதான் செய்வார்கள்?

ரோமுக்குள் நுழைந்தவுடனேயே வாட்டிகன் மியூசியம், போர்கீஷ் காலரி மற்றும் ம்யூசி கேப்பிடோலினி, கலோசியம் ஆகிய நான்கையும் முதலில் பார்த்துவிடவேண்டுமென்று ஒரே துடிப்பாய் துடித்தது மனது. (இந்த மாதிரி இடங்களின், தெருக்களின் பெயர்களை நான் சரியாக உச்சரிக்கவில்லை எனில் இத்தாலிய மக்கள் கோபித்துக் கொள்வார்களோ என்ற பயமும் இருந்தது). ரோம் பற்றியெரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக்கொண்டிருந்த இடம் எங்கேயிருக்கிறதென்று யாரிடமாவது கேட்டால் அடிக்க வருவார்களோ என்ற யோசனையுடன் ஊர் சுற்றக் கிளம்பினேன்.

ரோமர்கள் அவர்களது ஆட்சிக்காலத்தில் ரொம்ப போரடித்தால் உயர உயரமாய் தூண்கள் வைத்து வானளாவிய கட்டிடங்களை எழுப்புவார்கள் என்று கருதத்தக்க வகையில் பிரம்மாண்டங்கள், சிதிலங்கள், வரலாற்று மிச்சங்கள், புராதனம், வெள்ளையும் கருப்புமாய் மிகப் பெரிய சிலைகள். நம்மூரின் கட்டிடங்களுக்கும் ரோமாபுரியின் கட்டிடங்களுக்கும்தான் எத்தனை வித்தியாசங்கள்!! ரோமர்களின் ஆர்க்கிடெக்ச்சர் நுட்பங்கள் அப்படி வியப்பளிப்பதாக இருக்கிறது. அதுவும் கட்டிடங்களில் இந்தத் தூண்கள் இருக்கிறதே! அப்படி ஒரு ஆகிருதி. ஒவ்வொரு தூணும் பத்து பேர் சேர்ந்து கட்டிப்பிடிக்கவேண்டும் என்பது போல் இருக்கின்றன. ஆனால் எட்டிப் பிடிக்க வேண்டும் என்றால் அது நடக்காது. அவ்வளவு உயரம். ஆக ரோம்-ஐ தூண்களின் நகரம் என்று சொன்னால் அது மிகையாகாது.

ரோமன் ஹாலிடேஸ் என்னும் கருப்பு வெள்ளைத் திரைப்படத்தில் நான் கண்ணுற்ற ரோம் இப்படி வண்ணமயமாய் காணக் கிடைக்குமென்று கனவிலும் நினைக்கவில்லை. இதை நினைக்கும் இதே நேரம் அந்தப் படத்தில் நடித்த அந்நாள் அழகுப் பதுமை ஆட்ரே ஹெப்பர்ன் (Audrey Hepburn) பற்றியும் ஒரிரு விநாடிகள் மறைந்த எழுத்தாளர் ஆதவன் உபயத்தால் நினைவு கூர முடிந்தது.

Piazza Venezia (நகரத்தின் இதயம் என்று பொருள்படும்) என்கிற இடத்தில் Altare Della Patria என்ற புராதன வரலாற்று கட்டிடம்... ச்சே!! அதை கட்டிடம் என்று சொல்லுவது ரோமாபுரிவாழ் மக்களைக் கேவலப்படுத்துவது போலாகும் - ஆகவே அரண்மனை? சரி.. ஏதோ ஒன்று. இங்கும் மறுபடி பிரம்மாண்ட தூண்கள். இதற்குமுன் இருக்கும் ஒரு மிகப் பெரிய சிலையருகே என்னைப் போலவே உலகமெங்குமிருந்தும் வருகை புரிந்திருக்கும் சுற்றுலாப் பயணிகளை பெருமளவில் காணமுடிந்தது. இதுபோல எண்ணற்ற கட்டமைப்புகள். எண்ணற்ற பழங்காலச் சின்னங்கள். எண்ணற்ற.. எண்ணற்ற.. ம்ம்.. சரி விடுங்கள்.

ரோமிலுள்ள ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் கட்டிடத்துக்குள்ளும் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு வரவேண்டும் (விடுவார்களா தெரியவில்லை) என்கிற அளவுக்கு எல்லாமே அழகழகாய் இருக்கின்றன. நம்புங்கள்!! ரோம்-ல் உள்ள எல்லா இடங்களையும் ரசித்து அனுபவித்துப் பார்க்க வேண்டுமென்றால் நம் ஆயுள் போதாது என்று தோன்றிவிட்டது. ஏனென்றால் அவைகளையெல்லாம் கட்டி முடிப்பதற்கே அவர்கள் ஆயுள் போதவில்லை பாருங்கள். எனக்குக் கூட எதை சொல்வது எதை விடுவது என்று தெரியாமல் தடுமாறுகிறது. அத்தனை அத்தனை..

அதே மாதிரி சர்ச்சுகளை எடுத்துக்கொண்டால் ஒரு பெரிய லிஸ்ட்டே போடுமளவுக்கு இருக்கிறது என்றார்கள். யாராவது ஏற்கனவே அந்த லிஸ்ட்டைப் போட்டிருப்பார்கள் என்பதால் நான் அதை செய்யவேண்டாமென்று தீர்மானித்தேன். ஆனால் நான் பார்த்தவரையில் எனக்கு எந்தச் சர்ச்சும் கண்ணில் படவில்லை. அல்லது பார்த்தது எல்லாமே சர்ச்தானா?

சிங்கப்பூர் மாதிரியே சாலைகள் படு சுத்தம். எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கும்போது வானத்திலிருந்து யாரோ கூட்டமாய் இறங்கிவந்து இரவோடு இரவாக குப்பைகளை அள்ளித் துடைத்துவிட்டுப் போய்விடுவார்கள் என்று நினைக்கும்படிக்கு அபார சுத்தம். ஆனால் பார்த்த சில இடங்களில் உறுத்தின ஒரே விஷயம் கார்களும் ஸ்கூட்டர்களும் (டூ வீலரில் அதிகம் ஸ்கூட்டர்கள் போன்ற வாகனங்களைத்தான் பயன்படுத்துகிறார்கள்) பல இடங்களில் ஒழுங்கு இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதுதான். நேனோ மாதிரி குறுங்கார்கள் நிறைய கண்ணில் பட்டன. சர்வசாதாரணமாக ஏழு எட்டு சாலைகள் ஒருங்கே சந்திக்கும் வீதி முக்குகள் இருக்கின்றன. இந்த மாதிரி முக்குகள் நம்மூரில் இருந்து வீதி முனையில் ட்ராஃபிக் போலீசை நிற்கவைத்தால் முழி பிதுங்கிவிடுவார் என்று நினைக்கும் போது பாவமாக இருந்தது. ரோமில் மக்கள் தொகை குறைவு என்பதால் ’பாரத் பந்த்’ தினம் மாதிரி நிறைய சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

எங்கேயும் போக்குவரத்து நெரிசலே இல்லை. Iron Man, Saw IV போன்ற ஆங்கிலப் படங்கள் ஓடிக்கொண்டிருந்த தியேட்டர் வாசலில் நான்கே நான்கு இருசக்கர வாகனங்கள் மட்டுமே இருக்க மொத்தமாய் காற்று வாங்கிக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது. நம்மூர் தாழ்தள சொகுசுப் பேருந்தின் பத்தாவது வெர்ஷன் மாதிரியான பஸ்கள் நல்ல சிவப்பு நிறங்களில் சாலையெங்கும் ஓடுகின்றன. மக்கள் நவீனமாக வண்ணமயமாக உடையணிகிறார்கள். பெரிய கொட்டை எழுத்துக்களில் பார்கள் நம்மை இழுத்து வரவேற்கின்றன.

ரோமில் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்கள் யாவை என்று குத்துமதிப்பாக ஆராய்ந்ததில் கீழ்கண்ட லிஸ்ட் கிடைத்தது. மேற்சொன்ன வாட்டிகன் ம்யூசியம் இன்னபிற இடங்கள் தவிர Colosseum, Trevi Fountain, Spanish Steps, Villa Borghese, Galleria Doria Pamphilj, Castel Sant'Angelo, Via Condotti, Piazza del Popolo, Imperial Forum, St. Peter's Basilica, Piazza Navona என்று பட்டியல் நீண்டுகொண்டே போனது. வாயிலும் பிறகு ஞாபகத்திலும் நுழையாத பெயர்கள் என்றாலும் எல்லாவற்றையும் எப்போது பார்த்து முடிப்பது என்று மலைப்பாக இருந்தது. ஷாப்பிங் போகவேண்டும் என்றால் Piazza Spagna என்ற இடத்திற்கருகிலுள்ள (ஸ்பானிஷ் ஸ்டெப்ஸ்-க்கும் கூட இது பக்கந்தான்) ஷாப்பிங் ஏரியா மிகப் பிரபலமாம். சிங்கப்பூர் முஸ்தபா சென்டர் மாதிரி ஏதேனும் சல்லிசாகக் கிடைக்குமா என்று விசாரிக்கவேண்டும்.

Piazza Spagna என்றதும் பீட்சா ஞாபகம் வந்து திடீரென பசிக்கிற மாதிரி இருந்தது. எங்கேயாவது நல்ல பீட்சா கார்னர் தென்படுகிறதா என்று Via Cola di Rienzo பக்கத்தில் தேடிக் கொண்டிருந்தபோது தோளில் ஒரு கை விழுந்தது. திரும்பிப் பார்த்தால் என் மனைவி. கண்கள் விரிய ஆச்சரியப்பட்டு “ஏய்.. நீ எப்படி இங்க.. ரோமாபுரி-ல?” என்று கேட்பதற்குள் மனைவி முறைத்தபடி.. “ஒக்காந்த எடத்துலயே ஒலகம் சுத்தினது போதும்.. தோசை ஆறுது. வந்து சாப்டுங்க”.

எனக்கும் கூட கூகுள் மேப்ஸ் Street View-இல் உரோமிய வீதிகளைச் சுற்றிச் சுற்றி வலது கை ஆள்காட்டி விரல் ரொம்ப வலியெடுக்க ஆரம்பிக்க (மவுசை கிளிக்கி கிளிக்கி) கம்ப்யூட்டரை ஆஃப் செய்துவிட்டு தோசை சாப்பிடக் கிளம்பினேன். நாளைக்கும் இதே மாதிரி ஒரு நடை ஸ்விட்சர்லாந்து போய்வரவேண்டும்.

அவர்

எதிர் ஃப்ளாட் பெரியவர் இறந்துவிட்டார். மற்ற ஃப்ளாட்வாசிகள் அறியாதவண்ணம் இன்று பல்ஸ் குறைந்து கடைசி கணத்தை மவுனமாகவோ சிரமமாகவோ வாழ்ந்து முடித்துச் சென்றுவிட்டார்.

நான் இதுவரை அவரைப் பார்த்ததில்லை.

எதிர்க்கதவாக இருப்பதனால், சென்று துக்கம் விசாரித்து வருதல் நாகரிகம் என்பதால் சென்றேன். பெரியவர் 10 சதவிகிதம் கண்கள் திறந்த நிலையில் அமைதியாய் கண்ணாடிப் பெட்டிக்குள் படுத்திருந்தார். நல்ல உயரம். நார்மலான உடம்பு. ரொம்ப நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் கஷ்டப்பட்டுவந்தது போன்ற தோற்றம் எதுவும் இல்லாமல் முகத்தில் மிஞ்சியிருந்த சிறு தேஜஸ்.

அவரது மகனிடம் ‘ஐயம் சாரி.. எத்தனை மணிக்கு இறந்தார்?” என்றேன். சம்பிரதாயமான கேள்வி.

‘டூ. தர்ட்டிக்கு! ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப் போனோம். ஐ டவுட்.. வீட்லயே மூச்சு நின்னிருக்கும்னு..”

சம்பிரதாயமான பதில்.

”என்ன வயசு அவருக்கு?”

”எய்ட்டி ஒன்!”

மேலும் ஓரிரு சம்பிரதாயமான கேள்விகளைக் கேட்டுவிட்டு ”ஏதாவது உதவி தேவைன்னா தயங்காம சொல்லுங்க சார்..” என்று சொல்லிவிட்டு, கண்ணாடிப் பெட்டியருகே நின்று மனசுக்குள் மரியாதை செலுத்திவிட்டு வந்துவிட்டேன்.

மொத்தமாய் ஐந்து நிமிடங்களுக்குள் எனது கடமை முடிந்துவிட்டது.

ஒருவர் காலமாகிவிட்டார் என்கிற ஆர்ப்பாட்டங்கள் ஏதுமில்லாமல் அமைதி காத்து நிற்கிறது அப்பார்ட்மெண்ட். ஷாமியானா இல்லை. சங்கு இல்லை. தென்னை ஓலைகள் கிடையாது. மடக்கு நாற்காலிகள் இல்லை. ஒப்பாரி அழுகை இல்லை. அதிகமாய் யாருக்கும் அவர் இருந்ததும் தெரியாது. இறந்ததும் தெரியாது.

உறவினர்களின் வருகையைத் தெரிவிக்கும் ஏழெட்டு ஜோடி செருப்புகள் மட்டும் கதவின் முன்னால். ’சாப்பிடாம இருக்காதீங்கோ. ரெண்டு இட்லியாவது சாப்பிடுங்கோ. பையன்ட்ட வாங்கிட்டு வரச் சொல்றேன்’ என்று யாரோ யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

இந்த மரணத்தினால் இம்மி அளவு கூட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் மற்ற ஃப்ளாட்டுகளில் டி.வி. சீரியல் சப்தங்கள், தாளிக்கும் வாசனை, சின்னப்பையன்கள் விளையாடும் உற்சாகக் குரல்கள், லிஃப்ட்டின் கிராதி கேட்டை அறைந்து மூடும் சப்தம். எஃப். எம் ரேடியோ.

நாளைக் காலை ஃப்யூனரல் சர்விஸ் மாருதி ஆம்னி வந்து அமைதியாய் எடுத்துப் போய் எலெக்ட்ரிக் க்ரிமடோரியத்தில் இறுதி அஞ்சலி முடிந்துவிடும்.

அபார்ட்மெண்ட் சுவர்களுக்குள் அடைபட்ட நகரமயமாக்கப்பட்ட வாழ்வு உறுத்தல்களற்றுத் தொடரும்.

ஜவ்வரிசி வடாம், உள் பனியன் மற்றும் ஒரு ரேடியோ விளம்பரம்

நான் அட்வர்டைசிங் துறைக்குள் நுழையலாம் என முடிவெடுத்த காலம். உடம்பும் மூளையும் பரபரவென்று ஆகிவிட்டது. என்னவொரு திடமான முடிவு. இதுதான் நீ வேலை செய்ய லாயக்கான துறை என்று மனசுக்குள் ஓரமாய் உறுதியாக ஒரு மணி அடித்து பல்பு தோரணமெல்லாம் எரிய ஆரம்பித்திருந்தது. உடனே நான் ஹாலோ ப்ளாக் கற்கள் அடுக்கிவைத்து மனக் கோட்டை கட்ட ஆரம்பித்துவிட்டதுடன் ஒரு புதிய அனுபவத்திற்கு வாழ்க்கையை தயார் பண்ணவும் துவங்கியிருந்தேன்.

அதற்கு முன் அட்வர்டைசிங் கம்பெனிகள் எப்படியிருக்கும் என்று நேரில் பார்த்ததில்லை. ஆனால் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். முற்றிலும் கிரியேட்டிவ்வான விஷூவலைசர் ஆர்ட் டைரக்டர்கள் எல்லாம் உலவுகிற இடம். குளிரூட்டப்பட்ட கண்ணாடி அறைகளுக்குள் க்ரியேட்டிவ் ஸ்டுடியோ. கிராஃபிக் டிசைன் மென்பொருள்கள் நிரம்பி வழிகிற கம்ப்யூட்டர்கள். ஷெல்ஃப்களில் வழியும் விளம்பர டிசைன் பத்திரிக்கைகள், புத்தகங்கள். ஸ்டைலாக நுனி நாக்கு ஆங்கிலம் பேசுகிற யுவதிகள். மீடியாவுடன் நெருங்கின சம்பந்தம் உள்ள வேலை. எட்செட்ரா.

நண்பர் ஒருவர் ஏதோ ஒரு கம்பெனியில் க்ராஃபிக் டிசைனர் வேலை காலியாயிருக்கிறதென்று கேள்விப்பட்டதாய் சொன்னார். உடனே நான் ஆர்வமாய் அட்ரஸ் ஃபோன் நம்பர் போன்ற தகவல் சேகரித்துக் கொண்டு அதை முயற்சித்துப் பார்த்துவிடவேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டேன்.

விசாரிக்க ஃபோன் செய்தபோது குயில் போன்ற இனிமையான குரலில் ஒரு இளம்பெண் எடுத்துப் பேசுவதற்குப் பதில் ஒரு வயசான கட்டைக்குரல் “சொல்லுங்க.. ஆமாங்க.. ஒரு ஆள் வேணும். காலைல பத்து மணிக்கு வந்து மேடம்-ஐ பாருங்க” என்று தமிழில் பேசியது ஏமாற்றத்தைத் தந்தாலும்.. மேடம் என்பது மேனேஜரா, எம்.டி யா என்று யோசித்துக்கொண்டே அடுத்தநாள் காலை சரியாக 9.45-க்கு அந்த அட்வர்டைஸிங் கம்பெனியிருக்கிற தெருவுக்குள் நுழைந்தேன்.

அது இரண்டாவது ஏமாற்றம். நான் ஏதோவொரு சின்னக் கண்ணாடிக் கட்டிடம் ஒரு அகலமான மெயின்ரோட்டில் இருக்கும் என்று கணக்குப் போட்டு வைத்திருந்தேன். இது என்னவென்றால் ஒரு சின்ன சந்துமாதிரி எதிரில் எருமை மாடு வந்தால் அதற்கு வழிவிட திரும்பி தெரு முனைவரை போய் அப்புறம் அது போன பிறகு மறுபடி சந்துக்குள் வருகிற அளவு மிகக் குறுகலாக இருந்தது.

அந்த அட்ரஸை ஒரு வழியாகக் கண்டுபிடித்து அதன் முன் போய் நின்றபோது மலைத்துப் போனேன். கசகசவென்று வீடுகளும் கடைகளுமாய் இருந்த அந்தச் சந்தில் நெரிசலில் சிக்கியதுபோல ஒரு மாடிவீடு விழி பிதுங்கி நின்று என்னை வரவேற்றது. வாசலில் கொடியில் உள்பாவாடை, வேட்டி எல்லாம் காய்ந்துகொண்டிருக்க ஓரமாய் ஜவ்வரிசி வடாம் காயப்போட்டிருந்தது. பக்கத்து மண்டியிலிருந்து மளிகைப்பொருட்களால் ஆன கதம்ப வாசனை. வீட்டின் முன்னால் அங்கே ஒரு கம்பெனி இருப்பதற்கான அடையாளமோ போர்டோ எதுவும் இல்லை. விசாரித்தபோது வீட்டை ஒட்டியிருந்த இருட்டுச் சந்துக்குள் போய் மரப்படிக்கட்டு வழியாக மேலே போகச் சொன்னார்கள். போனேன். படி முடிகிற இடத்தில் மேலே ஓட்டுக் கூரையுடன் கூடிய ஒரு தளத்தில் ஒரு பெரியவர் நெற்றியில் பட்டை போட்டுக் கொண்டு ஒரு மர டேபிளின் முன் ஒரே ஒரு ஃபைலை வைத்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தார்.

இண்டர்வ்யூக்கு வந்திருப்பதாய் அவரிடம் தகவல் தெரிவித்தவுடன் ஒரு கால் லேசாய் ஆடுகிற ஸ்டூலை நகர்த்திப் போட்டு காத்திருக்கச் சொல்லிவிட்டு அந்த ஒரே ஒரு ஃபைலை மறுபடி பார்க்க ஆரம்பித்தார். இன்னொரு இருட்டறையிலிருந்து பாதமிரண்டில் பொன்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட என்று பாட்டு வந்தது. நான் உட்கார்ந்திருந்த அறையை மலங்க மலங்கப் பார்த்தேன். அந்த அறையின் குறுக்கே ஒரு கயிறு கட்டப் பட்டிருக்க அதில் சின்ன சைசில் சில உள் பனியன்களைப் பார்த்து புருவம் உயர்ந்தது. நான் பெரியவரைப் பார்க்க அவர் கருமமே கண்ணாக ஃபைலில் நெருக்கி நெருக்கி என்னவோ எழுதிக் கொண்டிருந்தார். அவர் நிச்சயமாக ஒரு ஆர்ட் டைரக்டராக இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது. அட்ரஸ் மாறி வந்துவிட்டேனோ என்று சந்தேகமும் வந்தது.

போய்விடலாமா என்று யோசிப்பதற்குள் திடீரென்று உள்ளறையிலிருந்து ஒரு நாற்பத்தி ஐந்து வயது அம்மாள் காட்டன் புடவையில் தோன்றினார். ’வாங்க தம்பி’ என்றார். நான் ஸ்டூலிலிருந்து எழுந்து நிற்க.. ”உங்க சாம்பிள் ஒர்க் எல்லாம் கொண்டுவந்தீங்களா” என்றார். நான் கையோடு கொண்டு போயிருந்த ஒரு சின்ன ஃபோல்டரை நீட்டினேன். நின்றபடியே ஒவ்வொரு பக்கமாகப் பார்க்க ஆரம்பித்தார்.

“எக்ஸ்பீரியன்ஸ் இருக்கா?”

“அவ்வளவா இல்ல”

“நல்லா வரையறீங்க”

”தேங்க்ஸ் மேடம்”

சட்டென்று உடம்பில் ஒரு டவுசர் தவிர வேறு எதுவும் அணியாத ஒரு பையன் ஓடிவந்து கொடியிலிருந்த உள்பனியனை உருவி அதை தலைவழியே இறக்கி அணிந்தான். அந்த அம்மாள் அவனிடம் புளகாங்கிதமாய்த் திரும்பி “அங்கிள் ட்ராயிங் எல்லாம் சூப்பரா இருக்கு பாரு.. நீ அங்கிள் கிட்ட கத்துக்கோ.. சரியா” என்றார்.

நான் கலவரமடைந்து.. “ஆஃபிஸ் எங்க இருக்கு?” என்றேன்.

“இதான் ஆஃபிஸ்.. அவரு அக்கவுண்டண்ட்.. ரேடியோக்கு ஜிங்கிள்ஸ் நிறைய பண்ணிருக்கோம். நிறைய துணிக்கடை எங்க கிளையண்டு. ரேடியோல திருமணப் பண்டிகை மங்கலப் பட்டு-ன்னு ஒரு விளம்பரப் பாட்டு கேட்டிருப்பீங்களே. அது நானே ட்யூன் போட்டுப் பாடினது என்றுவிட்டு தொண்டையை செறுமி அதை பாடிக்காட்ட ஆரம்பித்தார்.

“மேடம்.. கம்ப்யூட்டர்...?”

”கம்ப்யூட்டர் எதும் இல்லை. வேணும்னா வாங்கிடலாம். என்ன விலை வரும்?”

திடீரென்று வீட்டுக்குள் சாம்பார் கொதிக்கிற வாசம் பலமாய் வந்தது. என்னை சந்தேகமாய்ப் பார்த்துக்கொண்டே ஒரு சாம்பல் நிறப் பூனை மியாவ் என்று கடந்தது. அந்த அம்மாள் ஃபோல்டரை திருப்பிக் கொடுத்தார். அக்கவுண்டண்டட் ஃபைலில் முற்றிலுமாய் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருந்தார்.

ரொம்ப நம்பிக்கையுடன் ”நீங்க மண்டேவே ஜாயின் பண்ணிக்கலாம். மண்டே வரும்போது அவர்ட்ட அப்பாயிண்ட் லெட்டர் தரச்சொல்றேன்” என்றார் மர டேபிள் மனிதரைக் காட்டி.

அந்த அம்மணியிடம் வெகு அவசரமாய் விடைபெற்றுக் கொண்டு மரப்படி இருட்டில் தடுமாறாமல் கவனமாய் இறங்கி வெளியே வந்து எருமைச் சாணியை மிதிக்காமல் வீட்டுக்குத் திரும்பும் வழியில் திருமணப் பண்டிகை மங்கலப் பட்டு என்று வாய் தன்னிச்சையாகப் பாடிக்கொண்டிருந்ததை உணர்ந்தேன்.

உதவி தேவை

முத்துராமன். அறியப்பட்ட எழுத்தாளர். நல்ல சிறுகதையாளர். வயது 33. கிழக்கு பதிப்பகத்திலும், ‘தமிழக அரசியல்’ இதழிலும் பணியாற்றியவர். ’சதுரங்கச் சிப்பாய்கள்’ என்கிற அருமையான சிறுகதைத் தொகுப்புக்கு சொந்தக்காரர்.

தற்போது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளார். போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் டாக்டர். சௌந்தரராஜனிடம் ஆலோசனை பெற்று வருகிறார். கடந்த நான்கு மாதங்களாக நண்பர்கள் உதவியினால் டயாலிஸிஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.

முத்துராமனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரது தாயார் ஜெகதீஸ்வரி தனது சிறுநீரகத்தை அளிக்க இருக்கிறார். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பணம் கிடைக்கும் பட்சத்தில், ஏப்ரல் 2010லேயே அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட முடியும்.

அறுவை சிகிச்சைக்கும், அதற்குப் பிறகான மருத்துவச் செலவுகளுக்கும் சேர்த்து சுமார் நான்கு லட்சம் ரூபாய் வரை ஆகும் என்று தெரிய வருகிறது. உதவ விரும்பும் நண்பர்கள் முத்துராமன் குறித்து மேலும் விவரங்கள் அறிய :

ஜெ. ராம்கி – ramkij@gmail.com
பாலபாரதி – kuilbala@gmail.com
முகில் – mugil.siva@gmail.com – 99400 84450

முத்துராமனுடைய வங்கிக் கணக்கு எண் :

SBI Mogappair Branch – A/c No: 30963258849
Branch Code : 5090
MICR No: 600002118
IFS Code : SBIN0005090

MUTHURAMAN என்ற பெயரில் காசோலை / டிராஃப்ட்கள் கொடுக்கலாம்.

முகவரி :

முத்துராமன்,
22, எச்.ஐ.ஜி. ப்ளாட்,
7வது தெரு, ஏரித்திட்டம்,
முகப்பேர் மேற்கு,
சென்னை – 600037.
muthuraman@gmail.com

அல்லது கிழக்கு பதிப்பக முகவரிக்கும் அனுப்பலாம்.

முகில்
கிழக்கு பதிப்பகம்
33/15, எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை,
சென்னை – 600 018.
044 – 4200 9601 / 03/ 04.

முத்துராமனுக்கு அறுவை சிகிச்சை வெற்றியடைந்து வெகுவிரைவில் பூரண குணமடைய மனமார்ந்த பிரார்த்தனைகள்.

வீட்டுக்காரர் பார்த்தால் என்ன நினைப்பார்?

சென்னையில் ஒரு வீட்டை நீங்கள் குடியிருக்க வாடகைக்குப் பிடிக்கிறீர்கள். அதுவும் நகரத்தின் இதயத்துக்கு நடுவே அல்லது அருகாமையில். உங்களுக்கு வாடகைக்கு விடுவதற்கென்று தன் வீட்டின் சுவர்களுக்கு பளபளவென டிஸ்டெம்பரோ பெயிண்ட்டோ அடித்து ஒரு புதிய வீட்டின் தோற்றத்தை அதற்கு கொடுத்து வைத்திருக்கிறார் வீட்டு உரிமையாளர்.

ஒரு நல்ல நாள் பார்த்து பால் காய்ச்சி பிறகு உங்கள் வாழ்நாள் உடைமைகளை அல்லது இப்பூவுலகில் வாழத் தேவையானதாகக் கருதும் குறைந்த பட்ச அத்தியாவசியச் சாமான்களை புதிய வீட்டிற்கு மாற்றிவிடுகிறீர்கள். எல்லாவற்றையும் அந்தந்த இடத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு, காலண்டர் மாட்டி, பால்கனியில் துணியுலர்த்த கொடிகட்டிவிட்டு, மின் அட்டையை சரிபார்த்து ரீடிங்கைக் குறித்து வைத்துவிட்டு, பாலுக்கும் பேப்பருக்கும் ஏற்பாடு பண்ணிவிட்டு, பக்கத்து வீட்டுக்காருக்கு எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு ஹலோவும் சொல்லி வைத்தாயிற்று.

ஒரு பெரிய ராக்கெட் ப்ராஜக்டை முடித்த அலுப்புடன் உங்கள் வரவேற்பறை சோபாவில் சாய்கிறீர்கள். எதிரில் சுவரில் புதிதாக வண்ணமடிக்கப்பட்ட சுவரில் ஒரு பெரிய கருப்புக் கீறல். என்ன அது என்று பதறி பக்கத்தில் போய்ப் பார்த்தால் அது ஒரு பென்சில் கிறுக்கல். மிகவும் கண்டிக்கத்தக்க இந்த அசட்டு வேலையைச் செய்தது உங்கள் குழந்தையாகத்தான் இருக்கும் என்று சந்தேகப்பட்டு அதைத் தேடினால் அது கையில் க்ரையான்களுடன் பெட்ரூம் சுவரில் தனது அடுத்த கட்ட வேலையை ஆரம்பித்திருக்கிறது.

உங்கள் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும்? சென்னை நகரில் நம்மை நம்பி வீடு தரும்போதே ஆயிரத்து நூற்றி இருபத்து நாலு நிபந்தனைகளும் கூடவே ஒரு பதினோரு மாத அக்ரிமெண்டும் போட்டிருக்கும் வீட்டுக்காரருக்கு அவரது வீட்டை சேதாரமில்லாமல் திருப்பிக் கொடுக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறபடியால் நிச்சயம் இப்போது உங்கள் ரத்த அழுத்தம் ஏறியிருக்க வாய்ப்புண்டு.

“கண்ணா இதுமாதிரியெல்லாம் சுவத்தில கிறுக்கக்கூடாது சரியா. ஹவுஸ் ஓனர் அப்பாவ திட்டுவாரு” என்று நயமாய்ச் சொல்லி பென்சில், பேனா க்ரையான்களை உடனடியாக குழந்தைக்கு எட்டாத உயரத்தில் வைத்துவிடவும் செய்வீர்கள். இப்படிச் செய்யவில்லையென்றால் வீட்டுக்காரரின் கடும் எரிச்சலுக்கு ஆளாவதுடன், வீட்டைக் காலி செய்யும்போது உங்கள் அட்வான்ஸ் தொகையிலிருந்து ஒரு பெரும் பங்கை வீட்டுச் சுவர்களை நாசப்படுத்தியதற்காக அவர் கழித்துக் கொள்ளக்கூடும்.

ஆனால் இவ்வாறான கவலைகள் எதுவுமற்று செந்தில் ஒரு நண்பர் இருந்தார். அபிராமபுரத்திலிருக்கும் அவர் வீட்டுக்கு ஒரு முறை போனேன். வாசலைத்தாண்டி உள்ளே நுழைந்ததும் ஹாலின் மொத்த சுவரையும் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு சுவர் கிறுக்கல்கள். அவரது ப்ரீ கேஜி குழந்தை ஹரிணியின் கைவண்ணம். பென்சில், கிரையான், இன்சுலேஸன் டேப், போஸ்டர் கலர் என்று என்ன கையில் என்ன கிடைக்கிறதோ அவைகளைக்கொண்டு தனக்கு எந்த உயரம் வரை எட்டுகிறதோ அது வரை விதவிதமான கிறுக்கல்கள். எட்டவில்லையென்றால் சோபாவின் மீது ஏறி நின்று.

ஹாலில் மட்டும் அல்ல படுக்கையறைகளில், சமையலறை சுவர்களில் என எங்கும் கிறுக்கல் மயம். ஆக அவரது வீடு ஒரு சிறிய ஆர்ட் கேலரி மாதிரி தோற்றமளித்தது.

நீங்கள் குழந்தையைக் கண்டிப்பதில்லையா என்று கேட்டதற்கு நண்பர் மெதுவாய்ச் சிரித்தார். அதோட கிரியேட்டிவிட்டியையும் சுதந்திரத்தையும் ஏன் கெடுக்கவேண்டும் என்றார். மீறிப் போனால் வீட்டுச் சொந்தக்காரர் வெள்ளையடிக்க ஒரு இருபதாயிரம் ரூபாய் கேட்பார். கொடுத்தால் போயிற்று என்றார். நான் ஆச்சரியமாகிப்போனேன்.

நான் குடியிருக்கிற வீட்டில் என் பையன் இப்படிக் கிறுக்கத் தலைப்பட்டபோது அவனை தடுத்தாட்கொண்டது ஞாபகம் வந்தது.  நான் முடிந்த அளவு வீட்டுக்காரர் குறை சொல்லாமல் நடந்துகொள்ளவேண்டும் என்று நினைக்கிற ஆசாமி. அதற்காக செய்கிற தியாகங்களில் அதுவும் ஒன்று.

குழந்தைகளுக்கு சுவரில் கிறுக்குதல் சந்தோஷம். ஆனால் ஒரு சில நிர்பந்தங்களின் பொருட்டு அவ்வாறு செய்யவிடாமல் அடக்கி ஆள்கிறோம். அதை என் நண்பர் செய்ய முயற்சிக்கவில்லை என்பது நல்ல பாராட்டத்தக்க விஷயமாகப்பட்டது. அவரது குழந்தை தனக்கு மனதில் தோன்றுவதை எல்லாம் எங்கே வேண்டுமானாலும் சுதந்திரமாகக் கிறுக்கிக் கொள்ள அனுமதியளித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக சுவர் முழுவதும் குறுக்கும் நெடுக்கும் பலவிதமான கோடுகளால் ஹரிணிக்கு தன் உலகத்தை விரியச் செய்ய முடிகிறது.

அவைகளை சாதாரணக் கண்களோடு பார்த்தால் வெறும் கிறுக்கல்களாக மட்டுமே தெரியும். ஹரிணியின் மாய உலகத்தில் அவள் கற்பனைகளில் மிதக்கும் உருவங்கள் கோடுகளாக வெளிப்பட்டிருக்கிறதென்று ஏன் சொல்லமுடியாது?. அந்த உலகத்திற்கு நீங்கள் பயணிக்க வேண்டுமென்றால் அந்தக் கிறுக்கல்களை புரிந்து கொள்ளவேண்டுமென்றால் உங்கள் வயதை மூன்றாக மாற்றினால் மட்டுமே முடியும்.

குழந்தைகள் பிற்காலத்தில் என்னவாக ஆவார்கள் என்று யாராலும் சரியாகக் கணிக்க முடியாது. பெரும்பாலானவர்களின் வாழ்க்கையிலும் அதுவே நிகழ்ந்திருக்கிறது. நான் என்னவாக ஆவேன் என்று எப்படி என் அப்பாவுக்குத் தெரியாமல் போனதோ அதே மாதிரி என் மகன் பிற்காலத்தில் எதுவாக மாறுவான் என்று என்னாலும் சொல்ல முடியாது. வேண்டுமென்றால் அவன் எதுவாக ஆகவேண்டுமென்று நினைக்கிறானோ அதற்கான அடித்தளத்தையும், உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கலாம்.

நியூயார்க்கில் குழந்தை மேதாவியான மார்லா ஆம்ஸ்டெட் (Marla Olmstead) என்கிற ஒரு சின்னக் குழந்தை உலகின் முன்னணி ஓவியர்கள் மூக்கில் விரலை வைக்குமளவுக்கு மாடர்ன் ஆர்ட் ஓவியங்களை வரைந்து பல லட்சம் டாலர்களுக்கு அவைகளை விற்றுக்கொண்டிருப்பதையும் டாக்குமெண்டரியாக டிவியில் ஒரு நிகழ்ச்சியில் பார்த்தேன். அது சின்ன வயதிலிருந்தே இப்படி சுவரில் கிறுக்கிய குழந்தையாகக்கூட இருக்கலாம்.

இன்றைய சும்மா சுவர்க் கிறுக்கல்கள் நாளைய கலைப்படைப்புகளாக மாற நிறையவே வாய்ப்பிருக்கிறது. குழந்தைகள் செய்வதையும் சொல்வதையும் முற்றும் சரியல்ல என்று புறந்தள்ளுவதும் நல்லதல்ல என்று தோன்றுகிறது. வளரும் வயதில் லேசான கண்டிப்புடன் கொஞ்சம் சுதந்தரத்தையும் வழங்கும் பட்சத்தில் குழந்தைகள் தங்களின் படைப்புத்திறனை நல்ல முறையில் கூராக்கிக் கொள்ள இயலும். நண்பர் அதை செவ்வனே செய்கிறார்.

நண்பர் வீட்டுக்குப் போன நேரம் கையில் டிஜிட்டல் கேமரா இருந்ததால் குழந்தை ஹரிணியின் சுவரோவியங்களைப் படமாக்கி பிறகு கம்ப்யூட்டரில் அவைகளுக்குப் ஃப்ரேம் எல்லாம் போட்டு மின்னஞ்சலில் அவருக்கு அனுப்பி வைத்தபோது நெகிழ்ந்து சந்தோஷப்பட்டார். பிறகு அவைகளையே கலந்துகட்டி எனது வலைத்தளமான சித்ரன்.காம்-மில் (http://chithran.com) தலைப்பு பேனரிலும் உபயோகப்படுத்திக்கொண்டேன்.ஹரிணியின் அந்த சுவரோவியங்களை இந்தப் பதிவில் ஆங்காங்கே கொடுத்திருக்கிறேன். எப்படியிருக்கிறதென்று சொல்லுங்களேன்!

நெருப்பில்லாமல் புகைகிறது

மதிய உணவு இடைவேளையில் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது சின்ன வயதில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொன்னார். நண்பர் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர். அவரது நண்பரொருவர் “இதை பாக்கெட்டில் வைத்திரு. அப்புறம் வாங்கிக் கொள்கிறேன்” என்று கொடுத்து வைத்திருந்த ஒற்றை சிகரெட்டை பாக்கெட்டில் போட்டு அப்புறம் மறந்துபோய் வீட்டுக்கு எடுத்துப் போய்விட்டாராம். சிகரெட் பிடிப்பதோடு அப்பாவின் சட்டையையும் அவ்வப்போது எடுத்துப் போட்டுக்கொண்டு போகும் பழக்கமுடையவர் இவர். வீட்டுக்கு வந்து ஹாங்கரில் மாட்டின சட்டையை அப்பா துவைக்கப் போடுவதற்காக எடுத்தபோது சொன்னாராம். “எலே.. சட்டப்பாக்கெட்ல ஒரு சிகரெட் இருக்குலே”.

கட்டிலில் ஒய்யாரமாய் படுத்து அரைத்தூக்கத்தில் இருந்த நண்பர். “அத வெளிய தூக்கிப் போடுங்கப்பா!”

அப்பாவும் வேறு கேள்விகள் ஏதும் கேட்காமல் தூக்கிப் போட்டுவிட்டுப் போய்விட்டாராம். இந்தச் சம்பவத்தை விவரித்த நண்பர் சொன்னது “அப்பா என்னை எதுவுமே கேக்கல. அது தவிர நான் சிகரெட் பிடிப்பனா இல்லையான்னு என்பது இன்னிக்கு வரைக்கும் அப்பாவுக்கு தெரியாது. தெரிஞ்சிருந்தாலும் இதுவரைக்கும் என்கிட்ட அதப் பத்திக் கேட்டதில்ல.”

இந்த மாதிரி தன் கட்டுப்பாடுகளிலிருந்து மகன்களுக்கு முழு சுதந்திரம் வழங்கியிருக்கிற அல்லது அவ்வப்போது கண்டுகொள்ளாத அப்பாக்கள் ஓரிரு பேரை நான் கண்டிருக்கிறேன். இத்தனைக்கும் அந்த அப்பாக்கள் சிகரெட் பழக்கம் இல்லாதவர்கள். சிகரெட் பிடித்தல் உடல்நலத்திற்குத் தீங்கானது என்கிற அரசாங்க வாசகத்தை அவர்கள் தெளிவாக அறிந்து வைத்திருப்பவர்கள்.

ஒரு முறை என்னுடைய (இன்னொரு) நண்பனின் வீட்டுக்குப் போனபோது வாசலில் ஈஸி சேரில் அவன் அப்பா சாய்ந்து படுத்திருந்தார். அவன் இல்லையா என்று அவரிடம் விசாரித்தபோது ஆள்காட்டி விரலால் உத்தரத்தை நோக்கிக் காட்டிவிட்டு, பிறகு இரண்டு விரல்களை “v" மாதிரி உதட்டில் வைத்து ஊதிக் காட்டினார். நான் ஒரு நிமிடம் தேமே என்று விழித்துவிட்டுப் பின்னர் அதன் பொருள் புரிந்து சைடு படிக்கட்டு வழியாக மொட்டை மாடிக்குச் சென்றேன். அங்கே சுற்றுச் சுவரில் உட்கார்ந்து வானத்தைப் பார்த்துக் கொண்டு புகைவிட்டுக் கொண்டிருந்தான் நண்பன். “என்னடா வீட்லயே தம்மா? அப்பா இருக்காரே!” என்றதற்கு மூக்கு வழியாக புகையை வெளியே விட்டுவிட்டு “கண்டுக்க மாட்டார்” என்றான். மீண்டும் ஒரு இழுப்பு இழுத்துவிட்டு.. “அம்மாவும்தான்” என்றான்.

இந்த இடத்தில் நீங்கள் எல்லாரும் “ரோஜா” படத்தில் அரவிந்தசாமி அம்மா முன்னிலையிலேயே சிகரெட் பற்ற வைத்துப் புகைப்பதை தவறாமல் நினைவுகூறுவீர்கள் என்று தெரியும். (நினைவு கூறாதவர்கள் இந்த வரியைப் படித்துவிட்டு ஒருமுறை நினைவு கூறுங்கள்.) இதைப்பார்த்து சிலபேர் அதிர்ச்சியும் சில பேர் ஆச்சரியமும், சில பேர் இரண்டையும் ஒருங்கே அடைந்தார்கள்.

என் அப்பா சிகரெட்டெல்லாம் பிடிக்கற பழக்கம் வெச்சுக்காதே என்று என்றைக்காவது எனக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறாரா என்று யோசித்துப் பார்த்தால் அப்படி எதுவும் நினைவில் புகையாடவில்லை. பையன் தம் எல்லாம் அடிக்கிறானா என்று யாரிடமாவது விசாரித்திருப்பாரா என்பது கூட நிச்சயமாகத் தெரியவில்லை.

எனக்கு சிகரெட் பிடிக்கிற நண்பர்கள் நிறைய பேர் உண்டு. என்னிடமே ரெண்டே முக்கால் ரூபாய் வாங்கி ‘கிங்ஸ்’ வாங்கியவர்கள் இருக்கிறார்கள். (இப்போ எவ்ளோ?) அவர்கள் சில நேரம் அளவுக்கு அதிகமாக புகைப்பதுபோல தோன்றும் சமயங்களில் “ஏம்ப்பா இந்தக் கருமத்த விட்டுற வேண்டியதுதான?” என்று கேட்டிருக்கிறேன். அதற்கு விதவிதமான பதில்கள் வந்திருக்கின்றன.

பதில் 1: பதினெட்டு வயசில காலேஜ்ல ஆரம்பிச்சதுடா.. உடம்புல ஊறிப்போச்சு. விடறது கஷ்டம்.
பதில் 2: எந்த ******க்கு விடணும்னு சொல்லு.
பதில் 3: புகை உடலுக்குப் பகைங்கறதுனாலதான் உள்ள வச்சுக்காம வெளிய விட்டுர்றேன். ஹிஹி!
பதில் 4: வுட்டுட்டா உளுந்துரும்ஜி!
பதில் 5: எனக்கு ஆக்ஸிஜனே இதுதான். எப்டி வுடறது?

இன்னபிற.

சிகரெட் பிடிக்கிற அப்பாக்கள் சிலபேரைப் பார்த்திருக்கிறேன். தன்னிடமிருந்து மகனோ மகளோ சிகரெட் பிடிப்பதைக் கற்றுக் கொண்டுவிடக்கூடாதென்கிற முன்னெச்சரிக்கையுடன் வீட்டுக்கு வெளியே சற்றுத் தள்ளி தெருமுனையில் அல்லது டீக்கடையில் என்று கமுக்கமாக முடித்துவிட்டு வந்துவிடுவார்கள். வாசம் தெரியாமலிருக்க ஹால்ஸ் அல்லது நிஜாம் பாக்கு.

பதில் 1-ஐ சொன்ன நண்பரிடம் முன்னெல்லாம் ஏதாவது ஒரு இடத்தைக் குறிப்பிட்டு அது எங்கேயிருக்கிறதென்று கேட்டால், இந்த பஸ்ஸில் ஏறி, அந்த ஸ்டாப்பிங்கில் இறங்கி அப்றம் ஒரு சிகரெட் பத்த வெச்சு நடக்க ஆரம்பிச்சீன்னா அது தீர்றதுக்குள்ள போயிரலாம் என்பான். இது எனக்கு ஒரு விதத்தில் இன்ஸ்பையர் ஆகி 96-ல் கல்கியில் வெளிவந்த ஒரு சிறுகதையில் இதை ஒரு வரியாக வைத்தேன். கதை நாயகி காயத்ரியின் கணவன் ராம்குமார் என்பவன் தினம் காலை ஒரு சிகரெட் பற்றவைத்துக்கொண்டு மனைவியை நடக்கிற தூரத்தில் இருக்கிற ஆபிஸ் வரை விட்டுவிட்டுத் திரும்புவான். ‘ஒரு சிகரெட் தூரம்’ என்று கூட தலைப்பு வைத்து பிறகு ‘நடக்கிற தூரம்’ என்று மாறிவிட்டது.

கோவையில் ஒரு அட்வர்டைஸிங் கம்பெனியில் பணிபுரிந்தபோது அங்கே வேலை செய்த ஒரு பத்துப் பன்னிரண்டு பேரில் பெண்கள் தவிர முக்கால்வாசிப் பேர் புகை மன்னர்களாக இருந்தார்கள். கம்பெனியின் வைஸ் பிரஸிடெண்ட் உட்பட. கிரியேட்டிவ் ஏரியாவில் ஆர்ட் டைரக்டர், உதவி ஆர்டிஸ்ட், க்ளையண்ட் சர்வீஸ் எக்ஸிக்யூட்டிவ், அக்கவுண்ட் ஹெட் என்று எல்லாருமே ஒரே அறையில் உட்கார்ந்து கொண்டு மாற்றி மாற்றி பற்றவைத்துக் கொண்டிருப்பார்கள். வத்திப் பெட்டி இருக்கா என்று என்னிடம் வேண்டுமென்றே கேட்பார்கள்.

புகைபிடித்தல் என்பது கிரியேட்டிவ்-ஆன ஆசாமிகளின் தலையாய லைஃப் ஸ்டைல் என்பதை ஸ்தாபிக்க முனைபவர்கள் அவர்கள். நான் திருவிளையாடல் படத்தில் கைலாயக் காட்சி மாதிரி புகை மண்டலத்துக்கு நடுவே மூச்சுத் திணறி உட்கார்ந்து கொண்டிருப்பேன். இதற்கல்லவா அறிஞர்கள் பாஸ்ஸிவ் ஸ்மோக்கிங் (Passive Smoking) என்று பெயர் வைத்திருக்கிறார்கள்!! இதில் என்ன வேடிக்கை என்றால் மாத ஆரம்பத்தில் டப்பா டப்பாவாக கைமாறுகிற சிகரெட், மாத இறுதியில் பட்ஜெட் காரணமாக மல்லிசேரி பீடியாகத் தேய்ந்து ஆளாளுக்குக் காட்டமாய் உதட்டில் வைத்து இழுத்துக் கொண்டிருப்பார்கள். வைஸ் பிரஸிடெண்ட் வந்து “யோவ், பீடி குடுய்யா” என்று ஆர்ட் டைரக்டரிடம் வந்து வாங்கிப் போவார். நான் எழுந்து வெளியே வந்துவிடுவேன். (அந்த சமயங்களில் அவர்களின் கிரியேட்டிவிட்டி இன்னும் அதிகமானதா என்பதை நான் கவனித்திருக்கவில்லை)

பொள்ளாச்சியில் தேவர் மகன் படப்பிடிப்புக்கு வந்திருந்த ஒரு பிரபல எழுத்தாளரை அவர் தங்கியிருந்த லாட்ஜ் அறையில் சந்திந்தபோது கையில் புகைகிற சிகரெட்டுடன் வரவேற்றார். ஒரு நான்கைந்து மணி நேரமிருக்கும். ஒரு சிகரெட் தீர்ந்து போகும் போது அதிலேயே இன்னொன்றை பற்றவைத்துக் கொண்டு இடைவெளி விடாமல் தொடர்ந்து அவர் புகைத்ததைப் பார்த்து அரண்டும் மிரண்டும் போயிருந்தேன். எனக்குத் தெரிந்து குறைந்தது 25 சிகரெட்டுகளாவது தீர்ந்திருக்கும். செயின் ஸ்மோக்கிங் என்றால் என்ன என்று டெமோ-வுடன் தெரிந்து கொண்டது அன்றுதான். என் வீட்டுக்குப் பக்கத்தில் கூட ஒருவர் காலர் தூக்கிவிடப்பட்ட டி-சர்ட் மற்றும் வேட்டியுடன் எப்போதும் சதா விரலிடுக்கில் புகைகிற சிகரெட்டுடன் காம்பவுண்டுக்கு வெளியே நின்றிருப்பார். எங்கேயாவது போகும்போதும் வரும்போதும் எந்நேரமும் அவரை அந்த இடத்தில் அந்த நிலையிலேயே பார்த்துக்கொண்டிருக்கிறேன். தம் அடிப்பதை ஒரு வேலையாகவே செய்ய முடியுமா என்று ஆச்சரியமாகவும் இருக்கிறது.

சிகரெட் பிடிக்கிற ஆண்கள் பெட்டிக்கடையில் “பிரதர்.. நெருப்பு குடுங்க” என்று பக்கத்தில் நிற்கிறவரிடம் இயல்பாகக் கேட்கும் கேள்வியில் முன்பின் பழக்கம் இல்லாதவர்கூட மனமுவந்து தன் கொள்ளியைத் தந்து உதவி பின் தோழமையுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கூட பார்த்திருக்கிறேன். நட்பு வளர்க்க உதவும் நெருப்பு.

வாழ்க்கையில் அவ்வப்போது தொட்டுக்கொள்ள சிகரெட், பான் பராக், சுவிங்கம் என்று ஏதாவது ஒரு ஐட்டம் ஏன் எப்போதும் சிலருக்குத் தேவைப்படுகிறதென்று சில நேரம் யோசித்துப் பார்த்திருக்கிறேன். இது ஒரு உளவியல் சம்பந்தப்பட்ட விஷயம் என்றுதான் தோன்றுகிறது. ஸீரியசாய் எப்போதும் யோசிப்பவர்கள் கையில் சிகரெட் புகைகிறது. அது அவர்கள் சிந்தனையைத் தூண்டுகிறதா என்று உலகமெங்கும் யாராவது கருத்துக் கணிப்பு நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். தொழிலாளிகள் தன் உழைப்பை, வியர்வையை, அலுப்பை மறக்க ஓரமாய் உட்கார்ந்து ஒரு பீடியை ஒரு இழுப்பு. சிலருக்கு பெண்களிடம் தான் ஒரு ஹீரோவாக நிரூபணம் செய்வதற்கு. சிலருக்கு தான் ஒரு வில்லன் என்று மற்றவர்களுக்குத் பிரகடனப்படுத்துவதற்கு. சிலருக்கு தான் ஒரு ஆண் என்று நிரூபணம் செய்வதற்கு. இந்த லிஸ்டை இன்னும் விரிக்கலாம்.

பிறரிடம் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவதற்கு. தன்னுடைய தாழ்வு மனப்பான்மையை மறைப்பதற்கு. அப்பாவை எதிர்ப்பதற்கு. தன்னிடமிருக்கிற இண்டெலெக்சுவல்தனத்தை வெளிப்படுத்துவதற்கு. கை நடுக்கத்தை மறைப்பதற்கு. மதுவருந்தும்போது சும்மா ஒரு உப கிக் ஏற்படுத்துவதற்கு. சிலருக்கு சும்மா ஸ்டைலுக்கு. சிகரெட் என்றால் என்ன என்று ஒரு முறை தெரிந்துகொள்வதற்கு. தன் படைப்பாற்றலை அதிகரித்துக் கொள்வதற்கு. சிலருக்கு சாப்பாட்டுக்கு பதிலாக. சிலர் தன் நண்பர்களுடன் சும்மா கம்பெனிக்கு. தன் கணவனையோ, காதலனையோவிட தானும் குறைந்து போய்விடவில்லை என்று தெரிவிப்பதற்கு. சிலருக்கு துக்கத்தைக் கரைக்க. சிலருக்கு தூக்கத்தை அழைக்க. சிலருக்கு குளிரைத் தடுக்க. சிலருக்கு மழையை ரசிக்க. இப்படியாக ஒவ்வொருவருக்கும் புகைபிடிப்பதற்கான தனிப்பட்ட காரணங்கள் நீண்டுகொண்டே போகும்.

உதடு வழி நுழைகிற புகை நெஞ்சாங்கூட்டில் இறங்கிப் பரவி மனதிலும் உடம்பிலும் என்னெல்லாம் மாயம் செய்கிறது என்பதை சிகரெட்டை நுனி முதல் அடிவரை அனுபவித்துப் பிறகு ஃபில்டரைக் கடாசுபவர்களுக்குத்தான் வெளிச்சம்.

சிலர் தொட நினைக்கிறார்கள். சிலர் விட நினைக்கிறார்கள். சிகரெட் பிடிப்பது என்பது தனிப்பட்ட நபரின் விருப்பமும், சுதந்திரமும், உரிமையும், கொள்கையும் ஆகவும் இருக்கிறது. சிலருக்கு அதுவே ஒரு மோனத்தவமும், தியானமும், வாழ்வியல் வழியும் ஆக பரிமாணம் கொண்டிருக்கிறது. டாக்டர் எக்ஸ்ரேவை சுட்டிக் காட்டி “உங்க நுரையீரல்ல... என்று ஏதோ சொல்ல ஆரம்பிக்கும்வரை.

கீட்ஸ் படிச்சிருக்கியா?

கதைகளோ, நாவல்களோ படிப்பது என்பது சும்மா பொழுதுபோக்கிற்காகவா? அல்லது குறிப்பிட்ட எழுத்தாளர்களின் எழுத்து நடைக்கான ஆராதனை அல்லது ஆர்வமா? இலக்கிய (அல்லது கமர்ஷியல்) தாகமா? கதையில் வரும் சம்பவங்களோடு தன் வாழ்வில் எதையாவது பொருத்திப் பார்த்து மகிழ்ச்சி அல்லது துக்கப்படுவதற்கா? அல்லது தன் வாழ்வுக்கெட்டாத, கற்பனை செய்து பார்க்க இயலாத நிகழ்வுகளை கதைகளில் படித்துக் களிக்கிற திருப்தியா? பொது அறிவு வளர்ப்பதற்கா?

இது எல்லாமும் ஆக இருக்கலாம் அல்லது இவற்றில் ஏதாவது ஒன்று. ஆனால் கடைசியில் சொல்கிற பாயிண்டை கவனியுங்கள். பொது அறிவு வளர்ப்பது.

கதைகள், நாவல்கள் படிப்பதால் நம் பொது அறிவு வளருமா என்றால் நிச்சயம் ஓரளவுக்கு வளரும் என்பதற்கான பதிவு இது. எனக்கு கொஞ்சமாய் வளர்ந்திருக்கிறது. குறிப்பாக சின்ன வயசிலிருந்து படித்த வணிக எழுத்தாளர்களின் கதைகள், நாவல்கள் மூலம். பல்வேறு விஷயங்கள் பற்றிய ஞானத்தைப் பெற அவைகள் வெகுவாக துணை புரிந்திருக்கின்றன.

அப்போது பெருமளவில் வந்துகொண்டிருந்த பாக்கெட், மாத நாவல்களை எடுத்துக்கொள்ளுங்கள். (உடனே எடுக்கப் போய்விடாதீர்கள்). ராஜேஷ்குமாரிலிருந்து ஆரம்பித்தால் சுஜாதாவரை ஒரு பெரிய ரவுண்டு வரலாம். இந்த மாதிரி எழுத்தாளர்கள் தாராளமான ஆங்கிலக் கலப்போடு எழுதினார்கள் என்பது வாசகர்களின் வொக்காபுலரி அல்லது ஒக்கபிலேரியை முன்னேற்றப் பயன்பட்டன. நான் சொல்வது அதிகமாய் விஷய ஞானமற்ற வயதில் இவைகளைப் படிப்பவர்களுக்கு (அல்லது படித்தவர்களுக்கு). நான் ஆறாங்கிளாஸ் படிக்கும்போதே அம்புலிமாமா ரத்னபாலாவிலிருந்து ப்ரொமோஷன் ஆகி மாத நாவல்களுக்கு வந்துவிட்டேனாக்கும். அப்போது ராஜேஷ்குமார் “அவன் காரிடாரில் நடந்து வெளியே வந்தான்” என்று எழுதினால் எனக்கு காரிடார் என்ற புதிய வார்த்தை கிடைக்கிறது. அப்போது இவையெல்லாம் நான் கேள்விப்படாத வார்த்தைகளாகியிருந்தது. இப்போதுகூட எங்கேயாவது நீண்ட காரிடாரில் நடக்கும்போது ராஜேஷ்குமார் சிலசமயம் சட்டென்று நினைவுக்கு வருவதுண்டு. இதே போல் சில உதாரணங்களைச் சொல்லவேண்டுமென்றால். (சும்மா படித்த ஞாபகத்திலிருந்து உதாரணத்துக்கு மட்டுமே. சரியான வரிகள் அல்ல)

  • அவன் போர்டிகோவில் காரை செருகி நிறுத்தினான்.
  • அவள் லவுஞ்சில் காத்திருந்த மாதவனை நோக்கிக் கையசைத்தாள்.
  • அந்த விமானம் ஒரு அலுமினியப் பறவை போல மிதந்துவந்தது.
  • ஸ்க்வாட்ரன் லீடர் குமார் கீழே விழுந்தபோது ஒரு பந்துபோல தன்னைச் சுருட்டிக்கொண்டான்.
  • அவன் அவளை நரிமன் பாயிண்டிற்கு வரச் சொல்லியிருந்தான்.
  • வஸந்த் ஒருவித ரிஃப்ளெக்‌ஷ் இயக்கத்தில் செயல்பட்டு உடனே குனிந்துகொண்டான்.
  • அவன் யமஹாவை உதைத்துக் கிளப்பிச் சீறினான்.
  • சோடியம் வேப்பர் விளக்கு வெளிச்சத்தில் அவள் முகம் இன்னும் அழகாக இருந்தது.

மேலுள்ளவற்றில் காணப்படும் வரிகளில் போர்டிகோ, லவுஞ்ச், அலுமினியத்தால் செய்யப்படும் விமானம், ராணுவத்தில் இருக்கிற ஸ்க்வாட்ரன் லீடர் என்ற பதவி, மும்பையின் நரிமன் பாயிண்ட், ரிப்ளெக்ஸ், இந்த மாதிரி புதிய வார்த்தைகள் எல்லாம் ஆறாங்கிளாஸ் தமிழ் மீடியம் படிக்கிற பையனுக்கு எதேஷ்டமான பொது அறிவா இல்லையா? நிச்சயம் நான் யமஹாவையோ, சோடியம் வேப்பர் விளக்கையோ அப்போது பார்த்ததில்லை. அப்புறம்.. மார்ச்சுவரி, போஸ்ட்மார்ட்டம், ஃபாரன்ஸிக், அப்ஜெக்‌ஷன் யுவர் ஆனர், வென்ட்டிலேட்டர், பாயிண்ட் 33 பிஸ்டல், ஸிர்ரஸ் மேகத்தீற்றல்கள், ஜானவாசக் கார், காக்டெயில், ப்ரீஃப்கேஸ், ஃபேக்ஸ், ரிகர்மாட்டிஸ், ரிஸீவர், மவுத் பீஸ், ஹேபியஸ் கார்பஸ், காஸனோவா, சாண்ட்லியர் விளக்குகள், வாய்ஸ் ரெகக்னிஷன், பீத்தோவனின் ஸிம்பனி, ஹாலோகிராம், அப்பெர்ச்சர், வியூஃபைண்டர், ஸாட்டின் பாவாடை இன்னபிற.

இது மட்டுமல்லாமல் மனிதர்களைப் பற்றி, சில பிரபலங்களைப் பற்றித் தெரிந்துகொள்வதும். சுஜாதா ஒரு கதையில் ‘அவன் ஒரு நவீன மெஸ்ஸையா போல தோற்றமளித்தான்’ என்று எழுதியிருப்பார். யாருடா இது மெஸ்ஸையா (
messiah) என்று ரொம்ப நாள் மண்டைக் குடைச்சலாக இருந்தது. கணேஷ் வஸந்திடம் “கீட்ஸ் படிச்சிருக்கியா” என்று கேட்கும்போது ஒரு பிரபல உலகக் கவிஞரைத் தெரிந்துகொள்ள முடிந்தது. (ஆனால் படித்ததில்லை). இந்த வரிசையில் ஷெல்லி, பைரன் எல்லோரும் அடிக்கடி வருவார்கள்.

நான் சென்னைக்கு வரும் முன்பே இந்த நகரம் எனக்குப் பரிச்சயமான இடமாகத் தோற்றமளித்ததற்குக்கூட மேற்கூறிய எழுத்தாளர்களுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. பொதுவாக அநேக கதைகள், மாத நாவல்கள் சென்னையைக் களமாக வைத்து எழுதப்பட்டன என்கிற வகையில் மிகக் கொஞ்சமாக அதன் பேட்டைகளைப்பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது. ‘அவன் தேனாம்பேட்டை சிக்னலைக் கடந்து...’ அல்லது ‘மெரீனாவில் கண்ணகி சிலையருகே காத்திருந்தான்’ ‘மவுண்ட் ரோட்டில் ஜெமினி மேம்பாலத்துக்கு அருகே அவன் அலுவலகம் இருந்தது’ அல்லது ‘எலியட்ஸ் பீச்சின் மணலில் இருவரும் நடந்தார்கள்’ அல்லது ‘தம்புச் செட்டி தெருவில் உள்ள அவன் அலுவலகத்துக்குப் போனபோது...’ அல்லது ‘ஹிக்கின் பாதம்ஸின் அருகே காரை நிறுத்தினான்’ ‘கொத்தவால் சாவடிக்கு இடது பக்கமாக பைக்கை வளைத்துத் திருப்பினான்’ - இவை போதாதா சென்னையைப் பற்றி சும்மா போகிற போக்கில் தெரிந்து கொள்வதற்கு? (சென்னை கொத்தவால் சாவடி மார்க்கெட்டை கோயம்பேட்டுக்கு மாற்றின விஷயத்தை மக்களுக்கு அறிவிக்கும் விதமாக “கொத்தால் சாவடி லேடி நீ கோயம்பேடு வாடீ..” என்ற பொது அறிவுப்பாடலை கேட்டிருக்கிறீர்களா?).

மேலும் ராஜேந்திரகுமார், புஷ்பா தங்கதுரை, சாண்டில்யன் கதைகளின் மூலம் கொஞ்சமாய் ‘அந்த’ அறிவு வளர்ந்ததையும், பட்டுக்கோட்டை பிரபாகரின் ஹீரோயின் சுசீலாவின் பனியன் வாசகங்கள் (I like Tennis, because they play with two balls) மூலம் டென்னிஸ்-ஸில் இரண்டு பந்துகளை வைத்து விளையாடுவார்கள் என்கிற மகா அறிவு கிடைத்ததையும் சொல்லியாக வேண்டும்.

வணிக எழுத்துக்களில் மட்டும்தான் என்றில்லை. இன்றைக்கும் ஆதவன் எழுத்துக்களைப் படித்தால் ஒரு அலுவலகத்தின் இயக்கம், அன்றைய ஹாலிவுட் ஹீரோக்கள், ஹீரோயினிகள் (ஆட்ரே ஹெப்பர்ன்), டெல்லியின் இடங்கள் என்று எத்தனையோ விஷயங்கள் தெரிந்துகொள்ள முடிகிறது. எவ்வகை எழுத்தாளராக இருந்தாலும் அவர்கள் கதையினூடாக லேசாகத் தெளித்துவிடும் விவரங்கள் இது மாதிரி நிறைய இருக்கும்தான்.

இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் நான் என்ன சொல்ல வந்தேன் என்று புரிவதற்கு இத்தனை போதும் என்று நினைக்கிறேன். படிப்பது என்பது நிச்சயம் அறிவை வளர்க்க உதவும் செயல். நிறைய ஆங்கில புத்தகங்களாகப் படித்துத் தள்ளியிருந்தால் இதைவிட மேம்பட்ட விஷயங்கள், விவரங்கள் எத்தனையோ கிடைத்திருக்கலாம்தான். நான் அதிகம் படித்தது தமிழ் புத்தகங்கள்தான். எனக்கு இப்போதிருக்கிற அறிவின் ஒரு பகுதி நிச்சயம் சின்ன வயசில் படித்த தமிழ் கதைகள், நாவல்களால் வந்ததுதான் என்று நிச்சயம் சொல்லமுடியும். நீங்களும் கூட இதை உணர்ந்திருப்பீர்கள். இல்லையா?

கிழித்த கதை


ஷெல்ஃப்பில் எதையோ தேடிக்கொண்டிருந்தபோது ஒரு பழைய கிழிந்த லெதர் பை ஒன்றில் ஒரு கத்தையாக கொஞ்சம் சிறுகதைகள் கிடைத்தன. பதினைந்து வருடங்களுக்கு முன் குமுதம், விகடன், சாவி இதழ்களிலிருந்து கிழித்துத் சேர்த்துவைத்த சிறுகதைகள். கொத்துக் கொத்தாக ஸ்டேப்ளர் செய்யப்பட்டு ‘பைண்ட் செய்து வைக்கவேண்டும்’ என்கிற எண்ணம் வருடக்கணக்கில் புறக்கணிக்கப்பட்டு, தாள்கள் பழுப்பேறிச் சிதைந்து, திறந்ததும் குப்பென்று மூச்சுத் திணறவைக்கும் நெடியுடன் கிடந்தன.

குமுதத்திலும், விகடனிலும் சிறுகதைகள் அதிக அளவில் வெளியிடப்பட்டுக் கொண்டிருந்த பொற்காலம் அது. சுஜாதா, பாலகுமாரன், சுபா முதற்கொண்டு பிரபல எழுத்தாளர்கள் அனைவரும் மானாவாரியாக எழுதிக்கொண்டிருந்த நேரம். பொதுவாகவே சிறுகதைகள், தொடர்கதைகள் படிக்கிற ஆர்வத்துடன் ஒரு கூட்டமாக நாங்கள் (நான், சரசுராம், மீனாட்சி சுந்தரம், ஷாராஜ், கனகராஜன்) அலைந்துகொண்டிருந்தோம். கதைகளைப் படிப்பதும், படித்தபிறகு அவைகளைப் பற்றியும், கதாசிரியர்களைப் பற்றியும் பெருமளவில் விவாதித்துத் திரிந்த நாட்கள் ரம்மியமானவை.

சுமார் அறுபது கதைகள். சிறந்த சிறுகதைகள் என்று கிழித்து வைத்துக் கொண்டதா என்று கேட்டால் தெளிவாக நினைவில்லை. நல்லதாய் ஒரு சிறுகதையை எப்படி எழுதுவது என்கிற தேடலில் இந்த மாதிரி நிறைய கிழித்து வைக்கிற பழக்கம் எங்கள் எல்லோருக்கும் இருந்தது. இதில் சிறுகதை, குறுந்தொடர், நாவல் எல்லாம் அடங்கும். அரஸ்-ஸின் அட்டகாச ஓவியங்களுக்காகவே சுஜாதாவின் என் இனிய இயந்திராவையும், மீண்டும் ஜீனோவையும், அப்புறம் கோவி மணிசேகரன் நாவல் ஒன்றையும் கிழித்துச் சேர்த்திருந்தேன். கமலஹாசன் ஸ்டில்லுகளுக்காக விக்ரம் தொடர். இது மாதிரி நிறைய. என்னிடமிருக்கிற இந்த கதைக் கொத்தை கிழித்துத் தொகுத்தவர் சரசுராம். எப்படியோ கைமாறி என்னிடத்தில் வந்து கிடக்கிறது.

இந்த சேகர சாகரத்தில் என்னதான் இருக்கிறதென்று மூச்சை இறுக்குகிற நெடியை பொறுத்துக் கொண்டு திறந்து பார்த்தேன். பெரும்பாலும் சிறுகதைகள்தான் இருந்தன. “என் பெயர் அருண்குமார்” என்ற சாருப்ப்ரபா சுந்தரின் (நான் விரும்பிப் படித்த எழுத்தாளர் இவர்) தொடர்கதை. பாலகுமாரன், மாலனின் ஒரு சில கதைகள். அப்புறம் ராஜேஷ்குமார், சுபா, சுப்ரபாரதிமணியன், தனுஷ்கோடி ராமசாமி, சு. சமுத்திரம், பிரதிபா ராஜகோபாலன், அனுராதா ரமணன், பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகிய எல்லோரும் அடக்கம்.

நாகா என்றொரு எழுத்தாளரின் சில கதைகள். கே.சித்ராபொன்னி என்பவரின் கதைகள் நிறைய இருந்தன. (இப்போது எழுதுகிறாரா?) பா.ராகவனின் கதை ஒன்று. அதுதவிர பெரும்பாலான கதைகள் அதிகம் பிரபலமாகாத, பெயர் கேள்விப்படாத எழுத்தாளர்களால் எழுதப்பட்டிருந்தது. தமிழிணி, இள.அழகிரி, ஜெரா, தார்க்‌ஷியா இப்படியாக. பவதாரிணி என்பவர் எழுதிய ரூ.5000 பரிசு பெற்ற கதை ஒன்றும் இருந்தது.

வித்யா சுப்ரமணியம், எஸ்.பி. ஹோசிமின், சங்கர்பாபு, திருவாரூர் பாபு போன்ற அடிக்கடி கண்ணில் படுகிற எழுத்தாளர்களும் இந்தக் கலெக்‌ஷனில் ஒளிந்திருந்தார்கள். இதில் பரசுராம் பிஸ்வாஸ் என்றொரு எழுத்தாளரும் இருக்கிறார். இவர் குமுதத்தில் விகடனில் ‘புதிய ஆத்திச்சூடி கதைகள்’ என்று ஒரு தொடர் எழுதிக்கொண்டிருந்தார். குமுதத்தில் விகடனில் பணிபுரிகிற யாரோ ஒருவர்தான் (அல்லது பலர்) இந்த புனைபெயரில் எழுதிக்கொண்டிருந்தார்(கள்) என்றொரு அரசல் புரசல் இருந்தது. யாராக இருந்தாலும் அற்புதமாய் எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர் இவர்.

ஜெ, அரஸ், ம.செ, மாருதி, ராமு, கரோ போன்ற ஓவியர்கள் இந்தக் கதைகளுக்கு படம் வரைந்திருந்தார்கள். மருது, ஜி.கே.மூர்த்தி, ஸ்யாம் கூட இருந்தார்கள். அட்டகாசமாக வரைந்துகொண்டிருந்த அரஸ்-ஸூக்கு ஒரு கட்டத்தில் என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. திடீரென்று கானா மூனாவென்று வரைந்து தள்ள ஆரம்பித்தார். இந்த இடைவெளியில் கச்சிதமாக உள்ளே நுழைந்தவரான கரோவும் (கிட்டத்தட்ட அரஸ் சாயலிலேயே) சளைக்காமல் எண்ணற்ற கதைகளுக்கு அருமையாய் படம் வரைந்து தள்ளிக் கொண்டிருந்தார். இன்னும் சில வருடங்கள் வைத்திருந்தால் உடைந்து உதிர்ந்துவிடும் என்பதுபோல் வெடவெடவென்றிருக்கிற இந்த சாணிப் பேப்பர்களில் இந்த ஓவியர்களின் பழைய ஓவியங்களை மறுபடி பார்க்கக் கிடைப்பது அழகான விஷயம்.

ஆதவனின் ’புறாக்கள் பறந்து கொண்டிருக்கும்’ என்கிற கதை இரண்டு பாகங்களாய் இந்தத் தொகுப்பில் இருக்கிறது. ஆதவனின் சிறுகதைகள் அனைத்தையும் திரட்டி “ஆதவன் சிறுகதைகள்’ என்கிற புத்தகமாக கிழக்கு பதிப்பகம் வெளியிட்டபோது இந்தக் கதையும் இருக்கிறதா என்று பா.ராகவனிடம் ஒருமுறை கேட்டது நினைவுக்கு வந்தது. அதிகபட்சமாக எல்லாக் கதைகளையும் முடிந்தவரை திரட்டிப் போட்டுவிட்டதாக அவர் சொன்னார். அந்த தொகுப்பிலிருக்கும் “புறா” என்கிற கதைதான் இது என்று ரொம்ப நாளாய் நினைத்திருந்தேன். ஆனால் இப்போது எடுத்துப்பார்த்தபோது அதுவும் இதுவும் வேறு என்பது தெரிந்தது.

வியாபார மயமாகிப் போன பிரபல பத்திரிக்கைகளில் சிறுகதைகள் வெளியிடுவது அரிதாகிப் போன இந்தக் காலத்தில், நைந்து போன இந்தப் பேப்பர் கற்றையை எடுத்துப் பார்க்கும்போது தும்மல் கலந்த பெருமூச்சொன்று வருகிறது. முகத்தில் கர்ச்சீப் கட்டிக்கொண்டாவது இதில் உள்ள கதைகளை மறுபடி பொறுமையாய் உட்கார்ந்து முழுதாய் படித்துப் பார்க்கவேண்டும்.

பையனும் டார்வினும் பின்னே ஞானும்


சென்ற வெள்ளி - சனியில் பன்றிக் காய்ச்சல் எச்சரிக்கைகளையும் மீறி என் பையன் படிக்கும் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. அவன் படிக்கிற ’நாலாப்பு’ சார்பாக கையில் ஒரு ரிமோட் கண்ட்ரோல் எஸ்கவேட்டர் கொடுத்து ஒரு அறையில் நிற்க வைத்துவிட்டார்கள். கண்காட்சிக்கு வருகை புரிபவர்கள் அவனிருக்கிற குறிப்பிட்ட பகுதிக்கு வந்ததும் "This is called excavator. This is used for digging the trenches, holes... " என்று டீச்சர் சொல்லிக்கொடுத்த ப்ளா ப்ளா-க்களை மள மளவென ஒப்பிக்க வேண்டும். (நானே நான்கு தடவை அவனருகில் போய் நின்று “can you please explain this?" என்று கேட்க சின்ன தயக்கச் சிரிப்புடன் சளைக்காமல் விளக்கினான்)

சரி ஸயின்ஸ் எக்ஸ்போவில் அப்படி என்னதான் இருக்கிறதென்று பார்க்கலாமே என்று போனவனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. சும்மா சொல்லக் கூடாது. டீச்சர்களும், மாணவ மாணவிகளும், பள்ளி நிர்வாகமும் ஒன்று சேர்ந்து அற்புதமாகக் கலக்கிவிட்டார்கள். க்ரவுண்ட் ஃப்ளோரில் சிவப்புக் கம்பளம் விரித்து எல்.சி.டி. டிவியில் நிகழ்ச்சிகளின் வீடியோ விரிய, ஸ்பீக்கரில் இசை முழுங்குகிறது. இதை வந்து பாருங்கள் அதை வந்து பாருங்கள் என்று மாடிப் படிகள் முழுக்க மாணவர்கள் தயாரித்து ஒட்டிய விளம்பர நோட்டீஸ்கள். அலங்கார வளைவுகள். கலை நயம். ஜிகினா.

மெட்ரோ ரயில் சிஸ்டம், ஹைட்ரோ பவர் சிஸ்டம், டெலி கம்யூனிகேஷன் நெட்வொர்க், ரோபோட்டிக்ஸ், ஓரிகமி, டேன்கிராம்ஸ், குளோபல் வார்மிங் என்று ஒரு சப்ஜெக்டையும் விட்டு வைக்காமல் பள்ளிக் கட்டிடத்தின் மூன்று தளங்களிலும் கலக்கலான செட்டப்புகள். முக்கால்வாசி சாதனங்களை தெர்மோகோல், ஃபெவிகால், வாட்டர்கலர் கொண்டே தயாரித்து விட்டார்கள். சின்னச் சின்ன பொடிசுகள் லேப்டாப், ப்ரொஜக்டர்கள் எல்லாம் வைத்துக் கொண்டு விண்டோஸ் மூவி மேக்கரில் தயாரித்த வீடியோ படங்களை இயக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தபோது ’ஆச்சரியத்தால் கண்கள் விரிந்தன’ என்று அடிக்கடி இந்த எழுத்தாளர்கள் எல்லாம் எழுதுகிறார்களே அது என்ன என்று புரிந்தது.

ஒவ்வொரு பிரிவிலும் நிற்க வைக்கப்பட்டிருந்த குழந்தைகள் நாம் உள்ளே நுழைந்ததும் போட்டி போட்டுக் கொண்டு “அங்கிள்! (அல்லது ஆண்ட்டி) can I explain this?" என்று கேட்டுவிட்டு ஜெட் வேகத்தில் ஆங்கிலத்தில் குறைந்தது ஐம்பது விநாடிகள் பட்டையைக் கிளப்பிவிட்டு கடைசியில் “தேங்ங்ங்ங்க்க்க்க்க்யூ” என்று ராகம் பாடி முடித்தன. மனப்பாடம் செய்து கொண்டு ஒப்பிக்கிறதுகள் என்றாலும் ஒவ்வொரு டேபிளிலும் பொறுமையாய் அந்த மழலைக் குரல்களை ஓரிரு நிமிடங்கள் கேட்டுக் கொண்டிருப்பது மிகப் பெரிய சுகம். அநியாயத்துக்கு இத்தனை பேர் ’படிப்ஸ்’ஆக இருக்கிறார்களே என்று ஆச்சரியமாக இருந்தது. அதுவும் க்ளோபல் வார்மிங் பற்றி விளக்கின பையனிடம் நான் ஏதோ சந்தேகம் கேட்க. “இட் இஸ் தேர் இன் த இண்டெர்நெட் அங்கிள். யு கேன் டவுன்லோட் இட் ஃப்ரம் தேர்.” என்று முத்தாய்ப்பு வைத்தான். சொல்லி முடித்தபிறகு அவர்கள் நீட்டுகிற Feedback நோட்டுப் புத்தகத்தில் உங்கள் பெயரெழுதி உங்கள் கருத்தை அல்லது பாராட்டை எழுதிக் கொடுத்தீர்களானால் குழந்தைகள் முகத்தில் பொங்குகிற சந்தோஷம் இருக்கிறதே. அப்பப்பா! (சொக்கன் கவனிக்க). நான் நீட்டப்பட்ட நோட்டுகளில் எல்லாம் “excellent presentation" என்று தாராளமாக எழுதிக் கொடுத்தேன். (ஆனால் பாராட்டி கை கொடுத்தால் மட்டும் பன்றிக் காய்ச்சல் பயத்துடன் கையை பின்னுக்கு இழுத்துக் கொள்கிறார்கள். அப்புறம் என்னை நானே திட்டிக்கொண்டு அதை தவிர்க்க ஆரம்பித்தேன்.)

ஆறாங்கிளாஸ் படிக்கிற மூன்று சிறுமிகள் அவர்களின் கிளாஸ்மேட்டுகளான சில வாண்டுப் பையன்களைக் காட்டி “அங்கிள்! கன் வி எக்ஸ்ப்ளெய்ன் அபெளட் தெம்” என்று குசும்புச் சிரிப்புடன் கேட்க, நானும் என்னவென்று புரியாமல் தலையாட்ட, “தெ ஆர் ஆல் மங்கீஸ். தெ ஹவ் எஸ்கேப்ப்டு ஃப்ரம் வண்டலூர் ஜூ. தெ நார்மலி ஈட் பனானாஸ்” என்று கலாய்த்து வெடிச்சிரிப்பு சிரித்தார்கள்.

இதைக் கேட்டதும் ஒரு தடவை என் பையனுக்கும் எனக்கும் இரவு தூக்கம் வருவதற்கு முந்தைய பொழுதில் நடந்த சம்பாஷணை ஞாபகத்திற்கு வந்தது.

நான்: குரங்கிலிருந்து மனுஷன் வந்தான்னு யார் கண்டுபுடிச்சா தெரியுமா?

பையன்: ஆங்... தெரியும். லெஸன்ல இருக்கு. அது வந்து...

நான்: சார்லஸ் டார்வின்

பையன்: ஆ! ஆமா.. டார்வின் தியரி..

நான்: கரெக்ட்டு.. மில்லியன் மில்லியன் வருஷத்துக்கு முன்னால குரங்கா இருந்து அதிலேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா மனுஷன் வந்தான். அப்போ அவனுக்கு உடம்பு பூரா நிறைய முடி இருந்துச்சு. வால் இருந்துச்சு. கை காலெல்லாம் பெருசு பெருசா இருக்கும். மரத்துக்கு மரம் தாவிகிட்டு இருந்தான். அப்றம் அதெல்லாம் போய் இப்போ பாத்தியா இப்ப என்னை மாதிரி ஆயிட்டான்.

பையன்: (மெளனமாய் சில விநாடிகள் யோசித்துவிட்டு) “அப்ப இதுக்கு முன்னாடி நீ கொரங்கா இருந்தியா?”.

அடுத்த ஜெனரேஷன் பசங்களிடம் கொஞ்சம் அல்ல நிறையவே ஜாக்கிரதையாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

நடந்த கதை - குறும்படம்

நண்பர் பொன்.சுதா இயக்கியிருக்கிற “நடந்த கதை” என்னும் குறும்படத்தின் திரையிடல் மற்றும் அறிமுக விழா நேற்று மாலை சென்னை தென்னிந்திய திரைப்பட வர்த்தக வளாகத்தில் நடைபெற்றது. இதில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், எழுத்தாளர் சிவகாமி, எழுத்தாளர் அழகிய பெரியவன், தோழர் விடுதலை ராசேந்திரன், ஓசை காளிதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். சுமார் 20 நிமிடங்கள் ஓடும் இந்தக் குறும்படம் குறித்தும் பொதுவாக குறும்படங்கள் பற்றியும் நான் எழுதின ஒரு பதிவு சென்னை ஆன்லைன் - தமிழ் வலைத்தளத்தில் வெளியாகியிருக்கிறது.

அதைப் படிக்க இங்கே கிளிக்கவும்: நடந்த கதை

ஓம் சாந்தி!


கடந்த சில நாட்களாக எனக்கு ஒரு பிரச்சினை. அதுவும் எனக்கு அது அடிக்கடி நிகழ்வதாகவும் தோன்றுகிறது. அது என்னவென்றால் யாரையாவது பிடித்து சகட்டு மேனிக்குத் திட்டுவது. இதற்கு முன்பு இப்படி செய்ததற்கு பெரிய முன் அனுபவம் எதுவும் அதிகமாய் இல்லை. இது என் இயல்புக்கு மாறான விஷயமாகவும் கூட அடிக்கடி தோன்றுகிறது. என் இயல்பையும் சுபாவத்தையும் நெருக்கமாய் அறிந்தவர்கள் இதைப் பார்த்தால் நிச்சயம் ஆச்சரியப்படுவார்கள்.

திட்டுவதென்றவுடன் ஏதோ தணிக்கை செய்யப்பட்ட, படாத வார்த்தைகளை இட்டு நிரப்பி, பரம்பரைகளை வம்பிக்கிழுத்து அல்லது பிறப்பு பற்றின சந்தேகங்களைக் கிளப்புகிறேன் என்று தயவு செய்து தவறாக நினைத்துவிடாதீர்கள். சென்னையில் சுமார் எட்டு ஆண்டுகள் வாழ்ந்தும் அந்த அளவு முன்னேற்றத்திற்கு மனதளவில் நான் தயாரில்லை. அதற்காக சும்மா வாய்க்குள் யாருக்கும் கேட்காத மாதிரி முணுமுணுத்துவிட்டு நகர்ந்துவிடுவேன் என்றில்லாமல் நாகரிக உலகில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சில சொற்பதங்களுடன் பக்கத்தில் நிற்பவர், நடப்பவர் அல்லது உட்கார்ந்திருப்பவர் என்று எல்லோர் காதிலும் விழுவதுமாதிரி நன்றாக சத்தமாக இரைதல்.

இதன் காரணமாக என்ன மாதிரி விளைவுகள் எனக்கு நேருகிறதென்று சொல்கிறேன். 1. உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து நரம்புகள் லேசாக புடைத்துக்கொள்கிறது. 2. நின்றுகொண்டு திட்டுவதென்றால் அநிச்சையாய் நடு நெற்றியை விரல்களால் தீவிரமாகத் தேய்த்துக்கொண்டு குறிவைக்கப்பட்ட எதிராளியை நோக்கி உர்ரென்று ஒரு பார்வையை வீசுதல். 3. ஆப்தல்மாலஜிஸ்ட்-கள் சொல்வது போல கோபத்தில் கருவிழிக்குள்ளே பாப்பா விரிதல் 4. அதிக டென்ஷன் ஏற்படுவதால் லேசாய் பெருமூச்சு வாங்குதல். 5. கோபத்தால் உடலானது இன்னபிற வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படுதல். 6. சூழ்நிலை மறத்தல்.

எதனால் திட்டவேண்டியிருக்கிறது? கோபம் வருவதால். எதனால் கோபம் வருகிறது? யாரோ என்னவோ செய்வது என்னை பாதிப்பதால். ஆனால் அவையெல்லாம் நியாயமான விஷயங்களுக்கான நியாயமான கோபங்கள் என்று எனக்கு நன்றாய்த் தெரியும். இது கூட வராவிட்டால் அப்புறம் என்ன மனுஷன் நீ என்று என்னை நானே சில நேரம் கேட்டுக்கொள்வதன் பின்விளைவாகத்தான் மேற்படி விஷயங்கள் அரங்கேறுகின்றன. அதைக்கூட பண்ணமுடியவில்லையெனில் இளிச்சவாயன் என்கிற பட்டம் கட்டி அப்படியே கட்டம் கட்டிவிட மாட்டார்களா மக்கள் என்றொரு எண்ணமும் கூடவே எழுகிறது. தவிர நான் புத்தனோ அல்லது புத்தனின் வழியைக் கடைபிடிப்பவனும் அல்லன். மூன்றாம் முறை முகத்தில் அறைந்தால் புத்தனுக்கும் கோபம் வரும் என்று படித்ததில்லையா நீங்கள்?

வாசற்படியில் கட்டிப்போட்டிருக்கிற நாயைக் காட்டி “ஒண்ணும் பண்ணாதுங்க” என்று சொல்கிற மாதிரி நம்மையும் இனியும் யாரும் சொல்லிக் கொண்டிருக்கக்கூடாது என்கிற முனைப்பின் எதிரொலி இது. இவன் ஒரு அப்பாவி, பிள்ளைப்பூச்சி என்கிற மாதிரி பெயர்கள் நமக்கு அடைமொழியாகவோ, புனைபெயராகவோ வந்து சேராமலிருக்கவேண்டுமென்றால் நாம் கிடைத்த சந்தர்ப்பங்களில் குரல் உயர்த்தி நிரூபணம் செய்துகொண்டால்தான் ஆயிற்று இல்லையா?

இப்படிப் புலம்புகிற அளவுக்கு அப்படி என்ன ஆயிற்று? சொல்கிறேன். ஒரு பிரபல மொபைல் மற்றும் இன்டர்நெட் சேவை நிறுவனம் இந்த மாசம் காரணமில்லாமல் உங்கள் பில்தொகையை இரட்டிப்பாக அனுப்புகிறது. காரணம் கேட்டால் கூலாக ‘டெக்னிகல் எர்ரர்’ என்கிறார்கள். நீங்கள் சர்வீஸூக்குக் கொடுத்திருந்த வாகனத்தில் நீங்கள் சொல்லியிருந்த குறைகளை சரியாகச் செய்யாமல் விடுவதுடன் புதிதாக ஒரு சில குறைகளை உண்டுபண்ணி அனுப்புகிறார்கள். நீங்கள் ஒரு எலெக்ட்ரானிக் இசைக்கருவியை சரிசெய்ய ஆழ்வார்பேட்டையிலுள்ள ஒரு சர்வீஸ் சென்டரில் கொடுக்கிறீர்கள். 10 நாட்களாகியும் அவர்களிடமிருந்து எந்தத் தகவலும் இல்லையே என்று, நீங்கள் நேரில் போனபோது அதி முட்டாள்தனமான (அல்லது அதி புத்திசாலித்தனமான) காரியத்தைச் செய்து வைத்திருக்கிறார்கள். உங்கள் அபார்ட்மெண்டில் டூவீலர் ஸ்டாண்டுக்கு நேர் மேலே உள்ள வீட்டின் பால்கனியில் அவர்கள் காகத்துக்காக குழம்பு சோறு வைக்கிறார்கள். (நல்ல விஷயந்தான்) மறுநாள் நீங்கள் குழந்தையுடன் ஸ்கூலுக்கு அவசரமாய் கிளம்பும்போது உங்கள் டூ வீலரைப் பார்த்தால் அது தலையிலிருந்து கால் வரை குழம்பு சோறால் நாறியிருக்கிறது. அதை கழுவ நிச்சயம் ஒரு பக்கெட் தண்ணீர் தேவைப்படும். காக்கைகளின் கைங்கரியம்தான் அது என்றாலும் தப்பு யாருடையது என்று உணர்ந்து நீங்கள் மேலே பால்கனியைப் நிமிர்ந்து பார்க்கிறீர்கள். ரோட்டில் போகும்போது யாரோ செய்த ஒரு சாலை விதிமுறை மீறலுக்காக பக்கத்து வாகனக்காரன் உங்களைப் பார்த்து கைநீட்டி“அறிவேயில்லையா?” என்று கேட்டு விடுகிறான். இன்னொரு பைக்வாலா ஒருவன் அவன் சென்று கொண்டிருக்கிற ஒரு ரோட்டை அவன் முப்பாட்டன் காலத்திலேயே பட்டா போட்டு எழுதிவாங்கிக் கொண்ட மனோபாவத்தோடு பான் பராக் எச்சிலை அண்ணாந்து பாத்து வலப்புறமாகத் துப்ப ஒரு திடீர் ப்ரேக் அடித்து நீங்கள் அந்தச் சாரலிலிருந்து தப்பித்தது மட்டுமல்லாமல் சறுக்கி விழ இருந்த ஒரு பெரும் விபத்திலிருந்தும் அதிர்ஷ்டவசமாகத் தப்பித்து விட்டீர்கள்.

மேற்கண்ட விஷயங்கள் எல்லாம் ஒரு சிறு சாம்பிள் சாஷே பாக்கெட் மட்டுமே. இது போல நிறைய! நிறைய! நிறைய! இவையெல்லாம் இந்த வருஷம் ஆடிக்கு ஒன்றும் அடுத்த வருஷ அமாவாசைக்கொன்றுமாக இனிதே நடந்தேறி வந்தால் பரவாயில்லையே. விதி வீடியோ கேம் விளையாடியது போல எல்லாமே ஒரு இருபது நாட்களுக்குள் தொடர்ந்து நடந்துவந்தது.

நீங்கள் இந்த சூழ்நிலைகளில் என்ன செய்வீர்கள் என்று உங்களைப் பார்த்து ஒரு கேள்வியை இங்கே வீசுவதன் மூலம் என் நியாயமான கோபங்கள் குறித்தான ஆதரவுக்கு உங்களையும் இழுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நான் என்ன பண்ணினேன் என்றால் உடனே ரெளத்திரம் பழகி குரலுயர்த்திப் பார்த்ததுதான். என்னதான் நடக்கிறதென்று பார்ப்போமே! இது ஒரு மாதிரி பரிசோதனை முயற்சி. இதன் விளைவாக மூன்றாவது பாராவில் சொல்லப்பட்டது தவிர வேறெதாவது நடந்ததா? ம்ஹூம்! ஒரு சில இடங்கள் தவிர “பெரிதாய் ஒன்றும் இல்லை. தொண்டை வறண்டதுதான் மிச்சம்” என்று கொட்டை எழுத்துக்களில் வருத்தமாக சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்த விஷயங்கள் இன்றைய நகர நெரிசல் வாழ்க்கையில் பரபரத்துத் திரியும் மக்களின் பொதுவான மனோபாவத்தைக் குறித்து சிந்திக்கவைக்கிறது. மேற்கூறிய சம்பவங்களில் ஒரு சிலது நகர மனிதர்களுக்கு அடுத்தவர் மேலுள்ள அக்கறையின் கிராஃப் இறங்கிவிட்டதைக் குறிக்கிறது. ஒரு சில சம்பவங்கள் வாடிக்கையாளரின் திருப்தியை முன்னிறுத்திய சேவையை பொருட்படுத்தாமல் தேமே என்று வேலை செய்யும் பெருவாரியான கூட்டத்தை அடையாளம் காட்டுகிறது. அண்டை அயலார் மீதான பொதுவான நேசம் அல்லது சகோதரத்துவம் அருகி விட்டதென்பதை இன்னும் சிலது எடுத்துக்காட்டுகின்றன.

இந்த நிலைப்பாட்டை தினசரி எதிர்கொள்ள நேரிடுகிற சலிப்பை, எரிச்சலோ கோபமோ கலந்த வார்த்தைகளிலோ செயல்களிலோ வெளிப்படுத்திக் கொண்டிருந்தால் இந்த ஆயுள் போதாது என்றும் தோன்றுகிறது.

ஆகவே சாந்தி சாந்தி ஓம் சாந்தி.

வேலிகளுக்கு அப்பால்...


2008-ல் வெளிவந்த ‘தி பாய் இன் த ஸ்ட்ரைப்டு பைஜாமாஸ்’ (The boy in the striped pajamas) என்கிற படத்தை இன்று பார்த்தேன். யூத இனப் படுகொலைகளை மையமாய் வைத்து உருவாக்கப்பட்ட எண்ணற்ற திரைப்படங்களில் இந்தப் படமும் ஒன்று என்றாலும் ஒரு வரலாற்றின் கொடுமையை இத்தனை நறுக்கென்று நெருடும்படி சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை.

இந்தப் படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் மாலை வேளையில் வெளியே ’சோ’வென்று மழை பெய்து கொண்டிருந்தது. இந்தப் படத்தின் இறுதிக் காட்சியும் மழையுடன் முடிகிறது. படம் முடிந்தவுடன் மழையும் முடிந்து ஜன்னல் வழி ஊடுறுவும் காற்றின் ஜில்லிப்பும் இந்தப் படம் பார்த்த நிகழ்வும் ஆக ஒரு இனந்தெரியாத பாரம் நெஞ்சைக் கவ்வுகிறது.

சிறுவர் சிறுமிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வெற்றி பெற்ற கணக்கற்ற உலகப்படங்களில் இதுவும் ஒன்று என்பதை இங்கே சொல்லியாக வேண்டும். அதி அற்புதமான படங்களான “லைஃப் இஸ் பியூட்டிஃபுல், தி பியானிஸ்ட்’ வரிசையில் நிச்சயம் சேர்க்கப் படவேண்டியது இது. யூதர்களுக்கு எதிரான ஹிட்லரின் நாஜிப் படைகளின் “மரணக் கூடாரங்கள்” மற்றும் அங்கே நடைபெறும் கொடுமைகளையும் பதிவு செய்வது இந்தப்படத்திலும் களமாக இருந்தாலும் ஒரு சில மணித்துளிகள் தவிர அதையும் அது சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளையோ அதிகமாகக் காட்டாமலே மிக அழகான மற்ற காட்சிகளாலேயே அந்த துயரங்களை மவுனமாய் உணர்ந்து உறையச் செய்திருக்கிறார் இப்படத்தின் இயக்குநர்.

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பணியாற்றும் ஒரு ஜெர்மன் ராணுவ அதிகாரியின் மகனான ஒரு எட்டு வயதுச் சிறுவனின் பார்வையில் நகருகிறது கதை. மிக ஒதுக்குப்புறமான தனியான இடத்தில் குடிவரும் ஜெர்மன் அதிகாரியின் மகனான ப்ரூனோ, காவலர்களால் நன்கு பாதுகாப்பு ஏற்படுத்தப் பட்ட வீட்டில் விளையாடத் தோழர்கள் இல்லாத சூழ்நிலையை அனுபவிக்கிறான். பெரியவனாகி உலகைச் சுற்றும் ஒரு எக்ஸ்ப்ளோரர் ஆக வேண்டும் என்பது அவனது ஆசை. திறந்திருக்கிற பக்கவாட்டுக் கதவை திறந்து யாருமறியாமல் பின் பக்கப் புதர்களையும், மரங்கள் அடர்ந்த பகுதிகளையும், சிறு ஓடையையும் கடந்து செல்கிற அவனது தேடல் ஒரு மின்சாரம் பாய்ச்சப்பட்ட வேலியருகே சென்று முடிகிறது. வேலிக்கு அந்தப்புறம் உள்ள காம்ப்-ன் உள்ளே முடி வெட்டப்பட்ட, கைதி எண்ணைத் தாங்கிய அழுக்கடைந்த பைஜாமாவை அணிந்த யூதச் சிறுவனைக் காண்கிறான். தினமும் அம்மா, அப்பாவுக்குத் தெரியாமல் ஸ்ம்யுல் என்கிற அந்தப் பையனுடன் ப்ரூனோ ஏற்படுத்திக் கொள்ளும் நட்பும் அதன் தொடர்ச்சியான விளைவுகளுமாகக் கொண்டு நகர்கிறது படம்.

யூதர்கள் என்பவர்கள் தங்கள் வாழ்க்கையின், நாட்டின் குடிகெடுக்க வந்தவர்கள் என்று சிறுவர்களுக்கு ஒரு ஆசிரியரால் போதிக்கப்படுவது, யூதர்கள் காம்ப்-பின் தூரத்துச் புகைபோக்கியிலிருந்து வரும் புகையும் நாற்றமும் என்ன என்று அறிந்து கொள்கிற அதிகாரியின் மனைவி உடைந்து போய் அழுவது, காம்ப்-பினுள் தூரத்தில் கேட்கும் விசில் சப்தத்தைக் கேட்டு யூதச் சிறுவன் பதறித் திரும்பி ஓடுவது போன்ற காட்சிகள் மூலமாகவே பின்புலமாய் என்ன நடக்கிறது என்பதை பார்வையாளர்களைப் புரிந்துகொள்ள வைத்திருக்கிறார் இயக்குநர்.

யூதர்களை சித்திரவதை செய்யவும், அடிமைகளாக வேலை வாங்கவும், சிறுவர்களை ஜெர்மன் டாக்டர்களின் கொடூரமான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவும், கும்பலாக காஸ் சேம்பர்களில் அடைத்துக் கொல்லவும் ஆக பெருமளவு பயன்படுத்தப் பட்ட Auschwitz கான்ஸண்ட்ரேஷன் காம்ப்-பை பிண்ணனியாகக் கொண்ட படம் என்று சொல்கிறார்கள். இசையும் அளவான வார்த்தைகளுடன் கூடிய வசனங்களும், ஒளிப்பதிவும் இந்தப் படத்தின் மிகப் பெரிய அம்சங்கள்.

இந்தப் படத்தைப் பார்த்து முடிக்கும் போது உங்கள் மனம் கனம் ஆகி கொஞ்ச நேரமாவது நெகிழ்வுடன் உத்தரத்தை வெறித்துக் கொண்டோ அல்லது கண்களில் துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டோ உட்கார வைக்கும் என்பது உறுதி.

இதைப்பற்றின மிக விரிவான கதை விமர்சனம் விரும்புபவர்கள் ஹாலிவுட் பாலா எழுதின பதிவைப் படிக்கலாம்.

புகைப்படக் கலைஞர்கள் மன்னிக்கவும்

Sony Ericsson K750i என்ற கைப்பேசியை இரண்டு வருடங்களுக்குமுன் நான் வாங்கும்போது அதில் 2 mega pixel-களையுடைய ஒரு கேமரா இருக்கிறது என்கிற அம்சம் என்னை வெகுவாக கவரவில்லைதான். இருந்தாலும் அதை வாங்கினபிறகு போகிற வருகிற இடமெல்லாம் கேமரா ஃபோனை வைத்துக் கொண்டு கிளிக்கிக் கொண்டிருப்பவர்கள் வரிசையில் நானும் அப்போது என்னையறியாமலேயே இணைந்துவிட்டிருந்தேன். எடுத்தவைகளை கம்ப்யூட்டரில் போட்டுப் பார்த்தால் ஒரு படம் சுமாராக இருந்தது. ஒரு படம் சுத்த வேஸ்ட் என்று கலவையாய் அதன் ரிஸல்ட் இருந்தது. ரெண்டு மெகா பிக்ஷலுக்கு இவ்ளோதாண்டா என்றுவிட்டு கிடைத்ததையெல்லாம் படம் எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தேன்.

SE-K750i-ல் மேக்ரோ (Macro) என்றொரு அம்சம் இருந்ததும், அதன் அபாரமான பயன்பாடும் மிக தாமதமாக தெரியவந்தது. அதே நேரத்தில் எனக்குள் பாய் போட்டுத் தூங்கிக் கொண்டிருந்த ஒரு புகைப்படக்காரன் கண்ணைக் கசக்கி விழித்துக்கொண்டதும் வந்தது வினை. மேக்ரோ தவிர அதில் பனோரமா (panaroma), எக்ஸ்போஷர் வேல்யூ (EV) அட்ஜஸ்ட்மெண்ட், ஒயிட் பேலன்ஸ் (White balance) என்று என்னவெல்லாமோ இருக்கிறது என்றும் கண்டுகொண்டேன். சர்ரென்று ஆர்வம் உயர புகைப்படக் கலை பற்றி மேலதிக விஷயங்கள் கற்றுக்கொள்ள இணையம் உதவியது. கற்றதை பற்பல காம்பினேஷன்களில் முயற்சித்துப் பார்த்ததில் மொபைலிலேயே சில அபார புகைப்படங்கள் தேறியது எனக்கே ஆச்சரியம்.

அப்புறம் அடுத்த முயற்சியாய் சிங்கப்பூரில் வாங்கிய Sony Cybershot - 7Mega Pixel கேமரா என் ஆர்வத்தீயை மேலும் கிளறிவிட்டது. கேமரா என்பது வெறும் ஒருகருவிதான். அதில் எடுக்கப்படும் ஒரு படம் அசத்தலாக அனைவரும் பாரட்டும்படி அமைவது என்பது கேமராவிலுள்ள செட்டிங்குகளை நாம் எவ்வாறு கையாள்கிறோம் என்பதையும், நமது கிரியேட்டிவிட்டியையும் பொறுத்தே அமைகிறது என்பது புரிந்தது. இந்த விஷயத்தை எனக்குக் கற்றுக் கொடுத்தவர் நண்பர் கெளதம். அவரைப் பற்றி இங்கே லேசாகவாவது சொல்லவேண்டும். அவர் ஒரு Oceanographer. அடிப்படையில் பொறியாளரான கெளதம், அவரது தொழில் தவிர இன்னபிற ஏனைய விஷயங்களில் அவர் காட்டும் ஆர்வத்தைப் பார்த்து நான் வியந்து போயிருக்கிறேன். சதா சர்வ நேரமும் எதையாவது ஒரு விஷயத்தைக் கற்றுக் கொண்டேயிருப்பவர். அதில் மிகத் தீவிரமான ஹாபியாக அவர் மேற்கொள்வது 1. ஃபோட்டோகிராபி. 2. பறவைகள் / பூச்சிகள் பற்றிய விஷயங்கள்(Birds/insects watching).

உதாணத்துக்கு ஒன்று சொல்கிறேன். ஒரு தும்பியை (Dragon Fly) எடுத்துக்கொள்ளுங்கள். அதன் வகைகள், அது எங்கேயெல்லாம் காணப்படும், எங்கே உட்காரும், என்ன சாப்பிடும், அதன் உடல் அமைப்பு என்ன, அது வாலைத்தூக்கிக்கொண்டு கிளையில் உட்கார்ந்து கொண்டிருந்தால் என்ன அர்த்தம் என்று புட்டுப் புட்டு வைப்பார். அதை நேக்காக எப்படி மேக்ரோ லென்ஸ் உபயோகித்து மிகத்துல்லியமாக புகைப்படம் எடுப்பதென்பதெல்லாம் அவருக்குத் தண்ணி பட்ட பாடு. Canon 40D என்றொரு டிஜிட்டல் எஸ்.எல்.ஆர் கேமராவோடு மேக்ரோலென்ஸுகள், ஜூம் லென்ஸுகள், ட்ரைபாட் (Tripod) என்று ஒரு பை நிறைய அவர் வைத்திருக்கிற விஷயங்கள் ஒரு லகரத்தைத் தாண்டும். மொத்தத்தில் மிக சுவாரஸ்யமான மனிதர்.

கொஞ்ச நாள் முன்பு ஃபோட்டோகிராபி பற்றி எதையாவது சொல்லிக் கொடுங்கள் என்று அவரிடம் நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க, நானும் அவரும் இன்னொரு நண்பருமாக கிண்டி சிறுவர் பூங்காவுக்கு ஒரு ஃபோட்டோ செஷனுக்காக போயிருந்தோம். என்னுடைய சின்ன டிஜிட்டல் கேமராவை வைத்துக்கொண்டே செய்யக் கூடிய வித்தைகள் என்னென்ன என்று தெளிவாக துல்லியமாக சொல்லிக் கொடுத்தார். Focus, Aperture, Metering Mode, ISO, Histogram என்று அதில் இன்னும் எவ்வளவு விஷயங்கள் இருக்கிறது பாருங்கள். இவைகளை வைத்துக்கொண்டே ஒரு நல்ல புகைப்படம் எடுப்பது எப்படி? EV, ISO-க்களை அட்ஜஸ்ட்செய்யும் போது கிடைக்கக் கூடிய விளைவுகள் யாவை, கேமராவுக்குள் என்னென்ன செட்டிங்குகளில் என்னென்ன நடக்கிறது? DOF என்பது யாது? எடுக்கிற புகைப்படம் மசமசவென்று வராமல் தெளிவாக நச்சென்றிருக்க என்ன செய்யவேண்டும்? எந்தெந்த வெளிச்ச நிலைகளில் எப்படிக் கையாளவேண்டும் என்று நிறையக் கற்றுக் கொடுத்தார்.

பொறுமையாய் கற்றுக் கொண்டேன். என்றாலும் அவர் கழுத்தில் தொங்குகிற DSLR கேமராவையே நாள் முழுவதும் பொறாமையுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். அடுத்தது அதுதான் என்று முடிவு செய்துவிட்டேன். வீட்டிற்குள் கிடைத்ததை வைத்துக் கொண்டு நான் செய்கிற புகைப்பட சோதனை முயற்சிகளை மகனும் மனைவியும் வேதனையுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். தொடர்ந்த ஆராய்ச்சியின் பயனாக கொஞ்சம் வித்தியாசமாய் முயற்சித்ததில் சிலதெல்லாம் நன்றாகவே வந்துவிட்டது. ஃபோட்டோஷாப் என்கிற "image editing" மென்பொருளைத் தெரிந்து வைத்திருப்பது இன்னும் கூடுதல் செளகரியம். கேமராவில் சொதப்பியதை அதில் "post processing" என்று சரி செய்துகொள்ளலாம்.

புகைப்படக்கலையில் நான் ஒரு கற்றுக்குட்டிதான் என்றாலும், உங்கள் ஹாபி என்ன என்று யாராவது கேட்டால் இதையும் சொல்லுமளவுக்குத் தேறியிருக்கிறேன். அந்தப் புகைப்படங்களை என் ஃப்ளிக்கரில் பக்கத்தில் (Flickr) காணலாம். கேமரா ஃபோனும், டிஜிட்டல் கேமராக்களும் மலிந்து போன இந்தக் காலகட்டத்தில் எல்லாருமே எப்படி புகைப்படக்காரர்களாகிப் போனார்கள் என்று ஏற்கெனவே ஒரு சின்ன பதிவு எழுதியிருக்கிறேன். ஆகவே இப்போதெல்லாம் சும்மா அப்படி இப்படி விரயமாய் மனைவி, மகன், நாய், பூனைஎன்று கிளிக்கிக் கொண்டிருக்காமல் கொஞ்சம் வித்தியாசமாய் கோணங்கள் அமைத்து நான் இந்தப் பதிவில் ஜல்லியடித்திருக்கிற விஷயங்களுடன் கொஞ்சம் முயற்சித்துப் பார்த்ததில் புகைப்படமெடுப்பதில் எப்படியாவது அமெச்சூரிலிருந்து நிபுணர் ஆகிவிடுவேன் என்றுதான் தோன்றுகிறது.

ஆக, கையில் கேமராவை வைத்துக்கொண்டு எங்கேயாவது எப்போதாவது ஒரு புகைப்படக்காரர் தீவிரமாக எதையாவது ‘Focus' செய்துகொண்டிருந்தால் தயவுசெய்து தொந்தரவு செய்யாதீர்கள். ஹி.ஹி! அது நானாகக் கூட இருக்கலாம்.

கதை படிக்கிற குரல்

ஒரு லோக்கல் வாராந்தர நியூஸ் பேப்பரில் இந்த சின்ன வரி விளம்பரத்தைக் கண்டேன்.

"Wanted a lady to read novels in Tamil to an elderly gentleman. Clarity and good voice essential. Hours required 10 am to 11.30 or 3.30 to 5.00, 6 times a week. Kindly ring ......"

லேசான ஆச்சரியமும் நிறைய கேள்விகளும் எழுந்தன.

இதை ஒரு ஓய்வு பெற்ற கனவானின் பொழுது போக்கு அம்சமாய் மட்டுமே எடுத்துக் கொள்ளமுடியுமா என்று தெரியவில்லை. தமிழில் கதை, நாவல் படிக்க விரும்புகிறார். அதுவும் வாரத்துக்கு 6 நாட்கள், குறைந்த பட்சம் ஒன்றரை மணி நேரம். ஓய்வு நாட்களில் தன்னை எந்த வகையிலாவது பிஸியாக வைத்துக் கொள்ள அந்த முதியவரே செய்து கொள்கிற ஏற்பாடா? இல்லை மகன், மகள், மனைவி என்று வேறு யாராவது அவருக்காக எடுத்துக் கொண்ட முயற்சியா? அவருக்குத் தமிழ் தெரியாதா? அல்லது தெரிந்தும் படிக்க சோம்பேறித்தனமா? அல்லது வேறு காரணங்களா? ஏன் அவருக்கு ஆண் குரல் வேண்டாம்? எந்த மாதிரி தமிழ் நாவல்கள்? ராஜேஷ்குமாரா, பட்டுக்கோட்டை பிரபாகரா, சுஜாதாவா? அல்லது ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போல இலக்கிய நாவல்களா? சாண்டில்யன், கல்கி? எதுவானாலும் படிப்பதோ படிக்கச்சொல்லிக் கேட்பதோ நல்ல விஷயம்தான்.

ஈஸிச் சேரில் கண்ணை மூடிச் சாய்ந்து கொண்டு ஒரு பெண்மணி பக்கத்தில் உட்கார்ந்து கணீர் என்ற குரலில் கதை படிக்க, அந்த கதா பாத்திரங்களை உள்வாங்கிக் கொண்டு அவர் ஒரு புது உலகிற்கு சஞ்சரிக்கிற காட்சி ஓடுகிறது.

“அந்த பாராவை மறுபடி படி(ங்க)”
“சுத்த இழுவையா இருக்கே. இந்த நாவல் போதும். அடுத்ததைப் படிக்கலாம்”.
“மணி பதினொன்னரை ஆயிருச்சா? சரி ’தொடரும்’ போட்ரலாம். நாளைக்கு வாங்க.”
“என்ன இன்னிக்கு குரல் கரகரங்குது? த்ரோட் இன்ஃபெக்‌ஷனா?”

என்னுடைய ரிடையர்மென்ட் காலத்தை எப்படி பிஸியாக வைத்துக் கொள்ளப் போகிறேன் என்கிற யோசிப்பை கிளறிவிட்டது இது.

காஞ்சிவரம்



தேன்மாவின் கொம்பத்து, மணிச்சித்ரதாழ், காலாபானி போன்ற அருமையான படங்களைத் தந்த பிரியதர்ஷனிடமிருந்து உலகத் தரத்திற்கு அருகாமையில் மற்றுமொரு படைப்பு காஞ்சிவரம். டொரன்டோ போன்ற உலகத் திரைப்படவிழாக்களில் அமர்க்களமில்லாமல் திரையிடப்பட்டுக் கொண்டாடப்பட்ட செய்திகளும், ”பிரியதர்ஷன் செதுக்கியிருக்கிறார்” என்ற வாய்வழிப் பரிந்துரைகளும் இந்தப் படத்தைக் காணும் ஆர்வத்தைத் தூண்டியது.

இந்தப் படத்திற்காக பிரியதர்ஷன் எடுத்துக் கொண்ட காலகட்டம் (1948 ) மற்றும் களம் நிச்சயம் வித்தியாசமானதுதான். பீரியட் பட முயற்சிகளில் தன் திறமையை காலாபானியில் ஏற்கனவே பிரம்பாண்டமாய் நிலைநாட்டிவிட்டதால் அதோடு ஒப்பிடும்போது இது ரொம்ப எளிமையாகவே உணரவைக்கிறது என்றாலும் எளிமையாய்ப் பண்ணுவதுதான் எப்போதும் கஷ்டமான விஷயம் என்பதையும் மறுப்பதற்கில்லை. அந்த வகையில் பிரியதர்ஷன் ஜெயித்திருக்கிறார்.

உலகத்தரத்தை நோக்கிய இந்திய சினிமாவின் பயணத்தில் பிரியதர்ஷனும் இணைந்துகொண்டிருக்கிறார். அதோடு சாபு சிரில், திரு போன்ற திரைக் கலைஞர்களும் தம்மாலான பங்களிப்பை இந்தப் படத்தின் மூலம் அருமையாய் அளித்திருக்கிறார்கள். பிரகாஷ் ராஜ் போன்ற நல்ல நடிகர்களைத் தேர்வு செய்ததும் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய பலம்தான்.

இந்தப் படத்தில் பிரியதர்ஷன் எடுத்துக் கொண்ட கதையின் “இழை”, பெரிய எட்டாத ஆசைகளை மனதில் சேமித்து வைத்துக் கொண்டு அதன் மூலம் நலிந்து போன கனவுகளை எப்படியாவது பின்ன முயற்சிக்கும் சாதாரண மனிதனைப் பற்றிச் சொல்கிறது. இதையொட்டி நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிற திரைக்கதை.

சிறையிலிருந்து கைவிலங்குடன் எதற்காகவோ பரோலில் வெளிவரும் பிரகாஷ்ராஜை, கொட்டும் மழையில் சொந்த ஊருக்கு காவலுடன் ஒரு பஸ்ஸில் அழைத்துச் செல்வதிலிருந்து துவங்குகிறது படம். இடையிடையே பஸ் அடிக்கடி ஏதாவது இடர்ப்பாடுகளில் சிக்கி நிற்க அந்த இடைவெளிகளினூடே ஃப்ளாஷ்பேக் பயணம் போகிறார் பிரகாஷ்ராஜ்.

ஒரு அவார்டு வாங்கின வங்காளப் படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வை ஆரம்பக் காட்சிகள் உணர வைக்கிறது. அப்புறம் இரண்டு மணி நேரம் போவதே தெரியவில்லை. காரணம் இந்தத் தலைமுறை இதுவரை பார்த்திராத அந்தக்கால வாழ்க்கைக் காட்சிகள். படம் பெரும்பாலும் மங்கிய வெளிச்சத்தில் நகர்கிறது. லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் நடிகர்களின் முகங்கள் பொன்னிறமாய் மின்னுகின்றன. கதாபாத்திரங்கள் பேசிக் கொள்ளும் ரஷ்யன், ஜெர்மன் மகாயுத்த விவரங்கள், பிரகாஷ்ராஜின் சைக்கிள் விளக்கு, கிராமத்துக்கு முதல் முதலாய் வரும் மோட்டார் வண்டியை ஒரு திருவிழா போலப் பார்க்கும் கூட்டம். பெரிய பொட்டு வைத்த ஸ்மிதா பட்டேல் சாயல் கொண்ட பெண்கள், கூரைவீடுகள், வெள்ளைக் காரனுக்கு ஜமீந்தாரின் (அல்லது அதிகாரியின்) உதவியாளனின் ஆங்கில மொழிபெயர்ப்பு, நான்கு பெண் குழந்தைகள் தோளில் கை போட்டுக் கொண்டு சேர்ந்து ஆடும் ஊஞ்சல், ஸ்லேட் எடுத்துக்கொண்டு கதை பேசியபடி பள்ளிக்குப் போகும் குழந்தைகள், யானையின் கால்களுக்கு இடையில் ஓடும் குழந்தைகள், பட்டாளத்துக்குப் போகும் பையன், காந்தி இறந்ததனால் ரேடியோவில் ஒலிபரப்பாகும் சோக இசை, தொழிலாளிகளை எப்போதும் சுரண்டிப் பிழைக்கிற பகட்டான முதலாளி, அடுப்பு ஊதி சமைத்துக் களைக்கிற, கணவன்பின் நடக்கிற அப்பாவி மனைவிகள், ஒரே ஒரு வாளித்தண்ணீரை ஒரு சீன் முழுக்க இறைகிற பெண் (தண்ணீர் அவ்வளவு ஆழத்தில்), மழைச் சகதியில் உருண்டு ஓடுகிற பஸ்ஸின் ஸ்டெப்னி டயர், நெசவாளர்கள் நடத்தும் கம்யூனிஸம் பூசிய முதலாளித்துவ எதிப்பு நாடகம் என சுவாரஸ்யமான விஷூவல் ட்ரீட்மெண்ட்கள் இறுதிவரை அழகாக எளிதாக படத்தை நகர்த்திவிடுகின்றன.

எளிய உழைப்பாளிகளின் வாழ்க்கையின் வலியை அழகாக நறுக்கென்று சொல்ல முயற்சித்திருக்கிறார் பிரியதர்ஷன். ஆனால் இது அவரின் “பெஞ்ச் மார்க்” படமா என்று யோசித்தால் இல்லையென்றுதான் தோன்றுகிறது. படத்தின் “prelude"-ல் கோடிகாட்டிச் சொல்லப்படும் விஷயங்களும், பிரகாஷ் ராஜின் நடவடிக்கைகளும் முடிவு இப்படித்தான் இருக்கவேண்டுமென்று ஊகிக்க வைத்துவிட்டது. மேலும் பிரகாஷ்ராஜுக்கு இது முக்கியமான படமாகக் கொண்டாலும், அவரின் உச்சபட்ச நடிப்புத்திறனை வெளிக் கொணர்ந்த படமென்றும் சொல்லிவிட முடியாது. இதைவிடச் சிறப்பாக எத்தனையோ செய்திருக்கிறார். எம்.ஜி. ஸ்ரீகுமாரின் இசையில் மலையாளச் சாயலுடனான ஒரு பாடலும், பின்னணி இசையும் மோசமில்லையென்று சொல்லலாம். ஸ்ரேயா ரெட்டி, ஷம்மு போன்றவர்களின் மிகையில்லாத இயல்பான நடிப்பும் படத்தின் காட்சிகளுக்கு ஒரு புதிய வண்ணத்தைச் சேர்க்கிறது.

மழையினூடான பஸ் பயணத்தில் காவலரின் தொப்பியில் பேட்ஜ் அறுந்துவிட அது இல்லாமல் அதிகாரியின் முன்னால் போய் நின்றால் வேலை போய்விடும் அபாயம். பிரகாஷ் ராஜின் ஃப்ளாஷ்பேக் பகுதிகள் ஒவ்வொன்றாய் நிறைவுபெறும் இடைவெளிகளில் காவலர் பேட்ஜை தைக்கிற முயற்சிகளை மேற்கொள்கிறார். இறுதியில் அவரது பிரயாசை தோல்வியில் முடிகிறது. பிரதான படத்தை விட்டு விலகியிருந்தாலும் ஒரு சிறுகதைக்கான அல்லது குறும்படத்துக்கான விஷயமாக அநாயாசமாக வந்துபோகிறது இது.

பார்த்து முடித்தபிறகு மனசுக்குள் நான் எதிர்பார்த்திருந்த ஏதோ ஒரு பெரிய “இம்பேக்ட்” இதில் மிஸ்ஸிங் போலத்தோன்றியது. (ஒரு வேளை இளையராஜாவாக இருக்குமோ?) முக்கியமாக சோகமான காட்சிகள் ஒரு பெரிய நெகிழ்வை ஏற்படுத்தத் தவறியது போலொரு உணர்வு.

உலக சினிமாக்களின் தரத்துக்கு இணையாக இப்போதைக்கு காஞ்சிவரத்தை உயர்த்திப் பேசமுடியாது என்றாலும் நம் ஆட்களின் அபார சிந்தனைகளும் இது போன்ற முயற்சிகளும், நம் இந்திய சினிமா ரசிகர்களை அபத்தமான குத்துப் பாட்டுகளிலிருந்தும், ஹீரோயிச பில்டப்களிலிருந்தும், காதல் காட்சிகளிலிருந்தும் மீட்டு, ரசனையின் தரத்தை நிச்சயம் உயர்த்தும்.

ஒரு நாள் நம் சினிமாவும் உலக சினிமா ஆகும் என்கிற நம்பிக்கையை மீண்டும் அளித்த பிரியதர்ஷனுக்கு என் பாராட்டுக்கள்.

இந்தப்படத்தைப் பார்த்து முடித்ததும் எப்போதோ படித்த கவிதை ஒன்று ஞாபகத்திலிருந்து குதித்தது. படத்திற்கும் இதற்கும் ஏதோ சம்பந்தமிருப்பதுபோலக் கூடத் தோன்றியது. எழுதியவர் பெயர் “மார்க்ஸ்” (Marx) என்று குறித்து வைத்திருக்கிறேன்.

”பட்டுப்பூச்சி பட்டிழை நூற்கிறது.
பட்டிழையை நெய்வது
அதன் இயல்பாகிவிட்டது.
நூற்காமல் அதனால் இருக்க முடியாது.
வாழ முடியாது.
நூற்பதனால் அதற்கு
சாவு விதிக்கப் பட்டிருக்கிறது.
வேண்டாம் என்றால் கேட்காது.
நூற்பதே வாழ்வு.
சாவு ஒரு பொருட்டல்ல என்பது
அதன் பதிலாக இருக்கக் கூடும்.
பட்டு அழகானது!! அற்புதமானது!!
அதற்காக உயிரைக் கொடுக்கலாம்.
தப்பில்லை.”

குழலினிது

ஆடியோ ஸிஸ்டத்தில் கொஞ்சம் புல்லாங்குழலிசையை வழியவிட்ட பிறகே இந்தப் பதிவை எழுதுகிற மூடு வந்தது. அதுவும் புல்லாங்குழலிசை பற்றிய அல்லது அதற்கும் எனக்கும் உள்ள சொற்பமான தொடர்பு பற்றிய விஷயம் என்பதால் அது தேவைப்படுகிறது. எங்கேயோ காட்டில் விளைகிற மூங்கில் துண்டொன்றில் ஏழோ எட்டோ துளை போட்டு அதற்குள் கொஞ்சம் மூச்சுக் காற்றை அனுப்பி விரல்களால் வருடினால் மனதையும் உயிரையும் சுருட்டிப் போட்டுவிடுகிற மாயத்தை அது நிகழ்த்தி விடுகிறதெப்படி என்பது எனக்கு இன்னும் யோசித்துத் தீராத ஆச்சரியமாயிருக்கிறது.

சின்ன வயசிலிருந்தே இந்தக் காற்றுக்கருவி மீது அமோக மோகம். ஆல் இண்டியா ரேடியோவில் பாடல்கள் கேட்டு வளர்ந்த பருவத்திலிருந்தே பாடல்களை விட “கேப் ம்யூஸிக்” (Gap Music) என்று நானாகவே பெயர் வைத்துக் கொண்ட சரணங்களுக்கு நடுவே வருகிற இசையை உற்றுக் கேட்பது பழக்கம். அதிலும் முக்கியமாய் ஏதாவது குழலிசைத் துண்டு வந்தால் இன்னும் உன்னிப்பாக. எம்.எஸ். விஸ்வநாதனின் பாடல்களிலிருந்து இந்தத் தேடல் தொடர்ந்து வந்தது. இதன் விளைவாக என்றாவது ஒருநாள் நானும் என் விருப்ப இசைக்கருவியான புல்லாங்குழலை கற்றுக் கொண்டே தீருவேன் என்றொரு ஆசையோ வைராக்கியமோ ஏதோ ஒன்று மனதில் கூடு கட்டியிருந்தது. எம்.எஸ்.வி-யிலிருந்து இளையராஜாவுக்குத் தாவி அப்புறம் திரைப்படப் பாடல்களும் வாழ்க்கையும் பிரிக்க இயலாத ஜோடிகளான பிறகு பு.குழலின்மேல் அதை இசைப்பவர்களின் மேல் தனி மரியாதை தொடர்ந்தது.

இளையராஜா புல்லாங்குழலை பாடல்களில் பொருத்தமான இடங்களில் மிக்ஸ் பண்ணுவதில் கைதேர்ந்தவர் என்பதற்குச் சாட்சியாக பல பாடல்களைச் சொல்லலாம். இவருடைய ஃப்ளுட்டிஸ்ட் அருண்மொழி என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அதிகாலை நிலவே, நானென்பது நீயல்லவோ, ஆதாமும் ஏவாளும் போன்ற பாடல்களை இளையராஜாவின் இசையில் பாடியவர். இவர் புல்லாங்குழல் விளையாடின திரைப்படப் பாடல்கள் ஏராளம். அதென்னமோ இளையராஜாவின் புல்லாங்குழல் கேட்கிறபோது எங்கேயோ ஒரு கிராமத்தின் தென்னந்தோப்புக்குள் ஸ்லோமோஷனில் ஓடிக்கொண்டிருப்பது மாதிரி ஒரு எஃபெக்ட்தான் எப்போதும் கிடைக்கிறது. அவர் ’போவோமா ஊர்கோலம், இந்தமான் எந்தன் சொந்தமான் ’ மாதிரியான கிராமப் பின்னணியில் அமைந்த படங்களுக்கே இந்தக் கருவியை பிற்காலத்தில் நிறைய உபயோகப்படுத்தினார் என்பதனாலோ என்னவோ.

ஹரிப்பிரசாத் செளராஸியாவின் குழலிசையை இளையராஜா “Nothing but wind" மூலம் நம் காதுகளில் ஒலிக்கவிட்ட போது சோறு தண்ணியில்லாமல் திரும்பத் திரும்ப அதையே கேட்டுக் கொண்டு கிடந்தேன். அவர் புல்லாங்குழலை இன்னும் எந்தெந்தப் பாடல்களில் எப்படியெல்லாம் உபயோகப்படுத்தினார் என்றெல்லாம் இந்த ஒரே ஒரு பாராவுக்குள் சொல்லமுடிகிற காரியமில்லை என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

ரஹ்மான் வந்த பிறகு இந்த புல்லாங்குழலிசையில் ஏதோ ஒரு மாற்றம் வந்து சேர்ந்துவிட்ட மாதிரி தெரிந்தது. அது இளையராஜாவினுடைது போலல்லாமல் வேறுமாதிரி இன்னும் கொஞ்சம் ஆழமாக, இன்னும் கொஞ்சம் உருக்கமாய் உயிரை நிரடியது. என்னவளே, மார்கழிப் பூவே, அஞ்சலி அஞ்சலி, பம்பாய் தீம் ம்யூசிக், வெள்ளி நிலவே, என் மேல் விழுந்த மழைத்துளியே, ஜாக்கி ஷ்ராஃப் ஊர்மிளாவைத் துரத்தும் ஹேராமா ஏ க்யாகுவா எல்லாவற்றிலும் ஏதோ கொஞ்சம் புதுசாய் இதுவரை கேட்காத ஒரு தவிப்பு துடிப்பு அழுத்தம் எல்லாம் சேர்ந்த கலவையாய் இருந்தது. எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை. அப்புறம் யாரோ சொன்னார்கள் நவீன் என்று ஒருத்தர்தான் ரஹ்மானின் புல்லாங்குழலார் என்று. மனதை லயிக்க வைக்கிற விதமாய் இப்படி அனுபவித்து வாசிக்கற ஆளைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம் என்று தேடியபோது விவரங்கள் சிக்கின. ஆசாமி கோலிவுட்டில் அநேகம் இசையமைப்பாளர்களால் தேடப் படுகிற படு பிஸியான ஃப்ளூட்டிஸ்டாம். ரஹ்மானுக்கு பாம்பே ட்ரீம்ஸ் வரை வாசித்திருக்கிறார். "Fluid" என்று ஒரு ஆல்பம் வெளியிட்டிருக்கிறார். இவர் சமீபத்தில் ஆனந்தத் தாண்டவம் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாருக்காக வாசித்த தீம் ம்யூசிக் கிறங்கடிக்கிறது. (காற்றலை சுழற்சியிலே என்ற பாடலின் இசை வடிவம்.) . நவீன் வாசித்ததனால் என்றில்லாமல் புல்லாங்குழலைப் பொறுத்தவரையில் ராஜாவைவிட ரஹ்மான்தான் என்னை அதிகம் உருக்கினதும் உலுக்கினதும். (ஆனால் நான் ஒரு தீவிர ராஜா ரசிகனும்கூட என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.)

எம்.எஸ்.வி, ராஜா, ரஹ்மான் பாடல்களில் புல்லாங்குழலின் பயன்பாடு பற்றி யாரவது எழுதினாலோ சொன்னாலோ (அல்லது வாசித்துக் காட்டினாலோ நான் கேட்கத் தயாராக இருக்கிறேன்.)

நான் வேலை செய்த ஒரு கம்பெனியின் மானேஜிங் டைரக்டர் கோவை பி.எஸ்.ஜி காலேஜின் இசைக்குழுவுக்குத் தலைமை வகித்தார் என்கிற வகையில் புல்லாங்குழல் நன்றாக வாசிப்பார். அவர் மேசையில் 3, 4 1/2 என்றெல்லாம் நம்பர் போட்டு நிறைய புல்லாங்குழல் வைத்திருப்பார். அலுவலகத்தில் என்றாவது ஒருநாள் திடீரென்று மின்சாரம் நின்று விட்டால் அப்புறம் கச்சேரிதான். அதாவது நான் அவரை வாசிக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருப்பேன். ”அஞ்சலி அஞ்சலி” அவருடைய ஃபேவரிட். அப்புறம் அவரது இசை நண்பர் பாலு ஒருநாள் அங்கே வர திடீரென ஆர்வம் வந்து அவரிடம் புல்லாங்குழல் கற்றுக்கொள்ளச் சேர்ந்துவிட்டேன். சேர்வதற்குமுன் என்னிடம் குழலைக் கொடுத்து ஊதச் சொல்லி சப்தம் வருகிறதா என்று பரிசோதித்தார். பிரமாதமாக வந்தது. வெஸ்டெர்ன் கற்றுக் கொள்ளத்தான் நான் சேர்ந்தது என்றாலும் ஒரிஜினல் கர்நாடக புல்லாங்குழலை (இதில் எட்டு துளை இருக்கும். வெஸ்டெர்னில் ஏழுதானாம்.) எனக்குக் கொடுத்து வாசிக்கச் சொன்னார். எட்டாவது துளைக்கு என் சுண்டுவிரல் எட்டாமல் போனதாலோ, காலை ஆறரைக்கு தி.நகரிலிருந்து கோடம்பாக்கம் வரை போக சோம்பேறித்தனப் பட்டதாலோ இரண்டே மாதங்களோடு என் இசைப் பயணத்தை முடித்துக் கொண்டேன். அப்புறம்தான் தெரிந்தது எனக்கு இருந்தது கற்றுக் கொள்கிற ஆசை மட்டுமே தவிர வைராக்கியம் அல்ல என்று. ஆக உலக இசை ரசிகர்கள் ஒரு பெரிய ஆபத்திலிருந்து தப்பித்துக் கொண்டார்கள்.

அப்போது வீட்டுக்கு வருகிற விருந்தாளிகள் பார்வையில் படுகிறமாதிரி அந்த கர்நாடக புல்லாங்குழலை வரவேற்பறையில் தொங்கவிட்டிருப்பேன். அப்புறம் அதைப் பார்க்கிறவர்கள் என்னை ஒரு பெரிய சங்கீத சிரோன்மணி என்கிற தோரணையில் பார்க்கத் தொடங்கியபோது எடுத்து உள்ளே வைத்துக் கொண்டேன். பின் எவ்வளவு நாள்தான் எனக்குத் தெரிந்த ஒரே ட்யூன் ஆன “mary had a little lamb" -ஐ மட்டுமே அவர்கள் கேட்கிறபோது வாசித்துக் காட்டிக்கொண்டிருக்க முடியும்?.

அவரிடம் கற்றுக் கொண்ட வெஸ்டெர்ன் நோட்ஸ் அறிவை வைத்துக் கொண்டு பின்னாளில் கீபோர்டில் ”மலரே மலரே உல்லாசம்” (பல்லவியை மட்டும்) வாசிக்க முடிந்தபோது யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் என்னை நானே வியந்து பாராட்டிக்கொண்டேன்.

மாலி, சஷாங், சவுராஸியா போன்ற அருமையான புல்லாங்குழல் கலைஞர்கள் பற்றி இங்கே பேசவேண்டுமானால் அவர்களைப் பற்றியும், அவர்களது இசையைப் பற்றியும் நான் நிறைய தெரிந்து வைத்திருக்க வேண்டியிருக்கிறதென்று தோன்றுவதால் விட்டுவிடுகிறேன்.

ராகம் தாளம் என்று இசையை பகுத்துணர்ந்து கேட்கத் தெரியாது. சாஸ்திரிய சங்கீதத்தின் அடிப்படைகள் புரியாது. ஸ்ருதி லயம், ஆரோகணம் அவரோகணம், அபஸ்வரம் இன்னபிற சங்கீத சங்கதிகள் பற்றிய ஞானமில்லை. ஆனால் இசை என்பது அநேக சமயங்களில் காதுகளுக்குள் இறங்கி வட்ட வட்டமாய் அலைகள் பரவுகிற ஒரு குளத்தின் மேற்பரப்பு மாதிரி மனசுக்குள் அலையெழுப்பும்போது உணர்ந்து ரசிக்கத் தெரிந்தால் போதாதா? கேட்கத் தெரியும். ரசிக்கத் தெரியும். சொல்லப்போனால் பீச்சில், ரயிலில் புல்லாங்குழல் விற்பவர்கள் அத்தனை பேரும் சொல்லிவைத்த மாதிரி வாசிக்கிற “பர்தேஸி பர்தேஸி ஜானா நஹி” என்கிற ஒரே ட்யூனைக்கூட இன்னும் ஆச்சரியமாய் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த வகையில் இந்த அளவிலான இசை ரசனையே எனக்குப் மிகப் பெரும் வாழ்வியல் திருப்தியைத் தருகின்றது. குழலைப் பொறுத்தவரையிலும் கூட அதுவேதான்.

உதாரணத்திற்கு கலோனியல் கசின் ஆல்பத்தின் கிருஷ்ணா நீ பேகனே -வின் நடுவில் வருமே ஒரு flute interlude!! அதை பன்னிரண்டு வருடமாய் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். அதேபோல் ரன் படத்தின் பனிக்காற்றே தீம், போறாளே பொன்னுத்தாயி ஓபனிங்..

வேண்டாம்! பெரிய லிஸ்ட் அது!